கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

“இடம் பெயர்ந்தோர் 3 வருடங்கள் தடுத்து வைக்கப்படுவர் என்ற செய்தி உண்மை அல்ல’

risard.jpgவன்னியிலி ருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்த பொது மக்கள் 3 வருடங்களுக்கு நலன்புரி முகாம்களிலேயே தடுத்து வைக்கப்படுவர் என்ற செய்திகளில் எந்த உண்மையும் கிடையாதென மறுத்திருக்கும் மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன்னிப் பிரதேசத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்றும் நோக்கமெதுவும் அரசாங்கத்துக்குக் கிடையாதென்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வன்னிப் பகுதியிலிருந்து நேற்று (காலை) வரை மொத்தமாக 34,430 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்தை வந்தடைந்திருப்பதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அமைச்சர் பதியுதீன் இந்த கருத்துகளை வெளியிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்:

“”வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வரும் பொது மக்கள் 4 கட்டங்களாக உள்வாங்கப்படுகின்றனர். வரும் மக்களுக்கு படையினரால் முதலில் சத்துணவுகள் வழங்கப்பட்டு பின்னர் ஏனைய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. இன்று (நேற்று) வரை 34,430 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளனர். இன்னும் சுமார் 65 ஆயிரம் மக்களே அரச கட்டுப்பாடற்ற பகுதியில் எஞ்சியிருக்கின்றனர்.

இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கென அரை நிரந்தர வீடுகள் வழங்கப்படவுள்ளன. இதற்கமைய 10 ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

அத்துடன், வவுனியாவில் ராமநாதன், கதிர்காமர், ஆனந்தகுமாரசுவாமி, அருணாசலம் ஆகிய பெயர்களில் 4 நலன்புரி கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாடசாலை, வங்கி, சுகாதாரம் என சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதேநேரம், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இப்போதே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டோம். மன்னார்சிலாபத்துறை பிரதேசங்களுக்கு மின்சார விநியோகம் வழங்க ஆரம்பிக்கப் பட்டுவிட்டன. பூநகரிசங்குப்பிட்டி பாலத்தின் புனரமைப்புகள் ஆரம்பமாகிவிட்டன. யாழ்ப்பாணம்மன்னார் “”ஏ32′ வீதியை கூடிய விரைவில் செப்பனிடும் பொருட்டு 12 ஒப்பந்தகாரர்களிடம் அந்தப் பணிகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. மாங்குளம் பகுதிக்கும் அடுத்த வாரமளவில் மின்சாரம் வழங்க அரசாங்கம் தயாராக இருக்கிறது.

இடம்பெயர்ந்து வந்தவர்களை கூடிய விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம். அதைவிடுத்து நலன்புரி முகாம்களிலேயே மக்கள் 3 வருடங்களுக்கு தடுத்து வைக்கப்பட போவதாக வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது.

அதுமட்டுமல்லாது, வன்னியில் சிங்கள, முஸ்லிம் மக்களை அரசாங்கம் குடியேற்றப் போவதாக சிலர் இப்போதே பிரசாரம் தொடங்கிவிட்டனர். ஆனால் வன்னியில் சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்றும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. அதற்கான அவசியமும் எமக்கில்லை.

இதேநேரம், இடம்பெயர்ந்து வந்த மக்களுடன் 8, 9 புலி உறுப்பினர்களும் வந்துள்ளனர். சிலர் அவர்களே அதை ஒப்புக் கொண்டனர். அவர்கள் திருந்தி மக்களுடன் வாழ விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் அவர்களை மக்களுடன் இணைத்து வைத்திருக்க முடியாது.

எனவே, அவர்களை நீதி அமைச்சின் பொறுப்பில் ஒப்படைத்து புனர்வாழ்வளித்து, அத்துடன் தொழிற் பயிற்சிகளையும் வழங்கி, வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை வழங்க திட்டமிடப் பட்டுள்ளன’ என்றார்.

1600 பேர் வருகை.

