கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

மிக்கையில் கோர்பசேர்வ் நல்லவரா? தீயவரா?

ஐக்கிய சோவியத் சோசலிசக் குடியரசை சிதறடித்தவராகக் தன் மக்களால் – ரஷ்யர்களால் கருதப்படும் ஜனநாயகத்தை கொண்டுவந்தவராக அமேரிக்க கூட்டு நாடுகளால் போற்றப்படும் சர்ச்கைக்குரிய முன்னாள் சோவியத் யூனியனின் தலைவர் மிக்கையில் கோர்ப்பசேவின் உடல் இன்று மொஸ்கோவில் அடக்கம் செய்யப்படுகின்றது. சோவியத் யூனியன் சிதறடிக்கப்பட்ட பின் இடம்பெற்ற தேர்தலில் மிக்கைல் கோர்பசேவால் ஒரு வீத வாக்குகளை மட்டுமே தக்க வைக்க முடிந்தது. தனது கடைசிக் காலங்களை மிக்கையில் கோர்பசேவ்வால் நிம்மதியாகக் கழித்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

பனிப் போரை இருதரப்பும் விட்டுக்கொடுத்து முடிவுக்கு கொண்டுவரவில்லை. சோவியத் யூனியனில் அங்கமாக இருந்த நாடுகள் நேட்டோவில் அங்கத்துவம் பெற ரஷ்யாவின் எல்லைகளை நேட்டோ சுற்றி வளைத்துக் கொண்டது. சோவியத் யூனியன் சிதறடிக்கப்பட நேட்டோ அந்த நாடுகளை அணி சேர்த்துக்கொண்டது. இன்றைய ரஷ்ய – உக்ரைன் யுத்தத்திற்கு வித்திட்டதும் அன்று 1991இல் சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்ற மிக்கைல் கோர்பசேவ்.

அமெரிக்காவும் நேட்டோவும் கனவிலும் எதிர்பாரத்திராத வகையில் சோவியத் யூனியன்வை சிதறடித்தது மிக்கைல் கோர்பசேவ்வின் மீள்கட்டமைப்பு என்ற ‘பிறிஸ்ரொய்கா – perestroika’. அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த அவருடைய வெளிநாட்டு அமைச்சர் பொறிஸ் யெல்சின் நேட்டோ நாடுகளின் குட்டி நாய் போலவே நடந்துகொண்டார். குடிக்கும் பெண்களுக்கும் அடிமையான இவர் பொதுவெளியில் கூட கண்ணியத்தை கடைப் பிடிப்பதில்லை. மிகைல் கோர்பசேவ்வும் – பொறிஸ் யெல்சினும் சோவியத் யூனியனைச் சிதறடித்து கருத்துச் சுதந்திரம் ஜனநாயகம் என்ற பெயரில் மக்டோனால்ட்ஸ் போன்ற தங்கள் பல்தேசியக் கொம்பனிகளை ரஷ்யாவினுள் நுழைத்தன. பொருளாதார ஏற்றத்தாழ்வு என்றுமில்லாத வகையில் அதிகரித்தது. தங்கள் குடும்பங்களின் நாளாந்த வாழ்க்கைக்கு ரஷ்யப் பெண்கள் தங்களை விபச்சாரத்திற்கு தள்ள வேண்டிய நிலை 1990க்களில் ஏற்பட ஆரம்பித்தது.

மிக்கைல் கோர்ப்பசேவின் இறுதி அடக்கம் அரச மரியாதையுடன் மேற்கொள்ளப்படவில்லை. ரஷ்யர்கள் அவருடைய மரணம் தொடர்பில் அவ்வளவு அலட்டிக்கொள்ளவில்லை. தற்போதைய ரஷ்யத் தலைவர் விளாடிமிர் பூட்டினுக்கும் – மிகைல் கோர்ப்சேர்வ்க்கும் கொள்கை அடிப்படையில் அவ்வளவு உடன்பாடு கிடையாது. மிகைல் கொர்பசேவின் மீள்கட்டமைப்பு பிறிஸ்ரொய்கா இந்த நூற்றாட்டின் மிகப்பெரும் தவறு என்று குறிப்பிட்ட விளாடிமீர் பூட்டின், மேற்குநாடுகளை கோர்பசேவ் மிகையாக நம்பிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

1980க்களில் பனிப்போர் காலத்தின் அரசியல் சூழல் இலங்கையிலும் பிரதிபலித்தது. இந்திய – சோவியத் உறவுகள் மிக இறுக்கமாக இருக்க, அமெரிக்க இலங்கையின் நெருக்கம் இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தது. அயல் நாடான இலங்கையில் தனக்கு எதிரான போக்கில் அமெரிக்காவுக்கு சாயும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான அரசுக்கு பாடம் புகட்ட வளர்த்து எடுக்கப்பட்டதே தமிழீழ விடுதலைப் போராட்டமும். தமிழீழ விடுதலைப் புலிகளும். அதன் பின் வேலியே பயிரை மேய்ந்ததும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததும் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றானது. இந்த அரசியல் சதுரங்கத்தில் அரசியல் கூட்டுக்கள் மாறியது. அமெரிக்காவும் இந்தியாவும் நட்பாகியது. விடுதலைப் போராளிகள் பயங்கரவாதிகளாகினர். இந்தியா உசுப்பிவிட்ட தமிழீழத்துக்கு தமிழீழம் உச்சரிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் துடித்தனர். பாவம் இலங்கைத் தமிழர்கள். ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். இருந்த உரிமைகளையும் இழந்தனர். இன்னும் இந்தியா தமிழீழம் வாங்கித் தரும் என்று அடம்பிடிப்பவர்களும் இல்லாமல் இல்லை.

இப்போது பிஜேபி யோடு சேர்ந்து மறவன்புலவு சச்சிதானந்தம் கோஸ்டி சைவத் தமிழீழம் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கு கொடி பிடிக்கவும் போராடவும் நியாயம் கற்பிக்கவும் எமக்கு அரசியல் தலைமைகள் இருக்கின்றன. யாரோ பெற்ற பிள்ளைகளை விடுதலை என்ற பெயரில் எதற்கும் பலிகொடுப்பதில் இலங்கைத் தமிழர்களும் புலத்து தமிழர்களும் மகா வல்லவர்கள்.

பனிப் போர், கோடைப் போர், அரப் ஸ்பிரிங், ஹோல்பேஸ் ஸ்பிரிங் என்பதெல்லாமே மக்களை மடையர்களாக்குவதாக ஆகிவிட்டது. பிறிஸ்ரொய்கா போல். மிகைல் கோர்பசேவ்வின் பிறிஸ்ரொய்கா நேட்டோ நாடுகளுக்கு கிடைத்த அல்வா.

தமிழீழம் கேட்ட ஈழத் தமிழர்களுக்கு அமெரிக்க தூதுவர் ஜுலி சங் கோர்பச்சோப் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். “கோர்பச்சோப் சிறந்த ஒருவர். அவர் கமியூனிஸ்ட் சித்தார்ந்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். ரஷ்யாவை உடைத்தார். தாராளவாதத்தை அறிமுகப்படுத்தினார். இலங்கைக்கும் கோர்பச்சோப் போன்ற ஒருவர் வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். இந்தியா தமிழீழம் எடுத்து தராவிட்டாலும் ஜுலி சங் தமிழீழம் எடுத்துத் தர வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ரிஷி சுநாக் நிச்சயம் உதவியிருப்பார். அவர் வெற்றி பெற்றிருந்தால். எத்தளை காலம் தான் ஏமாற்றுவார் இந்த மக்களை?

மிகைல் கோர்பசேர்வ் நல்லவரா? தீயவரா? என்ற இந்தக் கேள்விக்கான இரு பதில்களுமே சரியானது. பதில் அளிப்பவரைப் பொறுத்தது.

மீண்டும் தொடங்கும் மிடுக்கு – 2021 உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் கிழக்கு மாகாணத்துக்கு முதலிடம் – மாவட்ட அடிப்படையில் மன்னார் முதலிடம் !

கடந்த காலங்களில் தமிழரின் பூர்வீக பகுதிகளாக கருதப்படும் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலை பாரிய வீழ்ச்சி கண்டிருந்ததது. தரம் 11 மாணவர்களின் பெறுபேறுகளில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பாரிய சரிவை உச்சகட்டமாக எதிர்கொண்டிருந்தன. மாகாண அடிப்படையில் 8, 9 இடங்களையே வடக்கு கிழக்கு மாகாணங்கள் பெற்றிருந்தன. தமிழர் பகுதிகளின் கல்விச்சூழல் தொடர்பில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை மிகத்தெளிவாக அவதானிக்க முடிந்ததது.

இந்த நிலையில் அண்மையில் வெளியாகியிருந்த 2021 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மீண்டும் வடக்கு – கிழக்கு பகுதியை சேர்ந்த தமிழ் மாணவர்கள் தங்களுடைய திறமையை சிறப்பாக வெளிப்டுத்தியுள்ளதை காண முடிகின்றது.

No description available.

2020ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி கிழக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்தை பெற்றிருந்ததது. வடக்கு மாகாணம் 06ஆவது இடத்தையும் பெற்றிருந்தது. இந்த நிலையில் வெளியாகியுள்ள  2021 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பகுப்பாய்வின் படி பாடசாலைப் பரீட்சார்த்திகளின் பெறுபேற்றின் அடிப்படையில் கிழக்கு மாகாணம் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் பெறுபேற்றின் (2021) படி பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் . 11237 மாணவர்கள் பல்கலைகழக அனுமதிப்பிற்கான தகுதியை பெற்றுள்ளனர்.

வடக்கு மாகாணத்தின் பெறுபேறுகள் மாகாண அடிப்படையில் மூன்று இடங்கள் முன்நோக்கி நகர்ந்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. 2020ஆம் ஆண்டின் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்திலிருந்து பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்களில் சுமார் 1500 மாணவர்கள் வரையில் அனைத்து பாடங்களிலும் சித்தியடைய தவறியிருந்தனர். எனினும் இந்த நிலையில் இந்த வருட பெறுபேறுகள் ஓரளவு சிறந்த முன்னேற்றத்தை காட்டுகின்றன. வடக்கு மாகாணத்திலிருந்து 2021ல் பரீட்சைக்கு தோற்றிய 12388 மாணவர்களில் சுமார் 8000க்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைகழக கற்கைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியை பெற்றுள்ளனர்.

No description available.

2021 உயர்தர பெறுபேறுகளில் மாவட்டங்களின் அடிப்படையிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

2020 பரீட்சை பெறுபேறுகளின் படிவடக்கு கிழக்கு மாகாணங்கள் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியிருந்தன. முதல் 5 இடங்களுக்குள் எந்த வடக்கு – கிழக்கு மாகாண மாவட்டங்கள் எவையுமே இடம்பெற்றிருக்கவில்லை.

தமிழர்கள் மீதான இன அடக்குமுறையின் ஒரு வடிவமாக வடக்கு – கிழக்கு பகுதி தமிழர்களின் கல்வி நிலையை வீழ்த்துவதில் பல சதிகள் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்திருந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டின் உயர்தர  வடக்கு மாகாணத்தின் பெறுபேறுகள் இதன் நீடித்த தாக்கத்தின் விளைவை வெளிப்படையாக எடுத்துக்காட்டியிருந்தன. யாழ்ப்பாணத்தை தவிர ஏனைய வடக்கின் மாகாணங்கள் பாரிய பின்டைவை சந்தித்திருந்தன.

மாவட்ட அடிப்படையில் வடக்கில் போரினால் அதிகம்  பாதிக்கப்பட்ட பிரதேசங்களான முல்லைத்தீவு 17ஆவது இடத்தினையும், கிளிநொச்சி 21 ஆவது இடத்தினையும் பெற்றிருந்தன. இதுதவிர மாவட்ட அடிப்படையில் மட்டக்களப்பு 21ஆவது இடத்தினையும், வவுனியா இறுதி இடமான 25வது இடத்தையும் பெற்றிருந்தது.

 

 

 

No description available.இந்த நிலையில் வெளியாகியுள்ள  2021 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பாடசாலைப் பரீட்சார்த்திகளின் பெறுபேற்றின் அடிப்படையில் பல்கலைகழகத்தெரிவுக்கான அடிப்படை தகுதியை பெற்றுள்ள மாணவர் தொகையினடிப்படையிலான  பகுப்பாய்வின் படி  வடக்கு – கிழக்கு மாகாணங்களின் மாவட்டங்கள் கனிசமானளவு முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன.

 

மாவட்ட அடிப்படையிலான பெறுபேறுகளின் படி (அதாவது தோற்றுகின்ற மூன்று பாடங்களிலும் சித்தியடைவதுடன் –  common general test லும் சித்தியடைவோரின் தொகையின் படி ) மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு என்பன முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளமையானது குறிப்பிடத்தக்கது. கடந்த வருட பெறுபேறுகளின் படி 10ஆவது இடத்திலிருந்த யாழ்ப்பாண மாவட்டத்தின் பெறுபேறுகள் அடிப்படையிலான நிலை 7ஆவது இடத்தினை நோக்கி நகர்ந்துள்ள அதே நேரம், வவுனியா மாவட்டம் 25ஆவது இடத்திலிருந்து 15ஆவது இடத்துக்கு நகர்ந்துள்ளது. அதே நேரம் இந்த பட்டியலில் முல்லைத்தீவு 8ஆவது இடத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

அதே நேரம் கிளிநொச்சி மாவட்டத்தின் பெறுபேறுகள் மேலும் பின்னடைவை சந்தித்துள்ளதை காண முடிகின்றது. கடந்த வருடத்தில் கொரோனா பரவலை பலர் காரணம் காட்டினாலும் கூட இந்த பிரச்சினை எல்லா மாவட்டங்களுக்கும் பொதுவானதே. ஆகவே கிளிநொச்சி மாவட்ட வலயக்கல்வி அலுவலகங்கள் அடுத்தடுத்த காலங்களில் கிளிநொச்சி மாவட்ட கல்வி அடைவு வீதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அதிக தேவையுள்ளதை இந்த பெறுபேறுகள் தெளிவாக காட்டுகின்றன.

