::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

லண்டனில் இருந்து தொலைபேசியில் தமிழ்நாட்டில் 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

phone.jpgதமிழ் நாட்டில் 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. லண்டனில் இருந்து போனில் மிரட்டியவன் யார் என்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை சரக பொலிஸ் டி. ஐ. ஜி. அலுவலகம் ரேஸ்கோர்சில் உள்ளது.

(14) இரவு 10.30 மணி அளவில் இந்த அலுவலகத்துக்கு ஒரு மர்ம டெலிபோன் வந்தது. போனில் பேசியவர், “கோவை, திருச்சி, மதுரை ஆகிய 3 விமான நிலையங்களில், தொடர்ச்சியாக குண்டுகள் வெடிக்கும் என்றும், முடிந்தால் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்றும் ஆங்கிலத்தில் கூறி போனை வைத்து விட்டார். அந்த டெலிபோன் எண், காலர் ஐ. டி. யில் பதிவாகியிருந்தது. அது இங்கிலாந்து நாட்டு தலைநகர் லண்டன் நகர டெலிபோன் எண் ஆகும்.

கோவை சரக பொலிஸ் டி. ஐ. ஜி. சிவனாண்டி, அதுபற்றி உடனடியாக சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். கோவை, திருச்சி, மதுரை விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டன. கோவை ரேஸ்கோர்ஸ் பொலிஸார் இதையொட்டி வழக்குப் பதிவு செய்து லண்டனில் இருந்து போனில் மிரட்டியது யார் என்று புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மிரட்டலைத் தொடர்ந்து கோவை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்புப் படை துணை கமாண்டன்ட் அருண்சிங் தலைமையில் அதிரடி படையினரும், கோவை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு பொலிஸாரும் மோப்ப நாய்களின் உதவியுடன் இரவோடு இரவாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய நடந்த இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. கோவை விமான நிலையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை அவினாசி சாலையிலிருந்து விமான நிலையம் செல்லும் சாலையில், பொலிஸார் தடுப்புகளை அமைத்து விமான நிலையத்துக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் தீவிர பரிசோதனைக்குப் பிறகு தான் அனுமதித்தனர்.

விமான நிலையத்தின் நுழைவு வாயிலில், வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் புதிய நவீன கருவி மூலம் பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்படுகின்றன. இதனை தாண்டிச் செல்லும் பயணிகள் “ஸ்கேனர்” மற்றும் “மெட்டல் டிடெக்டர்” மூலம் சோதனை செய்யப்படுகிறார்கள்.

விமான நிலையத்திற்குள் வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக விமான நிலையத்தின் நுழைவு வாயிலிலிருந்து பயணிகள் விமானத்திற்குள் ஏறும் வரை அனைத்து பகுதிகளிலும் 32 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் இரண்டு புறமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு எந்திர துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இது தவிர விமான நிலையத்தின் முன்பகுதியில் சுமார் 10 கமாண்டோ வீரர்கள் குண்டு துளைக்காத உடை அணிந்து இயந்திர துப்பாக்கியுடன் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க பெப்ரவரி 15 இல் வெனிசூலாவில் சர்வசன வாக்கெடுப்பு

vote.jpgவெனி சூலாவின் ஜனாதிபதியாக தொடர்ந்தும் பதவி வகிக்க நடத்தப்படவுள்ள சர்வசன வாக்கெடுப்பை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகரித்துள்ளனர். சுமார் ஆறு எம். பிக்கள் எதிர்த்து வாக்களித்ததுடன் ஐந்து பேர் நடுநிலைமை வகித்தனர். 167 எம்.பிக்கள் சர்வஜன வாக்கெடுப்பை ஆதரித்தும் அரசியல் அமைப்பில் மாற்றம் கோரியும் வாக்களித்தனர்.