mullai-ahathi.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இன்று அதிகாலை 1657 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வருகை தந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதில் 1208 பேர் விஸ்வமடு பகுதியில்  படையினரிடம் தஞ்சம் கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவிலியன்கள் பஸ் மீது கைக்குண்டுத் தாக்குதல்: ஒருவர் பலி, 12 பேர் காயம்

udaya_nanayakkara_.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருநது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு மக்களை ஏற்றி வந்த பஸ் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதல் துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக ஒரு சிவிலியன் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று  அதிகாலையில் இடம் பெற்றதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கைக்குண்டுத் தாக்குதலில் வயதான ஐந்து ஆண்கள், இரு சிறுவர்கள், வயதான ஐந்து பெண்கள், இரு பெண்கள் ஆகியோர் அடங்குவர். இந்தச் சம்பவம் புளியங்குளம்-வவுனியா வீதியில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த அனைவரும் இராணுவ பஸ் வண்டிகள் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவரின் சடலமும் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கு இன்று தேர்தல் : 106 உறுப்பினரை தெரிவுசெய்ய 34,08,182 பேர் வாக்களிக்கத் தகுதி – மொஹமட் அமீன்

sri-lanka-election-01.jpgமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று நடைபெறவுள்ள மாகாணசபைகளுக்கான தேர்தலில் 5 மாவட்டங்களிலிருந்தும் 106 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 34 இலட்சத்து 8,182 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். 1209 வாக்களிப்பு நிலையங்களில் இவர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பித்திருக்கும் இரு மாகாண சபைகளுக்குமான தேர்தல்; ஐந்து மாவட்டங்களிலுள்ள 40 தொகுதிகளில் 2579 வாக்குச் சாவடிகளில் நடைபெறுகிறது

மத்திய மாகாணம்

மத்திய மாகாணத்தின் கீழ் உள்ள மாவட்டங்களான கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகியவற்றில் 56 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கு 17,46,449 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1370 வாக்களிப்பு நிலையங்களில் இவர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர்.

அதாவது, கண்டி மாவட்டத்தில் 30 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 9,55,108 வாக்காளர்களும், நுவரெலியாவில் 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 4,52,395 வாக்காளர்களும் மாத்தளையில் 10 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு 3,38,946 வாக்காளரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கண்டியில் 10 அரசியல் கட்சிகள் மற்றும் 8 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 594 வேட்பாளர்களும், நுவரெலியாவில் 14 அரசியல் கட்சிகள் மற்றும் 10 சுயேச்சைக் குழுக்களுமாக மொத்தமாக 456 வேட்பாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகள் மற்றும் 8 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 260 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மத்திய மாகாணத்தில் 3 மாவட்டங்களிலிருந்தும் 14 அரசியல் கட்சிகளையும்,26 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 1,310 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இம்மூன்று மாவட்டங்களிலுமிருந்து வாக்காளரின் வாக்குகள் மூலம் 56 உறுப்பினர்களும் 2 போனஸ் உறுப்பினர்களுமாக மொத்தமாக 58 உறுப்பினர்கள் மாகாண சபைக்குள் தெரிவு செய்யப்படவுள்ளனர். 

இலங்கையில் மத்திய மாகாணமும், மேல் மாகாணமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான மாகாணங்கள் என்பது பொதுவான கருத்து. மத்திய மாகாண சபைக்கான தேர்தலில் இம்முறை பொதுசன ஐக்கிய முன்னணியினரின் தேர்தல் பிரசாரங்கள் மிகவும் உச்சநிலையிலிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூட கூடிய கரிசனை காட்டியதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். பொதுவாக இத்தேர்தலில் வன்னியுத்தம் முதன்மைப்படுத்தப்பட்டமை காரணமாக பொதுசன ஐக்கிய முன்னணியினர் வெற்றியீட்டலாம் என தற்போதைய நிலையின் பிரகாரம் எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மாகாணம் முதன்மை வேட்பாளர்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் எஸ்.பி. திசாநாயக்க போட்டியிடுகின்றார். இத்தேர்தலில் எஸ்.பி. திசாநாயக்க அதிக விருப்பு வாக்குகளைப் பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இம்மாகாணத்தில் பொதுசன ஐக்கிய முன்னணி முதலமைச்சர் வேட்பாளராக சரத் ஏக்கநாயக்க போட்டியிடுகின்றார். இவர் கடந்த மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தவர்.

வடமேல் மாகாணம்

sri-lanka-election.jpgவடமேல் மாகாணத்தில் குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இருந்து 50 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில் 16,61,733 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

அதாவது, குருநாகல் மாவட்டத்திலிருந்து 34 பேரும் புத்தளம் மாவட்டத்திலிருந்து 16 பேரும் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அதேநேரம், போனஸாக 2 பேரும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதால் 52 பேர் மாகாண சபைக்கு செல்லவுள்ளனர். வடமேல் மாகாணத்தில் 12 அரசியல் கட்சிகளையும்ää 17 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 937 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வடமேல் மாகாணத்தில் ஜே.வி.பி.யின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக நிமல் ஹேரத்தும், ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சமல்செனரத் அவர்களும், பொதுசன ஐக்கிய முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளராக அத்துல சரத் விஜேசிங்க அவர்களும் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்.

