கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

‘தமிழ் மக்களுடைய எதிர்ப்புணர்வு இலங்கை அரசுக்கு எதிரானதே அன்றி சிங்கள மக்களுக்கு எதிரான வன்மமாக அமையக் கூடாது’ கொமன்வெல்த் முன்பான ஆர்ப்பாட்டத் தொகுப்பு : த ஜெயபாலன்

Robin_Speech_at_the_Protestபுலம்பெயர் தமிழ் அரசியல் சூழல் மிகவும் குழப்பகரமானதாகவே இருந்து வந்துள்ளது. இன்னமும் அவ்வாறே உள்ளது. இங்கு முன்னெடுக்கப்படும் அரசியல் நடவடிக்கைகள் தாயகத்தில் உள்ள மக்களைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக அம்மக்களை தங்கள் எஜமானர்களுக்குப் பணிய வைப்பதாகவே இருந்து வந்துள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் புலி ஆதரவு அமைப்புகளானாலும் சரி, கிழக்கிலங்கை – தலித் – ஜனநாயக முன்னணிகள் போன்ற பெயரளவில் அல்லது பெயரில் மட்டும் ஜனநாயகத்தைக் கொண்டுள்ள புலி எதிர்ப்பு அமைப்புகளானாலும் சரி தாயகத்தில் உள்ள மக்களுக்கு தாங்களே குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டாலும் உண்மையில் அவர்கள் அம்மக்களின் குரல்களை இருட்டடிப்புச் செய்து தங்கள் அரசியல் நலன்களைத் தக்க வைக்கவே முயன்று வந்துள்ளனர்.

இவற்றுக்கு அப்பால் மக்கள் நலன் சார்ந்து முன்னெடுக்கபடும் போராட்டங்கள் மிக அருமையாகவே நடைபெறுகிறது. இது மிகக் குறைந்தளவினருடன் மேற்கொள்ளப்பட்ட போதும் அப்போராட்டங்கள் அரசியல் ரீதியில் தங்கள் நியாயத்தை உறுதிப்படுத்தி விடுகின்றன. அந்த வகையில் தமிழ் சொலிடாரிற்றி – தமிழ் ஒருங்கிணைப்பு அமைப்பினால் யூன் 24 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் குறிப்பிடத்தக்கது. கொமன்வெல்த் அலுவலகத்திற்கு முன் நூறுக்கும் உட்பட்டவர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சமூகங்களையும் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அதில் கலந்துகொண்ட தமிழர்களுக்கு இணையாக பிற சமூகத்தவர்களும் கலந்துகொண்டதுடன் அவர்களே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

Serra_Leading_the_Protestஒரு ரூபாயோ ஒரு பெனியோ மகிந்த ராஜபக்ச அரசுக்கு கொடுக்கப்படாது!
வழங்கப்பட்ட நிதிக்கு கணக்குகள் காட்டப்பட வேண்டும்!
வன்னியில் உள்ள முகாம்கள் உடனடியாக மூடப்பட வேண்டும்!

போன்ற கோசங்கள் அங்கு ஓங்கி ஒலித்தது. Stop Slaughter of Tamils என்ற சர்வதேசப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களே தமிழர் ஒருங்கிணைப்பு என்ற தலைப்பில் தற்போதைய போராட்டங்களை தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப முன்னெடுக்கின்றனர். பிரித்தானியாவில் உள்ள இடதுசாரி அமைப்பான Committee for Worker’s International என்ற அமைப்பே இப்போராட்டங்களின் உந்து சக்தியாகச் செயற்படுகின்றது. முக்கியமாக ‘த சோசலிஸ்ட’ பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான Sarah இப்போராட்டத்தில் முன்னின்று கோசங்களை வைத்தார். ஏனையவர்களும் ஈடுபட்டனர்.

இடையிடையே கலந்துகொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. பல்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். அவர்கள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டி அதற்காக தாங்கள் தார்மீக அடிப்படையில் குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தை சொல்லிச் சென்றனர்.

Robin_Speech_at_the_Protestகுறிப்பபாக ரொபின் என்பவரது கருத்துக்கள் தமிழ் மக்களது போராட்டங்கள் தொடர்பான மதிப்பீடாக அமைந்திருந்தது. நடந்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசு மீது மிகுந்த கண்டனத்தை தெரிவித்த ரொபின் இது சிங்கள பொது மக்களுக்கு எதிரான வன்மமாக அமையக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்தினார். இங்கு லண்டனில் சிலர் பௌத்த விகாரைக்கு தீயிட்டதையும் லோட்ஸ் மைதானத்தில் யூன் 21 அன்று இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வந்த சிங்கள இளைஞர்கள் தாக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய ரொபின் இவ்வாறான சிங்கள மக்களுக்கு எதிரான வன்மங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிங்கள மக்கள் தமிழ் மக்களுடைய எதிரிகள் அல்லர் அரசாங்கத்திற்கு எதிராகவே செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கட் போட்டியில் தமிழர்கள் சிலர் பாகிஸ்தானின் வெற்றியை எதிர்பார்த்து நின்றதையும் பாகிஸ்தானுக்காக குரல் கொடுத்ததையும் புரிந்துகொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்ட ரொபின் கடைசியாக இடம்பெற்ற யுத்தத்தில் பாகிஸ்தான் முழுமையான இராணுவ ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்கி இருந்ததையும் பாகிஸ்தான் விமான ஓட்டிகள் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டினார். உண்மையில் தமிழர்களுடைய எதிர்ப்புணர்வு பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும் அன்று அமைந்திருக்க வேண்டும் என்றும் ரொபின் கூறினார்.