வெனிசூலாவில் ஜனாதிபதியின் பதவிக் காலங்களை மட்டுப்படுத்தி வரையப்பட்டுள்ள அரசியல் யாப்பை மாற்றம் செய்ய வேண்டுமா இல்லையா எனக் கோரியே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது. சாவெஸ் 1990 ஆம் ஆண்டு வெனிசூலாவின் ஜனாதிபதியாகப் பதிவியேற்றார். இரண்டு முறைகள் தொடர்ந்தும் வெற்றி பெற்று 1999 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவி வகித்த அவருக்கு தொடர்ந்து பதவியில் இருக்க முடியாமல் போனது. இதனால் முதலாவது திருத்தத்தைக் கொண்டு வந்து 2005 வரை தொடர்ந்தும் ஜனாதிபதியாக கடமையாற்றினார். தற்போது 2012 இல் பதவி முடிவடைவதால் மீண்டும் திருத்தம் கொண்டுவர முயற்சிக்கப்படுகின்றது.

பாராளுமன்றம் இதற்கான ஆணையை வழங்கியுள்ளதுடன் ஜனாதிபதியின் பதவிக் காலங்களை மட்டுப்படுத்தும் விடயத்தை அரசியல் அமைப்பிலிருந்து நீக்கிவிட முயற்சிக்கப்படுகின்றது. இதற்கான ஆணையை மக்களிடம் வேண்டியே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதற்கான திகதிகள் இதுவரை தீர்மானிக்கப்படாதபோதும் பெப்ரவரி 15 ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறும் என ஜனாதிபதி சாவெஸ் சொன்னார். பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். தனிநபர் ஆட்சி கொடுங்கோலுக்கு வழிகோலுமென இம் மாணவர்கள் கோஷமிட்டனர். வீதிகள், பெருந்தெருக்களை மறித்து போக்குவரத்துகளுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் இடையூறு உண்டு பண்ணினார்கள். பொலிஸார் பொல்லடி, கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்து இவர்களைக் கலைத்தனர்.

வெனிசூலாவில் மிக நீண்ட காலம் எம். பிக்களாகவும், ஜனாதிபதியாகவும் உள்ளோர் பண மோசடி, அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதால் பதவிக் காலங்களை மட்டுப்படுத்த வேண்டும். எனவே மக்கள் அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்படுவதற்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென கத்தோலிக்க அமைப்பொன்று கருத்து வெளியிட்டுள்ளது. வெனிசூலாவை மிகத் திறைமையுடன் ஆள்வதற்கு சாவெஸைத் தவிர இன்னுமொருவர் இல்லை. எனவே அவர் அதிகாரத்தில் தொடரவே வாக்களிப்போம் எனச் சிலர் கூறினர்.

ஈரான் விவகாரத்தில் புதிய அணுகுமுறையை கடைப்பிடிக்க ஒபாமா திட்டம்

obama.jpgஈரான் விவகாரம் தொடர்பாக தனது தலைமைத்துவத்தின் கீழ் அமெரிக்கா புதிய அணுகுமுறையைக் கையாளப்போவதாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே ஒபாமா இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்தொலைக்காட்சி நேர்காணலில் ஒபாமா மேலும் தெரிவிக்கையில்;

எமது சவால்களுக்குள் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக ஈரான் விவகாரம் உள்ளது. ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டமும் லெபனானின் சியா கட்சி ஹிஸ்புல்லா அமைப்புக்கான ஈரான் ஆதரவு வழங்குவதும் கவலை தருவதாக உள்ளது. மேலும், மத்திய கிழக்கின் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு விசேட குழு ஒன்றை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி புஷ்ஷின் நிர்வாக காலத்தில் குற்றமிழைத்த அதிகாரிகளை நான் நிராகரிக்கப்போவதில்லை. நான் பதவியேற்று நூறு நாட்களுக்குள் முடியாவிடினும் எப்படியாவது குவான்டனமோ சிறைச்சாலையை மூடுவது உறுதி. புஷ் நிர்வாகத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள் தொடர்பாக சட்டமா அதிபர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்வார் எனத் தெரிவித்தார்.