sri-lanka-election-02.jpgஇன்று காலை 7.00மணிக்கு தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகிவிட்டது. ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தேசம்நெற் செய்தி முகவர்களுடன் தொடர்பு கொண்டு கதைத்த நேரத்தில் இதுவரை (காலை 8.00மணி) தேர்தலில் வாக்களிப்பு வேகம் மிகவும் மந்தகரமாக இருப்பதாகவே தெரிய வருகின்றது. இவ்விரு மாகாணங்களிலும் முன்னைய தேர்தல்களுடன் ஒப்பிட்டு நோக்கும்போது இந்த மாகாண சபைத் தேர்தலை வாக்காளர்களின் ஆர்வம் மிகவும் குறைவாகவே காணப்பட்டிருந்தது. இரு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுழல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும்கூட, மக்களின் ஆர்வம் அதிகரிக்கப்படவில்லை என்பதாக குறிப்பிட்டனர். பொதுவாக இரு மாகாணங்களிலும் வாக்களிப்பு விகிதம் குறைவடையலாம் என சில சிரேஸ்ட அரசியல் அவதானிகள் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து தேசம்நெற் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட நேரத்தில், தேர்தலுக்காக நாங்கள் பகைத்துக் கொள்ளவோ, பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ளவோ தேவையில்லை. வாக்களிப்பு நேரத்தில் போய் வாக்களித்தால் போதும் என்ற அடிப்படையிலேயே கருத்துக்களைத் தெரிவித்தனர். எவ்வாறாயினும், 50சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாக்கப்படுமென எதிர்பார்க்க முடிகின்றது.

கடந்த கால தேர்தல்களுடன் ஒப்புநோக்கும்போது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தலில் வாக்காளர்களின் நடவடிக்கைகள் ஓர் உயர்தன்மையைக் காட்டுகின்றது. குறிப்பாக இனிவரும் காலங்களில் இதேபோன்ற வாக்காளர்களின் நிலைமைப் பேணப்படுமாயின் மேலைத்தேய நாடுகளில் காணப்படக்கூடிய தேர்தல்களை ஒத்தவகையில் இலங்கை தேர்தல் நிலைகளும் மாற்றமடையலாம் எனக் கருத இடமுண்டு.

இலங்கைத் தேர்தல் வரலாற்றில் ஒரு கரைபடிந்த தேர்தல் வரலாற்றை ஏற்படுத்தியது 1999ஆம் ஆண்டு வடமேல் மாகாணசபை தேர்தலாகும். வடமேல் மாகாண சபையைச் சேர்ந்த குருணாகல், புத்தளம் போன்ற மாவட்டங்களிலும் போல இத்தடவை வாக்காளர்களின் போக்கு மிகவும் நிதானமாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை இரு மாகாணங்களிலும் பாரியளவிலான தேர்தல் வன்முறைகள் பதிவாகியிருக்கவில்லை என்பது கெபே, பெபரல் மற்றும் பொலிஸ் தலைமையக அறிக்கைகளின்படி தெரியவருகின்றது. நேற்று வெள்ளிக்கிழமை வரை 200க்கும் குறைவான வன்முறை சம்வபங்களே இவ்வமைப்புகளின் கீழ் பதிவாகியிருந்தபோதிலும்கூட, இவற்றுள் பெரும்பாலானவை சிறு சிறு சம்பவங்களே.

129 வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸில் புகார்

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் தேர்தல் சட்டங்களை மீறியது தொடர்பாக 129 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டது முதல் நேற்றுமுன்தினம் புதன்கிழமை வரையிலான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயந்த கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடமேல் மாகாணத்திலுள்ள ஹோட்டல்கள் முதல் தங்குமிடங்கள் என 34 இடங்களை பொலிஸார் தேடுதலுக்கு உட்படுத்தியதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் சாவடிகளில் குழப்பம் விளைவித்தால் வாக்குகள் ரத்து; முடிவுகளும் வெளிவராது – ஆணையாளர் எச்சரிக்கை

election-commissioner.jpgவாக்குச் சாவடிகளில் குழப்பங்கள், கலவரங்கள் செய்யப்படுமாயின் குறிப்பிட்ட வாக்குச் சாவடியின் வாக்குகள் ரத்துச் செய்யப்படுவதோடு அந்த மாகாணத்தின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படமாட்டாது என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார். எக்காரணம் கொண்டும் வாக்குச் சாவடிகளில் கலவரங்கள், குழப்பங்கள் நடைபெறுவதற்கு இடமளிக்க வேண்டாம் என அனைத்து கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடமும் வேண்டுகோள் விடுப்பதாகவும் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார். ராஜகிரியவில் உள்ள தேர்தல் திணைக்களத்தில்  சில தினங்களுக்கு முன் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே தயானந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் முகவர்கள்

