கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

தொடரும் கடத்தல் சம்பவங்களால் யாழ். குடாநாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்! : விஸ்வா

Jaffna_Signயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர். கடத்தல் சம்பவங்களோடு தொடர்புடைய குற்றவாளிகள் பிடிபட்டு வரும் நிலையிலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் சாவகச்சேரியில் கப்பம் கோரி 16 வயது இளைஞன் கடத்தப்பட்டார். பின்னர், படுகொலை செய்யப்பட்ட நிலையில் அந்த இளைஞனது உடல் மீட்கப்பட்டது. அச்சம்பவம் குடாநாட்டு மக்களை பெரும் பீதியிலாழ்த்தியது. இக்கொலை தொடர்பான வழக்கு விசாரணகள் நடைபெற்று வருகின்றன.

இச்சம்பவத்தின் பின்னரும் சிலர் கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்டனர். சில பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு அவர்களின் தங்கநகைகள் களவாடப்பட்டன. சில பெண்கள் பாலியல் வல்லுறவிற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் கடத்தப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அண்மையில் நவாலியில் வைத்து 13 வயது சிறுவன் ஒருவனை சிலர் வாகனம் ஒன்றில் வந்தவர்களால் கடத்தப்பட்டு பின்னர் அவன் கூக்குரலிட்டதால் அவர்களிடமிருந்து தப்பி வந்துள்ளான். அச்சிறுவன் கூறிய தகவல்கள் அச்சமூட்டுவதாகவுள்ளன.

தன்னைக் கடத்தியவர்கள் தனக்கு ஏதோ மருந்தை பருக்க முற்பட்டதாகவும், ஊசியேற்ற முற்பட்டதாகவும் அவன் தெரிவித்ததோடு. அவ்வாகனத்தில் இன்னொரு சிறுவன் மயக்க நிலையில் இருந்நதாகவும் அவன் தெரிவித்துள்ளான். கடந்த 11ம் திகதி ஓட்டுமடம் பகுதியில் கணனி வகுப்பிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாவணவன் ஒருவனை கடத்த முற்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. அதே நாள் அராலியில் வைத்து 5ம் தரம் கல்வி பயிலும் மாணவியொருத்தியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்த முற்பட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது. இவை பொதுமக்களால் முறியடிக்கப்பட்டு சிறுவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அதனைத்தொடாந்து மூளாய் பகுதியில் வைத்து சிறுவன் ஒருவன் மீது மயக்க மருந்தை தெளித்து கடத்த முயன்ற சம்பவமும். சங்கனையில் சிறுமியொருத்தியை கடத்த முயன்ற சம்பவமும் நடைபெற்றுள்ளன. இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் குறித்த செய்திகள் யாழ். குடாநாட்டு செய்திப் பத்திரிகைகளில் தொடர்ந்து வந்த வண்ணமுள்ளன. இக்கடத்தல்களோடு தொடர்புடைய சிலர் பிடிபட்டுள்ள போதும் கடத்தல்கள் தொடர்ந்தவாறேயுள்ளன.

கடந்த 25ம் திகதி வடமராட்சி நெல்லிலடியைச் சோந்த 24 வயதுடைய யுவதியொருவர் வெள்ளைவானில் வந்தவர்களால் கடத்தப்பட்டார். பின்னர் இவரது நகைகள் யாவும் கடத்தயவர்களால் பறிக்கப்பட்டு அவரைக் கொலை செய்யும் நோக்கில் அவரின் கழுத்தை நெரித்துள்ளனர். அவர் மயக்கமடைந்ததும,; துன்னாலைப் பகுதியிலுள்ள பற்றையொன்றிற்குள் அவரை தள்ளியெறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்த பின்னர் பொதுமக்களின் உதவியுடன் மீட்க்கபட்ட இப்பெண் மந்திகை மருத்துவமனையில் சோக்கப்பட்டார். இக்கடத்தலில் தொடர்புடையவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் வீடொன்றிலிருந்து அந்த யுவதியின் சைக்கிள். நகைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கடத்தல்கள் குடாநாட்டில் தொடர்ந்த வண்ணமுள்ளதால் மக்கள் பிதியுடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களின் பெற்றோர் பெரும் அச்சம் கொண்டுள்ளனர். தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக அவர்களுடனேயே தினமும் பாடசாலைகளுக்கு வந்து செல்லும் நிலை எற்பட்டுள்ளது.

இக்கடத்தல் சம்பவங்கள், பாலியல் வல்லுறவுகள், கொலைகளுக்குப் பின்னால் தமிழர்களே இருந்துள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களும் தமிழர்களாகவே இருக்கின்றனர். இச்சம்பவங்கள் திட்;டமிடப்பட்ட அரசியல் பின்னணியுடன் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் உருவாகி வரும் பாதாள உலகக் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே இந்நடவடிக்கைகள் பார்க்கப்படுகிற்னது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இக்கடத்தல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் சில கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு சோதணை நடவடிக்கைகளில் இறங்கி வருவதாக யாழில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்நடவடிக்கை மீண்டும் யாழ்பாணம் இராணுவ பொலிஸ் கெடுபிடிகளுக்கு உள்ளாகும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் வீடுகளில் களவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நிலைமை இவ்வாறு இருக்க குடாநாட்டில் கடத்தல் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும், கடத்தல் தொடர்பான முறைப்பாடுகள் எவையும் தமக்கு வரவில்லை எனவும், யாழ். படைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த அத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

நன்றி – விஸ்வா, யாழ்ப்பாணம்.

சிவராம் – 5வது ஆண்டு நினைவு: இலங்கையின் ஊடகத்துறையின் தற்போதைய நிலை : த ஜெயபாலன்

Sivaram_Tharaki(படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் சிவராம் நினைவாக இலங்கை ஊடகத்துறையின் இன்றைய நிலை மற்றும் சிவராமது போராட்ட கால செயற்பாடுகள் பற்றிய இரு பதிவுகள் இங்கு பிரசுரமாகின்றது. முதலாவது பதிவு இனறு தேசம்நெற்றில் பிரசுரமாகின்றது. பின்னுள்ள இரு பதிவுகளும் 2005ல் தேசம் சஞ்சிகையின் இதழ் 23இலும் இதழ் 25இலும் பிரசுரமாகி இருந்தன அவற்றை இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம்.)

இலங்கையில் ஊடக சுதந்திரம் என்பதை கேலிக் கூத்தாக்கி உள்ளது இலங்கை அரசு. கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் இலங்கையில் ஊடக சுதந்திரம் என்பது தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டே வந்துள்ளது. பிரான்சைத் தயமாகக் கொண்டு இயங்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு 2004ல் இலங்கையின் ஊடக சுதந்திரத்தை 109வது இடத்தில் வைத்திருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் ஊடக சுதந்திரம் மிக வேகமாக 162வது இடத்திற்குத் தாவியுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது ஊடக சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்படுவதில் ஜனாதிபதியின் சகோதரர் கோதபாய ராஜபக்சவினதும், பாராளுமன்ற உறுப்பினர் மேவின் சில்வாவினதும் ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை என்பதனை ஊடக சுதந்திரத்திற்கான சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டி இருந்தன.

Media Minister MR and his deputy Mervin Silvaஇருந்தும் புதிய அமைச்சரவையை உருவாக்கியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு எதிரான தனது அரசின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதனை மேர்வின் சில்வாவை பிரதி ஊடக அமைச்சராக நியமித்ததன் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். இதனை ‘Gang boss known for hostility towards journalists appointed deputy media minister – ஊடகவியலாளருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர் என அறியப்பட்ட காடைக்குழுத் தலைவர் பிரதி ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்’ என்று தலைப்பிட்டு கண்டித்துள்ளது Reporters Without Borders – எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு. ஏப்ரல் 26ல் அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ‘In what country do you appoint an arsonist to put out fires? – எந்த நாட்டில் தீ வைப்பில் ஈடுபடும் ஒருவரை தீயை அணைப்பதற்கு நியமிப்பார்கள்’ என்று கேள்வி எழுப்பியுள்ளது. ஆளும் கட்சியின் வெற்றியை இவ்வாறான நியமனங்கள் பாதிப்படையச் செய்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள சுதந்திர ஊடகங்களுக்கான அவ்வமைப்பு இவ்வாறான நியமனங்கள் மீளுறவையும் மீள்கட்டுமானத்தையும் மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் இந்த ஊடக சுதந்திரத்தின் பின்னணியில் ஊடகவியலாளர் தாராக்கி என்று அறியப்பட்ட தர்மரத்தினம் சிவராம் படுகொலை செய்யப்பட்ட 5வது ஆண்டு நிறைவு லண்டனில் நினைவு கூரப்படுகின்றது. Tamil Legal Advocacy Project (TLAP) அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு : April 29, 2010 – from 6:30 PM – 9:30 PM,
Conway Hall
25 Red Lion Square
WC1R 4RL London
United Kingdom இல் நடைபெறுகின்றது.

