ஜெயபாலன் த

ஜெயபாலன் த

புலத்து தமிழ் மக்களின் இஸ்ரேலியக் கனவு ‘வணங்கா மண்’ : த ஜெயபாலன்

Exodus_1947Exodus 1947 :

1947 யூலை 11 அன்று ஒரு கப்பல் பிரான்ஸ் Port of Sète துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. இதில் பயணித்தவர்கள் ஹிட்லரின் வதைமுகாம்களில் இருந்து தப்பிய யூத மக்கள். வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள், பெற்றோரை இழந்த குழந்தைகள் என 4515 பேர் தங்களுக்கான தாயகத்தை உருவாக்கப் போகிறோம் என்ற கனவுடன் தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர்.

1928ல் சேவைக்கு விடப்பட்ட இக்கப்பல் “President Warfield” மக்கள் போக்குவரத்திலும் படையெடுப்பிலும் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலக மாகா யுத்தத்தின் பின் இக்கப்பல் Potomac Shipwrecking Co என்ற நிறுவனத்திற்கு பழைய இருப்புக்கு பேரிச்சம் பழம் என்பது போல் விற்கப்பட்டது. ஆனால் இந்தக் கப்பலை வாங்கிய Potomac Shipwrecking Co இடம்இருந்து அதனுடன் தொடர்புடைய Hagana என்ற யூத அரசியல் அமைப்பினூடாக இறுதியில் பலஸ்தீனத்தில் தலைமறைவாக செயற்படும் இரகசிய இயக்கமான Hamossad Le’aliyah Bet இன் கைகளில் சென்றடைந்தது.

Hagana அமைப்பு இந்தக் கப்பலை தங்களுக்கு என்று ஒரு தாயகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தியது. அன்று பிரித்தானிய காலனி ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீனத்தில் தங்களுக்கு என்று ஒரு தாயகத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இறங்க இக்கப்பல் தயாரானது. பைபில் காலத்தில் குறிப்பிடப்படும் எகிப்தில் இருந்து கன்னான் க்கு இடம்பெற்ற இடம்பெயர்வைக் குறிக்கும் வகையில் Exodus 1947 இக்கப்பலுக்கு எனப் பெயரிடப்பட்டது.

1947 யூலை 11 அன்று பிரான்ஸ் Port of Sète துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட Exodus 1947 ஒரு வாரத்தில் யூலை 18 அன்று பாலஸ்தீனக் கடற்பரப்பை அடைவதற்கு முன்னரேயே பிரித்தானிய கடற்படை போர்க்கப்பல்கள் Exodus 1947யை சுற்றி வளைத்தன. இதில் நடந்த கலகத்தில் Exodus 1947 இன் செலுத்திகளில் ஒருவரும் யூதப் பயணிகள் இருவரும் கொல்லப்பட்டனர் பலருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டது. அதன் பின் பிரித்தானிய கடற்படையினர் கப்பலை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.

இந்த கப்பல் பயணிகளின் பயணம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது. ஹிட்லரின் வதைமுகாம்களில் இருந்து தப்பியவர்களின் நாடு தேடும் பயணம் என்ற வகையில் அதற்கு அதீத முக்கியத்துவம் இருந்தது. இருந்தாலும் சட்ட விரோதமானவர்கள் என்ற அடிப்படையில் அவர்களைத் திருப்பி வந்த இடத்திற்கே அனுப்புவது என்று பிரித்தானிய காலனியாளர்களால் முடிவெடுக்கப்பட்டது. தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த Exodus 1947 யை பாலஸ்தீனத்தின் ஹய்பா துறைமுகத்திற்கு கொண்டு சென்று பயணிகளை வேறு மூன்று திருப்பி அனுப்புவதற்கு தயாரான Runnymede Park, Ocean Vigour, Empire Rival கப்பல்களில் ஏற்றி வந்த இடத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டனர். கப்பல்களில் பிரித்தானிய கடற்படையினரும் பயணம் செய்தனர்.

திருப்பி அனுப்பப்ட்ட கப்பல்கள் பிரான்ஸின் Port-de-Bouc துறைமுகத்தை அடைந்தது. ஆனால் தாயகம் அமைக்கும் கனவுடன் சென்ற பயணிகள் பிரான்ஸில் தரையிறங்க மறுத்தனர். அவர்களைப் பலவந்தமாக தரையிறக்குவதற்கு ஒத்துழைக்க பிரான்ஸ் மறுத்துவிட்டது. அதனால் பிரித்தானிய அரசு தனது கட்டுப்பாட்டு பகுதிக்கு கப்பலைக் கொண்டு வந்து பயணிகளைத் தரையிறக்க முற்பட்டது. அதற்கு ஜேர்மனியே அவர்களுக்கு அருகில் அமைந்திருந்தது.

ஏற்கனவே சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்த இந்த கப்பல் பயணம், ஹிட்லரின் வதைமுகாம்களில் கொடுமைப்படுத்தப்பட்ட அதே மக்களை ஜேர்மனியிலேயே கொண்டு சென்று தரையிறக்க முற்படுவது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது விளக்க வேண்டிய அவசியம் அற்றது. அவர்களை கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தி முட்கம்பி முகாம்களில் அடைக்கவும் பிரித்தானிய அரசு முடிவு எடுத்தது. ஜேர்மனியின் ஹம்பேக் துறைமுகத்தில் பயணிகள் தரையிறக்கப்பட்டனர். பெண்கள் குழந்தைகள் நீண்ட அலைச்சலில் சோர்வடைந்து போராட வலுவற்று தரையிறங்கினர். ஆண்கள் போராடினாலும் இறுதியில் பலவந்தமாகத் தரையிறக்கப்பட்டனர்.

திருப்பி அனுப்பப்பட்ட கப்பலில் பிரித்தானிய படைகள் மோசமாக நடந்துகொண்டதாக விபரிக்கப்பட்டது. ஒரு உதைபந்தாட்ட மைதானத்தில் விளையாடுவது போல் பிரித்தானிய படைகள் நடந்துகொண்டதாக உலக யூத கொங்கிரஸ் செயலாளர் Dr Noah Barou பதிவு செய்கிறார். கப்பலில் கொண்டு வரப்பட்டவர்கள் நாசி வதைமுகாம்களில் இருந்து தப்பியவர்கள் என்ற கரிசனை கூட இன்றி தாக்கப்பட்டதாக அப்பதிவு தெரிவிக்கிறது. கப்பலில் இருந்த யூத மக்கள் பிரித்தானிய படையினரை ‘Hitler commandos’, ‘gentleman fascists’, ‘sadists’ என்றெல்லாம் வர்ணித்து உள்ளனர்.

இந்த Exodus 1947 கப்பல் அகதிகள் பிரித்தானியாவை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தியது. குறிப்பாக நாசி வதைமுகாம்களில் இருந்து தப்பியவர்களை ஜேர்மனியிலேயே தரையிறக்கி தடுத்து வைத்தது பிரித்தானிய அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அபகீர்த்தியானது. அந்த வகையில் Exodus 1947 ன் தாயகத்தை அமைக்கும் கனவு உடனடியாக நிறைவேறாது போனாலும் சர்வதேச கவனத்தை யூத மக்களின் மீது திருப்பியதுடன் சர்வதேசத்தின் ஆதரவை தமக்காகத் திருப்பியதிலும் வெற்றிகண்டது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள யூத மக்களின் போராட்டங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரித்தானிய அரசு தனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அவமானத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள யூத மக்கள் மீது அனுதாபம்கொள்ள ஆரம்பித்தது.

இறுதியில் 1948ல் பிரித்தானிய அரசு இஸ்ரேல் அரசை அங்கீகரித்தது. இஸ்ரேல் அரசு அங்கீகரிக்கப்பட்டதற்கு அப்போது இருந்த புவியியல் அரசியல் காரணங்களின் தாக்கம் மிக முக்கியமானது. குறிப்பாக இரண்டாம் உலகப்போரின் முடிவைத் தொடர்ந்து உருவான பனிப்போர் மத்திய கிழக்கில் மையங் கொண்டிருந்தமை முக்கிய அம்சமாகும்.

1948 ஏப்ரலில் ஜேர்மனியில் இருந்த இரு முகாம்களிலும் Exodus 1947 கப்பலில் பயணித்த 1800 அகதிகள் மட்டுமே இருந்தனர். ஏனையோர் பாலஸ்தீனத்துக்கு செல்ல முயல்கையில் கைதாகி காலவரையறையின்றி பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்த சைப்பிரஸ்ஸில் தடுத்து வைக்கப்பட்டனர். இஸ்ரேலிய அரசு அங்கிகரிக்கபட்ட பின்னர் இவர்கள் தங்கள் தாயகபூமியாகக் கருதும் இஸ்ரேலைச் சென்றடைந்தனர்.

இவர்கள் பயணம் செய்த கப்பல் Exodus 1947, 1952ல் கடல் மட்டத்திற்கு எரிக்கப்பட்டு ஹய்பா கடற்கரையில் நிறுத்தப்பட்டது. 1963ல் இத்தாலிய நிறுவனத்தினால் பிரித்து மேயப்பட்டது.

Vanni_Mission வணங்கா மண் 2009 :

._._._._._.

“வணங்கா மண்”:  உலகமே கை விட்ட பின் எம் உறவுகளின் உயிர் காப்பதற்க்கான தாயகம் நோக்கிய பயணம்.

பிரித்தானிய வாழ் புலம் பெயர்ந்த உறவுகளால் ஈழத்து உறவுகளுக்கான உணவு மற்றும் உயிர்க்காப்பு மருந்துக்களுடன் தாயகம் நோக்கிய பயணத்திற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு “வணங்கா மண்” ஒருங்கிணைப்பு குழு கேட்டுக்கொள்கிறது.

தற்போதைய யுத்த நடவடிக்கையில் என்றுமில்லாதவாறு உணவு ஆயுதமாக பாவிக்கப்படுகின்றது. இதற்கு ஜநா முதல் உலகநாடுகள் அனைத்துமே எம்மக்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கிறது. இந்நிலையில் எம் உறவுகளுக்காக பிரித்தானிய தமிழர்களால் “வணங்கா மண்” நடவடிக்கை இன்று முதல் பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் குண்டுமழையில் சாவுக்குள் வாழ்வாய் வாழும் மக்களை பட்டியால் சாவு கொள்ள விடுவோமா? வேதனைகள் சோதனைகளை கடந்து வந்து புலம் பெயர்ந்து வாழும் நாம் எம்மினம் அழிய விடுவோமா? அரசுகள் கைவிட்டால் என்ன? மனிதநேயம் கொண்ட மக்களிடம் எடுத்து செல்லுங்கள் எம்துயரை, பெற்றுக்கொள்வோம் அவர்கள் ஆதரவை. காத்திடுவோம் எம் உறவுகளை என்று வேண்டிநிற்கிறது.

“வணங்கா மண்” ஒருங்கிணைப்பு குழு.

பிரித்தானியாவில் இருந்து ஒப்பரேஷன் “வணங்கா மண்” எனப்படும் கப்பல் அத்தியாவசிய பொருட்களையும் மருந்துவகை மற்றும் குழந்தைகளுக்கான பால்மா பொருட்களுடன் நேரடியாக முல்லைத்தீவு துறைமுகம் செல்லவிருக்கிறது.

இந்த நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் “வணங்கா மண்” என பெயரிடப்பட்டுள்ளது. சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ள நிலையில் இக்கப்பலில் கொண்டு செல்ல உலர் உணவுப் பொருட்களை ஏற்பாட்டாளர்கள் புலம் பெயர் பிரித்தானியர்களிடம் கோரி நிற்கின்றனர்.

நன்றி-பாரிஸ்தமிழ்.கொம்

._._._._._. 

Operation Vananga-Man  Vanni Mission என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பொருட்களை சேகரிப்பதில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. மருந்துப் பொருட்கள் உலர் உணவுப் பொருட்கள் என்பன சேகரிக்கப்படுகின்றன. ஆனால் தற்போது பொருட்களாக இல்லாமல் பணமாக அன்பளிப்புச் செய்யுமாறு கேட்கப்படுவதாக தகவல்கள் எட்டுகிறது. இந்த நடவடிக்கைக்கு பிரித்தானிய பொதுஸ்தாபன ஆணையகத்தின் கீழ் பதிவு செய்யப்ட்ட Tamil Aid,  Tamils Health Organisation,  The Tamils Support Foundation,  Technical Association of Tamils ஆகிய அமைப்புகள் நிதி மற்றும் உதவிகளை வழங்குவதாகக் கூறப்பட்டு உள்ளது.

இந்த வணங்கா மண் நடவடிக்கையை எவ்வாறு அனைவருக்கும் அறியப்படுத்த முடியும் என பிரித்தானிய தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரன் மார்ச் 17ல் ஊடகவியலாளர் மேரி கொல்வினுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கேட்ட போது சர்வதேச ஊடகவியலாளர்களையும் இந்தக் கப்பலில் ஏற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

‘சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ளது’ என்று செய்திகள் கசியவிடப்பட்ட போதும் ‘வணங்கா மண்’ முல்லைத்தீவுத் தரையை தட்டும் என்பது ஒரு பகற்கனவாகவே உள்ளது.  நாம் அறிந்திராத நாடுகளின் கொடிகளுடன் எல்லாம் புலிகளின் கப்பல்கள் ஓடுகின்றன. அதனால் ஒரு கப்பலை அமர்த்தி பொருட்களை ஏற்றி பிரித்தானியத் துறைமுகம் ஒன்றில் இருந்து கப்பலை ‘வணங்கா மண்’ என்று பெயரிட்டு அனுப்புவது ஒன்றும் புலத்து புலி ஆதரவு அமைப்புகளுக்கு ஒரு விடயமே அல்ல. கப்பலில் இலங்கைக்கு பொருட்களை ஏற்றி இறக்கும் நிறுவனங்கள் இதனையே செய்கின்றன.

