கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

உலக கிண்ண கால்பந்தாட்டத்துக்கு வடகொரியா முதற்தடவையாக தகுதி

football.jpgவடகொரியா 43 வருட இடைவெளிக்குப்பின்னர் முதற் தடவையாக உலக கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளது. 1966 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்த அணிக்கு இந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது.

ரியாத் நகரில் மன்னர் பஹத் விளையாட்டரங்கில்; 66 ஆயிரம் பார்வையாளர்கள் மத்தியில் நேற்று நடைபெற்ற சவூதி அரேபியா அணியுடனான தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றதையடுத்து வடகொரியாவுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது.

அதன்படி 2010 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கால்பந்தாட்ட இறுதிச்சுற்றில் ஆசிய பிராந்தியம் சார்பாக விளையாட வடகொரியா தகுதி பெற்றுள்ளது. தென்கொரியா, ஜப்பான்,அவுஸ்திரேலியா ஆகியன ஆசியா சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஏனைய அணிகளாகும்.

இலங்கை அணி மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதக் குழு பிரதான அங்கத்தவர் கைது!

sl-cricket-teamattack.jpgஇலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தானில் தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதக் குழுவின் பிரதான அங்கத்தவர் ஒருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள தாலிபான் அமைப்பொன்றின் உறுப்பினரான இந்த நபர் நேற்று லாகூர் நகரில் முகம் மறைக்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொண்ட இந்த நபர்,  இத்தாக்குதலில் 7 தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் இலங்கை வீரர்களைக் கடத்திச் செல்வதே தமது இலக்காக இருந்தது என்றும் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதல் நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் தமது குழுவினர் லாகூர் நகருக்கு வந்து அங்குள்ள சிறு வீடொன்றினுள் இருந்தே தாக்குதல் திட்டங்களை வகுத்ததாக அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இலங்கை அணி கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டிருந்தபோது இலங்கை வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாகிஸ்தான் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 6 பேர் கொல்லப்பட்டதோடு இலங்கை வீரர்கள் 6 பேரும் ஒரு பயிற்றுவிப்பாளரும் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஒளி ஒலிபரப்பும் உரிமை அரச ஊடகங்களுக்கு

anura_priyadarshana_yapa_1806_press.jpgஎதிர் வரும் காலங்களில் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளி,  ஒலிபரப்பும் உரிமையை அரச ஊடகங்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், விரைவில் இலங்கையில் நடைபெறவுள்ள இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியை அரச ஊடகங்கள் ஒளி,  ஒலிபரப்புச் செய்யும்.

இலங்கை கிரிக்கட் அணியினர் ஒப்பந்தங்களை மேற்கொள்வது மற்றும் ஒப்பந்தங்களை ரத்துச் செய்வது தொடர்பான நடவடிக்கைகளை கையாளும் அதிகாரத்தை விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

‘ருவன்டி-20;’ கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று: தென்னாபிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் மோதல்

t20-world-cup.jpgஉலகக் கிண்ண ருவன்டி-20  கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதவுள்ளன. தென்னாபிரிக்க அணி இத்தொடரின் லீக் போட்டிகள் மற்றும் சுப்பர்-8சுற்றுப் போட்டிகள் அனைத்திலும் வெற்றியீட்டிய நிலையில் இன்று நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை முதல் சுற்றுக்களில் தடுமாறியபோதும் அரையிறுதி வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது. இந்நிலையில் இறுதிப் போட்டியை இலக்கு வைத்து இன்று பொறுப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தின் நட்டிங்ஹேம் நகரிலுள்ள ட்ரெட்ன்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை,  இத்தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் நாளை லண்டன்,  ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளதோடு இறுதிப் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தவிபு தலைவர் பிரபாகரன் உண்மையிலேயே வீர மரணம் எய்தி விட்டார். : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை

Pirabakaran V LTTEதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உண்மையிலேயே வீரமரணம் அடைந்துவிட்டதாக அவ்வமைப்பின் வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள அறிக்கையில் தலைவர் வே பிரபாகரன் சரணடையவோ கைது செய்யப்படவோ இல்லை என்றும் சிறிலங்காப் படையினருடனான மோதலிலே வீரச்சாவு அடைந்ததாகவும் வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் அறிவழகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் குமரன் பத்மநாதன் தலைவர் வே பிரபாகரன் வீரமரணமடைந்தாக வெளியிட்ட அறிக்கைக்கு மாறாக இவர் மே 22ல் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும் நலமாகவும் இருக்கிறார்’ என்று தெரிவித்திருந்தார். ஆனால் அதற்காக வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் தற்போது மன்னிப்புக் கேட்டு உள்ளார்.

பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ள வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் க அறிவழகன் அவருடைய மரணம் என்று நிகழ்ந்தது என்பதை குறிப்பிட்டு இருக்கவில்லை. மே 18 காலையே இவர் மரணமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மரணச் செய்தியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் கெ பத்மநாதன் ஆரம்பத்தில் மறுத்தாலும் அதனை பின்னர் உறுதிப்படுத்தி இருந்தார்.

இதுதொடர்பாக கெ பத்மநாதன் தேசம்நெற்ற்குத் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவில் இருந்த சிலர் தலைவரின் மரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகக் கூறினார். யூன் 14ல் தேசம்நெற்றுக்குத் அவர் மேலும் தெரிவிக்கையில் அவர்கள் ஒவ்வொரு திகதிகளைக் கூறி இழுத்தடித்ததாகவும் ஆனால் தாயகத்தில் உள்ள போராளிகளும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து உடனடியாக தலைவரின் வீர மரணச் செய்தியை அறிவித்தாகத் தெரிவித்தார்.

இச்செய்தியை ஜிரிவி வெளியிட்டதற்காக அதன் நிர்வாகிகளுக்கு பல கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அச்செய்தி நீக்கப்பட்டது. அச்செய்தியை வெளியிட்ட போது கெ பத்மநாதன் ஒருவாரத்தை தேசிய நினைவஞ்சலியாகக் கடைப்பிடிக்கும்படியும் கேட்டிருந்தார். அவ்வஞ்சலியும் நடைபெற்றிருக்கவில்லை.

30 வருட போராட்டத்தை முன்னெடுத்த உலகின் பலபாகங்களிலும் வியாபித்திருந்த ஒரு செல்வந்த இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்துவதற்குள்ளேயே இவ்வியக்கத்தின் உட்பூசல்களும் அதிகாரப் போட்டிகளும் வெளிப்பட்டு உள்ளது. வெளியகப் புலனாய்வுத்துறையும் சர்வதேச இணைப்பாளரும் புலிகளின் தலைவர் வீரமரணம் அடைந்ததை உறுதிப்படுத்திய போதிலும் சர்வதேசப் பிரிவிற்குப் பொறுப்பாக இருக்கும் நெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் பிரிவு இது பற்றி இன்னமும் மெளனமாகவே உள்ளனர். இவர்களிடமே சர்வதேச ரீதியில் திரட்டப்பட்ட நிதியும் ஊடகங்களும் கைவசமுள்ளதாகத் தெரியவருகிறது.

Pirabhakaran_Jothidamஇந்த சர்வதேசப் பிரிவு பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்தும் போது அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள அசையும் அசையாச் சொத்துக்கள் மற்றும் நிதி பற்றிய சர்ச்சைகள் ஏற்படும் என்பதால் அவர்கள் பிரபா இன்னமும் உயிருடன் உள்ளார் என இந்திய அரசியல்வாதிகளுடாக தெரிவித்து வருகின்றனர். இந்த தமிழகத் தலைவர்களே பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்திய, இறுதிவரை பிரபாவுடன் தொடர்பில் இருந்த கெ பத்மநாதனை தேசியத் துரோகி எனப் பட்டம் சூட்டினர். தற்போது பிரபாகரனின் சாதகப்படி அவர் 80 வயதுவரை நலமுடன் இருப்பார் என்றும் செய்தி வெளியிட்டுக் கொண்டு உள்ளனர். 2010 பிரபாவிற்குப் பொற்காலம் என்றும் இந்த ஜோதிடச் செய்தி தெரிவிக்கிறது.

பல்வேறு அரசியல் முரண்பாடுகள் விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வழிநடத்தி அதில் தனக்கிருந்த நம்பிக்கையில் தன்னையும் தனது மனைவி பிள்ளைகளையும் முழுவதுமாக இழந்த ஒரு போராளிக் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச கெளரவத்தைக்கூட தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ய மறுத்துள்ளனர்.

