கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

“நினைவுகளே எங்கள் கேடயம்!” என் செல்வராஜாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

கல்வியின் மகுடுமாகச் சித்தரிக்கப்பட்டு விருகின்ற யாழ்ப்பாணத்தில் 2024இல் நொத்தேர்ன் யுனிவர்சிற்றி என்ற கல்வி நிறுவனத்தின் விளம்பரத்துக்காக நடத்தப்பட்ட சினிமாக் கலைஞர்களின் நட்சத்திரக் கேளிக்கை நிகழ்ச்சி இளைஞர்களின் இச்சைகளைத் தூண்டும் கவர்ச்சி நடனத்திற்குள் கல்வியை கலப்படம் செய்தது. இதனை துரிதமாக பின்னோக்கிச் சுழற்றினால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 1974; ஜனவரியில், பல கோடி செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட நட்சத்திர கேளிக்கை விழாவுக்கு முற்றிலும் முரணான தமிழ் மக்களின் அடுத்த 50 ஆண்டுகாலத்தை தீர்மானிக்கின்ற நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தது. தமிழர்களின் அடுத்த 50 ஆண்டு அரசியலுக்கு வித்திட்ட நிகழ்வுகளில் இந்த நிகழ்வும் மிக மிக முக்கியமானது. அந்நிகழ்வு தான் யாழ்ப்பாணத்தில் 1974 ஜனவரியில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்சி மாநாடு. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு பற்றியும் அது ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் ஆங்காங்கே சில பதிவுகள் வந்த போதும், ஓரளவுக்காவது அந்நிகழ்வை ஆராய்ந்த ஒரு குறிப்பிடத்தக்க பதிவு இதுவரை வெளிவந்திருக்கவில்லை.

இவ்வாறான வரலாற்று ஆவணங்களை பெரும் ஆய்வுகளுக்கூடாக வெளிக்கொணர வேண்டியது அப்பிரதேசங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் பணி. ஒரு கல்விச் சமூகத்தின் மகுடமாக விளங்கும் பல்கலைக்கழகங்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக முன்னேற்றத்தை நோக்கிச் ஆய்வுகளை மேற்கொண்டு பட்டதாரி மாணவர்களை அம்மாற்றத்திற்கு முன்னோடிகளாக உருவாக்கி அந்த சமூகத்திற்கு வழங்க வேண்டும். இன்று தமிழ் சமூகம் 30 ஆண்டுகள் போராட்டம், யுத்தம் என்பனவற்றிலிருந்து விடுபட்டு யுதமில்லாத சூழ்நிலைக்குள் வாழ ஆரம்பித்து 15 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் வடக்கில் உள்ள யாழ் பல்கலைக்கழகம் தன்னுடைய சமூகம் சார்ந்து என்ன செய்துள்ளது? குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் தமிழ் மக்களின் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, மரபுகள் பற்றி எத்தனை ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்? இவை தொடர்பில் எத்தனை நூல்கள் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவந்துள்ளன? வடக்கில் மதுபானம், போதைவஸ்துக்கு அடிமையாதல் மிக அதிகமாக உள்ளது. வீதி விபத்துக்கள் அதிகமாக உள்ளது. சமூகப் பிறழ்வுகள் அதிகரித்துள்ளது. இளவயதுத் திருமணங்கள் அதிகரித்துள்ளது. கல்வித் தரம் வீழ்ச்சி அடைந்துகொண்டுள்ளது. தமிழ் மக்களுடைய வரலாறுகள் மறைந்துகொண்டிருக்கின்றது. இவைகள் பற்றி என்ன ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது? இவற்றைத் தடுக்கும் விழிமுறைகள் பற்றி எத்தனை ஆய்வுகள் செய்யப்பட்டது? அவை பற்றிய கருத்தரங்குகள் நடைபெற்றதா? இவற்றினைப் பற்றி தமிழ் அரசியல் தலைமைகளுக்கு அறிவுறுத்தப்பட்டதா?

இவை தொடர்பில் யாழ் பல்கலைக்கழகத்தின் குறிப்பாக கலைப்பீடத்தின் பீடாதிபதி என்ன செய்கின்றார்? பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் என்ன செய்கின்றனர்? எத்தனை ஆய்வறிக்கைகள், புத்தகங்களை இவர்கள் கடந்த 15 ஆண்டுகளில் வெளியிட்டுள்ளனர்? தங்கள் பேராசிரியர் பதவி உயர்விற்காக இந்திய பல்கலைக்கழகங்களில் பணம்கொடுத்து எழுதி அங்கேயே பணம் கொடுத்து ஆய்வுகளை வெளியிடும் போலிச் சஞ்சிகைகளில் வெளியிட்டதைத் தவிர இவர்கள் என்னத்தைச் செய்தார்கள்? இப்பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களுக்கு, பேராசிரியர்களுக்கு, பீடாதிபதிகளுக்கு இதனைச் செய்வதற்காகவே இலங்கைப் பல்கலைக்கழக மானியத்துறை, கோடிக்கணக்கான நிதியைச் செலவிடுகின்றது. இதற்காகவே விரிவுரையாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பல லட்சம் ஊதியம் வழங்கப்படுகின்றது. ஆனால் யாழ் கல்விச் சமூகத்தின் மகுடமான பல்கலைக்கழகம் இதை எதையுமே செய்யவில்லை. யாழ் பல்கலைக்கழகம் பள்ளிக்கூடம் தான் நடத்துகின்றது.

1981இல் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டது, இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியமான மற்றுமொரு நிகழ்வு. ஆனால் அந்நூலகம் எரிக்கப்பட்டு நாற்பது ஆண்டுகளில் அந்நூலகம் எப்போது எரிக்கப்பட்டது, அதனுடன் சம்பந்தப்பட்ட அரசியல் தலைமகளின் செயற்பாடுகள் பற்றிய பல உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டது. அதனை மீண்டும் ஆதாரங்களுடன் தேடிப் பதிவிட்டு அந்நூலகம் எரிக்கப்பட்டதற்குப் பின்னாளிருந்த அரசியல் தலைவர்களை ஆதாரமான பதிவுகளோடு நிறுத்தி இரு ஆவணங்கள் வெளியானது. “யாழ்ப்பாணப் பொதுநூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு” என்ற நூலிலும் அதனைத் தொடர்ந்து “Raising from the ashes“ என்ற தேசம் வெளியீடாக வந்த நூலிலும் இப்பதிவுகள் இடம்பெற்றது.

இவ்வாறு நூற்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளையும், நூல்களையும் வெளியிட்டதுடன் ஆயிரக்கணக்கான நூல்களையும் ஆவணங்களையும் தன் சேகரிப்பில் வைத்துள்ளவர் தேசம் சஞ்சிகையால் ‘நூலகவியலாளர்’ என்று கௌரவிக்கப்பட்ட என் செல்வராஜா. ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்த கௌரவத்துக்கு உரியவர் இவர் மட்டுமே. வேறுயாராவது அவ்வாறு அதனைப் பயன்படுத்துவார்களானால் அது அவர்களுடைய அறியாமையே. தன்னுடைய பதின்ம வயது முதல் நூல்களும் நூலகமுமாக வாழ்ந்தவர் என் செல்வராஜா என்றால் அது மிகையல்ல. எமது இதயங்கள் ‘லப்’, ‘டப்’, ‘லப்’, ‘டப்’ என்று அடித்தால் நூலகவியலாளர் செல்வராஜாவின் இதயம் மட்டும் ‘வா’, ‘சி’, ‘வா’, ‘சி’ என்று தான் அடிக்கும். இதனை அவர் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளில் உள்ள ஆங்கிலேய நூலகங்கள் கூட அறிந்து கௌரவித்துள்ளன. அவருக்கு கிடைத்துள்ள கௌரவங்களை பட்டியல் இடுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஈழத் தமிழ் சமூகத்தின் மனநிலையை சற்றுத் தட்டி எழுப்புவதே இக்கட்டுரையின் நோக்கம். இக்கட்டுரை நூலகவியலாளர் என் செல்வராஜாவை தெரியாதவர்களுக்கு அவரை அறிமுகப்படுத்துவதல்ல.

நூலகவியலாளர் என் செலவராஜாவுக்கும் எனக்குமான உறவு எனது எழுத்துக்களுக்கும் எனக்குமான உறவுவரை நீண்டது. தந்தையும் தனயனுமாக, நல்ல நண்பர்களாக, நல்ல எதிரிகளாக நட்பும் பகையும் கொண்டது. நாங்கள் இருவருமே எதிரும் புதிருமான சமூக அரசியல் முகாம்களைச் சேர்;ந்தவர்கள். முரண்படுவோம் என்பதில் உடன்பாடுடையவர்கள். தமிழ் சமூகத்தில் மிகத் தட்டுப்பாடான கிடைத்தற்கரிய ஒரு உறவுமுறை. முரண்படுவதற்காக உடன்பாடு.

நூலகவியலாளர் என் செல்வராஜா ஒரு கடைந்தெடுத்த நல்லதொரு தமிழ் தேசியவாதி. அதனை முழுமையாக நம்பியவர். நம்புகிறவர். அதனையே நம்புபவர். ஆனால் தமிழ் தேசியவாதிகளாக தங்களைக் காட்டிக்கொள்கின்ற அரசியல்வாதிகள், வியாபாரிகள், கோயில் வியாபாரிகள், கல்வியியலாளர்கள் போன்று இவர் தன்னுடைய தேவைகளுக்காக தமிழ் தேசியத்தை போர்த்துக்கொண்டவரல்ல. அதனால் இவருடைய முதுகெலும்பிலும் சற்று கூடுதலான தமிழ் தேசியம் உள்ளது. அதனால் வளைந்துகொடுக்க அது இடம்கொடுப்பதில்லை. இதனால் போலித் தமிழ் தேசியவாதிகளும் இவருக்கு முன் புன்சிரிப்பைத் தவழவிட்டாலும் இவருடன் நீண்டதூரம், நீண்ட காலம் பயணிப்பதில்லை. நூலகவியலாளர் என் செல்வராஜாவின் தமிழ் நூல்கள் பற்றியும் நூலகம் பற்றியும் ஒரு காதால் கேட்டு மற்றைய காதால் விட்டுவிடுவார்கள். ஆக மிஞ்சிப் போனால் கூட்டத்திற்குக் கூப்பிட்டு ஐந்து பவுணுக்கு பொன்னாடை போர்த்தி ஒரு படம் எடுத்துவிட்டு அனுப்பி விடுவார்கள்.

1963இல் அமெரிக்க சிவில் உரிமைப் போராளி மார்டின் லூர்தர் கிங்க்கின் ‘எனக்கு ஒரு கனவு உண்டு…’ என்ற உரை ஒடுக்கப்பட்ட ஆபிரிக்க அமெரிக்கர்களைத் தட்டி எழச் செய்தது. அவ்வாறே நூலகவியலாளர் என் செல்வராஜாவுக்கு ஒரு கனவு இருக்கின்றது. ‘தமிழர்களுக்கு என்றொரு ஆவணக்காப்பகம்’ தான் என் செல்வராஜாவுடைய கனவு. இந்தக் கனவுக்காக அவர் சில பத்து ஆண்டுகளாக அயராது உழைக்கின்றார். ஆனால் இதுவரை அவருடைய கனவு மெய்ப்படுவதற்கான எவ்வித சமிக்ஞைகளும் தெரியவில்லை. வர்த்தகர்கள், கோயில்காரர்கள், முதலீட்டாளர்கள், சாதாரணர்கள் எனப் பலரோடும் பேசியும் அவருடைய கனவு ஒரு கையேட்டிற்குள்ளேயே குறுக்கப்பட்டுவிட்டது. இன்னும் கொஞ்சக்காலம் போனால் நூலகவியலாளர் என் செல்வராஜா லைப்ரொபிரினியா (librophrenia) வால் பாதிக்கப்பட்டுவிட்டார் என்று சொல்லிவிடுவார்கள்.