இலங்கைத் தமிழ் மக்களுக்கான போராட்டம் வெறும் தமிழர்களுடைய போராட்டமாக அல்லாமல் பிற சமூகங்களையும் இணைத்து போராட வேண்டியதன் அவசியத்தை விளக்கிய ரொபின் ஏனைய ஒடுக்கபட்ட மக்களுக்காகவும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் குரல்கொடுக்க வேண்டும் என்றும் பரஸ்பரம் புரிந்துணர்வு வளர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். தமிழர்களுடைய பிரச்சினை மட்டுமல்ல பாலஸ்தீனியர்களுடைய பிரச்சினை காஸ்மீரியரின் பிரச்சினை எல்லாம் ஒரே வகையினதே என்று கூறிய ரொபின் இம்மக்களுடனும் இணைந்து போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இறுதியாகத் தெரிவித்தார்.

இலங்கை அரசும் சர்வதேச நாடுகளும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளும்வரை தங்கள் போராட்டங்கள் தொடரும் என்ற உறுதியுடன் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.

மேனன் ஓய்வு பெறுகிறார்.- அடுத்த செயலாளர் நிரூபமா ராவ்

30-nirupama-rao.jpgஇந்திய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன் ஜூலை 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அடுத்த வெளியுறவுத்துறை செயலாளராக நிரூபமா ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக இருந்து வரும் மேனனின் பதவிக்காலம் ஜூலை 31ம் தேதியுடன் முடிகிறது.

தற்போது சீனாவுக்கான இந்தியத் தூதராக நிரூபமா ராவ் இருக்கிறார். ஜூலை 31ம் தேதி முதல் நிரூபமா ராவ் புதிய பணியை ஏற்றுக் கொள்வார்.

1950ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பிறந்தவர் நிரூபமா. மகாராஷ்டிர மாநிலம் மரத்வாடா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஆங்கிலம் பயின்றார். பின்னர் 1973ம் ஆண்டு இந்திய அயலுறவுப் பணியில் இணைந்தார். 1976 முதல் 1983 வரை வியன்னா மற்றும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றினார். பின்னர் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்க் ஆபிசராக பணியாற்றினார். நேபாளத்திலும் அதே பணியை மேற்கொண்டார்.

1984 முதல் 92 வரை வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு ஆப்பிரிக்க பிரிவில் பணியாற்றினார். அதன் பின்னர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளுக்கான மையத்தில் பணியாற்றினார். அங்கு ஆசிய, பசிபிக் பாதுகாப்பு குறித்த ஆய்வை அவர் மேற்கொண்டார்.1993 முதல் 1995 வரை அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பத்திரிக்கைத் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார்.

பின்னர் 1998ம் ஆண்டு மே மாதம் வரை அவர் பெரு நாட்டுக்கான இந்தியத் தூதராக பணியாற்றினார்.மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 1998 ஜூன் முதல் 99 ஆகஸ்ட் வரை துணை தலைமை அதிகாரியாகப் பணியாற்றினார்.2001 முதல் 2002 வரை வெளியுறவுத்துறையின் இணைச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார்.

செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றிய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை இதன் மூலம் பெற்றார். செய்தித் தொடர்பாளராக இருந்தபோது பத்திரிக்கையார்களை இவர் கையாண்ட விதம் அனைவரையும் கவர்ந்தது.பின்னர் இலங்கைக்கான இந்தியத் தூதராக பணியாற்றினார். அதன் பின்னர் தற்போது சீனத் தூதராக பணியாற்றி வருகிறார். நிரூபமா ராவின் கணவர் சுதாகர் ராவ், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

முதலாவது ஆசிய இளைஞர்கள் விளையாடுப் போட்டிகள் சிங்கப்பூரில் தொடங்கின

asiangames.gifஆசிய அளவில் நடத்தப்படும் முதலாவது இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் சிங்கப்பூரில் திங்கட்கிழமை தொடங்கின.

இரு வார காலம் நடைபெறவுள்ள இந்த விளையாட்டுப் போட்டிகளில் 42 நாடுகளில் இருந்து சுமார் 1400 பேர் கலந்து கொள்கிறார்கள்.

14 முதல் 17 வயது உட்பட்டோருக்கான இந்த விளையாட்டுப் போட்டிகளில் தடகளம், நீச்சல், கால்பந்து, துப்பாக்கிச் சுடுதல், படகுப் போட்டி உட்பட பத்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தப் போட்டிகள் சிங்கப்பூரில் இளைஞர்களை விளையாட்டின்பால் கவர்திழுத்து அவர்களின் மேம்பாட்டுக்கு உதவும் என்று தாங்கள் நம்புவதாக இந்தப் போட்டிகளை நடத்தும் குழுவின் இணைத் தலைவரும் சிங்கப்பூர் விளையாட்டு ஆணையத்தின் தலைவரான உன் ஜின் டியக் தெரிவித்தார்.

குறைந்த அளவிலான செலவிலேயே இந்தப் போட்டிகள் நடைபெறுவதால் சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளும் இவற்றை நடத்த முடியும் என்பதே இதன் சிறப்பு என்றும் அவர் கூறுகிறார். ஜூலை மாதம் 7 ஆம் தேதி வரை இந்த முதலாவது ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டிகள் இடம் பெறவுள்ளன.