வாக்களிப்பு நிலையத்தில் கட்சிகளால் நியமிக்கப்படும் கட்சி முகவர்கள் தேர்தலன்று காலை ஆறு மணிக்கே வாக்குச் சாவடிகளுக்கு வரவேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க முன்கூட்டியே அறிவித்தல் கொடுத்திருந்தார். வாக்குப் பெட்டி, வாக்குச் சீட்டு புத்தகங்கள் அனைத்தும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வாக்குகள் எண்ணப்படும் நிலையம் வரை கட்சியின் பிரதிநிதிகள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் வாக்குப் பெட்டிகள் விசேட ஸ்டிக்கர் ஒன்றின் மூலம் சீல் வைக்கப்படும். தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும் தமது நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக தமது ஸ்டிக்கர் ஒன்றையும் ஒட்டலாம்.

வாக்குகள் எண்ணும் நிலையம் வரை செல்லும் கட்சிகளின், சுயேட்சைக் குழுவின் பிரதிநிதி வாக்குகள் எண்ண ஆரம்பிக்கும் வரை தங்கியிருக்கலாம். வாக்குகள் எண்ணும் நிலையத்திற்காக கட்சிகளால், சுயேச்சைக் குழுக்களால் நியமிக்கப்படும் பிரதிநிதி வந்ததன் பின்னர் மற்றவர் அங்கிருந்து செல்ல வேண்டும். வாக்குகள் எண்ணும் நிலையத்திலுள்ள கட்சிகளின், சுயேச்சைக் குழுக்களின் பிரதிநிதிகளிடம் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் பிரதி ஒன்றும் அவர்களது கையெழுத்தைப் பெற்று வழங்கப்படும்.

வாக்குச் சாவடிகளில் கட்சிகளால் சுயேச்சைக் குழுக்களால் நியமிக்கப்படும் பிரதிநிதிகள் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டும். இதற்கென விசேட பயிற்சிகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்ட போதும் ஜே. வி. பி. மட்டுமே பெப்ரல் அமைப்பின் உதவியுடன் பயிற்சிகளை பெற்றதாகவும் அறியமுடிகின்றது.

1999 ஆம் ஆண்டு வடமேல் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலே மிகவும் விரும்பத்தகாத தேர்தலாக அமைந்தது. 2003ஆம் ஆண்டு முன்னாள் நீதியரசர் மார்க் பெர்னாண்டோவினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பின்னர் இவ்வாறான நிகழ்வுகள் குறைவாகவே காணப்பட்டன. அவரது தீர்ப்பின் பிரகாரம் வாக்குச் சாவடிகளில் கலவரம், மற்றும் குழப்பம் ஏற்படுமாயின் வாக்குகள் ரத்துச் செய்யப்படும். அத்துடன் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படமாட்டாது. அத்துடன் குறிப்பிட்ட பகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்தி பெறுபேறுகள் கிடைத்ததன் பின்னரே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். இந்த நடைமுறையையே கடைப்பிடிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்திருந்தமையும் இங்கு அவதானிக்கத்தக்கது.

ஒப்பீட்டளவில் நோக்கும்போது நீதியும், நியாயமான தேர்தலொன்றை நடத்துவதற்கு தேர்தல் திணைக்களம் கூடிய கரிசனையை எடுத்து வருவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

தேசிய அடையாள அட்டை இல்லாவிடின் மாற்று ஏற்பாடு. ஆளடையாளம் நிரூபிக்க வேறு ஆவணங்களும் ஏற்பு

election_ballot_.jpgதற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மத்திய வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தலின்போது இலங்கைத் தேர்தல் வரலாற்றில் முதல்தடவையாக கணனிப்படுத்தப்பட்ட வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. கூடவே வாக்காளர் அட்டைகளை வாக்காளர்களின் ஆள் அடையாள அட்டை இலக்கங்களும் பதிவாக்கப்பட்டுள்ளது. எனவே, இத்தேர்தலில் வாக்களிக்க ஆள்அடையாள அட்டை மிகவும் அத்தியாவசியமானது.
மத்திய மாகாண சபைத் தேர்தலில் வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை நிரூபிப்பதில் நிலவிய சிக்கல்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டுள்ளதாக இந்த மாகாணத்திலுள்ள மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள்  தெரிவித்துள்ளனர்.
தேர்தலில் வாக்களிப்பதற்கு அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய மாகாணத்தில் வாக்காளர்கள் அநேகருக்கு தேசிய அடையாள அட்டை இல்லையெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்தப் பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர்கள் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக தேசிய அடையாள அட்டைகள் 1200 கிடைக்கப் பெற்று அவை உரியவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், 11 ஆயிரம் தற்காலிக அடையாள அட்டைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் டி.பீ.ஜீ. குமாரசிறி தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தில் சுமார் எழுபதாயிரம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லையென்று தெரிவிக்கப்பட்டாலும், அது சரியான தகவல் அல்லவென்றும் வாக்களிப்பதற்கான அடையாள அட்டை பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

ஆளடையாளத்தை நிரூபிப்பதற்கு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் அதற்குப் பதிலாக எட்டு வகையான அடையாள அட்டைகளில் ஏதாவதொன்றைக் காண்பித்து வாக்களிக்க முடியும்.

கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய அட்டை, புகையிரத பருவகாலச் சீட்டு, முதியோர் அடையாள அட்டை, அஞ்சல் அறிமுக அட்டை, மதகுருமார் அடையாள அட்டை, தோட்ட நிர்வாகங்களால் வழங்கப்படும் அடையாள அட்டை என்பவற்றில் ஏதாவதொன்றைச் சமார்ப்பித்து வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை நிரூபிக்க இயலும்.

இவை எதுவுமே இல்லாதவர்கள் கிராம சேவை அதிகாரியிடம் புகைப்படமொன்றைச் சமர்ப்பித்து தற்காலிக ஆளடையாள ஆவணமொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்திருந்தது.

எனவே அடையாள அட்டை இல்லாததால் வாக்களிக்க முடியாது என்ற பிரச்சினைக்கு இடமில்லை என்று நுவரெலியா அரச அதிபர் தெரிவித்தார்.
இதேவேளை மாத்தளை, கண்டி மாவட்டங்களிலும் அடையாள அட்டை பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாத்தளை மாவட்டத்தில் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு நாலாயிரம் தற்காலிக அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் காமினி செனவிரட்ன தெரிவித்தார்.

வாக்காளர்களின் அடையாள அட்டைகளை பரிசீலிக்க தனியான அதிகாரிகள் நியமனம்

identity-card-sri-lanka.jpgஇன்று   நடைபெற்றுக் கொண்டிருக்கும் வடமேல் மத்திய மாகாண சபைகளுக்கான வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் அடையாள அட்டைகளை பரிசீலிப்பதற்கு தனியான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. போலி அடையாள அட்டைகள் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகளில் இரகசிய இலக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்
 
தேர்தல் முடிவுகள்

வாக்களிப்பு 4 மணிக்கு முடிவுற்றதும் உடனடியாக தபால்மூல வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்படும். சகல வாக்களிப்பு நிலையங்களிலுமிருந்து வாக்குப் பெட்டிகள் வந்தடைந்ததும் இரவு 8.30 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கும். நள்ளிரவுக்குப் பின்னரே முதலாவது முடிவு வெளிவரக்கூடியதாக இருக்கும். 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகலாகும் போது அனைத்து முடிவுகளும் வெளியாகிவிடும்.

கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்களிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் விருப்பு வாக்குகள் எண்ணப்படும், விருப்பு வாக்கு முடிவுகள் திங்கட்கிழமை மாலையாகும் போதே வெளியிடக் கூடியதாக இருக்கும் எனவும் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா தெரிவித்தார் 

விசேட ஏற்பாடு

தேசம்நெற் செய்திப் பிரிவு இலங்கையிலிருந்து தேர்தல் தொடர்பான செய்திகளைத் தருவதற்கு விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

தேர்தல் ஆரம்பமாகி ஒரு மணி நேரத்துக்குள் குறிப்பிடத்தக்க தேர்தல் வன்முறைகள் ஏற்படவில்லை என்றும்,  மிகவும் அமைதியான வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.

இன்றைய தின தேர்தல் நிகழ்வுகள் தொடர்பாக முக்கிய சம்பவங்கள் இடம்பெறுமிடத்து இதை கட்டுரையில் அச்சம்பவங்கள் பின்னிணைப்பாக இணைக்கப்படும்.