சதிகாரர்களை ஒப்படைக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து இந்தியா இறங்கி வரவில்லை- பிரணாப் முகர்ஜி

pranab-mukherjee.jpgமும்பை தாக்குல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகளையும், பிறரையும், இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிலையில் எந்த குழப்பமும், மாற்றமும், தொய்வும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரணாப் முகர்ஜி அளித்த பேட்டியில், தீவிரவாதிகளை நாடு கடத்துவது பாகிஸ்தானால் இயலாத காரியம் என்றால், சிக்கல் இருப்பதாக கூறினால், அவர்களை பாகி்ஸ்தானிலேயே வைத்து விசாரிக்க இந்தியா சம்மதிக்கும். ஆனால் விசாரணையில் நேர்மை இருக்க வேண்டும்.

ஒப்புக்காக விசாரணை நடத்தப்பட்டால் அதனால் எந்த பயனும் கிடையாது. கேலிக்கூத்தாகி விடும். விசாரணை வெளிப்படையாகவும், நியாயமாகவும், நேர்மையாகவும் அமைய வேண்டும் என்று கூறியிருந்தார். இதனால், இதுவரை தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று கோரி வந்த இந்தியாவின் நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கருதப்பட்டது. அமெரிக்காவின் ‘அட்வைஸ்’படி இந்தியா இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் எனவும் பேச்சு எழுந்தது. இந்தியா தனது நிலையிலிருந்து இறங்கி வந்திருப்பதாகவும் பேச்சு எழுந்தது. ஆனால் இந்தியாவின் நிலையில் எந்த தொய்வும், குழப்பமும் இல்லை என்று பிரணாப் முகர்ஜி விளக்கியுள்ளார்.

தனது டிவி பேட்டி குறித்து விளக்கி செய்தியாளர்களிடம் இன்று பேசினார் பிரணாப் முகர்ஜி. அப்போது அவர் கூறுகையில், மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களை, இந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட பாகிஸ்தானியர்களை, நம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.

அவர்களை இந்திய சட்டத்திற்கு முன்பு நிறுத்த வேண்டும். அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்ற நிலையிலும் மாற்றம் இல்லை.

மும்பைத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் முழுமையான விசாரணையை நடத்த வேண்டும். அக்கறையுடன், ஒளிவுமறைவுற்ற வகையில், அது நடந்து கொள்ள வேண்டும். இந்த சதித் திட்டத்தை அது வெளிப்படையாக பகிரங்கப்படுத்த வேண்டும்.

மும்பை சம்பவத்திற்குக் காரணமான பாகிஸ்தானியர்களை நம்மிடம் பாகிஸ்தான் ஒப்படைக்கவேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து அரசு மாறி விட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை.சதிகாரர்களை ஒப்படைக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து இந்தியா இறங்கி வரவில்லை. அந்தக் கோரிக்கையை நாம் இன்னும் கைவிடவில்லை. குற்றம் இந்தியாவில்தான் நடந்துள்ளது. எனவே இங்குதான் விசாரணை நடத்தப்பட வேண்டும். இங்குதான் அவர்கள் விசாரணையை சந்திக்க வேண்டும் என்றார் பிரணாப்.

பிரணாப் முகர்ஜியின் இந்த முன்னுக்குப் பின் முரணான பேச்சு குழப்பத்தை அதிகரித்துள்ளது.

2வது நாளாக திருமாவளவன் உண்ணாவிரதம்

thirumavalavan-1601.jpgஇலங் கையில் போர் நிறுத்தத்தை உடனடியாக அமல் செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன் இன்று 2வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். சென்னை அருகே உள்ள மறைமலை நகரில் நேற்று காலை தனது சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் திருமாவளவன். பெரும் திரளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் புடை சூழ அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இலங்கையில் போர் நிறுத்தத்தை அமல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தையும் மத்திய அரசு புறம் தள்ளி விட்டது. இதற்கு தமிழக மக்கள் தக்க சமயத்தில் தக்க பாடம் கற்பிப்பார்கள். பிரணாப் முகர்ஜியை அனுப்புங்கள் என்று கூறினால் மேனனை அனுப்பி வைத்துள்ளது மத்திய அரசு. யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார் ராஜபக்சே. இப்படிப்பட்ட நிலையில் ஐந்து லட்சம் தமிழர்களின் உயிர் அங்கு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையிலும் இந்திய அரசு பெருத்த மெளனம் காப்பது மிகவும் வேதனையாக உள்ளது என்று செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார் திருமாவளவன்.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கை செல்லக்கூடாது – திருமா பேட்டி

