::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

ஈழத் தமிழர்களைக் காக்கக் கோரி தீக்குளித்த திமுக தொண்டர் மரணம்

united-people.jpgஇலங் கைத் தமிழர்களைக் காக்கக் கோரி சென்னையில் திமுக இளைஞர் அணி நடத்திய மனித சங்கிலியின்போது தரமணியைச் சேர்ந்த தொண்டர் தீக்குளித்தார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவர் உயிரிழந்தார். சென்னை தரமணி மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம்(55). மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து 1999ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். பின்னர் தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் டிரைவராகப் பணியாற்றி வந்தார்.

இவருக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.நேற்று திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற ஈழத் தமிழர்களைக் காக்கக் கோரும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் சிவப்பிரகாசமும் கலந்து கொண்டார். அப்போது திடீரென தான் வைத்திருந்த பையில் இருந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீயைக் கொளுத்தி வைத்துக் கொண்டார். சிவப்பிரகாசம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தி.மு.க. பகுதி பிரதிநிதியாகவும், டாக்டர் கலைஞர் மன்ற செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவப்பிரகாசம் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிதியுதவி அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம்தான் இன்றைய பிரச்னைக்குக் காரணம்: திருமா

thirumavalavan-1601.jpgஇலங் கைக்கும் இந்திய அரசுக்கும் இடையில் செய்யப்பட்ட ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம்தான் இன்றுள்ள ஒட்டுமொத்த சிக்கலுக்கு அடிப்படைக் காரணம் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:

இலங்கையில் போராடும் தமிழ்ப் போராளி இயக்கங்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியவர் இந்திரா. ஆனால், காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் பிரணாபோ, வெளிநாட்டுப் பிரச்னையில் தலையிடமுடியாது என்கிறார்.  ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம்தான் இன்றுள்ள ஒட்டுமொத்த சிக்கலுக்கும் அடிப்படைக் காரணம். இந்த ஒப்பந்தத்தை ஈழத் தமிழர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை, சிங்களவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒப்பந்தத்தை சிங்களவன் ஏற்றுக்கொள்ளாததன் வெளிப்பாடுதான், ராஜீவ் மீதான துப்பாக்கிக் கட்டை தாக்குதல்.

இந்திய-இலங்கை உடன்பாட்டின்படி இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களை, நீதிமன்றத்தின் மூலம் சிங்கள அரசு பிரித்துவிட்டது. இதைக்கூட இந்திய அரசு தட்டிக்கேட்கவில்லை. தமிழினத்துக்கு எதிராக இந்தியா பச்சைத்துரோகம் செய்கிறது. இதை வைத்துக்கொண்டு ராஜபக்ச அரசு, தமிழின அழிப்பில் ஈடுபட்டுள்ளது.

இலங்கையில் சிங்கள அரசுதான் போரில் ஈடுபட்டுவருகிறது. மக்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் விடுதலைப்புலிகள் பதில் தாக்குதல் நடத்திவருகிறார்கள். போரை நிறுத்தத் தயார் என விடுதலைப்புலிகள் பல முறை கூறிவிட்டனர். ஆனால் சிங்களத் தரப்பு போரை நிறுத்தத் தயாராக இல்லை.

இந்த நிலையில், இரு தரப்பும் போரை நிறுத்தவேண்டும் எனக் கூறுவது, அங்கு நடப்பதைப் பற்றி தெரியாமல் பேசுவதாகும் அல்லது மழுப்பலாகப் பேசுவதாகும். இலங்கையில் தமிழர்களை அழிக்கும் போரை நிறுத்தவேண்டும் என்று இதுவரையில் கேட்காத ஒரே கட்சி அதிமுகதான். தமிழர்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது.