யாழில் பெப்பரவரி 9 நடைபெற்ற இசைக் கலைஞர்களின் நிகழ்வுகளுக்கு பல கோடிகள் செவிடப்பட்டது. அமெரிக்க பங்குச் சந்தையைக் கலக்கிய தமிழர் சில செக்கன்களில் பலநூறு கோடிகளை இழந்தது பற்றி விதந்துரைக்கின்றார், தென்னிந்திய சினிமாவின் ஈழத் தயாரிப்பாளர் படங்களுக்கு பல நூறு கோடிகளை கொட்டுகின்றார், ஹொட்டலியர்கள் பல பத்துக் கோடிகளை அள்ளி வீசுகின்றனர், இவர்கள் வரிசையில் இன்னும் பல பல கோடிகளை விசுக்க இன்னும் பலர் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். கோயில் கடைக்காரர்கள் பல கோடிகளை வாரி இறைக்கின்றனர். இவர்களெல்லோருமே தங்களின் பரம்பரையே செலவழிப்தற்கு தேவையான சொத்திலும் அதிகமான சொத்துக்கள் தங்களிடம் உள்ளது என்றும் தாயகத்தை வைத்து தாங்கள் உழைக்கத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர். உண்மையாகவா?

அப்படியானால் நீங்கள் ஏன் நீண்ட காலப் போக்கில் ‘ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றை என்றென்றைக்கும் காக்கும் ஒரு ஆவணக் காப்பகத்தை புலம்பெயர் தேசமொன்றில் உருவாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது? யாழ் நூலகம் அழிக்கப்பட்டு எமது வரலாற்று ஆவணங்கள் அழிக்கப்பட்டது போன்ற நிலை எதிர்காலத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே புலம்பெயர் தேசமொன்றில் ‘தமிழ் ஆவணக்காப்பகம்’ ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் நூலகவியலாளர் என் செல்வராஜா. அவருடைய நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுத் தொகுப்புக்கு “நினைவுகளே எங்கள் கேடயம்” என்று பெயரிட்டுள்ளார். இந்தத் தலைப்புக்கு பின்னுள்ள ஆழமான கருத்தாக்கத்தை ஈழத்தமிழர்கள் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மனித ஆளுமையின் உருவாக்கத்தில் அவனுடைய வரலாறு மிக முக்கியமானது. வுரலாற்று ஆவணங்கள் மட்டுமே எங்கள் நினைவுகளை பாதுகாக்கும் கேடயங்கள். அவற்றை இத்தலைமுறையில் பாதுகாக்கத் தவறினால் ஈழத்தமிழர்களின் கடந்த 50 வருடகால போராட்ட வரலாறு தனிமனிதர்களின் இறுதித் தீயோடு அதுவும் சங்கமமாகி விடும்.

நூலகவியலாளர் என் லெ;வராஜாவினை போலித் தேசியவாதிகள் கருத்தில் கொள்ளாததை விட்டுவிடலாம் ஆனால் தேசியத்தை உண்மையில் நம்புகின்ற விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரும் கூட நூலகவியலாளர் என் செல்வராஜாவை திட்டமிட்டு புறக்கணிப்பது தமிழ் தேசியத்தின் மிகமோசமன குழறுபடி. அப்படிப்பட்ட தமிழ் தேசியவாதிகள் யார்? தமிழ் தேசியம் என்றால் என்ன? அந்த தமிழ் தேசியத்தை யார் முன்நிறுத்துகின்றனர் என்ற விவாதம் எப்போதும் இருக்கத்தான் போகின்றது. அதற்குள் இக்கட்டுரையை நான் நுழைய அனுமதிக்கவில்லை.

ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்டது போல கடந்த 50 ஆண்டுகளில் நூல்களுக்கும் நூலகங்களுக்கும் உள்வாழ்ந்தவர் நூலகவியலாளர் என் செல்வராஜா. ஈழத்தமிழ் நூல்கள் அல்லது நூலகம் பற்றி பேசுகின்ற ஆய்வாளர்கள் எழுத்தாளர்கள் என் செல்வராஜாவை கண்டுகொண்டிருக்காவிட்டால் அது அவர்களுடைய ஆய்வின் எழுத்தின் மிகப்பெரிய பலவீனம். பல்கலைக்கழக துறைசார் ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு அவர்களின் வழிகாட்டிகள் அத்துறைசார் ஆளுமைகளின் நூல்கள், ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்குமாறு நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கும் என்பதனை பலகலைக்கழகம் சென்ற அல்லது துறைசார் ஆய்வுகளை மேற்கொண்ட எவரும் அறிந்திருப்பர்.

தற்போது மிகப்பெரு முயற்சியில் ஒரு மெய்நிகர் (ஒன்லை லைப்ரரி) உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய மிக முக்கிய பணி;. ஈழத்தமிழர்களுடைய வரலாற்றில் மிகவும் போற்றப்பட வேண்டிய ஒரு செயற்பாடு. அதிலுள்ள ஒவ்வொருவருடைய பணியும் உழைப்பும் மிகப்பயனுள்ளது. ஒரு அறிவியல் அமைப்பானது நீண்டகாலத்தில் வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டுமானால் அது தொடர்ந்தும் அறிவியல் சார்ந்தவர்களை இணைத்துக்கொண்டு அவர்களையும் உள்வாங்கி பயணிக்க வேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் போல் திறமையானவர்கள் உள்ளே நுழைவிடாது அந்நிறுவனத்தை குட்டிச் சுவராக்குவது அழகல்ல.

ஆம் ‘நூலகம் பவுண்டேசன்’ என்ற இந்த மெய்நிகர் நூலகம் நூலகவியலாளர் என் செல்வராஜாவின் ஐம்பது ஆண்டுகள் விதைத்த கருத்துக்களின் மேல் கட்டப்பட்டிருந்த போதும் அந்நூலகத்தில் அவர் உள்வாங்கப்படாதது, நூலகம் பவுண்டேசனின் மிகப்பெரும் பலவீனம். வடக்கிலும் கிழக்கிலும் மெய்யான இரு நூலகங்களின் உருவாக்கத்தில் அதன் வளர்ச்சியில் ஒரு தூணாக நின்றவரை இந்த மெய்நிகர் நூலகம் உள்வாங்காதது ஏன்? அதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன?

இது தான் தமிழ் சமூகத்தின் சாபக்கேடு. தமிழ் மக்கள் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற கூக்குரல்கள் எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் கேட்டுக்கொண்டே உள்ளது. இந்த வெற்றுக் கூக்குரல்களை நான் ஒரு போதும் பொருட்டிலும் எடுப்பதில்லை. இந்தக் கூக்குரல்கள் அர்த்தமற்றவை. ஏனெனில் ஒரு சமூகம் முன்னோக்கி நகர்வதற்கு முரண்பாடுகள் அவசியம். அவை பகைமுரண்பாடுகள் இல்லாமல் மக்களின் பொதுநன்மை கருதி சமூகத்தை முன்தள்ளிச் செல்லும்வரை அந்த முரண்பாடுகள் ஆரோக்கியமானவையே. ஆனால் நூலகவியலாளர் என் செல்வராஜா ஏன் மெய்நிகர் நூலகம் பவுண்டேசனுக்குள் உள்வாங்ககப்படவில்லை என்பது மிகவும் சின்னத்தனமானது.

மெய்நிகர் நூலகம் பவுண்டேசன் உருவாக்கத்திற்கு தமிழ் தேசியம் ஒரு கணிசமான தொகையினை பத்மநாப ஐயரிடம் வழங்கி இருந்தது. இந்த நூலகத்திட்டத்திற்கு சசீவன், கோபி உட்பட கணணித்துறையில் தீவிர ஈடுபாடுடைய சில இளைஞர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் இந்த முயற்சியே மெய்நிகர் நூலகத்தின் வளர்ச்சி. இன்று இந்நூலகத்தில் சில பத்துப்பேர் பணியாற்றுகின்றனர். நினைத்தற்கரிய காரியங்களை இவர்கள் சாதித்துள்ளனர். ஆனால் இந்நூலகத்தினை ஆளுமை செய்வதில் இன்றும் பத்மநாப ஐயரின் செல்வாக்கு கணிசமானது. அதற்கு முக்கிய காரணம் அந்நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கான நிதியை அவரே பல வகையிலும் கொண்டுவந்து சேர்க்கின்றார். என் செல்வராஜாவின் வேண்டுகோளுக்கு இணங்க ஈவிலிங்ரத்தினம் இன்ஸ்ரிரியூற்றின் நூல்களைக் கணணிப்படுத்துவதற்கான செலவீனத்தை லிற்றில் எய்ட்டே பொறுப்பெடுத்தது. அதற்கான கோரிக்கையை பத்மநாப ஐயரே என்னிடம் கேட்டிருந்தார்.

பத்மநாப ஐயர் பல்வேறு முரண்பாடுகளோடும் நீண்டகாலமாக பகையாகவும் நட்பாகவும் உள்ள கண்ணியமான மனிதர். தனக்காக என்றொரு வாழ்க்கை இல்லாமல் புத்தகங்களோடு வாழ்பவர். அவர் வீட்டில் தடக்கி வீழ்ந்தால், நிச்சயமாக புத்தகத்தில் தான் தடக்கி விழ வேண்டும். வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் உள்ள அவரின் பின் அவருடைய புத்தகங்களுக்கு என்ன ஆகும் என்பது அவருக்கும் தெரியுமா தெரியாது. ஆனால் பத்மநாப ஐயர் கேள்விஞானி மட்டுமே. அவர் ஒரு புத்தகத்தையாவது முழுமையாக வாசித்திருப்பாரா என்பது தெரியாது. ஆனால் அவர் எழுத்தாளர்களையும் வாசகனையும் அவர்களுக்குத் தேவையான புத்தகங்களுடன் இணைத்துவிடுவதில் மிகச் சிறந்த மனிதர். அவர் என் செல்வராஜா போன்று தன்னை ஈழத்துடன் மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளாதவர். அதனால் அவருக்கு தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்கள் பதிப்பாளர்களுடனும் நெருங்கிய தொடர்பு உண்டும். அந்த வகையில் பத்மநாப ஐயர் எழுத்தாளர்களுடன், வாசகர்களுடன் புத்தகங்களை இணைத்து விடுகின்ற ஒரு சிறந்த நூல்முகவர்.

இந்த இரு ஆளுமைகளுமே தமிழ் தேசியவாதிகள் தான். இந்த இரு ஆளுமைகளுமே ஒரே இலக்கை நோக்கியே நீண்ட தூரம் பயணித்துள்ளனர். தற்போது இருவருமே வாழ்க்கையின் கடைப்பக்கதில் பயணிக்கின்றனர். இவர்கள் இருவருடைய உழைப்பும் தமிழ் மக்களின் ஆவணங்களை பாதுகாக்கின்ற பணிக்கு மிக அவசியமானது. இவர்களிடையே சில தனிமனித முரண்பாடுகள் இருந்தாலும், இவ்விரு ஆளுமைகளிடையேயும் பொது உடன்பாடுகளே அதிகம். தனிமனித முரண்பாடுகளைக் களைந்து தமிழ் தேசியத்தின் தமிழர்களின் வரலாற்று ஆவணங்களை பேணிப்பாதுகாக்கின்ற மெய்நிகரான நூலகம் பவுண்டேசனில் இணைந்து செயற்பட வேண்டும். துறைசார் திறமையும் ஆளுமையும் உடையவர்கள் தமிழ் மக்களின் படைப்புகளையும் ஆவணங்களையும் பேணிப்பாதுகாக்கின்ற செயற்பாடுகளில் இணைந்து செயற்படுவதன் மூலம் சினெர்ஜியை – மேல்கூட்டுத்திறனை உருவாக்க வேண்டும்.

வரும் ஞாயிறு பெப்ரவரி 18 இல் திரள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள என் செல்வராஜாவின் “நினைவுகளே எங்கள் கேடயம்!” என்ற யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாரய்ச்சிமன்ற நிகழ்வுகளில் நடைபெற்றது என்ன என்ற ஆவணங்களின் தொகுப்பு நூல் வெளியீடு லண்டனில் நோர்த்ஹோலில் நடைபெற உள்ளது. ஈழத்தமிழர்களுடைய வரலாறு அழிந்து போய்விடாமல் தூசி தட்டி எடுத்து ஆவணமாக்கும் நூலகவியலாளர் என் செல்வராஜாவின் தமிழர்களுக்கு என்றொரு ஆவணக்காப்பகம் வேண்டும் என்ற கனவை நாம் ஒவ்வொருவரும் காணும்போது மட்டுமே ஈழத்தமிழர்களுடைய வரலாறுகள் அதன் உண்மைத்தன்மையின் அடிப்படையில் பாதுகாப்பதற்கான காலம் கனியும்.