‘வணங்கா மண்’ இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதிக்கப்படுமா என்பதே இங்குள்ள முக்கிய கேள்வி. இலங்கை அரசும் பிரித்தானிய தூதரகமும் அவ்வாறான ஒரு கப்பலின் வரவு பற்றி தாங்கள் அறிந்திருக்கவில்லை எனத் தெரிவித்து உள்ளனர். மனிதாபிமான நோக்கத்துடன் அவ்வாறான ஒரு கப்பல் வருமாக இருந்தால் அது இலங்கைக் கடற்பரப்பினுள் அனுமதிக்கப்படுமா எனக் கேட்டபோது, இலங்கையின் கப்பல் போக்குவரத்து மற்றும் சுங்க விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

‘வணங்கா மண்’ ஒரு பிரச்சார நடவடிக்கையாகவே அமைய உள்ளது. ‘வணங்கா மண்’ ஏற்பாட்டாளர்களுக்கு முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் மட்டுமல்ல இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதற்கும் இலங்கை அரசின் அனுமதி அவசியம் என்பது தெரியும்.

1947ல் பிரான்ஸில் இருந்து பாலஸ்தீனத்திற்கு Exodus 1947 புறப்பட்டது போல் ஆங்கிலேயருக்கு பணியாது போரிட்ட பண்டார வன்னியன் வாழ்ந்த மண் – வன்னி மண் – வணங்கா மண் முல்லைத்தீவு நோக்கிப் பிரித்தானிய துறைமுகம் ஒன்றில் இருந்து புறப்படலாம். இலங்கைக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் அதனை இலங்கை கடற்படை வழிமறிக்கலாம். மனிதாபிமானக் கப்பல் வழிமறித்ததைத் தொடர்ந்து தமிழகத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் கொதித்தெழலாம். தீக்குளிக்கலாம். சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்க்கலாம். ஆனால் தமிழ் மக்களின் மேல் சர்வதேச அனுதாபத்தை அதனால் ஏற்படுத்த முடியுமா?

அன்றிருந்த சர்வதேச அரசியல் நிலவரம் பனிப்போர் இன்றில்லை. இது பயங்கரவாதத்திற்கு எதிரான அரசியல் ஆதிக்கம் பெற்றுள்ள காலம். மார்ச் 1ல் Tamils Against Genocide என்ற அமைப்பு அமெரிக்க சட்டவாதி புரூஸ் பெயின் என்பவரை அழைத்து லண்டனின் பல்வேறு பகுதிகளிலும் மரதன் ஓட்டத்தில் கருத்தரங்குகளை நடாத்தியது. அதில் ஒன்றில் நானும் கலந்து கொண்டிருந்தேன். ‘அமெரிக்காவில் உள்ள செனட்டர்களிடம் தமிழ் என்று சொன்னாலே அவர்கள் தமிழ் புலிகளையும் பெண் தற்கொலைக் குண்டுதாரிகளையும் தான் நினைக்கிறார்கள். அதனால் தமிழ் மக்களுடைய நியாயமான பிரச்சினையை அவர்களுக்கு புரிய வைப்பது கடினமானதாக இருக்கின்றது’ எனத் தெரிவித்தார். தமிழ் புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்பதை முதலில் நிறுவ வேண்டி இருப்பதாகவும் அவர் கூறினார். இதுவே இன்றைய யதார்த்தம். அமெரிக்காவில் உள்ள சட்டத்தரணி தனது வாதத்தை வெல்வதற்கு தமிழ் மக்களும் தமிழ் புலிகளும் ஒன்றல்ல என்கிறார். இலங்கை அரசு புலிகளை அழிக்கிறது என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது இன அழிப்பைக் கட்டவிழ்த்து விட்டு உள்ளது என்று சரியாகவே தனது வாதத்தை ஆங்கிலத்தில் வைக்கின்றார்.

ஆனால் இந்த அமைப்புகள் புலம்பெயர் மக்களுக்கு தமிழில் பேசும் போது தமிழ் மக்களையும் புலிகளையும் பிரிக்க முடியாது புலிகள் தான் தமிழ் மக்கள் தமிழ் மக்கள் தான் புலிகள் என்று சொல்லி முல்லைத்தீவு மக்களை மரணப்பொறிக்குள் நிறுத்தி வைத்துள்ளனர். அதுமட்டுமல்ல வாயும் வயிறும் கட்டப்பட்டு உள்ள மக்களுக்காக குரல்கொடுப்பதாகக் கூறிக்கொண்டு பூர்வீக மண்ணைவிட்டு – அந்த மரணப் பொறியைவிட்டு அவர்கள் வெளியெற மாட்டார்கள் என்று இவர்கள் குரல் எழுப்புகிறார்கள். ரொறன்ரோ லண்டன் சிட்னி என்று வீடும் வளவும் வாங்கி விட்டுவிட்டு முல்லைத்தீவை பூர்விக மண் என்று அந்த மக்களின் தலையில் கட்டிவிட்டு கதையளக்கிறார்கள் புலத் தமிழர்கள்.

‘வன்னி மாடுகளை (மக்களை) ஒரு கட்டு வைக்கோலுடன் சமாளிப்பேன்’ என்றவர் ‘அடங்காத் தமிழன் வன்னியசிங்கம்.’ இங்கு புலத் தமிழன் ‘வணங்கா மண்’ கப்பல் அனுப்புகிறான் வன்னி மக்களுக்கு. வன்னி மக்கள் எல்லாத்துக்கும் தலையைத் தலையை ஆட்டுவார்கள் என்ற நினைப்பில் ‘வணங்கா மண்’ என்று றீல் விடுகிறார்கள்.

இலங்கை அரசு பேரினவாத அரசு என்பதை மட்டும் சரியாகவே இனம்காட்டி தமது தலைமைகளைத் தக்க வைத்துக் கொள்வதைத் தவிர தமிழ் அரசியல் தலைமைகளால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வெற்றிகொள்ள முடியவில்லை. அதற்கு தந்தை செல்வா முதல் அண்ணன் அமிர்தலிங்கம் உட்பட தம்பி பிரபாகரன் வரை யாரும் விதிவிலக்கல்ல. முன்னையவர்கள் இருவரும் மிதவாத அரசியல் தலைவர்கள். அவர்களின் பார்வை தமிழ் வாக்கு வங்கியின் மீதே இருந்தது. அதனால் அவர்களுக்கு ஓரளவு தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் இருந்தது. பின்னையவருக்கு அந்தக் கவலையும் இல்லை. ஏகபிரதிநிதி. தனிக்காட்டு ராஜா.
 
தமிழ் மக்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக இழக்கப்பட தியாகிகளும் துரோகிகளும் என்று கொல்லப்பட்டவர்களின் பட்டியல் எகிறிக்கொண்டே சென்றது. துரோகிகளின் வரைவிலக்கணங்கள் காலத்திற்குக் காலம் மாற்றப்பட்டு இன்று தங்கள் உயிரைக்காக்க மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பிக்க ஓடுபவர்களும் துரோகியாகி விட்டார்கள். ரொறன்ரோவிலும் லண்டனிலும் பாரிஸிலும் இருந்து கொண்டு தமிழ் மக்களின் பூர்வீக பூமி பற்றி விசேட கருத்தரங்குகள். மரணத்தின் விளிம்பில் நின்றாலும் பரவாயில்லை பூர்வீக மண்ணை பாதுகாப்பதற்காக இறுதிவரை போராட வேண்டுமாம். அதற்காக தாங்கள் ஐரோப்பாவில் இருந்து உணவும் மருந்தும் வணங்கா மண்ணில் முல்லைத் தீவுத் துறைமுகத்திற்கு வந்து சேருமாம்.

இலங்கை அரசுகளுடைய பேரினவாதப் போக்கும் தமிழ் தலைமைகளின் குறுந்தேசியவாதப் போக்கும் அரசியல் வறுமையும் தமிழ் மக்களை இன்று மிக மோசமான போர்ச் சூழலில் நிறுத்தி உள்ளது. மீளவும் தங்கள் தலைமையை நிறுவ புலிகள் தங்களிடம் உள்ள அனைத்து துருப்புச் சீட்டக்களையும் பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்று வன்னி மக்களின் உயிரிழப்புகளால் ஏற்படக் கூடிய மனித அவலம் என்பதும் வெளிப்படையாகி விட்டது. ஒரு பக்கம் இனவாத அரசு. மறுபக்கம் அதற்கு பலிகொடுக்கத் தயாராக நிற்கும் புலிகள். இரண்டுக்குமிடையே வன்னி மக்கள்.
 
‘நான் 25 வருடமாக யுத்தத்தை எதிர்த்து வருபவன். இன்று முல்லைத்தீவில் 1 1/2 முதல் 2 1/2 இலட்சம் வரையான மக்கள் நெருக்கடியான நிலைக்குள் அகப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது மனிதநேய நெருக்கடியிலிருந்து அழிவை நோக்கி நாம் செல்கின்றோம். இது போன்ற நிகழ்வு முன்னர் இங்கு இடம்பெற்றதில்லை. இது தொடர்பில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வராவிட்டால் 30 ஆயிரம் மக்கள் மடியலாம். இதனை எந்தவொரு நவீன சமூகமும் ஏற்காது. எனவே நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்க வேண்டிய நிலையிலுள்ளோம்.’

கலாநிதி குமார் ரூபசிங்க

இன்று எல்லோர் முன்னும் உள்ள மிகப்பெரிய பொறுப்பு ஏற்படப் போகின்ற மனித அவலத்தை தடுத்து நிறுத்தவது. தாகத்திற்கு தண்ணி தாருங்கள் என்று மக்கள் உயிருக்கு தவிக்கிறார்கள். ஆறாயிரம் மைலுக்கு அப்பால் இருந்துகொண்டு ‘வணங்கா மண்’ணில் தண்ணி அனுப்புவம் என்று றீல் விடுவதை விட்டுவிட்டு அங்குள்ள அவலத்தை தடுக்க யதார்த்த்தமான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மரணத்தின் விளிம்பில் வன்னி மக்கள் நிற்க, லண்டனில் ….. : த ஜெயபாலன்

Marie_CalvinMarie_CalvinMarie_Colvin_Before1._._._._._.

வன்னி மக்கள் மீது இலங்கை இராணுவம் மேற்கொள்ளும் பாரபட்சமற்ற தாக்குதல்கள் பற்றி விருதுகள் பெற்ற யுத்தச் செய்தியாளர் மேரி கொல்வின் வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்றக் கட்டிடத்தில் பார்வையாளர்களுக்கு விளக்கியது மட்டுமல்ல பிரித்தானியாவின் தேசிய நாளிதலான சண்டே ரைம்ஸ் பத்திரிகையிலும் விரிவாகவே எழுதி உள்ளார். இலங்கை இராணுவத்தின் பிடியில் தமிழர்கள் எதிர்நோக்கக் கூடிய இன்னல்கள் பற்றி அவர் யாரிடமும் கேட்டு அறிய வேண்டிய தேவை இருக்கவில்லை. 2001ல் வன்னிப் பகுதிக்குள் சென்று திரும்பியவர் இராணுவத்தின் பிடியில் ஏற்பட்ட சொந்த அனுபவமே தமிழர்களின் நிலையை விளக்க போதுமானதாக இருந்தது.’The Forgotten Conflict in Sri lanka’ என்ற தலைப்பில் மார்ச் 17 நடைபெற்ற விசேட கருத்தரங்கில் மேரி கொல்வின் வன்னி மக்களின் அவல நிலைபற்றி எடுத்துக் கூறினார். அமெரிக்க ஊடகவியலாளரான மேரி கொல்வின் பிரித்தானிய தேசிய நாளிதலான ரைம்ஸ் பத்திரிகையில் பணிபுரிகிறார்.

200 000 பேர் வரையானவர்களை புலிகளே தடுத்து வைத்துள்ளனர் என்ற இலங்கை அரசின் பிரச்சாரத்தை நிராகரித்த அவர் வன்னி மக்களுக்கு இலங்கை இராணுவத்தின் மீதுள்ள பீதி பயம் அவர்களைப் புலிகளுடனேயே செல்ல நிர்ப்பந்தித்தாகவும் கூறினார். புலிகள் தங்களைப் காப்பவர்கள் என்ற எண்ணமே வன்னி மக்களிடம் இருப்பதாகவும் அவர்களிடம் பெரும்பாலும் புலிகளுக்கான ஆதரவு இருப்பதாகவும் மேரி கொல்வின் சுட்டிக்காட்டினார்.

ஊடகங்கள், மனிதாபிமான அமைப்புகள் அனைத்துக்கும் இலங்கை அரசு தடைவிதித்துள்ள நிலையில் ஊடகங்கள் வன்னி யுத்தம் பற்றி செய்திகளை வெளியிட இயலாத நிலை இருப்பதைச் சுட்டிக்காட்டிய மேரி கொல்வின் ஊடகங்கள் – தாங்கள் அங்கு நின்று செய்திகளை வெளியிடவே விரும்பவதாகவும் ஆனால் அதற்கு தாங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

சர்வதேச சமூகம் இப்பிரச்சினையில் பாராமுகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர் பிரித்தானியாவிற்கு காலனித்துவ பொறுப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இக்கருத்தரங்கை All Party Parlimentary Group for Tamils அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கிற்கு இவ்வமைப்பின் முக்கியஸ்தரும் பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கியஸ்தருமான சென் கந்தையா தலைமை தாங்கினார். வன்னி மக்களின் நிலை தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மேற்கொண்ட முன்னெடுப்புகள் எதுவும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றும் ஆயினும் தொடர்ந்தும் கவனத்தை ஈர்ப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சென் கந்தையா தெரிவித்தார். காஸாவில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலை 22 நாட்களில் முடிவுக்கு கொண்டு வந்த சர்வதேச சமூகம் அதனிலும் மோசமான யுத்தம் நடைபெறும் வன்னியில் தாக்குதலை நிறுத்த முயற்சிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். இலங்கை அரசாங்கம் பிரச்சார ரீதியில் நங்களிலும் பார்க்க முன்னுக்கு நிற்பதையும் சென் கந்தையா சுட்டிக்காட்டினார்.