இன்னமும் பிரபாவின் மரணம் ஒரு கேலிக் கூத்தாக ஆக்கபட்டதற்குரிய பெரும்பான்மைப் பொறுப்பு நெடியவனின் தலைமையில் உள்ள சர்வதேச பிரிவையே சார்ந்துள்ளதாக முன்னாள் போராளிகள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். நெடியவன் சர்வதேச விவகாரங்களைக் கவனிப்பதற்காக காலம்சென்ற புலிகளின் தலைவர் வே பிரபாகரனால் அனுப்பி வைக்கபட்டதாகவும் அப்போராளிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பிரபாவின் இறுதி நாட்களில் அவருடன் ‘கெ பி அண்ணரே’ தொடர்பில் இருந்ததாகவும் அவருடைய தகவல்களே சரியானது என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அப்போராளிகள் தேசம்நெற்றுக்குத் தெரிவிக்கின்றனர்.

தற்போது இவ்வறிக்கையை வெளியிட்டுள்ள வெளியக புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் லண்டனில் வாழ்வதாக தேசம்நெற்றுக்கு தெரியவருகிறது.

._._._._._.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கீழே:

வெளியகப் பணிப் பிரிவு
புலனாய்வுத்துறை
18. 06. 2009

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம்

எம் பாசத்துக்குரிய தமிழ் பேசும் மக்களே!

எமது இயக்கத்தின் தலைவரும் பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது.

தேசியத் தலைவர் அவர்களைப் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேரச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த – தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள – எமது புலனாய்வுப் போராளிகள் வேறு துறைப் போராளிகள் மற்றும் சிறிலங்கா படைத் துறையின் உயர் பீடத்துடன் தொடர்புடைய எமது தகவலாளர்கள் ஆகியோர் தலைவர் அவர்களது வீரச்சாவினை இப்போது உறுதிப்படுத்துகின்றனர்.

கடந்த மே மாதத்தின் நடுப் பகுதியில் – 15 (வெள்ளிகிழமை) முதல் 19 ஆம் திகதி (செவ்வாய்கிழமை) வரையான காலப் பகுதியில் வன்னி – முள்ளிவாய்க்கால் களப் பிரதேசத்திலிருந்து முரண்பட்ட பல தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன. சீரான தகவல் பரிமாற்ற வசதிகள் இருக்காமையாலும் அங்கிருந்து வெளியேறிய எமது புலனாய்வுப் பேராளிகள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று சேர முடியாமல் இருந்தமையாலும் அவர்களால் அனுப்பப்பட்ட பல தகவல்கள் சிதைவடைந்த நிலையிலேயே வெளியில் கிடைத்திருந்தன. அதனால் – அப்போது கிடைத்த தகவல்களைச் சீர்ப்படுத்தி எடுத்ததன் அடிப்படையில் – எமது அன்புக்குரிய தலைவர் அவர்கள் நலமாக இருப்பதாகக் கருதியே அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட நாம் மே மாதம் 22 ஆம் நாள் தீர்மானித்தோம்.

இதே வேளை – தலைவர் அவர்களது பாதுகாப்பான இருப்பு மற்றும் நகர்வுகள் தொடர்பாக – இறுதிவரை அவருடன் கூட இருந்த தளபதிகளால் பல தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன. இவற்றின் அடிப்படையிலேயே – எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுத் துறையின் இயக்குனர் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்களும் – ஆரம்பத்தில் – இரு வேறு முரண்பட்ட செய்திகளைத் தரும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தார் என்பதையும் எம்மால் உணர முடிகின்றது.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அந்த மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை 22 ஆம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதே வேளையில் அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது.

எமது தேசியத் தலைவரின் வீரச்சாவு தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும் சரண் அடைந்ததாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் – எந்த செய்தியினையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வுத்துறையினர் ஆகிய எமக்கு உண்டு. அதனடிப்படையில் – தேசியத் தலைவர் அவர்கள் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்பதையும் அவர் சிறிலங்கா படையினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார் என்பதையும் நாம் மிகத் திடமாக உறுதிப்படுத்துகின்றோம்.