பின்னிணைப்பு 01
தேர்தல் நிலை- பி.ப. 11.30

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பித்த நேரத்தில் வாக்களிப்புகள் மந்தநிலையில் காணப்பட்டாலும்கூட, சற்றுநேரத்தில் வாக்களிப்பு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதுவரை கிடைக்கும் தகவல்களின்படி மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வாக்களிப்பில் ஆரம்வம் காட்டிவருவதாகவும், வாக்களிப்புக்காக நீண்ட கியூ வரிசைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கண்டி பொலிஸ் நிலையம் தேர்தல் கண்காணிப்புத் தொடர்பான அதிகாரியொருவர் தகவல் தருகையில் காலை 11.30 வரை கண்டி மாவட்டத்தில் 20 தொடக்கம் 25 வீதத்தினர் வாக்களித்துள்ளதாக தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

பொதுவாக இதுவரை  அளிக்கப்பட்ட வாக்கு வீதம் உத்தியோகபூர்வமான கணக்கீடு எடுக்கப்படாவிட்டாலும்கூட,  சகல மாவட்டங்களிலும் 20 – 25 வீதத்தினர் வாக்களித்துள்ளதாக தெரியவருகின்றது. இதேவேகத்தில் செல்லுமிடத்து 65 முதல் 70 வீதத்தினர் இம்மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டு நான்கு மணித்தியாலங்கள் கடந்த நிலையில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய பாராதூரமாக அசம்பாவிதங்கள் எதுவும் 40 தேர்தல் தொகுதிகளிலும் பதிவாகவில்லை.  சில சிறு சம்பவங்கள் மாத்திரமே இடம்பெற்றுள்ளன. இச்சம்பவங்கள் தேர்தலை பாதிக்கக்கூடியதாக இல்லை என தெரியவருவதுடன்,  பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஹட்டன், நுவரெலியா, மஸ்கெலிய,  ஹங்குராங்கத்த, மாத்தளை, ரத்தொட, ஹேவாஹெட போன்ற பிரதேசங்களில் அடையாள அட்டை அல்லது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணணங்களின்மை காரணமாக  சிலர் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னிணைப்பு 02
குறுந்தகவல்கள் மூலம் தோதல் முடிவுகள்!

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் உத்தியோகபூர்வ முடிவுகளை மொபிட்டல் வாடிக்கையாளர்கள் குறுந்தகவல்கள் (எஸ்.எம்.எஸ்) மூலம் உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணைக்களமும் மொபிட்டல் டெலிகொம் நிறுவனமும் ஒன்றிணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவற்றை உத்தியோகபூர்வமாக வெளியிடும் உரிமை தேர்தல் ஆணையாளரால் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை 25 வானொலி நிலையங்களும் 10 தொலைக்காட்சி நிறுவனங்களும் அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்திலிருந்து உடனுக்குடன் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்தார்.

அதேவேளை, அரசாங்கத்தின் உத்தியோகபூர் இணையத்தளம் மூலம் தேர்தல் முடிவுகளை குறுந்தகவலாக உடனுக்குடன் வெளியிட மொபிட்டல் டெலிகொம் நிறுவனம் ஏற்பாடுகளைச் செயதுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னிணைப்பு 03
தேர்தல் நிலை- பி.ப. 04.30

இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு அமைதியான முறையில் 4.00 மணிக்கு நிறைவடைந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வாக்களிப்பில் ஆரம்வம் காட்டினர். சகல மாவட்டங்களிலும் ஒப்பீட்டளவில் 62 – 68 வீதத்தினர் வாக்களித்துள்ளதாக தெரியவருகின்றது.

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து குறிப்பிட்டுக் கூறக்கூடிய பாராதூரமாக அசம்பாவிதங்கள் எதுவும் 40 தேர்தல் தொகுதிகளிலும் பதிவாகவில்லை. சில சில சிறு சம்பவங்கள் மாத்திரமே இடம்பெற்றுள்ளன. இச்சம்பவங்கள் தேர்தலை பாதிக்கக்கூடியதாக இல்லை என தெரியவருவதுடன்ää பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

புதிய பாதுகாப்பு வலயத்தினுள் பெருந்தொகை மக்கள் வருகை – அமைச்சர் மஹிந்த சமரசிங்க

vanni.jpgமோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் இருந்த பொதுமக்கள் அனைவரும், அரசாங்கம் அறிவித்துள்ள புதிய பாதுகாப்பு வலயத்திற்குள் வந்து சேர்ந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதென்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

எனவே, அவர்களை படகுகள் மூலம் இலகுவாக முல்லைத்தீவுக்கு அழைத்து வந்துவிட முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஏற்கனவே, அறிவித்திருந்த பாதுகாப்பு வலயத்தை விடவும், புதிய வலயத்திற்கு சிவிலியன்கள் அதிகம் வருகை தர ஆரம்பித்துள்ளதாகக் கூறிய அமைச்சர் சமரசிங்க அவர்களை அரசாங்கக் கடடுப்பாட்டுப் பகுதிக்குக் கொண்டு வந்து தேவையான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மக்களை அழைத்து வருவதில் தொடர்ந்தும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒத்துழைப்பு நாடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, நேற்றுக் காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் கட்டுப்பாடற்ற வன்னிப் பகுதியிலிருந்து 1613 பேர், அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ளதாகக் கூறிய அமைச்சர் இது வரை 34 ஆயிரம் பேர் இவ்வாறு வந்துள்ளதாகக் கூறினார். இவர்கள் 30 ஆயிரம் பேர் வவுனியாவிலும், ஏனையோர் யாழ்ப்பாணம், ஓமந்தை மன்னார் ஆகிய இடங்களிலுள்ள இடைத்தாங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தவிர நேற்றைய தினம் 225 பேர் கிளிநொச்சிக்கு வந்துசேர்ந்துள்ளதாகக் கூறிய அமைச்சர், அவர்கள் அனைவரையும் ஓமந்தைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