சென் கந்தையாவின் தலைமை உரையை அடுத்து வன்னி யுத்த களத்தில் பதிவு செய்யப்பட்ட 10 நிமிட விடியோப் பதிவு காட்சிப்படுத்தப்பட்டது. அப்பதிவில் வன்னி மக்கள் ஒவ்வொரு நிமிடமும் எதிர்கொள்ளும் சொல்லொனாத் துயரமும் விபரிக்க முடியாத வேதனையும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதற்கு அப்பால் அதனை விபரிக்க வேண்டிய அவசியம் தன்ககு; இல்லையென அதனைத் தொடர்ந்து உரையாற்றிய மேரி கொல்வின் குறிப்பிட்டு இருந்தார்.

இவற்றைத் தொடர்ந்து வன்னியில் தங்கள் உறவுகளை இழந்தவர்கள் தங்கள் துயரை வெளிப்படுத்தினர். நடேசன் மயில்வாகனம் என்பவர் சாதாரண காய்ச்சல் வந்து அதற்கு சிகிச்சை எடுக்க முடியாத நிலையில் தனது வயோதிபத் தந்தை காலமானதை வேதனையுடன் சுட்டிக்காட்டினார். தந்தையைக் காண வவுனியாவின் எல்லைவரை சென்ற நடேசன் மயில்வாகனம் தந்தையை உயிருடன் பார்க்க முடியவில்லை.

இன்னும் சிலர் தங்கள் உறவுகள் உயிரிழந்த செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர்.

ஆனால் தனது சகோதரி, தனது தாய், தனது அண்ணி என குடும்பத்தில் மூவரை ஒரே நேரத்தில் பறிகொடுத்த பெண்ணொருவர் கண்ணீர் மல்க தனது இழப்பை பகிர்ந்து கொண்டது அங்கிருந்த ஒவ்வொருவரது உள்ளத்தையும் தொட்டது. உயிரிழந்த உறவுகளை கண்ணாடிச் சட்டத்தினுள் தாங்கியவாறு நின்ற அப்பெண் எதுவும் பேசவில்லை. அதுவே பல விடயங்களைப் பேசியது. வார்த்தைகளிலும் பார்க்க அந்த மௌனம் அந்தக் கண்ணீர் உண்மையானதாக இருந்தது. உணர்வுகளைத் தொட்டது.

இக்கருத்தரங்கில் All Party Parlimentary Group for Tamils அமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக தொழிற்கட்சி லிபிரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களே பெரும்பாலும் கலந்து கொண்டிருந்தனர். தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கொன்சவேடிவ் பாராளுமன்ற உறுப்பினர் லியம்பொக்ஸ் வெளியிட்ட அறிக்கை இலங்கை அரசுக்கு சார்பானதாக அமைந்ததாக அங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. பிரதமர் கோர்டன் பிரவுணும் அவரது அமைச்சரவையும் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் கரிசனையுடன் நடந்துகொள்வதாகப் பாராட்டிய சென் கந்தையா பிரித்தானியாவே முதலில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தியதாகவும் பிரித்தானியாவின் அழுத்தத்தினாலேயே அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து அறிக்கையை வெளியிட்டதாகவும் அங்கு குறிப்பிட்டார்.

ஆனால் இதற்கு முற்றிலும் எதிர்முனையாக இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் தங்கள் அரசாங்கத்தைக் கொண்டு மகிந்த ராஜபக்ச அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். தாங்கள் மாணவர்களாகவும் தமிழ் மக்களும் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட போதும் பிரித்தானிய அரசு அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை என்று குறிப்பிட்ட அம்மாணவர், இலங்கை அரசு இனப்படுகொலை புரிவதாகவும் நைஜீரியா பிஜி பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பொதுநலவாய அமைப்பில் இருந்து நீக்கியது போல் இலங்கையையும் பொதுநலவாய அமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரினார்.

அதற்குப் பதிலளித்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானியா அதற்கு முயற்சிப்பதாகக் கூறினார். யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தவும் இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுக்கவும் பிரித்தானிய அரசு கடுமையாக உழைப்பதாகக் கூறிய அவர் யுஎன் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதை ரஸ்யா தடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இரண்டு மணிநேரம் வரை நீடித்த இந்தக் கருத்தரங்கில் வழமையான புலிப் பல்லவிகளுக்கும் சரணங்களுக்கும் எவ்வித பற்றாக்குறையும் இருக்கவில்லை. மேற்குறிப்பிட்ட ஒரு சிலர் ஒரு சில விடயங்கள் தவிர மற்றும்படி வழமையான கோயில் மேளங்களே முழங்கின. அதனால் அங்கு பேசப்படக் கூடிய ஆரோக்கியமான அம்சங்களும் கோயில் மேளத்தின் சத்தத்தில் கரைந்து போனது.

2._._._._._.

‘தமிழீழமே எமது மக்களுக்கு ஒரே தீர்வு.’ ‘புலிகளுடைய தடையை நீக்க வேண்டும்.’ புலிகள் சிறுவர்களை படையில் சேர்ப்பதில்லை.’ ‘புலிகள் மனித உரிமைகளை மீறுவதில்லை.’ ‘சர்வதேசம் இலங்கை அரசு சொல்வதையே நம்புகிறது.’ போன்ற விடயங்கள் இவ்வாறான புலி ஆதரவு அமைப்புகளால் நடாத்தப்படும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் அதே  நபர்களால் கூறப்படுகிறது. கருத்தரங்கு என்னவோ மறக்கப்பட்ட வன்னி மக்களுக்காக என்று சொல்லப்பட்டாலும் வன்னி மக்களை அந்த மரணப் பொறியில் இருந்து எவ்வாறு விடுவிக்கலாம் என்பதிலும் பார்க்க இந்த அவலத்தைக் கொண்டு தங்கள் தமிழீழக் கனவுக்கு உறுதி சேர்ப்பதாகவே கருத்துக்கள் அமைந்தது.

வழமையான புலி ஆதரவுக் கூட்டங்களில் கருத்துச் சொல்ல எழும் அம்மையார் ஒருவர் இந்தக் கருத்தரங்கையும் விட்டுவைக்கவில்லை. புலிகள் சிறுவர்களை படைகளில் சேர்ப்பதாக பொதுவாக குற்றம்சாட்டப்படுகிறது என்று ஆரம்பித்த அவர் தான் சிறுமியாக இருக்கும் போதே இங்கு வந்துவிட்டதாகவும் ஆனால் தனக்கு குழந்தைகள் இருந்திருந்தால் அவர்கள் வீணாக இறப்பதிலும் பார்க்க புலிகளில் சேர்ந்து இறந்திருந்தால் அதனை எண்ணிப் பெருமைப்பட்டு இருப்பேன் எனக் கூறினார். அதற்கு அங்கிருந்தவர்கள் பலத்த கரகோசம் எழுப்பினர். விசிலடிக்காத குறை. இதிலுள்ள உண்மை என்னவென்றால் அந்த அம்மையார் குழந்தைக்கு தாயானவர் அல்ல. திருமணமாகாதவர். அரசியல்வாதிகள் போல் கைதட்டல்களுக்காகவும் விசிலடிச்சான் குஞ்சுகளைத் திருப்திப்படுத்தவும் மிக முக்கியமான விடயங்களை கவர்ச்சியாக்கி பேசும் இப்போக்கு தமிழரசுக் கட்சி கூட்டணி என்று இன்று லண்டனிலும் தொடர்கிறது.

இது அந்த அம்மையாரில் மட்டும் தவறு அல்ல. அதற்கு கூட இருந்து கைதட்டிய சீமான்களும் சீமாட்டிகளும் அவருக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்களும் அல்ல. பெரும்பாலும் பிரைவேட் ஸ்கூலில் படிக்கும் டொக்டராகவும் இன்ஜினியராகவும் இல்லாவிட்டால் குறைந்தது எக்கவுண்டனாக ஆவது வரக் கனவு காணும் தங்கள் பிள்ளைகளை தங்கள் தமிழீழக் கனவுக்கு அனுப்புவார்களா? ஆனால் வன்னியில் உள்ளவர்கள் மட்டும் தங்கள் குழந்தைகளை விரும்பி புலிகளின் படைகளில் சேர்ப்பிக்கிறார்கள். அதற்கு இவர்கள் கைதட்டி பாராட்டுகிறார்கள்.

நாங்கள் எங்கள் வருமானத்தைப் பார்க்காமல் வேலைகளை விட்டுவிட்டு பெல்ஜியத்துக்கு சென்று குரல் எழுப்பினோம் ஆனால் எந்தப்பயனும் இல்லை என்று குறைப்பட்டார் அங்கு கருத்து வெளியிட்ட ஒரு வர்த்தகப் பிரமுகர். ஒரு சில நாள் போராட்டத்திற்கே கணக்குப் பார்க்கும் இவர் கடந்த முப்பது வருடமாக போராடி கடந்த மூன்று மாதகாலமாக தங்கள் பதுங்கு குழிகளே புதைகுழிகளாகலாம் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அந்த மக்களின் கணக்கு வழக்கைப் பார்க்கத் தயாரா?

இந்த உரையாடலில் சென் கந்தையா கொள்கை விளக்கம் அளிக்கிறார். வன்னி மக்களை வெளியேற்றுவது பற்றி பிரித்தானிய தமிழர் பேரவை ஒரு உறுதியான நிலைப்பாடு எடுத்து உள்ளதாம். அந்த மக்களை அவர்கள் வாழும் பூர்வீகப் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றுவதை புலம்பெயர்ந்த மக்கள் அனுமதிக்க முடியாதாம். வடக்கு கிழக்கை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து விட்டனர். மிகுதமானோரில் அரைப்பங்கினர் தெற்கிற்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள். ஆக மொத்தம் வெளிநாடுகளுக்குப் போக வசதியுள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றாகிவிட்டது. வசதி சற்று குறைந்தவர்கள் கொழும்புக்குச் சென்றாகிவிட்டது. எதற்கும் நாதியற்றவர்கள் முல்லைத்தீவில். இவர்களுக்கு இல்லாத பூர்வீக பூமியின் அக்கறை முல்லைத் தீவில் மரணத்தின் விளிம்பில் உள்ளவர்களுக்கு இருக்கிறதாக சென் கந்தையா விளக்கம் அளிக்கிறார். கேக்கிறவன் கேனையன் என்றா இப்படித்தான் கொள்கை விளக்கங்கள் இருக்கும்.

வன்னிக்கு வாழ்க்கையில் ஒரு தடவையோ சில தடவையோ சென்ற ஒரு ஊடகவியலாளரைக் கூட்டிவந்து தமிழ் மக்களுக்கு வன்னி அவலத்தை விளக்க வேண்டிய அவசியம் பிரித்தானிய தமிழர் பேரவைக்கு ஏன் வந்தது என்பது தெரியவில்லை. (சில சமயம் போராட்ட காலத்துக்கு முன்பே புலம்பெயர்ந்த டொக்கடர் என்ஜினியர்களுக்கு ஆனந்தி அக்கா சொன்னால் விளங்காது ஒரு வெள்ளைத் தோல் ஜேர்னலிஸ்ட் மூலம் தான் கதைசொல்ல வேண்டும் என்றும் கருதி இருக்கலாம்.) பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிரித்தானிய ஊடகவியலாளர்களையும் அழைத்து வந்து இந்த கருத்தரங்கை அவர்களுக்காக நடத்தி இருந்தால் வன்னி நிலவரத்தை சர்வதேச மயப்படுத்த உதவியிருக்கும். இவ்வாறான கோயில் மேளங்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து நடத்தப்படும் கருத்தரங்குகள் கூட்டங்கள் …… வாக்கு வங்கிகளுக்கு மட்டுமே உதவும்.

அத்துடன் கூட்டத்தின் முடிவில் 5 பவுண்களுக்கு ‘Free Tamil Eelam’ விற்கலாம். நேற்றும் விற்றார்கள். புலம்பெயர் மக்கள் 5 பவுண்களுடன் தமிழீழத்தை பெற்றுக்கொண்டார்கள்.

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம்: சட்டரீதியாகவோ வழக்குகளின் அடிப்படையோ மாறவில்லை. ஆனால் நீதிமன்றங்கள் நீதி வழங்குகின்ற பொறுப்பை தட்டிக் கழிக்க பார்க்கிறார்கள். – அருண் கணநாதன் உடனான நேர்காணல் : த ஜெயபாலன்

Arun Gananathan ._._._._._.
அருண் கணநாதன் பிரித்தானியாவில் நன்கு அறியப்பட்ட அரசியல் தஞ்ச சட்டவல்லுனர். பிரித்தானிய அரசின் அரசியல் தஞ்சம் தொடர்பான கடும் போக்கை கடுமையாக விமர்சிப்பவர். பிரித்தானிய அரசில் தஞ்ச நடைமுறைகளுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்து வருபவர். ‘தேசம்’ ஏற்பாடு செய்த அரசியல் தஞ்சம் தொடர்பான நடவடிக்கைகளில் எப்போதும் தனது ஆதரவை வழங்குபவர். இன்று ஒரு புறம் இலங்கையில் மிக மோசமான மனித அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கையில் பிரித்தானியாவில் இருந்து அகதிகளைத் திருப்பி அனுப்புகின்ற நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகிறது. இவை தொடர்பாக லண்டன் குரல் பத்திரிகைக்கு சட்ட வல்லுனர் கணநாதன் வழங்கிய நேர்காணலின் முழுமை இங்கு தரப்படுகிறது.
._._._._._.

ல.குரல்: பிரித்தானிய அரசியல் தஞ்ச நடைமுறைகள் அண்மைக்காலத்தில் எவ்வாறு உள்ளது?
கணநாதன்: சட்டரீதியாகவோ வழக்குகளின் அடிப்படையோ மாறவில்லை. ஆனால் உள்துறை அமைச்சினுடைய அணுகுமுறையில் கடும் போக்கு ஏற்பட்டு உள்ளது. அத்தோடு நீதி மன்றங்களும் பாராபட்சமாக தனிப்பட்ட வழக்ககளில் தலையிட்டு நீதி வழங்குகின்ற பொறுப்பை தட்டிக் கழிக்க பார்க்கிறார்கள். இப்படியான மாற்றங்கள் தான் ஏற்பட்டு இருக்கிறது. அகதிச் சட்டத்தில் சட்ட ரீதியான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.

