கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கான் முகமது மரணம்

_khan_muhammed_cricket.jpgபாகிஸ் தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கான் முகமது தமது 81 வது வயதில் லண்டனில் மரணமடைந்தார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சார்பில் முதல் இந்திய விக்கெட்டை வீழ்த்தியவர் என்கிற பெருமையை பெற்றவர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் முறையாக இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் விளையாட 1952 ஆம் ஆண்டு சென்றது.

1952 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டில்லியிலுள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்கியது.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின் சார்பில் முதலில் பந்து வீசியவர் கான் முகமது. அதாவது பாகிஸ்தான் அணியின் சார்பில் ஒரு டெஸ்ட் போட்டியில் முதலில் பந்து வீசியவர் என்கிற பெருமையை அவர் பெற்றார்.

முதலில் இந்தியா ஆடியது. துவக்க ஆட்டக்காரர்களாக பன்கஜ் ராயும், வினூ மன்கட்டும் களம் இறங்கினர். இந்திய அணி தனது முதன் இன்னிங்ஸில் 19 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் இந்திய அணியின் முதல் விக்கெட் வீழ்ந்தது.

கான் முகமது வீசிய பந்தில், பன்கஜ் ராய் 7 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் சார்பில் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற புகழ் கான் முகமதுக்கு கிடைத்தது.

தனது டெஸ்ட் வாழ்க்கையில் மொத்தமாக 13 போட்டிகளில் விளையாடிய அவர் 54 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்

cricket.jpgஅவுஸ் திரேலியா – இங்கிலாந்து ஆணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இன்று இங்கிலாந்தில் ஆரம்பமாகின்றது.

இங்கிலாந்து ஆஷஸ் தொடர் அணி அறிவிப்பு:

கார்டிஃப் மைதானத்தில் இன்று துவங்கும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஹார்மிசன் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக கிரகம் ஆனியன்ஸ் இடம் பெற்றுள்ளார்.

மற்றபடி அணியில் பெரிய மாற்றங்கள் எதுவுமில்லை. அதேபோல் ரவி பொபாரா அணியில் இடம் பெற்றிருந்தாலும் இயன் பெல்லும் ஒரு மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மொன்ட்டி பனேசர் அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அணி விவரம்: ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் (கப்டன்), அலைஸ்டர் குக், ரவி பொபாரா, கெவின் பீட்டர்சன், போல் கொலிங்வுட், இயன்பெல், மேட் ப்ரையர், பிளின்டாஃப், ஸ்டூவார்ட் பிராட், கிரேம் ஸ்வான், ஜேம்ஸ் ஆண்டர் சன், கிரகம் ஆனியன்ஸ் மொன்ட்டி பனேசர்.

அவுஸ்திரேலிய விபரம் வருமாறு:- பிலிப் கூச், சைமன் கடிச், ரிக்கி பொண்டிங் (கப்டன்), மைக்கல் கிளார்க், மைக்கல் ஹஸி, மார்ஷல் நேகர்தி, பிராட் ஹடின், மிச்சல் ஜோன்சன், நாதன் ஹரிட்டஸ், பீட்டர் சிடில், ஸ்டுவர்ட் கிளார்க், பென் ஹில்பென்ஹஸ் .

சீனாவின் சின் சியாங்க் பிராந்தியத்தில் வன்முறை தொடருகிறது

சீனாவின் சின் சியாங்க் பிராந்தியத்தின் தலைநகர் உரும்கியில் தொடரும் வன்முறை காரணமாக சீன அதிகாரிகள் அங்கே இரண்டாவது நாளாக இரவு நேர ஊரடங்கு உத்தரவை மீண்டும் கொண்டுவந்துள்ளனர். உள்ளூர் உய்குரிகளுக்கும் ஹான் சீனர்களுக்கும் இடையில் இந்த மோதல்கள் நடந்துவருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை துவங்கிய இந்த வன்முறைகளில் இதுவரை 150க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.அந்த நகரின் இணைய தொடர்புகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உரும்கியின் தெருக்கள் தற்போது அமைதியாக காணப்படுவதாக, அங்கே இருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

முன்னதாக, நீண்ட கத்திகள், கம்புகள் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை தாங்கிய ஹன் சீன இனமக்கள் தெருக்கள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.  முஸ்லிம் உய்குரி இனமக்களின் தாக்குதல்களிலிருந்து தங்களை காத்துக்கொள்ளும் முகமாகவே தாங்கள் இப்படி ஊர்வலமாக சென்றதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 27ஆம், 28ஆம் திகதிகளில்!

election.gifஊவா மாகாண சபை,  யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கான தபால்மூல வாக்குப் பதிவு எதிர்வரும் 27ஆம்,  28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. இத்தேர்தல்களில் தபால் மூலம் வாக்களிப்போருக்கான வாக்காளர் அட்டைகள் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண சபை,  யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  ஊவா மாகாணத்துக்கு மொத்தம் 32 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்களில் 21 பேர் பதுளை மாவட்டத்திலிருந்தும் 11 பேர் மொனராகல மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படுவர்.