பெட்ரிகா உலக சாதனை

petrica.jpgபெண் களுக்கான 400 மீற்றர் பிறீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் இத்தாலியின் பெட்ரிகா பெலிகிரினி புதிய உலக சாதனை பøடத்தார்.  இத்தாலியில் நடைபெற்றுவரும் மெடிடெரனின் போட்டியில் பெட்ரிகா 400 மீற்றர் பிறீ ஸ்டைல் போட்டியை 4 நிமிடம் 0.41 வினாடிகளில் முடித்தே இந்த உலக சாதனையை படைத்தார்.

இதன்போது அவர் பிரித்தானியாவின் ஜொவான் ஜக்ஸன் படைத்திருந்த சாதனையையே முறியடித்தார். ஜக்ஸன் 400 மீற்றர் பிறீ ஸ்டைல் போட்டியை 4 நிமிடம் 0.66 வினாடிகளில் முடித்து உலக சாதனை படைத்திருந்தார்.

…….. தங்கிய ஜனாதிபதி அவர்களே! : துரை நரையன்

President_and_the_Peopleஇலங்கைத் தமிழினத்தை இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக திணறடித்துக் கொண்டிருந்த கொடிய மிருகங்களான புலிகளை முற்றாக அடித்து நொருக்கியதற்காக நானும் ஒரு தமிழன் என்ற அடிப்படையில் தங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த நன்றி தெரிவிப்பானது தாங்கள் தமிழினத்தை காப்பதற்காக தாங்கள் உள்ளத்தளவில் உணர்ந்து செயற்பட்டீர்கள் என்ற உணர்விலே என்னுள் எழவில்லை என்பதுதான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயமாகும்.

மாறாக இலங்கைத் தீவிலே வடக்கு – கிழக்கு வாழ் தமிழினத்தை இனச்செறிவின் அடிப்படையிலே அடித்து நொருக்குவதற்காகவே நீங்கள் முதற் கட்டமாக புலிகளை ஒடுக்கியிருக்கிறீர்கள் என்பதுதான் எனதுணர்வின் சிந்தனையும் உண்மையுமாகும்.

நிற்க! ‘புலிகள் வேறு தமிழினம் வேறு. புலிகளின் விருப்பும் தேவையும் வேறு! தமிழினத்தின் விருப்பும் தேவையும் வேறு!’ – இதுதான் புலிகளை அழிப்பதற்கு முன்பு உங்களின் வாதம். இப்போது உங்களுடையவாதம் என்ன என்பது எனக்கு தெரியாது தேவையும் இல்லை!

ராஜபக்ச அவர்களே! இலங்கையில் தமிழினம் நீண்ட காலமாக வெவ்வேறு வழிகளில் போராடியது ஏன்? மனநோயினாலா? அவ்வப்போது வேறுபட்ட வடிவிலான தீர்வுகள் சிங்களத் தலைமைகளுக்கும் தமிழ் தலைமைகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டு இருக்கின்றன ஏன்? இரு சாராருக்கும் இடையிலான மனநோயினாலா? 1987 ல் இலங்கை – இந்தியாவிற்கிடையில் கையொப்பம் இடப்பட்ட ஒப்பந்தம் ஏன் ஏற்பட்டது? வெறும் பொழுது போக்கு விடயமா? ஆனால் பொழுது போக்காகவே முடிந்து விட்ட வரலாற்றைத் தான் தமிழினம் கண்டது.

புலிகள் வேறு தமிழினம் வேறு என கூறிய சிங்களத் தலைமைகள் தமிழினத்திற்கான தீர்வை ஏன் முன்வைக்கிறார்கள் இல்லை? ஏன் முன்வைத்திருக்கவில்லை?  ‘புலிகள் வேறு தமிழினம் வேறு’ என கூறிய நீங்கள் தீர்வை வைப்பதற்கு ஏன் காலதாமதமாக்கினீர்கள்? ‘புலிகள் வேறு தமிழினம் வேறு’ என்றான போது தீர்வுக்கும் புலிகளுக்கும் சம்மந்தம் இல்லைத்தானே? எனவே ஏன் இன்னமும் தமிழர்களுக்கு எந்தத் தீர்வும் இன்னமும் கிடைக்கவில்லை. தமிழினத்திற்கான தீர்வு கிடைக்காதமைக்கு புலிகள் மட்டும் காரணமல்ல. அவர்களையே ஒத்த சிங்களமும் தான் அதாவது நீங்களும் தான் காரணம் என்பதே உண்மையானது.

உண்மையில் புலிகள் என்பவர்கள் கொடியவர்கள்தான் – அவர்களின் முழுதான பாசிச தவறுகள் தான் தமிழினம் விடுதலை அடைந்து விட முடியாததற்கான பிரதான காரணமாகும். ஆனால் புலிகள் ஏன் உருவானார்கள்? – எப்படி உருவாக்கப்பட்டார்கள்? – மேலும் புலிகளை தமிழ் மக்கள் ஓரளவுக்கு அவர்கள் செய்த கொடுமைகளையும் தாண்டி ஆதரித்து வந்தார்கள் என்ற உண்மை உலகறிந்தது. – நீங்களும் அறிவீர்கள். – இது ஏன் நடந்தது? – புரியவில்லையா? சிங்களப் பேரினம் அவ்வப்போது பெரிதாகவும் தொடர்ச்சியாக குறித்த இலக்குடனும் இலங்கையில் தமிழினத்தை அழித்தே தீருவது என்ற நிறுத்தப்படாத வேலைத் திட்டங்களுடன் செயற்படுவதுதான் தமிழினம் புலிகளையே ஆதரிக்க வேண்டியதற்கான பிரதான காரணமாயிருந்தது. சிங்களம் மீதும் சிங்களத் தலைமை மீதும் தமிழினத்திற்கு எவ்வாறான நம்பிக்கை ஏற்படவுமில்லை. சிங்களம் நம்பிக்கையுடன் நடந்து கொள்ளவுமில்லை என்பதே வெளிப்படையான உண்மை. இதற்கான ஆதாரங்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக இலங்கை வரலாற்றில் கொட்டிக்கிடக்கின்றன.