thiruma_1501.jpgஈழத் தமிழரைப் பாதுகாக்க கோரி சென்னை மறைமலை நகரில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள திருமாவளவன் நிருபர்களிடம் பேசிய போது, ஈழத்தில் தமிழ் மக்களை கொன்று குவிக்கும் செயலில் இறங்கியிருக்கிறது சிங்கள இராணுவம். இதைக் கண்டித்து இலங்கை கிரிக்கெட் அணியுடனான சுற்றுப் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மும்பை குண்டுவெடிப்பில் ஈடுபட்டது பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்பதால் அந்த நாட்டுக்கு செல்ல இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது.

அதேபோன்று இப்போது, ஈழத்தில் தமிழ் மக்களை கொன்று குவிக்கும் செயலில் இறங்கியிருக்கிறது சிங்கள் ராணுவம். இதைக் கண்டித்து இலங்கை கிரிக்கெட் அணியுடனான சுற்றுப் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தீக்குளிக்க முயற்சி

perijar.jpgஇலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னை மறைமலை நகரில் விடுதலைச் சிறுத்தைகள் உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் (15)  தீக்குளிக்க முயன்ற பெரியார் தி.க.வை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பரபரப்புக்கு பெயர்போன கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் (15) காலை தீக்குளிப்போம் என்று பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சிலர் அறிவித்து இருந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமிஷனர் கே.சி.மஹாலி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர்கள், சுந்தரவடிவேல், பழனிசாமி, ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சவுந்தர் ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், உள்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். அதோடு தீயை அணைக்கும் கருவிகளையும் கொண்டு வந்து தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. மதியம் 12.40 மணியளவில் 3 திசைகளில் இருந்து 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வந்து கையில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதை பார்த்த காவலர்கள் ஓடிச்சென்று அவர்கள் 3 பேரையும் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் இலங்கையில் ஈழத்தமிழர்கள் தாக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று ஆவேசமாக முழக்கமிட்டனர்.

இதையடுத்து தீக்குளிக்க முயன்ற 3 பேரையும் காவலர்கள் கைது செய்தனர். அவர்களது விபரம் :- பெரியார் ஜெகன் (30),ஈரோடு மாவட்ட பெரியார் திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளர், சம்பூகன் என்ற சண்முகம் ,.பெரியார் தி.க. திருப்பூர் நகர செயலாளர். கோபிநாத் (26), திருப்பூர் பெரியார் திராவிடர்கழகம்.. கைதான 3 பேரும் பந்தயச்சாலை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஆபிரகாம் லிங்கனின் நினைவிடத்திற்கு பராக் ஒபாமா விஜயம்: அவரைப் பின்பற்ற உறுதி

obama.jpgஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிளை வைத்தே பராக் ஒபாமா பதவியேற்கவுள்ளார். ஆப்ரகாம் லிங்கன் அதிபராகப் பதவியேற்றுக் கொண்ட பின்னர் எவ்வித மதிய உணவு சாப்பிட்டாரோ அதே போல தானும் சாப்பிட ஒபாமா முடிவெடுத்துள்ளார். ஆப்ரகாம் லிங்கனின் வழியை பின்பற்றி வருபவர் பராக் ஒபாமா. இதனால் அவரது வழியிலேயே தானும் பதவியேற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்வாகியுள்ள ஒபாமா வரும் 20ம் திகதி முறைப்படி பதவியேற்றுக் கொள்ளவுள்ளார். பதவியேற்பு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர். பதவியேற்றுக் கொண்ட பின்னர் ஒபாமா தனது மதிய உணவை நாடாளுமன்ற குழுவினருடன் சேர்ந்து சாப்பிட உள்ளார். இந்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்காவின் துணை அதிபர், அவரது குடும்பத்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 200க்கும் மேலான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் ஒபாமா தனது குடும்பத்தாருடன் ஆப்ரகாம் லிங்கனின் நினைவிடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில் :- என்னை கவர்ந்த மாபெரும் தலைவர் ஆப்ரகாம் லிங்கன் என்று பெருமிதத்துடன் கூறினார்.