பெடரர் வரலாறு படைத்தார்

padaral.jpg
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் போராட்டத்திற்கு பின்னர் மகுடம் சூடிய பெடரர், பீட் சாம்ப்ராஸின் அதிக கிராண்ட்ஸ்லாம் சாதனையையும் முறியடித்தார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிகவும் கௌரவமிக்க பந்தயமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கடந்த இரண்டு வார காலமாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வந்தது. கடைசி நாள ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டி அரங்கேறியது.

கிண்ணத்திற்காக இறுதிப் போட்டியில் உலகின் 2ஆம் நிலை வீரராக இருந்த சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரும், 6ஆம் நிலை வீரர் அமெரிக்காவின் அன்டி ரொடிக்கும் சந்தித்தனர்.  இறுதிப் போட்டிக்கே உரிய விறுவிறுப்புடன் இருவரும் விட்டுக்கொடுக்காமல் கடைசிவரை போராடினர். இதனால் ஆட்டம் 5 செட்கள் வரை நீடித்தது. இதில் 4 மணி 16 நிமிடங்கள் போராடிய பெடரர் முடிவில் 5-7, 7-6, (86), 7-6, (75), 3-6, 1-614 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கடைசி செட் மட்டும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்தமை குறிப்பிடத்தக்கது. இந்த மோதலில் பெடரர் 50 ஏஸ்களும், ரொடிக் 27 ஏஸ்களும் வீசியிருந்தனர்.   27 வயதான பெடரர் 6ஆவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.

அது மட்டுமின்றி இந்த விம்பிள்டனை வென்றதன் மூலம் பெடரரின் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்தது. இதையடுத்து அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெருமையை இதுவரை தக்க வைத்திருந்த அமெரிக்க  பீட் சாம்ப்ராஸின் (14 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை பெடரர் முறியடித்து சரித்திரத்தில் இடம்பெற்றார்.

ஓய்வு பெற்ற பீட் சாம்ப்ராஸ் விம்பிள்டனை 7 முறையும் அமெரிக்க ஓபனை 5 முறையும், அவுஸ்திரேலிய ஓபனை 2 முறையும் வென்றுள்ளார். ஆனால், பிரெஞ்ச் ஓபனை மட்டும் அவரால் கடைசி வரை வெல்ல முடியாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை அணி

cricket_sl_won_itest_pakistan.jpgபாகிஸ் தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.  நான்கு நாட்களில் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் 168 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது 2ஆவது இன்னிங்ஸக்காகத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி இலங்கை வீரர்களின் துல்லியமான பந்துவீச்சில் 117 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து வெற்றியைப் பறிகொடுத்தது.

கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான இந்த முதலாவது டெஸ்ட் போட்டி காலி, சர்வதேச விளையாட்டரங்கில் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமானது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணிக்கப்பட்ட இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய தரங்க பரணவிதான 72 ஓட்டங்களைப் பெற்றார். தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பரணவிதான இப்போட்டியில் தனது முதலாவது அரைச் சதத்தைப் பெற்றதோடு அதிகூடிய ஓட்டத்தையும் பதிவு செய்துகொண்டார்.

தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 342 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பாகிஸ்தான் அணிக்காக யூசுப் யொஹானா 112 ஓட்டங்களையும் மிஸ்பாஉல் ஹக் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவன் குலசேகர 71 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சுக்காக ஆடிய இலங்கை அணி 217 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக முதலாவது இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றிருந்த பரணவிதானவே இரண்டாவது இன்னிங்ஸிலும் கூடிய எண்ணிக்கையாக 49 ஓட்டங்களைப் பெற்றார்.

