கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

சிறையில் வருண் காந்தி: மேனகாவுக்கு அனுமதி மறுப்பு

rahul.jpgமத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வருண் காந்தி சிறையில் அடைக்கப்பட்டார். தீவிரவாதிகளால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதை தொடர்ந்து, பிலிபிட் சிறையில் இருந்து இட்டா சிறைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவரை சந்திக்க அவரது தாயார் மேனகா காந்தி சென்றார். “தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருக்கும் ஒரு கைதியை வாரத்துக்கு 2 முறை மட்டுமே சந்திக்க சட்டத்தில் இடமுண்டு. அவரை ஏற்கனவே ஒரு முறை சந்தித்து விட்டதால் 8-ந் தேதிக்கு பிறகே சந்திக்க முடியும்” என்று கூறி மாவட்ட கலெக்டர் கவுரவ் தயாள் அனுமதி கொடுக்க மறுத்து விட்டார். இது பற்றி மேனகா காந்தி கூறுகையில், “இது எனக்கு இழைக்கப்பட்ட அநீதி. மாயாவதி ஒரு தாயாக இருந்தால் உணர முடியும். நியாயமற்றது, சட்ட விரோதமானது” என்று கூறினார்.

ஐ.நா.பிரதிநிதி வோல்டர் கேலன் வவுனியா விஜயம்

walterkelin.jpgஇலங்கை வந்துள்ள ஐ.நா.வின் செயலாளர் நாயகத்தின் உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களுக்கான பிரதிநிதி பேராசிரியர் வோல்டர் கேலன் இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்து வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

விசேட வவுனியா முகாம் வன்னி இராணுவ தலைமையகத்திலிருந்து செட்டிகுளம் கதிர்காமர் நிவாரண கிராமம் அருவித்தோட்டம் முகாம் ஆகியவற்றுக்கு சென்று பார்வையிட்டனர். இவருடன் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ் விஜேயசிங்க, வவுனியா அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரும் முக்கிய இராணுவ அதிபர், பொலிஸ் அதிகாரிகளும் இங்கு சென்றிருந்தனர். .

மக்களின் நிறைகுறைகள், மக்களுக்கான சேவைகள், ஏற்கனவே தங்கவைத்த மக்களுக்கு செய்யப்பட்ட வசதிகள் மேலும் செய்யப்பட வேண்டிய சேவைகள் என்பன குறித்து அனைத்து தரப்பினரிடமும் கலந்துரையாடினர். அதன் பின்னர் வன்னி இராணுவ தலைமையகத்துக்குச் சென்று இராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்தனர். வவுனியா நகரப் பகுதிகளையும், சில நலன்புரி நிலையங்களையும் விஜயம் செய்தனர்

கிளிநொச்சி முல்லைத்தீவில் 60 000 மாணவர்களில் 45 000 (75 வீதம்) மாணவர்கள் நிலை என்னவென்று தெரியவில்லை. வன்னியின் கல்விச் சமூகம் சிதறடிக்கப்பட்டு உள்ளது. : புன்னியாமீன்

students-vavuniya.jpgசுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்து அண்மைக் காலம்வரை இலங்கையில் கல்வித்துறையால் முன்னேறிய சமூகமாகவே ஈழத்தமிழ்ச் சமூகம் காணப்பட்டு வந்தது. கல்வியால் தமிழன் சாதித்தவை ஏராளம். தமிழ்ச் சமூகத்தின் எழுச்சிக்கு உந்துசக்தியாகவும், அத்திவாரமாகவும் இருந்த மூல காரணி கல்வியாகும். இதில் விவாதத்துக்கு இடமேயில்லை.

கடந்த மூன்று தசாப்தங்களாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் யுத்தநிலை காரணமாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கல்விநிலை அவ்வப்போது பாதிப்புக்களுக்கு உட்பட்டு வந்துள்ளது. ஆனாலும் யுத்த நிலைகளின் போதும் பெருமளவுக்கு கல்வி நிலையில் இழப்பு ஏற்பட்டது என்று குறிப்பிட முடியாது. ஏனெனில், இக்கால கட்டங்களில் ஏற்பட்ட சரிவுகள் ஏதோ ஒரு வகையில் சீர்செய்யப்பட்டு வந்தே உள்ளன. 1980களுக்கு முற்பட்ட கால கல்வி நிலையுடன் ஒப்பிட முடியாவிட்டாலும் கூட, சரிவின் மத்தியிலும் கல்விநிலை முழுமையாக வீழ்ந்து விடாது பேணப் பட்டுள்ளது. இருப்பினும் யுத்தநிலையின்போது கல்விக்கான அடிப்படை வசதிகள் இழக்கப்பட்டமை மாணாக்கரின் மனோ நிலையில் ஏற்பட்ட பாதிப்புக்கள் ஆரம்பகால கல்வி நிலைகளுடன் ஒப்புநோக்க தடைகளாகவே காணப்படுகின்றன.