பப்ளிக் லோ (public law) என்று எடுத்தால் அதற்குள் தான் இமிகிரேசன் (immigration) வருகிறது. ப்ளட்கேற் (floodgate) என்று சொல்வார்கள். எத்தனை எத்தனை பேர் நாட்டுக்கு வருகிறார்கள் நாட்டின் நலன் என்ற அரசியல்கள் கட்டாயம் இருக்கும். அது தொடர்பான விசயங்களைக் கொண்டு தான் முடிவுகளை எடுப்பார்கள். தனிப்பட்ட அகதித் தஞ்ச வழக்கில் கொள்கை, ப்ளட்கேற்றை வைத்து முடிவெடுப்பது வந்து பக்க சார்பன தீர்ப்பாகிவிடும். அதனால் அவர்கள் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் மறைமுகமாக அதைத்தான் செய்கிறார்கள்.

ல.குரல்: நீதித்துறையின் இந்த தட்டிக் கழிக்கும் போகை;கை சட்டப்டி எதிர்கொள்ள முடியாதா?
கணநாதன்: இன்றைக்கு இமிகிரேசன் ஜடஜ் ஆக இருக்கட்டும், அப்பீல் கோட் ஜட்ஜ் ஆக இருக்கட்டும், ஹைக்கோட் ஜட்ஜ் ஆக இருக்கட்டும் இந்த நீதிபதி வந்தால் அகதிக்கு எதிராகத்தான் தீர்ப்பு வழங்குவார் இந்த நீதிபதி வந்தால் அகதிக்கு சார்பாக நீதி வழங்குவார் என்பது பெரும்பாலும் எல்லாருக்கும் தெரியக் கூடிய வகையில் தீர்ப்பு வழங்கிக் கொண்டு வருகிறார்கள். அப்படி இருந்தும் இந்த நீதிபதி அகதிக்கு சார்பாக எப்போதும் நீதி வழங்காதவர் என்ற அடிப்படையில் வழக்கைத் தொடருவதற்கு பிரித்தானிய நீதித்துறையில் ஒரு செயன்முறையில்லை.

அதனை எப்படி எதிர்கொள்ளலாம் என்றால் இந்த நீதிபதி தட்டிக்கழித்து நீதி வழங்காதவிடத்து வேறு சட்டக் காரணங்களின் அடிப்படையில் அவ்வழக்கு மேலே செல்லும் போது அந்த நீதிபதி அகதிக்கு சார்பாக தீர்ப்பளிப்தற்கான வாய்ப்பு ஏற்படும்.

அதில் இப்போது உள்ள பிரிச்சினை என்னவென்றால் வழக்கை மேலே கொண்டு செல்வதற்கான செலவீனம். இவ்வாறு அரசியல் தஞ்சத்தை இறுக்கமாக்கிய உள்துறை அமைச்சு சட்ட உதவி வழங்குவதையும் தொண்ணூறு வீதம் வரை குறைத்துவிட்டுள்ளது. அதனால் அகதிகளும் தொடர்ந்தும் பணத்தை இறைத்து இந்த வழக்குகளைத் தொடர முடியாத நிலையில் வழக்குகளைக் கைவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ல.குரல்: பிரித்தானியாவில் இருந்து அண்மையில் 150 பேர் வரை இலங்கைக்கு திருப்பி அனுப்பபட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இது பற்றி நீங்கள் அறிந்தவற்றைக் கூற முடியுமா?
கணநாதன்: ஈராக் போன்ற நாடுகளுக்கு கனகாலமாக இப்படி செய்துகொண்டு இருக்கினம் ஆனா இலங்கையைப் பொறுத்தவரை charter flight புக் பண்ணி ஆட்களை திருப்பி அனுப்பினது இது தான் முதற்தடவை. இதை பிரித்தானிய தூதரகமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. தமிழ் மக்கள் பத்தியில் 150 பேர் அனுப்பப்பட்டதாக கதை உலாவுகிறது. ஆனால் நான் அறிந்த அளவில் 40 முதல் 50 பேர் வரையே திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.

இலங்கையில் உள்ள பிரித்தானிய துதரகமும் இவர்கள் திருப்பி அனுப்பபட்டதைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். இலங்கையில் யுத்தம் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது அதனால் தான் தாங்கள் இப்படியான இறுக்கமான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறம் என்றும் சொல்லி இருக்கிறார்கள். மற்றது திருப்பி அனுப்பப்படுவது தொடர்பாக இலங்கைக்கும் பிரித்தானியாவுக்குமிடையே ஒரு பிரத்தியேக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டு உள்ளதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

எங்கள் சமூகத்தில் உள்ள பிரச்சினை என்னென்று கேட்டால் வழமையாகவே 10 முதல் 30 பேர் வரை கிழமைக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதை நாங்கள் கண்டும் காணாமல் விட்டுவிட்டு இருந்துவிடுகிறோம்.

ஆனால் இந்த சாட்டர் ப்ளைட்டில் தொகையாக ஆட்கள் அனுப்பட்ட விடயம் தான் ஒரு பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. அது தான் அரசாங்கத்தின் நோக்கமும். இந்த அரசாங்கம் வந்து போடர்களை ரைற்ரின் பண்ணி இந்த நாட்டில் சட்ட விரோதமாக வந்து அகதி அந்தஸ்து கேட்கிற நிலையை சரியாகக் குறைத்து விட்டது. மற்றைய நாட்டவர்களை விட இலங்கையர்கள் தொடர்ந்து இவர்களது எல்லையை கட்டுப்பாடுகளை உடைத்து விசாக்களை எடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டுக்கு வந்தால் அகதி அந்தஸ்து வழங்கப்படும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது என்று பிரித்தானிய அரசாங்கம் பயப்படுகிறது. இந்த நம்பிக்கையை உடைத்து திருப்பி அனுப்பப்படுவினம் என்ற திகிலை ஏற்படுத்தவதற்குத் தான் பிரித்தானிய அரசாங்கம் இந்த சாட்டர் ப்ளைற் என்ற நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள் என்றது என்னுடைய கருத்து.

Asylum_Cartoonல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் திருப்பி அனுபப்பப்படுவது தீவிரமடைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இது பற்றி விரிவாகக் கூறமுடியுமா?
கணநாதன்: இதற்கு முதல் ஒரு சமூகமாக வந்து கூடி இந்த திருப்பி அனுப்பப்படுவதை பேசியது வந்து 2007 யூனில். அப்போது எல்பி என்றவரின் வழக்கு முடிவு வரப்போகிறது. அந்த முடிவு வந்தால் அது அகதி வழக்குகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதனால் அதற்கு முன்னர் உள்துறை அமைச்சு திருப்பி அனுப்புவதில் துரிதகதியில் செயற்பட்டது. அதற்குப் பின்னர் என்ஏ என்பவருடைய வழக்கு ஈரோப்பியன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால் திருப்பி அனுப்பப்படுவது ஓரளவு நிறுத்தப்பட்டது. தமிழர்கள் ஐரோப்பிய நீதிமன்றத்திற்குப் போய் தடை உத்தரவுகளைப் பெற்று ஓரளவு இந்த நாடுகடத்தலை தவிர்த்துக் கொண்டு வந்தனர். அதற்குப் பிறகு ஈரோப்பியன் கோட் போன வருடம் 2008 ஏழாம் மாதம் தங்களுடைய தீர்ப்பினை வழங்கியது. அது சாதகமான தீர்ப்பாகத் தான் இருந்தது. ஆனால் தடை உத்தரவை வந்து வெறுமனே தமிழர் என்ற அடிப்படையில் வழங்க முடியாது என்று தெரிவித்திருந்தது. ஆனால் என்ஏ இன் வகைக்குள் வருபவர்களுக்கு அதுவும் யுகே நீதிமன்றங்கள் முழுமையாக நிராகரித்த பின்னர்தான் தாங்கள் தடையுத்தரவை வழங்குவோம் என்று ஈரோப்பியன் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

அதற்குப் பிறகும் தமிழர் என்ற அடிப்படையில் தருப்பி அனுப்புவதை நிறுத்தவதற்கான தடையுத்தரவைக் கேட்டவர்களுக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுக் கொண்டு வந்தது. இப்ப ஒரு இரண்டு மூன்று மாதமாக திருப்பி அனுப்புவது தீவிரம் அடைந்திருக்கிறது. ஒரு வருடமாக ஈரோப்பியன் கோர்ட்டின் தடையால் அனுப்ப முடியாமல் போன வெற்றிடத்தை துரித கதியில் அனுப்பி ஈடுசெய்ய உள்துறை அமைச்சு முற்பட்டு உள்ளது.

ல.குரல்: அண்மைக்காலத்தில் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் யாராவது மீண்டும் அழைக்கப்பட்டு இருக்கிறார்களா?
கணநாதன்: அண்மைக்காலத்தில் இல்லை. ஆனால் 2001ல் குமரகுருபரனுடைய வழக்கை கூறலாம். குமரகுருபரன் இந்த நாட்டில் இருந்து அனுப்பப்பட்டு விட்டார். அப்படியிருக்க அவரை திருப்பிக் கொண்டுவர வெண்டும் என்று கோரி நாங்கள் ஹைக் கோட்டுக்குப் போய் நிரூபித்து திருப்பிக் கொண்டு வந்து வதிவிட உரிமையையும் பெற்றுக் கொடுத்தோம்.

அதற்கு முன்னரும் 1987 – 88 காலப்பகுதியில் சிவகுமாரன் என்பவருடைய வழக்கு ஐரோப்பிய நீதிமன்றம் வரை சென்றது. திருப்பி அனுப்பப்பட்டவர் மீண்டும் திருப்பி அழைக்கப்பட்டார்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடர முடியாமல் எத்தனை பேர் உள்ளனர் என்று மதிப்பிட முடியுமா? அவர்களின் எதிர்காலம் என்ன?
கணநாதன்: என்னைப் பொறுத்தமட்டில் குறைந்தது நூற்றுக் கணக்கிலாவது இருப்பார்கள் என்று தான் நினைக்கிறேன். பலபேர் 1990க்களில் வந்து நிராகரிக்கப்பட்டவர்கள். அதற்குப் பிறகு வழக்கு கைவிடப்பட்ட நிலையில் அப்படியே இருக்கிறார்கள். அதற்கப் பிறகு 2000 – 2004 ம் ஆண்டுக்கு இடையில் நடந்த வழக்குகளால் பல பேர் அப்படியே காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த திருப்பி அனுப்புதல் என்பது 2005, 2006க்குப் பின்னர்தான் தொடங்கப்படுகிறது. அதற்கு முன்னர் பெரிய அளவில் இலங்கைத் தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படவில்லை.

லிகசி கேஸஸ் (legacy case) என்ற அடிப்படையில் 2007ல் இருந்து பல குடும்பங்களுக்கு விசாக்கள் வழங்கி தஞ்ச வழக்கு முடிவுகள் தெரியாமல் இருந்தவர்களின் தொகையை சரியாகக் குறைத்துக் கொண்டார்கள். 2008லும் விசாக்கள் வழங்கப்படாமல் இழுபட்ட பல வழக்குகளுக்கு விசாக்களை வழங்கி அந்தத் தொகையைக் குறைத்துக் கொண்டார்கள்.

என்னுடைய மதிப்பீட்டின்படி அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடர முடியாதவர்களின் எண்ணிக்கை குறைந்தது 5000 பேராவது இருப்பார்கள். இவர்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துக் கொண்டால் சற்று கூடுதலாக இருக்கும். அவர்களுக்கு முடிவில்லாத சூழ்நிலை ஒன்று இருப்பதையும் பீதி ஒன்று நிலவுவதையும் பார்க்கக் கூடியதாய் இருக்கிறது. திருப்பி அனுப்பப்டுவதற்கான அச்சமும் இருக்கிறது.

உள்துறை அமைச்சைப் பொறுத்தவரை லிகஸி கேஸ் அடிப்படையில் 2007 – 2008 நடுப்பகதி வரை விசாக் கொடுக்க வேண்டியவர்கள் எல்லோருக்கும் விசா கொடுத்தாகி விட்டது. இனி உள்ளவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டியவர்கள் தான் என்ற மனநிலையுடன் செயற்படுவதாகவே நான் நினைக்கிறேன். இப்படியான பார்வையால் ஏற்படுகின்ற உளவியல் தாக்கம் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களது வழக்கையும் தட்டிக்கழிக்கின்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது. அதனால் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டு ஆனால் விதிவிலக்குகளின் அடிப்படையில் (எக்செப்சனல் லிவ்ற்று ரிமெயின் – Exceptional Leave to Remain ELR) விசா வழங்கப்பட்டவர்களின் விசாக்கள் பறிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா?
கணநாதன்: இப்ப எக்செப்சனல் லீவ்ற்று ரிமெயின் என்பதை நிப்பாட்டி டிஸ்கிரேசனல் லீவ்ற்று ரிமெயின் (Discretionary Leave to Remain) என்பதைத்தான் கொடுத்து வருகினம். அதற்கு உரிமைகள் கொஞ்சம் குறைவாகவே உள்ளது. முன்னர் வந்து 4 வருடம் ஒருவர் ஈஎல்ஆர் ல் இருந்தால் அவருக்கு ஐஎல்ஆர் வழங்கப்பட்டு வந்தது. இப்ப ஒருவர் ஆறுவருடம் டிஸ்கிரேசனல் லிவ்று ரிமெயினில் இருந்தால் தான் அவருக்கு ஐஎல்ஆர் கொடுக்கப்படலாம். ஆனால் ஐஎல்ஆர் (Indefinite Leave to Remain ILR) கொடுக்கிற தன்மை வந்து இப்ப குறைந்து வருகிறது.

