::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

ஈழம் சென்று மருத்துவம் செய்ய தயார்: தமிழக மருத்துவ மாணவர்கள்

medicine-01.jpgஈழத்தில் நடைபெறும் போரில் காயமடைந்த தமிழர்களுக்கு மருத்துவம் செய்ய தயாராக இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈழத்தில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சென்னையில் மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனை அருகில் ஞாயிற்றுக்கிழமை தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினர்.
 
இந்தப் போராட்டத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் தாதியர், மருந்தியல் கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் உரையாற்றிய மருத்துவக்கல்லூரி மாணவி திவ்யா,  இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும். அங்கு அமைதியான அரசியல் தீர்வை உருவாக்க இந்திய அரசு வழி வகை செய்ய வேண்டும். மருத்துவமனைகள் மீது குண்டு வீசும் கொடும் செயலை நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கங்களுக்கு இசைவளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.  போரால் படுகாயம் அடைந்த தமிழர்களுக்கு இலங்கை சென்று மருத்துவம் மேற்கொள்வதற்கு மருத்துவ மாணவர்கள் தயாராக இருப்பதாகவும் திவ்யா கூறினார்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் பொது எதிரியாக தாலிபான்கள் செயல்படுகின்றனர்: அமெரிக்க சிறப்புத் தூதர்

holbrooke_.jpgபாகிஸ் தானின் ஸ்வாட் பிராந்தியத்தில் செயல்படும் தாலிபான்கள், இந்தியா, அமெரி்க்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு பொது எதிரியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறப்புப் பிரதிநிதி ரிச்சர்டு ஹோல்ப்ரூக் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கான சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அவர், அந்த இரு நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிறன்று புதுடெல்லி வந்தார். திங்கட்கிழமையன்று, இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுச் செயலர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹோல்ப்ரூக், தனது பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் பயணம் உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இந்தியாவுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகத் தெரிவித்தார். கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக, இந்தியா, அமெரி்க்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் தலைமைக்கும், தலைநகரங்களுக்கும், மக்களுக்கும் தாலிபான்களால் நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் தெரிவித்தார்.

மும்பை தாக்குதலில் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மலை ஒப்படைக்க முடியாது – பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

ajmal.jpgமும்பை யில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி அஜ்மலை விசாரணைக்கு ஒப்படைக்கும்படி கேட்கப் போவதாக பாகிஸ்தான் கூறியிருப்பதை  ஆரம்ப நிலையிலேயே இந்தியா நிராகரித்துள்ளது.  மும்பையில் கடந்த நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 195 பேர் பலியானார்கள். தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேரை கமாண்டோ படை சுட்டுக் கொன்றது. அஜ்மல் கசாப் என்ற ஒரே தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான்.

அவன் இப்போது மும்பையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான். மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் சதித் திட்டம் தீட்டப்பட்டது என்பதற்கும், பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள்தான் தாக்குதலை நடத்தினர் என்பதற்கும் அடுக்கடுக்கான ஆதாரங்களை கடந்த மாதம் 5ம் தேதி பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய பாகிஸ்தான், மும்பை தாக்குதலுக்கான

சதித் திட்டத்தில் ஒரு பகுதி தனது நாட்டில்தான் தீட்டப்பட்டுள்ளது என்பதை முதல்முறையாக ஒப்புக் கொண்டது. இது குறித்து இஸ்லாமாபாத்தில் பேட்டி அளித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரக்மான் மாலிக், மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் கூட்டு விசாரணை ஏஜென்சி விசாரணை நடத்தி 8 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. அவர்களில் 6 பேரை கைது செய்திருக்கிறோம். இன்னும் 2 பேர் பிடிபடவில்லை. அவர்களில் இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்பும் ஒருவன். இது தொடர்பாக இந்தியாவிடம் இன்னும் நிறைய தகவல்களை கேட்போம்.

அப்போதுதான் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும். அஜ்மலை எங்களிடம் ஒப்படைக்கும்படி இந்தியாவிடம் இதுவரை கேட்கவில்லை. ஆனால், எங்களுடைய விசாரணைக்கு தேவைப்பட்டால் அவனை ஒப்படைக்கும்படி கேட்போம் என்றார்.

இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று உடனடி பதில் அளித்துள்ளது. வெளியுறவு அமைச்சக வட்டாரம் கூறுகையில், இந்தியாவில்தான் தாக்குதல் நடந்துள்ளது. எனவே, அஜ்மல் கசாப்பை பாகிஸ்தானிடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. இந்தியாவில் குற்றம் செய்தவரை எந்த அடிப்படையில் இன்னொரு நாட்டிடம் ஒப்படைக்க முடியும்? அஜ்மலிடம் இந்தியாவில்தான் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை அளிக்கப்படும் என்றனர்.