நேற்று முன்தினம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் புதுமாத்தளன் பகுதியிலிருந்து திருகோணமலைக்கு 404 பேர் அழைத்துச் வரப்பட்டுள்ளனர். இவர்களுள் 351 பேர் நோயாளர்கள் என்றும் ஏனைய 53 பேர் அவர்களுடன் உதவிக்கு வந்தவர்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். நோயாளர்களுள் 137 ஆண்கள், 136 பெண்கள், 43 சிறுவர்கள் 35 சிறுமிகள் ஆகியோர் அடங்குவரெனத் தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, இரு நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கண்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

‘காந்தியின் பொருட்கள் மீளப்பெறப்பட வேண்டும்’- நாடாளுமன்ற உறுப்பினர்கள்

mohandas_gandhi.jpgசுதந்திர இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்கள், அங்கிருந்து பெறப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தியுள்ளனர்.

இந்திய அரசாங்க அமைச்சர் இதுபற்றிக் குறிப்பிடுகையில், இந்திய அரசாங்கமே இந்தப் பொருட்களை நேரில் ஏலத்தில் வாங்கி எடுக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

சுதந்திர இந்தியாவுக்கான பார்வையை தமக்கு வழங்கிய கண்ணாடிகள் என்று காந்தியினால் விபரிக்கப்பட்டு, பின்னர் இந்திய இராணுவ அதிகாரி ஒருவருக்கு காந்தியினால் வழங்கப்பட்ட மூக்குக் கண்ணாடியும் அதில் அடங்கும்.

காந்திஜி சுட்டுக்கொல்லப்பட்ட போது அவரைத்தாங்கியிருந்த அவரது பேத்திக்கு வழங்கப்பட்ட கைக்கடிகாரமும் அதில் அடங்கும் இன்னுமொரு பொருளாகும்.

இலங்கைக்கு செய்து வரும் உதவிகளை இந்தியா நிறுத்த வேண்டும்: ராமதாஸ்

போரை நிறுத்தாவிட்டால், இலங்கையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், அதற்கு முதலில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்திய நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரையின் வாயிலாக இந்திய பேரரசு அறிவித்திருக்கிறது. இலங்கையில், தமிழினப்படுகொலைக்கு காரணமான போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு இந்திய பேரரசு நடவடிக்கை வேண்டும் என்றும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் கொந்தளித்துக் குரல் எழுப்பி வருகிறார்கள். அதற்கு இப்போது ஓரளவு பலன் கிடைத்திருக்கிறது.

போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு விடுதலைபுலிகளும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தையின் மூலம் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை காண வேண்டும் என்று இந்தியா அறிவித்திருப்பதும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இந்த ஆறுதலான நிலைப்பாடு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு நிலைப்பாடாக மாற வேண்டும். போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு இலங்கை அரசு உடனடியாக செவி சாய்க்காவிட்டால், அடுத்த கட்டமாக இலங்கையில் உள்ள அனைத்து தொழில்நுட்ப உதவியாளர்களையும் இந்தியா உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்.

போரை ஊக்கப்படுத்தும் வகையில் எந்த உதவிகளையும் அளிக்க மாட்டோம் என்று எச்சரிப்பதுடன், இதுவரையில் அத்தகைய உதவிகளை அளித்து வந்திருந்தால் அவற்றையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில் உணவு மற்றும் மருந்து பொருட்களை பன்னாட்டு சேவை நிறுவனங்கள் மூலம் வழங்கவும் இந்தியா முன்வரவேண்டும். இத்தகைய ஆதரவு நடவடிக்கைகளின் மூலம் இலங்கை அரசை பணிய வைக்க முடியும். எனவே, அடுத்த கட்டமாக இத்தகைய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தமிழ் இளைஞர் (முருகதாசன்) ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக தீக்குளித்து மரணம்

murugathasan_.jpgசுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக  திடீரென நேற்று வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இளைஞர் தீக்குளித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  எனினும் இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டார்.