ஊடகவியலாளர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது கொலையாளிகளையும் குற்றவாளிகளையும் தண்டிக்காது சுதந்திரமாக நடமாட அனுமதிக்கின்ற நாடுகளின் வரிசையில் இலங்கையை நான்காவது இடத்தில் வரிசைப்படுத்தியுள்ளது நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் Committee to Protect Journalists – CPJ ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கின்ற குழு. உள்நாட்டு யுத்தம், மனித உரிமைகள், அரசியல், ஈராணுவ விடயங்கள், ஊழல் – மோசடிகள் பற்றி தகவல்கள் வெளியிட்டமைக்காக கடந்த ஒரு தசாப்த காலத்தில் 24 ஊடகவியலாளர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டதாகவும் இப்படுகொலைகள் தொடர்பாக ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை என்றும் ஊடகவியலாளரைப் பாதுகாப்பதற்கான குழு தனது 2010 அறிக்கையில் தெரிவித்தள்ளது. இதே காலப்பகுதியில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் எண்ணற்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளது. இவற்றின் காரணமாக 2008 யூன் முதல் 2009 யூன் வரையான ஓராண்டு காலப்பகுதியில் 11 ஊடகவியலாளர்கள் இலங்கையைவிட்டு வெளியேறி உள்ளதாக அவ்வூடக சுதந்திரத்திற்கான அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதமே படுகொலை செய்யப்படும் ஊடகவியலாளர்களில் 90 வீதமானவர்கள் உள்ளுர் ஊடகவியலாளர்களாகவே உள்ளனர். ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதன் முக்கிய நோக்கம் அனைத்து ஊடகங்களுக்குமே ஒரு பயங்கரமான அச்சுறுத்தலை வழங்குவதே. சிவராம் உட்பட 1999 முதல் இலங்கையில் 24 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் 18 பேருடைய கொலைக்கான நோக்கம் உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் ஆறு பேருடைய கொலைக்கான நோக்கத்தை உறுதிப்படுத்த முடியவில்லையென ஊடகவிளலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவிக்கின்றது.

இலங்கை ஊடகத்துறையின் மீதான தாக்குதல்களுக்கு அரசு மட்டுமல்ல விடுதலை கோரிப் போராடிய அமைப்புகளும் பொறுப்பாக இருந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களும் ஊடகங்கள் மீதான வன்முறைக்கு பொறுப்பாக இருந்தள்ளனர். குறிப்பாக இலங்கை ஊடகத்துறை ஆயுதம் ஏந்திய அரசியல் அதிகாரத்திற்கு கட்டுப்பட வேண்டிய சூழல் கடந்த காலங்களில் இருந்தது. தற்போதும் இந்நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. இதன் காரணமாக ஊடகங்களில் சுயதணிக்கை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வழமையாகவே இருந்து வந்தள்ளது. இந்த அரசியல் அதிகாரத்தின் செல்வாக்குக் காரணமாக ஊடகவியலாளர்கள் சுதந்திர ஊடகவியலாளர்களாக அல்லாமல் அரசியல் சார்ந்த கட்சி சார்ந்த ஊடகவியலாளர்களாகச் செயற்படுகின்ற போக்கு இலங்கையில் பொதுவாகக் காணப்படுகின்ற ஒரு அம்சமாகவே உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த 2010 பாராளுமன்றத் தேர்தலில கூட வீரகேசரி செய்தி ஆசிரியர் சிறிகஜன் தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குனர் ரெங்கா உதயன் பத்திரிகை உரிமையாளர் சரவணபவன் மற்றும் சிங்கள பத்திரிகையாளர் சிலரும் அரசியற் கட்சிப்பட்டியலில் தேர்தலில் நின்றமை குறிப்பிடத்தக்கது. இது அவர்கள் சம்பந்தப்பட்ட ஊடகங்களின் சுயாதீனத்துடன் முரண்படுவது தவிர்க்க முடியாததாகின்றது.

மேலும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைக்கு ஒன்றிணைந்து குரல் கொடுக்கின்ற கலாச்சராம் இலங்கையில் ஏற்பட்டு இருக்கவில்லை. கொல்லப்படுபவரின் அரசியல் சார்ந்தே அதனைக் கண்டிப்பதா? இல்லையா? என்கின்ற முடிவு எடுக்கப்படுகின்றது. இப்போக்கு குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மத்தியில் வெளிப்படையான அம்சமாக உள்ளது.

இதற்கு சிவராமின் படுகொலையும் விதிவிலக்காக இருக்கவில்லை. சிவராமின் படுகொலைக்கான கண்டனங்கள் அவரது அரசியலின் அடிப்படையிலேயே தெரிவிக்கப்பட்டது. சிவராம் என்ற ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டதை தமிழ் ஊடகத்தறையின் ஒரு சிறுபகுதியினர் கண்டிக்கத் தவறினர். அல்லது கடமைக்காகக் கண்டித்தனர். சிவராமின் கொலையை கண்டிக்க முற்பட்டவர்கள் ஒரு ஊடகவியலாளன் படுகொலை செய்யப்பட்டதற்காகத் தமது கண்டணத்தை முன்வைத்தனர் என்பதிலும் பார்க்க தங்கள் அரசியலின் பக்கம் சிவராம் என்பவர் நின்றதனால் தங்கள் கடுமையான கண்டனங்களை சரியாகவே முன்வைத்தனர்.

Media Minister MR and his deputy Mervin Silvaஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள் மட்டுமல்ல எந்தவொரு மனித உரிமை மீறலையும் அதனை யார் யாருக்கு எதிராக மேற்கொண்டாலும் கண்டிக்கின்ற வன்முறைக்கு எதிரான அரசியல் கலாச்சாரம் தமிழ் மக்களிடம் வளர்க்கப்பட வேண்டும். படுகொலை செய்யப்படுபவர்கள் தியாகிகள் ஆக்கப்பட்டு பூசிக்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அவர்கள் மீதான வன்முறைக்கு எதிரான குரல்கள் அழுத்தமாக வரவேண்டும். அதன் பின் அவர்கள் மீதான அவர்களது அரசியல் தொடர்பான மதிப்பீடுகளையும் விமர்சனங்களையும் வைக்க முடியும். ஆனால் அந்த மதிப்பீடுகளும் விமர்சனங்களும் அவர் மீதான வன்முறையை நியாயப்படுத்துவதாக இருக்க முடியாது.

1999 முதல் 2009 வரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்: தகவல் மூலம் – CPJ

நோக்கம் உறுதிப்படுத்தப்பட்ட கொலைகள்:
Puniyamoorthy Sathiyamoorthy, freelance
     February 12, 2009, in Mullaitheevu district, Sri Lanka
Lasantha Wickramatunga, The Sunday Leader
     January 8, 2009, in an area outside Colombo , Sri Lanka
Rashmi Mohamed, Sirasa TV
     October 6, 2008, in Anuradhapura, Sri Lanka
Paranirupasingham Devakumar, News 1st
     May 28, 2008, in Jaffna, Sri Lanka
Suresh Linbiyo, Voice of Tigers
     November 27, 2007, in Kilinochchi, Sri Lanka
T. Tharmalingam, Voice of Tigers
     November 27, 2007, in Kilinochchi, Sri Lanka
Isaivizhi Chempiyan, Voice of Tigers
     November 27, 2007, in Kilinochchi, Sri Lanka
Selvarajah Rajeewarnam, Uthayan
     April 29, 2007, in Jaffna, Sri Lanka
Subash Chandraboas, Nilam
     April 16, 2007, in an area near Vavuniya, Sri Lanka
Subramaniyam Sugitharajah, Sudar Oli
     January 24, 2006, in Trincomalee, Sri Lanka
Relangi Selvarajah, Sri Lanka Rupavahini Corp.
     August 12, 2005, in Colombo, Sri Lanka
Dharmeratnam Sivaram, TamilNet and Daily Mirror
     April 29, 2005, in Colombo, Sri Lanka
Lanka Jayasundara, Wijeya Publications
     December 11, 2004, in Colombo, Sri Lanka
Bala Nadarajah Iyer, Thinamurasu and Thinakaran
     August 16, 2004, in Colombo, Sri Lanka
Aiyathurai Nadesan, Virakesari
     May 31, 2004, in Batticaloa, Sri Lanka
Mylvaganam Nimalarajan, BBC, Virakesari, Ravaya
     October 19, 2000, in Jaffna, Sri Lanka
Anura Priyantha, Independent Television Network
     December 18, 1999, in Colombo, Sri Lanka
Indika Pathinivasan, Maharaja Television Network
     December 18, 1999, in Colombo, Sri Lanka

நோக்கம் உறுதிப்படுத்தப்படாத கொலைகள்:
Sahadevan Nilakshan, Chaalaram
     August 1, 2007, in Jaffna, Sri Lanka
Sinnathamby Sivamaharajah, Namathu Eelanadu
     August 20, 2006, in Jaffna, Sri Lanka
Sampath Lakmal, Sathdina
     July 1, 2006, in Colombo, Sri Lanka
Vasthian Anthony Mariyadas, Freelancer
     December 31, 1999, in Vavuniya, Sri Lanka
Atputharajah Nadarajah, Thinamurusu
     November 2, 1999, in Colombo, Sri Lanka
Rohana Kumara, Satana
     September 7, 1999, in Colombo, Sri Lanka

._._._._._.