இந்த பெறுபேறுகளின் முடிவுகள் கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை காட்டுகின்ற அதே நேரம் வடக்கு – குறிப்பாக யாழ்ப்பாணம் தன்னுடைய கல்வி அடைவு மட்டத்தில் தொடர்ந்து  பின்னடைவை சந்தித்து வருவதை அண்மைய கால பெறுபேறுகள் எடுத்துக்காட்டுகின்றது. 2020 ஆம் ஆண்டில் 5000 மாணவர்கள் வரையில் பல்கலைகழக விண்ணப்பிப்புக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் இந்த வருடம் 4500 மாணவர்களே தெரிவாகியுள்ளனர் . பல்கலைகழக இறுதி  தெரிவு அடிப்படையில் கணிக்கும் போது இந்த தொகை இன்னமும் குறைவடையும். தன்னை கல்விச்சமூகமாக அடையாளம் காட்டிக்கொண்டு வந்த யாழ்ப்பாணத்தின் கல்வி நிலை இன்னமும் முன்னேற்றமானதாக மாறவேண்டிய – மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாணவர்களிடையே  வேகமாக துளிர்விடும் போதைப்பொருள் கலாச்சாரத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டுமாயின் யாழ்பாபண கல்விச்சமூகம் மீண்டும் விழிப்பு நிலைக்கு வந்து செயலாற்ற வேண்டிய தேவையுள்ளது.

கல்விக்காகவே எமது தமிழ்சமூகம் கடந்த காலத்தில் பல இன்னல்களை சந்தித்தது. போர்க்காலங்களிலும் சரி – இடப்பெயர்வுகளின் போதும் சரி – வறுமையின் போதும் சரி நமது தமிழ்சமூதாயம் கல்வியை இறுக்கமாகப்பிடித்திருந்ததது. எனினும் அண்மைய காலங்களில் வேகமாக மாணவர்களிடையே அதிகரித்துள்ள  தொலைபேசிப்பாவனை, மக்களிடம் பரவியுள்ள வெளிநாட்டு மோகம், போதைப்பொருள் கலாச்சாரம், பணம் ஈட்டும் தொழிலாக கல்வி மாறியுள்ளமை என பல காரணங்களால் வடக்கு -கிழக்கின் கல்வியும் அபாயமான ஒரு சூழலை எட்டியுள்ளது.

எனவே வடக்கு – கிழக்கின் கல்விமான்களும் – ஆசிரியர்களும் – அரச அதிகாரிகளுமாக இணைந்து வடக்கு – கிழக்கில் மீண்டும் முன்னேற்றமடைய ஆரம்பித்துள்ள இந்த ஆரோக்கியமான கல்விச்சூழலை இன்னும் ஆக்கபூர்வமாக வளர்த்தெடுக்க இயங்க வேண்டும்.

ராஜபக்சாக்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்!

யாரும் விரும்பியோ விரும்பாமலோ இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை ராஜபக்சக்களுக்குரியது. இந்தப் பெருமையை எவரும் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து அகற்றிவிட முடியாது. புலிகளின் தமிழ் தேசியம் சிங்கள தேசியமும் ஒன்றையொன்று வளர்த்துக்கொண்டேயிருக்கும். சிங்கள தேசியத்தின் தலைவராக ராஜபக்சாக்கள் இருப்பார்கள். அது வரலாறாகின்போன உண்மை. சிறிலங்கா சுதந்திரக் கட்சி இலங்கையின் வரலாற்றில் இரு பெரும் போராட்டங்களை முற்றிலுமாக அழித்துள்ளது. இது உலக போராட்ட வரலாற்றிலேயே முக்கியமானது. அப்படி இருந்தும் இலங்கை இராணுவம் அரசியலில் தலையீடு செய்யவும் இல்லை. ஆட்சியைக் கைப்பற்றவும் இல்லை. இன்னமும் அரசியல் தலைவர்களுக்கு கட்டுப்பட்டே செயற்படுகின்றது. ராஜபக்சாக்களைக் காப்பாற்றியது கூட இராணுவத் தலைமையே.

அரகலியாக்களின் போராட்டத்தை தடுக்க கோட்டபாயா ராஜபக்ச கட்டளை வழங்கி இருந்தால் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி இருந்தால் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கும். ஆட்சியை சிலவேளை தக்க வைத்திருக்க முடியும் ஆனால் அவர்களுக்கு இருக்கும் சிங்கள தேசியத்தின் மீதான பிடி தளர்ந்த்து இருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் தலைமைக்கு ஆபத்து வருகின்ற போது தங்கள் மக்களுக்கு எதிராகவே தங்கள் ஆயதங்களை திருப்பினர். மக்களையே மண்மூட்டையாகப் பாவித்தனர். ஆனால் கோட்டபாய ராஜபக்ச தான் தப்பி ஓடுகின்ற போது கூட அரகலியாக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை. வலிந்து படைபலத்தினூடாக ஆட்சியைத் தக்க வைக்கவும் முயற்சிக்கவில்லை. மீண்டும் தேர்தல் மேடைக்கு வரும் நம்பிக்கையோடு தான் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

எண்பதுகளுக்கு பிற்பாடு இலங்கையில் அபிவிருத்திக் கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டது ராஜபக்சக்களின் காலத்திலேயே. வறுமை ஆறு வீதத்திற்கு குறைக்கப்பட்டு இருந்தது. கொழும்பு நகர்ப்புறம் அழகுபடுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டது. நாடு பூராவும் குறிப்பாக வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இன்று வடக்கில் மண் வீடுகள் கொட்டில்கள் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

விலை வீக்கத்தை குறைக்க வரியைக் கூட்ட வேண்டும் என்பது பொருளியலாளர்களின் ஒரு எடுகோள். பிரித்தானியாவிலும் விலைவீக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் பிரித்தானிய ஆளும்கட்சியின் தலைமைப் பதவியை வெல்லப் போவவராகக் கருதப்படும் லிஸ் ரஸ்ட் வரியைக் குறைப்பேன் என்று உறுதியாக அறிவித்து பலத்த ஆதரவையும் பெற்றுள்ளார். ஆனால் பிரித்தானியாவுக்கு அந்நியச் செலாவணி கையிருப்பு நெருக்கடி இல்லை. ஆனால் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டபாய ராஜபக்சவும் வரியைக் குறைத்துக் கொண்டார். அவர் வரிக்குறைப்புச் செய்தது கோவிட்டுக்கு முன்னைய காலப்பகுதியில். வரியைக் குறைத்தால் நாட்டில் முதலீடுகள் அதிகரிக்கும் உற்பத்தி அதிகரிக்கும் என்பது அவருடைய கணக்கு. ஆனால் துரதிஸ்ட வசமாக வரிக்குறைப்பைத் தொடர்ந்து கோவிட் பரவியது. நாடு முடக்கப்பட்டது. முதலீடுகள் உற்பத்திகள் அனைத்தும் ஸ்தம்பித்தது. வரிமூலம் திறைசேரிக்கு வரவேண்டிய வருமானம் ஸ்தம்பித்தது. நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சென்றது.

கோவிட் பாரிய நோய்ப் பரம்பல் மிகத் தீவிரமாக பரவி வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. செல்வந்த நாடான அமெரிக்காவிலேயே இன்றைக்கும் நூற்றுக்கணக்காணவர்கள் மரணித்துக்கொண்டு தான் உள்ளனர். அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டிவிட்டது. அயல்நாடான இந்தியாவில் 5 மில்லியன் பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. ஆனால் பொருளாதாரத்தை பற்றி எண்ணாமல் உயிர்களைக் காப்பாற்றிட வேண்டும் என்ற அடிப்படையில் மிகக் கடுமையான முடக்கத்தை கொண்டு வந்தபடியால் இலங்கையில் கோவிட் தொற்றினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைக்கப்பட்டது. அதற்காக நாடு பொருளாதார ரீதியாக பெரும் விலையைக் கொடுத்தது. நாட்டின் மொத்த உள்ளுர் உற்பத்தியின் 13 வீதத்தை ஈட்டித் தரும் உல்லாசப் பயணத்துறை ஸ்தம்பித்தது.

அந்நியச் செலாவணி கையிருப்பு இன்மையால் அசேதனப் பசளை இறக்குமதியை திடிரென நிறுத்தியதால் சேதனப்பசளைக்கு மாறும்படி அரசு அறிவித்தது. கோட்டபாயாவின் இந்த முடிவு நீண்ட கால நோக்கில் மிகுந்த நன்மையை ஏற்படுத்துவதாக இருந்த போதும் உடனடியாக நாட்டின் உணவு உற்பத்தியில் மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியது. அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் மற்றுமொரு துறையான பெரும்தோட்டத் துறையிலும் பாரிய வீழ்ச்சியைக் கொடுத்தது. அரசு சேதனப் பசளைப் பாவனையை நிரந்தரமான ஒரு மாற்றமாக அறிவிக்காமல் நெருக்கடியைத் திசை திருப்புவதற்கான ஒரு உபாயமாகவே பயன்படுத்தியது. அதனால் சிறந்த ஒரு கொள்கைத் திட்டம் மக்களால் ஏற்றுக்கொள்ளபடாமல் போனது.

கோட்டபாயாவின் எரிபொருள் கொள்கையும் குறிப்பிடத்தக்கது. 2030இல் இலங்கையை 60 வீதம் இயற்கையூடாக பெறக்கூடிய காற்று, சூரிய ஒளி, மற்றும் நீர் மின்சாரம் மூலம் உற்பத்தி செய்து டிசல் நிலக்கரி மூலமான மின்சார உற்பத்தியை குறைக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது. நாட்டின் உறுதியான பொருளாதாரக் கொள்கைகளைத் திட்டமிட்டு நடத்தக்கூடிய அரசியல் பலம் ராஜபக்சக்களிடம் மட்டுமே இன்றும் உள்ளது.
ஆடுகள் நனைகிறது என்று ஓநாய்கள் கூடி அழுகின்றது:

முற்றிலும் ஜனநாயக அரசியல் அணுகுமுறை என்பது பாராளுமன்ற ஜனநாயகத்தின் பிறப்பிடமான பிரித்தானியாவிலேயே முழுமையான வெற்றியளிக்கவில்லை. பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. கட்சி ஆதரவாளர்களிடையே மிகச் செல்வாக்குப் பெற்றிருந்த ஜெரிமி கோபின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்த போதும் ஜனநாயகத்தின் பெயரில் அவர் திட்டமிட்டு ஓரம்கட்டப்பட்டார், அன்ரி செமற்றிசம் என்ற புனையப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருடைய கட்சியின் உறுப்புரிமையே பறிக்க முயற்சிக்கப்பட்டது. அன்ரி செமற்றிசம் என்பது நாசிக்களினால் யுதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மறுப்பது. ஆனால் பாலஸ்தீனியர்களின் இன்றைய நிலைக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பேசினால் அதனை அன்ரி செமற்றிசம் ஆக்கி, ஜனநாயக விரோத மூலாம்பூசி, முதலாளித்துவ சக்திகள் முற்போக்கு சக்திகளை அரசியலில் இருந்தே ஓரம்கட்ட முயற்சிக்கின்றனர். இவ்வாறான செயல்களுக்கு முட்டையில் மயிர்பிடுங்கும் தீவிர இடதுசாரிகளும் ஆதரவளிப்பார்கள். இவர்கள் வலதுசாரிகளுடன் சேர்ந்த பிரிக்ஸிற்றையும் ஆதரித்தனர்.

அமெரிக்கா தன்னை ஜனநாயகத்தின் காவலனாகக் காட்டிக்கொண்டு கறுப்பினத்தவர்களை காலால் நெரித்தும் தெருநாய்களைப் போல் சுட்டும் கொல்கின்றனர். தன்னியக்க துப்பாக்கிகளை விளையாட்டுப் பொருட்களாக விற்கும் அமெரிக்காவில் குழந்தைகள் பாடசாலைகளிலேயே சுட்டுக்கொல்லப்படுகின்றனர். அதற்கு அமெரிக்க ஜனநாயகம் இடமளிக்கின்றது. பெண்கள் கருக்கலைப்பு செய்வதை அமெரிக்க ஜனநாயகம் தடுக்கின்றது. அவர்களைக் கொலைகாரர் என்று முத்திரை குத்துகிறது. இந்த ஜனநாயகத்தை ஈராக்கிற்கு, லிபியாவுக்கு, சிரியாவுக்கு ஏற்றுமதி செய்கிறோம் என்று சொல்லி அந்நாடுகளைச் சீரழித்தனர். தற்போது அமெரிக்க ஜனநாயக ஏற்றுமதி இலங்கையில் மையம் கொண்டுள்ளது.