யாழில் இந்திரன் பல்கலைக்கழகம் கட்டுகிறாரா? இந்திர(ன்)லோகக் கன்னிகைகள் கழகம் கட்டுகிறாரா?

யாழில் பெப்பரவரி 9 அன்று இந்திய நடிகர்கள் மற்றும் பாடகர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் மிகுந்த சர்ச்சை ஏற்பட்டது. ரம்பாவின் கணவர் என்றும் இந்திரன் என்றும் அறியப்பட்ட இந்திரகுமார் பத்மநாதனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு யாழ் தமிழ்த் தேசியவாதிகளால் கடும் விமர்சனத்திற்கு உட்பட்டிருந்தது. ஆயினும் தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடித்தவர்களையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான மக்கள், இளைஞர்கள் தங்கள் கனவுக் கன்னிகைகளைப் பார்க்க இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பார்வையாளர்களின் இருக்கை மற்றும் அவர்கள் பார்ப்பதற்கான திரைகள் எதனையும் ஏற்பாடு செய்யாத நிலையில் இளைஞர்கள் தங்கள் கனவுக் கன்னிகைகளைப் பார்ப்பதற்கு முண்டியடித்து தடுப்பு வேலிகளை உடைத்தெறிந்து முன்னோக்கி நகர்ந்ததுடன் ஒளி, ஒலி அமைப்புக்கு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த மேடைகளிலும் ஏறி நிகழ்வுகளைப் பார்க்க முயன்றனர். ரசிகர்கள், நிகழ்வுக்கு சுற்றிவரப் போட்ட வேலிகளைத் தாண்டி உள்ளே நுழைந்ததால் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற அச்சமும் அங்கு நிலவியது. எழுபதுகளில் தமிழாராச்சி மாநாட்டில் நிகழ்ந்தது போன்ற அசம்பாவிதம் அதிஸ்ரவசமாக அன்று நிகழவில்லை. நிழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் வந்திருந்த கலைஞர்களும் ரசிகர்களை அமைதிகாக்கச் சொல்லிக் கெஞ்சிய போதும் நிகழ்ச்சியை முழுமையாக திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை.

இந்நிகழ்வை இந்திரன் ஆரம்பிக்கப்போகின்ற நோர்தேர்ன் யூனி வர்சிற்றிக்கான விளம்பரமாகவே ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் தமிழகத்தின் முக்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், நடிகர்கள், பாடகர்கள் எனப் பலரும் யாழ் வந்திருந்தனர். நேற்றைய நிகழ்வானது தமிழக சினிமா உலகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையேயான முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது. ஏற்கனவே புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தமிழகத்தின் சில நடிகர்இ நடிகைகளுக்கு எதிராக அவர்களுடைய நிகழ்வுகளைக் குழப்பியிருந்தனர். தற்போதைய இந்நிகழ்வுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தது.

“இது இசை நிகழ்ச்சி அல்ல இது ஒரு குத்தாட்ட நிகழ்ச்சி….. இலவசம் எனக் கூறி எமது இளைஞர் பரம்பரையை அவமானப்படுத்திஇ அவர்களைக் கோபம் கொள்ள வைத்த கூத்து… இந்த நிகழ்ச்சிக்கு எம்மவர்கள் குடும்பம், குடும்பமாக சென்றது எமது பிழை….” என்கிறார் ஒடுக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பினைச் சேர்ந்த தம்பி தம்பிராசா.

இது தொடர்பாக தேசம்நெற்க்குத் தெரிவித்த இந்நிகழ்வை ஒளிப்பதிவு செய்யச் சென்ற முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவரான த ஜெயக்குமார், “அமையப் போகின்ற பல்கலைக்கழகம் ஒரு திரைப்படத்துறை சார்ந்த பல்கலைக்கழகம் என்றால் கூட தம்மன்னா கோஸ்டியைக் கொண்டு வந்து இப்படியொரு நிகழ்ச்சியை நடத்துவது பொருத்தமற்றது. ஆனால் நொதேர்ன் யூனிவர்சிற்றி, Sri Lanka Institue of Information Technology – SLIIT உடன் இணைந்து கணணித்துறைசார்ந்த கற்கைநெறிகளையே மேற்கொள்ள உள்ளது. இதற்கு தம்மன்னா கோஸ்டி எதற்கு?” என்றார். இதே கேள்வி கல்வியியலாளர்கள் பலரிடமும் எழுந்துள்ளது.

இந்திரன் என்று அறியப்பட்ட நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ் சுதுமலையிலிருந்து கனடாவுக்கு குடும்பத்தோடு புலம்பெயர்ந்தவர். அங்கு வெற்றிகரமாக “மஜிக் வூட்ஸ்”மற்றும் பல துணை நிறுவனங்களை நடத்தி வருகின்றார். அக்காலகட்டத்தில் புலிகளும் பல நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டு வந்தனர். அப்போது தமிழகத்திலும் புலிகள் சில பல முதலீட்டு முயற்சிகளில் ஒன்று இந்த மரங்களை தளபாடங்களை உற்பத்தி செய்வதும் ஏற்றுமதி செய்வதும். அவ்வேளையில் புலிகள் தங்கள் முதலீட்டுக்கு நம்பகரமான ஒரு நபர்களைத் தேடிய போது ‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல்’ இந்திரனுக்கு அடித்தது அதிர்ஸ்ட்டம். இத்தகவலை புலிகள் அமைப்புடன் நெருங்கிச் செயற்பட்ட நம்பகமான ஒருவர் தேசம்நெற்ககுத் தெரிவித்தார். இது தொடர்பாக இந்திரனுடைய பள்ளி நண்பரும் தமிழீழ விடுதலைப் புலிகளில் மாத்தையா அணியில் இருந்தவருமான தேவன் குறிப்பிடுகையில், அது இந்திரனின் முதலீடு மட்டுமே எனத் தெரிவித்தார்.

இந்த மஜிக் வூட்ஸின் விளம்பரத்திற்கு வந்தவர் தான் ரம்பா. அப்போது இவர் தயாரித்த ‘திறி ரோசஸ்’ என்ற படம் தோல்வியடைந்த நிலையில் மிகுந்த பண நெருக்கடியில் இருந்த போது இந்திரன் அவரைக் கண்டு காதல் வசப்பட்டார். ரம்பாவின் கடனையும் அடைத்தார். அத்தோடு முதல் மனைவியை விவாகரத்துச் செய்து ரம்பாவைத் திருமணம் செய்ததைத் தொடர்ந்து பிரபல்யமானார்.

நேற்றைய நிகழ்வில் ஏற்பட்ட குழப்பத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் நிகழ்வு முகாமைத்துவம் இன்மையே காரணம் என ஜேர்மனியில் வாழும் சமூகச் செயற்பாட்டாளரும் தொழில் முனைவருமான இரத்தினசாமி ரமேஸ்வரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

ஆயினும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட பல இளைஞர்கள் மதுபோதையிலும் போதைப்பொருட்கள் பாவித்த நிலையிலுமே கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்சியைத் திட்டமிட்டபடி தொடர்ந்து நடத்த முடியாமல் போனதற்கு இதுவும் முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாது. ஆனாலும் இவ்வாறானவர்களை நிகழ்வில் பங்கேற்க விடாமல் தடுப்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பும் கூட. ஒரு பொதுவான களியாட்ட நிகழ்வை எப்படி நடத்தக்கூடாது என்ற வரலாற்றுப் படிப்பினையை இந்திரன் ஈழத்தமிழர்களுக்கு கற்றுத் தந்துள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் யாழில் வந்து செய்கின்ற செயற்பாடுகள் ஆரோக்கியமானதாக இல்லை என்று குறிப்பிடும் தம்பி தம்பிராசா தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியை மோசடி செய்த பலர் தற்போது தாயகம் திரும்பி யாழ் சமூகத்தின் கலாச்சாரத்தை சீரழித்து வருவதாகத் தெரிவிக்கின்றார். இந்தப் பட்டியலில் வரக்கூடிய அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தம்பி தம்பிராசா, குறிப்பிடாத சிலர்:
வலன்ரைன்ஸ் டேய்க்கு பிரான்ஸ், லண்டன் ஸ்ரைலில் பூட்டுப் போடவும், காதல் செய்யவும் தங்கள் ரீட்சா ஹொட்டலுக்கு கூவி அழைக்கும் ஐபிசி பாஸ்கரன்,
யாழ் ஆணாதிக்க வெள்ளாள சைவப் பழம் ஆறுதிருமுருகனிடம் ஆசீர்வாதம் பெற்று யாழில் மதுவும் மாதுவுமாக டிஸ்கோ கிளப் நடாத்தும் திருவள்ளுவருக்கு திருநீற்றுப் பட்டையும் சந்தனப் பொட்டும் வைத்து வள்ளுவரின் வரலாற்றை யாழில் மாற்றியமைத்த புலிகளின் ஆணிவேர் படத் தயாரிப்பாளரும் ரில்கோ ஹொட்டல் உரிமையாளருமான திலகராஜா,

 

பிரான்ஸ் லாக்குர்னே சிவன் ஆலயம் நடத்தும் நல்லூரில் உள்ள காமவிடுதி லக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் ஜெயந்திரன்,
(அண்மையில் யாழில் பிறந்தநாள் கொண்டாடிய ஒரே மகனின் மனைவி) மருமகளிடம், அவரின் தாயும் தங்கையும் குடியிருந்த கொழும்பு வீட்டை சீதனமாக எழுதித்தரச்சொல்லி வற்புறுத்திய கொடைவள்ளல் சுவிஸிலிருந்து வந்து எம்ஜிஆர் வேசம் போடும் ‘தியாகி’ அறக்கட்டளையின் வாமதேவன் தியாகேந்திரன் (இவர் லக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் ஜெயந்திரனின் சகோதரர்.)

லண்டனில் உள்ள சில புலி ஆதரவு ஆர்வக்கோளாறுகள் எவ்வாறு இந்திய உளவுத்துறை றோ உடன் சேர்ந்து தமிழீழம் காணப் போகிறோம் என்று கூறுகிறார்களோ அதே போல் மேற்குறிப்பிட்டவர்கள் இலங்கை அரசோடும் புலனாய்வுத்துறையோடும் சேர்ந்து யாழில் தமிழ் தேசியத்தை முன்னெடுக்கின்றனர். யாழ் சட்டத்தரணி செலஸ்ரினின் மொழியில் சொன்னால், “தம்மன்னாவை அழைத்து இளைஞர்களை எழுச்சிபெற வைத்து தமிழ் தேசியத்தை எழுச்சி பெறச் செய்கின்றனர்”.

யாழில் இந்திரன் பல்கலைக் கழகம் கட்டுகிறாரோ இல்லையோ இந்திரலோகக் கன்னிகைகள் கழகம் கட்டுவார் என்பதை மட்டும் உறுதியாகத் தெரியப்படுத்தியுள்ளார். உலகில் கவர்ச்சி நடனம் ஆடி பல்கலைக்கழகம் கட்டிய முதல் தமிழன் என்ற பெருமை இந்திரனையே சேரும். தவறணைக்கும் பாருக்கும் கவர்ச்சி நடனம் போட்டு ஆண்களை வரவழைப்பது மேற்குநாட்டுக் கலாச்சாரம். அது லண்டனில் தவறணை நடத்தும் கொன்ஸ்ரன்ரைனின் வியாபார தந்திரம். அதையே இந்திரன் யாழில் பல்கலைக்கழகத்திற்கும் பயன்படுத்தியுள்ளார். பதிவு செய்பவர்களுக்கு அனுமதி இலவசம் என்று சொல்லிஇ இளைஞர்கள் தங்கள் தொலைபேசி இலக்கங்கள் தகவல்களைச் சேகரித்தனர். காரியமானதும் ரிக்கற்றுகளுக்கு பணம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த ஹொட்டல்காரர்கள் யாழை அந்தப்புரமாக்க, இந்திரன் அவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே சென்று இந்திரலோகக் கன்னிகைகள் கழகத்தை கொண்டுவந்து ஒரு சிக்ஸரே அடித்துள்ளார். யாழின் தமிழ் தேசியம் இதைத்தான் வெளிப்படுத்துகிறது. இவர்களினால் ஈர்க்கப்பட்டு இன்னும் பல வெளிநாட்டு வியாபாரப் புள்ளிகள் யாழில் ஹொட்டல் கட்ட ஓடித்திரிகின்றனர்.