ஆனால், இன்றைய நிலை மிகவும் நேர்மாற்றமானது. இன்று தமிழர்கள் செறிவாக வாழ்ந்து வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, கண்டாவலை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலைகளும் இயங்கவில்லை. முல்லைத் தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலைகளும், துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த துணுக்காய், ஒட்டிசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளும் இயங்கவில்லை. இதனை இன்னும் தெளிவாகக் குறிப்பிடுவதாக இருந்தால் கிளிநொச்சி, முல்லைத் தீவு நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த எந்தப் பாடசாலைகளுமே இயங்கவில்லை எனலாம். மக்களே இல்லாத நிலையிலும் யுத்தம் உக்கிரமமடைந்துள்ள நிலையிலும் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள விளையும் மக்களுக்கு கல்வியைப் பற்றி சிந்திக்க முடியாத நிலை அங்குள்ளது. உயிர் இருந்தால்தான் ஏனையவை என்ற நிலை அங்கு. மேலும், மடு, வவுனியா வடக்கு (நெடுங்கேணிக் கோட்டம்) ஆகிய கல்வி வலயங்களிலும் பாடசாலைகள் இயங்காமல் இருக்கின்றன.

இதுகாலவரை நடந்த யுத்தநிலைகளுடன் ஒப்புநோக்கும் போது இரு பிரதான மாவட்டங்களிலும் சில கல்வி வலயங்களிலும் ஒருமித்து பாடசாலை இயங்காத நிலை ஏற்படவில்லை. மேற்குறிப்பிட்ட மாவட்டங்களிலும், வலயங்களிலும் 60,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்க முடியாத பரிதாபகரமான நிலையில் உள்ளனர்.

யுத்தம் உக்கிரமமாக நடைபெற்றுவரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களில் ஒரு பகுதியினர் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள 10 இடைத்தங்கல் முகாம்களிலும், மன்னாரில் அமைக்கப் பட்டுள்ள 02 இடைத்தங்கல் முகாம்களிலும், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 13 இடைத்தங்கல் முகாம்களிலும் அறைகுறையாக பல்வேறு பிரச்சினைகள் மத்தியில் கல்வியினைத் தொடர்ந்து வருகின்றனர். யாழ்ப்பாண, மன்னார் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள இடைத் தங்கல் முகாம்களைவிட வவுனியா பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் மாணவர்கள் ஒப்பீட்டளவில் அதிகமாகக் காணப்படுகின்றனர். வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் இணைப்பு உத்தியோகத்தரும், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளருமான திருவாளர் த. மேகநாதன் அவர்களின் அறிக்கைபடி 2009 ஏப்ரல் மாதம் 01ம் திகதிவரை வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மாணவர் தொகையும், ஆசிரியர் தொகையும், அதிபர் தொகையும் கீழே தரப்பட்டுள்ளது.

01. இடைத்தங்கல் முகாம் – வ/ தமிழ் மத்திய  மகா வித்தியாலயம் –   மாணவர் தொகை 1020 – ஆசிரியர் தொகை 43 – அதிபர் தொகை 06

02. இடைத்தங்கல் முகாம் – வ/ சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம் – மாணவர் தொகை 558 – ஆசிரியர் தொகை 34 – அதிபர் தொகை 06

03. இடைத்தங்கல் முகாம் – வ/ காமினி வித்தியாலயம் – மாணவர் தொகை 379 – ஆசிரியர் தொகை 13 – அதிபர் தொகை 00

04. இடைத்தங்கல் முகாம் – வ/ பூந்தோட்டம் ம.வி – மாணவர் தொகை 395 – ஆசிரியர் தொகை 16 – அதிபர் தொகை 04

05. இடைத்தங்கல் முகாம் – வ/ கோவில்குளம் இந்துக் கல்லூரி – மாணவர் தொகை 337 – ஆசிரியர் தொகை 11 – அதிபர் தொகை 03

06. இடைத்தங்கல் முகாம் – வ/ முஸ்லிம் ம.வி – மாணவர் தொகை 394 – ஆசிரியர் தொகை 11 – அதிபர் தொகை 02