அமெரிக்க சார்பு ஊடகங்களின் வர்ணிப்பின் படி: இலங்கை மக்களுக்கு ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சியில் ஜனநாயகம் இல்லையாம். அதனால் ஊழலாம். பொருளாதார நெருக்கடியாம். இலங்கை பொருளாதார நெருக்கடி அமெரிக்க சார்பு ஊடகங்களை கண்கலங்க வைத்தது. மக்கள் வறுமைக்குள் வாடுவதாக, மக்கள் பட்டினிக்குள் தள்ளப்படுவதாக இந்த ஊடகங்கள் முதலைக் கண்ணீர் வடித்தது. இடதுசாரி லிபரல்களையும் நீச்சல்குளத்தோடு வாழும் மனித உரிமைச் சட்டத்தரணிகளையும் கொண்டு வந்து ஐஎம்எப் இலங்கையை காப்பாற்ற வேண்டும் என்று புலம்புகின்றனர். ஆடுகள் நனைகின்றதாம் என்று ஓநாய்கள் கூடி அழுகின்றது. இது தான் சர்வதேசத்தில் இலங்கையின் நிலை.

காட்டுமிராண்டிகள் போல புதுமுக மாணவர்களை தாக்கியுள்ள யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் – தரங்கெட்டு போய்க்கொண்டிருக்கும் வடக்கின் கல்வி நிலை !

அண்மைய காலகட்டங்களில் வடக்கில் அடுத்தடுத்து சமூக சீரழிவுகளும் – சமூக வன்முறைகளும் பெருகி கொண்டிருக்கின்றன. அண்மையில் கூட முல்லைத்தீவில் ஒரு பாடசாலை ஆசிரியர் உயர்தர ஆண் மாணவர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி குறித்த மாணவர்களின் உதவியுடன் பாடசாலை மாணவிகளை நிர்வாணமாக்கி வீடியோக்களை எடுத்திருந்தனர். அதுபோல யாழ்ப்பாண நகர்புறத்தில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவரிடம் இருந்து அண்மையில் ஹெரோயின் போதைப்பொருள் போலீசாரால் கைப்பற்றப்பட்டிருந்தது. இது தவிர க.பொ.த சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையிலும் – உயர்தர பரீட்சை பெறுபவர்களின் அடிப்படையில் வடக்கு மாகாணமே ஒன்பதாவது நிலையில் உள்ளது. (இலங்கையில் ஒன்பது மாகாணங்களே உள்ளன)

இது தான்  வடக்கின் அண்மைய கால கல்வி நிலை.

இவ்வாறான ஒரு நிலையிலிருந்து வடக்கின் கல்வியை மீட்பதற்கு மிகப்பெரும் பொறுப்போடு செயல்பட வேண்டிய தேவை வடக்கு தமிழர் கல்வி வளர்ச்சியின்  மிகப்பெரிய மத்திய நிலையம் என கடந்த காலங்களிலிருந்து தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு உண்டு. ஆனால் இன்று வரை இதன் தேவையை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உணரவே இல்லை என்பதே ஆக வேதனையான விடயம்.

வருடா வருடம் என்ன சம்பவங்கள் நடக்கின்றனவோ அல்ல இல்லையோ பகிடிவதை தொடர்பான ஏதேனும் ஒரு பெரிய குற்றம் பதிவாகிவிடும். விசாரணைகள் தீவிரமாக நடக்கின்றன மாணவர்களுக்கு வகுப்பு தடைகள் வழங்கப்பட்டன என  சில செய்திகள் வெளியாகுமே தவிர பகிடி வதைகளை முழுமையாக இல்லாது செய்ய எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் யாழ்.பல்கலைகழக சமூகம் மேற்கொண்டதாக இதுவரை  தெரியவில்லை.

இந்த நிலையில் அண்மையில்  பல்கலைக்கழகத்திற்கு தெறிவாகியுள்ள புதுமுக  மாணவர்களை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் காட்டுமிராண்டிகள் போல அடித்து சித்திரவதைப்படுத்தியுள்ள  ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்;

யாழ்.பல்கலைக்கழத்தின் புதுமுக மாணவர்களை ஒன்று கூடல் எனும் பெயரில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதிக்கு அழைத்து பகிடி வதைக்கு உட்படுத்தப்படுவதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த . கனகராஜ்க்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது . முறைப்பாட்டின் பிரகாரம் அது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு இணைப்பாளரால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது . அதனை அடுத்து சட்ட நிறைவேற்று அதிகாரி , மாணவர் ஆலோசகர் மற்றும் மாணவர் ஒழுக்காற்று அதிகாரி உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று புதுமுக மாணவர்களை சிரேஷ்ட மாணவர்களிடம் இருந்து மீட்டுள்ளனர் . அதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் சிரேஷ்ட மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்பத்தடை விதிக்கப்பட்டுள்ளது . அதேவேளை சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் தனது பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளததாக பல்கலைக்கழக தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் மேற்கொண்ட பகிடிவதைகள் நிரூபிக்கப்பட்டால் இரண்டு வருடங்களுக்கு பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளில் இருந்து மாணவர்கள் நீக்கப்படுவார்கள் என இலகுவான தண்டனை ஒன்றையும் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது பகிடிவதைகள் தொடர்பில் யாழ்.பல்கலைகழகத்தின் பொறுப்பற்ற அறிவிப்பாகவே பார்க்க முடிகிறது.

முன்னைய காலப்பகுதிகளில் தமிழர் சமுகத்தின் உரிமை சாரந்த பிரச்சினைகளுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் குரல்கொடுத்து வந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இன்று தன்னுடைய அடையாளத்தை இழந்து முழுமையாக வேறு கோணத்தில் பயணிக்க ஆரம்பித்துள்ளது என்பதையே பகிடிவதை தொடர்பான தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன. யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியும் வெறுமனே பாடசாலை கல்வி போல புத்தகங்கள் வழியானதாக  மட்டுமே மாறிப்போயுள்ள நிலையில் மாணவர்களை சமூகத்துக்கு உரியவர்களாக மாற்றாது புத்தகப் பூச்சிகளாக மாற்றி அனுப்புவதை மட்டுமே இந்த யாழ்ப்பாண  பல்கலைக்கழகம் செய்து கொண்டிருக்கிறது.

யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடி வதைகள் தொடர்ந்தும் இடம் பெற்றுக் கொண்டிருப்பதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களே முழு காரணம். தற்போதைய யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்டு சொல்லும் சில விரிவுயாளர்களை தவிர ஏனைய விரிவுரையாளர்கள் ஒரு உழைப்பதற்கான தளமாக மட்டுமே பல்கலைக்கழகத்தை மாற்றியுள்ளனர் – பார்க்கின்றனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு நிலை மிகப் பெரிய விரிசலிலேயே இன்று வரை காணப்படுகின்றது. “எனக்கு சம்பளம் வருகிறது நான் அவர்களுக்கு கற்பிக்கிறேன்“ இந்த மனோநிலையை பல்கலைகழகத்தில் பாதிக்கும் அதிகமான விரிவுரையாளர்களிடம் காணப்படுகின்றது. இவர்கள் மாணவர்களிடம் அடிப்படை மனிதாபிமானம் பற்றியோ – பல்கலைகழக மாணவர்களின் சமூகப் பொறுப்பு பற்றியோ மறந்தும் கூட பேசுவது கிடையாது. பிறகு எவ்வாறு ஆரோக்கியமான சமுதாயம் ஒன்றின் உருவாக்கத்தை  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து எங்களால் எதிர்பார்க்க முடியும்..?

முன்பெல்லாம் தங்களுடைய பிள்ளைகளை சைக்கிள்களிலும் – மோட்டார் சைக்கிளிலும் ஏற்றிச் சொல்லும் பெற்றோர் யாழ்.பல்கலைகழக வளாகத்தை கடக்கும் போது இந்த பல்கலைக்கழகத்துக்கு பிள்ளையை எப்படியாவது படிக்க அனுப்ப வேண்டும் என எண்ணுவர். ஆனால் இந்த பகிடிவதை கலாச்சாரத்தாலும் – முறையற்ற கற்பித்தலாலும்  இன்று நிலை தலைகீழாகியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் வேண்டாம் என கூறும் நிலை பெற்றோர் மத்தியில் உருவாகியுள்ளது.

தமிழர் பகுதிகளின் கல்வி முன்னேற்றத்துக்கான  நடவடிக்கைகளுக்காகவும் – சமூக மாற்றத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு வடக்கின் மிகப்பெரிய கல்வி நிலையம் என்ற அடிப்படையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு உண்டு. ஆனால் இதன் பெறுதியை அங்குள்ள விரிவுரையாளர்களும் சரி மாணவர்களும் சரி உணர்ந்து கொண்டு உள்ளார்களா..? என்றால் இல்லை என்பதே விடை.

தமிழர் பகுதிகளில் இன்னமும் சீர்படுத்தப்பட வேண்டிய எத்தனையோ  சமூகப் பிரச்சனைகள் உள்ளன. அவற்றை முன்னின்று தீர்ப்பதில் யாழ்.பல்கலைகழக மாணவர்களதும் – பல்கலைக்கழக சமூகத்தினதும் பங்களிப்பு மிக அத்தியாவசியமானதாக உள்ள நிலையில் பொறுப்பற்ற இந்த மாணவர்கள் இன்னமும் வன்முறையை வளர்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த பகிடிவதைகளில் ஈடுபடும் இதே மாணவர்கள் இன்னமும் கொஞ்ச நாட்களில் பட்டமும் பெற்றுக்கொண்டு அரச வேலைகளில் – ஆசிரியர்களாக பாடசாலைகளில்  புகுந்துவிடுவார்கள். பின்பு இவர்கள் இவர்களை போல வன்முறை குணம் கொண்ட ஒரு சமூகத்தை தான் உருவாக்க போகிறார்களே தவிர ஆரோக்கியமான சமூக்த்தை அல்ல.

நீண்டகாலமாக பகிடிவதைக்கான ஆகப்பெரிய தண்டனையாக வகுப்புத்தடைகள் மட்டுமே காணப்படுகின்றன. இதனால் எந்த மாற்றமுமே வரப்போவதில்லை. அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாத இழிவான செயல்களை செய்யும் இந்த மாணவர்களை நேரடியாகவே பல்கலைக்கழக கல்வியில் இருந்து நீக்கிவிடுவதே இந்த பகிடிவதைக்கான தீர்வு. அல்லாது விடின் இது வாழையடி வாழையாக இனிமேலும் தொடரத்தான் போகிறது.

அடிப்படை மனிதாபிமானத்தை கூட கற்றுத் தர முடியாத கல்வியால் என்ன பயன்..?

கோட்டாபய ராஜபக்ச போய் ரணில் ராஜபக்ச வந்தார்!! அமெரிக்க – ஐஎம்எப் க்கு கைக்கூலியானது காலிமுகத்திடல் போராட்டம்!!!

காலிமுகத்திடல் அரகலியாக்களின் போராட்டம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை விரட்டிவிட்டு அமெரிக்க – ஐஎம்எப் (சர்வதேச நாணய நிதியம்) ஆல் சிபாரிசு செய்யப்பட்ட ரணிலை ஜனாதிபதியாக்கியது. அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. தங்கள் காரியம் நடந்து முடிந்ததும் அரகலியாக்களை அடித்து விரட்டினர். கோட்டபாய ராஜபக்ச மக்களால் தெரிவு செய்யப்பட்டு இருந்தும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையைக் கொண்டிருந்தும் அரகலியாக்களுக்கு எதிராக தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தவில்லை. அரகலியாக்களின் போராட்டத்தினால் நட்டைவிடே ஓடி பதுங்கி இருக்கின்றார். விரும்பியோ விரும்பாமலோ அதிகாரம் ராஜபக்சக்களின் வசமே இன்னமும் உள்ளது. ராஜபக்சக்கள் யாரைக் காட்டினார்களோ அவர் – ரணில் ராஜபக்ச ஜனாதிபதி ஆக்கப்பட்டார்.

அரகலியாக்களும் அமெரிக்க – ஐஎம்எப் கூடலும் ஊடலும்:

இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான சந்தைப் பொருளாதாரத்தையும் அதனை கண்மூடித்தனமாக அமுல்படுத்தக் கோரும் ஐஎம்எப் – சர்வதேச நாணய நிதியத்தைப் பற்றியும் உலக வங்கியைப் பற்றியும் காலிமுகத்திடல் அரகலியாக்கள் மூச்சேவிடவில்லை. கடன்களை மீளக்கொடுப்பதை நிறுத்தவும் அரகலியாக்கள் கோரவில்லை. அப்படிக் கோரி இருந்தால் நாடு எதிர்காலத்தில் சுயசார்பாக வந்துவிடும். ஐஎம்எப் – உலகவங்கிக்கு அடிமையாக இராது. அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் முழுமையான ஆதரவு போராட்டகாரர்களுக்கு வழங்கப்பட்டு இராது. இந்தப் போராட்டத்தை மேற்கு நாடுகள் கண்டுகொண்டிராது. போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்களுக்கு 45 மில்லியன் டொலர் வழங்கப்பட்டும் இராது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கோக்கோ கோலா குடிபானம் முதல் இலவச உணவுகள் வழங்கப்பட்டிராது.

ஆனால் நடந்தது என்ன? மேலே சொன்னதெல்லாம் போராட்டகாரர்களுக்கு வாரி வழங்கப்பட்டது. காற்று வாங்க வந்த போராட்டகாரர்களுக்கு முதலுதவி முகாம்கள் அமைக்கப்பட்டது. மேற்குறிப்பிட்டது போல முதற்தரமான சகல வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் உலகில் வேறெங்கும் நடக்கவில்லை. காலிமுகத்திடலில் நடந்த ‘கோட்டா கோ கம – கோட்டா கோ ஹோம்’ போராட்டம் தான் உலகில் நடைபெற்ற ஒரே செழிப்பான போராட்டம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் காரிலும் மோட்டார் சைக்கிள்களிலும் வந்துதான் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இறுதிக் கட்டத்தில் தான் கும்பலில் கோவிந்தா என்று பெரும் தொகையானோர் ஈர்க்கப்பட்டனர். இதனை ஜேவிபி இன் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.