எண்பதுகளில் ஈபிஆர்எல்எப் ஆல் கடத்தப்பட்ட அமெரிக்க அலன் தம்பதிகளுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தும் சுழிபுரத்தில் புளொட்டின் மிருகத்தனமான கோரப் படுகொலையை படமெடுத்தும் பிரபலமான லண்டன் தவறணை பார் உரிமையாளர் கொன்ஸ்ரன்ரைன் சட்டத்தரணி தேவராஜனிடம் மண்கவ்வி நீண்டகாலம் தன்னை மௌனமாக்கிக் கொண்டவர். கோமாவில் இருந்து எழுந்து தமிழ் தேசியவாதியாகியுள்ளார். தற்போது தனது தவறணை வியாபாரத்திலிருந்து ஓய்வுபெறப்போவதாக லண்டன் சைவ ஆலயங்களின் ஒன்றியத்தின் வட்ஸ்அப் குறுப்பில் குமுறியிருந்தார், ஓய்வூதியர் கொன்ஸன்ரைன் யாழ் தமிழ்ப் பத்திரிகைகளை வடஸ்அப் குறுப்பில் பகிர்வதை தனது தமிழ் தேசியக் கடமையாக எண்ணிச் தன் ஓய்வுக்காலத்தை மிகப்பெறுமதியாகக் களித்து வருகின்றார். அவர் கொன்ஸ்ரன்ரைன் அசோசியேட் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி யாழில் ஹொட்டல் கட்டும் திட்டத்தை தனது முகநூலிலும் பதிவிட்டுள்ளார். இவரொரு கிறிஸ்தவர் என்பதால் கோயில்கட்ட முடியாததால் ஹொட்டல் கட்டும் தமிழ்த் தேசிய நிரோட்டத்தில் ஒரு வழியாக தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளார்.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழியை ஹொட்டலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற புதமொழியை ஹொட்டலியர்கள் ஏற்படுத்தி வருகின்றனர் என யாழ் சிவனடியாரான சிவநாதன் நளினமாகத் தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணயின் தலைவர் அ அமிர்தலிங்கம் நிச்சாம சாதியத்துக்கு எதிரான கிளர்ச்சி பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது நிச்சாமம் பீக்கிங்காக மாறுகிறது எனச் சினந்துகொண்டார். யாழில் சாதிய ஒடுக்குமுறை சங்கிகளினாலும் தமிழ் தேசியவாதிகளினாலும் கூர்மையடைந்திருக்கும் இந்நிலையில் யாழை தாய்லாந்தின் பட்டாயாவாக்கும் கைங்கரியத்தில் தமிழ் தேசிய ஹொட்டலியர்கள் ஆறுதிருமுருகனின் ஆசீர்வாதத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழில் இந்திரன் ஏற்பாடு செய்த களியாட்ட நிகழ்ச்சி முற்றிலும் தவறானது என்று தட்டிக்கழித்துவிடவும் முடியாது. அந்த நிகழ்ச்சியை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்றுதான் பல லட்சம் பேர் விரும்பியுள்ளனர். ஆனால் அடிப்படையில் இந்நிகழ்ச்சியை இந்திரன் ஏற்பாடு செய்த நோக்கம், நிகழ்ச்சி ஏற்பாடு, அந்த மண்ணின் மரபுகளை கருத்திலெடுக்காதது, வியாபார உத்திக்காக குறிப்பாக நடிகைகளை போகப்பொருளாக இளைஞர்கள் முன் நிறுத்தியது என்பன மிகமோசமான மன்னிக்க முடியாத செயல். உலகின் முன் யாழ் சமூகத்தை, யாழ் இளைஞர்களை பாலியல் இச்சைக்கு அலைபவர்களாக சித்தரிக்க வைத்துள்ளார். ஒரு சில இளைஞர்கள் தவறான முறையில் நடந்துகொள்வார்கள் எனற கணிப்பில்லாமல் இவ்வாறானதொரு களியாட்ட நிகழ்வை நடத்தியது அவருடைய முட்டாள்தனம். இதில் யாழ் இளைஞர்கள் மீதோ யாழ் மக்களின் மிதோ எவ்வித தவறும் கிடையாது.

மேற்கு நாடுகளின் தவறணைகளில், பார்களில் சில பத்துப்பேர் கலந்துகொள்ளும் களியாட்ட நிகழ்வுகளுக்கே வாயில் காப்பாளர்கள் இருப்பதும் பொலிஸார் வரவழைக்கப்படுவதும் நாளாந்த நிகழ்வு. இந்திரன் இந்நிகழ்வை நடத்துவதற்கு முன், லண்டன் தவறணை உரிமையாளர் கொன்ஸ்ரன்ரைனிடம் ஆலோசணை பெறாதது, மிகப்பெரும் வரலாற்றுத் தவறு.

இதே போல் ரோ தமிழீழம் பெற்றுத்தரும் என்று ஆர்ப்பரிக்கும் வட்ஸ்அப் போராளி நிலா பிரபாகரன் தன்னை மதியுரைஞராக வைக்காமல், கிறிஸ்தவரான சிஐஏ ஏஜென்டான அன்ரன் பாலசிங்கத்தை மதியுரைஞராக வைத்ததால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் மே 18, 2009இல் தோல்வியடைந்ததாக உறுதியாக நம்புகிறார். முன்னையது இந்திரன் விட்ட வரலாற்றுத் தவறு. பின்னையது வே பிரபாகரன் விட்ட வரலாற்றுத் தவறு. இதுதான் காலக்கொடுமை என்பது.

யாழ் மக்களும் இளைஞர்களும் ‘மானாட மயிலாட’ பார்க்கத்தான் வேண்டும். ஆனால் அதனை நேர்மையுடன் பார்வையாளர்களை ரசிகர்களை மதித்து, வரக்கூடிய விளைவுகளை அறிந்து முற்கூட்டியே திட்டமிட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் சரிவரச் செய்து நடத்த வேண்டும். லண்டனில் வோல்தம்ஸ்ரோவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமாருடனான ஒரு உரையாடல் ஒன்று 2009இல் இறுதி யுத்தம் முடிவுக்கு வந்ததின் பின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை லண்டன் திருக்கோயில்கள் ஒன்றியக் கோயில்களில் ஒன்றின் தர்மகர்த்தாவும் பாஉ சிறிதரனின் நிதியாளருமானவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட போதையூட்டப்பட்ட தமிழ் தேசிய புலி ஆதரவாளர்களைக் கொண்டு கூட்டத்தைக் குழப்ப மூன்று மணிநேரம் போராடினார். ஆனால் கொன்ஸ்ரன்ரைன் மிகச்சாதுரியமாக இரு பட்டாலியன் ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸாரை இறக்கி கூட்டத்தை மிகவெற்றிகரமாக நடத்தினார். இந்திரன் கொன்ஸ்ரன்ரைனோடு ஒரு கொன்ஸ்பிரன்ஸ் ஹோல் போட்டிருந்தால் இன்றைய தலைப்புச் செய்திகளே வேறுமாதிரி அமைந்திருக்கும். உங்களுக்கு என்ன தெரியும் என்பதிலும் உங்களுக்கு யாரைத் தெரியும் என்பது மிக முக்கிய பாடம். இதுதான் இந்திரன் மூலம் ஈழத் தமிழர்கள் 2024 பெப்ரவரி 9இல் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம்.

தமிழ் தேசியத்தை போர்துக்கொண்டு ஹொட்டலியர்களோடும் கள்ளச்சாமிகளோடும் ஆறுதிருமுருகன் போன்றவர்கள் போடும் கூத்திலும் பார்க்க யாழ் இளைஞர்கள் தம்மன்னாவின் நடனத்தை பார்த்து ரசிக்கச் சென்றதில் எந்தத்தவறும் கிடையாது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளைச் செய்கிறோம் என்ற பெயரில் தாயகத்தை உங்கள் அந்தப்புரமாக்காமல், பாலியல் சுரண்டலில் ஈடுபடாமல் அங்குள்ள மக்களின் கல்வி மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளை முன்னேற்றும் வைகயில் செயற்பட வேண்டும். அதுவொன்றே அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளையும் மீறி தங்களை வளர்த்துக்கொள்ள உதவும்.

மேலும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள ஆலயங்கள் இலங்கை மற்றும் நாடுகளினது உளவு அமைப்புகளின் முகவர்களோடும் இலங்கையில் உள்ள தவறணை ஒப்பந்தங்களை விநியோகிக்கும் தமிழ் தேசிய அரசியல்வாதிகளான தற்போதைய தேசியத் தலைவர் சிறிதரன் போன்றவர்களுக்கு வாரி இறைத்து அங்குள்ள இளைஞர்களை போதையில் மிதக்க விடாமல் அந்த இளைஞர்களின் கல்வி, பொருளாதார மற்றும் தனிமனித ஆளுமைகளை வளர்த்தெடுக்க வேண்டும்.

இலங்கையில் அனைவருக்கும் இலவசக் கல்வி என்பதைக் கொண்டுவந்தவர் கல்வி அமைச்சராக இருந்த கன்னங்கரா. இந்த இலவசக் கல்வித்திட்டத்தின் பின் இடதுசாரிகளினது உழைப்பும் கணிசமானது. செல்வந்த நாடுகளான மேற்குலகில் கூட பல்கலைக்கழகம் வரை இலவசக்கல்வி என்ற நிலையில்லை. ஆனால் வறிய நாடான இலங்கையில் பல்கலைக்கழகப் படிப்பு முடியும்வரை இலவசக் கல்வியுள்ளது. ஆனால் அண்மைய காலங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் உலகவங்கியின் அழுத்தம் காரணமாக அரசு தனது பொறுப்புக்களைக் குறைக்க ஆரம்பித்துள்ளது. காலப்போக்கில் கல்வியைத் தனியார் மயப்படுத்தும் திட்டம் நாசுக்காக நடந்தேறி வருகின்றது.

இலங்கையில் தனியார் கல்வி ஸ்தாபனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆங்காங்கே முளைக்க ஆரம்பித்துள்ளன. கல்விக்கடன் பெற்று படிக்கச் செல்லும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. தனியார் மருத்துவமனைகள் வந்து, பொதுமருத்துவமனைகள் வினைத்திறனற்றவையாகிக் கொண்டுள்ளன. அதனால் பணம் உள்ளவரே சிகிச்சை பெறமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை பணமுள்ள மாணவர்களுக்கே கல்வி என்ற நிலைக்கு இட்டுச்செல்லும் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.

“இந்திரனால் ஒருநாள் களியாட்ட நிகழ்வையே திட்டமிட்டு குழப்பமின்றி நடத்த முடியவில்லை. இவர் எப்படி பல்கலைக்கழகம் நடத்துவார்?” என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது.

மேலும் லாப நோக்கத்திற்காக மட்டும் நடத்தப்படும் இந்த தனியார் பல்கலைகழகங்கள் இப்போது இருக்கின்ற கல்விக்கட்டமைப்புகளை வலுவிழக்கச் செய்து, சமூகத்தில் உள்ளவனுக்கும் இல்லாதவனுக்குமான இடைவெளியை அதிகரிப்பதோடு சமூக முரண்பாடுகளை தீவிரப்படுத்தும். இது விழிம்புநிலை மக்கள் மீது நடத்தப்படும் அப்பட்டமான சுரண்டல். அம்மக்களை தொடர்ந்தும் ஏழ்மையில் தங்களுக்கு சேவகம் செய்யும் கூலிகளாக தம்மன்னாவைக் கண்டவுடன் ஓடிச் சென்று விசிலடிச்சான் குஞ்சுகளாக வைத்திருக்கும் நிகழ்ச்சிநிரல்.