50 ஓட்டங்கள் மேலதிகமாகப் பெற்ற நிலையில் 168 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி இன்றைய நான்காவது நாளின் பகற்போசன இடைவேளைக்கு முன்னதாகவே சகல விக்கட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இலங்கை அணி சார்பாக அபாரமாகப் பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை வீழ்த்தி இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார்.

இலங்கை அணி அதன் புதிய தலைவரான குமார் சங்கக்கார தலைமையில் தனது முதலாவது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுக்கொண்டதோடு இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக இலங்கை அணியின் ரங்கன ஹேரத் தெரிவானார்.
இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன்

Jaffna_Map1. 

தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு பெரும்பாலும் அழிக்கப்பட்ட போதும் சர்வதேச வலைப்பின்னல் எவ்வித பாதிப்பிற்கும் உள்ளாகவில்லை. 2007 ஓகஸ்ட்டில் வெளியான Jane’s Intelligence Review, என்ற புலனாய்வுச் சஞ்சிகை விடுதலைப் புலிகளின் ஆண்டு வருமானத்தை 200 – 300 மில்லியன் டொலர்கள் என மதிப்பிட்டு உள்ளது. அதன்படி  Revolutionary Armed Forces of Colombia (FARC),  என்ற கொலம்பியாவைச் சேர்ந்த ஆயுதக் குழுவிற்கு அடுத்தபடியாக எல்ரிரிஈ செல்வந்த இயக்கம் என்ற நிலையில் இருந்தது. சர்வதேச கப்பல் வர்த்தகத்தில் இருந்து போதைப் பொருள் கடத்தல் வரை எல்ரிரிஈ உடைய வியாபாரம் பல்வகைப்பட்டது என்று Jane’s Intelligence Review தெரிவிக்கின்றது.

குறிப்பாக ரிஆர்ஓ மற்றும் எல்ரிரிஈ இன் முன்னிலை அமைப்புகளினூடாக நிதி திரட்டல்கள் இடம்பெற்றுள்ளது. இக்குற்றச்சாட்டை எல்ரிரிஈ மறுத்தே வந்தள்ளது. சர்வதேச நாடுகளில் உள்ளவர்கள் தங்களுக்கு மனமுவந்து நிதியை வழங்குவதாகத் தெரிவித்தனர்.

ஒவ்வொரு அழிவையும் நிதிதிரட்டுவதற்கான உபாயமாகவே எல்ரிரிஈ பயன்படுத்தி வந்தது. சுனாமி – சுனாமி நிதி, வெள்ளம் – கண்ணீர் வெள்ளம், வன்னி அவலம் – வணங்கா மண் என்று நிதி திரட்டலில் எல்ரிரிஈ க்கு நிகராக யாரும் இருக்கவில்லை. தங்களுடைய ஒட்டு மொத்த தலைமையே அழிந்த போதும் அதை வைத்தும் இன்னமும் நிதி சேகரிக்கப்படுகிறது. வன்னி முகாம்களில் உள்ளவர்களை வெளியே எடுக்க நிதி சேர்க்கின்றனராம்.

மாவீரர் நிகழ்வில் கார்த்திகைப் பூ விற்றல் முதல் ஊர்வலங்களில் புலிக்கொடி, தமிழீழ பச், ரீசேட் என ஒரு வர்த்தக நிறுவனமாகவே அவர்கள் செயற்பட்டனர். இவ்விடயங்களில் எல்ரிரிஈ இன் வர்த்தக தொழில் தேர்ச்சி குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளுக்கு முன் லண்டனுக்கு வந்திருந்த இந்தியப் பொருளியலாளரும் இராஜதந்திரியுமான கிருஸ்ணனுடன் ஹரோ நகரசபை அறையொன்றில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. அதில் எல்ரிரிஈ இன் பொருளாதாரம் பற்றிக் குறிப்பட்ட கிருஸ்ணன், வரியை எப்படி அறவிடுவது என்று எல்ரிரிஈ இடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நகைச்சுவையாகத் தெரிவித்தார். அப்போது நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு ‘இந்தியாவில் வாழ்பவர்களையே வரி செலுத்த வைக்க முடியவில்லை. ஆனால் ஈழத் தமிழன் ஒருவன் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவனுடைய வருமானத்தையும் அவன் செலுத்த வேண்டிய வரியையும் கணித்து வைத்து வரியை அறவிடும் அளவுக்கு நிர்வாகத் திறனுடைய அமைப்பு எல்ரிரிஈ’ என்று கிருஸ்ணன் விபரித்து இருந்தார்.