இப்போது தோன்றியுள்ள மிக உச்ச நெருக்கடியான கால கட்டத்தில் – எம் பெருந் தலைவர் அவர்கள் உருவாக்கி வளர்த்தெடுத்து நமது கைகளில் தந்து விட்டுச் சென்றுள்ள எமது விடுதலைப் போராட்டத்தை – அதே உறுதிப்பாட்டுடனும் அதே கட்டுக்கோப்புடனும் அதே ஒருங்கிணைவுடனும் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் எமது இறுதி இலட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக – தற்போது உருவாக்கப்படவுள்ள ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எம் முன்னால் உள்ள கடமையாகும்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும் அவருடன் வீரச்சாவடைந்த எமது இயக்கத்தின் போராளிகள் தளபதிகளுக்கும் வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன் இந்தப் போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை தனது அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

கதிர்காமத்தம்பி அறிவழகன்
பொறுப்பாளர்
வெளியகப் பணிப் பிரிவு
புலனாய்வுத்துறை

‘எம் மக்களை மீட்க ‘BTF ன்’ மாபெரும் (முதலைக் கண்ணீர்) போராட்டம்’ : ரி சோதிலிங்கம்

Protest_Londonமுகாம்களில் உள்ள மக்களுக்காக செய்யும் போரட்டம் அவர்களின் அவல நிலையையும் அவர்கள் திரும்பிப் போய் தமது சொந்த இடங்களில் வாழும்நிலையை உருவாக்கும் போராட்டமாக இருக்க வேண்டும். அந்த வகையில் யூன் 20ல் BTF -British Tamil Forum ஒழுங்கு செய்துள்ள பேரணி முகாம்களில் அவஸ்த்தைப்படும் மக்கள் மீண்டும் தமது வாழ்விடங்களுக்கு மீள குடியேற்ற உதவும் என்பதை நம்புவது மிகவும் கடினமாக உள்ளது.

2. கடந்த காலங்களில் பிரிஎப் (பிரித்தானிய தமிழர் பேரவை) போன்ற புலிகளின் ஆதவாளர்களால் நடாத்தப்பட்ட போராட்டங்கள் புலிகளின் அழிவுக்கும் புலிகளின் தலைவரின் படுகொலைக்கும் துணை போனது மட்டுமல்ல பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் உயிரிழப்பிற்கும் காரணமானது.

3. ‘புலிகளுக்கும் தமிழீழம் வேணும் எமக்கும் தமிழீழம் வேணும்’ என்பதால் நாம் அவர்கள் இயக்கத்தையும் அந்தக் கொடியையும் ஏற்றுக் கொண்டோம் என்று இயங்கி தமிழீழக் கோசம், பிரபாகரன் படம், புலிக்கொடியடன் நடாத்திய பேரணிகள் போல் இந்த முறையும்  பிரிஎப் புலிக்கொடி தமிழ்க் கொடி விற்று நிதி சேகரிப்பில் இறங்கினால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

4. புலிகளின் ஆதரவாளர்களால் இயக்குனர்களால் கடந்த காலங்களில் புலிகளின் பெயரால் மக்களுக்காக மக்களிடமிருந்து சேர்த்த  நிதி மோசடிகளும் தாம் போராட்டத்திற்கு உதவி செய்கிறோம் என்று போராட்த்திற்கும் துரோகம் இழைத்துள்ளதை புலிகளின் ஆதரவாளர்களால் பகிரங்கமாகவே பேசப்படும் விடயமாக உள்ளது.

5. இன்றுவரையில் உயிரிழந்த புலிப் போராளிகளுக்கும் அதன் தலைவருக்கும் அஞ்சலிக் கூட்டம் செய்யாமலும் இன்றும் புலிகள் மீண்டும் எழுவர்; 5வது தமிழீழப்போர் தொடுப்பர்; புலிக்கொடியே தேசியக் கொடி என்றும் கோசம் இட்டு முகாம்களில் உள்ள மக்களின் வாழ்வில் நிலைமைகளை மோசமாக்கும் நிலைக்குத் தள்ளிவிடுவார்கள் என்ற அச்சம் தவிர்க்க முடியாதது.

6. நாட்டில் உள்ள உண்மைச்சுற்றாடல் நிகழ்வை கவனத்தில் எடுக்காமல் புலம்பெயர் சூழலில் கனவு உலகில் தவறான முடிவுகள் எடுக்ப்பட்டு தவறாக வழிநடாத்தப்பட்டது. இதன் முடிவில் புலிகளின் தலைமையும் புலிப்போராளிகளும் அழிக்கப்பட்டனர். இந்த போராட்டங்களின் முடிவுகளின் விமர்சனங்கள் இல்லாமல் மீண்டும் ஒரு போரட்டம் நடத்துவதும் அதுவம் இவ்வளவு அவசர அவசரமாக இது நடாத்தப்படுவதும் இது புலிகளுக்குள்ளேயே நடைபெறும் குழுவாத்தின் பிரதிபலிப்புக்களா என்ற பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