தேசம் சஞ்சிகை இதழ் 23 (மே – யூலை 2005)

சிவராம் : வரலாற்று முரண் கொண்ட தொடரின் துயர்கொண்ட ஓர் இறுதி முடிவின் ஆரம்பம் : அசோக்

Sivaram_Tharakiசிவராம் பற்றி பேசுவதும் எழுதுவதும் இன்றைய தமிழ் ஊடக உலகத்தில் தவிர்க்க முடியாத அம்சமாகி விட்டது. இது இன்னும் சில நாட்களுக்கே. மீண்டும் இன்னுமொரு ‘மாமனிதர்’ பட்டம் சூட்டும் கதை தொடங்க இவன் கதை முடிந்து போகும். நாம் காணும் துதிபாடும் சார்பு நிலை தமிழ் ஊடக வரலாறு இதுதானே. ஆனால் தவிர்க்க முடியாத இந்த காலகட்ட நாட்களுக்குள் சிவராமைப் பற்றி ஒரு சாரார் கட்டமைக்கும் விம்பங்கள் அச்சார்பு நிலையாளர்களின் அரசியல் மனோ நிலையை புரிந்து எமக்கு ஆச்சரியத்தை தராவிட்டாலும் அவை சில வேளைகளில் நகைச்சுவை உணர்வை அதிகம் தந்துவிடுகிறது.

சிவராமை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதியுயர் நம்பிக்கைக்குரியவனாகவும் அவர்களின் ‘அனைத்து’ வகை அரசியலையும் ஏற்றுக் கொண்டவனாகவும் அவனைச் சுற்றி கட்டமைக்கும் புனைவுகள் சிவராமை நன்கு தெரிந்த – புரிந்த நண்பர்கள் மட்டத்தில் கேலிக்குரிய ஒரு நகைச்சுவைத் தனம் எழுந்து வருவதை தவிர்க்க முடியாததாக்கிவிடுகின்றது. சிவராம் உயிர் கொண்டு எழுவானானால் தமிழீழ விடுதலைப் புலிகள் தன் தலையில் மாட்டிய அந்த மாமனிதர் பட்டம், அவனுக்கு அவனுடைய மட்டக்களப்புத் தமிழில் அவன் அடிக்கடி கூறும் அந்த எள்ளல் மொழியோடு இணைந்து மாபெரும் பகிடியாக தென்பட்டிருக்கும்.

சிவராம் என்ற அந்த மனிதன், மார்க்சியத்தின் வழிகாட்டலோடு அரசியல் களம் புகுந்ததாக அறிக்கைவிடும் பலரில் ஒருவன்தான். ஆனால் சிவராம் ஒரு இனவாதி என்பதில் நாம் யாரும் ஐயம் கொள்ள வேண்டியதில்லை. மார்க்சியம் பேசப்போய் மறுபுறம் இனவாதம்கக்கும் போலிகளிடையே சிவராம் தன்னை கடைசி ஒரு தமிழ் தேசியவாதியாகவாவது காட்டிக் கொண்டவன் என்ற வகையில் நாம் அவனைப் பாராட்டியே தீரவேண்டும்.

கொழும்பு வாழ் சூழல், அதன் நெருக்கடி, இலங்கை அரசின் கண்ணோட்டம் அனைத்தும் சேர்த்து சிவராம் போன்ற நபர்களை இன்னொரு பக்க இனவாதிகளாக மாற்றிவிடும் பரிதாபத்தை செய்து வருகின்றது. அரசின் இனவாதம் அதன் பின்னணி, வர்க்க சார்பு நெருக்கடிகள், சமூகத் தாக்கங்கள் இவை பற்றிய எந்த அவதானிப்பும் – விமர்சனக் கண்ணோட்டமும் அற்று தங்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட அனுபவ வெறுப்புகளிலிருந்து இவ்வாறானதொரு நிலைப்பாட்டிற்கு வருவதும், இனவாத சேற்றுக்குள் மூழ்குவதுமான பரிதாப தற்கொலை அரசியலை இவர்கள் தேர்வு செய்து வருகின்றனர். மார்க்சியவாதியாக எம்மிடம் அடையாளம் காண்பித்த பேராசிரியர் சிவத்தம்பியே கொழும்பில் சொகுசாய், பாதுகாப் பாய் அனைத்து சௌக்கியங்களோடும் வாழ்ந்து கொண்டு பச்சை இனவாதம் பேசும் போது பாதிப்புக்குள்ளாகும் சிவராம் போன்றவர்கள் இனவாத அரசியலை தேர்வு செய்வது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல.

அதேவேளை சிவராம் போன்ற@ புலிகளின் கொடூரமான வன்முறைகளை எதிர்கொண்ட, புலிகளின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்ட விடுதலை அமைப்புகளில் இருந்து வந்தவர்களில் புலிகளின் கடந்தகால, நிகழ்கால வன்முறை அரசியலை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்களாகவே காணப்படுகின்றனர். அதனால் தங்களின் நிகழ்கால அரசியலை நடத்துவதற்கு தங்குமடங்களாக புலிகளைப் பயன்படுத்திக் கொள்வதோடு தங்களின் சில நோக்கங்கள் நிறைவேறும் வரையிலாவது புலிகளோடு தங்களை இனம்காட்டிக் கொள்ளவும் வேண்டியவர்களாகி விடுகின்றனர். இதற்கு நல்லுதாரணம் சிவராம் என்பேன்.

சிவராமுக்கும் எனக்குமான உறவு ஓரளவு நீண்டது. 1978க்களில் இருந்தே அவன் எனக்கு நண்பனானவன். எங்கள் இருவரையும் இணைத்தது இலக்கியமே. அதன்பின் 1981ல் நான் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் – புளொட்டில் இணைந்து கொள்ள சிவராம் 1983ம் ஆண்டில் நான் சார்ந்த விடுதலை அமைப்பினுள் தன்னை இணைத்துக் கொண்டவன். ஒரு காலத்தில் புலிகளின் வன்முறையை ஒடுக்குவதற்கு ஆயுதத்தின் உதவியை நாடுவதில் எவ்வித தயக்கமும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களில் இவனும் ஒருவனாக இருந்தான். புலிகளின் பாஸிசப் போக்கும் வளர்ச்சியும் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கு வேட்டு வைப்பதில் தான் போய் முடியும் என்றும் அவர்களின் பாஸிசப் போக்கு மௌனம் கொண்ட ஒரு அடிமைத் தமிழ் சமூகத்தை உருவாக்குவதையே தலையான கடமையாக கொண்டிருக்கும் என்னும் முன் ஆருடம் கூறியவன் அவன்.

சிவராமுக்கும் எனக்கும் கருத்தியல் சார்ந்த அரசியல் முரண்பாடுகள் ஏராளம். அதில் குறிப்பானது அவனது தீவிர பிரதேசவாத நிலைப்பாடு. கிழக்கு பிரதேச மக்களின் வாழ்வில் சமூக முன்னேற்றத்தில் அவன் கொண்டிருந்த அக்கறையானது அவனை யாழ் மேலாதிக்க மையவாத சிந்தனைக்கு எதிரானவனாக மாற்றியிருந்தது. இந்த சிந்தனையானது புலிகளில் மலிந்து காணப்பட்ட மேலாதிக்க நடவடிக்கைகளுக்கு எதிரானவனாக, அவர்களின் செயற்பாடுகளில் கடும் விமர்சனம் கொண்டவனாகவும், புலிகளுக்கு மாற்றாக கிழக்குப் பிரதேசத்தில் ஒரு அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்குவது கால அவசியம் என்ற கருத்தில் கடும் முனைப்பும், அதற்காக எந்தவிதமான செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவும் தயாரானவனாக அவனை ‘ரகசியமாக’ உருவாக்கி இருந்தது. இந்த சிந்தனை வழித்தடங்களின் நீட்சியே விடுதலைப் புலிகளினுள் ஏற்பட்ட கருணா முரண்பாட்டை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்ற முறைமையும் அதில் ஏற்பட்ட சிக்கலும். இது பலரும் அறிந்த இரகசிய விடயங்களாகிவிட்டன இன்று.