மும்பை உயர் போலீஸ் அதிகாரி ஒருவரும் இதே கருத்தை கூறினார். என்ன விலை கொடுத்தாலும் அஜ்மலை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க மாட்டோம். அவன் செய்துள்ள குற்றத்துக்கு தூக்கு தண்டனை கிடைப்பது உறுதி. அதற்கு முன்பாக அவனை எங்கும் செல்ல விடமாட்டோம் என்று அவர் கூறினார். மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஜெயந்த் பட்டீல் கூறுகையில், மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய லஸ்கர் -இ- தொய்பா தீவிரவாதி ஷாகிர் ரக்மான் லக்வி, இன்னொரு தீவிரவாதி ஷரார் ஷா ஆகியோர் பாகிஸ்தானில்தான் உள்ளனர். இவர்களை ஒப்படைக்கும்படி இந்தியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது. அப்படி இருக்கும்போது அஜ்மலை ஒப்படைக்கும்படி எந்த வகையில் அந்த நாடு கேட்க முடியும்? என்றார்.

நாளை தமிழகம் கொந்தளிக்க வேண்டும் – வைகோ

1102-vaiko.jpgநாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள (பெப்ரவரி 17) மனிதச் சங்கிலியில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும். இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த இந்திய அரசு ஓங்கி குரல் கொடுக்கும் நிலையை உருவாக்க தமிழகம் கொந்தளிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும், இலங்கை இராணுவம் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் அதனால் அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் உரை மூலமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரு தரப்பு மட்டும் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று உலகில் யாரும் இதுவரை சொன்னதில்லை.

முல்லைத் தீவில் இலங்கை அரசின் அழைப்பை ஏற்று தமிழர்கள் யாரும் செல்லவில்லை. ஆனால் 35 ஆயிரம் பேர் வந்துவிட்டதாக அந்த அரசு பொய் சொல்கிறது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தாங்காமல் லண்டனில் இருந்து ஜெனீவா சென்று, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் எதிரே முருகதாசன் என்ற தமிழ் இளைஞர் தீக்குளித்து இறந்துள்ளார்.

தமிழகத்திலும் பலர் தீக்குளித்து இறந்துள்ளனர். இந்திய அரசு இலங்கையிலே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ஓங்கிக் குரல் கொடுத்தாக வேண்டும். அந்த நிலையை உருவாக்க தமிழகம் கொந்தளிக்க வேண்டும். நம் வேதனையை வெளிப்படுத்த இலங்கைத் தமிழர்களைக் காக்க தமிழக வீதிகளில் கரம் கோர்த்து நிற்குமாறு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகிறது. தண்ணீரில் தத்தளிக்கும் குழந்தை, தாயின் கரங்களைப் பற்றி துடிப்பதைப் போல இலங்கைத் தமிழர்கள் மரணத்தின் பிடியில் இருந்து நம்முடைய கரங்களை எதிர்பார்க்கிறார்கள்.

எனவே, செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள (பிப்ரவரி 17) மனிதச் சங்கிலியில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

போர் நிறுத்தம் பற்றிய பேச்சு: ப.சிதம்பரத்துக்கு வைகோ கண்டனம்

1102-vaiko.jpgதிருச்சியில் இன்று ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய கோரி தமிழ்நாடு தேவேந்திரர் குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் ஜங்ஷன் காதிகிராப்ட் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

சிறப்புரையாற்றிய பின்னர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘’ மத்திய மந்திரி ப.சிதம்பரம் தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக போர் நிறுத்தம் செய்ய வேண்டுமானால் விடுதலை புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று கூறி இருக்கிறார். எந்த போர் நிறுத்தத்தில் இதுவரை ஒரு தரப்பை மட்டும் ஆயுதத்தை கீழே போட சொல்லி இருக்கிறார்கள் போர் நிறுத்தம் என்றால் இரண்டு புறமும் ஆயுதங்களை கீழே போட வேண்டும்.