ஐ.நா. செயலாளர் பான்கிமூன் மத்திய கிழக்கிற்கு விசேட விஜயம்

gaza_war02.jpgஐ.நா.  செயலாளர் பான்கிமுன் அவசர விஜயமொன்றை மேற்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவுள்ளார். இன்று புதன் கிழமை அவர் எகிப்து , ஜோர்தானுக்குச் சென்று காஸாவில் தோன்றியுள்ள அப்பாவிகளின் நெருக்கடிகளை நிறுத்துவது பற்றி பேசுவார். இஸ்ரேலை காஸா மீதான தரை, வான் தாக்குதல்களை நிறுத்துமாறும் ஹமாஸை ரொக்கட் தாக்குதலை நிறுத்துமாறும் கோரவுள்ளதாக பான்கிமுன் சொன்னார்.

அப்பாவிகளையும், பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கும் நோக்கில் அமைந்துள்ள தனது விஜயம் வெற்றி பெற அனைத்து வழிகளையும் செல்வாக்குகளையும் பாவிக்கவுள்ள பான்கிமுன் லெபனான், சிரியா, துருக்கி, குவைத் ஆகிய நாடுகளுக்கும் செல்லவுள்ளார்.

ஐ.நா. வின் ஆலோசனைகளை இரு தரப்பும் நிராகரித்தமையால் சிவிலியன்கள் வாழ்வு கவலைக் கிடமாகியுள்ளதாக பான்கிமுன் கவலை வெளியிட்டுள்ளார். ஹமாஸ¤க்கு நெருக்கமான நாடுகளான லெபனான், சிரியாவிடம் ரொக்கட் தாக்குதலை நிறுத்தும்படி ஹமாஸை வற்புறுத்துமாறு கோரவுள்ளதுடன் இஸ்ரேலிடம் நேரடியாக தாம் கோரிக்கை விடுக்கவுள்ளார்.

எகிப்தின் எல்லைகளைத் திறந்து பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்க இஸ்ரேலும் எகிப்தும் உடன்பட வேண்டும். இதுபற்றியும் பான்கிமுன் பேசுவார் இதுவரை 900 பேர் பலியாகியுள்ளனர். நாலாயிரம் பேர் காயமடைந்துள்ளனர். காஸாவில் காயமடைந் தோர் படும் அவலம் காண்போரைக் கண் கலங்க வைக்கும்.

தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் இணங்கி சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இதை நிராகரித்த ஹமாஸ் தமது போராளிகள் வெற்றிப் பாதையில் பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளது. தரைத் தாக்குதல் மோசமான கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து பாடசாலைகள், பொது இடங்களில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

மத்திய கிழக்கு விஜயத்தை முடித்துக் கொண்டு பான்கிமுன் 20ம் திகதி அமெரிக்கா செல்வார். புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்ளும் பான்கிமுன் காஸாவின் நிலவரம்பற்றி ஜனாதிபதியிடம் பேசவுள்ளதாகவும் ஐரோப்பிய யூனியனின் பங்களிப்பு அரபு நாடுகளின் தலையீடுகளின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணும்படி பராக் ஒபாமாவை கோருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பேரழிவிலிருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் மலேசிய நாடாளுமன்றத்தில் பேராசிரியர் இராமசாமி

world_news.jpgபாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய மலேசிய அரசாங்கம் இதேபோன்று பேரழிவில் இருந்து ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தை கூட்டித் தீர்மானம் நிறைவேற்றும்படி மலேசியாவில் உள்ள பத்துகவான் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநில துணை முதல்வருமான பேராசிரியர் முனைவர் இராமசாமி உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்தைப் போல் இலங்கை தமிழ் மக்களைக் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் இலங்கை அரசாங்கம் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றது.