மேலும் பெண்களை போகப்பொருட்களாக முன்னிறுத்துவதும் அவர்களை இந்த ஹொட்டலியர்களும் கோயில்காரர்களும் வட்ஸ்அப் குறுபிப்பில் போட்டு பந்தாடுவதும் மிகக்கீழ்த்தரமான செயல். அவர்கள் நடிகைகளாக இருந்தாலும் அது அவர்களுடைய உத்தியோகம். அவர்களை விபச்சாரிகளாகச் சித்தரித்து பாலியல் இச்சைகளுடன் எழுதி சிற்றின்பம் காண்கின்ற கீழ்த்தரமான செயல்களை தமிழ் தேசியம் முற்றாகக் கைவிடவேண்டும்.

ஆறுதிருமுருகன் தன்னைப் பெற்றெடுத்த தன்னால் பாதிக்கப்பட்ட பெண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று எழுதுவதைக்காட்டிலும் தன்னைப் போன்ற தன்னோடு கூடி உறவாடும் ஹொட்டலியர்களும் கோயில்காரர்களும் எப்படி நடந்துகொள்வது என்று எழுதினால் யாழ் சமூகத்திற்கு பயனுடையதாக இருக்கும். ஆனால் அதற்கு ஆறுதிருமுருகனுக்கு ஆறாவது அறிவு கொஞ்சமாவது இருக்கவேண்டும். அத்தோடு சற்று சமூக அக்கறையும் இருக்க வேண்டும்.

ஆற்றில் தொலைத்ததை குளத்தில் தேடக்கூடாது என்பது பழமொழி. ஒரு காலத்தில் ஒரேற்றர் சுப்பிரமணியத்தின் கீழ் இலங்கை முழவதற்குமே எடுத்துக்காட்டாக விளங்கிய ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் அதிபராக அதற்கான திறமையின்றி நியமிக்கப்பட்டு பதவி விலகிய ஆறுதிருமுருகன், யாழில் வழிதவறிய ஆண்கள் தொலைத்த, தொலைத்துக் கொண்டிருக்கும், தொலைக்கப் போகும் ஒழுக்கத்தை ஏன் பெண்களிடம்; தேடுகின்றார்? யாழ் பல்கலைக்கழகத்தின் பேரவையில் படுத்துக் கிடந்து என்னதான் செய்தார் ஆறுதிருமுருகன்?

புலம்பெயர்ந்த ஹொட்டலியர்கள், கோயில் கடைக்காரர்கள்;, வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மண்ணின் பண்புகளை மதித்து தாயகமக்களின் இயலாமையை பலவீனங்களை தமிழ் தேசியம் என்ற போர்வையில் முதலீடாக்காமல் அவர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை சுயமரியாதையோடும் கௌரவத்தோடும் வாழவிடுங்கள். காலம் காலமாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பை அழிப்பதில் தமிழ் தேசியவாதிகளும் புலம்பெயர் தமிழர்களுமே முன்னிற்கின்றனர். இவ்வாறான அனைத்து பிற்போக்குத் தனங்களையும் களையெடுத்து ஏனைய சமூகங்களோடு, மதப்பிரிவினரோடு, சக இனத்தவரோடு கைகோர்த்து அனைத்து மக்களிற்குமாக குரல்கொடுக்கின்ற முற்போக்குத் தேசியம் கட்டியமைக்கப்பட வேண்டும். அதுவொன்றே இலங்கையர் அனைவருக்குமான விடுதலைக்கு வித்திடும்.

ஊழல் குற்றச்சாட்டு – தனது பதவியை ராஜினாமா செய்தார் சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் !

சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.இ லஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

 

இருப்பினும், தாம் குற்றமற்றவரென அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் வாதிட்டுள்ளார்.

Formula One Grand Prix கார் பந்தயம் சிங்கப்பூரில் நடைபெற்ற போது, அந்நாட்டு சுற்றுலாத்துறையை மேற்பார்வை செய்தவராக அவர் நன்கு அறியப்படுகின்றார்.

 

குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்து, அவர் இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஊழல், மோசடிகள் அற்ற ஆட்சி நடத்துவதாக சிங்கப்பூர் தெரிவித்து வருகின்ற நிலையில், அமைச்சர் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – இரண்டு சிறுவர்கள் பலி – அதிகரிக்கும் பதற்றம் !

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜெய்ஷ் உல்-அட்ல் பயங்கரவாதக் குழுவுக்குச் சொந்தமான இரண்டு தளங்களைத் தாக்கி அழித்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை (IRGC) செவ்வாயன்று தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குஹே சப்ஸ் பகுதியில் குறிவைக்கப்பட்ட ஜெய்ஷ் உல்-அட்லின் தளங்கள் பயங்கரவாதக் குழுவின் மிகப்பெரிய தளங்களில் ஒன்றாகும் என்று அரசு நடத்தும் மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இந்த தளங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன” என்று ஈரானிய அரசு ஊடகம் விரிவாகக் கூறாமல் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இதேவேளை ஈரானின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான், இந்த தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்ததாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட கண்டனத்தில்

“பாகிஸ்தானின் வான்வெளியில் ஈரான் அத்துமீறி நுழைந்து இரண்டு அப்பாவி குழந்தைகளின் மரணத்திற்கு காரணமானதுடன் மூன்று சிறுமிகளை காயப்படுத்தியதை கடுமையாக கண்டிக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இறையாண்மையை மீறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் இந்த சம்பவம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

“ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயங்கரவாதம் பொதுவான அச்சுறுத்தல் என்று பாகிஸ்தான் எப்போதும் கூறியுள்ளது. இத்தகைய ஒருதலைப்பட்சமான செயல்கள் அண்டை நாடுகளின் உறவுகளுக்கு எதிரான செயற்பாடாகும்.அத்துடன் இருதரப்பு நம்பிக்கையையும் கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் புலனாய்வு பிரிவின் தலைமையகத்தின் மீது  ஈரான் இராணுவம் ஏவுகணை தாக்குதல் !

ஈராக்கில் உள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் புலனாய்வு பிரிவின் தலைமையகத்தின் மீது  ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக  ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

ஈராக்கின் அரைசுயாட்சி குர்திஸ் பிரதேசத்தின் தலைநகரான எர்பிலில் பல வெடிப்புசத்தங்கள் கேட்டுள்ளன. நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் ஆறுபேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலனாய்வு நிலையங்கள் மற்றும் பிராந்தியத்தில் ஈரான் எதிர்ப்பாளர்கள் கூடும் பகுதிகளை இலக்குவைத்து ஏவுகணைதாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது என அந்த நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

சியோனிஸ்ட் அரசாங்கத்தின் சமீபத்தைய அநீதிகளுக்கு பதிலடியாக ஈராக்கின் குர்திஸ்தானில் உள்ள மொசாட்டின் புலனாய்வு அலுவலகம் ஏவுகணைகளால் அழிக்கப்பட்டது என தெரிவித்துள்ள ஈரான் இராணுவம் தியாகிகளின் இரத்தத்தின் கடைசி துளிகளிற்கு பதில் வாங்கும் வரை தாக்குதல் தொடரும் என தேசத்திற்கு உறுதியளிப்பதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் மனிதாபிமானமற்றது பயங்கரவாத தாக்குதல் என  எர்பில் ஆளுநர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஒரு  ஏவுகணைவீடொன்றிற்குள் விழுந்து வெடித்ததில் குர்திஸ்தானை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரும் குடும்பத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானின்  இந்த தாக்குதலை அமெரிக்கா கண்மூடித்தனமான நடவடிக்கை  என வர்ணித்துள்ளது.

ரஸ்யா, சீனா, மத்திய கிழக்கு, செங்கடல் என வருங்காலங்களில் பல யுத்தங்களுக்கு பிரித்தானியா தயார்! பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கிரான் சாப்ப் போர் முழக்கம்! மக்கள் பொருளாதார நெருக்கடியில் சுகாதார நெருக்கடியில் திண்டாட்டம்!!!

“ரஸ்யா, சீனா, மத்திய கிழக்கு, செங்கடல் என வருங்காலங்களில் பல யுத்தங்களுக்கு பிரித்தானியா தயார்” என காலனித்துவ மிடுக்குடன் பிரித்தானியா யேமன் மீது தாக்குதல் நடத்தியதை நியாயப்படுத்தி நடத்தப்பட்ட பாராளுமன்ற விவாதத்திலேயே பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கிரான் சாப் இன்று ஜனவரி 15, போர் முழக்கமிட்டுள்ளார்.

We're running out of patience': Defence Sec Grant Shapps warns Iran to stop  Houthi... - LBC

ஆளும் கட்சியான கொன்சவேற்றிவ் கட்சியும் எதிர்க் கட்சியான தொழிற்கட்சியும் யேமர் மீதான தாக்குதலை ஆதரித்த நிலையில், அடுத்த வருடம் தேர்தலை எதிர் நோக்கும் இரு கட்சிகளும் கொள்கை வேறுபாடு இன்றி போர் முழக்கம் செய்து, போர்களை உற்பத்தி செய்யவும் ஊக்குவிக்கவும் ஏட்டிக்குப் போட்டியாக செயற்படுகின்றன. குறிப்பாக அமெரிக்க – பிரித்தானிய ஆளும் கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிகள் சரிகின்ற போது ஏதாவது காரணத்தைக் கண்டுபிடித்து யுத்தத்திற்குச் செல்வது இது முதற்தடவையல்ல. ஈரானிய சார்புடைய யேமன் குர்த்திஸ் போராளிகளையும் மக்களையும் அழிக்க சவுதி அரேபியா மேற்கொண்ட யுத்தத்திற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் ஆயுதங்களை வாரி இறைத்தனர். அந்த நாட்டை இவர்கள் ஏற்கனவே சீரழித்த அப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியாவின் பட்டியலில் சேர்த்தனர்.

Yemen | History, Map, Flag, Population, Capital, & Facts | Britannica

இப்போது யேமன் அடுத்த அழித்தலுக்கு உரிய இலக்காக மாறியுள்ளது. யாசீர் அரபாத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை பலமிழக்கச் செய்ய இஸ்ரேல் மோசாட்டினால் வளர்த்து விடப்பட்ட ஹமாஸ் தற்போது வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போல் இஸ்ரேல் மீது பாய ஆரம்பித்து ஒக்ரோபர் 7இல் இஸ்ரேலை கதிகலங்க வைத்தது. 1200 குடியேற்றவாசிகள் நிராயுத பாணிகளான மக்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டுகின்றது. அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் பெரும்பாலும் சிறார்கள் பெண்கள் என கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் எண்ணிக்கை 30,000த்தை எட்டுவதாக பிரித்தானிய பாராளுமன்ற விவாதத்தில் முன்னாள் தொழிற்கட்சித் தலைவரான ஜெரிமி கோபின் இன்று ஜனவரி 16 தெரிவித்தார்.

யேமனின் குத்திஸ் இராணுவம் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை யுத்தத்தை நிறுத்தாவிடில் செங்கடல் வழியாக இஸ்ரேலுக்குச் செல்லும் அல்லது இஸ்ரேலுக்குச் சொந்தமான கப்பல்களைத் தாக்குவோம் என்று எச்சரித்ததுடன், சில பல தாக்குதல்களையும் நடத்தி இருந்தனர். இதனால் செங்கடலூடாக சரக்குக் கப்பல்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கப்பல்கள் ஆபிரிக்க கண்டத்தைச் சுற்றி பயணிக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளது. உலக வர்த்தகத்தில் 12 வீதமான சரக்குக் கப்பல்கள் செங்கடல் வழியாகவே பயணிக்கின்றன. தற்போது ஒரு கொள்ளளவுப் பெட்டியின் பயணச் செலவீனம் 750 பவுண்களில் இருந்து 3250 பவுண்களாக அதிகரித்துள்ளது. மேலும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் பொருட்கள் விலையேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா கூட்டுத் தாக்குதலால் அதிரும் ஏமன்! - கனடாமிரர்

அமெரிக்க – பிரித்தானிய யுத்த ஆர்வம் மத்திய கிழக்கில் அமைதியின்மையை மேலும் அதிகரித்துள்ளது. யேமனின் குத்திஸ் படைகள் அமெரிக்க – பிரித்தானிய – இஸ்ரேலிய படைபலத்தோடு ஒப்பிடுகையில் மிகப்பலவீனமான படைகள். ஆனால் அவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அத்தோடு உக்ரைனில் யுத்தம் முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் பிரித்தானியாவும் – அமெரிக்காவும் மிகத் தீவிரமாக உள்ளனர். பல பில்லியன் டாலர்களை இறைத்து உக்ரைன் மக்களையும் இளைஞர்களையும் பலிகொடுத்து ரஸ்யாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் தேர்தலில் தங்கள் ஆளும் குழுமம் வெற்றி பெற வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ளனர். அதற்காக கூலிப்படைகளும் உக்ரைனில் இறக்கப்பட்டுள்ளனர்.