எல்ரிரிஈ வரி அறவிடுவதிலும் வியாபாரத்தைப் பெருக்கி வருமானத்தை பெருக்குவதிலும் காட்டிய ஆர்வத்தை அரசியலில் காட்டவில்லை. அரசியல் வங்குரோத்து ஒட்டுமொத்த அமைப்பையும் ஒரே நாளில் அழித்தொழிக்க வழிகோலியது. அன்று அழிந்தொழிந்தது புலிகளின் தலைமை மட்டுமல்ல புலிகளின் ஆவணங்களும் தான்.

200 – 300 மில்லியன் வருமானத்தை ஈட்டும் அமைப்பினுடைய வர்த்தகப் பெறுமதி – அவ்வமைப்பின் அசையும் அசையாச் சொத்துக்களின் பெறுமதி ஒரு பில்லியனுக்கும் அதிகமானது என மதிப்பிடப்படுகிறது. எல்ரிரிஈ தடைசெய்யப்பட்ட இயக்கமாக இருந்ததால் இந்தச் சொத்துக்கள் அனைத்தும் தனிநபர்களின் பெயர்களிலேயே பதிவு செய்யப்பட்டு இருந்தன. சர்வதேச நிதி விடயங்கள் நீண்ட காலமாக கே பி இன் கட்டுப்பாட்டில் இருந்த போதும் சமாதான காலத்தில் பொட்டம்மானின் உளவுத்துறையால் கே பி ஓரம்கட்டப்பட்டு கஸ்ரோவிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கே பி அனைத்து கட்டுப்பாடுகளையும் இழந்து தற்காலிகமாக ஓய்வுபெற்றார்.
 
எல்ரிரிஈ இன் சர்வதேச நியமனங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டனர். வன்னியில் இருந்து ஐரோப்பாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இறக்குமதி செய்யப்பட்ட எல்ரிரிஈ உறுப்பினர்கள் – கஸ்ரோவுக்கு நெருக்கமானவர்கள் – பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர். இவர்கள் நிதி மற்றும் அனைத்து விடயங்களையும் பெறுப்பேற்றனர். ஒரு பில்லியன் டொலர் வரையான அசையும் அசையாச் சொத்துக்களும் அதன் ஆண்டு வருமானமான 200 – 300 மில்லியன் டொலர்களும் கஸ்ரோவின் பொறுப்பிற்கு வந்தது.

இப்புதிய நபர்களுடன் நெருங்கிப் பணியாற்ற வேண்டிய ஒருவர் அன்று கூறுகையில், ‘வன்னியில் துவக்கைப் போட்டுவிட்டு அப்படியே இங்கே வந்திருக்கிறார்கள்’ என்று அவர்களின் இயல்பை விபரித்தார்.

புதிதாக பொறுப்பெடுத்துக் கொண்ட கஸ்ரோ செப்ரம்பர் 11க்குப் பின்னான சூழலைப் புரிந்துகொள்ளாமல் புதியவர்களை வைத்து மேற்கொண்ட ஆயுதக் கொள்வனவுகள் தோற்றப் போய் மிகப்பெரும் நிதி இழப்புகளையும் ஏற்படுத்தியது.

2006ல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை அரசின் புரொஜக்ற் பீக்கன் இராணுவ நடவடிக்கையும் நெருக்குவாரத்தை வழங்கியது. 2009 முற்பகுதியில் கிளிநொச்சி இலங்கை இராணுவத்தின் கைகளில் வீழ்ச்சியடைய மறைந்த எல்ரிரிஈ தலைவர் வே பிரபாகரன் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக மீண்டும் கே பி யை நியமித்தார். ஆயினும் நிதி விடயங்கள் அவற்றின் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் கஸ்ரோவிற்கு நெருக்கமானவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

இந்நிலையில் மே 18ல் எல்ரிரிஈ இன் ஒட்டுமொத்த தலைமையும் அழிக்கப்பட்டு விட்டது. ஒரு பில்லியன் டொலர் வரையான அசையும் அசையாச் சொத்துக்களும் அதன் ஆண்டு வருமானமான 200 – 300 மில்லியன் டொலர்களும் கஸ்ரோவினால் நியமிக்கப்பட்டவர்களின் கைகளில் உள்ளது.

2.