ஈழத் தமிழருக்காக தியாகச் சாவடைந்த கடலூர் தமிழ்வேந்தனின் இறுதி ஊவலத்தில் 25 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இதில் சமூகவிரோதிகள் புகுந்து திமுக பதாகைகளை சேதப்படுத்தினர். ஆனால் போலீசார், நான் சொல்லியும் கேட்காமல், தடியடி கொண்டு தாக்கினர். இதில் 20 பேருக்கு தலைக்காயமும் 40 பேருக்கு காயமும் அடைந்தனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உயர்நீதிமன்ற வளாகத்திலும் அத்துமீறிய போலீசார், வழக்கறிஞர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆட்சிக்கு எதிராக போலீசில் சில அதிகாரிகள் செயல்படுகின்றனர். இத்தகையை கருப்பு ஆடுகளை முதலமைச்சர் அடையாளம் காணவேண்டும். ரவுடிகளை அழைத்துவந்த சுப்ரமணியசுவாமி வன்முறையைத் தூண்டிவிட்டுள்ளார். போராடும் வழ்க்கறிஞர்களை சாதிரீதியாக இழிவுபடுத்தியுள்ளார். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார். 
 
 

வழக்கறிஞர்கள் காவல்துறை மோதல்: தமிழ்நாட்டில் நீதிமன்றங்களுக்கு விடுமுறை

justice.jpgசென்னை யில் வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடந்த வியாழன் நடந்த மோதலை அடுத்து, பதற்றம் தொடரும் நிலையில், தமிழ்நாட்டில் மேலும் இரு தினங்களுக்கு நீதிமன்றங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் முகோபாத்யாய தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நீதிபதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.  வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே நடந்த மோதலின்போது, நீதிமன்றச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. அதைச் சீரமைக்க அதிகாரிகளுக்கு கால அவகாசம் கொடுக்கும் வகையிலும், பதற்றத்தைத் தணிக்கும் வகையிலும், வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த இரு தினங்களும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டிருக்கும். தமிழகத்தில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போர் மீது கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.

வீட்டை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விட்டு தானும் தூக்கிட்டு உயிரிழந்த இலங்கைப் பெண்

bahrain.jpgபஹ்ரெய் னின் வீடொன்றில் பணிபுரிந்த இலங்கைப் பணிப் பெண்ணொருவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவ்வீட்டைத் தீக்கிரையாக்கியதுடன் தானும் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீடொன்றில் பணிபுரிந்த மரியம்மா பெருநான் (வயது 32) எனும் பெண்ணே வீட்டின் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்கிரையாக்கியுள்ளதாக நம்பப்படுவதாக கல்வ் டெய்லி நியூஸ் தெரிவித்திருக்கிறது.

இவ்விபத்தையடுத்து அங்கு சென்ற தீயணைப்புப் படையினர் அவ்வீட்டினுள் சுயநினைவற்ற நிலையிலிருந்த பஹ்ரெய்னைச் சேர்ந்த இரு பிள்ளைகளைக் காப்பாற்றியதுடன், அவ்வீட்டின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின் விசிறியில் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் சடலமாகவிருந்த அப்பணிப் பெண்ணின் உடலையும் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான புலனாய்வு விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தீக்கிரையாக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் ஏ.ஏ.எம். அல் ஹமாடா தெரிவிக்கையில்;

ஆயிஷா (வயது 21), தலால் (வயது 15) ஆகிய இரு பிள்ளைகளும் தூங்கிக் கொண்டிருக்கும் போதே இப் பணிப்பெண் வீட்டிற்கு தீயிட்டுள்ளார். இச்சம்பவத்தின் போது தலால் சுகயீனம் காரணமாக பாடசாலை செல்லாமையாலும் பஹ்ரெய்ன் பல்கலைக்கழகமொன்றின் மாணவியான ஆயிஷாவிற்கு அன்று மதியமே வகுப்புகள் இருந்ததாலும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர் என்றார்.

வீட்டிலிருந்து புகையேறுவதைக் கண்ட அயலவர்கள் அச்சமயத்தில் வெளியே சென்றிருந்த அல் ஹமாடாவின் மனைவிக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

புகையை சுவாசித்தமையால் சுயநினைவற்ற நிலையிலிருந்த இருபிள்ளைகளும் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சில மணி நேர சிகிச்சையைத் தொடர்ந்து இருவரும் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

இப் பணிப்பெண் கடந்த 8 மாதங்களாக இவ்வீட்டிலேயே பணிபுரிந்தார் எனவும் இவர் எவ்வித பிரச்சினையுமின்றி நல்ல முறையிலேயே பணியாற்றியதாகவும் வீட்டின் உரிமையாளர் அல் ஹமாடா தெரிவித்தார்.

