::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

தனுஷ்க குணதிலக்க கிரிக்கெட் அல்லது வேறு எந்த விளையாட்டிலும் தொழில்ரீதியாக பங்கேற்க தடை – சட்டமா அதிபர் ஆலோசனை

இலங்கை கிரிக்கெட் அணியின் தனுஷ்க குணதிலக்கவின் நடத்தை தொடர்பாக விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது, பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க உள்ளாகியுள்ளார்.

இந்த நிலையில், இவரின் நடத்தை குறித்து விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் அவர், கிரிக்கெட் அல்லது வேறு எந்த விளையாட்டிலும் தொழில்ரீதியாக பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் அவருக்கு தடை விதிக்குமாறும் சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன தலைமையிலான குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கங்களை ஆராய்ந்த பின்னர் சட்டமா அதிபர், தமது பரிந்துரைகள் அடங்கிய கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதற்கிணங்க, இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குணதிலக்க தொடர்பாக அவுஸ்ரேலிய சட்ட அமைப்பு என்ன நடவடிக்கை எடுத்தாலும், இலங்கையின் சட்டத்தின்படி அவருக்கு எதிராக பொலிஸார் தனியாக நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி !

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 390 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்ப்பில் துடுப்பாட்டத்தில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 166 ஓட்டங்களையும் சுப்மன் கில் 116 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 391 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 22 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்ப்பில் மொஹமட் சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் 42.5 ஆவது ஓவரில் விராட் கோலி அடித்த பந்தை தடுக்க முயன்ற ஜெப்ரி வென்டர்ஸே மற்றும் அஷேன் பண்டார ஆகியோரே ஒருவருடன் ஒருவர் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளதை அடுத்து இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து உபாதைக்கு உள்ளான ஜெப்ரி வென்டர்ஸேவிற்கு பதிலாக துனித் வெல்லாலகே அணியில் இணைக்கப்பட்ட போதிலும் அஷேன் பண்டாரவிற்கு பதிலாக யாரும் போட்டியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

எனவே மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 3 – 0 என்ற ரீதியில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இலங்கையுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி – வீணானது தசுன் சானகவின் போராட்டம் !

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 373 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்ப்பில் விராட் கோலி 113 ஓட்டங்களையும் அணித் தலைவர் ரோஹித் சர்மா 83 ஓட்டங்களையும் சுப்மன் கில் 70 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் கசுன் ராஜித 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 374 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 306 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்ப்பில் இறுதி வரை போராடிய அணித் தலைவர் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸங்க 72 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் உம்ரான் மலிக் 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையில் 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

“சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும்.”- சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை !

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் உதைபந்தாட்ட விதிகளுக்கமைய செயற்படாவிட்டால், சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான ரொஷான் ரணசிங்கவிற்கு நேற்று அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றின் மூலமே இவ்வாறு குறிப்பிட்ப்பட்டுள்ளது.

இலங்கையில் விளையாட்டுச் சட்டத்தில் சில புதிய ஒழுங்குமுறைகளை உள்ளடக்கியிருந்ததோடு, அதற்கு எதிராக தற்போது பல தேசிய விளையாட்டு சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனமும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அந்த விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைமை உறுப்பினர் சங்க அதிகாரி கென்னி ஜீன் மேரி அனுப்பியுள்ள கடிதத்தில்,

“இலங்கையில் கால்பந்து அதிகாரிகளுக்கான தேர்தலில் வெளியுலக தலையீடுகள் இடம்பெறுவதை சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடுமையாக எதிர்க்கிறது. 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் 22 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அரசியலமைப்பு மற்றும் காலக்கெடுவிற்கு அமைவாக உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

இதற்கு அடுத்த வருடம் ஜனவரி 22ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இல்லை என்றால் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கையில் கால்பந்தாட்டத்தை தடை செய்வதுடன், நிதித் தடைகள் விதிக்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் வெளிநாட்டில் இருப்பதால், சர்வதேச கால்பந்து சம்மேளனம் அனுப்பிய கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் கையளிப்பதற்காக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் மற்றும் முன்னாள் செயலாளர் உபாலி ஹெவே ஆகியோர் விளையாட்டு அமைச்சுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டுக்கான எல்.பி.எல் கிரிக்கெட் தொடர் – சாதனையுடன் சாம்பியனானது ஜப்னா கிங்ஸ் அணி !

2022ஆம் ஆண்டுக்கான எல்.பி.எல் கிரிக்கெட் தொடரை ஜப்னா கிங்ஸ் அணி தனதாக்கியுள்ளது.