தற்போது எல்ரிரிஈ இன் சர்வதேச வலைப்பின்னல் பாரிய அதிகார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளமை அனைவருக்கும் தெரிந்த இரகசியம். இந்த அதிகாரப் போட்டிக்குக் காரணம் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதல்ல. புலிகளின் தலைவர் உயிருடன் நலமாக இருக்கின்றார் என்று சொல்லும் எல்ரிரிஈ பொறுப்பாளர்களுக்கும் பிரபாகரன் உயிருடன் இல்லை என்பது மிக நன்றாகவே தெரியும். ஆனால் ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்துக்களையும் அதன் 200 – 300 மில்லியன் டொலர் வருமானத்தையும் தற்போது வைத்துக் கொண்டிருக்கும் இவர்கள் பிரபாகரன் உயிரிழந்ததை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் புதிய தலைமையிடம் – கே பி இடம் எல்ரிரிஈ இன் சொத்துக்களையும் வருமானத்தையும் கையளிக்க வேண்டும். ஆனால் இவர்கள் அதற்குத் தயாரில்லை. அதனாலேயே இவர்கள் தமிழக அரசியல் வாதிகளைத் தூண்டிவிட்டு கே பி க்கு எதிராக அறிக்கைவிடத் தயங்கவில்லை. அதனால் சொத்துக்களையும் வருமானத்தையும் தங்கள் கைகளில் வைத்துக்கொள்ள கடைசிவரை முரண்டு பிடிக்கின்றார்கள்.

மறைந்த புலிகளின் தலைவர் பிரபாகரனால் அவர் உயிருடன் இருக்கும்போதே சர்வதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்ட கே பி மட்டுமே பிரபாகரன் உயிரிழந்ததை அறிவித்து உள்ளார். முன்னர் கே பி யின் அறிக்கைக்கு மறுப்பறிக்கை வெளியிட்ட எல்ரிரிஈ சர்வதேச புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் பிரபாகரன் உயிரிழந்ததை ஏற்றுகொண்டு அஞ்சலி செய்துள்ளார். அதே போன்று வழுதி என்கின்ற புலிகளின் மற்றுமொரு முக்கிய உறுப்பினர் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தி உள்ளதுடன் கே பி இன் கரங்களைப் பலப்படுத்தும்படி கேட்டுள்ளார். ஆனால் இவர்கள் யாரும் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர்கள் அல்லர்.

ஆனால் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட சர்வதேச விடயங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட நெடியவன் என்கின்ற பேரின்பநாயகம் சிவபரன் – நோர்வே, ரிஆர்ஓ தலைவர் ரெஜி – லண்டன், ஒவ்வவொரு நாடுகளுக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்கள் எவருமே இதுவரை உயிரிழந்த தலைவருக்கோ முக்கிய போராளிகளுக்கோ அஞ்சலி செலுத்துவதற்கே முன்வரவில்லை. அதற்கு முக்கிய காரணம் கே பி க்கு எதிரான அணி ஒன்றை அவர்கள் அமைத்துள்ளனர். பெரும்பாலும் கஸ்ரோவினால் நியமிக்கப்பட்ட இவர்கள் வல்வெட்டித்துறையை – வடமராட்சியை பிறப்பிடமாகக் கொண்டவர்கள். பெரும்பாலும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

வே பிரபாகரன் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்டதால் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகாலங்களில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களே முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டனர். நம்பகமானவர்களாகக் கருதப்பட்டனர். ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பின் ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலும் அந்த குலக் குழுமமாகவே புலிகள் இயக்கம் இயங்க முற்பட்டுள்ளது.

கே பி யும் கே பியை எதிர்க்கின்ற அணியினரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களானாலும் கே பி வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவரல்ல. அவர் காங்கேசன்துறையைச் சேர்ந்தவர். அதனால் வல்வெட்டித்துறை குலக் குழுமத்தினால் அவர் நிராகரிக்கபட்டு உள்ளார். தற்போது கே பி உடன் சமரசத்தை ஏற்படுத்த சில முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகின்றது. ஆனால் புலிகள் இயக்கத்தின் அசையும் அசையாச் சொத்துக்களையும் அதன் வருமானத்தையும் வல்வெட்டித்துறைக் குழுமமே நிர்வகிக்கின்றது. இதில் பல நபர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டு உள்ளனர். இவர்கள் அவ்வளவு இலகுவில் அவற்றை விட்டுக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

புலிகள் இயக்கத்தின் சர்வதேசப் பொறுப்பாளர்கள்
முகிலன் – நோர்வே
அப்துல்லா – சுவிஸ்
பிரியன் – டென்மார்க்
வாகீசன் – ஜேர்மன் (மற்றும் ஐவர் அந்தந்த மாநிலங்களுக்கு பொறுப்பாக உள்ளனர்.)
மேத்தா – பிரான்ஸ்
தனம் – பிரித்தானியா
தமிழ் – கனடா
நெடியவன் – சர்வதேசப் பொறுப்பாளர்.
ரெஜி – சர்வதேச நிதிப் பொறுப்பாளர். (ரிஆர்ஓ ஊடாகவே புலிகள் அமைப்பின் நிதி பரிமாற்றங்கள் இடம்பெற்றது.)