அப்படி இருந்தாலும் கொடுத்ததை பறிக்கிற தன்மை என்பது அவர்கள் இந்த நாட்டில் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. பொய்சொல்லி பிழையாக நடந்து இந்த விசாவைப் பெற்று இருந்தால் விசாவுக்கு கொடுத்த காரணங்கள் இல்லாமல் போனால் அதாவது திருமணம் முடிக்கும் போது அதற்காக மற்றவருக்கு வழங்கப்பட்ட விசா அவர்களுடைய திருமணம் விவாகரத்தில் முடிந்தால் மற்றவருடைய வீசா மீளப் பெறப்படலாம். எல்லாவற்றிலும் மிக மிக முக்கியமானது சம்பந்தப்பட்டவர்கள் கிரிமினல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு அதற்காகத் தண்டணை பெற்றல் அவர்களுக்கு வழங்கப்பட்ட விசா பறிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

Arun Gananathanல.குரல்: தஞ்சம் மறுக்கப்படுவதில் சட்டத்தரணிகளின் கவலையீனங்கள் அறிவீனங்கள் முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. அது பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
கணநாதன்: சட்டத்தரணிகளின் கவலையீனங்கள் பற்றி நாங்கள் வருடாவருடம் கதைத்துக் கொண்டு வாறம். அது வந்து ஒரு புதிய ரொப்பிக் இல்லை. ஆனால் நான் அவர்கள் பிழைவிடவில்லை என்று சொல்லவரவில்லை. அது இருந்துகொண்டுதான் இருக்கிறது. அது ஒரு பிரச்சினை தான். அது தமிழருக்க மாத்திரம் உரித்தானது இல்லை. மற்ற சமூகங்களுக்கும் உள்ள பிரச்சினைதான்.

ஆனால் என்னுடைய கருத்து வந்து இந்த நாட்டில் இந்த சட்டங்களின் தரம் குறைந்துவிட்டது. மற்றும்படி எல்லாத் துறைகளிலும் தங்கள் தொழில்சார்ந்த பொறுப்புகளை உணராதவர்கள் செய்யாதவர்கள் இருக்கிறார்கள். அப்படி சட்டதுறையிலும் இருக்கிறார்கள். ஆனால் இதைப்பற்றிய விழிப்புணர்வு எங்களுடைய மக்கள் மத்தியில் நிறைய இருக்கிறது. அதனால் நல்ல சட்டத்தரணிகளுக்கும் சட்ட ஆலோசகர்களுக்கம் கூட சங்கடங்கள் உண்டு. ஏனென்று சொன்னால் அந்த நம்பகத் தன்மை வந்து சரியாக உடைக்கபட்டுவிட்டது. நல்ல சட்ட ஆலோசனைகளை வழங்கினாலும் அதனையும் சந்தேகத்துடன் பார்க்கின்ற போக்கு வந்தள்ளது.

சட்டத்தரணிகள் கவலையீனமாக இருந்தாலும் அதனை கவனித்தக் கொள்ள பல வழிகள் இருக்கின்றது. முக்கியமாக நாங்கள் அடிப்படை ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். பத்திரங்களைப் பார்த்து என்ன நடந்து இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அடுத்தது முக்கியமாக பைலை வைத்திருக்க வேண்டும். அதுக்கு முக்கியமாக சட்டத்தரணிகளோ சட்ட ஆலோசகரோ தான் பிழையென்று சொல்ல முடியாது. 10 – 12 வருடங்கள் இருப்பார்கள். ஆனால் இரண்டு துண்டு பேப்பர் மட்டும்தான் அவர்களிடம் இருக்கும். தங்களுடைய பத்திரங்களின் கொப்பிகளை கவனமாக எடுத்து வைக்கிறதில்லை. அதைத் தவறவிட்டு இருந்தால் கூட உள்துறை அமைச்சிற்கு 10 பவுண்களைச் செலுத்தி அதற்கான பிரதிகளை எடுத்து வைத்திருக்க வேண்டும். இப்படி நாடுகடத்தப்படுகின்ற அபாயமான சூழல் உள்ள இந்தக் காலப்பகுதியில் ஒவ்வொருத்தரும் 10 பவுணைக் கட்டி தங்கள் பைலை முழுமையாக எடுத்து வைத்திருக்க வேண்டும். அப்பதான் நாடு கடத்துவதற்கு பிடித்தவுடன் அதைத் தடுப்பதற்கான முதலாவது ஜீடிசல் ரிவியூவை (judicial review)செம்மையாகப் போட்டு நாடுகடத்தல் அபாயத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

ல.குரல்: பிரித்தானியா உட்பட சர்வதேச அளவில் பொருளாதார விழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இது அரசியல் தஞ்ச விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதா?
கணநாதன்: ஓம். தாக்கத்தை ஏற்கனவே ஏற்படுத்தி இருக்கிறது. எப்படியென்று கேட்டால் சட்ட ரீதியாக சட்டங்கள் எதனையும் உட்புகுத்தவில்லை. ஆனால் இன்றைக்கு வந்து அகதிகளை மிகவும் பிழிந்து மிகவும் கஸ்டமான நிலையில் தான் இந்த அரசாங்கம் தள்ளி வைத்திருக்கிறது. பொதுவாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட குற்றச்செயல்கள் அதிகரிக்கும். அதில் இந்த அகதிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்படுவார்கள் என்ற பயம் இவர்களுக்கு இருக்கிறது. அது கொள்கை ரீதியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

அதைவிட இன்னொரு காரணம் என்னவென்றால் உள்துறை அமைச்சில் பொலிசி என்றொன்று இருக்கிறது. மற்றது அதனை நடைமுறைப்படுத்துவது. அலுவர்கள் மட்டத்தில் நடைமுறைப்படுத்துபவர்கள் தங்களுடைய வேலைக்கு தங்களுடைய குடும்பத்தினரின் வேலைக்கு ஆபத்து வருமா என்ற கலக்கத்துடன் விண்ணப்பங்களை பரசீலிக்கும் போது அவர்கள் பெருந்தன்மையாக நடக்கக் கூடிய சூழ்நிலை இல்லாமல் போகிறது. அது அவர்களையும் கடும்போக்கு உடையவர்களாக்குகிறது.

உதாரணமாக அண்மைக்காலமாக வேர்க் பெர்மிசன் (work permision) வந்து பல பேருக்கு நிப்பாட்டி வந்தார்கள். ஒரே ஒரு குழுமத்தைத் தான் விட்டு வைத்தார்கள். அதாவது ஒரு வருடத்திற்கு மேல் தஞ்ச விண்ணப்பம் தொடர்பாக முடிவெடுக்கப்படாதவராக இருந்தால் வேர்க் பெர்மிசன் கொடுக்க வேணும் என்று இமிகிரேசன் லோவில் இருக்கிறது. அந்த வகைப்பட்டவர்களுக்கு வேர்க் பெர்மிசன் கொடுத்து இருந்தார்கள். அதைவிட முன்னர் வேர்க் பெர்மிசன் வழங்கி அவர்களுடைய வழக்கு முடிவுக்கு வராமல் இருந்தாலும் வேர்க் பெர்மிசனை கொடுத்து வந்தார்கள். அண்மைக் காலத்தில் திடீரென்று ஐடி கார்ட்டில் வேர்க் பெர்மிசன் இருக்க வேண்டும் என்பது கட்டாயமானது. அப்படி இருக்கும் போது கடந்த 3 – 4 மாதங்களுக்குள் ஐடி காட் புதுப்பிக்க வேண்டும் என்று கூப்பிட்டுப் விட்டு வேர்க் புரொகிபிற்றற் (work prohibited) என்று புது ஐடி காட்டை அடித்து கொடுக்கிறார்கள். இது நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதார வீழ்ச்சி அகதி விண்ணப்பங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதையே காட்டுகிறது.

ல.குரல்: இலங்கையில் இன்று இராணுவச் சமநிலையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் பிரித்தானியாவிலும் ஐரோப்பாவிலும் அரசியல் தஞசம் கோரியுள்ளவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
கணநாதன்: உண்மையாக ஒரு மாற்றத்தையும் கொண்டு வரக்கூடாது. ஏனென்று கேட்டால் யுத்தம் என்றது சிவில் வோர். சிவில் வோர் ரிப்பியூஜிஸ் 1951 கொன்வென்சனுக்குக் (Civil War Refugees – 1951 Convention) கீழ் அடங்க மாட்டார்கள். அதனால் தான் எங்களுக்கு யுத்த காரணங்களுக்காக அகதி அந்தஸ்து வழங்கப்படுவதில்லை. இருந்தாலும் பிரித்தானிய தூதரகம் அதனையும் ஒரு காரணமாகக் காட்டி உள்ளது. அதாவது இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த கொண்டிருக்கிறது அதனால் தான் அகதிகளைத் திருப்பி அனுப்புவதில் தீவிரமாக இருக்கிறோம் என்று.

அவர்களுக்கு உள்ள பயம் என்னென்று கேட்டால் வடக்கில் நடக்கிற கொன்வென்சனல் வோர் வந்து பிரச்சினைக்கு உள்ளானால் தென்பகுதியில் வந்து கொரில்லா முறையிலான யுத்தம் பரவும் என்று பயப்படுகின்றார்கள். இந்த நாட்டில் அகதிகளின் வழக்குகள் வந்து கொழும்பில் என்ன நிலைமைகள் என்பதை வைத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது. உள்துறை அமைச்சுக்கு உள்ள பீதி என்னென்றால் யுத்தம் கொழும்புக்கு பரவுகிற நிலை ஏற்பட்டால் அது அகதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும். அதனால் தங்களால் அகதிகளைத் திருப்பி அனுப்ப முடியாமல் போவதுடன் அகதி அந்தஸ்து வழங்க வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம் என்பது.

ல.குரல்: இலங்கை யுத்தத்தின் இராணுவச் சமநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் விடுதலைப் புலிகளின் போராளிகள் அல்லது விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய பலர் அரசியல் தஞ்சம் கோருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவர்களுடைய விண்ணப்பங்கள் எவ்வாறு பரிசீலிக்கப்படும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
கணநாதன்: விடுதலைப் புலிகள் மாத்திரம் என்றல்ல பொதுவாக வேரர்க் க்ரைம் (war crime) என்று 1951 அகதிச் சட்டத்திலேயே கூறப்பட்டு இருக்கிறது. அதாவது தனிப்பட்ட முறையில் அகதித் தஞ்சம் கோருபவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் அல்லது பெரிய அளவில் மனித உரிமை மீறும் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்திருந்தால் அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கக் கூடாது என்று என்று எக்ஸ்குளுசன் குளோஸ் (exclusion clause)என்ற தன்மையும் தமிழர்களுடைய வழக்குகளை நிராகரிக்கின்ற தன்மை 2006ல் இருந்து காணப்பட்டு வருகிறது.
 
இது தமிழீழ விடுதலைப் புலிகளை மாத்திரமல்ல எந்த இயக்கத்தைச் சார்ந்திருந்தாலும் அவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்களா? அந்த அமைப்புகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனவா? என்று பார்த்து அதற்கு சிறு ஆதாரமாவது இருந்தால் அதனைக் காரணமாகக் காட்டிக் கூட அவர்களது வழக்குகளை நிராகரித்து வருகிறார்கள். அப்படி நிராகரித்தாலும் அவர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்ப முடியாது. ஏனெனில் அகதி அஸ்தஸ்து கிடைக்காவிட்டாலும் மனித உரிமை சாசனத்தின் ஆட்டிக்கிள் 3 இன் கீழ் அவர்களை இந்த நாட்டில் இருந்து திருப்பி அனுப்பாமல் பாதுகாப்புத் தேடக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.

இந்த அடிப்படையில் வழக்குள் நிராகரிக்கப்பட்டு தொடர்ந்தும் வழக்குகள் நீதிமன்றங்களில் வாதாடப்பட்டு தொடர்ந்தும் அகதி அந்தஸ்து பெற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு சில வழக்குகள் இந்த எக்ஸ்குளுசன் குளோசில் சேர்க்கப்பட்டு அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களாகவும் ஆட்டிக்கிஸ் 3 இன் கீழ் திருப்பி அனுப்பப்படுவதில் இருந்து பாதுகாப்புப் பெற்றும் இருக்கிறார்கள்.

ல.குரல்: அண்மைக்காலத்தில் அரசியல் தஞ்ச விண்ணப்பங்கள் தஞ்சம் கோரியவருக்கு சாதகமாக பரிசீலிக்கப்பட்டு உள்ளதா? எவ்வாறான விண்ணப்பங்கள் தஞ்சம் கோரியவருக்கு சாதகமாகப் பரிசிலிக்கப்பட்டு உள்ளது?
கணநாதன்: இது புதிதாக வந்து அரசியல் தஞ்சம் பெற்றவர்களுக்கான கேள்வி என்று பார்க்கிறேன். அப்படி பார்க்கும் போது ஓம்! இந்த நியூ அசைலம் மொடல் ஏப்ரல் 2007ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்குக் கீழ் வந்த வழக்குகள் சாதகமான முடிவுகளைப் பெற்றது. அதுவும் இப்ப 2008 கடைசிப் பகுதியில் இருந்து மோசமான நிலைக்கு போய்விட்டது. பழைய ஹோம் ஒபிஸ் மாதிரி எதையும் நிராகரிக்கிற நிலைக்குப் போய்விட்டது. இது இலங்கை அகதிகளுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் அப்படியான நிலையே ஏற்பட்டு இருக்கிறது.

ல.குரல்: வழமையாக வழங்கப்படும் ஐஎல்ஆர் முறை நீக்கப்பட்டு தற்போது எல்எல்ஆர் Limited leave to remain (LLR) வழங்கப்படுவது பற்றி சற்று விளக்கவும்?
கணநாதன்: இந்த நடைமுறை வந்து 2005லேயே வந்துவிட்டது. அகதி அஸ்தஸ்து கிடைத்தாலும் ஐஎல்ஆர் வழங்கப்படுவதில்லை. எல்எல்ஆர் 5 வருடங்களுக்கு வழங்குகிறார்கள். அதுக்குப் பிறகு அவர்கள் இந்த நாட்டில் எந்தவித குற்றங்களும் புரியாமல் இருந்தால் அவர்களுடைய நாட்டின் சூழ்நிலை குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் காணாத இடத்தில் அவர்களுக்கு அந்த 5 வருடங்களின் பிறகு ஐஎல்ஆர் வழங்குவது என்பது தான் நடைமுறையாக இருக்கிறது. அதில் ஒரு விடயம் முக்கியமாக வருகிறது. என்னவென்றால் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையில் அல்லது இந்தியாவில் இருந்தால் (அவர்கள் அகதி அந்தஸ்து கோருவதற்கு முன்னரேயே திருமணமாகி இருந்தால் பெரிய மாற்றம் இல்லை.) அவர்கள் தங்கள் குடும்பங்களைக் கூப்பிடக் கூடியதாக இருக்கிறது. இல்லாமல் தனி இளைஞராக வந்து அவரது அரசியல் தஞ்சம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு எல்எல்ஆர் வழங்கப்பட்டால் அவர் மற்ற நாட்டுக்குச் சென்று திருமணம் முடித்து ஸ்பொன்சர் செய்யும் போது சில சிக்கல்கள் ஏற்படும்.

