கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

மிருக வெறிகொண்டு ராணுவம் தாக்குகிறது:கருணாநிதி தைரியமான முடிவெடுக்காதது வேதனை அளிக்கிறது: ஜெயலலிதா.

jayalalitha.jpgஇலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ‘’இலங்கையில் பாதுகாப்பு வளையத்தில் சிக்கி இருக்கும் தமிழர்கள் அனைவரையும் இலங்கை ராணுவம் மிருக வெறி கொண்டு தாக்கி வருகிறது. தப்பி ஓடுபவர்களை எல்லாம் இலங்கை ராணுவம் விரட்டி அடித்துக் கொள்கிறது.

அங்கே தமிழ் இனமே அழிந்து கொண்டிருப்பதாக கவலை தரும் செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற இனப் படுகொலை உலகத்தில் எங்குமே நிகழ்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் முதல்வர் கருணாநிதி தெளிவான முடிவை, தைரியமாக எடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள். பல நாடுகளில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால் கருணாநிதி உடனடி நடவடிக்கை எதையும் எடுக்காமல், நிமிடத்திற்கு ஒரு பேச்சு பேசிக் கொண்டிருக்கிறார். மீண்டும் மீண்டும் தந்தி கொடுப்பதுதான் கருணாநிதிக்கு தெரிந்த ஒரே தீர்வு போலும்.

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்த நிமிடத்தில் நமது ஒரே முழக்கம். அதற்கு அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அதை இந்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். அதற்கு தமிழக முதலமைச்சரின் பங்கு என்ன என்பதுதான் எல்லோரும் கேட்கும் கேள்வி.

இந்த நேரத்திலாவது கருணாநிதி ஒரு முதலமைச்சராக செயல்பட்டு மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். எஞ்சியுள்ள தமிழர்களை காப்பாற்ற முன்வர வேண்டும். இல்லையெனில் வரலாறு எப்படி அவரை மன்னிக்கும்? ’’என ஜெயலலிதா கூறியுள்ளார்.

பிரபாகரன் மீது தனிப்பட்ட வெறுப்பில்லை: பிரியங்கா

23-priyanka.jpgராஜீவ் காந்தி படுகொலைக்காக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை அரசியல் ரீதியாக தண்டிக்க வேண்டும். அதேசமயம், அவர் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வெறுப்பும் இல்லை என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் பிரியங்கா காந்தி இவ்வாறு கூறியுள்ளார்.

சிஎன்என்: மக்கள் உங்களை இந்திரா காந்தியாக பார்க்கிறார்கள்..

பிரியங்கா: மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

சிஎன்என்: நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள்..

பிரியங்கா: எப்போதும் பிரியங்காவாகவே இருக்க விரும்புகிறேன்.

சிஎன்என்: உங்களுக்குள் உங்கள் தந்தை ராஜீவ் காந்தியின் சாயல் இருப்பதாக நினைக்கிறீர்களா..

பிரியங்கா: அவர் எனது தந்தை. இந்திரா காந்தி எனது பாட்டி. அவர்களுடைய பாதிப்பு எனக்குள் இருக்கிறது. இருப்பினும் அவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு தனியான மனுஷியாக காணப்பட விரும்புகிறேன்.

சிஎன்என்:உங்களது குருவாக யாரை நினைக்கிறீர்கள்.

பிரியங்கா: எனது குடும்பத்தில், எனது தாயார் உள்பட மூன்று காந்தியுமே எனக்கு குருக்கள்தான்.

சிஎன்என்: உங்களது குடும்பத்தினரைத் தவிர வேறு யாரை உதாரண புருஷராக நினைக்கிறீர்கள்..

பிரியங்கா: மகாத்மா காந்தி.

சிஎன்என்: அதனால்தான் நளினியை மன்னிக்கும் மனப்பக்குவம் கிடைத்ததா..