இவர்களில் பெரும்பாலானவர்கள் அல்லது முற்றாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது எழுந்தமானமான ஒரு நிகழ்வு அல்ல. இது புலிகளின் குலக் குழு மனோநிலையின் வெளிப்பாடே. புலிகள் அரசியல் ரீதியில் முதிர்ச்சி அடையாமையினால் இந்தக் குலக் குழு மனோநிலையில் இருந்து அவர்களால் வெளியே வரமுடியவில்லை. வல்வெட்டித்துறை – வடமராட்சியில் இருந்து ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலும் புலிகள் இயக்கம் குலக் குழுவுக்குள்ளேயே தன்னை அடக்கிக் கொண்டது. புலிகள் இன்று தங்கள் குலத் தலைவனைப் பறிகொடுத்துவிட்டு அவரது பெயரை மட்டும் வைத்து அசையும் அசையாச் சொத்துக்களைப் பரிபாலனம் செய்ய முற்படுகின்றனர். அவர்களது அகராதியில் தமிழ் மக்கள் அசையும் சொத்துக்கள் என்ற வரையறைக்குள் வந்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

3.

கே பி – வல்வெட்டித்துறை (வடமராட்சி) அணிகளுக்கு இடையேயான அதிகாரப் போட்டி புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலைப்பின்னலை பலவீனப்டுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் வே பிரபாகரன் உயிருடன் இருக்கம் போதே சில மாதங்களுக்கு முன்னதாகவே கே பி சர்வதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்டதும் ஏற்கனவே சர்வதேசரீதியில் தமிழ் மக்கள் மத்தியில் அறியப்பட்டவராக கே பி இருப்பது அவருக்கு சாதகமாக உள்ள விடயங்கள். ஆனால் மறைந்த தலைவர் வே பிரபாகரனுடன் இறுதி வரையும் இலங்கையில் உள்ள போராளிகளுடன் இன்னமும் உறவுகளைக் கொண்டிருந்த போதும் புலம்பெயர்ந்த நாடுகளில் எந்த ஒரு நாட்டிலும் கே பி க்கு ஒரு ஆதரவுத்தளம் இல்லை. புலி ஆதரவு ஊடகங்களிலும் புலி ஆதரவு அமைப்புகளிலும் கூட அவருக்கு கட்டுப்பாடு இல்லை. காரணம் அவையனைத்தும் அந்தந்த நாடுகளின் பொறுப்பாளர்களின் கட்டுப்பாட்டிலேயே செயற்படுகின்றன. அதனாலேயே தனக்கென ஒரு இணையத் தளத்தை அவர் உருவாக்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்.

புலிகளுடைய உத்தியோகபூர்வ இணையத் தளமாக செயற்பட்ட தமிழ்நெற் கூட கே பி க்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. அதன் பொறுப்பாளரான ஜெயா என்ற ஜெயச்சந்திரன் சர்வதேச இணைப்பாளர் பொறுப்பு தனக்கு கிட்டும் என்று எதிர்பார்த்து இருந்தவர்.

கேபிக்கு எதிரான அணி பலமாக இருந்த போதும் தலைமைத்துவ ஆளுமையுடன் ஒரு குலத் தலைவனை முன்னிறுத்த முடியாத நிலையிலேயே உள்ளனர். அவ்வாறு ஒருவரை முன்னிறுத்தம் போதும் அவர்கள் சாதாரண புலி ஆதரவாளர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும். ஏற்கனவே போட்டி போட்டுக்கொண்டு பொய் மூட்டைகளை கொட்டி உள்ளதால் அதற்கான விளக்கங்களைக் கொடுக்க நேரிடும். மேலும் இவர்களில் பலர் கடுமையான புலிப் போக்கையும் கொண்டுள்ளனர். இவர்களால் தற்போதுள்ள அரசியல் சூழலில் தங்களைத் தக்க வைத்துக் கொள்வது மிகவும் சிரமமாக அமையும்.