Asylum_Cartoonல.குரல்: அரசியல் தஞ்சம் கோரி உலகின் பல பாகங்களிலும் பலர் தங்கள் பயணத்திற்காகக் காத்து இருக்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் என்ன ஆலோசனை வழங்க முடியும்?
கணநாதன்: சட்டத்தின் கீழ் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது சரியான நடவடிக்கை இல்லை. பொதுவாக ஒரு அரசியல் என்று கதைத்தால் அது அவர்களுடைய முடிவு. இன்றைக்கு இலங்கையின் மனித உரிமைநிலைமை மிகவும் மோசமானதாக இருக்கிறது. அரசியலில் சம்பந்தப்படாத ஒரு தமிழரும் கூட நிம்மதியாக வாழ முடியாத சூழல் ஒன்று அங்கிருக்கிறது. அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவது என்பது எங்களுக்கு விளங்கக் கூடியதாக இருக்கிறது. அவர்களை வரவேண்டாம் என்று சொல்கிற உரிமை எங்களுக்கு இல்லை. நாங்கள் என்ன சொல்லலாம் என்றால் இங்கு வந்தவுடன் ஏதோ அள்ளிக் கொடுக்கினம் இங்க வந்தவுடன் அகதி அந்தஸ்து கிடைக்கிறது என்ன மாயையை வந்து நாங்கள் கொடுக்கக்கூடாது. இந்த நாட்டின் போக்கு வந்து ஒவ்வொருநாளும் இறுக்கமாகவும் கடும் போக்கிலும் தான் போய்க் கொண்டு இருக்கிறது. ஆனால் ஒருவருக்கு உயிராபத்து இருக்கிறது என்று சொன்னால் அவர் இந்த நாட்டுக்கு வரத்தான் வேணும். அதுக்கான சட்டத்தை இந்த நாடு வைத்திருக்கிறது. அதற்குக் கீழ் அரசியல் தஞ்சம் கேட்க வேணும் என்றால் கேக்கத்தான் வேணும். சரியான வழியில் சரியான சட்ட ஆலோசணைகளைப் பெற்று முதற்தடவையே சரியான முறையில் வழக்கை நடத்தி முடிவைக் காண வேண்டும்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் அங்கிருந்து தாம் திருப்பி அனுப்பப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா?
கணநாதன்: ஓம். இதுவும் ஒரு தட்டிக்கழிக்கின்ற கடும் போக்குத்தான். இங்கிருந்து திருப்பி அனுப்பப்படும் போதே எப்படி அனுப்பகிறார்கள் என்றால் யூடிசியல் ரிவியூ போட்டு முதலாவது படியில் தோற்றாலும் அவர்கள் மேலும் போகக் கூடிய உரிமை சட்டத்தில் இருக்கிறது. மேற் கொண்டு செல்லும் போதும் முதலாவது படியில் நிராகரிக்கும் போது நீதிமன்றம் என்ன சொல்கிறது என்றால் உங்களை நிராகரிக்கிறது மாத்திரமல்ல உங்களை நாடுகடத்துவதற்கும் எதிராக உங்கள் விண்ணப்பத்தை மேற்கொண்டு சென்றாலும் நாடுகடத்துவதை நிறுத்தமாட்டோம் என்று முதலாவது படியில் வழங்குகிற தீர்ப்பிலேயே சொல்கிறார்கள். அதனால் தான் அவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்.

இருந்தாலும் யூடிசியல் ரிவியூவை அவர் நாடு கடத்தப்பட்ட பிறகும் தொடரலாம். முதலாவது படியில் நீதிபதி மறுத்திருந்தாலும் நான் இந்த வழக்கைத் தொடர விரும்புகிறன் என்று இங்கு தன்னுடைய சட்டத்தரணியூடாக தொடர வேண்டும். என்னை திருப்பி அனுப்பியது சட்டத்திற்குப் புறம்பானது திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை ஆதாரபூர்வமாகக் காட்டி தன்னை திருப்பி பிரித்தானியாவுக்க அழைக்க வேண்டும் என்று ஹைக்கோட்டிடம் முறையிடலாம். ஹைக்கோட் சாதகமாகத் தீர்ப்பு வழங்கினால் அவர் இந்த நாட்டுக்கு திருப்பி அழைத்தவரப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இதைவிட பிரித்தானிய தூதரகத்திற்கும் சென்று முறைப்பாடுகளைச் செய்யலாம். ஆனால் நடைமுறையில் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தமிழ் பொது அமைப்புகளின் செயற்பாடுகள் எப்படி உள்ளது? அவர்கள் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?
கணநாதன்: அகதிகளுக்காக ஒரு அமைப்பு மட்டும் தான் இயங்குகிறது. என்று நினைக்கிறன். மற்றும்படி எந்த ஒரு தமிழ் அமைப்பும் அகதிகளுக்காக இயங்கவில்லை.

ல.குரல்: நீங்கள் ருவானைக் குறிப்பிடுகிறீர்களா?
கணநாதன்: ஓம். வேறு ஒரு அமைப்பும் அகதிகள் சம்பந்தமாக இயங்குவதாக எனக்கு தெரியவில்லை. வடிவாகப் பார்த்தால் ஹோம் ஒபிஸ் வந்து அந்த நிலையை ஒரு சிஸ்ரமற்றிகாககத்தான் உருவாக்கியது. முன்னர் நிதிகளைக் கொடுத்து சமூகத்தை பலப்படுத்தி வந்தார்கள். ஆனால் பிறகு இதையெல்லாம் குறைத்து அத்தோடு எங்களுக்குள்ள போட்டிகள் பிரச்சினைகளுக்காகவும் எல்லாம் சேர்ந்து குறைத்துக் கொள்ளப்பட்டது. இப்ப அந்த அமைப்புகள் எதுவும் அகதிகள் பிரச்சினையைத் தொடுவதே இல்லை. ருவானும் பொலிசி வேர்க் என்றில்லாமல் கேஸ் வேர்க்குகள் செய்துதான் தனிப்பட்ட முறையில் உதவி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ல.குரல்: இந்த விடயத்தில் தமிழ் பொது அமைப்புகள் ஏதாவது செய்யலாம் என்று நினைக்கிறீர்களா?
கணநாதன்: இந்தக் க்ளைமற்றில அவர்கள் பங்களிக்கிறதுக்கு இல்லை. அவர்கள் திருப்பியும் பிழையான நம்பிக்கைகளைக் கொடுக்காமல் அவர்கள் அப்படியே இயங்காமல் போறது நல்லது. அப்படி இருக்கும் போது அகதிக்காவது நான் என்னுடைய அலுவலைப் பார்க்க வேண்டும் என்ற பொறுப்பு ஏற்படும். அவை இருக்கினம் இந்த அமைப்பு இருக்கு அவை கம்பைன் பண்ணுறார் என்று பார்த்து அது எந்த பலனையும் தாற சூழ்நிலை இன்றைக்கு இல்லை. அப்படியான நிலையில இந்த அமைப்புகள் நச்சுரல் டெத்தை சந்தித்தது என்னைப் பொறுத்தவரை நல்லது. அந்த அமைப்புகள் இனி உருவாக்கப்பட்டாலும் அதன் பங்களிப்பு மிகக் கடினமாகத்தான் இருக்கும்.

ல.குரல்: திருப்பி அனுப்பப்படுவதை தடுக்கின்ற விடயத்தில் தமிழ் அமைப்புகள் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?
கணநாதன்: இந்த திருப்பி அனுப்பபடுகிற விசயத்தை நாங்கள் சமூகமாக விழிப்புணர்ச்சியோடு பார்க்கிறம். ஆனால் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டதும் நாஙகளும் திருப்பி அனுப்பப்டவரும் அதை அப்படியே விட்டுவிடுறம். ஹோம் ஒபிஸ் என்ன சொல்லப் பார்க்கிறது என்றால் இத்தனை பேரை திருப்பி அனுப்பின நாங்கள். அவை அங்கு போய் பிரச்சினை இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் நாங்கள் திருப்பி அனுப்பிறது சரி என்று. அதனால் தாங்கள் அகதிகளைத் தொடர்ந்து திருப்பி அனுப்பிக் கொண்டுதான் இருப்பம் என்று. அப்ப திருப்பி அனுப்பப்பட்ட ஆட்களுக்கு என்ன நடந்தது என்ற ஆதாரங்கள் சேகரிக்க முடியும் என்றால் அது இங்குள்ளவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

புதிய அமைப்புகளை உருவாக்குவதிலும் பார்க்க திருப்பி அனுப்புகிறவர்களுக்கான அட்வைஸ் லைன் ஒன்றை உருவாக்கி அவர்களுக்கான உதவிகளை வழங்க முடியும் என்றால் அது பெரிய உதவியாக இருக்கும்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்படுவதை நிறுத்தவதற்கு ஏதாவது வழிகள் உண்டா?
கணநாதன்: இன்றைக்கு அகதிகளைத் திருப்பி அனுப்புவதை நிறுத்தச் சொல்வதையும் இலங்கையில் யுத்தத்தை நிறுத்தி யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வரக் கோருவதையும் நான் ஒன்றாகத்தான் பார்க்கிறன். இன்றைக்கு நாங்கள் லொபி பண்ணி யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வரலாம் என்று சொல்லுவாராக இருந்தால் நிச்சயமாக அகதியை அனுப்புவதையும் நிறுத்தலாம். அரசியலில் அடிபட்ட ஒருவருக்குத் தெரியும் இரண்டுமே சரியான கஸ்டம். கொள்கை முடிவுகள் எங்கெங்கோ எடுக்கினம் அதுக்கு ஜனநாயக மூலாமைப் பூசி வைக்கினம். அதில மக்களோ லொபி குறூப்போ வந்து இம்பக்றை ஏற்படுத்த முடியாமல் இருக்கிறது. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல பொதுவான ஒரு நிலை. முன்னர் ஒரு அகதியைத் திருப்பி அனுப்பினால் அகதி அமைப்புகள் குரல் கொடுக்கும், பிசப் குரல் கொடுப்பார் எத்தினையோ என்ஜிஓ எல்லாம் போர்க்கொடி எழுப்பும்.

ஆனால் இப்ப சட்ட ரீதியாக வாதாடக் கூடிய அடிப்படை உரிமைகளையே கொடுக்காமல் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் உயிராபத்தில் உள்ளவர்களே கண்மூடித்தனமாக திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். அவ்வளவத்திற்கு அரசாங்கத்தின் போக்கு கடுமையாக இருக்கிறது. அதனை எதிர்கொண்டு தடுக்கிறது மிகவும் கஸ்டமாக இருக்கிறது.

அரசியல் ரீதியாகவோ லொபி செய்தோ அதைச் செய்யலாம் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

தனிப்பட்ட வழக்குகளில் சட்டரீதியாகச் சென்று முதலில் இருந்தே சரியான முறையில் வாதிட்டு முதற்தடவையே சரியான முறையில் வழக்கு கையாளப்பட்டால் இந்த சூழலிலும் சாதகமாக தஞ்ச விண்ணப்பத்தை பரிசிலிக்கச் செய்ய முடியும். அப்படி இல்லாமல் நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தலைத் தடுப்பதற்கு முதல் முறையாகப் போடுகிற ஜீடிசறி ரிவியூவை செம்மையாகப் போட்டு இருந்தாலும் உச்ச நிதிமன்றம் வரை சென்று நாடுகடத்தலை நிப்பாட்டக் கூடிய சூழல் இருக்கிறது. அதில் நிராகரிக்கப்பட்டால் கூட ஐரோப்பிய நீதிமன்றம் வரை சென்று நாடுகடத்தலை நிறுத்த முடியும்.

புகலிடம் தேடி பிரான்ஸ் வந்தவர்களுக்கு வதிவிட உரிமையை வழங்கு! – பாரிஸ் ஊர்வலம் : த ஜெயபாலன்

Paris_Protest_14Mar09வதிவிட அனுமதியற்று பிரான்ஸில் வாழும் அனைத்து மக்களுக்கும் வதிவிட அனுமதி வழங்கக் கோரி பிரான்ஸ் பாரீஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் சில நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை 9வது கொலற்றீவ் (9ème COLLECTIF) அமைப்பினரும் சமூகப்பாதுகாப்பு அமைப்பினரும் (Comité de Défense Social) சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தனர். வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்கள் சார்ந்த நலன்களே இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் பிரதான கோசமாகவும் கோரிக்கையாகவும் அமைந்திருந்தது. குறிப்பாக யுத்த்தாலும் படுகொலைகளாலும் வன்முறை அரசியலாலும் பாதிப்புற்று புகலிடம் தேடி பிரான்ஸ் வந்த இலங்கை மக்களுக்கு வதிவிட அனுமதி வழங்கு என்ற கோசம் கொண்ட பதாகையே பிரதானமாக முன்னெடுக்க்பட்டது.