இதனால் இலங்கைத் தமிழினம் ஒப்பீட்டளவில் புலிகளை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அதாவது புலிகளை காட்டிலும் கொடியவர்களாக சிங்களத்தையும் சிங்களத் தலைமைகளையும் இலங்கைத் தமிழினம் கருதுமளவிற்கு நீங்கள் கொடியவர்களாக மனிதாபிமானம் அற்றவர்களாக இனவெறியர்களாக சூழ்ச்சி புரிபவர்களாக இனஅழிப்பின் மீது தீராத தாகம் கொண்டவர்களாக இருந்தீர்கள் என்பதற்கான வெளிப்படையான சாட்சியமே தமிழ் மக்கள் புலிகளை ஆதரித்தமையாகும். கடைந்தெடுத்த, ரௌடித்தனமான, தெருசண்டியன் போன்ற, பாசிச மிலேச்சதிகார, இன – ஜாதி –  மத வெறியையும்; தன்னுள் தீவிரமாக  கடைப்பிடித்த கேவலமான அமைப்பையே ஒரு மனிதக் கூட்டம் ஆதரித்ததற்கான காரணமாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் எவ்வளவு கேடு கெட்டவர்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!! – அவற்றை விவரணம் செய்வதற்கு எனக்கு வார்த்தைகள் போதாது.

இன்று பத்துலட்சத்திற்கும் மேலான தமிழ் மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி வாழ்கிறார்கள். இவ்வளவு மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் போதும் தவறினை உணர்ந்து நிலைமையை சீர் செய்ய முடியாத சிங்களத்தையும் சிங்களத் தலைமைகளையும் தமிழினம் எப்படி நம்புவது?!!

இனக்கலவரங்களை தடுக்காத சிங்களம் அதை உருவாக்கும் சிங்களம் அதனால் உருவாகும் அகதிகளை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பலேற்றினார்களே!

ஜனாதிபதி அவர்களே!

இன்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்னம் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். – சிங்கள இனத்தின் நெருக்கடியினாலேயே தவிர மன நோயினால் அல்ல. என்ன காரணங்களுக்காக தமிழ் இளைஞர்கள் தமது இனிய இள வயதுகளை இழந்து தமது அரிய உயிர்களையே முதலீடாக வைத்து போராட்டத்தை கையிலெடுத்தார்களோ அதன் காரணங்கள் – இன நெருக்கடிகள் – ஏமாற்றங்கள் அவமதிப்புக்கள் எல்லாம் தெளிவாக எதுவும் குறைவின்றி அப்படியே இருகின்றன. அதாவது தமிழினம் தனது ஆயுதப் போராட்டத்தை கைவிட வேண்டிய சூழிநிலையை ஏற்படுத்துகின்ற  நம்பிக்கையை, அதற்கான சமிக்ஞையை இதுவரைகாலும் சிங்களம் தோற்றப்படுத்தவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். மாறாக ஆயுதப் போராட்டத்தையே தனது தொழிலாக தாதாவிசமாக சுவீகரித்துக் கொண்ட பிரபாகனுடைய உலகின் உச்ச நிலைக்குரிய அடாவடித்தனங்களே, எஞ்சிய தமிழர்களை ஆயுதப் போராட்டத்தையே விட்டு ஓட்டமெடுக்கச் செய்தது – பெரும்பாலோர் புலிகளினாலேயே அழிக்கப்பட்ட பின்பு இன்று புலிகள் இல்லாத நிலையில், அன்று ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் அதனையே செய்வதற்கான சூழ்நிலைகள் மீண்டும் அப்படியே இருக்கின்றன எனும் போது என்ன நிகழப் போகின்றது என்பதை உங்ககளால் புரிந்து கொள்ள முடியாவிடில் யாராவது சாமானிய மக்களிடம் கேட்டால் புரிந்து கொள்ளலாம்.

பிரபாகரன் எவ்வாறான மிலேச்சதிகார பயமுறுத்தலை வைத்து தமிழினத்தையே அடிபணிய வைத்தாரோ அதே வழிமுறைகளையே நீங்களும் கடைப்பிடிப்பது போன்ற உணர்வே அதிகமாக தெரிகிறது. இந்த அதிகார வெறித் தோற்றப்பாடு நீண்ட காலத் தாக்குப் பிடித்தலுக்கு ஒரு போதும்; உதவப்  போவதில்லை. தமிழினத்திடம் இருந்து மட்டுமல்ல சிங்கள மக்களிடம் இருந்தே உங்கள் வெறியதிகாரத்திற்கெதிரான எழுச்சி எழுவதற்கான வாய்ப்புக்களும் மறுப்பதற்கில்லை. அதிகார வெறி உச்சத்தில் இருந்த போது பிரபாகரன் எப்படி கும்மாழமடித்தாரோ அவ்வாறே நீங்களும் கும்மாழமடிப்பது போல் தெரிகிறது – பிரபாகரனுக்கு நடந்தது உங்களுக்கு நடக்காது என ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா என்ன?

ஜனத்தின் அதிபதி அவர்களே!