 

இதுவரை யுத்தத்தில் இறங்காத சீனாவை நோக்கியும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கிரான் சாப் போர் முழக்கமிட்டுள்ளார். பிரித்தானிய ஊடகங்களும் பெரும்பாலும் ஆட்சியாளர்களின் போர் முழக்கத்துக்கு ஒத்து ஊதி வருகின்றனர். அமெரிக்க, பிரித்தானிய மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு பண உதவியும் இராணுவ உதவியும் வழங்க மற்றைய உலக நாடுகள் இந்தியா நீங்கலாக அனைத்தும் காசா படுகொலைகளை மிக வன்மையாகக் கண்டித்து வருகின்றன. வெள்ளையினத் துவேசத்தால் போராடி மீண்ட தென் ஆபிரிக்கா ஒருபடி மேலே சென்று சர்வதேச நீதி மன்றத்திடம் காசாவின் படுகொலையை நிறுத்தும்படி கோரி உலகின் கவனத்தையும் தலைமைத்துவத்தையும் நிரூபித்துள்ளது.

 

உலகின் பல பாகங்களிலும் தங்களுடைய அரசியல் நலன்களுக்காக தலையீடு செய்து அந்நாடுகளை அரசியல் பொருளாதார ரீதியாகச் சீரழித்த அமெரிக்க – பிரித்தானியக் கூட்டு பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து தஞ்சம் கோரி வருபவர்களை இனவாதத்துடன் நடத்துவதுடன் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கவும் மறுக்கின்றனர். அந்தந்த நாடுகளில் அமெரிக்கா – பிரித்தானியா தலையீடு செய்யாமல் இருந்திருந்தால் அம்மக்கள் இங்கு அகதியாக வருவதற்கு எந்தத் தேவையும் இருந்திருக்காது. மேலும் கரீபியன் நாடுகளில் இருந்து தங்கள் தேவைகளுக்காக அழைத்து வரப்பட்டவர்களை அவர்களது இறுதிக் காலத்தில் – வின்ரஸ் ஜெனரேசன் – திருப்பி அனுப்பவும் அடம்பிடிக்கின்றனர். அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட கொடுப்பனவுகளையும் கொடுக்க மறுக்கின்றது இனவாத கட்டமைப்புடைய பிரித்தானிய உள்துறை அமைச்சு.

பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு அதிகம்? ஆதரவை குவிக்கும் ரிஷி சுனக், போரிஸ்  ஜோன்சன்: முந்துவது யார்? - லங்காசிறி நியூஸ்

குடித்து வெறித்து யுத்தத்திற்கு வாரி வழங்கிய முன்னாள் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், தற்போதைய பிரதமர் ரிஸி சுனாக் கோவிட்டில் தங்கள் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போதே 20 பில்லியன் டொலரை லஞ்சத்தில் காணாமல் ஆக்கியவர்கள். பில்லியன் கணக்கில் பெரி சேவை நடத்தாத நிறுவனங்களுக்கு அதை நடத்துவதற்கே எண்ணியிராத நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுத்து மாட்டிக்கொண்டனர். இப்போது யுத்தங்களை வரவழைத்து கொள்ளை லாப மீட்டும் நிறுவனங்களுக்கு துணைபோகின்றனர் என்ற அச்சமே பிரித்தானிய மக்களிடம் உள்ளது.

 

பிரித்தானிய சுகாதார சேவைகள் வரலாறு காணாது கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மருத்துவர்கள், ஆசிரியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். சம்பள உயர்வுப் போராட்டங்கள் அதிகரித்துள்ளது. நடுத்தர குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு தள்ளப்படுகின்றனர். மாணவர்கள் பட்டினியோடு பாடசாலை வருகின்றனர். உள்ளுராட்சி மன்றங்கள் வழங்கும் அடிப்படைச் சேவைகள் ஒன்றன் பின் ஒன்றாக குறைக்கப்படுகின்றது அல்லது நிறுத்தப்படுகின்றது. தபாலக பொறுப்பாளர்கள் அப்பாவிகள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டு 20 வருடங்களாகியும் அவர்களுக்கு நியாயம் வழங்க பிரித்தானியா தயாராகவில்லை. பொய்க் குற்றச்சாட்டுக்களால் தண்டணை பெற்ற பலர் குற்றவாளிகளாகவே இறக்கின்றனர். இவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லை. பிரித்தானியா யுத்தத்தைத் தூண்டுவதிலும் ஏனைய நாடுகளில் மக்களைக் கொல்வதிலும் காட்டும் ஆர்வத்தை தன்னுடைய மக்களுடைய வாழ்க்கையை அவர்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளை சீரமைப்பதில் காட்டவில்லை.  அதிகார வெறியும் யுத்த வேட்கையும் தான் பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் உள்ளது. அவர்களிடம் எவ்வித மனிதத்துவப் பண்புகளும் கிடையாது. அமெரிக்க – பிரித்தானிய கூட்டு உலகத்தின் அமைதியின்மைக்கான முக்கிய காரணிகளாக மாறியுள்ளனர். அப்பாவிப் பிரித்தானிய மக்களின் பெயரில் இந்தக் குடிகாரக் கும்பல் சதிராடுகின்றது.

காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல் – நாளாந்தம் அங்கவீனர்களாகும் நாளாந்தம் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் !

காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியில் இருந்து நாளாந்தம் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தமது கால்களை இழந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து Save the Children அமைப்பின் அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில் ”3 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல், காசாவின் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இத்தாக்குதல்களினால் ஏராளமான சிறுவர்கள் கொல்லப்படுவதும், ஊனமாக்கப்படுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதவொன்றாக உள்ளது.

இத்தாக்குதல் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழந்துள்ளனர்”என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் சுமார் 50 % க்கும் அதிகமான சிறுவர்கள் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதனால் சிறுவர்களின் உடல் நலத்துக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2024 ஜனாதிபதிதேர்தல் முடிவுகள் என்னை இரவு முழுவதும் உறங்காமல் வைத்திருக்கிறது – மிசெல் ஒபாமா

2024 ஜனாதிபதிதேர்தல் முடிவுகள் குறித்து அச்சமடைந்துள்ளதாக மிசெல் ஒபாமா தெரிவித்துள்ளார்.

என்னை இரவு முழுவதும் உறங்காமல் வைத்திருக்கும்  விடயங்களில் ஒன்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் என்ன  நடக்கப்போகின்றது நான்  என்ன நடக்கலாம் என்பது குறித்து அச்சமடைந்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் எங்கள் தலைவர் யார் என்பது மிகவும் முக்கியமான விடயம் நாங்கள் யாரை தெரிவு செய்கின்றோம் யார் எங்களிற்காக பேசப்போகின்றார் என்பது முக்கியம் என மிச்செல்ஒபாமா  தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மக்கள் எதனையும் செய்யவில்லை மக்கள் நினைக்கின்றனர் என தெரிவித்துள்ள முன்னாள் முதல் பெண்மணி அரசாங்கம் எல்லாவற்றையும் எங்களிற்கு செய்யவேண்டுமா என்பதே எனது கேள்வி ஜனநாயகத்தை நாங்கள் சில வேளைகளில் அலட்சியமாக எடுத்துக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஜோ பைடன் தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த தொடங்கியுள்ள சூழலிலேயே மிச்செல் ஒபாமாவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

ஜனநாயகத்தின் எதிர்காலத்தை இந்த வருட தேர்தலே தீர்மானிக்கும் என்ற செய்தியை பைடன் முன்னிறுத்திவருகின்றார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் பைடனிற்கும் இடையில் கடும் போட்டி காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள  ஜனநாயக கட்சியினர் பைடனின் செய்தி மக்களை சென்றடையவில்லை என தெரிவித்து வருகின்றனர்.

“பேரரசு இறையியலும் காசா இனப்படுகொலையும் – மேற்குலகின் மனிதத்துவத்தில் ஏதோ தவறு இருக்கிறது?” பெத்தலகேம் பாதிரியார் முன்தார் ஐசாக்

பெத்தலகேம் தேவாலயத்தின் பாதிரியார் முன்தர் ஐசாக் டிசம்பர் 22 அன்று வழங்கிய பிரசங்கத்தில், மேற்குலக நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து இன அழிப்புக்கு ஆதரவளிப்பதை வன்மையாகச் சாடினார். மேற்குலக கிறிஸ்தவ நாடுகள் தார்மீகப் பண்பை இழந்துவிட்டதாகத் தெரிவித்த அவர், பாலஸ்தீனம் அழிவுகளில் இருந்து மீண்டெழும் ஆனால் இன்று இன அழிப்புக்கு ஆதரவு வழங்கியவர்கள் என்றைக்கும் தங்கள் கறையைக் கழுவிக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று தேசம்நெற் நடத்திய கூட்டத்தில் பேசிய ஒவ்வொரு பேச்சாளர்களினதும் உரைகளை எதிரொலிப்பது போல் பாதிரியார் முன்தார் ஐசாக்கின் பேச்சு அமைந்தது.

குழந்தை யேசு பிறந்த மாட்டுத்தொழுவம் அமைந்த பெத்தலகேமில் கட்டப்பட்ட மிகப் பழமையான தேவாலயம். வழமையாக இத்தேவாலயத்தில் கிறிஸ்மஸ் பண்டிகை மிகச் சிறப்பாக நடைபெறுவது வழமை. ஆனால் இம்முறை காசாவில் இடம்பெற்ற இனவெறித் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அத்தேவாலயம் சோடித்து அழகு படுத்தப்படவில்லை. இஸ்ரேல் இராணுவம் காஸா மீது நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதலையும் யுத்தத்தில் 10,000 சிறார்கள் வரை படுகொலை செய்யப்பட்டதையும் குறிக்கும் வகையில் குழந்தை யேசு இடிபாடுகளுக்கு மத்தியில் படுத்திருக்கும் வகையில் யேசுவின் பிறப்பு உருவகப்படுத்தப்பட்டது.

பிறக்க இருக்கும் குழந்தை யேசுவைக் கொலை செய்ய ஆட்சியாளர்கள் கொலைத்திட்டம் தீட்ட நாஸரத்தில் இருந்து மரியாள் ஜோசப்புடன் அகதியாக பெத்தலகேம் வந்து குழந்தையைப் பிரசவித்தார். இதுவே தற்போது காஸாவில் நடைபெறுகின்றது. பாலஸ்தீனப் பெண்கள் பயங்கரவாதிகளை ஹமாஸைப் பிரசவிப்பதாகக் கூறி இஸ்ரேல் இராணுவம் காஸாவில் உள்ள பெண்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்கின்றது. கடந்த இரு மாதங்களிற்கு மேலாக கிறிஸ்மஸ் தினம் அன்றும் கூட இஸ்ரேல் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 80 வீதமானவர்கள் பெண்களும் குழந்தைகளுமே. இதனை உருவகப்படுத்தும் வகையிலேயே பெத்தலகேம் தேவாலயம் குழந்தை யேசுவை இடுபாடுகளுக்கு இடையே படுக்க வைத்திருந்தது.

பாதிரியார் முன்தர் ஐசாக், தனது பிரசங்கத்தில், மேற்கத்திய உலகின் போலித்தனம் மற்றும் அவர்களின் இனவெறியை கடுமையாக விமர்சித்துள்ளார், காசா உலகின் தார்மீக திசைகாட்டியாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார். பெத்லகேமில் உள்ள எவாஞ்சலிக்கல் லூத்தரன் தேவாலயத்தில் டிசம்பர் 22 அன்று தனது கிறிஸ்துமஸ் செய்தியை வழங்கிய பாதிரியார் ஐசக், “மகிழ்ச்சியின் நேரமாக இருந்திருக்க வேண்டிய இத்தருணம் மரண துக்கம் ஆகி பயப்படுகின்றோம்” என்று கூறினார்.