மேலும், இப்பணிப் பெண் தூக்கிட்டுக் கொள்வதற்கு சற்று முன்னர் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் எனவும் அதுவே இச்சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இப் பணிப்பெண் தனது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட தொலைபேசி பொலிஸாரால் மீட்கப்பட்ட போதிலும் அது மிக மோசமாக சேதமடைந்த நிலையிலிருந்தது.

இத்தீவிபத்து தொடர்பாக அவசர அழைப்பையடுத்து காலை 11.09 மணியளவில் இரு பிள்ளைகளும் காப்பாற்றப்பட்டதுடன், இறந்த பணிப் பெண்ணின் உடலும் மீட்கப்பட்டது என அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன், இவ்விபத்து மண்ணெண்ணெயை வீடு முழுவதிலும் ஊற்றி எரிக்கப்பட்டதாலேயே ஏற்ப்பட்டுள்ளதென்பதை அவ்வமைச்சின் ஊடகப் பேச்சாளர் உறுதி செய்துள்ளார்.

ஆயினும் எவ்விதமான எரிகாயங்களும் காணப்படவில்லை என மருத்துவ அறிக்கை தெரிவிக்கின்றது.

ஒபாமாவுக்கு ஹமாஸ் கடிதம் செனட்டர் ஹெரியிடம் கையளிப்பு

hamas.jpgகாஸாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் செனட்டர் ஹெரியிடம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கான கடிதம் ஒன்றை ஹமாஸ் போராளிகள் கையளித்துள்ளனர். இக்கடிதமானது காஸாவிலுள்ள ஐ.நா.வின் உதவி அமைப்பின் மூலமே செனட்டர் ஜோன் ஹெரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் அதிகாரி கரேன் அபு தெரிவித்தார்.

ஆனால், இக்கடிதத்தை ஜோன் ஹெரி ஏற்றுக்கொண்டாரா என்பது குறித்தோ அக்கடிதத்தில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பாகவோ ஐ.நா.வின் அதிகாரி அபு எதுவும் தெரிவிக்கவில்லை. 2007 ஆம் ஆண்டில் காஸாவை ஹமாஸ் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததையடுத்து ஹமாஸ் போராளிகளை தீவிரவாத அமைப்பாகவே அமெரிக்கா கருதிவருவதுடன், எதுவித பேச்சுகளையோ உடன்படிக்கைகளையோ ஏற்படுத்தவில்லை.

ஹமாஸ் அமைப்பினர் காஸா பிராந்தியத்தைக் கைப்பற்றிய பின்னர் அங்கு முதற் தடவையாக விஜயம் செய்யும் அமெரிக்க உயர்மட்ட அதிகாரியாக ஹெரி அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அத்துடன், அமெரிக்க காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களான பிரையன் பைர்ட் மற்றும் கெய்த் எலிசன் ஆகியோரும் ஹெரியுடன் இணைந்து காஸாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், இந்த அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதிகள் ஹமாஸ் போராளிகள் குழுவினரை சந்திக்க விரும்பவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் ஐ.நா. நிவாரண அமைப்பு உள்ளிட்ட உதவி நிறுவனங்களை இக்குழுவினர் சந்திக்கவுள்ளனர். இந்த விஜயம் அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ள ஹமாஸ் அமைப்புடனான உறவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதெனத் தெரிவித்தார்.

இன்று ஈழத்தமிழருக்காக திமுக பிரமுகர் சென்னையில் தீக்குளிப்பு

united-people.jpgஇலங் கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று திமுக இளைஞர் அணி சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை கிண்டியில் ஹால்டா ஜங்சனில் மனித  சங்கிலி ஊர்வலத்தின் போது திமுக தொண்டர் சிவப்பிரகாசம் தீக்குளித்தார்.

இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 60 வயதாகும் சிவப்பிரகாசம் திமுகவின் முன்னாள் சைதாப்பேட்டை பகுதி பிரதிநிதி.  தற்போது சிட்டிபாபு நினைவு மன்ற செயலாளர். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கணக்காளராக பணியாற்றி 1999ல்(வி.ஆர்.எஸ்) ஓய்வு பெற்ற சிவப்பிரகாசம் திமுகவின் தீவிர தொண்டர்

வக்கீல்கள் ஆவேசம்:போலீஸ் ஓய்வறையை எரித்தனர்

court-tamilnadu.jpgசென்னை ஐகோர்ட்டில் நேற்று போலீசாருக்கும் வக்கீல்களுக்கு பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.தாம்பரம் கோர்ட்டில் வக்கீல்கள் சங்க தலைவர் ஸ்ரீராம் தலைமையில் வக்கீல்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோர்ட் வளாகத்தில் உள்ள போலீஸ் ஓய்வறையை அடித்து நொறுக்கினர். அங்கிருந்து மேஜை, நாற்காலிகளை வெளியில் கொண்டுவந்துபோட்டு தீ வைத்து கொளுத்தினர். கோர்ட் முன்பு ஜிஎஸ்டி சாலையில் மறியல் செய்து வாகனங்களை தடுத்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லையில் இயக்குநர் சீமான் கைது

seeman-1302.jpg
திருநெல்வேலி  காவல் ஆணையர் முன் சரண்ணடைய வந்த இயக்குநர் சீமானை  போலீசார்  கைது செய்தனர். கடந்த 12ம் தேதி புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தனர். டைரக்டர் சீமான், அவர்களை வாழ்த்தி பேசினார்.

அப்போது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகளை தாக்கி பேசியதாகவும் புதுச்சேரி போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருக்கும் சீமானை கைது செய்யும் நடவடிக்கையில் புதுச்சேரி போலீசார் செயல்பட்டு வந்தார்கள்.

இந்த நிலையில், இந்த வழக்கில் புதுச்சேரி போலீசார் கைது செய்தால், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி டி.சுதந்திரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.  இந்நிலையில் 19ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சீமானை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியதற்கு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று (19.02.09) அல்லது நாளைக்குள் (20.02.09) கைது செய்துவிடுவோம் என்றார். மேலும் சீமானை கைது செய்வதற்காக 5 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதையடுத்து இன்று நெல்லையில் இயக்குநர் சீமான் கைது  செய்யப்பட்டுள்ளார்.

புலிகள் வைத்திருப்பது கேடயம்- ராணுவம் வைத்திருப்பது கத்தி : விஜயகாந்த்

vijayagath1.jpgஇலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த ஆளுங்கட்சி திமுகவும், எதிர்க்கட்சி அதிமுகவும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவ்வாறு இவ்விரு கட்சிகளும் இணைந்து போராடினால் அவர்களின் பின்னால் தேமுதிகவும் சேர்ந்து போராடுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சிங்கள அரசை கண்டித்தும், அங்கு போரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் தலையிட வலியுறுத்தியும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் சார்பில் தீவுத்திடலில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் விஜயகாந்த் பேசியதாவது: 

இலங்கைத்தமிழர் பிரச்சனையில் நமக்கு உணர்வு இருக்கிறது என்பதற்கு இந்த கூட்டமே சான்றாகும். இவ்வளவு பேர் கொளுத்தும் வெயிலையும்  பொருட்படுத்தாமல் கலந்து கொண்டிருப்பது அதனை எடுத்துக் காட்டுகிறது. நம் மக்கள் இலங்கையில் தினம் தினம் செத்து மடிகிறார்கள். அதனால் நமக்கு இந்த வெயில் ஒன்றும் பெரிதல்ல. இங்குள்ள கட்சிகள் இலங்கை பிரச்சனையில் நாடகமாடி வருகிறார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சேவோ, ‘ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால்தான் போர் நிறுத்தம்’ என்று கூறுகிறார். அதே கருத்தைத்தான் மத்திய அமைச்சர்கள் பிரணாப்முகர்ஜியும், சிதம்பரமும் தெரிவிக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு வந்தால்தானே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட முடியும். விடுதலைப்புலிகள் வைத்திருப்பது கேடயம்தான். சிங்கள அரசு தான் கத்தி வைத்திருக்கிறது.
 