பிரித்தானியாவில் இயங்கும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி ஐஎம்எப் இன் நிபந்தனைகளை நிராகரிக்கவும் கடன்களை மீளச்செலுத்த வேண்டாம் என்பது உட்பட பல முற்போக்கான கோரிக்கைகளை வைத்தது. ஆனாலும் இக்கோரிக்கைகள் பெரும்பாலும் தட்டிக்கழிக்கப்பட்டது. தங்கள் கோரிக்கைகள் தட்டிக் கழிக்கப்பட்ட போதும் கூட தமிழ் சொலிடாரிட்டி அரகலியாக்களுடைய அமெரிக்க ஐஎம்எப் சார்புநிலைக்கு ஆதரவளித்தனர். இந்தப் போராட்டங்களில் தலையைக் காட்டாவிட்டால் தாங்கள் துரோகிகள் ஆகிவிடுவோம் என்பதால் மேற்கத்திய ஜனநாயகத்தால் ஈர்க்கப்பட்ட லிபரல்களும் இடதுசாரிகளும் கூட தங்கள் தங்கள் நாடுகளில் ஆதரவுப் போராட்டங்களை கொப்பிகற் முறையில் அல்லது குழவாத உளவியல் மற்றும் டொமினோ தாக்கம் போல் மேற்கொண்டனர்.

அமெரிக்க – ஐஎம்எப் நலன்களுக்காகப் போராடிய இந்த அரகலியாக்களை அமெரிக்க – ஐஎம்எப் ஆதரவு பெற்ற ரணில் பதவியேற்ற 24 மணிநேரங்களிற்குள்ளாக இரவோடு இரவாக விரட்டி அடித்தார். நீதிமன்ற உத்தரவைப் பெற்று, அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி அவர்களை விரட்டி அடித்து, ரணில் தன்னுடைய வீட்டை எரித்ததற்குப் பதிலடி வழங்கினார்.

மக்கள் செல்வாக்கற்ற காலிமுகத்திடல் அரகலியாக்கள்:

பிரித்தானியாவில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்ததும் அவருடைய கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தாங்கள் அடுத்த தேர்தலலில் வெற்றி பெறுவது கடினம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அதனால் அவர்கள் பொறிஸ் ஜோன்சனுக்கு பதிலாக இன்னொருவரை புதிதாக தெரிவு செய்வதன் மூலமே தாங்கள் மக்களிடம் செல்ல முடியும் என்று நம்பினர். அதனால் 24 மணி நேரத்திற்குள் வரலாறு காணாத அளவில் 49 அமைச்சர்கள், துணை அமைசர்கள் பதவி விலகினர்.

ஆனால் ஆறு மாதகாலம் நீடித்த போராட்டத்தின் போதும் அதன் பின் கோட்டபாய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறிய பின்னும் கூட அவருடைய அமைச்சரவையிலோ பாராளுமன்ற பெரும்பான்மையிலோ குறிப்பிடத்தக்க சலசலப்பு ஏற்படவில்லை. அதற்குக் காரணம் கோட்டபாய ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் முன்னணி – பொதுஜனப் பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் அடுத்த தேர்தலிலும் வெற்றிபெறுவோம், அதற்கு ராஜபக்சக்களின் தலைமை தேவை என்ற நம்பிக்கையிலேயே இருக்கின்றனர். பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவு அதனை மிகத் தெளிவாக்கி உள்ளது.

போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜேவிபிக்கு பாராளுமன்றத்தில் மூன்று வாக்குகள் மட்டுமே கிடைத்தது. தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கு இப்பதவியை ராஜபக்சாக்களின் பொதுஜன பெரமுன கட்சியினரே வழங்கி இருந்தனர். 134 வாக்குகளை அவர் பெற்றிருந்தார். மறுமுனையில் ரணிலுக்கு எதிராக களமிறக்கப்பட்டவர் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர். அவர் 82 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரும் ராஜபக்சாக்களின் நெருங்கிய சகா. இவ்விருவரில் யார் வெற்றி பெற்றிருந்தாலும் அவர் ராஜபக்சக்களின் அதரவுடனேயே ஆட்சியை மேற்கொள்கின்றார் என்பதே உண்மை. தற்போதைய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவும் ராஜபக்சக்களுக்கு மிகவும் விசுவாசமானவர். இவர்கள் அமைக்கின்ற அமைச்சரவை உறுப்பினர்களும் ராஜபக்சாக்களின் அமைச்சரவை உறுப்பினர்களாகவே உள்ளனர். இலங்கை மக்கள் மத்தியில் ராஜபக்சக்களின் ஆதரவுத் தளத்தில் எவ்வித பாரிய பாதிப்பும் ஏற்பட்டு இருக்கவில்லை என்பதையே இது காட்டுகின்றது.

இழப்பதற்கு தம்முடைய வறுமையைத் தவிர எதுவுமற்ற மக்கள் அமெரிக்க நலன்களுக்கும் ஐஎம்எப்க்கும் மசிந்துவிட மாட்டார்கள். காலிமுகத்திடல் அரகலியாக்களுக்கும் இலங்கை வாழ் சாதாரண மக்களுக்கும் இடையே பாரிய இடைவெளி உள்ளது. கொழும்பில் நீர்த்தடாகத்தோடு வீடுவைத்திருக்கும் ஒரு மனிதவுரிமை சட்டத்தரணி, தான் நடுத்தரவர்க்கம் என்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படுவதாகவும் கதையளந்தால் மலையகத்தில் லயன்களில் இலங்கையின் அடிப்படைச் சம்பளத்திலும் குறைவாக சம்பளம் பெறும் குடும்பங்கள் என்ன கருதும்?

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் காரும் மோட்டார் சைக்கிளும் வைத்துள்ளவர்கள். இலங்கை மக்கள் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மருத்துவக் காப்புறுதி உடையவர்கள். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சக்தி கொண்டவர்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தங்களுடைய நாளாந்த தேவைக்கு பெற்றோல் வேண்டும். சமைக்க எரிவாயு வேண்டும். அவர்களுக்கு பெற்றோலுக்கு மானியங்கள் தேவையில்லை. கள்ளச்சந்தையில் பெற்றோலை லீற்றர் 3,000 ரூபாய்க்கும் வாங்கி ஓடக்கூடியவர்கள். ஆனால் இலங்கையின் கிராமப் புறங்களிலேயே வாழும் பெரும்பாலான மக்கள் எரிவாயுவை பயன்படுத்த தெரியாதவர்கள். அடுப்பூதி ஈர விறகை வைத்தே சமைப்பவர்கள். பல லட்சம் கொடுத்து காரையோ மோட்டார் சைக்கிளையோ வாங்க இயலாதவர்கள். சைக்கிள் இல்லாவிட்டால் பொதுப் போக்குவரத்தில் வாழ்பவர்கள்.

இந்த போராட்டங்களில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு ரூபாயாவது வேலை செய்து சம்பாதிக்காதவர்கள். பெற்றோரை கஸ்டப்படுத்தி மோட்டார் சைக்கிளும் அவர்களிடமே ஓசியில் பெற்றோலும் அடித்து முறுக்கித் திரிபவர்கள். ஓசியிலேயே வாழும் இந்த ஜீவன்களுக்கு வாக்களித்து பழக்கம் இருக்கா என்பதே சந்தேகம். இவர்கள ஏன் போராடினார்கள்? என்னத்தை கோரினார்கள்?

‘கோட்டா கோ ஹோம் – பில் மை பெற்ரோல் ராங் (fill my petrol tank)’ போராட்டம் பூரண வெற்றி. இனிவரப்போகும் விளைவுகளுக்கு அவர்கள் பொறுப்பல்ல. இதனால் தான் அரகலியாக்கள் இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான சந்தைப் பொருளாதாரத்தையும் அதனை கண்மூடித்தனமாக அமுல்படுத்தக் கோரும் சர்வதேச நாணய நிதியத்தைப் பற்றியும் உலக வங்கியைப் பற்றியும் மூச்சேவிடவில்லை. கடன்களை மீளக்கொடுப்பதை நிறுத்தக் கோரவும் இல்லை.

யாழில் அதிகரிக்கும் ஹெரோயின் ஊசிக்கலாச்சாரம் – அடுத்தடுத்து உயிரிழக்கும் இளைஞர்கள் !

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் உள்ள உயர்தரம் பயிலும் பாடசாலை மாணவர்கள் தொடங்கி இளைஞர்கள் பலரிடமும் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளதை அண்மைய கால செய்திகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

ஐஸ் போதைப்பொருள்ள பாவித்த இளைஞன் மரணம் என்ற தகவல்கள் இலங்கையின் வேறு எங்கோ நடைபெறுவதாக கேள்விப்பட்ட நிலை மாறி  இப்போது அடிக்கடி கேள்விப்படும் தகவல்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. அடுத்தடுத்து பல இளைஞர்கள் வடக்கு – கிழக்கு பகுதிகளில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உயிரிழந்து கொண்டிருக்கின்றனர்.

30வருட யுத்தத்தை முடித்தோம் என மார்தட்டும் இந்த இராணுவத்தினதும் – கடற்படையினதும்  கட்டுக்காவல்களையெல்லாம் மீறி ஏதொவொருவகையில் வடக்கு இலங்கையினுள் போதைப்பொருட்கள் கொண்டுவரப்பட்ட வண்ணமே உள்ளன. போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதில் யாழ். பொலிஸார் பெரிதாக சிரத்தை காட்டுவதாக தெரியவில்லை. பாடசாலைகளிலும் மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை சார்ந்த விழிப்புணர்வு செயற்பாடுகள் இடம்பறுவதாக தெரியவில்லை. இந்த நிலையில் போதைப்பொருள் பாவனை தொடர்பான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பாடசாலைகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஆசிரியர் சமூகம் வடக்கில் சுயநல மனப்பாங்குடன் செயற்பட ஆரம்பித்து விட்டது போலவே தோன்றுகிறது. அண்மையில் கூட முல்லைத்தீவின் பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் உயர்தர ஆண்  மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு அடிமைப்படுத்தி பின்பு அவர்களை  பயன்படுத்தி மாணவிகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகப்படுத்தியுள்ளார். இது எவ்வளவு பெரிய சமூக சீர்கேடு. இந்த நிலையில் இது தொடர்பாக பெரிதாக வடக்கு மாகாண ஆசிரியர் சங்கம் அலட்டிக்கொள்ளவில்லை. இவர்கள் எங்கே இந்த பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை தடை செய்ய முயற்சிக்கப்போகிறார்கள் என்ற கேள்வியே மீதமாகவுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தின் பிரபலமான நகர்ப்புற பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்கும் மாணவன் ஒருவனிடம் இருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்படட்தாக தகவல்கள் வெளியான போது யாழ். சமூக கல்விமான்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து விட்டு  அடங்கிவிட்டனர்.

போதைப்பொருள் பாவனையை ஒழிக்க அவர்கள் ஏதேனும் களச்செயற்பாடுகளை மேற்கொண்டதாக எந்த பதிவும் இல்லை. இது யாழ்ப்பாண சமூகம் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம். ஆனால் இன்னமும் எந்த செயற்பாடும் இதனை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படவில்லை என்பதே கவலையான உண்மை.

இந்த நிலையில் கடந்த வாரம் ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் நமது தமிழர் சமூகத்தில் தற்போது என்ன நடக்கிறது என்பதை இன்னுமொரு தடவை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்புத்துறையில் கடந்த  20ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார் என்பது இங்கு இன்னமும் வேதனையான விடயம். இளைஞர்கள் குழுவாக இருந்து ஹெரோயின் எடுத்துக்கொள்ளுமளவிற்கு தைரியமான ஒரு சூழல் நமது பகுதிகளில்  உருவாகியுள்ளது இன்னமும் வேதனையளிக்கிறது.

 

யாழ்ப்பாணத்தில் அண்மைய காலப்பகுதியில் போதைப்பொருள் பாவனையினால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் காவல்துறையினர் மட்டுமல்லாமல் பாடசாலை ஆசிரியர்களும் தங்களுடைய மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை தொடர்பான முறையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது தவிர பெற்றோர் தங்களுடைய வீட்டு இளைஞர்களின் போதைப்பொருள் பாவனையை அவர்களின் காட்டுக்கூச்சலுக்கு அஞ்சாது கண்டிக்க வேண்டியதுடன் பிள்ளைகளுக்கு போதைப்பொருள் பாவனையின் தீமையான பக்கங்களை புரியும்படி எடுத்துச்சொல்ல வேண்டும்.

ஒரு காலத்தில் கல்வியில் மட்டுமே கவனம் வந்த யாழ் சமூகமானது இன்று வெளிநாட்டு மோகத்திலும் – சுயநல மனோநிலையிலும்  சிக்குண்டு தனது கல்வி அடைவு மட்டத்தை தொலைந்துவிட்டது. கல்வியின் மீதான யாழ் சமூக மாணவர்களின் – இளைஞர்களின் நாட்டம் குறைவடைந்தது இன்று ஆவா வாள்வெட்டு  போன்ற குழுக்களின் தோற்றத்தையும் – போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பையும் தூண்டியுள்ளது.

யாழ் சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரும் விரைந்து போதைப்பொருள் பாவனையிலிருந்து நமது சமூகத்தை மீட்க – நமது இளைஞர்களை மீட்க இயங்க வேண்டும். நாம் சுதாகரித்து போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்கும் ஒவ்வொரு பொழுதிலும் ஆரோக்கியமற்ற இளைஞர் தலைமுறை ஒன்று உருவாவதற்கு நாமும் காரணமாகிக்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

நாம் சமூகத்தை திருத்த கூட களமிறங்க  தேவையில்லை. அவரவர் தத்தமது வீடுகளில் உள்ள இளைஞர்களிடம் இது தொடர்பில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே போதுமானது. சிறுதுளி பெருவெள்ளம் போல ஆகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்..!