புலிகள் மீதான இறுதித் தாக்குதலின் போது அகதிகளாக்கப்பட்ட சில லட்சம மக்களை  நீங்கள் நிர்வகிக்க முடியாமல் திண்டாடியதும், நிர்வாகக் கேடுகள் நிலைத்திருப்பதும் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

இந்த மக்களை ஏன் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும மட்டும்; குடியேற்ற வேண்டும்? ஏன் சிங்கள பகுதிகளில் வைத்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் எண்ணம் ஏற்படவில்லை? முடியாது. ஜனாதிபதி அவர்களே!! இதுதான் இலங்கையின் நிலவரம்!! இலங்கை தமிழ் அகதி மக்கள் இலங்கைச் சிங்களப் பகுதிகளில் பாதுகாப்பு பெற முடியும் என்பது சாத்தியமற்ற நிலையிலேயே இலங்கை நிலவரம் இருக்கிறது. சிங்களச் சிறைச் சாலைகளில் குட்டிமணி தங்கத்துரை எப்படி கொல்லப்பட்டார்களோ 58, 83 கலவர அகதிகள் எப்படி யாழ்ப்பாணம் அனுப்பபட்டார்களோ அதே நிலவரம் தான் நீறு பூத்த நெருப்பாக இன்றும் உள்ளது. இவ்வாறான இன வேறுபாடுகளே இலங்கையில் அன்றும் இன்றும் இருந்தது. இனி என்றும் இருக்கும். இந்த உதாரணமே உங்களுக்கு புரியவைத்து விடும் இரண்டு இனங்களும் ஒன்றாக வாழ்தல் கடினம் என்பது. இந்த அடிப்படைதான் தமிழினம் தனது பாதுகாப்பை தானே நிலை நிறுத்த வேண்டும் என்பதும் தன்னைக் சூழ பாதுகாப்பு வேலி (எல்லை) இடவேண்டும் என்பதுமாகும். இவை நிதர்சனமானவை. கண் கூடானவை. காலத்தால் அழிக்கப்பட முடியாத காரணிகள். இவைதான் ஒவ்வொரு தமிழனின் உள்ளக்கிடக்கைகளிலும் ஓங்கி அடித்துக் கொண்டிருக்கின்றன – தமது தாயகம் தாயகமாகவே காப்பாற்றப்பட வேண்டுமென்பது.

ஆனால் ஜனாதிபதி அவர்களே!

உங்கள் எண்ணமோ தமிழர் தாயகத்தை சிதைத்து தமிழன் செறிவை தகர்த்து, தமிழினத்தையே நாதியற்ற இனமாக்கி இல்லாதொழிக்கச் செய்யும் முயற்சியே உங்கள் செயற்பாடுகளால் உணரப்பட முடிகிறது. இதனை எந்த தமிழனும் மட்டுமல்ல எந்த நியாயமுள்ள மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். மூன்று தசாப்தங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் தேவைகளின் காரணமாகவே எழுந்தது. சிங்களக் கொடுமை ஏற்படுத்திய சூழ்நிலையின் இயல்பு வளர்ச்சியே அது. அதிதீவிர அதிகார உச்ச வெறியின் காரணமாக பிரபாகரனால் தமிழின ஆயுத விடுதலைப் போராட்டம் சீரழிக்கப்பட்டதே தவிர – மேலும் சில சந்தர்ப்பங்களில் வெற்றி நிலையை அடைந்து விட்ட சூழ்நிலைகள் கூட பிரபாகரனால் உடைக்கப்பட்டு தமிழினம் தொடர்ந்து சீரழிய வேண்டிய நிலை ஏற்பட்டதே தவிர மாறாக சிங்கள இனத்தினதோ அன்றி சிங்களத் தலைமைகளோ எந்த நல்ல காரியங்களையும் செய்து விட்டதனால் அல்ல. இந்த நீண்ட நெடிய போராட்ட காலத்தில் பிரச்சனைக்கான காரணிகளை அப்புறப்படுத்தாத சிங்கள நிர்வாகங்களே புலிகளிலும் கொடியவர்கள் என்பது தான் உண்மை. இந்த சிங்களக் கொடுமை தான் புலி போன்ற பாசிச கும்பலும் ஆதரிக்கப்படக் கூடிய (தமிழ் மக்களாலேயே) அளவுக்கு காரணியாக இருந்தனர் என்பதிலிருந்து நிலைமையை புரிந்து கொள்ளுங்கள்.

எனவே சிங்களமே! நீங்கள் தான் பிரதான தவறாக இருந்தீர்கள் – இன்றும் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதனையே ராஜபக்ச அவர்களும் வீறாக செய்வதற்கு முயற்சிக்கிறீர்கள். இந்த நிலை தொடர்ந்தால் ஒரு அடக்கப்பட்ட இனம் – அடக்கப்படுகிற இனம் என்ன செய்ததோ என்ன செய்ய வேண்டுமோ அதனையே செய்யும் என்பது இயல்பானது. நிதர்சனமானது. அதனை எந்த நிர்ப்பந்தங்களாலும் தடுத்து விட முடியாது. புலி முடிந்தவுடன் எல்லாம் முடிந்து விட்டதென்ற இறுமாப்பு உங்களிடம் இருந்தால் அது உங்கள் அறிவீனமாகவே இருக்க முடியும். அதாவது வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்ற அடிப்படையில் பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்றால் இலங்கையில் தமிழினம் மட்டுமல்ல சிங்கள இனமும் நிம்மதியாய் இருந்து விட முடியாது என்பதை சிங்களம் மட்டுமல்ல பின்னால் திரியும் தமிழர்களும் மறந்து விட வேண்டாம்.