தொடர்ந்து 3 ஆவது முறையாக எல்.பி.எல் கிண்ணத்தை வென்ற அணியாக ஜப்னா கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.

கொழம்போ ஸ்டார்ஸ் அணியுடனான இன்றைய இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழம்போ ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

FIFA கிண்ணத்தின் மீது உப்பைத் தூவுவது போல சைகை செய்த சமையல் கலை நிபுணர் – விசாரணைகளை ஆரம்பிக்கிறது FIFA !

உலகக் கிண்ண கால்பந்து இறுதியாட்டத்தில் துருக்கியேவின் பிரபல சமையல்கலை நிபுணர் நுஸ்ரெத் கோக்கே  அனுமதியின்றி மைதானம் நுழைந்து உலகக்கிண்ணத்தை கையில் ஏந்தி முத்தமிட்டமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

50 மில்லியன் மக்கள் இன்ஸ்ட்ராகிராமில் பின்தொடரும் சமையல்கலை நிபுணர் நுஸ்ரெத் கோக்கேவின் குறித்த செய்கைக்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், பிபா எனப்படும் சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தின் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கால்பந்து இறுதிப்போட்டியின் பின் “சால்ட் பே (Salt Bae)” எனப்படும் துருக்கியேவின் பிரபல சமையல்கலை நிபுணர் நுஸ்ரெத் கோக்கே  திடீரென மைதானம் நுழைந்ததால் மெஸ்ஸி உள்ளிட்ட அர்ஜென்டினா அணி வீரர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தைத் தனது கைகளில் ஏந்தி அதற்கு முத்தமிட்டதோடு கிண்ணத்தின் மீது உப்பைத் தூவுவதுபோல வழக்கமான தமது சைகையைச் செய்துள்ளார்.

அர்ஜென்டினா அணி வீரர் ஒருவரின் பதக்கத்தை தமது பற்களால் கடித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

அவரது குறித்த செய்கைகள் பிபா விதிமுறைகளை மீறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத்தை வென்றவர்கள், பிபா நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் போட்டியை ஏற்று நடத்தும் நாட்டின் தலைவர்கள் மட்டுமே கிண்ணத்தைக் கைகளில் ஏந்த முடியும் என்பது பிபாவின் விதிமுறையாக உள்ளது.

இந்த நிலையில், குறித்த விதிமுறைகளை மீறியதாக சமையல்கலை நிபுணர் நுஸ்ரெத் கோக்கே மீது விசாரணைகளை முன்னெடுக்க பிபா தீர்மானித்துள்ளது.

ஆரம்பகட்டமாக, நுஸ்ரெத்தைத் மைதானத்திற்குள் நுழைய யார் அனுமதி கொடுத்தது என்பது தொடர்பில் விசாரணைகள் நடைபெறுகின்றன.

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன சாம் கர்ரன் !

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது.

இதில், இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. இடையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் போட்டி போட்டு ஏலம் கேட்டன. இறுதியாக, சாம் கர்ரனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதேபோல் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை வாங்கவும் கடும் போட்டி இருந்தது. இறுதியில் அவரை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சாம் கர்ரன் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் இதுவரை நடந்த ஐபிஎல் ஏலத்திலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

சாம் கர்ரன் – ரூ.18.50 (பஞ்சாப் கிங்ஸ்) கேமரூன் கிரீன் – ரூ.17.50 (மும்பை இந்தியன்ஸ்) பென் ஸ்டோக்ஸ் – ரூ.16.25 (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஹாரி புரூக்- ரூ.13.25 (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) ஜேசன் ஹோல்டர் – ரூ.5.75 (ராஜஸ்தான் ராயல்ஸ்)

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி – பிரான்சை பந்தாடி வெற்றி வாகை சூடியது மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா !

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கட்டாரில் கடந்த மாதம் 20-ந்திகதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையை கட்டியது. எதிர்பார்க்கப்பட்ட ‘நம்பர் ஒன்’ அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில், கால்இறுதியில் குரோஷியாவிடம்  தோற்று வெளியேறியது.

லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த நிலையில் உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று இரவு மோதின. பரபரப்பாக தொடங்கிய போட்டியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். அதில் பிரான்ஸ் வீரர் பாக்சில், அர்ஜென்டினா வீரரை தள்ளிவிட்டதால் பெனால்டி தரப்பட்டது. இதனையடுத்துட ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் கிடைத்த இந்த பெனால்டி வாய்ப்பை மெஸ்சி கோலாக மாற்றி அசத்தினார்.