ஜனாதிபதியாக ரணிலின் பதவியேற்பும் – வெளியாகியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் திடீர் அறிவிப்பும் !

 

நீண்ட கால இழுபறிக்கு மத்தியில் இன்று ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதே நேரத்தில் சில அறிவிப்புக்கள் அடுத்தடுத்து மேற்குலக நாடுகளில் இருந்து வெளிவர ஆரம்பித்துள்ளன.

இலங்கை மக்கள் தாங்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் நிவாரணத் திட்டம் தொடர்பில் இலங்கையுடனான பேச்சுவார்த்தையை விரைவில் நிறைவு செய்ய முடியும் எனவும் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோஜிவா தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​நிவாரணப் திட்டம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த கலந்துரையாடல்களின் பெறுபேறுகளின்படி, வேலைத்திட்டத்தை விரைவாக நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்
நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவு இருந்தால் அவருடன் இணைந்து பணியாற்ற தமது பிரதிநிதிகள் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான நிதியுதவி தொடர்பில் இத்தனை நாளும் இழுத்தடிப்பு செய்து வந்த சர்வதேச நாணய நிதியம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதை ஊடகங்கள் பலவும் கொண்டாடி வருகின்றன.

மேலும் கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்தவரை  இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க முடியாது எனவும் இது சரியாகி நாடு மீள பல வருடங்களாகும் எனவும்  இதுவரை கூறி வந்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க  இன்னும் 5 மாதங்களில் இலங்கையின் பொருளாதார சரிவை மீட்க முடியும் என திடீர் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான சூழலிலேயே மேற்கூறியது போல கதைகளிலும் கற்பனைகளிலும் வருவது போல ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதும்  திடீரென அதிசயமான பல தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

ரணிலின் ஜனாதிபதி தெரிவும் – IMFஇன் இந்த அறிவிப்பும் – மத்திய வங்கி ஆளுநரின் கருத்தும் ஒரு சேர ஒரு  விதமான சந்தேககண்ணோட்டத்தை ஏற்படுத்துவது போலவும் ஏற்கனவே இருந்த சில சந்தேகங்களை உறுதிப்படுத்துவது போலவும்  அமைந்துள்ளது என அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளன.

 

இலங்கை மக்களின் 69லட்சம் வாக்குகளை பெற்று ஆட்சி பீடமேறிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக யாரும் எதிர்பாராத வகையில் தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த மாதம் 9ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினார்.

போராட்டங்களின் பின்னணியில் ஜே.வி.பி உள்ளிட்ட இடதுசாரிய கட்சிகளின் உந்துதலே காணப்பட்டது என ஒரு தரப்பு  அரசியல் விமர்சகர்கள் கூறிவந்த நிலையில் இன்னுமொரு தரப்பு அரசியல் விமர்சகர்கள் ரணிலுக்கு ஆதரவான மேற்கு உலக சக்திகளே இந்த போராட்டத்தை கொண்டு நடத்தின என அழுத்ததிருத்தமாக கூறி வந்த நிலையில் பல விடயங்களை அவர்கள் சுட்டிக்காட்டி வந்தனர். குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்ட போது முக்கியமான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக எடுத்து வைத்து விட்டு வீடு எரிக்கப்பட்டமை தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டமை, ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்துடன் வந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டமை , பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று குறுகிய காலத்திற்குள் ரஷ்யாவின் விமானம் ஒன்று இலங்கையில் தடுத்து நிறுத்தப்பட்டமை என பல விடயங்களில் சந்தேகமான தன்மையை காண முடிந்தது.

ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் இலங்கையின் போக்கு மேற்குலக நாடுகளில் இருந்து முற்றிலும் விலகி சீனாவுடன் மிக நெருங்கியதாகவே காணப்பட்டது. இந்த நிலையில் இது இலங்கையின் மீதானதம் இந்துசமுத்திர பரப்பு மீதானதும் அமெரிக்க – இந்திய அதிகாரத்துக்கும் மிகப்பெரிய சவாலாக அமைந்துவிட்டது என்பதே உண்மை. இந்த நிலையில் ராஜபக்ஷக்களின் ஆட்சிக்கு எதிரான அரசியல் மாற்றங்களும் – புரட்சிகளும்  அடுத்தடுத்து அரங்கேறின. அடுத்த இருபது வருடத்துக்கு ராஜபக்சக்கள் ஆட்சி தான் என்ற கருத்து உடைத்து வீசப்பட்டது.

இவற்றின் பின்னணியில் இந்தியாவினதும் அதுசார்ந்த அமெரிக்க – மேற்குலக சக்திகளினதும்  அதிதீவிர நகர்வுகளை இங்கு நடந்த பேராட்டங்களில் காண முடிந்ததாக பல அரசியல் விமர்சகர்களும்  குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து இதுவரை நாளும் இலங்கைக்கான கடன் வழங்குவது தொடர்பில் காலந்தாழ்த்தி வந்த சர்வதேச நாணய நிதியம் இன்று இல்ஙகைக்கான உதவி தொடர்பில் அறிவித்துள்ளமையானது இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

இயல்பாகவே மேற்குலக நாடுகளின் முகவர் என்ற தோற்றத்தை கடந்த காலத்தில் தொடர்ந்து பதிவு செய்து வந்த ரணில் விக்கிரமசிங்கவை கொண்டு இலங்கை மீதான சீனாவின் ஆதிக்க நிறுவுகையினையும் – சீனாவின் பொருளாதார லாப ஈட்டத்தினையும் கட்டுப்படுத்த இந்தியாவும் – அமெரிக்காவும் மேற்கொண்ட முயற்சியாகவே இலங்கையின்  திடீர் அரசியல் மாற்றங்களை கருத முடியும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் இலங்கை  போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை கடன் வலைக்குள் சிக்க வைப்பதையே நோக்கமாக கொண்டவை என பல தரப்பினரும் எச்சரித்து வந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க இந்த கடன் திட்டத்துக்கான பேச்சுவார்த்தைகளை முடக்கி விட்டிருந்தார். அத்துடன் அண்மையில் ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பே இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதார நலிவுக்கு காரணம் என அண்மையில் சாடியிருந்தது கூட ரணில் விக்கிரமசிங்க தன்னை அமெரிக்க சார்புவாதி என்பதை காட்டும் தோரணையிலேயே அமைந்திருந்தது.

பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் சில நாட்களில் முழுமையாக தெரிந்து விடும்; ரணில் அமெரிக்க தோலை போர்த்திய நரியா அல்லது இலங்கையை முன்னேற்ற திடசங்கற்பம் பூண்டுள்ள அரசியல் தலைவரா என்று…!

 

இலங்கையின் முகநூல் புரட்சியாளர்களும் பொருளாதாரமும் அரசியலும்: எது நடக்க வேண்டுமோ அது நன்றாக நடக்குமா?

ராஜபக்சாக்கள் நிரந்தரமாக துரத்தப்பட்டுவிட்டார்கள் என்ற குதுகலத்தில் போராட்டக்காரர்கள் உள்ளனர். சர்வதேச மேற்கு ஊடகங்கள் கோத்தாபய ராஜபக்சவின் உள்ளாடையை கொண்டாடியது. ஆனால் எது நடக்க வேண்டுமோ அது நன்றாக நடக்குமா? என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை. போரட்டக்காரர்களிடமும் பதில் இல்லை. அவர்கள் காலிமுகத்திடலில் காற்று வாங்கி இப்போது ஜனாதிபதி மாளிகையைச் சுற்றிப் பார்த்து செல்பி எடுப்பதிலேயே ஆர்வமாக உள்ளனர். போராட்டக்காரர்கள் இலங்கையை அடுப்பிற்குள் இருந்து நெருப்பிற்குள் தள்ளியுள்ளனர். ஐஎம்எப் மற்றும் உலக வங்கிக்கு இலங்கையைப் பலிகொடுப்பதற்கு இருந்த தடங்கல்கள் நீக்கப்பட்டுவிட்டது. இன்னும் சிறிது காலத்தில் பெற்றோல், எரிவாயு, சேதனப் பசளைக்காக இலங்கையின் இலவசக் கல்வி, இலவச மருத்துவம், வழங்கப்பட்டு வரும் மானியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்படும். இன்று போராட்டத்தில் ஈடுபட்ட பொருளாதாரம் பற்றியும் அரசியல் பற்றியும் புரியாத இதே மக்களின் பிள்ளைகளுக்கு இதுவரை கிடைத்துவந்த அடிப்படை வசதிகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கையைத் தொடர்ந்தும் பொருளாதார அடிமையாக்குவதில் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் அதன் பின்னுள்ள உலக நாடுகளும் மிகக் கச்சிதமாக இயங்குகின்றன.

ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள்:

வினைத்திறனற்ற ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் கிளர்ச்சிகளை மேற்கொள்ள மக்களுக்கு சகல உரிமைகளும் உண்டு. ஆனால் இவ்வாறான போராட்டங்கள் புரட்சிகர கட்சிகளால் முன்னெடுக்கப்படாமல் தலைமை தாங்கப்படாமல் எழுந்தமானமாக நடத்தப்படுவதால் எவ்வித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை. மாறாக பிரச்சினையை மேலும் மோசாமாக்குவதோடு, போராடியும் பயனில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள். எதிர்காலம் முன்னிலும் மோசமானதாக அமையும்.

உலக அளவில் அண்மைக்காலங்களாக நடத்தப்பட்டுவரும் திடீர் ஆட்சிமாற்றங்கள் ஒன்றும் மக்களால் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கு அரப் ஸ்பிரிங் ஆனாலும் காலிமுகத்திடலானாலும் விதிவிலக்கல்ல. மக்களை வைத்தே அந்த மக்களைச் சுரண்டும் கைங்கரியத்தை அமெரிக்க மற்றும் நாட்டுத் தலைமைகள் மிக உன்னதமாக மேற்கொண்டு வருகின்றன. காருக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் பெற்றோல் கிடைக்காத அகரலியாக்களின் காலிமுகத்திடல் போராட்டம் இலங்கையை நிரந்தரமாக சீரழிப்பதற்கு மேற்குநாடுகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. போராட்டத்தை முன்னெடுக்கும் பல்கைலக்கழகங்களில் படிக்கும் இந்த மாணவர்களுக்கு தங்கள் சகமாணவிகளையே ராக்கிங் என்ற பெயரில் கொடூர பாலியல் துஸ்பிரயோகங்களில் இருந்து விடுவிக்க முடியவில்லை. அல்லது விடுவிக்க விரும்பவில்லை. காலிமுகத்திடல் போராட்டம் உணர்ச்சிக்கு அடிமைப்பட்ட நீண்டகால சிந்தனையற்ற உயர்தர சமூகத்தின் போராட்டம். இது மோட்டார் சைக்கிள் காருக்கு பெற்றோலுக்காக கீழ்நிலை மக்களுக்கு இருந்த குறைந்தபட்ச பாதுகாப்பையும் அகற்றியுள்ளது.

பொருளாதாரப் பிரச்சினைத் தீர்க்காமல் நாட்டை விற்கும் போராட்டம்:

நாட்டில் ஏற்பட்டு இருப்பது பொருளாதாரப் பிரச்சினை. அதன் அடிப்படை அம்சம் அந்நியச்செலாவணி கையிருப்பில் இல்லை. இந்த அந்நியச் செலாவணி கையிருப்பில் இல்லாமால் போனதற்காண முக்கிய காரணம் நாட்டிற்கு அந்நியச் செலவணியைக் கொண்டுவரும் துறைகள் அண்மைய நெருக்கடிகள் காரணமாக நிறுத்தப்பட்டது. குறிப்பாக சுற்றுலாத்துறை நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியின் 13 வீதத்தை கொண்டுவருவது. அது முற்றாக முடங்கியது. தேயிலை மற்றும் ஆடை ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர் அனுப்புகின்ற பணம். உலகம் முழவதும் ஏற்பட்ட கோவிட் நெருக்கடியால் இவ்வருமானங்கள் முற்றிலும் முடங்கியது. அதேசமயம் முதலீடுகளை ஊக்குவிக் வரிக்குறைப்பைச் செய்ததன் மூலம் அதன் மூலம் ஈட்டக்கூடிய வருமானமும் முற்றிலும் முடங்கியது. தமிழர்களின் ஜஎஸ்பி பிளஸ் நிறுத்த போராட்டத்தின் மூலம் ஆடை ஏற்றுமதியில் கிடைத்த வரிச்சலுகை இலங்கைக்கு தற்போது இல்லை. இவையே பொருளாதார நெருக்கடியின் பின்னணி.

இதிலிருந்து மீள்வதற்கு முதல் செய்ய வேண்டியது நாட்டில் அமைதியை நிலவச் செய்து உல்லாசப் பயணிகளை செங்கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும். அதனைச் செய்திருந்தாலேயே தற்போதிருந்த பெற்றோல் எரிவாயு நெருக்கடியை தீர்த்திருக்க முடியும். நாட்டில் ஏற்பட்டுள்ள விலை வீக்கத்தினால் இலங்கையின் நாணயப் பெறுமதி மிகக் குறைந்துள்ளது. இது வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதம். அதனை விடுத்து தொடர்ந்தும் நாட்டை முடக்கி பொருளாதாரத்தை சீரழிப்பது சர்வதேச நாணய நிதியத்திடமும் உலக வங்கியிடமும் இலங்கையை ஒப்படைக்கும் ஒரு திட்டமே.