மேலும் ஜனாதிபதி அவர்களே!

வெற்றிடமாக்கப்பட்ட தமிழர் பிரதேசமாகிய முல்லைத் தீவில் பொலிஸ் பயிற்சி நிலையம் தொடங்குவதாக அறிய முடிகின்றது – கிளிநொச்சியில் சுதந்திர வர்த்தக வலயம் அமைய இருப்பதாக அறிய முடிகின்றது. வன்னியின் சில பகுதிகள் விவசாய ஆராச்சிகளின் பரிசோதனைக் கூடமாக மாற இருப்பதாக தெரிய வருகிறது.

தமிழர் பிரதேசங்களில் உண்மையிலேயே உங்களுக்கு அன்பு இருந்தால் நன்றி! ஆனால் அவை ஒன்றும் இப்போது எமக்கு தேவையில்லை. தமிழர்களுக்கு தீர்வும் அதனூடான தமிழர் பிரதேசங்களில் தமிழர் நிர்வாகமும் தான் முதலில் தேவை.

தமிழர் பிரதேசங்களில் என்னத்தை தொடங்குவதென்பது அந்த தமிழர் நிர்வாகத்தினரின் அனுமதியுடன் தான் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற புரிந்துணர்வு உங்களுக்கு இல்லை என்றால் இலங்கையில் தமிழரும் சிங்களவரும் புரிந்துணர்வுடன் வாழலாம் என்பது வெறும் கற்பனையாகவே இருக்க முடியும். மாறாக தமிழினம் பிரிந்து செல்வதைத் தவிர வேறு வழியின்றி போய் விடும் என்பது தவிர்க்க முடியாததாகி விடும்.

ஜனாதிபதி அவர்களே!

நீங்கள் புலிகளுடனான யுத்தத்தில் வெற்றியடைந்திருக்கிறீர்கள்.  நல்லது! புலிகள் அடித்து அழிக்கப்பட்டதில் முழு உடன்பாடு உள்ளவன் நான். புலிகள் தமிழர்களின் வெற்றிகளையே தோல்விகளாக்கியவர்கள். அடித்து அழிக்கப்படத் தான் வேண்டும். இனி இருந்தாலும் தமிழினத்தை முன்னேற விடப் போவதில்லை. இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொலை செய்த காரணத்தினால் தமிழினத்தையே அனாதைகள் ஆக்கியவர்கள். அடித்து அழிக்கப்படத்தான் வேண்டும்.

ஆனால்…

அவர்களை அடிப்பதற்கு நீங்கள் யார்? அவர்கள் உருவாவதற்கே நீங்கள் தான் காரண கர்த்தாக்கள். அவர்கள் தமிழர்களாலேயே ஆதரிக்கப்படுவதற்கும் உங்கள் கொடுமைகள் தான் காரணம். புலிகள் தமிழர் போராட்டத்தின் ஒரு பகுதியினர்தான். மறு பகுதியினர் புலிகளாலேயே விரட்டப்பட்டுத் தான் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டார்களே தவிர சிங்களவர்களின் சீர்திருத்தங்களினால் அல்ல. புலிகள் சிங்கள நிர்வாகத்தினரால் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்றால் புலிகளின் நெருக்கடிகளாலேயே ஆயுதங்களை கைவிட்டவர்களும் அடிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் நீங்களோ அவர்களை மட்டும் நண்பர்களாக வைத்திருக்கிறீர்கள். ஆயுதப் போராட்டம் எழுந்ததற்கான காரணிகள் அப்படியே இருக்கின்றன. அதனடிப்படையில் நியாயமான ஆயுதப் போராட்டத்தை அந்தக் காரணிகளை அகற்ற முயற்சிக்காமல் அடித்து அழிப்பது எப்படி நியாயமாகும்.

மேலும் புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறப்புச் சிறைகளில் மறைத்து வைத்திருக்கிறீர்கள். தமிழன் போராட வேண்டிய சூழ்நிலைகளை வைத்துக் கொண்டு அதனைத் தீர்க்காமல் அதற்கெதிராக போராடியவர்களை தொடர்ந்து தண்டனை கொடுப்பது எப்படி நியாயமானது. மேலும் புலிகளின் நெருக்கடிகளால் மட்டும் போராட்டத்தைக் கைவிட்டவர்கள் சகஜமாய் வாழ முடிகிறது – ஏன் மந்திரியாகவும் இருக்க முடிகி;றது – மேலும் புலிகளிலேயே  சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தவர்கள் மந்திரிகளாகவும் கட்சியின் உப தலைமையாகவும் இருக்க முடியுமென்றால் சில வருடங்கள் மேலும் போராடியவர்கள் ஏன் சிறைகளில் வாட வேண்டும்.

எனவே சிங்களமே! மற்றும் அதன் ஜனாதிபதி அவர்களே! முதலில் பிரச்சனைக்கான தீர்வை இலங்கை – இந்திய ஒப்பந்தம் அல்லது அதற்கும் மேல் போய் தீர்வை செயற்படுத்துங்கள். அனைத்து போராட்டக் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள்.

இல்லையென்றால் இன்னொரு போராட்டம் தவிர்க்க முடியாததாகி விடும். அதை உருவாக்கியவர்களாக நீங்களே மறுபடி இருப்பீர்கள். நிம்மதியாய் இருந்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.