இதனைத்தொடர்ந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டத்தை அதிகப்படுத்தியது. இதற்கு பலனாக ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் டி மரியா தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்தார். இதன்மூலம் ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் அணி வீரர் எம்பாப்பே, ஆட்டத்தின் 80 மற்றும் 81-வது நிமிடங்களில் தனது அணிக்கான அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து போட்டியை சமன் செய்து அசத்தினார்.  போட்டி சமன் ஆனதை தொடர்ந்து இரு அணி வீரர்களும் கூடுதல் கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சியகள் தோல்வி அடைந்தன. 90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில், பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதில் அர்ஜென்டினா அணி வீரர் மெஸ்சி போட்டியின் 108 நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இவரைத்தொடர்ந்து பிரான்ஸ் அணி வீரர் எம்பாப்பேவும் ஆட்டத்தின் 118-வது நிமிடத்தில் தனது அணிக்கான 3-வது கோலை அடிக்க ஆட்டத்தின் ஒவ்வொரு நொடியும் ரசிகர்களை உச்சகட்ட பரபரப்பில் உறைய வைத்தது. அர்ஜென்டினா வீரர்களான டி மரியா (1), மெஸ்சி (2), மற்றும் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே (3) என்ற கணக்கில் கோல் அடிக்க 3-3 என்று இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரம் முடிவடைந்த நிலையில் ஆட்டம் சமனில் நீடித்ததால் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. பின்னர் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. 1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் ஆர்ஸென்டீனாவுக்காக இந்த சாதனையை  நிகழ்த்தியுள்ளார். இந்த இறுதி போட்டியில் வென்றதன் மூலம் 3-வது முறையாக உலகக் கோப்பையை வென்று அர்ஜென்டினா சாதனை படைத்தது.

. முன்னதாக தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அர்ஜென்டினா அணி தொடக்க லீக்கில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தாலும் சுதாரித்துக் கொண்டு அசுரவேக எழுச்சியோடு வீறுநடை போட்டது. அரைஇறுதியில் 3 கோல்கள் போட்டு குரோஷியாவை ஊதித்தள்ளியது.

பதவி விலகுகிறார் ரொனால்டோவை களமிறக்க மறுத்த போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் !

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பெர்னாண்டோ தனது பதவி விலகலை உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளார்.

கால்பந்தாட்ட உலகக்கிண்ண போட்டியின் காலிறுதி சுற்றில் போர்த்துக்கல் அணி மொராக்கோ அணியிடம் தோல்வியடைந்தது.

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் தோல்வி இந்த தோல்விக்கு காரணம் அந்த போட்டியில் ரொனால்டோ 50 ஆவது நிமிடத்தில் களமிறக்கப்பட்டது தான் என சமூக வலைதளங்கள் ஊடாக ரசிகர்கள் குற்றம் சாட்டினார்கள்.

மேலும் அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் தனிப்பட்ட விரோதம் காரணமாக ரொனால்டோவை அந்த போட்டியில் முதலில் களமிறக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்கள்.

இதனால் போர்த்துக்கல்லின் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அந்த அணியின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த பயிற்றுவிப்பாளர்,

“நான் ரொனால்டோவை வெளியில் அமர வைத்ததுக்கு வருத்தப்படவில்லை. அவர் அணியில் விளையாடி இருந்தாலும் இதே நிலைமை தான் ஏற்பட்டிருக்கும். அதற்காக ரொனால்டோ திறமையான வீரர் இல்லை என கூறவில்லை. போர்த்துக்கல் அணி நன்றாக விளையாடியது, மொரோக்கோ அணி அதை விட நன்றாக விளையாடியது.”என கூறியுள்ளார்.

இவருடைய இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் கோவத்தை அதிகரித்தது. இந்நிலையில் அவர் தனது பதவி விலகலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதேவேளை 68 வயதுடைய போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பெர்னாண்டோ போர்த்துக்கல் அணியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எந்தக்கழகத்திலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு இடமில்லை – விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவு !

விளையாட்டுச் சட்டத்தில் பல புதிய விதிமுறைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள எந்தவொரு விளையாட்டுக் கழகத்திலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பதவிகளை வகிக்க முடியாத வகையில் விளையாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், விளையாட்டுக் கழகங்களின் எந்தவொரு அதிகாரி அல்லது குழு உறுப்பினரின் அதிகபட்ச வயதை 70 ஆக மாற்றவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

விளையாட்டுச் சட்டத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி அவர் இந்த திருத்தங்களை கொண்டுவந்துள்ளார்.