இலங்கைப் பொருளாதார நெருக்கடியும் சர்வதேசப் பின்னணியும்:

அமெரிக்காவில் ஜனவரி ஆறில் டொனால்ட் ட்ரம் தன்னுடைய ஆதரவு மக்களை ஹப்பிடல் ஹில் மீது ஏவிவிட்டார். செனட்டர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மேசைகளின் கீழ் பதுங்கினர். ஹபிடல் ஹில் அரகலியாக்கள் கட்டடத்திற்குள் நூழைந்து தங்கள் வெற்றியை ஆர்ப்பரித்து கொண்டாடினர். ஹபிடல் ஹில் அரகலியாக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 10 பேர்வரை கொல்லப்பட்டனர். ஹபிடல் ஹில் அரகலியாக்களை பயங்கரவாதிகள் என்றும் தீவிர வலதுசாரிகள் என்றும் அமெரிக்க மற்றும் சார்புநாடுகளின் ஊடகங்கள் முத்திரை குத்தின. விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றது. மாறாக கொழும்பு ஜனாதிபதி செயலகத்தை கைப்பபற்றிய காலிமுகத்திடல் அரகலியாக்களை சர்வதேச ஊடகங்கள் கொண்டாடியது மட்டுமல்ல ஜனாதிபதியின் உள்ளாடையையும் தூக்கி கொண்டாடினர். அத்தோடு சர்வதேச நாணய நிதியமும் உலகவங்கியும் தான் இலங்கையை பொருளாதாரக் கஸ்டத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று கோரும் காலிமுகத்திடல் அரகலியாக்களுக்கு ஆதரவானவர்களின் பேட்டிகளும் ஒலிபரப்பப்பட்டது.

சீனா இலங்கைக்கு வழங்கிய கடன்கள் தான் நாட்டை இந்நிலைக்கு இட்டுச்சென்றது என்ற பரப்புரையை இந்தியாவும் மேற்குநாட்டு ஊடகங்களும் தீவிரமாகப் பரப்பின. ஆனால் சீனா இலங்கைக்கு வழங்கிய கடன் 10 வீதம் மட்டுமே. இந்த பத்துவீத கடன் கூட இலங்கையின் நீண்டகால கட்டுமானங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள். அவை நீண்டகாலத்தில் இலங்கையின் வளர்ச்சிக்கும் பொருளாதாரத்திற்கும் பயன்படக்கூடியவை. இலங்கையில் சீனாவின் ஆளுமையை விரும்பாத இந்தியாவும் மேற்குநாடுகளும் இலங்கைக்கும் சீனாவுக்கும் எதிரான பரப்புரைகளில் மிகநீண்டகாலமாக ஈடுபட்டுவருகின்றன. இதற்குச் சாதகமாக 2009 யுத்த முடிவை கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிராகப் பயன்படுத்தி வந்தன. இந்த யுத்தத்திற்கு முற்று முழதான ஆதரவை அழித்துவந்த சர்வதேசமும் இந்தியாவும் தாங்கள் ஏதோ சுத்தமான சுவாமிப்பிள்ளைகள் போல் நடித்துவருகின்றனர்.

மேலும் அமெரிக்க சார்பான ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ரஷ்ய விமானங்களைத் தடுத்து வைத்திருந்தார். அதன் பின் கோட்டபாய ராஜபக்ச தனது பிரதிநிதிகளை ரஷ்யாவுக்கு அனுப்பி பெற்றோலைக் கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தி இருந்தார். அதன் முடிவுகள் வருவதற்கு முன்னரேயே அரகலியாக்கள் கோட்டபாய ராஜபக்ஷவை ஜனாதிபதிச் செயலகத்தைவிட்டும் நாட்டைவிட்டும் வெளியேற்றினர். பாகிஸ்தானில் சினாவுடன் நெருக்கமாக முற்பட்ட தன்னை அமெரிக்கா சதிமூலமாக வெளியேற்றியதாகவும் தற்போது நாட்டை கிரிமினல்களிடம் பாகிஸ்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

இம்ரான் கானுக்கு நடந்த அதே நிலை ராஜபக்சவுக்கும் நடந்தேறியுள்ளது. நாட்டுத்தலைவர்கள் எப்பேர்ப்பட்ட மோசமானவர்களாக, கொடூரமானவர்களாக, சர்வதிகாரிகளாக, மனித உரிமையை மீறுபவர்களாக இருந்தாலும் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாடுகளுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. அவர்கள் அமெரிக்க மற்றும் சார்பு நாடுகளுக்கு ஆதரவாக இருக்கும் வரை. அவர்களுக்கு எதிரான ரஷ்யாவுடனோ அல்லது சீனாவுடனோ கூட்டுச் சேர்ந்தால் அல்லது திறந்த சந்தைப் பொருளாதார கொள்கைக்கு மாறாகச் சென்றால் அவர்கள் நையப்புடைக்கப்படுவார்கள். அவர்களுடைய உள்ளாடைகள் சர்வதேச ஊடகங்களில் வலம்வரும். சதாம் ஹ_சைன், கேர்ணல் கடாபி, முகாபே இவர்கள் எல்லோருமே அமெரிக்க – பிரித்தானிய கூட்டின் செல்லப்பிள்ளைகளாக இருந்து அமெரிக்காவிற்கு எதிரியானவர்கள். அமெரிக்காவும் பிரித்தானியாவும் தலையீடு செய்த எந்தநாடும் உருப்படவில்லை. உருப்படவும் விடமாட்டார்கள். அந்த நீண்ட பட்டியலில் காலிமுகத்திடல் அரகலியாக்களின் உதவியோடு இலங்கையும் சேர்க்கப்பட்டு உள்ளது.

அரகலியாக்களின் கோரிக்கைகள் அல்ல விருப்பப்பட்டியல்:

பல்கலைக்கழக மாணவர்கள் கீழ்த்தரமான பகிடிவதைகளில் ஈடுபட்டு தண்டனைக்குள்ளாகும் தமது சக தோழர்களுக்கு சார்ப்பாக எப்போது போராடத் தொடங்கினார்களோ அதிலிருந்து அவர்களது போராட்டங்கள் மிகக் கீழ்த்தரமானவையாக்கப்பட்டுவிட்டன.

இந்த காலிமுகத்திடல் அரகலியாக்களால் முன்வைக்கப்பட்ட காலிமுகத்திடல் கோரிக்கை ஒன்றும் மோசமானதல்ல. ஆனால் அதில் உள்ளடக்கம் இல்லை. கபொத சாதாரணதர மாணவர்களிடம் எவ்வாறான அரசு உங்களுக்கு வேண்டும் என்று கேட்டால் அவர்கள் ஒரு விருப்பப்பட்டியலை எழுதித் தருவார்கள். அதற்கு ஒத்ததாகவே அரகலியாக்களின் கோரிக்கைகள் உள்ளது. அவர்களிடம் அரசு பொருளாதாரம் சார்ந்த அடிப்படை அறிவுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கொண்டுவந்த நல்லாட்சி விளையாட்டுத்தான் அது. மத்திய வங்கியை கொள்ளையடித்தது போல் செய்வதற்கான வழி.

நாட்டில் சுதந்திரமான ஒரு தேர்தல் நடத்தப்பட்டு அதில் அரகலியாக்களும் ராஜபக்சக்களும் போட்டியிட்டால் ராஜபக்சாக்கள் அரகலியாக்களைக் காட்டிலும் கூடுதல் வாக்கைப் பெறுவார்கள். ஆனால் அமெரிக்காவில் ஹபிடல் ஹில் அரகலியாக்கள் ட்ரம் தலைமையில் போட்டியிட்டால் பைடன் தோற்றுவிடுவார். இதுதான் நிலவரம். இந்த அரகலியாக்கள் இலங்கை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர்கள் கார் வைத்திருப்பவர்களும் இலவசக் கல்வி முடிய வெளிநாடு செல்ல இருப்பவர்களும் தான். இவர்கள் ஒட்டுமொத்த இலங்கை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

உலகத் தலைவர்கள் பொறிஸ் ஜோன்சன், மோடி போல் ராஜபக்சாக்களும் ஊழல் பண்ணி உள்ளனர் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. குஜராத் படுகொலைகளுக்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தமைக்காக, இந்தியப் பிரதமர் மோடி பிரதமராகுவம் வரை அவருக்கு அமெரிக்கா செல்லத் தடைவிதிக்கப்பட்டு இருந்தது. சவுதி அரசர் பின் சலமனின் உத்தரவில் அவரை கடுமையாக விமர்சித்து வந்த ஊடகவியலாளர் ஜமால் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உடல் உறுப்புகளும் துண்டுதுண்டாக்கப்பட்டது. சவுதியை ‘பறையர் தேசம்’ என்றார் அமெரிக்க ஜனாதிபதி பைடன். இப்போது பைடனும் பின் சல்மனும் கூடிக் குலாவுகின்றனர். ‘கொஞ்சம் உன்டெண்ண பெற்றோல் விடுங்கோ’ என்று கேட்க பைடன் சவுதி சென்றுள்ளார். மறுபக்கம் யேமன் மக்களை சவுதி குண்டுபோட்டு அழித்துக்கொண்டுள்ளது.

‘உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யக்கூடாது’ என்று சொல்வார்கள். அதேபோல் முதலுதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை இருக்கும் நிலையை மோசமடையச் செய்யக் கூடாது. உங்களால் ஒரு விடயத்தை ஆக்கபூர்வமாகச் செய்ய முடியாவிட்டால் அதனைச் செய்யாமல் இருப்பதே மேல். குட்டையைக் குழப்பி விடுவதில் பயனில்லை. காலிமுகத்திடல் போராட்டம் குறுகிய சிலரின் நலன்களுக்காக ஒரு பொழுது போக்காக ஆரம்பிக்ப்பட்டது. தமிழரசுக்கட்சி தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் இப்படித் தான் தூண்டிவிட்டது. மக்களது மெல்லிய உணர்வுகளை உணர்ச்சியூட்டி தூண்டிவிட்டு அழிவை ஏற்படுத்துவதே கடந்தகால போராட்டங்கள் தந்த படிப்பினை. காலிமுகத்திடல் அரகலியாக்களின் போராட்டம் இன்னுமொரு உதாரணம்.

பேரம்பேசுவதற்கு மீண்டும் ஓர் சந்தர்ப்பம் – பயன்படுத்திக்கொள்வார்களா தமிழ் தேசியம் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபாய ராஜபக்ச தன்னுடைய ஜனாதிபதி பதவியை விட்டு விலகுவதாக உத்தியோகபூர்வமாக இன்று காலை உத்தியோகபூர்வமாக செய்தி வெளியான நிலையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதாக எண்ணி இன்று கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் பாற்சோறு செய்தும் பட்டாசு வெடித்தும்  தங்களுடைய கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்தப் போராட்டம் உண்மையிலேயே புரட்சி என கூற கூடிய அளவிற்கு இருந்ததா..?  என கேட்டால் இல்லை என்றே கூற வேண்டும். போராட்டக்காரர்கள் பெரிதாக எந்த ஒரு அரசியல் விடயங்களும் – புதிய இலங்கைக்கான தெளிவான திட்டங்களும் முன்வைக்கப்பட்டதாக தெரியவில்லை. மாறாக ராஜபக்சக்கள் மீதான வெறுப்பு மட்டுமே மேலோங்கி இருந்தது.