7. இன்று இந்த மக்கள் முகாம்களில்  அவலநிலைக்குத் தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருப்பது கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு வவுனியா பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை புலிகளின் தலைவரையும் ஆயுதங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மனிதக் கேடயங்களாக பயன்படுத்த இழுத்துச்சென்றதே என்பதை பிரிஎப் மறந்து விடக்கூடாது. இப்படி இழுத்துச்சென்ற மக்களை புதைகுழிகளுக்குள்ளும் செல் மழைக்குள்ளும் பசி பட்டினியுடன் மரணத்தை எதிர்நோக்க வைத்ததும் புலம்பெயர் புலிகளின் தவறான வழிகாட்டலே என்பதை பிரிஎப் மறந்துவிடக்கூடாது. இன்றுள்ள வன்னி முகாம்களைவிட மிகவும் மோசமான நிலையிலேயே இந்த மக்களை புலிகளின் தலைமை வைத்திருந்ததும் இந்த மக்களை புலம் பெயர் புலிகளின் தவறான புத்திமதியில் பலிக்கடாக்களாக்கும் திட்டத்தின் தோல்வியையும் பிரிஎப் மறந்துவிடக் கூடாது.

8. இன்றுள்ள முகாம் வாழ்க்கையை புலிகளே புதுமாத்தளன் – முள்ளி வாய்க்கால் பகுதியில் ஆரம்பித்து வைத்து மக்களை மரணம் நோக்கி நடாத்தினர் என்பதையும் இந்த சம்பவங்களை பிரிஎப் புலிகளிடம் தட்டிக்கேட்கவில்லை என்பதையும் இங்கே கூறிக்கொள்வது தவிர்க்க முடியாதது.

9. அது மட்டுமல்ல இப்படியான இந்த சூழ்நிலையிலிருந்து தப்பி ஓடி வந்தவர்களை தலைவரை தனியே விட்டுவிட்டு ஓடிவந்த துரோகிகள் என்றும் இந்த துரோகிகளுக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது என்று கூறியவர்களும் பிரிஎப்  மற்றும் புலிகளின் ஆதரவாளர்களே.

10. மேலும் மேற்கூறிய இந்த துரோகப்பட்டத்தை ஏக்காளமாக தூபமிட்டு பரப்பிய ஜபிசி ஜிரிவி தீபம் போன்ற ஊடகங்கள் இன்று இவற்றுக்கு என்ன சொல்கிறார்கள்? அரசியல் சவால்களைவிட இராணுவ வெற்றிகளை தமிழீழ வெற்றியாக ஊதித் தொலைத்த இந்த ஊடகங்கள் இன்றும் உங்கள் பேரணியை ஊதித்தள்ளும்.

11. மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த மக்களின் பரிதாபத்தை துரோகம் என்று கூறிவிட்டு இன்று அதேமாதிரியான சூழ்நிலையில் ஆனால் ஓரளவு மரணபயம் இல்லாமல் வாழும் மக்களை அரசின் மனித உரிமை மீறல்கள் என்று சத்தம்போடும் பிரிஎப் ஏன் அன்று புலிகளால் இதே போன்ற கொடுமைகள் நடைபெறும் போது எதிர்த்து குரல் எழுப்பவில்லை. அப்படி குரல் எழுப்பி  தடுத்து வைக்கப்பட்டு இருந்த மக்களை விடுவிக்கும்படி புலிகளை வற்புறுத்தியிருந்தால் இந்த நிலைமை இப்படி ஏற்ப்பட்டிருக்காது.

12. இன்று புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டபின்பும் அந்தப் பிரதேசங்களில் மீளக் குடியேற்றம் செய்யாமல் எமது மக்களை இப்படியாக அடைத்து வைத்திருப்பதை மனிதாபிமானமுள்ள எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அப்படியான மனித உரிமை மீறல்களை தமிழ்பேசும் மக்கள் எதிர்த்தே வந்துள்ளனர். ஆனால் இதேமாதிரியான மனித உரிமை மீறல்களை புலிகள் செய்யும் பொது மட்டும் காரணம் கூறிய பிரிஎப் இப்போது அரசிற்கு எதிராக குரல் எழுப்புவதை வரவேற்கும் அதே வேளை தமது கடந்தகால தவறுகளையும் பகிரங்கமாக மக்களிடம் ஒத்துக்கொள்ள துணிந்து முன்வர வேண்டும்.