அவனது மரணத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய கடைசிப் பயணத்தின் சந்திப்பின் போது கூட கிழக்கு மாகாணம் பற்றிய அதீத வெறி யை வெளிப்படுத்தினான் சிவராம். கருணாவின் உடைவின் மீதான விமர்சனங்களோடு கிழக்கின் தனித்துவ செயற்பாட்டின் மீதான அவனின் விருப்பும் வெளிப்பட்டது. சிவராமின் கடைசிக் கால செயற்பாட்டின் மீதான நம்பிக்கையின்மையே கருணா, இவனை புறந்தள்ள வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும் என நான் நினைக்கிறேன். கருணாவின் இந்த தள்ளி வைப்பே புலிகளிடம் இருந்து சிவராம் உயிரைக் காப்பதற்கான தற்காப்புக் காரணியாக அமைந்திருக்கும். எனினும் பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் சிவராமின் ‘அனைத்தும்’ அறிந்த புலிகளுக்கு சிவராமின் இறுதி முடிவு துயரைக் கொடுத்திருக்குமா என்பது சந்தேகமே. சிவராமின் மரணம் புலிகளுக்கு மதிப்பிடவியலா அறுவடையை கொடுத்துவிட்டது என்பது தான் உண்மை.

இத்தோடு இப்பத்தி எழுத்தை நிறுத்திக்கொண்டு பின்வரும் சுவரொட்டி வாசகத்தோடு நிறைவு செய்கிறேன்.
‘புலிகளின் மேலாதிக்க வன்முறையை பிடித்து இன் னொரு வரலாற்றை உருவாக்க முயன்றவன் வாழ்வு மாமனிதப்பட்டத்தோடு முடிவுற்றது. வரலாற்று முரண் கொண்ட தொடரின் துயர் கொண்ட ஓர் இறுதி முடிவின் ஆரம்பம் இது என்பேன்.’

._._._._._.

தேசம் சஞ்சிகை இதழ் 25 (நவம்பர் – டிசம்பர் 2005)

சிவராம்: இரத்தக் கறைபடிந்த கரங்கள் : நட்சத்திரன் செவ்விந்தியன்

Sivaram_Tharakiவிடுதலைப் புலிகளால் மாமனிதர் பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்ட சிவராமின் இரத்தக்கறை படிந்த கொடூரக் கொலைகளின் குற்ற வரலாறு அம்பலத்திற்கு வந்திருக்கிறது. தர்மரத்தினம் சிவராம் 1984 ல் PLOTE ல் போய்ச் சேர்ந்த போது புளட்டின் உட்கட்சிப் படுகொலைகளும் சித்திரவதைகளும் உச்ச நிலையிலிருந்தன. PLOTE இல் இருந்த நேர்மையான அசலான போராளிகளில் PLOTE இனாலேயே சித்திரவதை செய்து கொல்லப்பட்டவர்கள் தவிர்ந்த மற்ற நேர்மையான போராளிகளான தீப்பொறி குழுவினர் முதலியோர் இக்காலப் பகுதியில் புளட்டிலிருந்து தப்பி வெளியேறிக் கொண்டிருந்தனர். தீப்பொறி குழுவின் மூலவர்களில் ஒருவரான உன்னதப் போராளி நொபேட் புளட்டின் கொடூரச் சீரளிவுகளை வைத்து எழுதிய ‘புதியதோர் உலகம்’ என்ற நாவல் 1985 இன் தான் வெளிவருகிறது.
 
சிவராம் முதலில் விடுதலைப் புலிகளில் தான் சேர விண்ணப்பித்தார். எனினும் மாத்தையாவினாலும் கிட்டுவினாலும் தனித்தனியே விடுதலைப் புலிகளில் சேருவதற்கு நம்பகமற்றவர் என்று சிவராம் திருப்பி அனுப்பப்பட்டார். இதன் பின்னரே சிவராம் புளட்டில் அசோக் எனப்படுகிற யோகன் கண்ணமுத்துவின் “அணைவோடு” இணைக்கப்பட்டார். இக்காலத்தில் தான் உமா மகேஸ்வரன் எல்லோரையும் அடிப்படையின்றி சந்தேகிக்கின்ற paranoid மனோவியாதிக்குட்பட்டிருந்தார். தன்னுடைய ஆங்கிலப் புலமையையும் மகேஸ்வரனின் பலவீனங்களையும் சாதுரியமாகப் பயன்படுத்தி சிவராம் தலமைக்கு மிகநெருக்கமாக குறுகிய காலத்திலேயே வந்துவிட்டார். இதன்போது புளட்டின் ஜனநாயக விரோதப் போக்குகளுக்கும் உட்கட்சி சித்திரவதைகளூக்கும் படுகொலைகளுக்கும் விசுவாசமாக உடந்தை போனார்.
 
 (1) 1984, 1985 காலப் பகுதியில் ஒரு தடவை யாழ்ப்பாணம் குருநகரில் சிவராமும் தீபனேசனும் வீதியில் தற்செயலாக தீப்பொறி குழுவினரைச் சேர்ந்தவர்களை எதிர்கொள்ள நேர்ந்தது. உடனடியாகவே சிவராம் தனது பையிலிருந்து SMGயை எடுத்து load பண்ணி அவர்களை நோக்கி சுடத்தயாரானார். அதிஸ்ரவசமாக பொது மக்கள் அவ்விடத்தில் கூடிவிட்டதால் கொலை எதுவும் நடக்காமல் இரு தரப்பினரையும் பிரித்து அனுப்பி வைத்தனர்.
 
 (2) பேராதனைப் பல்கலைக்கழக பல்மருத்துவத்துறை மாணவனான செல்வம் என்பவர் தனது பட்டப்படிப்பையே தியாகம் செய்து போராட வந்திருந்தார். இந்த செல்வமும் அகிலன் என்கிற இன்னொருவரும் சந்ததியாரோடு சேர்ந்து PLOTEஇன் உட்கட்சிப் படுகொலைகள், ஜனநாயகமின்மை என்பவற்றிற்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். மட்டக்களப்பிலிருந்து கைதேர்ந்த கொலையாளியான வெங்கட் ஐயும் அழைத்துக்கொண்டு சிவராம் தலமையில் ஒரு குழு மூதூருக்கு அகிலன் செல்வத்தைத் தேடிப் போனது. மூதூரில் ஒரு வீட்டிற்குள் சென்ற சிவராமும் வெங்கட்டும் அங்கிருந்த அகிலன் மற்றும் செல்வனையும்  PLOTEஇன் மகளிர் பிரிவுத் தளபதியான கரோலினையும் கண்டனர். சிவராமும் வெங்கட்டும் கரோலினை தவிர்த்து அகிலன் செல்வனைக் கடத்திச் சென்று மூதூரில் ஒரு வயல் வெளியில் கொன்று அவ்வயல் வெளியிலேயே இருவரையும் புதைத்துத் திரும்பினர்.
 
மேற்கூறிய இரண்டு தகவல்களையும் நம்பகரமான மனித உரிமை அமைப்பான மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. PLOTE உறுப்பினர்களுக்கு சிவராமின் அகிலன் செல்வன் கொலைகள் நீண்ட காலமாகத் தெரிந்த திறந்த இரகசியமே. இதனைவிட தலமைக்கு எதிராகக் அகிலன் செல்வம் கிளர்ச்சி செய்தமையைப் பயன்படுத்தி தனிப்பட்ட பெண் விவகாரம் முதலியன சம்பந்தப்பட்ட கோப தாபங்களுக்காக இவ்விருவரும் சிவராமினால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
 
சிவராமைப்பற்றி நல்ல அபிப்பிராயம் அவருடன் பழகிய நல்ல மனிதர்களிடம் கிடையாது. அவர்கள் சொல்லுகிற குற்றச்சாட்டுகளில் ஒன்று சிவராம் பிறரை “அள்ளி வைப்பதில்” வல்லவர் என்பது.
 
1. மாலைதீவுக்கு படையெடுத்துச்சென்ற தன்னுடைய சக தோழர்களான புளட் உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தில் “அள்ளி வைத்தவர்” சிவராமே என்பதை சிவராமுடன் பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் படித்த இப்போது அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழக துணைப் பேராசிரியராக இருக்கும் கார்ட்றி இஸ்மாயில் தான் லைன்ஸ் (www.lines-magazine.org) சஞ்சிகையில் எழுதிய ‘Mourning Sivaram’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதே “அள்ளி வைப்பு” தகவலை பாரிஸ் ஈழமுரசுவில் 90 களின் ஆரம்பத்தில் வெளிவந்த தொடரான  ‘காந்தி தேசத்தின் மறுபக்கம்’ என்ற புளட் வரலாற்றைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரையிலும் காணலாம்.
 