இது மட்டும் இல்லாது போராட்டக்காரர்கள் தங்களுடைய போராட்டத்துக்கான கொள்கைகளையும் கோஷங்களையும் முறையாக வெளிப்படுத்தவில்லை என்பதே கண்கூடு. குறிப்பாக ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்டமையாக இருக்கலாம் அல்லது அலரி மாளிகை மற்றும் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கான முயற்சியாக இருக்கலாம் அனைத்தும் இலங்கையில் ஜனநாயகம் என்ற விடயத்தை கேள்விக்கு உள்ளாக்கி கேலிக்கூத்தாக்கி உள்ளது என்பதே உண்மை. போராட்டம் இடம்பெற்றது ஏன்..? எதற்கு..? என்ற வினாக்களுக்கு இன்று வரை விடை தெரியவில்லை. ஜூலை 9  போராட்டத்தினுடைய முடிவில் போராட்டக்காரர்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கை மிக்க கனதியானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  மாறாக போராட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் சாதாரணமாக கடந்து விடக் கூடியவையாக காணப்பட்டன. உண்மையிலேயே இந்த போராட்டம் எரிபொருள் தட்டுப்பாடு, பெட்ரோல் தட்டுப்பாடு என ஆக சில விடயங்களோடு மட்டுமே முற்றுப் பெற்றுள்ளது என்பதே கவலையான உண்மை. போராட்டக்காரர்கள் ராஜபக்சக்களை எதிர்ப்பது போன்றதான ஒரு தோரணையில் மட்டுமே போராட்டத்தை நடத்தி முடித்துள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மாளிகை வசதிகளை அனுபவிக்கும் போராட்டக்காரர்கள் - பிபிசி  தமிழின் கள அனுபவம் - BBC News தமிழ்
இந்தப் போராட்டத்தின் அறிக்கைகளில் முன் வைக்கப்பட்டிருந்த கருத்துக்கள் கூட தனித்து மீண்டும் தனிப் பெரும்பான்மை என்ற கருத்தியலையே முன்னிறுத்துவதாகவே காணப்பட்டது. முக்கியமாக கோட்டாபய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்ட எந்த சந்தர்ப்பத்திலும் அவருடைய போர் குற்றங்கள் தொடர்பிலும் , காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கான தீர்வு தொடர்பிலோ பெரிதாக அலட்டிக்கொள்ளப்படவில்லை.  இது இன்னமும் இலங்கையில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு  ஏற்படவில்லை என்பதையே மறைமுகமாக சுட்டிக் காட்டுகின்றது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பகுதியினர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 30 வருட போர் வெற்றியை கொடுக்க மனதில்லாது சரத் பொன்சேகாவிற்கு அந்த 30 வருட போர் வெற்றியை சூட்டுவதற்கு முயற்சித்ததையும் காண முடிந்தது. இது தவிர போராட்டத்தில் ஈடுபட்ட  ஏனைய மத குருமார்களை காட்டிலும் பௌத்தசங்கத்துக்கும் – அதன் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகளுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதன் பின்னணியில் இன்னமும் சிங்கள-பௌத்த மனோநிலையில் இருந்து இந்த நாடோ – சிங்கள இளைஞர்களோ மீளவில்லை என்பதையே காண முடிகின்றது.
இவற்றுக்கு அப்பால் ,
ராஜபக்சக்களுக்கு எதிரான இந்த போராட்டத்தை தமிழர் தரப்பு முறையாக பயன்படுத்தியதா..? எனக் கேட்டால் முற்றிலும் இல்லை என்றே கூற வேண்டும். ஆக குறைந்தது தங்களுடைய அபிலாஷைகளையும் – தேவைகளையும் – தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீத்யையும் வெளிப்படுத்தக் கூடிய வகையில் சரி போராட்ட களத்தில் ஏதாவது கோஷங்கள் முன்வைக்கப்பட்டதா என்று கேட்டால் அதுவும் இல்லை. வடகிழக்கு தமிழர்கள் தங்களுடைய தேவைகளையும் – தங்களுடைய அபிலாசைகளையும் – தங்களுடைய பிரச்சனைகளையும் தென்னிலங்கைக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பை இன்று தவற விட்டுவிட்டார்கள் என்பதை உண்மை.
இந்தப் போராட்டத்துக்காக பெருமளவு கலந்து கொண்ட இளைஞர்களில் அதிகம் பேர் சிங்கள இளைஞர்களாகவே காணப்பட்டனர். தமிழ் இளைஞர்கள் கலந்து கொண்டிருந்த போதும் சொற்பமானவர்களாகவே கலந்து கொண்டனர்.            வட- கிழக்கில் இருந்து கலந்து கொண்டிருந்த தமிழ் இளைஞர்களை காட்டிலும் தென் இலங்கையிலும் – மத்திய இலங்கை பிராந்தியங்களிலும் பிறந்து வளர்ந்த – வேலைக்காக குடியேறியுள்ள  தமிழ் இளைஞர்களே இந்த போராட்டங்களில் கலந்து கொண்டு இருந்தனர். இதனாலையோ என்னமோ ராஜபக்சக்களிடமும் – தென்னிலங்கை சமூகத்திடமும்  கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகள் – தெரிவிக்கப்பட வேண்டிய விடயங்களும்  கேட்கப்படாமலும் – தெரிவிக்கப்படாமலுமே  விடப்பட்டு விட்டன.
இது போக ராஜபக்சகளுக்கு எதிராக தென்னிலங்கை முழுமையிலும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்க அதனை ஏதோ விளையாட்டுப் போட்டி பார்ப்பது போல தமிழர் தரப்பு யார் வெற்றி பெறுவார்கள்..? என்பது போலவும் ஏதோ நடத்தி முடிக்கட்டும் நாம் வெறும் பார்வையாளர்களே என்ற கோணத்தில் கையாண்டு இருந்தது. மேலும் Karma is boomerang என்ற மனோ நிலையில் நின்று கொண்டு ராஜபக்சக்களை கர்மா தண்டிக்கிறது என பேசிக்கொண்டு இருந்தனர். மேலும் தென்னிலங்கை முழுமையுமே போராட்டத்தால் எரிந்து கொண்டிருக்க வட-கிழக்கு திருவிழா கொண்டாட்டங்களாலும் – பெட்ரோலுக்கான காத்திருப்புகளாலும்  நிறைந்து வழிந்தது.
மேலும் தமிழ் அரசியல்வாதிகள் சரி இந்த போராட்டங்களை  ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் –  காலதிகாலமாக பேசி வரும் தமிழர் பிரச்சனைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு களமாக பயன்படுத்தினரா..?  என கேட்டால் அதுவும் இல்லை. ஜூலை 9 ராஜபக்ச அரசுக்கு எதிராக நடந்து முடிந்திருந்த  இறுதிப் போராட்டத்தினை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் தமிழ் தலைமைகள் சார்பில் சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் பங்கு பற்றி இருந்தனர். தமிழர் தரப்பினுடைய பிரச்சனைகள் தொர்பில் பலமாக  அவர்கள் கருத்துக்களை முன்வைப்பார்கள் என எதிர்பார்த்து இருந்த போதும் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி அவர்கள் எதையுமே அங்கு கதைத்து இருக்கவில்லை. குறிப்பாக இன்னமும் அமுலில் இருக்கக்கூடிய பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டியதன் தேவை குறித்தோ, காணாமல் ஆக்கப்பட்டு ஒருபிரச்சினைக்காக ஆயிரம் நாட்களை தாண்டியும் போராடும் தமிழ் மக்களினுடைய பிரச்சனைகள் குறித்தோ , வடகிழக்கு சுவிகரிக்கப்படும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் தொடர்பிலும் எந்த ஒரு விடயங்களையும் அவர்கள் பேசி இருக்க வில்லை. மாறாக ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு நாள் ஜனாதிபதி பதவியை ஏற்கும் வாய்ப்பையோ –  அதிகாரத்தையோ  கூட வழங்காதீர்கள் என மிக வினயமாக  அவர்கள் வேண்டி இருந்தனர். (இதே ரணில் விக்கிரமசிங்க வெற்றிக்காக ஓட்டு போடுங்கள் என வட-கிழக்கின் தெருக்களில் இறங்கி கூவி கூவி திரிந்ததும் இதே கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தான் என்பதையும் நினைவு படுத்திக் கொள்வோம்.) ஏனைய தமிழ்  அரசியல் தலைவர்களின் அடையாளமே இந்த போராட்ட காலங்களில் இல்லாது போய்விட்டது.
முழுமையாக தமிழ் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் –  தமிழ் மக்களும் – தமிழ் இளைஞர்களும்
இந்தப் போராட்டத்தில் இருந்து முழுமையாக  விலகியே இருந்தனர்.
பயன்படுத்த வேண்டிய – பயன்படுத்தி இருக்க வேண்டிய மிகப்பெரிய ஒரு வாய்ப்பு இன்று தமிழ் சமூகம் தவற விட்டுவிட்டது என்பதை உண்மை. ஆக குறைந்தது இந்த ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டத்தினை பயன்படுத்தி தென்னிலங்கை சமூகத்தின் கவனத்தை  தமிழர் பக்கம் திருப்புவதற்கு இம்மியளவு முயற்சி கூட மேற்கொள்ளப்படவில்லை என்பது உண்மை. இன்னும் இந்த சர்வதேசம் தமிழர்கள் விடயத்தில் தீர்வை தரும் என அதே பழைய பொய்களை தான் இந்த அரசியல்வாதிகள் தமிழ்ர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள். தமிழர்களும் அதனைத் தான் உண்மை என்றும் – சரியானது என்றும் நம்பிக் கொண்டு அதே போலி தமிழ் தேசியத்தில் திளைத்திருக்கப் போகிறார்கள் என்பதை கடந்த மூன்று மாதங்களில் இருந்த தமிழர்களின் நிலைப்பாடு தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறது.
சரி நடந்து முடிந்த விடயங்களை கைவிடுவோம். இன்னும் மீதமாக ஒரு வாய்ப்பு எஞ்சியுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ் தலைமைகளை நம்பி தமிழ் மக்கள் வழங்கிய அந்த ஓட்டுக்களையும் பயன்படுத்தக்கூடிய இறுதி சந்தர்ப்பம் ஒன்று எஞ்சியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்கொள்ளவுள்ள  சவால்கள்? – Maatram
இந்தப் போராட்டம் இலங்கையில் புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய வேண்டியதற்கான புதிய ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த அடிப்படையில் புதிய ஜனாதிபதி தெரிவு ஜூலை 20ஆம் தேதி பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில்  பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் நீ நான் என்ன முண்டியடித்துக் கொண்டு தங்களை ஜனாதிபதி வேட்பாளர்களாக பிரகடனப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இந்த தேர்தலில் வாக்களிக்கப் போகிறவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான். தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கும் வட-கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 13 பேர் உள்ளனர். இவர்கள் தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகளாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய முக்கியமான ஒரு தருணம் ஏற்பட்டுள்ளது.  நீ நான் என்ன போட்டி போட ஆரம்பித்துள்ள தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தங்களுடைய சரியான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய அதே நேரம் இந்த பந்தயத்தில் வெற்றிபெறக்கூடிய  வேட்பாளர் ஒருவரை தமிழ் தலைமைகள் தேடி கண்டுபிடிக்க வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டுள்ளது. தமிழர் பகுதிகளில் மிக நீண்ட காலமாக இருந்து வரக்கூடிய பல பிரச்சனைகளும் வட- கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால்  கோரிக்கையாக முன் வைக்கப்படுதல் வேண்டும்.   குறிப்பாக தமிழர் பகுதிகளில் இன்னமும் எரிந்து கொண்டிருக்கக்கூடிய பிரச்சனைகளான ; வட-கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் தொடர்பான விடயங்களும், போர் முடிந்த பின்னும் இராணுவம் கைப்பற்றி வைத்திருக்கும் தமிழர்களின் நிலங்கள் தொடர்பிலும், ஆயிரக்கணக்கான நாட்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு வேண்டி போராடிக் கொண்டிருக்கும் உறவுகளுக்கான தீர்வுகள் தொடர்பிலும் , பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான தேவை தொடர்பிலும் , இயங்காது இருக்கக்கூடிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் தொடர்பிலும் அழுத்த திருத்தமாக குறித்த கோரிக்கைகள் ஊடாக வலியுறுத்தப்படுதல் வேண்டும்.
இந்த கோரிக்கைகளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்த வகையில்  ஒரு வேட்பாளரை தெரிவு செய்து குறித்த கோரிக்கைகள் தொடர்பில் வலியுறுத்தி தங்களுடைய ஆதரவை குறித்த வேட்பாளருக்கு  வழங்க  முன்வர வேண்டும்.
தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடல் - GTN
பரபரப்பான அரசியல் நிலவரம் ஒன்று இலங்கையில் தோன்றியுள்ள நிலையில் , இன்னமும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்ததாகவோ  அல்லது இது தொடர்பான ஒரு கூட்டத்தை நடத்தி ஒரு பொதுவான முடிவுக்கு வந்ததாகவும் எந்த ஒரு அசைவுகளையும் காண கிடைக்கவில்லை.
பொறுத்திருந்து பார்ப்போம் கடந்த காலங்களைப் போலவே பேரம் பேச வேண்டிய இன்னும் ஒரு அற்புதமான தருணத்தை இந்த ஒற்றுமை இல்லாத தமிழ் தேசிய தலைவர்கள் தவறவிடப்போகிறார்களா..? அல்லது பயன்படுத்தப்போகிறார்களா..? என்று..!

ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டத்தின் திரை மறைவிலுள்ள குமார் குணரட்ணம் யார் ?- இடதுசாரிகள் ஆட்சி பீடமேறும் வரை தொடரப்போகும் போராட்டம்..!

No description available.இலங்கையின் அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அடுத்தடுத்து பல்வேறுபட்ட மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மே மாதம் ஒன்பதாம் தேதி உக்கிரமடைந்த ராஜபக்ச அரசுக்கு எதிரான போராட்டம் இந்த மாதம் ஒன்பதாம் தேதி இன்னும் உச்சமடைந்திருந்தது. உண்மையிலேயே ராஜபக்ச அரசின் எதேச்சதிகாரமும் – கண்மூடித்தனமான அரசியல் நகர்வுகளும் – சுயநல அரசியல் போக்கும் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியவை இதில் எந்த சந்தேகமும் இல்லை. அடுத்த 20 வருடங்களுக்கு ராஜபக்சக்கள்தான் நாட்டை ஆளப்போகிறார்கள் பல அரசியல் ஆய்வாளர்களாளும் எதிர்வு கூறப்பட்ட நிலையில்   சுமார் 69 லட்சம் மக்கள் ஓட்டுக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று இவ்வளவு வேகமாக மண்ணை கவ்வியது. ஏன்..? எதற்கு..? எவ்வாறு..?  என்ற கேள்விகளை விட இந்தப் போராட்டங்களுக்கு பின்னணியில் – திரை மறைவில் இருப்பவர்கள் யார்..? இந்தப் போராட்டம் சுமார் மூன்று மாத காலங்களை தாண்டியும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தப் போராட்டங்களில் பின்னணியிலிருந்து இயக்கிக் கொண்டிருக்க கூடிய அந்த நிறுவனம் யாருடையது..? இப்படியாக பல கேள்விகள் தோன்றி மறைந்த வண்ணமே உள்ளன.