பாலஸ்தீன மக்களைப் போல் ஈழத்தமிழ் மக்களும் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கின்றனர். ஈவு இரக்கமின்றி தமிழ் மக்களை சிங்கள அரசு விமானம் மூலம் குண்டுகளை வீசி அழித்து வருகின்றது. பாலஸ்தீன மக்களைப் போல் இலங்கைத் தமிழ் மக்களையும் அழிவிலிருந்து நாம் காப்பற்ற வேண்டும். ஈழத்தமிழர்களுக்காக ஒரு சிறப்புக் கூட்டத்தை கூட்டுங்கள் என்று பேராசிரியர் இராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார். பாலஸ்தீன மக்களுக்காக மலேசிய அரசாங்கம் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியது.

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த இந்த சிறப்புக் கூட்டத்தில் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்தை எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வேறுபாடின்றி வன்மையாகக் கண்டித்தனர். இந்தச் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பேராசிரியர் இராமசாமி, பாலஸ்தீன மக்கள் மட்டுமன்றி ஈழத்தமிழர்கள் படும் துயரங்களை எடுத்து விளக்கினார். சிங்கள அரசு இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கும் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அவரோடு இணைந்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் படும் துயரங்களைப் பற்றிப் பேசி அதற்குத் தீர்வு காணப்பாடுபடுவோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோகரன், குலசேகரன், லிம் சோங் எங் குறிப்பிட்டுள்ளனர்.

மலேசிய அரசிடம் இந்தியன் காங்கிரஸும் கோரிக்கை. இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டுமென்று கோரி, மலேசிய இந்தியன் காங்கிரஸின் இளைஞர் பிரிவின் ஆலோசகர் சா.வேள்பாரியும் கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் இராணுவத்தின் மூர்க்கத்தனமான தாக்குதல்களால் காஸாவில் அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டு வருவதைப் போல் இலங்கையிலும் அப்பாவி தமிழ் மக்கள் மீது இராணுவம் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான விமானக் குண்டுவீச்சு தாக்குதல்களால் குழந்தைகள் முதல் அப்பாவி மக்கள் வரை தினம் தினம் மடிந்து வருகின்றனர். மக்களின் மரண ஓலம் வானைப்பிளந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இலங்கை விவகாரத்திலும் உலக அமைப்பான ஐ.நா.உடனடியாக தலையிட வேண்டும் என்று மலேசியா சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வேள்பாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும். இராணுவத்தின் தாக்குதலினால் காயமடைந்திருக்கும் அப்பாவித் தமிழ் மக்களும் குழந்தைகளும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும். அங்கு அமைதி நிலை ஏற்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பாக ஐ.நா.உடனடியாக சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வேள்பாரி கேட்டுக்கொண்டார். இலங்கையில் நடக்கும் போரில் கொல்லப்பட்டு வருகின்றவர்கள் இனத்தினாலும் மொழியினாலும் சமயத்தாலும் தமிழர்கள். எனவே அங்கு நடக்கின்ற அட்டூழியத்தை மலேசிய இந்தியர்கள் என்ற முறையில் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

மலேசிய ஆளுங்கட்சியில் ஓர் உறுப்புக் கட்சி என்ற முறையில் மலேசிய இந்தியன் காங்கிரஸின் இளைஞர் பிரிவு இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவது குறித்து மலேசிய அரசாங்கம் உடனடித் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கின்றது. வேள்பாரியின் இந்த அறைகூவலை வரவேற்று பல சமூக இயக்கங்களின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.