பிரியங்கா: நளினியும், நானும் மனிதர்கள். மனித குலத்தின் இயல்பே, ஒருவரை ஒருவர் மன்னிப்பதுதான்.

சிஎன்என்: பிரபாகரன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்?

பிரியங்கா: இது ஒரு தனிப்பட்ட, அரசியல் பிரச்சினை. அதை நான் அரசியல் ரீதியாக அனுக விரும்புகிறேன். இந்தியாவின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்டார். எனவே அந்த கோணத்தில் பார்த்தால், பிரபாகரனை மன்னிக்க முடியாது. ஆனால் மனிதாபிமான கோணத்தில் பார்த்தால், அவர் மீது எனக்கு எந்தவிதமான வெறுப்புணர்ச்சியும் இல்லை. அவருக்கு எதிராக கோபமோ, துவேஷமோ இல்லை, நிச்சயமாக இல்லை.

சிஎன்என்: கருணாநிதி போன்ற காங்கிரஸ் கூட்டணித் தலைவர்கள், பிரபாகரனுக்கு ஆதரவாக பேசியுள்ளனரே..

பிரியங்கா: தான் பேசியதை கருணாநிதி வாபஸ் பெற்று விட்டாரே..

சிஎன்என்: கருணாநிதியின் பேச்சை சோனியா காந்தி உள்ளிட்ட குடும்பத்தினர் கண்டிக்க வேண்டும் என ஜெயலலிதா கூறியுள்ளாரே..

பிரியங்கா: இது அரசியல் பிரச்சினை. அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

சிஎன்என்: ராஜீவ் அரசியலுக்கு வந்ததை சோனியா விரும்பவி்லை. சோனியா அரசியலுக்கு வந்தபோது காங்கிரஸ் கட்சி ஸ்திரமற்ற நிலையில் இருந்தது. நீங்களும் அதேபோன்ற சூழலில்தான் அரசியலுக்கு வருவீர்களா..

பிரியங்கா: அப்படியெல்லாம் இல்லை. நான் சற்று வித்தியாசமான பெண். எனக்கு எப்போது வர வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதுதான் வருவேன் என்றார் பிரியங்கா.

சிவிலியன்கள் வெளியேற்றப்பட்டமைக்கு ஐ.நா. செயலாளர் பாராட்டு!

ban_ki-moon_.jpgபுலிகளின் பிடியிலிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களைப் படையினர் வெளியேற்றியதை தான் பாராட்டுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா. செயலாளரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், பாதுகாப்பு வலயத்திலிருந்து பொதுமக்கள் தப்பி வருவதைத் தடுப்பதற்கு புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு வலயத்தினுள் நேற்று படையினர் உட்பிரவேசித்ததையடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கைக்கு இறுதி கெடு விதிக்க கருணாநிதி கோரிக்கை

karunanithi.jpgஇலங் கையில் போர் நிறுத்தம் செய்ய இறுதிக் கெடு விதிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி மறுபடியும் ஒரு தந்தி அனுப்பியுள்ளார். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யாவிட்டால் அந்த நாட்டுடனான தூதரக உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று கூறி சமீபத்தில் பிரதமர் உள்ளிட்டோருக்கு முதல்வர் கருணாநிதி தந்தி அடித்தார்.

இந்த நிலையில் இன்று இன்னொரு தந்தி அடித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது…

இலங்கையில் போர் நிலைமை மிக கொடூரமாக உள்ளது. தமிழர்கள் மோசமான நிலையில் சிக்கி உள்ளனர். இது பெரும் கவலை அளிக்கிறது. ஐக்கிய நாட்டு சபையும்,அனைத்து நாடுகளும், இலங்கை அரசை உடனே போரை நிறுத்தும்படி வற்புறுத்தி உள்ளனர்.