“காசா, எங்களுக்குத் தெரியும் அன்று இருந்தது போல் இனி இல்லை என்று, இது ஒரு அழிவு. இது இனப்படுகொலை” என்று முன்தார் ஐசாக் கூறினார். “இதனை இந்த உலகம் மௌனமாக இருப்பதைப் பார்த்து நாங்கள் வேதனைப்படுகிறோம். சுதந்திர நாடுகள் என்று அழைக்கப்படுபவர்களின் தலைவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து, சிறைபிடிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலைக்கு பச்சை விளக்கு காட்டுகிறார்கள்” என்றும் முன்தர் ஐசாக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் தன் பிரசங்கத்தில் சேனனின் மொழியில் சொல்வதானால் ‘கொலை மறைக்கும் அரசியல்’ செய்வதாகக் குற்றஞ்சாட்டினார். “மேற்கு நாடுகள் உண்மைச் சூழலை மறைக்கும் அரசியல் மறைப்பை இனப்படுகொலைகளுக்கு வழங்குகின்றனர்” என்று அவர் குற்றம்;சாட்டினார். “இவர்கள் இனப்படுகொலைகளுக்கு “இறையியல் சாயம் பூசுகின்றனர்” என்றும் காட்டமாகக் கடிந்து கொண்டார். முன்தார் ஐசாக் ‘மேற்கத்திய தேவாலயங்கள்’ இந்த சாயம் பூசுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது” என்றும் சுட்டிக்காட்டினார். பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையுடன் பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்தவ தலைவர்களின் சர்வதேச பிரதிநிதிகள் சபையில் இருந்தனர்.

அரசு – பேரரசு இறையியல்:

தென்னாப்பிரிக்கர்கள், “அரசு இறையியல் பற்றிய கருத்தை எங்களுக்குச் சுட்டிக்காட்டினார்கள். “அரச இறையியல் இனவாதம், முதலாளித்துவம் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றை நியாயப்படுத்த பயன்படுத்துகின்றது” என்றும் மேலும் விளக்கினர்.

“அரசுகள் அதன் சொந்த அரசியல் நோக்கங்களுக்காக இறையியல் கருத்துகளையும் விவிலிய நூல்களையும் தவறாகப் பயன்படுத்துகின்றது” என்றும் முன்தார் ஐசாக் தெரிவித்தார். “இங்கே பாலஸ்தீனத்தில் பைபிள் – நமது சொந்த புனித நூல். நமக்கு எதிரான ஆயதமாகப் பயன்படுத்தப்படுகின்றது”, என்று மேலும் கூறினார், “இங்கு நாம் பேரரசின் இறையியலை எதிர்கொள்கிறோம், இது மேன்மை, மேலாதிக்கம், தேர்ந்தெடுக்கப்பட்ட தன்மை மற்றும் உரிமைக்கான மாறுவேடமாகும்” என்றும் பாதிரியார் முன்தார் ஐசாக் குற்றம்சாட்டினார். “பேரரசின் இறையியல் தெய்வீக அனுமதியின் கீழ் அடக்குமுறையை மறைக்க ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறுகிறது” என்று முன்தார் ஐசாக் குற்றம்சாட்டினார்.

“பேரரசு இறையியல் மக்களையும் நிலத்தையும் பிரிக்கின்றது. இது மக்கள் இல்லாத நிலத்தைப் பற்றி பேசுகின்றது. அது மக்களை நமக்கும் அவர்களுக்கும் என்று பிரிக்கின்றது. இது ஒடுக்கப்படுபவர்களை மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமானவர்களாக பிரித்துக் காட்டுகின்றது. நிலத்தில் ஆட்கள் இருப்பதை நன்கு அறிந்திருந்தும் மீண்டும் மக்கள் இல்லாத நிலம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்குகின்றது. அவர்கள் எந்த மக்களுமல்ல, மிகவும் சிறப்பு வாய்ந்த மக்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பேரரசின் இறையியல் காசாவை இல்லாமல் செய்ய அழைக்கிறது. 1948 இல் இனச் சுத்திகரிப்புக்கு அழைப்பு விடுத்தது போல், ஒரு அதிசயம் அல்லது தெய்வீக அதிசயம் என்று இதனை அழைக்கின்றனர். பாலஸ்தீனியர்களான எங்களை ஏன் எகிப்து, ஒருவேளை ஜோர்டானுக்கு செல்லக் கூடாது என்று கேட்கின்றனர். இனி, ஏன் கடலுக்குச் செல்லக்கூடாது?” என்றும் கேட்பார்கள் என்றார் பாதிரியார் முன்தார் ஐசாக்.

மத வரலாற்றுப் பின்னணி:

பாதிரியார் முன்தார் ஐசாக்கின் மிகுந்த முற்போக்கான இப்பேச்சின் பின்னால் ஒரு பலமான அரசியல் நியாயம் தெளிவாகப் புலப்பட்டது. பிதா, சுதன், பரிசுத்த ஆவி, இறை தூதர் என்பதைச் சுற்றியே யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்கள் கட்டப்பட்டது. பிதா என்பதை முழுமுதற் கடவுளாக யூதம் கருதுகின்றது. அவர்கள் மேசியா – இறைதூதுர் இன்னும் வரவில்லை இனிமேல் தான் வருவார் என்று நம்புகின்றது. அவர்கள் யேசுவின் கதையை நம்பவில்லை. கிறிஸ்தவம் மக்களை பாவங்களில் இருந்து மீட்க பிதாவின் மகன் யேசு பிறந்து அவர்களின் பாவங்களைத் தானே சுமந்து அதற்காக சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்தெழுந்து அவர் பிதாவிடம் செல்ல மக்களை ரட்சிக்க பூமிக்கு பரிசுத்த ஆவி அனுப்பப்ப என்று கிறிஸ்தவம் நம்புகின்றது. இஸ்லாம் யேசுவை ஈசா என்ற இறை தூதர் என்று நம்புகின்றது. அவ்வாறான பல இறைதூதர்கள் வந்து கடைசியாக வந்த இறைதூதர் மொகமட் என்கிறது. இந்த மூன்று மதங்களினதும் உருவாக்கம் தோற்றம் பாலஸ்தீனத்திலும் அதனையொட்டிய பகுதிகளிலுமே நடைபெற்றது.

அதன் பின் கிறிஸ்தவம் பல பிரிவுகளாக உடைந்து பரவிய போதும் தற்போது அமெரிக்காவினால் உலகெங்கும் பரப்பப்படும் ஆவிக்குரிய சபைகளே இஸ்ரேலை பாதுகாக்கும் கைங்கரியத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இஸ்ரேலை நாற்பது நாடுகள் தாக்கி அழிக்கப் போகின்றது என்றும் இஸ்ரேல் என்ற நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அமெரிகாவில் இருந்து கிளைவிட்டுப் பரவியுள்ள ஆவிக்குரிய சபைகள் தங்கள் பிரார்த்தனைகளில் செபிக்கின்றனர்.

கருக்கலைப்புக்கு எதிராக பெண்களது உரிமைகளை மறுக்கும் தீவிர கிறிஸ்தவ மத நாடான அமெரிக்காவின் நவீன காலனித்துவத்தை விரிவுபடுத்துவதற்கு பரிசுத்த ஆவிகளின் சபையை பேரரசு இறையியலாகப் பயன்படுத்துகின்றது. அமெரிக்கா தற்போது இஸ்ரேலுடைய இன அழிப்புக்கு முழமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குக் காரணம் அவர்களுடைய பொருளாதாரநலன்களே. அதனைக் காப்பதற்கும் நியாயப்படுத்துவதற்கும் ஆவிக்குரிய சபைகளுடாக காரணம் கற்பிக்கின்றது. தற்போது நடைபெறுவதும் ஒரு சிலுவை யுத்தமே. அதனையே பாதிரியார் முன்தார் ஐசாக் தனது பிரசங்கத்தில் தெளிவுபடுத்தி யுள்ளார்.

மேற்கத்திய உலகின் போலித்தனம்

“மேற்கத்திய உலகின் போலித்தனமும் இனவெறியும் பயங்கரமானது” என்று தனது பிரசங்கத்தில் குற்றம்சாட்டிய பாதிரியார் முன்தார் ஐசாக், “எங்கள் ஐரோப்பிய நண்பர்கள், எங்களுக்கு மனித உரிமைகள் அல்லது சர்வதேச சட்டம் பற்றி விரிவுரை செய்வதை நான் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. நாங்கள் வெள்ளையர்கள் அல்ல, அதனால் உங்கள் சொந்த தர்க்கத்தின்படி அது எங்களுக்குப் பொருந்தாது” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.

“மேற்கத்திய உலகில் உள்ள பல கிறிஸ்தவர்களை” அவர் விமர்சித்தார், “மேற்கத்திய உலகம் இந்த போரில், பேரரசுக்கு தேவையான இறையியல் இருப்பதை உறுதிசெய்தனர். இது அவர்களின் தற்காப்பு என்று எங்களிடம் கூறப்பட்டது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“9,000 குழந்தைகளைக் கொன்றது எப்படி தற்காப்பு ஆகும்? 1.9 மில்லியன் பாலஸ்தீனியர்களின் இடப்பெயர்வு எவ்வாறு தற்காப்பு ஆகும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்தார்: “பேரரசின் நிழலில் அவர்கள் காலனித்துவவாதிகளான ஆக்கிரமிப்பாளர்களைப் பாவிகளாகவும், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களை ஆக்கிரமிப்பாளராகவும் மாற்றினர். அவர்கள் பேசும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் பாலஸ்தீனியர்களின் இடிபாடுகளில் கட்டப்பட்டது என்பதை நாம் மறந்துவிட்டோமா?”

பாதிரியார் முன்தார் ஐசாக் மேலும் தனது விசனத்தை வெளிப்படுத்துகையில், “இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு தேவாலயங்களின் சம்மதம் இருப்பதால் நாங்கள் கோபமடைந்துள்ளோம். தெளிவாக இருக்கட்டும் நண்பர்களே, மௌனம் சம்மதம். மேலும் போர் நிறுத்தம் இல்லாமல் அமைதிக்கான வெற்று அழைப்புகள் மற்றும் ஆக்கிரமிப்பிற்கு முடிவு கட்டுதல், மற்றும் நேரடி நடவடிக்கை இல்லாமல் பச்சாதாபத்தின் ஆழமற்ற வார்த்தைகள் அனைத்தும் சம்மதம் என்றே அர்த்தம்” என்று சொல்லி தேவாலயங்களின் மௌனத்தை, அவர்கள் யுத்த நிறுத்தத்தைக் கோரி அழுத்தம் கொடுக்காததை காத்திரமான நடவடிக்கைகள் எடுக்காததை கடுமையாகச் சாடினார் அவர்.

காசா: உலகின் தார்மீக திசைகாட்டி

“எனவே எனது செய்தி இதோ, காசா இன்று உலகின் தார்மீக திசைகாட்டியாக மாறியுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதிக்கு முன் காசா ஒரு நரகமாகவே இருந்தது. ஆனால் உலகம் அமைதியாக இருந்தது. இப்போது அந்த உலகின் அமைதியைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார் பாதிரியார் முன்தார் ஐசாக். அவர் மேலும் தொடர்கையில், “காஸாவில் என்ன நடக்கிறது என்று நீங்கள் திகைக்கவில்லை என்றால். உங்கள் உணர்வுகளை அது தொட்டுவிடவில்லை என்றால், உங்கள் மனிதத்துவத்தில் ஏதோ தவறு இருக்கிறது”, என்று தன் ஆதங்கத்தை மிகத் தெளிவாக வைத்தார் முன்தார் ஐசாக்.

“கிறிஸ்தவர்களாகிய நாம் இனப்படுகொலையால் கோபப்படாவிட்டால், அதை நியாயப்படுத்த பைபிளை ஆயுதமாக்கினால், எங்கள் கிறிஸ்தவ சாட்சியில் ஏதோ தவறு உள்ளது, மேலும் எங்கள் நற்செய்தியின் நம்பகத்தன்மையை நாங்கள் சமரசம் செய்கிறோம்” என்றும் அவர் எச்சரித்தார். “இதை நீங்கள் ஒரு இனப்படுகொலை என்று அழைக்கத் தவறினால், அது ஒரு பாவம். இந்தப் பாவத்தை நீங்கள் விரும்பி ஏற்றுக்கொள்கிறீர்கள். காசா இடிபாடுகளுக்கு அடியில் இயேசு பிறப்பார்.