லண்டனில் இருந்து வந்த இந்த இளைஞரின் பெயர் முருகதாசன் எனவும் இவருக்கு 27 வயது இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர், 7 பக்கங்களுக்கு தாயக பிரச்சினை தொடர்பாக ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்துள்ளார். முருகதாசன் தீக்குளித்த இடத்தில் மலர்கள் வைத்து மக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்

நேற்று ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. சுவிஸ் தமிழ் இளையோர்களால் குறுகிய காலத்துக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஒன்றுகூடலிற்காக ஐக்கிய நாடுகள் சபை முன்றலிற்கு தமிழ் மக்கள் அணிதிரண்டனர். ஈழத்தமிழரின் இன்னலைத் தீர்க்க சர்வதேச சமூகம் தலையிடக்கோரி 12.02.2009 வியாழக்கிழமை இரவு 08.30 மணியளவில் தீக்குளித்த பிரித்தானியாவில் வசித்து வந்த ஈழத்தமிழரான முருகதாசனிற்கு தமது மலர் அஞ்சலியைச் செலுத்தினர். கட்டுப்படுத்த முடியாத உள்ளுணர்வுகளினால் ஒன்றி நிற்கும் மக்கள் காவற்துறையினரின் தடைகளையும் மீறி ஐ.நாவின் பிரதான வாசலை முற்றுகையிட்டு உள்ளே செல்வதற்கு முயற்சித்த வண்ணம் இருந்தனர். அவர்களின் உணர்விற்கு மதிப்பளித்த காவல்துறையினர் பிரதான சாலையை மூடி உதவினர். இறுதியில் முருகதாசனின் மரண சாசனம் வாசிக்கப்பட்டு நிகழ்வு நிறைபெற்றது.

swiss_13_2_09-01.jpg

முல்லைத்தீவிலிருந்து காயமடைந்த 400 பேர் கப்பல் மூலம் திருகோணமலைக்கு வருகை

ship-10022009.jpgமுல்லைத் தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து நேற்று வியாழக்கிழமையும் காயமடைந்தோர், நோயாளிகளென 400 பேர் திருகோணமலைக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் (ஐ.சி.ஆர்.சி.) வாடகைக்கு அமர்த்தப்பட்ட “கிரீன் ஓசியன்’ கப்பல் மூலமே இவர்கள் அரச கட்டுப்பாடற்ற பிரதேசமான புதுமாத்தளன் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமையும் இதே கப்பல் மூலம் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளிகள் 240 பேரும், அவர்களுக்கு உதவியாக வந்த 116 பேரும் ஐ.சி.ஆர்.சி.யின் உதவியுடன் புதுமாத்தளன் பகுதியிலிருந்து, திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். இதில் நோயாளிகளும், காயமடைந்தவர்களும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேநேரம், நேற்று மாலை கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டவர்களில் நோயாளிகள் மற்றும் காயமடைந்தோர் எத்தனை பேர் என்பது தொடர்பாக சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என ஐ.சி.ஆர்.சி.யின் கொழும்பு அலுவலக பேச்சாளர் சரசி விஜேரட்ன தெரிவித்தார். புதுமாத்தளன் பகுதியிலிருந்து நேற்றுக் கொண்டு வரப்பட்ட நோயாளிகளும், காயமடைந்தவர்களும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அதுமட்டுமல்லாது, ஐ.சி.ஆர்.சி.யினால் 160 மெத்தைகளும், மருத்துவ விநியோக உதவிகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும் சரசி விஜேரட்ன தெரிவித்தார்.

அத்துடன், புதுமாத்தளன் பகுதியில் இன்னும் நோயாளிகளும், காயமடைந்தவர்களும் இருப்பதாகவும், அவர்களையும் கப்பல் மூலம் எடுத்து வரும் ஐ.சி.ஆர்.சி.யின் பணிகள் தொடருமென்றும் சரசி விஜேரட்ன மேலும் கூறினார். இதேநேரம், திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் நேற்று முன்தினம் மட்டும் 120 பேருக்கு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. அத்துடன், மேலதிக சிகிச்சைக்காக 6 பேர் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன

எந்தவித சர்வதேச அழுத்தங்களாலும் புலிகள்மீதான போரை நிறுத்த முடியாது : -மைத்திரிபால சிறிசேன

maithiripala.jpg“எந்த வகையான உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டாலும் விடுதலைப்புலிகள் மீதான இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படவே மாட்டாது” என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து விடுதலைப்புலிகள் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டு அப்பகுதி முற்று முழுதாக அரசின் கீழ் கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுக் காலை வடமத்திய மற்றும் மத்திய மாகாணசபை தேர்தல் தொடர்பிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதி செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்