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தும்படியும், நிரந்தர போர் நிறுத்தம் செய்யும்படியும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் இலங்கை அரசுக்கு இறுதி கெடு விதிக்க வேண்டும். லட்சக்கணக்கான தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

புலிகள் 24 மணிநேர காலக்கெடுவை பயன்படுத்தவில்லை – படை நடவடிக்கைகள் தொடர்வதாக பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

army-attack.jpgஎல்.ரீ.ரீ.ஈ. இயக்கத் தலைவர் பிரபாகரனும் அவரது சகாக்களும் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வழங்கப்பட்ட 24 மணி நேர காலக்கெடு இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது.

பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்களும் ஏனைய எல்.ரீ.ரீ.ஈ. இயக்க உறுப்பினர்களும் உடனடியாக சரணடைய வேண்டும் என அரசாங்கம் நேற்று இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. அரசாங்கம் வழங்கிய இந்த இறுதிச் சந்தர்ப்பத்தையும் புலிகள் ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தத் தவறிவிட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கான படை நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுமென இராணுவம் அறிவித்துள்ளது.

புதுமாத்தளன் மற்றும் அம்பலவான்பொக்கனை ஆகிய இடங்களில் தமது நிலையைப் பலப்படுத்தியுள்ள இராணுவத்தினர் தொடர்ந்தும் முன்னேறி வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை 49 ஆயிரமாக அதிகரிப்பு!

civiling_flee_vanni_01.pngபாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் இருந்து படையினரால் மீட்கப்பட்ட  பொது மக்களில் எண்ணிக்கை இப்போது 49058 ஆக உயர்ந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. இவர்களில் 41000 பேர்  இராணுவத்தின் 58வது படைப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர். கடல் மார்க்கமாக வந்த ஏனையோரை கடற்படையினர் மீட்டுள்ளனர் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இன்றும் போராட்டங்கள் தொடர்கிறது! நேற்று பாரிஸில் 210 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது! : த ஜெயபாலன்

Protest_London_20Apr09இலங்கை அரச படைகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் ஊடுருவிக் கொண்டிருக்க பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மிகவும் உணர்ச்சிகரமான போராட்டங்களில் குதித்துக் கொண்டு உள்ளனர். குறைந்தது கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மரணத்தின் விளிம்பில் இருந்து 30000க்கும் மேற்பட்ட மக்கள் எதிர்காலம் எப்படி இருக்குமோ இப்போதைக்கு உயிரைக் காப்பாற்றிக் கொள்வோம் என்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துகொண்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் புலிகளின் வசமுள்ள இறுதிப் பத்திற்கும் சற்று அதிகமான கிலோ மீற்றர் நிலப்பரப்பும் அரச படைகளின் கட்டுப்பாட்டிற்று வந்தவிடும் என படைத்தரப்பு தெரிவிக்கின்றது.

பெரும்பாலும் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைவிட்டு வெளியேறும் போது புலிகள் அரச படைகளுடன் நேருக்கு நேரான மோதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நேற்றைய யுத்தத்திலும் புலி ஆதரவு ஊடகங்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 1500 வரை இருக்கும் என செய்திகளை வெளியிட்டு உள்ளனர். இச்செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன. இழப்புக்கள் பற்றிய செய்திகள் புலம்பெயர் தமிழ் மக்களை மிகவும் உணர்ச்சிகரமாக வைத்துள்ளது.

ஏப்ரல் 5ல் புலிகளின் முக்கிய தளபதிகள் முக்கிய போராளிகள் இழக்கப்பட்டு தலைவர் வே பிரபாகரன் காப்பாற்றப்பட்டார். ஆயினும் புலிகளின் தலைமையை ஆபத்து நெருங்கியதை அடுத்து மேற்கு நாடுகள் முழுவதும் போராட்டங்கள் முடக்கிவிடப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டங்களும் முடக்கிவிடப்பட்டது.

