சுற்றுலா அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 280 ஓட்டங்கள் மற்றும் ஓர் இன்னிங்ஸினால் வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 591 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது.
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியின் நான்கு வீரர்கள் சதம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 179 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 140 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 102 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 104 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த அயர்லாந்து அணி மூன்றாவது நாளான இன்று 143 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.
இதில், இலங்கை அணியின் ரமேஷ் மெண்டிஸ் 52 ஓட்டங்களை கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
448 ஓட்டங்கள் அயர்லாந்து அணிக்கு மேலதிகமாக தேவைப்பட்ட நிலையில், ஃப்ளோ வன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அந்த அணி 168 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் இலங்கை அணி 280 ஓட்டங்கள் மற்றும் ஓர் இன்னிங்ஸினால் வெற்றிபெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் ஹெரி டெக்டர் 42 ஓட்டங்களை அணிசார்பில் அதிகபடியாக பெற்றார்.
பந்துவீச்சில் ரமேஸ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுகளையும் விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிரபாத் ஜயசூரிய தெரிவானார்.
இந்தநிலையில், இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரில் இலங்கை அணி 1 – 0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.
இதேவேளை, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி காலியில் நடைபெறவுள்ளது.