2. முன்னைநாள் வீரகேசரி பத்திரிகையாளரான மட்டக்களப்பைச் சேர்ந்த நித்தி என்ற நித்தியானந்தனை (பின்னர் இவர் புலிகளில் இணைந்து ஒரு சமரின் போது இறந்து விட்டார்) புலி என்று புளட் மோகனிடம் காட்டிக் கொடுத்தது சிவராமே என்ற தகவலை நித்தியானந்தனே தனது நண்பரான இப்போது ஆஸ்திரேலியாவில் புலிகளால் கொலை மிரட்டல் விடப்பட்டிருக்கும் நாகராஜா என்ற பத்திரிகையாளரிடம் தெரிவித்தை நாகராஜா சிவராமைப் பற்றி தேனீ இணையத்தில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் காரணமாக புளட் மோகனால் சுடப்பட்ட நித்தியானந்தன் காயமடைந்தார் எனவும் பின்னர் நித்தி புலிகளில் இணைந்து கேணல் கருணாவின் நம்பிக்கைக்குரியவராக செயற்பட்ட காலத்தில் சிவராமால் கருணாவை நெருங்கவே முடியவில்லை என்பதையும் நித்தியின் மரணத்தின் பின்னரே சிவராமும் கருணாவும் நெருக்கமாயினர் என்றும் நித்தி சிவராமை இந்திய உளவுப் பிரிவான ரோ வின் ஒற்றன் என்று தன்னிடம் கூறியதையும் நாகராஜா அக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். நித்தி காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்
சிவராம், டி.பி.எஸ் ஜெயராஜ், நித்தி ஆகிய மூவரும் பல தடவைகள் கொழும்பில் ஒன்றாகச் சந்தித்து மது அருந்திக் குலவியதை ஜெயராஜ் தன்னுடைய Sunday Leader கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

(புளட் மோகன் புலிகளால் கொல்லப்பட்ட பின்னர் மோகன் பற்றி ஒரு நீண்ட செய்திக் கட்டுரையை சிவராம் தமிழ் நெற் இல் எழுதினார். அதில் நித்தியானந்தன் என்ற பத்திரிகையாளரை புளட் மோகன் கொல்ல முயற்சித்ததாகவும் எழுதினார். கொலையை ஏவி விட்டது யார் என்ற உண்மையைச் சொல்ல மோகனும் நித்தியானந்தனும் உயிரோடு இல்லை. சிவராமும் தமிழ்நெற் உம் எழுதுவதுதானே வரலாறும் நாடகமும்.)
 
3. சிவராமைப் பற்றி டி.பி.எஸ் ஜெயராஜ் எழுதிய நீண்ட கட்டுரையில் ஒரு கட்டத்தில் சிவராம் negative reputationஐப் பெற்றதாகவும் இது தொடர்பாக தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிவராமோடு பழகுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியதாகவும் அதற்கமைய தானும் அக்காலத்தில் சிவராமோடு நெருங்கிப் பழகவில்லை என்பதையும் ஜெயராஜ் எழுதுகிறார்.
 
விடுதலைப் புலிகளிலிருந்து கருணா தான் பிரியப்போவதாக அறிவித்த ஆரம்பத்தில் சிவராம் கூட கரிகாலன் மற்றும் ரமேஷ் ஆகியோரைப் போல கருணாவின் பக்கமே இருந்ததாக இப்போது பரவலாக நம்பப்படுகிறது. சிவராம் புளட்டிலிருந்த ஆரம்ப காலங்களில் இருந்தே கிழக்கு மாகாணத்தின் நலன்களிலும் முக்கியத்திலும் அக்கறை கொண்டிருந்தவாராக அறியப்பட்டவர். வன்னிப் புலிகளூம் இதனடிப்படையில் சிவராமே கருணாவைத் தூண்டி விட்டிருக்கலாம் என்று சிவராமை சந்தேகித்தனர். பிளவு ஏற்பட்டபோது கருணாவின் சார்பாக சிவராமே தங்களை முதன் முதலாகத் தொடர்பு கொண்டார் என்பதை தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள ஒரு அரசியல் கட்சியின் வட்டாரமொன்று தெரிவித்ததையும் கரிகாலனும் ரமேஷம் வன்னித் தலைமைப் பக்கம் கட்சி தாவியபோதே சிவராம் “இனிக் கருணா நிலைக்க முடியாது” என்ற முடிவுக்கு சிவராம் வந்ததையும் UTHR (J) அறிக்கை குறிப்பிடுகிறது.

வன்னிப் புலிகள் மிகச் சரியாகவே தன்மீது சந்தேகம் வைத்திருப்பது சிவராமுக்கு மிகத்தெளிவாகவே தெரிந்திருக்கும். இதற்கிடையில் கருணாவின் படைகள் கலைந்து போன பின்னர் சிவராமின் மைத்துனரான கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் வன்னிப் புலிகளால் கருணா விவகாரம் தொடர்பாக “கைது செய்யப்பட்டு” விசாரிக்கப்பட்டார். எப்படி தனது பிழைப்புக்காக 1997 ல் தமிழ் நெற் தொடங்கியபோது தன்னுடைய புலி விமர்சனத்தைக் கைவிட்டு புலிச்சார்பு நிலை எடுக்கத் தலைப்பட்டாரோ அப்படி ஒரு நிலமை இப்போதும் சிவராமுக்கு. இம்முறை வன்னிச் சார்பு எடுக்க வேண்டிய நிலமை.

தமிழ் நெற்றுக்கு நிதி செலவளிப்பவர்களில் வன்னிப் புலிகளின் ஆதிக்கமே இருக்கும். புலிகளின் வெளிநாட்டு அமைப்புக்களிலும் கிழக்கு மாகாணத்தவரின் செல்வாக்கு இல்லை. வடக்கு மாகாணத்தவரினதும் வன்னிப் புலிகளினதும் அதிக்கமே. தமிழ் நெற்றின் ஆசிரியாராக தொடர்ந்தும் இருக்க வேண்டும் புலிகளின் பணத்தில் உலகச் சுற்றுலாப் பயணங்களும் செய்ய வேண்டும் என்றால் (பிரித்தானிய சாம்ராச்சியம் கோலோச்சிய காலத்தில் ஒருவர் உலகம் சுற்ற வேண்டுமென்றால் அவர்  பிரித்தானியக் கடற்படையில் சேர வேண்டும் என்பதைப்போல) வன்னித் தலைமைப் பக்கம் சாய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. கருணாவை மிகக் கடுமையாகக் கிண்டலடித்து கருணாவுக்கான ஒரு பகிரங்கக் கடிதத்தை வீரகேசரியில் எழுதினார். சிவராமின் பெருமளவிலான கட்டுரைகளைப் போலவே அதுவும் ஒரு கட்டணம் செலுத்தாத விளம்பரமே.
 
சிவராம் தனது தனிப்பட்ட பாதுகாப்பில் கடந்த காலங்களில் மிகக் கவனமாகவே இருந்துள்ளார். 1986 ம் ஆண்டு ரெலோ இயக்கம் புலிகளால் அழிக்கப்பட்ட பின்னர் மற்றைய இயக்கங்களையும் அழிக்கத் தொடங்கினர். அடுத்ததாக புளட் மீது புலிகளால் யாழ் குடாநாட்டில் தாக்குதல் தொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட கடைசி நேரத்தில் புளட்டின் உறுப்பினர்களாக யாழ் நகரில் தங்கி இருந்தவர்கள் சிவராமும் மெண்டிஸ் என்கிறவருமே. இருவருமே நிலமையின் உக்கிரத்தைத் தணிக்கும் பொருட்டு ராஜதந்திரமான ஒரு நடவடிக்கையைச் செய்தனர். புளட் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக ஒரு பத்திரிகை அறிக்கையை தயார் செய்து அதனை யாழ்ப்பாணத்தின் நான்கு பத்திரிகைகளிலும் வெளிவருமாறு செய்தனர். அறிக்கையைப் பார்த்த விடுதலைப் புலிகளின் திலீபன் ஏன் இவ்விதமான நடவடிக்கையை அவசரப்பட்டுச் செய்ததாக இரண்டு புளட் உறுப்பினர்களிடமும் நேரடியாகவே வந்து கேட்டார். இதற்குப் பதிலாக திலீபனிடம் சிவராம் நேரடியாகவே சொன்னார்
 
“உங்களை நம்பேலாது மச்சான்”
 
இதனோடு மட்டும் சிவராம் நின்றுவிடாது விரைவிலேயே ஒரு படகில் தமிழ் நாட்டுக்குத் தப்பிச்சென்று விட்டார். மெண்டிஸ் கிட்டுவோடு நட்பு பாராட்டுகிறவர். கிட்டு மெண்டிஸின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்று கூறியதை நம்பி யாழ்ப்பாணத்திலேயே மெண்டிஸ் தங்கியிருந்தார். எனினும் சிவராம் வெளியேறிய சில தினங்களிலேயே மெண்டிஸ் புலிகளால் “கைது செய்யப்பட்டு” சில நாட்களின் பின் கொல்லப்பட்டார்.
 
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து புலிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்தவென்று வாசுதேவா தலமையிலான ஒரு குழு கிழக்கு மாகாணத்தில் புலிகளைச் சென்று சந்திக்கவிருந்தது. புலிகளை இது தொடர்பாக வாசுதேவா நம்புவதை கடுமையாக எச்சரித்த சிவராம் தானும் அக்குழுவில் செல்வதைத் தவிர்த்தார். முடிவில் பேசவென்று அழைத்து வாசுதேவா முதலியோரை புலிகள் கொன்றது எலோருக்கும் தெரிந்ததே.
 