இப்போராட்டங்களின் மையமாக பிரித்தானியாவின் இதயப்பகுதியான வெஸ்ற்மினிஸ்ரர் மாறியுள்ளது. இங்கு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் 15வது நாளாகத் தனது போராட்டத்தை தொடர்கிறார். இவரது நிலை கவலைக்குரியதாக இருக்கையில் நேற்றுக் காலை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து சந்தித்து போராட்டதை முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற நிலை அதற்கு முதல்நாள் இருந்தது. ஆனால் இலங்கை இராணுவம் புலிகளின் இறுதியாக உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் முன்னேறி மக்கள் வெளியேறுவதற்கான பாதையை திறந்ததை அடுத்து போராட்டம் மேலும் உணர்ச்சிகரமாக மாறியுள்ளது. நேற்றுமாலை வெஸ்ற்மினிஸ்ரர் பகுதியைச் சுற்றிய போக்குவரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டன. நூற்றுக்கணக்கில் பொலாசாரைக் கொண்டு வந்து இறக்கி வீதிகளை போக்குவரத்திற்கு அனுமதிக்க எடுத்த முயற்சி ஆயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்திற்கு முன்னால் பலனளிக்கவில்லை. சிலர் பாய்களைக் கொண்டு வந்து வீதியில் விரித்து படுத்தும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஏற்கனவே ஜி20 மாநாட்டை ஒட்டி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கையை எடுத்த பொலிசார் அதில் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் மரணமானது தொடர்பிலும் அவர்களது நடவடிக்கை தொடர்பிலும் மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளனர். அவ்வாறான மற்றுமொரு நடவடிக்கையை மேற்கொள்ள பொலிசார் துணியவில்லை. மேலும் ஆர்ப்பாட்டக் காரர்கள் யாரும் வன்முறை நோக்கோடு செயற்படாததால் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் முரண்பாடுகள் எழவில்லை. ஆனால் நாளையும் பிரித்தானியாவின் இதயப்பகுதியின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டால் அப்பகுதியின் சகஜநிலை பாதிக்கப்படும். பொருளாதார மையத்தில் மிகுந்த பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இப்போராட்டம் அப்பகுதியின் ஸ்தீரத் தன்மையைப் பாதிக்கும். மேலும் இவ்வகையான போராட்டங்களை ஏனைய சமூகங்களும் மேற்கொள்ள முற்படலாம். அது அப்பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளைப் பாதிக்கும் என்பது கூர்ந்து அவதானிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்திற்கு தடையை ஏற்படுத்தும் பட்சத்தில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் இறங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இதே போன்று பிரான்ஸில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக பிரெஞ் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆயுதக் கூட்டம் என்று விபரித்துள்ள பொலிஸ் அதிகாரி அவர்கள் போக்குவரத்தில் ஈடுபட்ட மூன்று பஸ்கள் மீதும் பொலிசார் மீதும் பொருட்களை வீசியதாகக் குற்றம்சாட்டி உள்ளார். ஒரு பொலிஸ் அலுவலர் உட்பட நான்கு பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸ் அதிகாரி ராய்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு தெரிவித்து உள்ளார்.  ஆயுதக் கூட்டம் என்பது பொதுவாக கத்தி துப்பாக்கி இருப்புக் குற்றி போன்றவற்றை வைத்துள்ளவர்களுக்கே பயன்படுத்தவது வழக்கம். ஆனால் அப்பதம் தற்போது ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பாரிஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்தை தடைசெய்ய முற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தண்ணீர் அடித்தும் அப்புறப்படுத்தினர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஸ்கூட்டர் ஒன்றுக்கு நெருப்பு வைத்ததாகவும் 3 பஸ்களினதும் இரு கார்களினதும் ஒரு லொறியினதும் முகப்புக் கண்ணாடிகளை உடைத்ததாகவும் ஏப்பி செய்தியாளர் பிரான்ஸ் 24 செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்து உள்ளார். பொலிசார் மீதும் குப்பைகளும் போத்தல்களும் எறியப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட 210 பேரை கைது செய்ததாக பிரெஞ் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவற்றுக்கிடையே இன்று கனடாவின் ஒட்டோவா நகரிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது மாணவர்கள் விதிகளை மறித்து போக்குவரத்துக்களை தடைப்படுத்தினர்.