07. இடைத்தங்கல் முகாம் – வ/ நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம் –  மாணவர் தொகை 731 – ஆசிரியர் தொகை 17 – அதிபர் தொகை 02

08. இடைத்தங்கல் முகாம் – வ/ செட்டிக்குளம் ம.வி – மாணவர் தொகை 629 – ஆசிரியர் தொகை 22 – அதிபர் தொகை 02

09. இடைத்தங்கல் முகாம் – வ/ அருவித்தோட்டம் சிவானந்தா – மாணவர் தொகை 173 – ஆசிரியர் தொகை 07 – அதிபர் தொகை 01

10. இடைத்தங்கல் முகாம் – கல்வியியற் கல்லூரி – மாணவர் தொகை 1509 – ஆசிரியர் தொகை 58 – அதிபர் தொகை 14

11. இடைத்தங்கல் முகாம் – தொழில்நுட்பக் கல்லூரி – மாணவர் தொகை 818 – ஆசிரியர் தொகை 15 – அதிபர் தொகை 00

12. இடைத்தங்கல் முகாம் – பம்மைமடு வளாக விடுதி – மாணவர் தொகை 1041 – ஆசிரியர் தொகை 43 – அதிபர் தொகை 04

13. இடைத்தங்கல் முகாம் – கதிர்காமர் வித்தியாலயம் – மாணவர் தொகை 1860 – ஆசிரியர் தொகை 133 – அதிபர் தொகை 03

மொத்தம் 9844 மாணவர்களும், 423 ஆசிரியர்களும், 47 அதிபர்களும் இருக்கின்றனர். 

இந்த இடைத்தங்கல் முகாம்களின் நிலைப்பாடுகள் குறித்து வலயக் கல்விப் பணிப்பாளர் திருவாளர் த. மேகநாதன் அவர்களுடன் கலந்துரையாடிய போது பல தகவல்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தன.

வவுனியா இடைத்தங்கல் முகாம் பாடசாலைகளின் நிலைப்பாடுகள்

students-vavuniya01.jpgமேற்குறிப்பிட்ட இடைத்தங்கல் முகாம் பாடசாலைகளில் கதிர்காமர் வித்தியாலயம் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் முறைசார் கல்விமுறைக்கமைய கற்பிக்க முடியாமல் உள்ளதென தெரியவருகின்றது. விசேடமாக பெரும்பாலான இடைத்தங்கல் முகாம் பாடசாலைகளில் மாணவர்கள் நிலத்தில் அமர்ந்து கொண்டே கற்க வேண்டியிருக்கின்றது. மேலும், இடைத்தங்கல் முகாம் பாடசாலைகள் சுமார் 03 மணிநேர சுழற்சி அடிப்படையில் இயங்குகின்றன. உரிய பாடங்களுக்கான உரிய ஆசிரியர் இன்மையாலும், அடிப்படை வசதிகள் இன்மையாலும் இங்கு முறைசார் கல்வி நிலையைப் பேணுவது கடினமாகக் காணப்படுகின்றது. இதை இன்னும் தெளிவாகக் குறிப்பிடுவதாக இருந்தால் மாணவர்கள் கற்றவற்றை மறந்துவிடாமல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இங்கு பாடசாலைகள் செயல்படுகின்றனவே தவிர முழுமையான கல்வியை போதிப்பதென்பது பின்னிலையாகவே உள்ளன.

இப்பாடசாலைகளில் கற்றல் தொடர்பான செயற்பாடுகளை அவதானிக்கும்போது இட நெருக்கடி மற்றுமொரு முக்கிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. தற்போது யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் இடப்பெயர்வுக்கு உட்படுபவர்கள் தங்கவைக்கப்படுவதினால் இப்பிரச்சினை மேலும் வலுவடையக் கூடிய நிலையுள்ளது.

எல்லாவற்றையும்விட இடைத்தங்கல் முகாம் மாணவர்களின் மனோநிலை கற்றலுக்குரிய நிலைப் பாட்டினை வெளிப்படுத்தக் கூடியதாக இல்லை. உறவுகளை இழந்து, உறவுகளைப் பிரிந்து பாரிய மன அழுத்தங்களுக்கு உட்பட்ட நிலையில் இம்மாணவர்கள் காணப்படுகின்றனர்.