இந்தக் கேள்விகள் ஒரு மையப் புள்ளியை நோக்கி இருக்கின்றன. அவை தான் இடதுசாரிய கட்சிகள்.
ராஜபக்ச அரசுக்கு எதிரான இந்த போராட்டங்களில் முனைப்பு காட்டுகின்ற அமைப்புகள் என்ற வகையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களும், இலங்கை தொழிலாளர் சங்கங்களும் முக்கியமானவை. வடக்கு – கிழக்கு இலங்கையை காட்டிலும் தென் இலங்கையில் அதிகமாக மாணவர் ஒன்றியங்களையும் –  தொழிலாளர் சங்கங்களையும் இணைக்கின்ற ஒரு மையப் புள்ளியாக இடதுசாரிய  கட்சிகள் காணப்படுகின்றன. இன்றைய போராட்டங்களை முன்னெடுக்கும் மிகப்பெரிய அமைப்புக்களாகவும் இந்த இடதுசாரி கட்சிகளை குறிப்பிடலாம். ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியும், முன்னணி சோசலிச கட்சி ஆகிய இரண்டு அமைப்புகள் இந்த போராட்டத்தில் திரை மறைவில் இருந்து செயல்படுவதை அவதானிக்க முடிகிறது.
ஏற்கனவே தேசத்தின்  முன்னைய கட்டுரை ஒன்றில் ராஜபக்ச களுக்கு எதிராக அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தில் ஜே.வி.பி மறைமுக மற்றும் நேரடி தலையீடு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருட மே மாதம் மற்றும் ஜூன் மாதம் அளவில் போராட்டங்கள் மிக உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அனானிமஸ் என்ற மர்ம குழு தொடர்பான கருத்துக்கள் வேகமாக உலா வரத் தொடங்கியிருந்தன. இலங்கையின் அரசியல் அடித்தளத்தையே நாம் மாற்றப் போகிறோம். அரசியல்வாதிகளின் ஊழல்களை நாம் வெளியிட போகிறோம் என்ற வகையிலாக பல பிரச்சாரங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
கோட்டா கோ ஹோம் போராட்டங்கள் வலுவடைந்து கொண்டிருந்த போது

Who are the Anonymous group and why they are censoring Russian state media | Deccan Heraldகணினி ஹேக்கர்களில் குழுவான  ‘அனானிமஸ்,(anonymous) குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை எச்சரிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்ததது. 14 நாட்களுக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனவும் புதிய பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த காணொளியில் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்ததது. இல்லாவிட்டால் ராஜபக்ஷ  குடும்பத்தின் அனைத்து ரகசியங்களும் வெளியாகும் என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்ததது.

இந்த வீடியோ தொடர்பான எச்சரிக்கை வெளியானதை தொடர்ந்து  இலங்கையின் சமூக வலைதளங்களில் இது தொடர்பான வாதங்கள் அதிகமாகியிருந்ததது. இதனை  தொடர்ந்து ஒரு சில நாட்களுக்குள்  ஜே.வி.பி தலைவர் அனுர குமார திஸநாயக்க அவசர அவசரமாக ஒரு ஊடக சந்திப்பை கூட்டி ராஜபக்சக்களதும், சஜித் பிரேமதாச, மைத்திரிபால சிறீசேன குழுவினரதும், ரணில் விக்கிரமசிங்கவினதும் கடந்த கால ஊழல்களை அம்பலப்படுத்தியிருந்தார். ராஜபக்சக்கள் மீதான கோபத்தையும் போராட்டத்தையும் தங்கள் பக்கமாக திருப்பி  ஜே.வி.பி மட்டுமே இலங்கையின் உண்மையான கட்சி என்பது போன்றதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாகவே இந்த சம்பவத்தை பார்க்க வேண்டியுள்ளது.
அனானிமஸ் குழுவினது ஆதாரங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஊடகங்களுக்கு அனானிமஸ் குழுவினது ஆதாரங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவனவாக தோன்றாத நிலையில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடியதான ஜே.வி.பியின் செய்திகளை காவிக்கொண்டு திரிந்தன. இதே காலத்தில் ஜே.வி.பி சார்பு ஊடகங்களும் – சில கொமினியூஸ்ட் எழுத்தாளர்களும் ஜே.வி.பி யே மீட்க தகுதியானவர்கள் என குறிப்பிட்டு எழுத தொடங்கினர்.
மக்கள் போராட்டம் என கூறப்பட்ட ஒரு போராட்டத்தை ஜே.வி.பி தன் பக்கம் கவர முற்படுகிறதோ என்ற ஐயம் தான் இங்கு அதிகமாக உள்ளது.
Sri Lanka Tweet 🇱🇰 💉's tweet - "A group including Leader of the JVP Anura Kumara Dissanayake arrives at the Galle Face green protest site - Hiru #LKA #SriLanka " - Trendsmap
அரசுக்கு எதிரான இந்த போராட்டங்களை முனைப்போடு ஆரம்பத்தில் எதிர்த்துக் கொண்டிருந்தது  எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமை தாங்கும்  ஐக்கிய மக்கள் சக்தியே ஆகும். தொழிற்சங்கங்களினதும் – பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களினதும் வருகையை தொடர்ந்து போராட்டம் முழுமையாக இடது சாரிய கட்சிகளின் பக்கம் சாய தொடங்கிவிட்டதை காணமுடிகின்றது.  மே- 9 ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டம் உச்சமாக வலுவடைந்த போது அரசுக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் அரச ஆதரவு குண்டர்களால் தாக்கப்பட்டனர். தாக்கப்பட்டோரை காலி முகத்திடலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச,  போராட்டக்காரர்கள் என குறிப்பிடப்பட்ட பலரால் துரத்தப்பட்டார். எனினும் அதே நேரம் போராட்ட களத்தை காண வந்த ஜே.வி.பி தலைவர் அனுரகுமார கைத்தாங்களாகவும் – கையசைத்தும் அந்த பரபரப்புக்குள்ளும் வரவேற்கப்பட்டார். இதனை ஊடகங்களும் பெரிய செய்தியாக காட்சிப்படுத்தின. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று இரண்டு மாதங்கள் வரை தொடர்ச்சியாக அமைதிப் பேணப்பட்டு வந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்திற்கான திகதியாக ஜூலை ஒன்பதாம் திகதியை பிரகடனப்படுத்தியதும் ஜே.வி.பி யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க என்பது கவனிக்கத்தக்கது.
உண்மையிலேயே இது மக்கள் போராட்டம் எனில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் பிரமுகரை மட்டும் தாக்கி – இன்னுமொரு கட்சி பிரமுகரை வரவேற்பது எந்தளவுக்கு பொருத்தமானது என்பதும் சிந்திக்கப்பட வேண்டியதே..!
ஜே.வி.பி மட்டுமா இந்தப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றது என்றால் இல்லை.
அரசுக்கு எதிரான இந்தப் போராட்ட காலகட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் – சமூக ஊடகங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்டு கொண்டிருக்கும் பெயர் குமார் குணரட்ணம் என்பதாகும். போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பல பல பல்கலைக்கழக மாணவர்களின் சமூக வலைத்தள கணக்குகளில் இந்த நபருடைய பேச்சுக்களையும் உரையாடல்களையும் அவதானிக்க முடிகிறது. இந்த போராட்டத்தை உந்தும் குமார் குணரட்ணம் பற்றியும் நோக்க வேண்டியுள்ளது.
இலங்கையின் தற்போதைய மிகப்பெரிய மாணவர் அமைப்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உருவெடுத்துள்ளது. ராஜபக்ச அரசுக்கு எதிரான போராட்டங்களின் வேகம் குறையும் போதெல்லாம் அந்தப் போராட்டத்தை மீண்டும் மீண்டும் உத்வேகப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை குறிப்பிட முடியும்.
தொழிற்சங்கங்கள் ஜேவிபியின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட இந்த மாணவர் ஒன்றியத்தை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு அமைப்பாக இன்னும் ஓர் இடதுசாரிய கட்சியாக முன்னணி சோசலிச கட்சி தொழிற்படுகிறது.
இலங்கையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆரம்ப கால அசைவுகளை குறிப்பாக 2012 க்கு முன்னரான காலகட்டம் வரை ஜே.வி.பி தீர்மானித்திருந்தது. எனினும் 2012க்கு பிறகு இந்த மாணவர் அமைப்பை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு சக்தியாகவும் இதன் அசைவுகளை  தீர்மானிக்கக் கூடிய ஒரு மாபெரும் சக்தியாக உள்ள கட்சி Frontline socialist party (முன்னணி சோசலிஸ்ட் கட்சி) என்பதை மறுப்பதற்கு இல்லை. இந்த அமைப்பே இன்றைய பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டங்களையும் தூண்டி வருவதை காணலாம்.
ஜேவிபி அமைப்பில் இருந்து தீவிர இடது சாரிய கொள்கைகளால் முன்னணி சோசலிச கட்சி மாறுபட்டு நிற்கின்றது. ஆஸ்திரேலியாவின் குடியுரிமையை பெற்றிருந்த பிரேம்குமார் குணரட்ணம் என்பவர் இந்த கட்சியின் முன்னணி ஒருங்கிணைப்பாளராக தற்போதைய தலைவராகவும் செயல்பட்டு வருகின்றார். 2017 ஆண்டு முதல் இலங்கையின் பிரஜாவுரிமையை  பெற்று செயல்பட்டு வரும் பிரேம்குமார் குணரட்ணம் 2020களில் அரசுக்கு எதிரான பாரிய போராட்டங்களை முதன் முதலில் ஆரம்பித்திருந்தார். இனவாதமற்ற இலங்கையினையும் –  இடது சாரிய அரசியலையும் முன்னிலைப்படுத்தி இயங்கிக் கொண்டிருக்கும் இந்த முன்னிலை சோசலிசக் கட்சி ராஜபக்ச அரசுக்கு எதிரான பல்கலைக்கழகம் மாணவர்களின் போராட்டத்தை இன்னும் முடக்கிவிட்டு இருக்கின்றது.
இந்தப் போராட்டங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னரான காலப்பகுதி வரை ஜே.வி.பி உடனான முறுகல் நிலை அதிகரித்து காணப்பட்ட போதும் கூட இன்றைய காலகட்டங்களில் ஜேவிபியுடன் முன்னணி சோசியலிஸ்ட் கட்சி இணைந்து செல்லக்கூடிய ஒரு போக்கு காணப்படுகின்றது. இதனை பிரேம்குமார் குணரட்ணம் Daily mirror ஆங்கில ஊடகத்திற்கு வழங்கிய உரையாடலில் குறிப்பிட்டிருந்தார். மக்கள் நிகழ்ச்சி நிரலுக்கு வெற்றியை உறுதி செய்ய வேண்டுமாயின் ஜேவிபியுடன் நாம் இணைந்து பணியாற்ற தயாராகவே உள்ளோம் என இந்த இடதுசாரிகள் குறிப்பிடுகின்றனர்.
Allow Gunaratnam to engage in politics' | Daily News
குமார் குணரட்ணம் டயஸ்போராக்களிடம் பணம் பெற்று ராஜபக்சங்களுக்கு எதிராக போராடி வருவதாகவும் பலத்த குற்றச்சாட்டுகள் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் பதில் அளித்த குமார் குணரட்ணம் “டயஸ்போரா” என்றால் புலம்பெயர்ந்தோர் குழு. முற்போக்கான சிந்தனையுள்ள மூன்று இன மக்களுடனும் நாம் தொடர்பில் உள்ளோம் என அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்டு அது ஒரு சுற்றுலா விடுதியாகப்பட்டமை, மேலும் பிரதமர் மாளிகை முற்றுகை இடப்பட்ட விவகாரம் , அதுபோல நேற்றைய பாராளுமன்ற முற்றுகை தொடர்பான போராட்டம் என பல்கலைக்கழக மாணவர்களின் கை ஓங்கி இருந்த தருணங்களின் பின்னணியில் குமார் குணரட்ணத்தின் தலைமையிலான முன்னணி சோசலிஸ்ட் கட்சியினுடைய ஆதிக்கம் மேலோங்கியுள்ளதை பரவலாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அண்மையில் Daily mirror ஊடக சந்திப்பில் ராஜபக்ச அரசுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் இந்த போராட்டம் தொடர் குமார் குணரட்னவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது “சோசலிஸ்டுகளின் ஆட்சி அமையும் வரை போராட்டம் தொடரும்” என்பது போன்றதான தொனியில் பேசியிருந்தார்.
No description available.
மக்கள் போராட்டம் என குறிப்பிடப்பட்டு மேற்கொள்ளப்படும் இந்த போராட்டங்களின் பின்னணி இடதுசாரிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது என்பதே உண்மை. மக்கள் கூட்டத்தை சரியான வழியில் இந்த இடதுசாரியக் கட்சிகள் வழிநடத்தினால் சந்தோஷமே. ஆனால் ரஷ்யாவிலும் சரி கொமினியூச புரட்சி நடந்த உலகின் ஏனைய நாடுகளிலும் சரி புரட்சிகள் மட்டுமே முறையாக நடந்தன. புரட்சியின் பின்னராக அமைந்த அரசுகள் நீடித்த சர்வாதிகாரப் போக்கையே நடைமுறைப்படுத்தின. அவ்வாறான ஒரு நிலை இலங்கையிலும் ஏற்படுமாயின் ராஜபக்சக்களின் ஆட்சியே மேலானதாக இருந்திருக்கும்.
சரி இந்த போராட்டங்கள் எப்போது முடிவுக்கு வரும் என்றால் …?
இந்த இடதுசாரிய கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும் வரை இந்த போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கப் போகின்றன. இந்த இடது சாரிய கட்சிகளின் பதவி வெறிக்காக – வெற்றிக்காக – இடதுசாரிய அரசியலுக்காக இன்னும் எத்தனை அப்பாவிகள் கைதாகப்போகிறார்கள்..? வன்முறை நோக்கி தூண்டப்பட போகிறார்கள்..?  என்பது தான் சிந்திக்கப்பட வேண்டிய கவலையான விடயம்.