13. இந்த யுத்த திருவிழாவை நடாத்த பண உதவி செய்த புலம் பெயர் மக்கள் திருவிழா முடிவில் துப்பரவு வேவைகளுக்கும் செய்யவும் முன்வரவேண்டும். வன்னி நிலப் பரப்பு எங்கும் நிலக் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. புலிகளும் அதனைத் தெரிவித்துள்ளனர். ஆகவே இந்த யுத்தத்திற்கு ஆரம்பத்தில் போர் முழக்கம் இட்டவர்கள் இந்தக் கண்ணி வெடி அகற்றும் பணிக்கு உதவுவது அவசியம்.

14. இன்று வன்னி மக்களின் முகாம் வாழ்க்கையில் இலங்கை இராணுவம் பொலீசார் ஒருபக்கம் லஞ்சம் வாங்கிக்கொண்டு மக்களை வெளியே அனுமதித்துவிட்டு மக்கள் தப்பி ஓடிவிட்டனர் என்று தேடுதல் வேட்டைகள் செய்வதும் இவர்கள் காணாமல் போனோர் என தமிழர்கள் பிரச்சாரம் செய்வதும் நிகழ்கின்றது. புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் அழைத்துச் செல்லப்படும் சம்பவங்கள் நிகழ்ந்தள்ளன. நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது பற்றிய விபரங்களை அரசு வெளியிடவில்லை. இவை பற்றி சுனில் அபயசேகர போன்ற மனித உரிமைவாதிகள் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அவர்களது குரல்களைப் பலப்படுத்துவது மிக மிக அவசியம்.

15. மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் கடந்தகாலத் தவறுகள் பற்றிய விமர்சனத்தை முன்வைக்காமல் பிரிஎப் திடீரென இந்த மக்களுக்கான போராட்ட களத்தில் இறங்கியுள்ளது பலமான சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. இப்படியான போராட்டங்களை ஆரம்பிக்க முன்னர் பிரிஎப் ஒரு சுய விமர்சனத்தை முன்வைத்திருக்க வேண்டும்.

பதியுதீன் மஹ்மூத் நினைவு தின வைபவம் இன்று கொழும்பில்!

காலஞ்சென்ற முன்னாள் கல்வி அமைச்சர் காயிதே மில்லத் பதியுதீன் மஹ்மூத் அவர்களின் நினைவு தின வைபவம் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி சம்மேளன ஏற்பாட்டில் இன்று மாலை 4.00 மணிக்கு பொரளை, நகரோதய மண்டபத்தில் நடைபெறவுள்ள இவ்வைபவத்தில் சுகாதார சேவைகள் மற்றும் போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வைபவத்தில் கொழும்பு, ஆனந்தா கல்லூரியின் முன்னாள் துணை அதிபர் வண. திவ்யகஹ யஸஸ்ஸி தேரர் சமாதான சகவாழ்வுக்கு சமத்துவ சமுதாயத்தை நோக்கி.. எனும் தலைப்பில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். பதியுதீன் மஹ்மூத் நினைவாக இன்றைய வைபத்தில் உயர்கல்விப் புலமைப் பரிசில் ஒன்று வழங்கப்படவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க சர்தாரியிடம் மன்மோகன்சிங் வலியுறுத்தல்

manmohan_sardari.jpgபிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும் ரஷ்யாவில் நேற்று சந்தித்து பேசினர். அப்போது மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் கண்டிப்புடன் வலியுறுத்தினார்.
இதுபற்றி விவாதிப்பதற்காக இரு நாடுகளின் வெளியுறவு செயலாளர்களும் விரைவில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. மன்மோகன் சிங்கும், சர்தாரியும் அடுத்த மாதம் எகிப்தில் அணி சேரா நாடுகளின் மாநாடு நடைபெறும் போது மீண்டும் சந்தித்து பேச ஒப்புக் கொண்டனர்.

ரஷ்யாவின் 3வது பெரிய நகரமான யக்தரின்பர்க்கில் உள்ள “ஹயாத் ரீஜன்சி” ஓட்டலில் ஷாங்கை ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ.) மாநாடு நேற்று நடந்தது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தான் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் பார்வையாளர் நாடுகள் என்ற முறையில் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு இருந்தன.