இலங்கைத் தமிழர்கள் தமது எதிர்கால வாழ்க்கை மீது நம்பிக்கை ஏற்படுத்தப்பபடாத சூழ்நிலை தொடருமாயின் பல சிவகுமாரன்கள்; தோன்றுவது இயற்கையானதும் தவிர்க்க முடியாததுமாகும்! ஒடுக்கு முறைக்கெதிராக கிளர்ந்தெழுவது என்பது எந்த விதமான அடக்கு முறையாலும் அடக்கப்பட்டு விட முடியாது.

அடக்கப்படும்; இனம் அமைதி காப்பதில்லை.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம்!!

பிற்சேர்க்கை – மேலும் இக்கருத்துக்களை எழுதும் நான் தமிழர்களுக்காக அடிமைத்தனமின்றி, அடங்கிப் போகும் குணமின்றி, நேர்மையாக தமிழருக்காகவே அரசியலில் ஈடுபட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளையும் ஏற்றுக் கொள்கிறேன். தமிழின விடுதலை என்பது பலவழிகளினூடு வந்து சேர்கின்ற இலக்குத் தான். எனவே அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். என்னிடம் தலைமை நோக்கமும் கட்சியும் இல்லாத காரணத்தால் இதை இலகுவாக என்னால் சொல்ல முடிகிறது.

மாறாக சமாதானம் – சுபீட்சம் – சகவாழ்வு என சொல்லிக் கொண்டும் தமது சொந்த சுபீட்சத்திற்காக கிளம்பியுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவர்களல்லர்.

தமிழ் தலைவர்கள் ஒரே தலைமையில் வருவதற்கு அவர்களது வர்க்க நலன் இடந்தராது என்பது ஒழுங்காக புரிந்து கொள்ளப்படும் காரணத்தினால் தமிழருக்கு சாதகமாக செயற்படுகிற அடிப்படையிலான அனைத்து தலைமைகளையும் ஏற்றுக் கொள்கிறேன்.

பிரித்தானிய தூதரக அதிகாரிகளை விடுவிக்குமாறு இரானிடம் பிரிட்டன் கோரிக்கை

இரானின் தலைநகரான தெஹ்ரானில் இருக்கும் பிரித்தானிய தூதரகத்தின் நான்கு ஊழியர்களை இரானிய அதிகாரிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுண் கோரியுள்ளார். இரானின் நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும் நியாயமற்றவை என்றும் கார்டன் பிரவுண் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த நால்வரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள இரானிய அரசின் பேச்சாளர், பிரிட்டிஷ் தூதரகத்தைச் சேர்ந்த ஐந்து ஊழியர்கள் விடுவிக்கப்பட்டு விட்டதாக முன்னதாக தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இரானியப் பிரஜைகள். நாட்டில் சர்ச்சைகுரிய அதிபர் தேர்தலை அடுத்து அங்கு ஏற்பட்ட கலவரங்களில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனிடையே நாட்டில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அதியுயர் சபையான கார்டியன் கவுன்சில், அங்கு பதிவான வாக்குகளில் ஒரு பகுதியை மீண்டும் எண்ணும் பணிகளை தொடங்கியுள்ளது. எதிர்கட்சித் தலைவரான மிர் ஹொசை முசவி தேர்தல்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோருகிறார்.

பிரிட்டனின் ஷரியா நீதிமன்றங்கள்

பிரிட்டனில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் 85 நீதிமன்றங்கள் இயங்குவதாகவும், அவை பிரிட்டிஷ் நீதித்துறைக்கு சவாலாக உருவெடுத்துள்ளதாகவும் சிவிட்டாஸ் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகின்றது. பிரிட்டிஷ் அரசாங்கம் 1996 இல் கொண்டுவந்த சட்டம் ஒன்றைப் பயன்படுத்தி இந்த நீதிமன்றங்கள் செயற்படுகின்றன.

ஒரு பிரச்சினை தொடர்பில் தீர்வுகாண விளையும் இரு தரப்பினரும் விரும்பும் பட்சத்தில், அவர்களுடைய பிரச்சினையில் முடிவு சொல்ல தீர்ப்பாயங்களை அந்த சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், சில முஸ்லிம் விசாரணை மன்றங்கள் அதற்கும் மேலாக அதிக தூரம் போய்விடுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

முஸ்லிம் பள்ளிவாசல்களில் இயங்கும் இத்தகைய ஷரியா நீதிமன்றங்கள், பிரிட்டிஷ் நீதி முறைமைகளுக்கு முரணாக, தனிப்பட்ட நபரின் வாழ்க்கைக்குள்ளும் தமது அதிகாரத்தை செலுத்த விளைவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

பலதார மணம், மனைவியிடம் பலவந்தமாக பாலியல் உறவு கோருவதற்கான கணவனின் உரிமை மற்றும் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாதவர்களை திருமணம் செய்யக் கூடாது என்பன போன்ற விடயங்களை வலியுறுத்தும், பிரிட்டிஷ் சட்டங்களுக்கு பொருந்தாத தீர்ப்புக்களை இந்த நீதிமன்றங்கள் வழங்குவதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.

ஜாக்சனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

maical-jak.jpgபொப் இசை உலகின் மன்னன் மைக்கல் ஜாக்சனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.மைக்கல் ஜாக்சனின் உயிர் பிரியும் நேரத்தில் அவரது உடல் வெறும் எலும்புக்கூடு போல காட்சியளித்துள்ளது. பரிசோதனையின் போது அவரது வயிற்றில் வெறும் மாத்திரைகள் மட்டுமே இருந்துள்ளன.