இவ்வகையாக தனது பாதுகாப்பு சம்பந்தமாக மிகச்சரியான மதிப்பீடுகளைச் செய்த சிவராம் தனது இறுதிக் காலத்தில் தனது பாதுகாப்பு சம்பந்தமாக மிக அசட்டையாக இருந்தது அதிசயமே. அதுவும் புளட்டின் உட்கட்சிப் படுகொலைகளின் இரத்தக்கறைகளை காவிக்கொண்டும் தனது சக புளட் உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக துரோகம் செய்து கொண்டும் கருணாவோடு கொழுவிக்கொண்டும் வன்னிப் புலிகளின் உத்தியோகப் பற்று அற்ற பிரச்சாரச் செயலாளராக கொழும்பில் இயங்கிக்கொண்டும் இன்னமும் கொழும்பில் வைத்து ஒரு “பத்திரிகையாளரான” தான் கொல்லப்படமாட்டேன் என்று சிறீலங்காவின் ஜனநாயகம் நீதி சட்டம் ஒழுங்கு என்பவற்றில் நம்பிக்கை வைத்து இருந்ததானது ஒரு முரண் நகையே.
 
சிவராமைப் பற்றி தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் அவர் ஒரு துப்பாக்கி தாங்கிய போர் வீரர் என்ற மாதிரியான பிரமைகளை கட்டமைத்துள்ளன. உண்மையில் சிவராம் ஒரு சமரில் (battle) கூட பங்குபற்றியதில்லை. அவரது துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள் யாரையாவது கொன்றது என்றால் அது அவரது சக புளட் இயக்கத் தோழர்களான அகிலனும் செல்வனுமே.
 
மாமனிதர் விருது வழங்கப்பட்டதை அடுத்து தமிழ் பத்திரிகைகளில் பலர் சிவராமுக்கு அதிபுனையப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகளை போட்டிபோட்டுக்கொண்டு எழுதினர். அவர் ஒரு உன்னதமான பத்திரிகையாளராகவும் புத்திஜீவியாகவும் கட்டமைக்கப்பட்டார். இப்படி எழுதியவர்கள் விடுதலைப் புலிகளையும் புலிப்பாசிசத்தையும் அண்டிப் பிழைப்பு நடத்தும் ஊடக “யாவாரிகள்”. இவர்களில் பலர் சிவராமின் உண்மை வரலாற்றை அறிந்தவர்கள் என்பது போக கடந்த காலங்களில் சிவராமை கடுமையாக விமர்சித்தவர்கள். தெரிதல், காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கிய இதழ்களிலும் அஞ்சலிகள் வந்தன. இதைத் தொடர்ந்து ஆன்மீக மற்றும் சோதிட மாத இதழ்கள், மங்கையர் மஞ்சரி, அம்புலிமாமா என்பவற்றிலும் சிவராமுக்கு அஞ்சலிகள் வரலாம் என்று எதிர்பார்த்தேன்.
 
ராஜ்பால் அபேயநாயக்கா சிவராமை யேசு கிறிஸ்து அளவுக்கு ஆக்காத குறைதான். Sunday Times இல் வெளிவந்த சிவராமின் அஞ்சலிக் கூட்ட அழைப்பில் சிவராமின் ‘விசிறிகள்’ (fans) எலோரும் வரலாம் என்று வெட்கமின்றி எழுதப்பட்டது. அவர் ஒரு சினிமா நட்சத்திரமாக உருவாக்கப்பட்டார். சிவராமின் அடிமுதல் நுனி வரை அறிந்த நடுநிலமையான பத்திரிகையாளரான டி.பி.எஸ் ஜெயராஜே சிவராமின் மறுபக்கங்கள் பற்றி அடக்கி வாசித்தார். ஜெயராஜ் எழுதிய நீண்ட தொடரில் புனைவுகளே அதிகம் என்பது போக அதில் அதிகளவான தரவுப்பிழைகள் இடம் பெற்றன.

அகிலன் செல்வம் கொலையைப் பற்றி எழுதுகிற ஜெயராஜ் “எனினும் விசாரணையின் போது சிவராம் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டதாக” புனைந்து பல்டி அடிக்கிறார். வேலிக்கு ஓணான் சாட்சி என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட புளட்டின் கங்காரு நீதிமன்றங்களில் ஜெயராஜுக்கு எப்போது உடன்பாடு வந்ததோ தெரியாது. தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத பேரா. சிவத்தம்பி, சிவராமை ” நீ எத்தகைய பெரிய மனிதன்” என்று எழுதினார்.
 
மாத்தையாவினாலும் கிட்டுவினாலும் நம்பகரமற்றவர் என்று மிகச் சரியாகவே மதிப்பிடப்பட்ட சிவராம் தனது குறுகிய கால வாழ்க்கையினாலும் அதனை உறுதிப்படுத்திச் சென்றிருக்கிறார்.

ஐ.பி.எல். – சென்னை அணி சாம்பியன்

chenai_super.jpgஐ.பி.எல்.  20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.  இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. சுரேஷ் ரெய்னா அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 57 ஓட்டங்கள்  எடுத்தார்.

அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து சென்னை அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.  அதிகபட்சமாக சச்சின் தெண்டுல்கர் 45 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள்  எடுத்தார். நாயர் 26 பந்துகளில் 27 ஓட்டங்களும் ராயுடு 14 பந்துகளில் 21 ஓட்டங்களும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் பொல்லார்டு அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 3 பவுண்டரிஇ 2 சிக்சர்களுடன் 27 ஓட்டங்கள் எடுத்தார்.

IPL : சிறந்த ‌வீரராக டெண்டுல்கர் தெரிவு

sachin.jpgஐபிஎல் இன் சிறந்த சிறந்த துடுப்பாட்ட வீரராக சச்சின் டெண்டுல்கார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் அறிமுக வீரராக கிரோன் போலர்ட் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த பந்து வீச்சாளராக பிரான் ஓயா , சிறந்த வீரராக ஹர்பஜன் சிங்கும், உறுதியான வீரராக ஜக் கலிசும் விருது பெற்றுள்ளனர்.

2008ஆம் ஆண்டு ஐபிஎல் இன் சிறந்த வீரராக பிரண்டன் மக்லம் தெரிவு செய்யப்பட்டதுடன், 2009ம் சிறந்த வீரராக அனில் கும்ளே விருது பெற்றார். சிறந்த களத்தடுப்பாளர் விருதினை ஏ.பி.டி வில்லியர்ஸ் பெற்றதுடன், சிறந்த மைதானத்திற்கான விருது பெங்களுர் சின்னசுவாமி மைதானத்திற்கும், அனுபவம் வாய்ந்த மைதானத்திற்கான விருதினை மும்பை டிவை பற்றீல் மைதானத்திற்கும் வழங்கப்பட்டது.

அமைச்சரவையின் எண்ணிக்கை 42ஆக அதிகரிக்கப்படலாம்- புன்னியாமீன்

sl-par.bmpஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது புதிய அமைச்சரவையை மேலும் சில உறுப்பினர்களை நியமிப்பதன் மூலம் விரிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் 23ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 37 பேரும், பிரதியமைச்சர்கள் 39 பேரும் நியமிக்கப்பட்டனர்.பாதுகாப்பு, நிதி, துறைமுகங்கள், நெடுஞ்சாலை அமைச்சுப் பொறுப்புகள் ஜனாதிபதி வசமுள்ளன. கடந்த அரசில் அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் என 109 பேர் இடம்பெற்றிருந்தனர். கடந்த ஆட்சிக் கால அமைச்சரவையை நோக்குமிடத்து இவ்வெண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும்கூட,  இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு இவ்வெண்ணிக்கையும் அதிகமானதே என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

கடந்த அரசாங்கத்தில் பொதுசன ஐக்கிய முன்னணி தனது ஆட்சிக்காலத்தில் ஆட்சிப்பலத்தை தக்கவைத்துக் கொள்ள அமைச்சரவை எண்ணிக்கையை எல்லையில்லாது அதிகரித்துச் சென்றது. கடந்த அரசாங்கத்தில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் அமைச்சர்களே என்ற நிலை காணப்பட்டிருந்தது. தற்போது அமைச்சரவை எண்ணிக்கை ஓரளவு குறைக்கப்பட்டாலும்கூட,  ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள் பிரதியமைச்சர்களாக இருந்தவர்கள் அந்த பதவிகளையும்,  வசதி வாய்ப்புக்களையும் எதிர்பார்த்து அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தவும் இடமுண்டு. இருப்பினும்,  இந்நெருக்கடிகள் அரசாங்க அறுதிப் பெரும்பான்மையை குறைப்பதாக அமைந்துவிடக்கூடியதாக இருக்குமென எதிர்பார்க்க முடியாது.