தனியாக பேச்சு: மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியும் மாநாட்டு மண்டபத்தில் நேருக்கு நேராக சந்தித்தனர். அப்போது இரு தலைவர்களும் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இருவரும் இணைந்து நின்று போட்டோவுக்கு “போஸ்” கொடுத்தனர்.

மாநாட்டு இடைவேளையில் நேற்று மதியம் இருவரும் சந்தித்துப் பேசினர். மும்பை தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பது இதுவே முதல் தடவை.

உதவியாளர்கள் இன்றி மன்மோகன் சிங்கும், சர்தாரியும் தனியாகவே பேசினார்கள். அப்போது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை முற்றிலுமாக அழித்து இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் பகிரங்கமாகவே வற்புறுத்தினார்.

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் ஜமாத்- உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் முகமது சயீத்தை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது ஏமாற்றம் அளிப்பதாகவும், பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளை ஒடுக்க இன்னமும் நடவடிக்கை எடுக்காதது வருத்தம் தருகிறது என்றும் சர்தாரியிடம் மன்மோகன் சிங் கடுமையாக கூறினார்.

இன்னும் ஆதாரம் தேவை: பாகிஸ்தான் அதிபர் சர்தாரி பதில் அளிக்கையில், “மும்பை தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் சில தீவிரவாதிகளை பிடித்து உள்ளோம். ஆனால் இந்தியா தரப்பில் இருந்து இன்னும் அதிக ஆதாரங்கள் தேவைப்படுகின்றன” என்றார். இதற்கு இந்தியா தரப்பில் இதுவரை கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களை மன்மோகன்சிங் எடுத்துக் கூறினார்.

இதையடுத்து மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்களும் விரைவில் சந்தித்துப் பேசுவது என்றும், அடுத்த மாதம் எகிப்தில் நடைபெற உள்ள அணி சேரா நாடுகளின் மாநாட்டின் போது மன்மோகன் சிங்கும், சர்தாரியும் மீண்டும் சந்தித்துப் பேசுவது என்றும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

ஊவா மாகாண சபைத் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் இன்று ஆரம்பம்

uwa_provinces_and_districts.pngஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்  இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என  தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. இன்று ஆரம்பமாகவுள்ள வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 24ஆம் திகதி நன்பகல் 12.00 மணியுடன் முடிவடையும் என உதவித் தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி. சுமணசிறி தெரிவித்துள்ளார்.

இத்தேர்தலில்; போட்டியிடவுள்ள சுயேச்சைக் குழுக்கள் அதன் கட்டுப்பணத்தை அந்தந்த மாவட்ட செயலகங்களில் எதிர்வரும் 23ஆம் திகதி நன்பகல் 12.00 மணி வரை செலுத்த முடியும் எனவும் இது தொடர்பான வர்த்தமாணி அறிவித்தல் கடந்த 3ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

புத்தளத்தில் வசிக்கும் வட மாகாண முஸ்லிம்கள் படையினருக்கு கௌரவம் -அமைச்சர் றிஷாத் பிரதம அதிதி

rizad_baduradeen1.jpgவட மாகாணத்திலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்டு தற்போது புத்தளம் பிரதேசத்தில் வசித்து வரும் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் பாதுகாப்புப் படையினரைப் பாராட்டிக் கௌரவித்தனர். இது தொடர்பான வைபவம் அண்மையில் புத்தளம், வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றதாக  மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வைபவத்தின் பிரதம அதிதியாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துகொண்டதோடு முன்னாள் சமூக சேவைகள் பிரதி அமைச்சரும் வன்னி மாவட்ட முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.எம். அபூபக்கர்,  மன்னார் மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் உட்பட பல பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர்.

சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வட மாகாணத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் உரையாற்றுகையில், பயங்கரவாதிகளிடமிருந்து வட மாகாணத்தை முழுமையாக மீட்டெடுத்த பாதுகாப்புப் படையினரை சிங்கள மக்களைப் போலவே முஸ்லிம்களும் பாராட்டிää கௌரவித்து வருகின்றனர். வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் விரைவில் அங்கு சென்று சுதந்திரமாகக் குடியேற முடியும் எனக் கூறினார்.

இவ்வைபத்தில் பங்கேற்ற முஸ்லிம்கள் நாடு வெற்றிகொள்ளப்பட்டதையும் படையினரையும் வாழ்த்தும்  சுலோகங்களை ஏந்தியிருந்தனர் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.