கடைசிக் காலத்தில் அவரது தலையில் முடிகள் இல்லை. செயற்கை அழகிற்காக ‘விக்’ பயன்படுத்தி வந்துள்ளார். அவரது இடுப்பு, தொடை மற்றும் தோள் பகுதிகளில் ஊசி குத்தப்பட்ட அடையாளங்கள் ஏராளமாக காணப்பட்டன. அவர் தினமும் 3 முறை போதைத் தன்மை உடைய வலி நிவாரண மருந்துகளை பல வருடங்களாக பயன்படுத்தி வந்துள்ளார். அதன் விளைவாக அந்த அடையாளங்கள் ஏற்பட்டுள்ளன.

அவரது உடலில் அறுவைச் சிகிச்சை தழும்புகளும் நிறையவே இருந்துள்ளன. அவர் மொத்தம் 13 முறை அழகுக்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.அவரது உடலை ஆராய்ந்ததில் அவர் ஆரோக்கியமானவராக இருந்திருக்கவில்லை என்று மருத்துவர்கள் குறிப்பிட்டு ள்ளனர். தினமும் ஒருவேளை மட்டுமே அவர் உணவு உட்கொண்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

வலி நிவாரணி ஊசிகளைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அவர் மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். அதன் மாதிரிகள் மருந்துப் பரிசோதனைக்கு அனுப்பப்ப ட்டுள்ளன. 1984ல் ஒரு விளம்பர படத்தில் நடித்த போது அவரது தலைமுடி தீப்பிடித்தது. அதன் அடையாளம் இடது காதோரம் காணப்பட்டது.

கடைசி நேரத்தில் ஜாக்சனின் இருதயத்தை செயல்பட வைக்க 4 ஊசிகள் அவரது இருதயத்திற்கு மேலே மற்றும் அருகே போடப்பட்டுள்ளன. இதில் 3 ஊசிகள் இருதயத்தை மூடியிருக்கும் தசைப் பகுதியை சேதப்படுத்தியுள்ளன. மற்றொன்று நரம்புப் பகுதியை சேதப் படுத்தியுள்ளது.

அவரது முகத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தழும்புகள் இருந்தன. மேலும் மூக்கின் வலதுபுறம் சற்று தொய்ந்து காணப்பட்டது. முதுகுப்புறத்தில் வெட்டுக் காயங்கள் இருந்தன. சமீபத்தில் அவர் கீழே விழுந்ததால் இது ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஜாக்சனின் மூட்டுப் பகுதிகளில் தோலின் நிறம் மாறியிருந்ததாகவும், இது எதனால் ஏற்பட்டது என்று தெரியவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய உடல் பிரச்சினைகளுடன் மைக்கல் ஜாக்சன் வாழ்ந்து வந்துள்ளது அவரது பிரேத பரிசோதனை மூலம் வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.

கலிபோர்னியாவிலுள்ள அவரது நவர்லாண்ட் இல்ல வளாகத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறுமென அவரது குடும்ப சட்டத்தரணி தெரிவித்தார். இறுதிச் சடங்குகள் தொடர்பாக அவரது குடும்ப அங்கத்தவர்கள் கூடி ஆராய்ந்துள்ளனர். அவரது ரசிகர்களும் பங்குபற்ற வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படுமென மைக்கல் ஜக்சனின் தந்தை தெரிவித்தார்.

வவுனியா தேர்தல் பிரசாரத்தில் கூட்டமைப்பு எம்.பி.க்கள்

images-elc.jpgவவுனியா நகர சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன.
இதில் தமிழ்த் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

வேட்பாளர்களுக்கு அவர்களின் இலக்கம் தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்பட்டதும் இந்த கருத்தரங்குகள் நடைபெறும் எனவும் தேர்தல் பிரசாரத்துக்கு பொறுப்பான வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைப்பதுடன் வவுனியா நகர சபையின் பல பகுதிகளிலும் பிரசாரங்களில் இவர்கள் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.  இதன் முக்கிய கருத்தரங்கு அடுத்தவாரம் வவுனியாவில் நடைபெறவுள்ளது. இதேவேளை, வவுனியா பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் ஏனைய தமிழ்க்கட்சிகளும் பிரசார வேலைகளை ஆரம்பித்துள்ளன.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இலங்கைச் சுற்றுலா ஆரம்பம்

cricket20-20.jpgகிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணி இன்று முதலாவது பயிற்சி ஆட்டத்தில் பங்குபற்றுகிறது. இலங்கை கிரிக்கெட் நிறுவன அணியுடனான இப்பயிற்சி ஆட்டம் கொழும்பு,  கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. திலிண கன்டம்பி தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிறுவன அணி இன்றைய போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணி இன்று முதலாவது பயிற்சி ஆட்டத்தில் பங்குபற்றுகிறது. இலங்கை கிரிக்கெட் நிறுவன அணியுடனான இப்பயிற்சி ஆட்டம் கொழும்பு,  கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. திலிண கன்டம்பி தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிறுவன அணி இன்றைய போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

அண்மையில் நடந்து முடிந்த ருவன்டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சம்பியனான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்று முன்தினம் இலங்கை வந்துசேர்ந்தனர். ருவன்டி-20 சம்பியன் கிண்ணத்தை பாகிஸ்தான் வெல்வதற்குக் காரணமாகவிருந்த சகலதுறை ஆட்டக்காரர் ஷஹீத் அப்ரிடி இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை.  

இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள்  போட்டிகளும் ஒரு  ருவன்டி-20 போட்டியும் இடம்பெறவுள்ளன. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 4ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.