விடுதலைபுலிகளை பொறுத்த வரை கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பரிலேயே நார்வே தூதுக்குழு கேட்டு கொண்டதற்கு இணங்க போர் நிறுத்தம் செய்தனர். ஆனால் போர் நிறுத்தத்தை இலங்கை அரசுதான் முறித்தது. இலங்கை போர் என்பது ராஜபக்சே அரசும், இந்திய அரசும் சேர்ந்து நடத்துவது ஆகும். ஆனால் மத்திய அரசும் தமிழக முதலமைச்சரும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ஒட்டு மொத்த தமிழகமும் கொந்தளித்து போய் இருக்கிறது. அதன் எதிரொலியாகத்தான் தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் போரை நிறுத்த போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
 
இந்திய அரசு ஒப்புக்காக போரை நிறுத்த கூறினாலாவது மற்ற நாடுகள் போரை நிறுத்த கோரி குரல் கொடுக்கும். ஆனால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.

புலிகள் தான் மக்கள், மக்கள் தான் புலிகள்: சீமான்

seeman-1302.jpgதமிழீழ மண்ணில் அமைதிப்படை செய்த அக்கிரமங்களை தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.  இலங்கையில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் என்பதை ராஜபக்சே சொல்லவில்வை. இந்திய அரசின் அதிகாரிகள்தான் சொல்கிறார்கள். அப்படியானால் போரை நடத்துவது யார்?  இந்த போரில் விடுதலைப்புலிகள் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி வருகிறதா? அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றுதான் செய்திகள் வருகிறது.

புலிகளை நெருங்க முடியாது. ஏனென்றால் மக்கள்தான் புலிகள். புலிகள் தான் மக்கள். மக்களிடம் இருந்துதான் புலிகள் உருவாகிறார்கள் என்பதால் மக்களை திட்டமிட்டு அழிக்கிறது சிங்கள அரசு. ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாருக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் எம்.ஜி.ஆர். நகரில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் சீமான்  பங்கேற்று பேசினார்..

இயக்குனர் சீமான் பேசுகையில், இன்று நடக்கும் இந்த கூட்டத்திற்கு போலீசார் தடை விதிக்கப்போவதாக சொன்னார்கள். தடை தடை என்றால் அதை உடை உடை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.  7 நாடுகளின் ராணுவ தளபதிகள் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் இவர்களால் விடுதலைப்புலிகளை நெருங்க முடியவில்லை. நெருங்கி பார். என்ன ஆகும் என்று தெரியும்.

உலகின் மிகப்பெரிய புரட்சியாளன் எங்கள் அண்ணன் பிரபாகரன். புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்களை ஆயுதங்களை கீழே போடச்சொல்லாதீர்கள். அது ஒரு மக்கள் ராணுவம். உயிரையே ஆயுதமாக்கி போராடும் மக்கள் ராணுவத்தை ஆயுதத்தை கீழே போடச் சொல்லாதீர்கள்.  எதுவும் தானாக மாறாது. நாம்தான் மாற்ற வேண்டும். அதுபோல் நாடு தானாக வராது. நாம்தான் அடைய வேண்டும். தமிழீழம் அமைந்தே தீரும் என்றார்.

கூட்டத்தில் பேசிய சீமான், ஏற்கனவே இரு வழக்குகள் இருக்கிறது. அந்த வழக்கை சந்திக்க தயார் என்றும், மேலும் வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன், எந்த சிறைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.

உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை கடந்த 12 ந்தேதி சந்தித்த டைரக்டர் சீமான் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அவரது பேச்சினை புதுவை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். இப்போது அந்த பேச்சின் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோத நடவடிக்கை தடை சட்டம் 13(1)(பி), பிரச்சினையை உருவாக்கும் விதமாக பேசுதல் 1பி, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுதல் 124 ஆகிய 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகள் அனைத்தும் ஜாமீனில் வெளிவர முடியாதையாகும். புதுவையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால், சீமானை கைது செய்வதில் உறுதியாக உள்ளது. மேலும் மத்திய அமைச்சர் நாராயணசாமி பத்திரிகைகளில் சீமானை கைது செய்தாக வேண்டும் என்று கூறிவருகிறார்.  சீமானை கைது செய்ய புதுச்சேரி போலீசார் தமிழக போலீசாரின் உதவியை நாடியுள்ளது. இதையடுத்து சீமான் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவூதி அரேபிய வரலாற்றிலேயே முதல் பெண் அமைச்சர்.

saudi-arabia.jpgசவூதி அரேபிய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பெண் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சவூதி அரேபிய அமைச்சரவையில் பெண் கல்வித்துறை துணை அமைச்சராக பிரபல கல்வியாளர் நோரா அல் பயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சவூதியின் முதல் பெண் அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சவூதி வரலாற்றில் மிக உயரிய அரசுப் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து நோரா அல் பயஸ் கூறுகையில், இது மிகவும் கடினமான பணி. எனக்கு துணை கல்வி அமைச்சர் பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. நான் ஒரு முன் மாதிரியாக திகழ்வேன் என நம்புகிறேன். வரும் ஆண்டுகளில் பெண்கள் உயர் பதவிக்கு வர முடியும் என்ற நம்பிக்கை இதன் மூலம் ஏற்பட்டுள்ளது. கல்வித்துறை அமைச்சராக சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

தற்போது நோரா அல் பயஸ், சவூதி பொது நிர்வாகக் கழகத்தில் உயர் பதவியில் உள்ளார்.