பிரான்ஸ் அரசு ‘வதிவிட அனுமதியற்ற மக்களை அவமானப்படுத்தும் முறையில் சோதனை இடுவது, அவர்கள் வாழும் குடியிருப்புக்களை சுற்றிவளைத்து குற்றவாளிகள் போல் கைது செய்வது, சிறையில் அடைப்பது, நாட்டைவிட்டு பலாக்காரமாக அனுப்புவது, போன்ற மனித உரிமை விழுமியங்களை மீறும் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்படல் வேண்டும்’ என்ற கோரிக்கை வலுவாகவும் தீவிரமாகவும் ஆர்ப்பாட்டக்காறர்களால் முன்வைக்கப்ட்டது. ‘பிரான்ஸ் அரசு வதிவிட அனுமதியற்றவர்களை ஆபத்தானவர்களாக நோக்குகின்ற போக்கை கைவிட வேண்டும்’ என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் முப்பதாயிரம் வதிவிட அனுமதியற்றவர்களை கைது செய்து சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறையில் அடைத்து நாட்டைவிட்டு வெளியேற்றும் அரசின் செயல்பாடு நிறுத்தப்பட வேண்டுமென்றும், இந்த சிறப்பு முகாம் என்ற சிறைகள் மூடப்பட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்ட்டது.
 
சமூகப்பாதுகாப்பு அமைப்பின் சார்பில் தோழர்கள் கிறீஸ்தோபர், மேரிகிறீஸ்ரியன், தோமா, கிறீஸ்ரி, செபஸ்த்தியான், ரமணன், வரதன், கஸ்ரோ, அசோக் முதலானோர் ஊர்வலத்தை நெறிப்படுத்தினார்கள்.  இவ் ஊர்வலத்தில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வதிவிட உரிமை மறுக்கப்ட்ட மக்களும் தங்கள் தங்கள் கோரிக்கைகளோடு பதாகைகளை தாங்கி வந்தனர். பிரான்சில் உள்ள பல்வேறு இடதுசாரி அமைப்புக்களைச் சேர்ந்த தோழர்களும் சமூக அக்கறையாளர்களும் இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

Paris_Protest_14Mar09இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்வர்களில் ஒரு பிரிவினர் ‘மாக்கற்றிப் போர்சனி’ பிரதான வீதியில் உள்ள தேவாலயத்தினுள் நுழைந்து அங்கேயே தங்கி உள்ளனர். தேவாலய பரிபாலனசபையினர் அவர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்ட போதும் அவர்கள் வெளியேற மறுத்து உள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டவர்கள் தங்குமிட வசதியற்றவர்கள் தருப்பி அனுப்பப்பட தீர்மானிக்கப்பட்டவர்கள் தேவாலயத்தில் அடைக்கலம் பெறுவது இது முதற்தடவையல்ல. இவ்வாறான சம்பவங்கள் பிரான்ஸில் ஏற்கனவே இடம்பெற்று உள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தேவாலயத்திற்குள் நுழைந்து வெளியேற மறுத்து தங்கள் கோரிக்கைக்கு மேலும் வலுச்சேர்த்து உள்ளனர்.

பிரான்ஸின் பிரித்தானியாவை ஒட்டிய கடற்கரைப் பகுதியான கலை என்ற பகுதியில் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காகப் பலர் தினமும் முயற்சித்துக் கொண்டு உள்ளனர். பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்குச் செல்லும் கொன்ரைனர் லொறிகளில் தாவி தங்களை பிரித்தானியாவுக்குள் கொண்டு சேர்க்க அவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியில் சிலர் கலை ப் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியும் உள்ளனர். இந்தப் பகுதி ஐரோப்பாவின் சேரியாக வர்ணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கடுமையான குளிரிலும் அடிப்படை வசதிகளற்ற வாழ்நிலைக்கு உதவாத தரத்தில் உள்ள இக்கூடாரங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா தனது எல்லைப் பாதுகாப்பை மிகவும் இறுக்கமாக்கி உள்ள நிலையில் பிரித்தானியக் கனவுடன் பலர் பிரித்தானியாவின் அக்கரையில் காத்திருக்கின்றனர்.
 
சமூகப் பாதுகாப்பு அமைப்பினர் கடந்த வாரமும் யுத்த நிறுத்தத்தைக் கோரி ஒரு ஊர்வலத்தை நடாத்தி இருந்தனர். அதனை புலி அதரவாளர்கள் எனக் காட்டிக்கொண்ட சிலர் குழப்ப முயற்சித்த போதும் அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் திட்டமிட்டபடி நடந்தது. ஆனால் இந்த ஊர்வலம் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. சமூக பாதுகாப்பு அமைப்பு எதிர்வரும் காலங்களில் இலங்கை மக்கள் நலன் சார்ந்த அரசியல் சமூக கலாச்சார விடயங்களில் கவனம் செலுத்தி செயற்பாட்டுத் திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக அசோக் தேசம்நெற்றிக்கு தெரிவித்தார்.

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பாரிஸில் படுகொலைக்கு எதிரானதும் தமிழ் – சிங்கள இன ஒற்றுமையைக் கோருகின்றதுமான போராட்டம்! : த ஜெயபாலன்

Paris_Protest_07Mar09இலங்கையில் நடைபெறும் அனைத்துப் படுகொலைகளையும் கண்டிக்கும் கண்டனப் போராட்டம் இன்று பாரிஸில் இடம்பெற்றது. இக்கண்டன ஊர்வலம் பாரீஸ் Place Georges Pompidou இருந்து ஆரம்பமாகி பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சு முன்றலில் முடிவுற்றது. 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில் பிரெஞ் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டிருந்தனர். வழமையாக புலி ஆதரவு அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களுக்கு மாறுபட்ட வகையில் இந்தக் கண்டன ஊர்வலம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. Comite’ De de’fence Social – சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு  செய்திருந்த இந்த ஊர்வலத்தில் பிரான்ஸில் உள்ள இடதுசாரி அமைப்புகளான FA (Fédération Anarchiste), Bread and Roses, Solidaires Paris (Union Syndicale) ஆகியனவும் கலந்து கொண்டிருந்தன. இலங்கை அரசு மேற்கொள்ளும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை தமிழ் மக்களுக்கு உள்ளேயே வைத்திருந்த நிலையில் இருந்து தாம் நாழும் நாடுகளில் உள்ள பிரதான போராட்ட அரசியல் அமைப்புகளுடன் இணைந்து போராட முற்பட்டதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இது அமைந்து உள்ளது.

இக்கண்டன ஊர்வலம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ள தேசம்நெற் வாசகர் சண் இவ்வாறு தெரிவிக்கிறார், ”இந்த நேரத்தில் இப்படியான இந்த ஊர்வலம் இவர்கள் வைக்கும் கோசம் எல்லா கொலைகளையும் கண்டிக்கும் நேர்மை எல்லா கொள்ளைக்கார அமைப்புக்களையும் கண்டிக்கும் துணிவு எங்களுக்கு நம்பிக்கை தருகிறது. பரிசில் இன்னும் இலங்கை அரசுக்கு விலைபோகாத உறுதியான நண்பர்கள் இருப்பது இன்னும் நம்பிக்கை தருகிறது.”

Paris_Protest_07Mar09– இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து!
– இலங்கையில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுகந்திரம் வழங்கு!
– அராஐகம் படுகொலைகள் காணாமல்போதல்களிற்கு எதிராக தமிழ்பேசும் மக்களே சிங்கள மக்களே ஒன்றிணையுங்கள்!
– பெண்கள் சிறார்களுற்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்து!
– பிரான்ஸ் அரசே! வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களிற்கு இங்கு வதிவிட அனுமதி வழங்கு!
– பிரான்ஸ்சிலும் இலங்கையிலும் உள்ள இலங்கை தொழிலாளர்களிற்கு பிரான்ஸ் தொழிலாளர்களின் ஆதரவை வழங்குவோம்!

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்தப் போராட்டத்தை புலி ஆதரவாளர்களும் புலி எதிர்ப்பாளர்களும் வேறுபட்ட காரணங்களுக்காகப் புறக்கணித்தனர்.

புலி ஆதரவாளர்கள் அதற்கும் மேலே சென்று இந்த ஊர்வலம் பற்றி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை கிழித்ததுடன் சுவரொட்டிகளை ஒட்டிய பிரெஞ்சு மற்றும் தமிழ் ஏற்பாட்டாளர்களை தாக்கவும் முற்பட்டு உள்ளனர். அவர்களை மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தும் உள்ளனர். இந்தக் கண்டன ஊர்வலம் பற்றிய சுவரொட்டிகளை நேற்று முன்தினம் லாச்சப்பலில் ஒட்டிவிட்டுத் திரும்பியவர்களை இடைமறித்த சிலர் தங்கள் கைத்தொலைபேசி மூலம் மேலும் பலரை வரவழைத்து 30 – 35 பேர் சுற்றி வளைத்து வசை பாடியதுடன் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அனைத்தையும் கிழித்தெறிந்தனர்.

இன்று ஊர்வலம் ஆரம்பிக்கப்படும் இடத்திலும் கூடிய தங்களை புலி ஆதரவாளர்களாகக் காட்டிக்கொண்டவர்கள் தங்கள் வசைகளைக் கொட்டினர். இவர்களது அடாத்தான செயல்களால் அவ்விடத்தில் வன்முறை நிகழும் என்று அஞ்சிய பலர் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் திரும்பினர். அவ்வாறு திரும்பிய பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தேசம்நெற்றுடன் தொடர்பு கொண்ட போது, தான் தனது மனைவியுடனும் பிள்ளைகளுடனும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளச் சென்றதாகவும் ஆனால் அங்கு இந்த ஊர்வலத்தை குழப்ப விளைந்த சிலர் தகாத வார்த்தைகளை தமிழிலும் பிரெஞ்சிலும் பேசியதாகவும் நிலைமை பதட்டமாக இருந்ததால் தாங்கள் வீடு திரும்பியதாகவும் தெரிவித்தார். அந்த வார்த்தைகளைக் கேட்கவே காது கூசுவதாகக் கூறிய அவர் அவர்கள் அதனை பலருக்கும் மத்தியில் திருப்பித் திருப்பிக் கூறியதாகக் கூறினார்.

‘தமிழ் மக்களுக்குப் போராட நீங்கள் யார்?’, ‘அதற்குத் தான் நாங்கள் இருக்கிறோம்.’, ‘சிங்களவனோடு சேரச் சொல்லுறியளோ’ என்று ஆரம்பித்து தமிழ், பிரெஞ் மொழிகளில் உள்ள தகாத வார்த்தைகள் அனைத்தும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வசையாகக் கொட்டப்பட்டது.

Paris_Protest_07Mar09நிலைமையை ஏற்கனவே உணர்ந்திருந்த காவல்துறையினர் பல வாகனங்களில் கொண்டு வந்து இறக்கப்பட்டதுடன், சிவில் உடையிலும் பலர் உலாவவிடப்பட்டனர். ஊர்வலத்தில் கலந்த கொண்டவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படாமல் இருக்க அதனைக் குழப்ப முற்பட்டவர்கள் காவல்துறையினரால் ஓரங்கட்டப்பட்டனர். ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களைச் சுற்றி காவல்துறையினர் தொடர்ந்து சென்றனர்.

‘தாங்கள் பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூகங்களின் போராட்டங்களிலும் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்ட பிரெஞ்சுத் தோழர் ஒருவர், இது தங்களுக்கு புதிய அனுபவம்’ எனக் குறிப்பிட்டதாக இந்தக் கண்டன ஊர்வல ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அசோக் யோகன் கண்ணமுத்து தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். இந்த ஊர்வலத்தில் தமிழ் – சிங்கள மக்கள் இணைய வேண்டும் என்ற கோசத்தை புலி ஆதரவாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்ட அவர், அவர்கள் தங்களை மீறி யாரும் குரல் கொடுப்பதை தடுப்பதாகக் குறிப்பிட்டார்.

புலி எதிர்ப்பாளர்களான EPDP, PLOTE, TELO, TMVP போன்ற ஆயுதக் குழுக்கள் இலங்கை அரசின் இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்ததால் அவர்களும் இந்தக் கண்டன ஊர்வலத்தை புறக்கணித்ததாக அசோக் தெரிவித்தார். இன்னும் சில ‘மாற்றுக்கருத்து’, ‘ஜனநாயகம்’ பேசும் சிலர் வேடிக்கை பார்த்துவிட்டுச் சென்றதாகவும் கூறினார்.

வன்னி மக்களின் மனித அவலம் மிகமோசமடைந்த நிலையிலும் புலம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய குழுவாத அரசியலில் இருந்து விடுபடாதவர்களாகவே உள்ளனர். புலி ஆதரவாளர்களைப் பொறுத்தவரை வன்னி மக்களின் இழப்பைக் கொண்டு புலிகளின் அரசியல் பேரம்பேசலுக்கான இறுதி முயற்சியாக இதனைப் பயன்படுத்துகின்றனர்.  புலி எதிர்ப்பாளர்களைப் பொறுத்தவரை வன்னி மக்களின் இழப்பைப் பொருட்படுத்தாமல் எப்படியாவது புலிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதிலேயே கவனமாக உள்ளனர்.

இந்த இரு முக்கிய அணிகளுக்கு அப்பால் மக்களது நலன்சார்ந்த போராட்டங்கள் மிகவும் பலவீனமானமதாகவே உள்ளது. அவர்களுடைய குரல்களையும் பல்வேறு வகையில் அடக்குவதற்கான முயற்சிகளே பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது. Key Board புரட்சியாளர்களைத் தாண்டி இவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய மிக முக்கியமாக கலகட்டம் இது. இவ்விடத்தில் தேசம்நெற் கருத்தாளர் நாதனுடைய குறிப்பை இங்கு மீளப்பதிவிடுவது பொருத்தமாக இருக்கும்.

Paris_Protest_07Mar09”இந்த போராட்டமானது உலகில் வாழும் உழைக்கும் மக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற வேண்டியதாகும். இதற்கான வழிமுறைகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியது இலங்கைப் பாட்டாளிவர்க்கத்தின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.

நாம் எமது மக்களுக்காக போராட வேண்டுமென்றால் எமக்கு தார்மீக ஆதரவு பெறவேண்டுமென்றால் நாம் இந்த நாட்டவர்களுடன் சேர்ந்து இங்குள்ள பிரச்சனைக்களுக்காக போராடுவதன் மூலமே புலம்பெயர்ந்த நாடுகளின் பூர்வீக மக்களை ஆதரவாக இணைத்துக் கொள்ள முடியும். தொழிற்சங்கம் போராட்டம், இனவாதத்திற்கெதிரான போராட்டம், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்படுகின்ற போராட்டம், புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் போராட்டத்தில் பங்குபற்றுதல் வேண்டும்.”