இம்மாணவர்களுக்காக வேண்டி அரசாங்கம் இலவச பாடநூல்களை விநியோகித்துள்ளது. அத்துடன், இலவச சீருடைகளையும் வழங்கியுள்ளது. சில முகாம்களில் மதிய உணவுத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

இம்மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு உசாத்துணை நூல்கள், அப்பியாசப் புத்தகங்கள், தைத்த உடுதுணிகள், கல்வி உபகரணங்கள் மாணவர்களின் சில அத்தியாவசிய தேவைப் பொருட்கள் போன்றவற்றை அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் ஓரளவுக்கு நிறை வேற்றுகின்றன.

ஆனாலும் இவைகள் மாணவர்களின் முழுமையான தேவைகளையும் ஈடேற்றத்தக்க வகையில் உள்ளதா என்பது கேள்விக் குறியே.

இடைத்தங்கல் முகாம்களில் கல்வி நெருக்கடிகள்

இதனை இரண்டு கோணங்களில் சிந்திக்கலாம்.

முதலாது: இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் நிரந்தரமாக கற்று வந்த மாணவர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மையினால் இப்பிரதேசத்தில் நிரந்தர மாணவர்கள் பாதிப்புக்களுக்குட்பட்டுள்ளனர். மேலும், கல்வியியற் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி போன்றவற்றில் இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமையினால் இங்கு ஏற்கனவே கல்வி கற்ற பயிற்சி ஆசிரியர்களினதும், தொழில்நுட்ப மாணவர்களினதும் கல்வி நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்.

இடைத்தங்கல் முகாம் பாடசாலைகளில் முறைசார் கல்விக்கமைய கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையினால் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய கல்விப் பாதிப்புகள்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் மாணாக்களின் கல்வி சார் நடவடிக்கைகளை அளவிடக்கூடிய அளவுகோலாக மூன்று பிரதான அரசாங்க பரீட்சைகள் அமைகின்றன.

01. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை
02. க.பொ.த (சாதாரண தர) பரீட்சை
03. க.பொ.த (உயர்தர) பரீட்சை

இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மிக முக்கியமான பிரச்சினை மேற்குறிப்பிட்ட பரீட்சைகளுக்கு மாணவர்களை எவ்வாறு தயார் செய்வதென்பதாகும். புறக்கிருத்தியங்களை செயல்படுத்தக் கூடிய வாய்ப்புகளே இங்கில்லை. மறுபுறமாக கல்விசார் வெளிச்செயற் பாடுகளை அல்லது உசாத்துணை வழிகாட்டல் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை. மேற்குறிப்பிட்ட நிலைகளின் பின்னணியில் பரீட்சைகளுக்கு மாணாக்கரைத் தயார் செய்வதென்பது விசாலமான பிரச்சினையாகும்.

இந்நிலைகளை ஒப்புநோக்கும்போது  இடப் பெயர்வுகளுக்கு உட்பட்டுள்ள மாணாக்கரின் எதிர்காலம் பலமாக சிந்திக்கப்படக் கூடியதொன்றாகும்.

இது ஒருபுறமிருக்க கிளிநொச்சி; முல்லைத்தீவு மாவட்டங்களிலும், மடு வவுனியா வடக்கு கல்வி வலயங்களிலும் சுமார் 60,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்றதாகக் கூறப்படுகின்றது. இந்த 60,000 மாணவர்களுள் 20%க்கும் குறைவான மாணவர்களே வவுனியா,  மன்னார், யாழ்ப்பாணம் இடைத்தங்கல் முகாம்களில் கல்வி நடவடிக்கைகளை மேற் கொள்கின்றனர். அப்படி என்றால் மீதமான 80% பங்கு மாணவர்களின் நிலையென்ன? அவர்களில் எத்தனை பேர் உயிருடனிருக்கின்றார்கள்? அவர்கள் எங்கிருக்கின்றார்கள்? யுத்தப் பிரதேசத்தில் எத்தனை மாணவர்கள் இருக்கின்றார்கள்? போன்ற வினாக்களுக்கு விடை காண்பதென்பது தற்போதைய சூழ்நிலையில் இயலாததே.

இத்தகைய நிலைகளைப் பார்க்கும்போது யுத்தம் இடைநிறுத்தப்பட்டாலும் சரி, யுத்தம் முடிவுக்கு வந்தாலும் சரி. ஏற்பட்டுள்ள கல்வி இடைவெளியை நிரப்ப பல தசாப்தங்கள் போராட வேண்டியிருக்கும்.

எனவே, ஏற்பட்டு வரும் கல்வி இடைவெளியை ஓரளவாவது சீர்செய்ய எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றோம். குறைந்த பட்சம் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மாணவர்களுக்காவது முறைசார் கல்விக்கான வழிமுறைகளை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த முடியுமா?