இவர் தவிர மேலும் சில புதிய அமைச்சர்களையும் மன்னர் அப்துல்லா நியமித்துள்ளார். அதேபோல மத்திய வங்கியின் புதிய ஆளுநராக முகம்மது அல் ஜஸ்ஸர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்துல்லா மன்னரானார். அதன் பின்னர் அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இலங்கை நிலைவரம் அமெரிக்க செனட் குழு – பெப். 24 இல் விசாரணை

u-s-a-flag.jpgஇலங் கையின் அண்மைய நிலைவரங்கள் தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுகளுக்கான செனட் குழு எதிர்வரும் 24 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு கூடி விசாரணை நடத்தவுள்ளது. டேர்க்சென் செனட் கட்டிடத்தில் இந்த விசாரணை இடம்பெறுமென குழுவின் இணையத்தளம் தெரிவித்துள்ளது. வெளியுறவுக் குழுவின் தலைவர் செனட்டர் கெரி இந்த விசாரணைக்கு தலைமை தாங்கவுள்ளார். இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜெவ்ரி ஜே.லன்ஸ்ரட் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அன்னா நெய்ஸ்ரட், பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழுவின் பொப்டியற்ஸ் ஆகியோர் இந்த விசாரணையின் போது சாட்சியமளிக்கவுள்ளனர். 1989 இன் பின்னர் கொழும்பில் அமெரிக்கத் தூதுவர்களாகப் பணியாற்றிய லன்ஸ்ரட் உட்பட முன்னாள் இராஜதந்திரிகள் இலங்கையில் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஆழ்ந்த கவலையை தெரிவித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தனர். “சண்டே லீடர்’ ஆசிரியர் லசந்த விக்கிரமசிங்க படுகொலை தொடர்பாகவும் முன்னாள் தூதுவர்கள் தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர 

லண்டனில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்

protestsin.jpgஇலங்கையில் விடுதலைப் புலிகளின் பகுதியில் சிக்கியிருக்கும் பொதுமக்களை விடுவிக்க பிரித்தானியாவின் பிரதமர் கார்டன் பிரவுண் அவர்கள், புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரி, இலண்டனிலுள்ள சிங்கள மக்களால் ஒரு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கடந்த முப்பது ஆண்டுகளாக தீவிரவாதத்தின் காரணமாக, இலங்கையில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் மற்றும் பர்கர்கள் ஆகிய அனைத்து மக்களும் பல இன்னல்களை அனுபவித்துள்ளனர் என்றும், பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நடத்திவரும் இராணுவத்துக்கும் தமது ஆதரவை வெளிப்படுத்தினர். போர் நடக்கும் பகுதிகளில் சிக்கி பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு விடுதலைப் புலிகள் தான் காரணம் என்றும், இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய பயங்கரவாத்த்துக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.

‘இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்’ – புதியஅமைப்பு

india_map_.jpgஇலங்கை யில் போர் நிறுத்தம் கொண்டு வரவும், அங்கிருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதற்கும் ‘இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்’ என்ற புதியஅமைப்பு ஒன்றே துவங்கியிருப்பதாக பாதிரியார் ஜெகத் கஸ்பார் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், ஒருங்கிணைத்து போராட்டங்களை நடத்தவும் பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் இடம் பெற்ற இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டது.

இதைப் பார்த்து திமுக சார்பில் இலங்கைத் தமிழர்கள் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பும், அதற்கு ஒரு துணை அமைப்பும் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த பாதிரியார் ஜெகத் கஸ்பார் ஒரு அமைப்பைத் தொடங்கியுள்ளார்.

இது குறித்து ஜெகத் கஸ்பார் கூறுகையில், இலங்கை தமிழர்களின் நலனுக்காக அரசியல் சுவடு இல்லாத ‘இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்’ என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளோம். இலங்கை தமிழர்களின் நலனில் அக்கறை கொண்ட அனைவரின் களமாக இந்த அமைப்பு செயல்படும்.