மாறாக கே பி புலிகளின் சில கடும்போக்குகளைக் கைவிடுவதாக அறிவித்துள்ளார். யூன் 14ல் அவர் தேசம்நெற்றுடனான உரையாடலிலும் அதனை உறுதிப்படுத்தி இருந்தார். அந்த உரையாடலில் ஏகபிரதிநிதித்துவம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். பல்வேறு தமிழ் அரசியல் அமைப்புகளுடனும் அவர் தொடர்பை ஏற்படுத்தி இருப்பதை உறுதிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

ஆயினும் புலிகள் மீதான விமர்சனம் கடந்தகாலம் பற்றிய மதிப்பீட்டை அவர் முன்வைத்தால் பெரும்பான்மையான புலிகளிடம் இருந்து அவர் அன்னியப்படும் நிலையேற்படும். அதனால் அவ்விடயங்களில் அவர் அடக்கியே வாசிப்பது எதிர்பார்க்கக் கூடியது. ஆனாலும் விவாதங்கள் உரையாடல்கள் எதுவும் இன்றி நாடுகடந்த தமிழீழ அரசுக்கான செயற்குழு நியமிக்கப்பட்டமை மற்றும் அவை தொடர்பான விடயங்கள் அவரால் உடனடியான ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்த முடியாமல் உள்ளதனை வெளிப்படுத்தி நிற்கிறது.

தமிழ் மக்களுடைய உரிமைக்கான போராட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்ற விவாதம் தற்போது பரவலாக இடம்பெற்று வருகின்றது. இலங்கை அரசு அரசியல் ரீதியான தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை முன் வைக்காமல் தொடர்ந்தும் வன்னி மக்களை முட்கம்பிகளுக்குள் தடுத்த வைத்திருப்பது தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது. இந்நிலையில் வல்வெட்டித்துறை (வடமராட்சி) குலக் குழு மனோ நிலைக்குள் இருந்து கொண்டு பரந்தபட்ட தமிழ் மக்களை பரிபாலனம் செய்ய முற்படுவது வேடிக்கையானது.

கடந்த காலம் பற்றிய எவ்வித மதிப்பீடும் இன்றி மீண்டும் தமிழ் மக்களுக்கு தலைமை கொடுக்கும் கனவை தமிழ் மக்களைப் பரிபாலனம் செய்யும் கனவை புலம்பெயர்ந்து வாழும் புலிகளும் புலிகளது ஆதரவு அமைப்புகளும் கைவிட வேண்டும். மக்களை ஒருமுறை ஏமாற்றிவிட்டிர்கள் என்பதற்காக எப்போதும் ஏமாறுவார்கள் என முடிவு கட்டிவிடக் கூடாது.

தவறான அறிக்கைக்காக தமிழரிடம் மன்னிப்புக் கோரியுள்ள ஏ.பி.சி.

தவறான விதத்தில் செய்தி வெளியிட்டதற்காக அவுஸ்திரேலியாவின் ஏ.பி.சி.தொலைக்காட்சி தமிழர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
மே 18 இல் 7.30 இல் ஒளிபரப்பான செய்தி அறிக்கையில் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பாக தவறான விதத்தில் அறிக்கையிட்டதாக பார்வையாளர் ஒருவர் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து ஏ.பி.சி.தொலைக்காட்சி மன்னிப்புக் கேட்டுள்ளது.

200 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டிஷாரால் பெருந்தோட்டத் துறைக்கு கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களின் பரம்பரையினர் இலங்கைத் தமிழர்கள் என்று ஏ.பி.சி.தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்களில் ஒருபகுதியினர்

தொழிலாளர்களின் வம்சாவளியினராக இருக்கின்ற போதும் அநேகமானோர் 2 ஆயிரம் ஆண்டுகால இலங்கைத் தமிழ் கலாசார பரம்பரையினராகும். ஏ.பி.சி.யின் கெய்ரன் டொய்ல் இந்தத் தவறை ஏற்றுக்கொண்டுள்ளார். உங்கள் கவலையை ஏ.பி.சி. ஏற்றுக்கொள்கிறது. தமிழ் மக்களின் வரலாறு தொடர்பாக தவறாக குறிப்பிடப்பட்டதையும் தவறான வழிகாட்டலுக்கு இட்டுச்செல்வதாக அமைந்திருந்ததையும் ஏ.பி.சி.ஏற்றுக்கொள்கிறது. இதற்கு ஏ.பி.சி.மன்னிப்புக் கோருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக கிரீன் லெவ்ற் வீக்லியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கி.பி.2 ஆம் நூற்றாண்டிலிருந்தே தீவில் இலங்கைத் தமிழ் மக்கள் இருந்து வருவதை ஏ.பி.சி.விளங்கிக்கொள்கிறது. அநேகமான இலங்கைத் தமிழர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தின் வம்சாவளியினர் என்றும் ஏ.பி.சி.குறிப்பிட்டுள்ளது.