அரசாங்கப் பரீட்சைகளை எதிர்நோக்கவுள்ள மாணவர்களை கல்விசார் நடவடிக்கைகளை ஊக்குவிக்க எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

மேற்குறிப்பிட்ட இரு வினாக்களுக்கும் விடை காண வேண்டியது காலத்தின் தேவையாகும்.

யுத்தம் பலவழிகளிலும், பல துறைகளிலும் பாரிய பின்னடைவுகளையும், பாரிய இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளதை யாருக்கும் மறுக்க முடியாது. இந்த இழப்புகளுடன் ஒப்புநோக்கும்போது கல்வித்துறை  இழப்பு என்பது ஒரு சிறு விடயம்தான். ஆனாலும் ஒரு சமூக எழுச்சிக்கான வித்தினையிடும் அத்திவாரமென்பதை யாராலும் மறுக்க முடியாது.                              

கருணாநிதிக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்திடமிருந்து அச்சுறுத்தல் கடிதம்

karunanithi.jpgதமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கு தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் பெயரில் அச்சுறுத்தல் விடுத்து மர்மக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை நகர காவற்துறை ஆணையாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதிக்குத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய மத்திய அரசின் உள்துறையிடமிருந்து ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு ‘இசெட் பிளஸ்’ அளவுகோலின்படி பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 3ஆந் திகதியன்று முதல்வரின் கோபாலபுர இல்ல முகவரிக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சின்னம் அச்சடிக்கப்பட்ட தாளில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை மாநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

மலேஷியாவில் புதிய பிரதமர் பதவியேற்பு

najib-razak.jpgமலேஷி யாவின் புதிய பிரதமராக நஜீப் ரஸாக் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.  மலேஷிய நாடும் அதன் ஆளும் கட்சியும் மிகப் பெரும் சவால்களை எதிர்நோக்கும் இந்த நேரத்தில் புதிய ஆட்சித் தலைவராக ரஸாக் பொறுப்பேற்கிறார்.

மலேஷியாவின் பொருளாதாரம் இவ்வாண்டு சுருக்கம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஸாக் இப்போது வழிநடத்தும் ஐக்கிய மலாய் கட்சி நாடாளுமன்றத்தில் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கடந்த ஆண்டில் இழந்தது.

இதன் விளைவாக அப்போதைய பிரதமர் அப்துல்லா பதாவி ராஜினாமா செய்து வெளியேற நேரிட்டது. புதிய பிரதமர் ரஸாக்கின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பலவும் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால் அவர் அக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

கப்பலில் புல்மோட்டைவந்த மக்கள் விடுதலைப் புலிகள் மீது புகார் – பிபிசி தகவல்

taking-to-green-ocean.jpg புல்மோட்டையில் கரையிறக்கப்படும் தமிழ் அகதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள புதுமாத்தளன் பகுதியில் இருந்து கப்பல் மூலமாக வெள்ளியன்று 480 பேர் புல்மோட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். இவ்வாறு கப்பலில் கொண்டுவரப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கும் மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்ல புலிகள் அனுமதி மறுப்பதாகவும், 14 வயதுடைய சிறுவர்களைக் கூட தமது படையணியில் அவர்கள் கட்டாயமாகச் சேர்ப்பதாகவும் புல்மோட்டைக்கு வந்த சிலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குறுகிய பிரதேசத்தில் ஷெல் தாக்குதல்கள் அதிகம் இடம்பெறுவதாகத் தெரிவித்த ஒருவர், அங்கு தண்ணீருக்கு கடும் கட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் ஒரே வீட்டில் இருந்து கூட நான்கு-ஐந்து பேர் என்று பிடித்துச் செல்வதால், சிறார்களை வெளியே அனுப்பவே பயப்பட வேண்டிய சூழல் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர மக்கள் விரும்பினாலும் புலிகள் அதை அனுமதிப்பதில்லை என்று நம்மிடம் கூறிய ஒரு பெண்மணி, தப்பி வர முற்படும் மக்கள் மீது புலிகள் சுடுகின்றனர் என்றும் கூறினார். இதற்கிடையே, புதுமாத்தளன் பகுதியிலிருந்து 2 இயந்திரப் படகுகளின் மூலம் எவ்வித வழித்துணையும் இன்றி 21 பேர் புல்மோட்டையை வந்தடைந்துள்ளனர்.

கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுக்கிறது. இதனைத் தொடர்ந்து இவர்களை வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்வும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உலக பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஜி20 மாநாட்டில் நடவடிக்கை

g-20.jpgலண்டனில் ஆரம்பமாகியுள்ள ஜி 20 உச்சி மாநாட்டின் 2ஆம் நாள் அமர்வுகளின் போது, உலக நாடுகளின் தலைவர்கள் சர்வதேச பொருளாதர நெருக்கடிக்கு முகம் கொடுப்பது தொடர்பில் பல்வேறு தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்துக்கான பணத்தை அதிகரிப்பது, நிதி கண்காணிப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட நெருக்கடியைச் சமாளிக்கும் பிரச்சினைகள் குறித்து லந்துகொண்ட தலைவர்கள் கலந்துரையாடியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பல இன்னல்களில் சிக்கியுள்ள நாடுகளுக்கு உதவி செய்யும் பொருட்டு, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட நாணய நிறுவனங்களுக்கு 750 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க 20 நாடுகள் குழுவின் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.மேலும் 25 பில்லியன் டி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சிறப்பு நிதியுதவி, உறுப்பு நாடுகளுக்கு அளிக்கப்படும் என்று பிரிட்டன் தலைமையமைச்சர் கோர்டன் பிரவுண் தெரிவித்துள்ளார். செல்வாக்கு வாய்ந்த அனைத்து நிதி நிறுவனங்கள், நிதி உற்பத்தி பொருட்கள் மற்றும் சந்தைகள் மீது, கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். புதிய நிதி ஆணையத்தை உருவாக்கி, சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து, உலக பொருளாதாரம் மற்றும் சந்தையின் அபாயத்தையும், கண்காணிக்க வேண்டும் என்று தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிகின்றன. 

இப்போதைக்கு பாகிஸ்தானில் கிரிக்கெட் இல்லை – ஐ.சி.சி. அறிவிப்பு

icc-logo.jpgபாகிஸ் தானில் இப்போதைக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்க வாய்ப்பு இல்லை என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது. லாகூரில் கடந்த மாதம் 3 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கட் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் டேவிட் மொர்கன் வெலிங்டனில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

லாகூரில் நடந்த சம்பவம் பாகிஸ்தான் மக்களுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்போதைக்கு பாகிஸ்தõனுக்கு கிரிக்கெட் அணிகளையோ அதிகாரிகளையோ அனுப்ப முடியாது. அங்கு பாதுகாப்பு விடயத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டால்தான் கிரிக்கெட் அணிகளை அனுப்புவது பற்றி பரிசீலனை செய்ய முடியும் என்றார்

முல்லைத்தீவு மாவட்ட பிரதி சுகாதார பணிப்பாளர் வரதராஜா பணி இடைநிறுத்தம்

dr-varatharajah.jpgமுல்லைத் தீவு மாவட்ட பிரதி சுகாதாரப் பணிப்பாளர் வரதராஜா தனது பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெயாந்த மக்கள் தொடர்பான தவறான தகவல்களை வழங்கியதனையடுத்தே இவர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.  இந்த உத்தரவை சுகாதார அமைச்சு பிறப்பித்துள்ளது.

அண்மைக்காலமாக இவரால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பினனரே இவரைப் பணியிலிருந்து இடை நிறுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பிரதிச் சுகதார சேவைகள் பணிப்பாளர் முல்லைத்தீவில் மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தொடர்பான தகவல்களை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கி வந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது

புலிகளின் சார்ள்ஸ் அன்டனி படையின் முக்கிய இரு தலைவர்கள் பலி – பாதுகாப்பு அமைச்சு தகவல்

புலிகளின் சார்ள்ஸ் அன்டனி படைப் பிரிவுத் தலைவர் அமுதாப் மற்றும் அதன் முன்னாள் தலைவர் கோபித் ஆகிய இருவரும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களின்போது கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

படையினரின் தாக்குதலில் இவ்விருவரும் கொல்லப்பட்டதை புலிகளின் பிடியிலிருந்து தப்பி நேற்று இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்த பொதுமக்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். புலிகளிடம் தற்போது எஞ்சியுள்ள கனிஷ்ட மற்றும் நடுத்தர படைப் பிரிவுகளைச் சேர்ந்தோர் புலிகளின் படைப் பலத்தில் நம்பிக்கையிழந்துள்ளதோடு இராணுவத்தினரிடம் சரணடைவதற்கும் தஞ்சம் கோருவதற்கும் திட்டமிட்டு வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அமுதாபின் இடத்துக்கு கோபித் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.