இருப்பினும்,  கடந்த அரசாங்கத்தில் முக்கியமான பங்களிப்பு வழங்கிய ஒரு சிலர் விடுபட்டிருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது. உதாரணமாக புதிய அரசியலமைப்பொன்றை முன்வைக்க வேண்டுமென்பதில் மற்றும் இலங்கையில் இனப்பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டுமென்பதிலும் தீவிரமாக செயற்பட்டு வந்த பேராசிரியர் திஸ்ஸவிதாரணவை குறிப்பிடலாம். மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக அரசாங்கம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புமிடத்து இவரை அமைச்சராக நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தமொன்று ஜனாதிபதிக்கு ஏற்படலாம்.

மேலும். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு. ஜயரத்ன பிரதமராக நியமிக்கப்பட்டட போதும்கூட,  கண்டி மாவட்டத்தில் பிரதான 1 இலட்சம் விருப்பு வாக்குகளுக்கு மேல் பெற்ற கெஹலிய ரம்புக்வெல்ல,  மஹிந்தானந்த அலுத்கமகே,  எஸ்.பி. திசாயநாயக்க ஆகியோருக்கு இதுவரை அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை. கடந்த அரசாங்கத்தில் முக்கிய செயற்பாட்டு உறுப்பினராக காணப்பட்ட சரத் அமுனுகமவுக்கு இதுவரை அமைச்சரவைப் பொறுப்பு வழங்கப்படவில்லை. கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற மீள் வாக்கெடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கட்சியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒழுக்காற்று நடவடிக்கை முடிவடையும் வரை கண்டி மாவட்டத்தில் அமைச்சரவை பதவிகள் வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்திருந்தார். எவ்வாறாயினும், இவ்விசாரனை முடிவடைந்த பின்பு கண்டி மாவட்டத்துக்கு சில அமைச்சரவை பொறுப்புக்களை ஜனாதிபதி வழங்க வேண்டியேற்படும்.

அதேபோல மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஏதாவொரு வகையில் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டே வந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் ஆறுமுகம் தொண்டமானுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த கால்நடை அபிவிருத்தி அமைச்சுப் பதவியை அவர் ஏற்றுக் கொள்ளாமையினால் ஆறுமுகம் தொண்டமானும் அமைச்சுப் பதவிக்கு இன்னும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் இவருக்கும் அமைச்சுப் பொறுப்பு எதிர்வரும் நாட்களில் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே,  அமைச்சரவையின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை இருப்பது ஜனாதிபதிக்கு தவிர்க்க முடியாதவொரு விடயமாகவே காணப்படும்.

மறுபுறமாக ஆளும்.ஐ.ம.சு.முன்னணி 144 உறுப்பினர்களை தற்போது தன்வசம் வைத்துள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள இன்னும் 6 உறுப்பினர்கள் ஐ.ம.சு.முன்னணிக்கு தேவை. எதிர்வரும் வாரங்களில் எதிர்க்கட்சிகளிலிருந்து இந்த உறுப்பினர்கள் ஆளும் கட்சியுடன் இணைந்துகொள்வார்கள் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அறுதிப் பெரும்பான்மை பலத்திற்கோ மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக் கொள்வதற்கோ இடையில பாரிய வித்தியாசம் காணப்படுகின்றன. எவ்வாறாயினும் எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சியில் சேரக்கூடிய உறுப்பினர்களுக்கும் கௌரவத்திற்காக சில அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் எனவும் ஊகங்கள் கூறுகின்றன.

எவ்வாராயினும் இ.தொ.கா.வைச் சேர்ந்தவர் ஆறுமுகம் தொண்டமான், கலாநிதி சரத் அமுனுகம, கெஹலிய ரம்புக்வல, மகிந்தானந்த அளுத்கமகே, எஸ்.பி.திஸாநாயக்க, பேராசிரியர் திஸ்ஸவிதாரண ஆகியவர்களில் 5 பேர் புதிய அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. இவர்களில் ஒருவர் பிரதியமைச்சராகலாம் என்றும் அனுமானிக்கப்படுகிறது. எனவே, எதிர்வரும் காலங்களில் அமைச்சரவை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படக்கூடிய நிகழ்தகவே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

ஹரி போட்டர் புகழ் ராவ்லிங் அரசியல் களத்தில்! ஆளும் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம்

harry_potter.jpgஹரி போட்டர் புத்தகம் எழுதிய பிரபல பெண் எழுத்தாளர் ஜே.கே.ராவ்லிங், பிரிட்டன் அரசியல் களத்தில் குதித்துள்ளார். அடுத்த மாதம் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக ஆளும் கட்சிக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்து வருகிறார். பிரிட்டனின் பிரபல பெண் எழுத்தாளர் ஜே.கே.ராவ்லிங்  உலகம் முழுவதும் உள்ள சிறுவர்களின் மனம் கவர்ந்தஇ ‘ஹரி போட்டர்’ புத்தகங்களை எழுதியதால் பிரபலமானார்.

ஹாரி போட்டர் புத்தகம் எழுதியதன் மூலம் கிடைத்த வருவாயால் பிரிட்டனின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ராவ்லிங்கும் இடம் பெற்றுள்ளார்.

ஜே.கே.ராவ்லிங்கிற்கு தற்போது அரசியல் ஆசை வந்துள்ளது. வரும் மே 6ம் தேதி நடக்கவுள்ள பிரிட்டன் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவாக அவர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்டுள்ள விஷயங்களை மேடைகள் தோறும் கடுமையாக விமர்சித்து வருகிறார். 

கொடுத்த வாக்குறுதியை ரணில் மீறிவிட்டார்- ரணில் மனோ உறவு முறிந்தது

ranil-mano.bmpஇலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியிலிருந்து விலகுவதாக மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. மனோ கணேசனுக்கு ஐக்கிய தேசிய முன்னணி வாக்களித்தபடி தேசியப் பட்டியலில் நியமனம் வழங்கப்படாததை எதிர்த்தே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனோ கணேசனுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையிலான ஒன்பது வருடகால உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினர் தம்முடன் எழுத்துபூர்வகச் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி நடந்து கொள்ளவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன்  தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்குளேயே இருக்கும் சில பேரினவாத நபர்களாலேயே தமது கட்சிக்கு தேசியப் பட்டியலில் இடம் கிடைக்காமல் போனது என்றும் பிரபா கணேசன் கருத்து வெளியிடுகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது தமது கட்சிக்கு கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் ஒரு இடத்தை விட்டுக் கொடுப்பதற்கு ஈடாக தேசியப் பட்டியலில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஒரு இடம் வழங்கப்படும் என்று ரணில் விக்ரமசிங்க உறுதியளித்ததாகவும் மனோ கணேசன் கூறுகிறார்.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உப தலைவர் வேலணை வேணியன் விடுத்துள்ள அறிக்கையில் :- கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக எமது தலைவரும் நாங்களும் நேற்றுவரை ஐ. தே. கட்சியின் தலைவரை நம்பியிருந்தோம். எமது தலைவருக்கு ஐ. தே. கட்சி மனிதாபிமான அடிப்படையில் தேசியப் பட்டியலில் ஒரு கூட்டுக் கட்சியின் தலைவர் என்ற வகையில் பாராளுமன்றத்தில் ஓர் இடம் கொடுத்திருக்க வேண்டும்.

இன்று அக்கட்சி தமிழ் மக்களின் காலையே வாரி விட்டது போலவே கருதுகிறோம். இன்று முதல் ஐ. தே. கட்சிக்கும் எமக்கும் இடையே இருந்த கூட்டணி முறிவடைந்துவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரை மட்டுமல்ல எமது கட்சி சார்ந்த பல இலட்சக் கணக்கான வாக்காளர்களான தமிழ் மக்களுக்கே துரோகம் செய்து விட்டதாகவே கருதுகிறோம்.

எரிமலைக் குமுறல் தணிந்த போதும் அது ஏற்படுத்திய தாக்கம் தொடர்கிறது : த ஜெயபாலன்

Volcanic_Dust_Over_Europeஐஸ்லாந்தின் எரிமலைக் குமுறல் 80 வீதத்தால் தணிய ஐரோப்பிய விமானப் போக்குவரத்து மீளவும் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் நேற்று (ஏப்ரல் 20 2010) இரவு பத்து மணி முதல் இயங்க ஆரம்பித்தது. பிரித்தானியாவின் பெரும்பாலான விமான நிலையங்கள் இன்று முதல் இயங்க ஆரம்பித்து உள்ளன. விமான நிறுவனங்களின் விமானங்கள் உலகின் பல்வேறு பாகங்களிலும் தரையிறக்கப்பட்டதால் வழமையான சேவைகளை உடனடியாக ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. இருந்த போதும் ஐரோப்பா முழுவதும் 75 வீதமான விமானப் பயணங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐஸ்லாந்தின் எரிமலைக் குமுறல் காரணமாக கடந்த ஆறு நாட்களாக பெரும்பாலும் மூடப்பட்டு இருந்த ஐரோப்பிய விமானப் போக்குவரத்து ஐரோப்பிய பொருளாதாரத்திலும் ஐரோப்பிய சகஜ வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது விமானப் போக்குவரத்து வழமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பினும் கடந்த ஆறு நாட்களாக விமானப் போக்குவரத்து தடைப்பட்டதன் தாக்கத்திலிருந்து ஐரோப்பா இன்னமும் முற்றாக விடுபடவில்லை. குறிப்பாக உலகின் பல்வேறு பாகங்களுக்கும் பயணித்தவர்கள் மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்கு வர முடியாமல் தங்கள் விமானப் பயணத்திற்காகக் காத்திருக்கின்றனர். இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து ஐரோப்பிய தலைநகரங்களுக்கு வரவேண்டிய விமானங்கள் இன்றும் புறப்படவில்லை.