பிரபல குத்துச் சண்டை வீரர் அலெக்ஸிஸ் அர்கில்லோ மரணம்

_arguello.jpgதென் அமெரிக்க நாடானா நிகராகுவாவைச் சேர்ந்த பிரபலமான குத்துச் சண்டை வீரர் அலெக்ஸிஸ் அர்கில்லோ தனது வீட்டில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அலெக்ஸிஸ் மூன்று முறை உலக குத்துச் சண்டை பட்டத்தை வென்றவர். 1995 ஆம் ஆண்டு குத்துச் சண்டை போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அவர் உலகளவில் 82 வெற்றிகளை பெற்றுளார். அதில் 65 முறை எதிரிகளை முழுதாக வீழ்த்தியும் உள்ளார்.

மூன்று பிரிவுகளில் உலகப் பட்டத்தை வென்றுள்ள ஆறு பேரில் அலெக்ஸிஸும் ஒருவர் என்பது குறிப்பிட்த்தக்கது.1968 ஆம் ஆண்டு தொழில்முறை ரீதியில் போட்டியிட தொடங்கிய இவர் உலகப் போட்டிகளில் ஃபெதர் வெயிட், சூப்பர் ஃபெதர் வெயிட் மற்றும் லைட் வெயிட் பட்டங்களை வென்றவர்.

கண்ணிவெடி அகற்றும் பதினாறு தொழிலாளர்கள் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டனர்;

ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் பதித்து வைத்த கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஐ. நா. சபை உதவி பெற்ற நிறுவனம்ஒன்று ஈடுபட்டு உள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் 16 பேர் கோஸ்ட் மாநிலத்தில் இருந்து பக்டியா மாநிலத்துக்குச் செல்வதற்காக பயணம் செய்த போது கடத்திச் செல்லப்பட்டனர்.

அடையாளம் தெரியாத ஆயுதம் தாங்கியவர்கள் தான் அவர்களை கடத்திச் சென்றனர். இந்த கடத்தல் லோகார் கார்டெஸ் சாலையில் நடந்தது. தலிபான்களின் வேலையாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் இந்த சம்பவத்துக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆட்களை கடத்துவது என்பது தீவிரவாதிகளுக்கு லாபம் தரும் தொழிலாக இருக்கிறது. கடத்தப்பட்டவர்களை மீட்ப தற்காக பெரும் தொகையை பணயத் தொகையாக அவர்கள் பெறுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் கண்ணிவெடியில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பலியானார்கள். அல்லது காயம் அடைந்தனர். பாகிஸ் தானுக்கு அருகாமையிலுள்ள பகிற்ரா மாகாணத்திலே இக்கடத்தல் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. ஸ்வாட் பிரதேச ராணுவ நடவடிக்கைகளில் தோல்வியை நெருங்கும் தலிபான்கள் இத்தொழிலாளர்களைக் கடத்தியுள்ளனர்.

இதனூடாக ஆப்கான் பாகிஸ்தான் அரசுகளைப் பணியவைக்கும் வேலைகளில் தலிபான்கள் ஈடுபடலாம். கடத்தப்பட்டோர் உள்ளூர் தொழிலாளர்களாகவுள்ளதால் சர்வதேச சமூகம் இக்கடத்தல் விடயத்தில் அதிக அக்கறை செலுத்தாது எனக் கருதப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானிய கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் 1800 வெளிநாட்டுப் பணியாளர்களும் எட்டாயிரம் உள்ளூர் வாசிகளும் ஈடுபட்டுள்ளனர். இது வரை மூன்றில் இரண்டு பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப் பட்டு துப்பரவு செய்யப்பட்டுள்ளன. 2001 ஆம் ஆண்டிலிருந்து இது வரை 21 வெளிநாட்டு தொழிலாளர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் களூடாக கடத்தப்பட்டோரை விடுவிக்க முயற்சிகள் செய்யப்படவுள்ளன.