அவர் கூறினார், “சிலர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை, சில தேவாலயங்கள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. நான் உனக்காக வருத்தப்படுகிறேன். இருப்பினும், பாலஸ்தீனியர்கள் மீது வீழ்ந்த பெரும் அடியையும் மீறி, நாங்கள் மீண்டு வருவோம், எழுவோம், நாங்கள் பாலஸ்தீனியர்களாக எப்பொழுதும் செய்தது போல் அழிவின் மத்தியில் இருந்து மீண்டும் எழுந்து நிற்போம்” என்று கூறி பாலஸ்தீனியர்களை சாம்பல் மேடுகளில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவைகளுக்கு ஒப்பாகக் கருதினார் பாதிரியார் முன்தார் ஐசாக்.

ஆனால் இந்த இன அழிப்புக்கு ‘சம்மதம்’ தெரிவித்தவர்களுக்காக, நான் வருத்தப்படுகிறேன். நீங்கள் எப்போதாவது மீண்டு வருவீர்களா? இனப்படுகொலைக்குப் பிறகு உங்கள் நீலிக் கண்ணீர்கள் முதலைக் கண்ணீர்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் உங்கள் ஆறதல் வார்த்தைகள் உங்களுக்கே போதுமானதாக இருக்காது” என்று எச்சரித்த பாதிரியார் முன்தார் ஐசாக் “இனப்படுகொலைக்குப் பிறகு உங்கள் மன்னிப்பை நாங்கள் ஏற்க மாட்டோம்” என்று உறுதியுடன் தெரிவித்தார். “காசா: உலகின் தார்மீக திசைகாட்டி எனவே எனது செய்தி இதோ, அவர் கூறினார்: “காசா இன்று தார்மீக திசைகாட்டியாக மாறிவிட்டது” என்று கூறி நீங்கள் யாருடன் நிற்கின்றீர்கள் இனப்படுகொலை செய்பவர்களுடனா அல்லது இனப்படுகொலைகளை நிறுத்தச் சொல்பவர்களுடனான என கருப்பு வெள்ளையாக தன் கேள்வியை முன் வைத்தார் பாதிரியார் முன்தார் ஐசாக்.

 

மூன்றாம்நிலைக் கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழு ஆணைக்குழு அங்கிகாரம் அளித்துள்ளது! மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வியை வழங்கும் மையமாக லிற்றில் எய்ட் தரம் உயர்ந்துள்ளது!!!

அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களை வழங்கக்கூடிய மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வியை வழங்கும் மையமாக லிற்றில் எய்ட் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது என லிற்றில் எய்ட் திறன்விருத்தி மையத்தின் இயக்குநர் ஹம்சகௌரி சிவஜோதி தெரிவிக்கின்றார். கிளிநொச்சி திருநகரில் பதின்னான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்கி வருகின்ற லிற்றில் எய்ட் யுத்தம் முடிவுக்கு வந்த மே 18, 2009இல் லண்டனிலும் பின்னர் இலங்கையிலும் பொது அமைப்புகள் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இது வரை ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வெளியேறிய நீண்ட வரலாற்றைக் கொண்ட லிற்றில் எய்ட் நீண்டகால முயற்சியைத் தொடர்ந்து, அங்கீகாரம் பெற்ற தொழிற்கல்வி நிறுவனமாக மாறியுள்ளது. இந்நிலையை எட்டுவதற்கு தனக்கு ஊக்கத்தை அளித்த லண்டன் லிற்றில் எய்ட் நிறுவனத்தினருக்கும் இம்முயற்சிக்கும் தனக்கு முழு ஒத்துழைப்பையும் தந்து உதவிய சக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஹம்சகௌரி சிவஜோதி தன்னுடைய நன்றிகளைத் தெரிவித்தார்.

லிற்றில் எய்ட் அமைப்பானது மாணவர்களுக்கு தொழிற்கல்வியை வழங்கி அவர்களை பொருளாதார செயற்பாடுகளுக்கு தயார்படுத்துவதுடன் மட்டும் நின்றுவிடாமல் அவர்களுடைய தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துவிடுவதன் மூலமும் அவர்களுடைய ஆளுமைகளை விருத்திசெய்வதன் மூலமும் அடுத்த தலைமுறையை செப்பனிடுவதிலும் கண்ணும் கருத்துமாகச் செயற்படுவதாக லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தெரிவிக்கின்றார். அதனையொட்டிய சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் லிற்றில் மேற்கொள்வதாக மையத்தின் துணை இயக்குநர் பா கஜீபன் தெரிவிக்கின்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில் நாளை டிசம்பர் 17 அன்று “நான் போதைப்பொருள் பாவனைக்கு எதிரானவள் / எதிரானவன்” என்ற தொனிப்பொருளில் லிற்றில் எய்ட் மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை கிளிநொச்சியின் மையப்பகுதியில் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார். இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் தற்போது லிற்றில் எய்ட் இல் கல்விகற்கின்ற மாணவர்களும் லிற்றில் எய்ட் இன் பழைய மாணவர்களும் கூட்டாக ஈடுபடவுள்ளனர். கவனயீர்ப்புப் போராட்டத்தின் முடிவில் லிற்றில் எய்ட் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் திருநகர் லிற்றில் எய்ட் மையத்தில் நடைபெறவுள்ளது.

மாணவர்களுடைய வளர்ச்சியுடன் மட்டும் நின்றுவிடாமல் தமது ஆசிரியர்களையும் மேலதிக பயிற்சிகள் கற்கை நெறிகளுக்கு அனுப்பி அவர்களது திறனையும் ஆற்றலையும் வளர்ப்பதிலும் லிற்றில் எய்ட் கவனம் செலுத்தி வருகின்றது. ஒவ்வொரு மாணவ மாணவியரது வெற்றிக்குப் பின்னும் ஆசிரியர்களது உழைப்பு உன்னதாமானது. அந்த வகையில் லிற்றில் எய்ட் தனது ஆசிரியர்களது முன்னேற்றத்திலும் அவர்களது பொருளாதார எதிர்கால முன்னேற்றத்திலும் கவனம்கொண்டு அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி மையமாக லிற்றில் எய்ட் க்கு அங்கிகாரம் கிடைக்கப்பெற்றதற்கு லிற்றில் எய்ட் ஆசிரியர்களது அயராத உழைப்பைப் பாராட்டிய லிற்றில் எய்ட் தலைவர் க நத்தகுமார் (சிவன்) லிற்றில் எய்ட் தனது இலக்கில் தொடர்ந்து பயணிப்பதற்கான தொடர்ச்சியான பொருளாதார பலத்தை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் க நந்தகுமார் தலைமையில் லிற்றில் எய்ட் கணிசமான வளர்ச்சியை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சிக்கு பலவகையிலும் ஒத்துழைத்தவர்கள் தங்களை வெளிப்படுத்தாமல் இன்னமும் அந்த ஆதரவை வழங்கி வருகின்றமைக்கு தனது நன்றிகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

லிற்றில் எய்ட் செயலாளர் ஆர் சுகேந்திரன், டொக்டர் பொன் சிவகுமார் மற்றும் லிற்றில் எய்ட் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தமது தொழிற்கல்வி மையம் அடுத்த நிலைக்கு நகர முன்றாம்நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு அங்கிகாரம் வழங்கியுள்ளதையிட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர். தற்போது கிளிநொச்சியில் முதன்மைத் தொழிற்கல்வி நிலையமாக வளங்களைக் கொண்ட நிலையமாக ஜேர்மன் ரெக் இருந்தபோதும் அங்கு கிளிநொச்சி மாணவர்கள் பெருமளவில் இல்லை. அந்த வகையில் இன்றைய நிலையில் கிளிநொச்சியில் கிளி மாணவர்களுக்கு இலவசமாக அங்கிகாரம் பெற்ற முன்றாம் நிலைக் கல்வி தொழிற்கல்வியை வழங்கும் முதன்மை நிறுவனமாக லிற்றில் எய்ட் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் தன்னை முக்கியதொரு அங்கமாக இணைத்துள்ள லிற்றில் எய்ட் திறன்விருத்தி மையம்இ கிளிநொச்சி கல்வி வலயத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கிலக் கல்விப் பயிற்சி நெறியையும் அண்மையில் ஆரம்பித்துள்ளது. 40 முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் லிற்றில் எய்ட் இல் ஆசிரியர்களுக்கான ஆங்கிலக் கல்விப் பயிற்சியைப் பெற்றுவருகின்றனர். இவர்களுக்கான ஆங்கில வகுப்புகளை கனடாவில் மொழிபெயர்ப்பியலில் செயற்பட்ட தற்போது யாழ் பல்களைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளராக உள்ள மணி வேலுப்பிள்ளை வழங்கி வருகின்றார். இவர்களுக்கு ஆரம்ப கணணிப் பயிற்சியையும் அளிப்பதற்கு தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டை லண்டனில் உள்ள தொழிலதபர் ஒருவர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் லிற்றில் எய்ட் இல் விடியோ எடிட்டிங் கற்கை நெறிக்காண கணணிகளையும் அன்பளிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

லிற்றில் எய்ட் அதன் பெயருக்கமைவாக சிறிய நிறுவனமாக இருந்த போதும் அதன் செயற்பாடுகள் மிகவும் பரந்தும் ஆழமான தாக்கத்தை கிளிநொச்சி மண்ணில் ஏற்படுத்தி வருகின்றது. சுயதொழில் வாய்ப்பு பயிற்சி நெறிகள், உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவித்தல், ஆளுமை தலைமைத்துவப் பயிற்சிகள், இளவயதுத் திருமணங்கள் – வீதி விபத்துக்கள் – போதைப்பொருள் பாவன தொடர்பான கவனயீர்ப்புப் போராட்டங்கள் என லிற்றில் எய்ட் ஒரு சமூக இயக்கமாக செயற்ப்ட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி ஆளுமைகளை ஆவணப்படுத்துவது, சமூக செயற்பாட்டாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பது என லிற்றில் எய்ட் இன் செயற்பாடுகள் பரந்து விரிந்து செல்வது குறிப்பிடத்தக்கது. இவற்றோடு லிற்றில் எய்ட் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் அனுசரணையோடு முப்பது வரையான யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சிறார்களுக்கு கல்வி உதவி அளித்து வருகின்றது. அவ்வாறு உதவி பெற்ற மாணவர்கள் அண்மைய கபொத சாதாரண தரப் பரீட்சையில் சாதனை நிகழ்த்தி உள்ளனர். த புகழரசன் 9A, த கலைக்குமரன் 8A 1B, அ தர்சிகா 7A 2B, மா தேனன் 2A 5B 1C, சி நிரேகா 3A 3B 1C 1S எடுத்துள்ளனர். த புகழரசனின் பாடசாலை வரலாற்றில் இவ்வாறான பெறுமேறுபெற்றது இதுவே முதற்தடவை.இவர்களது அடுத்த கட்ட கல்விச் செயற்பாடுகளுக்கும் லிற்றில் எய்ட் தன்னாலான உதவிகளை வழங்கி வருகின்றது.

லிற்றில் எய்ட் க்கு வழங்கப்படுகின்ற ஒவ்வொரு சிறு உதவியும் சிந்தாமல் சிதறாமல் வினைத்திறனுடன் பயன்படுத்தப்படுவதானாலேயே தான் தொடர்ந்தும் அவர்களுக்கு நிபந்தனையில்லாமல் முடிந்த உதவியை வழங்கி வருவதாக நீண்ட காலமாக நிதிப்பங்களிப்பைச் செய்துவருகின்ற பெயர்குறிப்பிட விரும்பாத லிற்றில் எய்ட் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். தற்போது லிற்றில் எய்ட் குடும்பத்துடன் ஜேர்மனியில் உள்ள நண்பர்களும் இணைந்து மாதாந்தம் ஒரு லட்சம் ரூபாய் லிற்றில் எய்ட் செயற்பாடுகளுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது லிற்றில் எய்ட் மாதாந்த செலவீனம் 6 லட்சத்தை எட்டியுள்ளது. இதனை லிற்றில் எய்ட் இலும் அதன் இலக்கிலும் நம்பிக்கை கொண்டபலர் செலுத்தி வருகின்றனர்.