இந்த விமானப் போக்குவரத்துத் தடையால் ஐரோப்பிய பொருளாதாரம் மட்டுமல்ல உல்லாசப் பயணத்துறை மற்றும் ஏற்றுமதிகளில் பெரும்பாலும் தங்கியுள்ள கென்யா போன்ற நாடுகளின் பொருளாதாரமும் கடுமையாகத் தாக்கப்பட்டு உள்ளது.

எரிமலைக் குமுறல்கள் ஏற்படுவது இது முதற் தடவையாக இல்லாத போதும் சர்வதேச விமானப் போக்குவரத்து இவ்வளவு தூரம் தாக்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும். எரிமலைக் குமுறலினால் வளிமண்டலத்துக்கு தள்ளப்பட்ட புகைமண்டலத்தில் காணப்பட்ட துகள்களே விமானப் பயணங்கள் தடைப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இத்துகள்கள் விமானத்தின் என்ஜினுக்குள் சென்று அதனைச் செயலிழக்கச் செய்யும் என்ற அச்சம் காரணமாகவே விமானங்கள் ஐரோப்பிய வான் பரப்பில் இருந்து தரையிறக்கப்பட்டது.

ஆனால் இத்துகள்கள் விமான என்ஜினைச் செயலிழக்கச் செய்யும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என இறுதியில் முடிவெடுக்கப்பட்டு ஐரோப்பிய வான் பரப்பு மீண்டும் திறந்துவிடப்பட்டு உள்ளது. இந்த முடிவினை முன்கூட்டியே எடுத்திருக்கலாமா என்ற வாதம் தற்போது வலுப்பெற்று வருகின்றது. மேலும் வான் பரப்பை மீண்டும் திறந்துவிட எடுத்த முடிவு விஞ்ஞானிகளின் முடிவு என்பதிலும் பார்க்க ஐரோப்பிய விமான நிறுவனங்கள் வழங்கிய கடுமையான அழுத்தம் காரணமாகவே உடனடியாக ஐரோப்பிய வான் பரப்பு போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது என்ற வாதமும் பலமாக உள்ளது. மேற்படி முடிவை எடுப்பதற்கு முன் விமான நிறுவனங்களின் தலைமைகள் பிரித்தானிய அரசுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டன. அதன் முடிவிலேயே வான் பரப்பு போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட்டது.

தூசு மண்டலத்தின் செறிவு ஒரு கன மீற்றருக்கு 0.002கிராம் இற்கு குறைவாக இருந்தால் விமானங்கள் பயணிக்க முடியும் என்ற முடிவுக்கு தற்போது Civil Aviation Authority (CAA) வந்துள்ளது. தற்போது பிரித்தானிய வளிமண்டலத்தில் ஒரு கன மீற்றருக்கு 0.0001 கீராம் செறிவிலேயே தூசு காணப்படுகின்றது. ஆனால் ஐரோப்பிய வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடைவித்தக்கப்பட்ட போது தற்போதைய செறிவு எல்லைக்கு மிகக் குறைவாக கன மீற்றருக்கு 0.0004 கிராம் செறிவிலேயே பிரித்தானிய வளிமண்டலத்தில் துகள்களின் செறிவு காணப்பட்டதாக சில விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். அதனால் ஐரோப்பிய வான் பரப்பை முற்றாக போக்குவரத்திற்கு உகந்ததல்ல என்று தடை செய்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற குற்றச்சாட்டு விமான நிறுவனங்களிடம் இருந்து வர ஆரம்பித்துள்ளது. இந்நடவடிக்கை மிகைப்படுத்தப்பட்ட ஒரு தேவையற்ற எச்சரிக்கை நடவடிக்கை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

விமானப் போக்குவரத்து கடந்த ஆறு நாட்களாகத் தடைப்பட்டதால் விமான நிறுவனங்களுக்கு 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டதாக International Air Transport Association (IATA) மதிப்பிட்டுள்ளது. இந்த நட்டத்தை ஈடுசெய்வதற்கு விமான நிறுவனங்கள் அரச நிதியுதவியை ஏதிர்பார்த்துள்ளன. ஆனால் கூடுதல் விமானச் சேவையை மேற்கொள்வதன் மூலம் இந்த நட்டத்தை ஈடுசெய்ய விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்படலாம் எனவும் தெரியவருகின்றது.

ஏற்கனவே பிரித்தானியாவில் பள்ளிகள் கல்லூரிகள் அரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஈஸ்ரர் விடுமுறையைக் கழிக்க உலகின் பல்வேறு பாகங்களுக்கும் சென்றவர்கள் மீண்டும் நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். விடுமுறையில் சென்றவர்கள் தங்கள் விடுமுறைக் காலத்திற்கு அதிகமான காலத்தை கழிப்பதால் தங்கள் விடுமுறையை இழக்கின்றனர். அல்லது சம்பளம் அற்ற விடுமுறையாக அவை கணிக்கப்படுகின்றது. மேலும் எப்படியாவது நாடு திரும்ப முற்பட்டவர்கள் மேலதிக கட்டணங்களைச் செலுத்தி நாடு திரும்ப வேண்டிய நிலையேற்பட்டது. ஐரோப்பிய வான் பரப்பு போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்ட போதும் விமானப் போக்குவரத்து மே முதல் வாரமளவிலேயே வழமைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய பொலிஸாரால் தேடப்பட்ட சுவாமி நித்யானந்தா கைது!

nithya.jpgபாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சர்ச்சைக்குள்ளான நித்யானந்தா இமாச்சல பிரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகிள்ளன. இமாச்சலத்தில் உள்ள சோலன் என்னுமிடத்தில் அவரை கர்நாடக பொலிசார் கைது செய்துள்ளதாக இந்திய நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.

நடிகையுடன் உல்லாசமாக இருந்ததே நித்தியானந்தரின் வழக்கில் முக்கிய குற்றமாக கருதப்டுகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்டு 45 நாட்கள் கழித்து ஒருவாறாக நித்தியானந்தரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நடிகை ரஞ்சிதாவும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஞ்சிதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது தற்போதைய கேள்வி.

புதிய நாடாளுமன்றத்துக்கான தேசிய பட்டியல் உறுப்பினர்கள்

parliament.jpgஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 17 தேசிய பட்டியல் உறுப்பினர்கள்

01 .ரட்ணசிறி விக்கிரமநாயக்க,
02. டி.எம்.ஜெயரத்ன,
03. டளஸ் அழகபெரும,
04. ஜீ.எல்.பீரிஸ்,
05. டியூ குணசேகர,
06. திஸ்ஸ விதாரண,
07. கீதாஞ்சன குணவர்த்தன,
08. வண.எல்லாவள மேதானந்ததேரர்,
09. முத்து சிவலிங்கம்,
10. அச்சல ஜாகொட,
11. விநாயகமூர்த்தி முரளீதரன்,
12. ஜே.ஆர்.பி.சூரியபெரும,
13. ஜனக பண்டார,
14. பேராசிரியர்.ராஜிவ் விஜயசிங்க,
15. ஏ.எச்.எம்.அஸ்வர்,
16. மாலினி பொன்சேகா,
17. கமல் ரணதுங்க

ஐக்கிய தேசியக் கட்சி, தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் 9 பேர்

01. திஸ்ஸ அத்தநாயக்க,
02. ஜோசப் மைக்கல் பெரேரா,
03. ஹர்ஷ டி சில்வா,
04. ஏர்ன் விக்கிரமரத்ன,
05. டி.எம்.சுவாமிநாதன்,
06. ஆர்.யோகராஜன்,
07. அனோமா கமகே,
08. ஹசன் அலி,
09. சலீம் மொஹமட்

ஜனநாயக தேசிய முன்னணி தேசிய பட்டியல் உறுப்பினர்கள் 02

01. அநுர குமார திஸாநாயக்க ,
02. டிரான் அலஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய பட்டியல் உறுப்பினர்கள் 01

01. எம்.சுமந்திரன்