இலங்கை அரச படைகள் தங்கள் படைகளை புலிகளின் கடைசிச் சில கிலோ மீற்றர்களுக்கள் நகர்த்த புலம்பெயர் தமிழர்கள் தங்கள் போராட்டங்கள் பலனளிக்கவில்லை என்ற விகாரத்துடன் உணர்ச்சி பொங்க தங்கள் இறுதிப் போராட்டத்தை தொடர்கின்றனர். யுத்தத்தை நிறுத்தக் கோரி யுத்தத்தின் முடிவில் இவர்கள் ஆரம்பித்த போராட்டம் புலி அலையில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இதனால் மண்ணோ மக்களோ காப்பாற்றப்படவில்லை.

புலிகளின் தலைமை இரு வாரங்களிற்கு முன்னரயே எஸ்கேப் ஆகிவிட்டது என்று உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவித்த போதும் அவர் உள்ளேயே இருக்கின்றார் என்று 24 மணிநேர காலக்கெடுவை இலங்கை அரசு அவர்களுக்கு வழங்கி உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் புலிகளின் தலைமை இப்பகுதியைவிட்டு வெளியேறி இருந்தால் இராணுவம் பாரிய தாக்குதல்கள் இன்றி முன்னேற முடியும். ஆனால் அரசு குறிப்பிடும்படி புலிகளின் தலைமை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் இருந்தால் மிக உக்கிரமமான மோதலுக்கான வாய்ப்பு உள்ளது. இன்னமும் 100000 மக்கள்வரை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் உள்ளனர். அவர்களுக்கு மத்தியிலேயே அவ்வாறான ஒரு மோதல் இடம்பெறும். இது இதுவரை சந்தித்திராத அவலதை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் தவிர்க்க முடியாதது. ( Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன் , தலையோடு வந்தது தலைப்பாகையோடு போனது. ‘தலைவர் எஸ்கேப்’ : த ஜெயபாலன் )

நான்காயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்படடும் அதனைப் போன்று இரு மடங்கினர் காயமுற்றும் நடந்த இந்த யுத்தம் அழிவைத் தவிர எதனையும் தரவில்லை. இலங்கை அரசும் புலிகளும் சர்வதேச சமூகமும் இந்த அழிவைத் தடுத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. இலங்கை அரசோ புலிகளோ காலம் காலமாக எடுத்துக் கூறப்பட்ட அரசியல் தீர்வு பற்றி அக்கறையற்று இருந்தனர். எப்போதும் இராணுவத் தீர்வு நோக்கியே அவை செயற்பட்டன. இன்றும் செயற்படுகின்றன. அதற்கு வேறுபாடின்றி இரு தரப்பும் மக்களைப் பணயம் வைத்து காய்களை நகர்த்தினர். இந்த உண்மையை கண்டுகொள்ளாத புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிகளையும் தமிழர்களையும் ஒன்றாகவே பார்த்தனர். அதனால் வன்னி மக்களின் பாதுகாப்பை இரண்டாம் பட்சத்திலேயே வைத்தனர். இவர்கள் அனைவரும் விட்ட தவறிற்காக வன்னி மக்கள் அதி உச்ச விலையச் செலுத்தினர். இந்த வலி வன்னி மக்களை வாழ்நாள் முழுவதும் தொடரும். இந்த மனித அவலத்தினை தடுக்க முடியாத வெறும் சாட்சிகளாக நாங்கள் ஆகிவிட்டோம்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம்: அத்வானி

advanil000.jpgமத்தியில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த கூட்டத்தில் அத்வானி பேசியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோடிக்கணக்கான மக்களின் கனவை மத்தியில் பா.ஜ. தலைமையில் ஆட்சி அமைந்தால் நிறைவேற்றுவோம்.

சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவதாகக் கூறி ராமர் பாலத்தை இடிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயற்சி செய்தது. சேது சமுத்திர திட்டத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கட்சியும் (அதிமுக) எதிர்ப்பு தெரிவிக்கிறது.

இந்தியாவில் இருந்து ரூ.7 லட்சம் கோடி கறுப்பு பணம் சுவிஸ் உட்பட பல வெளிநாட்டு வங்கிகளில் முடங்கியுள்ளது. பா.ஜ. ஆட்சி அமைந்தால் அந்தப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்றார்.

மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னாவில் பா.ஜ. தலைவர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ராமபிரானையே கற்பனை கதாபாத்திரம் என்று கூறி இந்துக்களை மத்திய அரசு இழிவுப்படுத்தியது. சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் இந்துக்கள் வழிபடும் ராமர் பாலத்தை இடிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. மாற்றுவழியில் இந்த திட்டத்தை நிறைவேற்றவும் மறுக்கிறது. மத்தியில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால், சேது சமுத்திர திட்டத்தை இப்போது நிறைவேற்ற முடிவு செய்துள்ள வழியில் நிறைவேற்ற விடாமல் ரத்து செய்வோம் என்றார். 

புகழ்பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் ஜெ.ஜி. பலார்ட் மரணம்

jg.jpgஉலகப் புகழ்பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் ஜெ.ஜி. பலார்ட் தனது 78 ஆவது வயதில் மரணமானார். “கிராஷ்’ மற்றும் “த எம்பயர் ஒப்த சன்’ ஆகிய நாவல்கள் மூலம் உலகப் புகழ்பெற்ற பலார்ட், பல வருட காலமாக நோயுற்ற நிலையில் மரணமடைந்துள்ளார்.

பிரித்தானியாவில் மான்செஸ்டரிலுள்ள கலிகோ பிரின்டர்ஸ் நிறுவனத்தில் இரசாயனவியலாளராக கடமையாற்றிய பலார்ட்டின் தந்தை மேற்படி நிறுவனத்தின் சீனாவிலுள்ள துணை நிறுவனமான சீன பிரின்டிங் அன்ட் பினிஷிங் கம்பனியின் தலைவராகவும் முகாமைப் பணிப்பாளராகவும் பதவியுயர்வு பெற்று சீனாவுக்கு குடும்பத்துடன் சென்றபோது அங்கு பலார்ட் பிறந்தார்.

சீனாவின் சங்காய் நகரில் பிறந்து வளர்ந்த பலார்ட் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் (தனது 12 ஆவது வயதில்) சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. இதன்போது அவர் ஜப்பானிய சிறைச்சாலையில் 3 வருடங்களைக் கழித்தார்.

சீனாவிலுள்ள ஜப்பானிய சிறைச்சாலையில் கழித்த தனது இளமைப் பருவத்தை அடிப்படையாக வைத்தே “த எம்பயர் ஒப் த சன்’ நாவலை அவர் எழுதினார். பின்னர் பிரித்தானியா திரும்பிய பலார்ட், 1960ஆம் ஆண்டு முதல் முழு நேர எழுத்தாளராக மாறினார்.

அவரது “த எம்பயர் ஒப் த சன்’ நாவலானது திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வெளியானது. அத்திரைப்படத்தை பிரபல ஹொலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பையல்பேர்க் இயக்கியிருந்தார். அதே சமயம் கார் விபத்துகளின் போதான பாலியல் நாட்டங்கள் தொடர்பில் அவர் எழுதிய “கிராஷ்’ நாவலானது டேவிட் குரொனென்பேர்க் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்தது. பலார்ட் தனது வாழ்நாளில் 15 நாவல்களையும் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.