கேடயம் வைத்திருப்பவர் அதனை கீழே போட்டுவிட்டால் கத்தி வைத்திருப்பவர் அவரை குத்திவிட மாட்டாரா? ஆகையால் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டு அதன் பிறகே விடுதலைப்புலிகளை ஆயுதங்களை கீழே போட சொல்ல வேண்டும்.

அடுத்த நாட்டு பிரச்சனையில் ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்று மத்திய அரசு கூறுகிறது. அப்படியானால் இலங்கையுடன் இந்தியா எப்படி ஒப்பந்தம் போட்டது. மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்று சொன்னதால்தான் இந்த பிரச்சனையில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். எங்களை பார்த்து தான் இப்போது மற்ற கட்சிகளும் ஐ.நா. தலையிட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும் பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள். இந்த இரண்டு பெரிய கட்சிகளும் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக ஒன்றிணைந்து போராடுவார்களா? அவ்வாறு இவர்கள் ஒன்றிணைந்து போராடினால் நானும் அவர்களின் பின்னால் வருவேன்.

வரும் 24 ந் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது நம்முடைய போராட்டம் அவர்களுடைய செவிக்கு எட்டும் வகையில் அமைய வேண்டும். இருந்தாலும், தேமுதிக தொண்டர்கள் அனைவரும் ஐ.நா. பொதுச் செயலாளருக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இலங்கையில் போரை நிறுத்தக்கோரி ஒரு கோடி தந்திகள் அனுப்ப வேண்டும். இந்த பிரச்சனையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார். அதன் பின்னர் அவரது தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் அமெரிக்க தூதரகம் சென்று இலங்கையில் போரை நிறுத்த கோரி மனு அளித்தனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை; இரண்டாவது நாளாக இந்திய பாராளுமன்றில் எதிரொலிப்பு

india-parliament.jpgஇலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்திய பாராளுமன்றத்தின் மக்களவையில் (லோகசபை) நேற்று இரண்டாவது நாளாகவும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதையடுத்து சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி சபையை 45 நிமிடங்கள் இடைநிறுத்தி வைத்தார்.

மக்களவை அமர்வு பகல் 11 மணியளவில் ஆரம்பமானது. அச்சமயம் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க. உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு இலங்கைப் பிரச்சினை குறித்து விவாதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு சபாநாயகர் மறுப்புத் தெரிவிக்கவே அமளிஏற்பட்டது. இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த பா.ம.க., ம.தி.மு.க. எம்.பி.க்களும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக பாரதியஜனதா, பகுஜன்சமாஜக் கட்சி உறுப்பினர்களும் ஆசனங்களை விட்டு எழுந்து சபா மண்டபத்தில் குழுமிநின்று கோஷம் எழுப்பினர். முதலில் உறுப்பினர்களை அமைதிப்படுத்த முயற்சிசெய்தார் சபாநாயகர். முடியாமல் போகவே கடுமையாக எச்சரித்துவிட்டு சபையை 12 மணிவரை இடைநிறுத்தி வைத்தார்.

பின்னர், சபை மீண்டும் கூடியபோது, இலங்கைப் பிரச்சினை குறித்து பிரணாப் தாக்கல் செய்த அறிக்கையை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி பா.ம.க. வினர் குரல் எழுப்பினர் பிரணாப் அறிக்கை இலங்கை பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி பிரதீபா பேசியதற்கு அப்படியே எதிர்மறையாக இருப்பதாகவும் கூறினார்கள். மேலும் பிரணாப்பின் அறிக்கை ஒரு தலைப்பட்சமாக இருப்பதாகவும், பெறுப்பற்ற முறையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளி காரணமாக அவை மதியம் 2 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. பா.ம.க மற்றும் ம.தி.மு.க.வினர் லோக்சபாவுக்கு கறுப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர்.