பாரிஸில் இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளுக்கும் எதிரான கண்டனப் போராட்டம் : த ஜெயபாலன்

Wanni_Warஊர்வலம் : சனி 07 / 03 / 2009 நேரம் மாலை 15:00
இடம் : Place Georges Pompidou
Métro : Rambuteau, Hôtel de Ville ou Les Halles

மார்ச் 7ல் பாரிஸில் இலங்கையில் நடைபெறும் அனைத்துப் படுகொலைகளையும் கண்டிக்கும் கண்டனப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை பாரிஸில் இடம்பெற்ற கண்டனப் போராட்டங்கள் அனைத்தும் புலி ஆதரவு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. ஆனால் மார்ச் 7ல் நடைபெறவுள்ள கண்டனப் போராட்டம் Comite’ De de’fence Social  – சமூகப் பாதுகாப்பு அமைப்பு என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரான்ஸில் உள்ள இடதுசாரி அமைப்புகளான FA (Fédération Anarchiste), Bread and Roses, Solidaires Paris (Union Syndicale) ஆகியனவும் இந்தக் கண்டனப் போராட்டத்திற்கான தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி உள்ளன. தமிழர்களல்லாதவர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இவ்வகைப் போராட்டம் அண்மைக் காலத்தில் இப்போதே பாரிஸில் இடம்பெறுகிறது. இவ்வகையான போராட்டங்கள் லண்டனில் Committie for Workers International இனால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கண்டனப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ள Comite’ De de’fence Social  – சமூகப் பாதுகாப்பு அமைப்பு பரிஸில் உள்ள மாற்றுக் கருத்து அரசியல் ஆர்வலர்களும் பிரான்ஸ் இடதுசாரி ஆர்வலர்களும் இணைந்து உருவாக்கிய அமைப்பு. இவர்கள் தொழிற்சங்கம் போன்றே தமது செயற்பாட்டைக் கொண்டு உள்ளனர். இவர்கள் உணவகத் தொழிலாளர்களுக்கான போராட்டங்கள் வதிவிட உரிமைக்கான போராட்டங்களை தமிழர்கள் உட்பட சிறுபான்மை மக்களுக்காக மேற்கொண்டு உள்ளனர்.

இக்கண்டனப் போராட்டம் தொடர்பாக  Comite’ De de’fence Social  – சமூகப் பாதுகாப்பு அமைப்பு வெளயிட்டுள்ள அறிக்கையில் எல்ரிரிஈ; என்ற சந்தேகத்தில் அல்லது தமிழர்கள் என்பதற்காக இலங்கை அரசாங்கம் ஆட்கடத்தல், எழுந்தமானமான கைதுகள், தடுத்து வைத்தல்கள், சித்திரவதைகள், கூட்டுப்படுகொலைகள் என்பனவற்றை மேற்கொள்வதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

அதே அறிக்கையில் விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுத தந்திரோபாயங்களால் தமிழ் மக்களைக் கட்டுப்படுத்தி தாங்களே அம்மக்களின் ஏகபிரதிநிதிகளாக செய்றபடுவதாகவும் மற்றைய தமிழ் அரசியல் அமைப்புகளை இல்லாதொழித்து உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இலங்கையில் உள்ள ஏனைய ஆயுதக் குழுக்களும் இந்த அறிக்கையில் கண்டிக்கப்பட்டு உள்ளது. EPDP, PLOTE, TELO, TMVP ஆயுதக் குழுக்கள் இலங்கை அரசின் இராணுவத்தினருடன் இணைந்து செயற்டுவதாகவும் இவர்கள் கடத்தல் கப்பம் என்று வன்முறையில் ஈடுபடுவதாகவும் இது நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. (இந்த அறிக்கையைக் கீழே காணலாம்.)

Comite’ De de’fence Social – சமூகப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் FA (Fédération Anarchiste), Bread and Roses, Solidaires Paris (Union Syndicale) அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்டனப் போராட்டத்தில் பின்வரும் கோசங்களை முன்வைப்பது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

– இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து!
– இலங்கையில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுகந்திரம் வழங்கு!
– அராஐகம் படுகொலைகள் காணாமல்போதல்களிற்கு எதிராக தமிழ்பேசும் மக்களே சிங்கள மக்களே ஒன்றிணையுங்கள்!
– பெண்கள் சிறார்களுற்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்து!
– பிரான்ஸ் அரசே! வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களிற்கு இங்கு வதிவிட அனுமதி வழங்கு!
– பிரான்ஸ்சிலும் இலங்கையிலும் உள்ள இலங்கை தொழிலாளர்களிற்கு பிரான்ஸ் தொழிலாளர்களின் ஆதரவை வழங்குவோம்!

._._._._._.

Crisis in Sri Lanka

The Government of Sri Lanka launched a major military offensive in the month of September 2008 against the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Since the separatist campaign launched by the LTTE against the government in 1972, the conflict has claimed tens of thousands of lives.

The government forces have long oppressed the Tamil population through massacre, raids, arbitrary detention and torture of thousands for mere suspicion of being a Tiger sympathiser or even for just being a Tamil.

The Tamils are safe nowhere in Sri Lanka. They are victims of segregation worthy of Apartheid. The slightest movement is controlled; all Tamils are obliged to get registered in police stations and military camps.

Meanwhile, the tigers with their strong arm tactics have kept the tamil population under their control claiming exclusive representation of the community working for their emancipation. They have eliminated all other representatives of the Tamil political organisation.

The “Tigers” forcibly recruit adults and children alike for their armed struggle. Since 1990, the Tigers have imposed a blockade on the populations of the areas under their control and those who have to crossover are obliged to leave their family members as hostage.

The situation has worsened for the civilians since the government launched its offensive in the month of September 2008.

The blockade has condemned civilians who are caught in the cross-fire Those who manage to escape are held in virtual concentration camps which could be termed the lawless areas where the military eliminates any individual who is a suspect.

To date, hundreds of refugees have disappeared. A safety zone has been created, too small to contain populations which is in the conflict are (approx. 500,000 people), which suffers from both the blockade of the “Tigers” and the artillery bombardment and those from air force.

The situation is further complicated by the fact that other Tamil paramilitary groups, including the EPDP, PLOTE, TELO, TMVP, (militia formed by former members of the Tigers)… are collaborating with the Sri Lankan army and bully the people through acts of extortion, of violence and abductions of children — all with the blessing of the Sri Lankan State.

We demand:

•End of massacre in Sri Lanka!
•Freedom for all oppressed peoples of Sri Lanka!

We call for the solidarity, support and relief from the entire French population, associations, trade unions and politicians.

We seek your participation at the rally to be held
On Saturday, 07 March 2009
This event will start at 15:00 Place Georges Pompidou, Paris.

முல்லை மக்களை யுத்த பிராந்தியத்தில் இருந்து வெளியேற்ற வேண்டாம்! பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்துங்கள்!!! அமெரிக்கத் தமிழ் அமைப்பு PEARL : த ஜெயபாலன்

Pearl_Logo‘முல்லைத்தீவின் யுத்த பிராந்தியத்தினுள் சிக்குண்ட மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா உதவக் கூடாது’ என People for Equality and Relief in Lanka (PEARL) என்ற அமைப்பு கேட்டுக்கொண்டு உள்ளது. ‘மாறாக பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்தவும்’ என்று அவ்வமைப்பு கேட்டுக்கொண்டு உள்ளது. இலங்கை இராணுவம் பாதுகாப்பு வலயம் என்று அறிவித்துள்ள பகுதிகளிலேயே தாக்குதலை மேற்கொண்டு பல நூற்றுக் கணக்கான வன்னி மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டும் உள்ள நிலையில் PEARL நேற்று இந்த வேண்டுகோளை விடுத்து உள்ளது.

‘U.S. Pacific Command (PACOM) முல்லைத் தீவில் சிக்குண்டுள்ள மக்களை வெளிறேற்றும் திட்டத்தில் தலைமைப் பாத்திரம் ஏற்று உள்ளதாக நம்பகரமான தகவல்கள் கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள PEARL இத்திட்டத்தை உடனடியாகக் கைவிடும்படி கோரி உள்ளது. ‘இவ்வாறு வெளியெற்றப்படும் மக்கள் இலங்கை அரசின் திடமிட்ட இனப்படுகொலைக்கு உள்ளாவர்கள்’ என்று கூறியுள்ள PEARL ‘எங்களின் கையில் அந்த மக்களின் குருதி வேண்டாம்’ என்று தெரிவித்து உள்ளனர். PEARL   அமெரிக்கத் தமிழர்களால் 2005ல் உருவாக்கப்பட்ட அமைப்பு. இலங்கைப் பிரச்சினை தொடர்பாக கவனத்திற்கொள்ளும் 1800 பெரும்பாலும் அமெரிக்கத் தமிழர்கள் அதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

தங்களுக்குக் கிடைத்தள்ள தகவல்களின் படி ‘U.S. Pacific Command (PACOM) முல்லைத்தீவில் சிக்குண்டு உள்ள மக்களை வெளியேற்றி இலங்கை அரசிடம் ஒப்படைக்க உள்ளதாகக் குறிப்பிட்டு உள்ளது PEARL. இந்த இலங்கை அரசு ஒப்படைக்கப்பட்ட மக்களை நாசி முகாம்கள் போன்ற முகாம்களில் (concentration-style internment camps) அடைக்க திட்டமிடுவதாகவும் PEARL குற்றம்சாட்டி உள்ளது.

இந்த மக்களை முல்லைத் தீவு பிரதேசத்தில் இருந்து வெளியேற்றுவதை கைவிட்டுவிட்டு பாதுகாப்பு வலயத்தை மேலும் விரிவாக்கி சர்வதேச உதவிப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோரை சுதந்திரமாக அங்கு அனுமதிப்பதன் மூலம் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என PEARL கேட்டுக்கொண்டு உள்ளது.

எல்ரிரிஈ தனது கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் அனைத்தையும் இழந்த நிலையில் 14 சதுர கி.மீ பரப்பளவை தனது கட்டுப்பாட்டினுள் வைத்துள்ளனர். அப்பிரதேசம் அங்குள்ள 200 000 மக்களினால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இவர்களில் கணிசமான எல்ரிரிஈ உறுப்பினர்களது குடும்பங்களும் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் யுவதிகள் இலங்கை இராணுவத்தின் மற்றும் ஏனைய ஆயுத அமைப்புகளின் களையெடுப்பு நடவடிக்கைகளினால் பாதிக்கபடுவார்கள் என்ற நியாயமான அச்சம் அந்த மக்களிடையே உள்ளது. அவர்கள் அப்பிரதேசங்களை விட்டு வெளியேற முடியாமலிருப்பதற்கு இவை முக்கிய காரணியாக உள்ளது. ஏனையவர்கள் பெரும்பாலும் விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது பெரும்பாலான மனித உரிமைகள் அமைப்புகளாலும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

எல்ரிரிஈ தனது கடைசித் துண்டு நிலத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த 200 000 மக்கள் சிக்குண்டுள்ள நிலம் மிக அவசியம் என்பது பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதனாலேயே அனைத்து பகுதிகளிலும் பின்வாங்கிய எல்ரிரிஈ மக்கள் மிக மிகச் செறிவான பகுதியில் தங்கள் கடுமையான யுத்தத்தை நிகழ்த்துகின்றனர். இப்பகுதியை இழப்பது எல்ரிரிஈ தனது பிரதேசக் கட்டுப்பாட்டை முற்று முழுதாக இழப்பதற்கு ஒப்பானது. கிட்டத்தட்ட இரு தசாப்தங்களின் பின் எல்ரிரிஈ பிரதேசக் கட்டுப்பாட்டை கொண்டிராத ஒரு கொரில்லா அமைப்பாக மீண்டும் மாறுவதையெ இது குறிக்கும்.

அதனால் தனது பிரதேசக் கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொள்வதற்கு யுத்த நிறுத்தம் பேச்சுவார்த்தை பாதுகாப்பு வலயம் என்பன எல்ரிரிஈ க்கு மிக அவசியமானது. பயங்கரவாதத்தை அழிப்பதன் பெயரில் இலங்கை அரசு ஒட்டமொத்த தமிழ் மக்கள் மீதும் தாக்குதலை நடத்தி இன அழிப்பொன்றை மேற்கொள்வதாக பெரும்பாலான தமிழ் மக்கள் நியாயமாகவே நம்புகின்றனர். அதனால் இந்த இன அழிப்பை நிறுத்த யுத்த நிறுத்தம் அவசியமானது என்பதை சரியாகவே சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை அரசு சர்வதேச உதவியுடன் முல்லையில் சிக்குண்ட மக்களை வெளியேற்றி சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் மேற்பார்வையில் அம்மக்கள் விடப்பட்டால் இன்று யுத்தம் நடைபெறும் பிரதேசத்தின் முக்கியத்துவம் இழந்து போவதுடன் எல்ரிரிஈ தனது கடைசித்துண்டு நிலத்தையும் விட்டு கொரில்லாப் போர் முறைக்குச் சென்றுவிடும். இது எல்ரிரிஈ இன் வரலாற்றில் மிக மோசமான பின்னடைவாக அமைவது தவிர்க்க முடியாதது.

2002ல் ஒஸ்லோவில் இலங்கை அரசுக்கு சமமாக ஒரு பிரதேசக் கட்டுப்பாட்டை கொண்டு புரிந்தணர்வு ஒப்பந்த்தில் கையெழுத்திட்ட எல்ரிரிஈ ஏழு வருடங்களில் அவற்றையெல்லாம் இழந்து மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கே வந்துவிடும்.

அந்த நிலைக்குச் செல்வதை தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எல்ரிரிஈ மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம். அதில் மக்கள் பகடைக்காய்களாக கேடயங்களாக ஆக்கப்படுவதிலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முல்லையில் உள்ள வன்னி மக்களைப் பொறுத்தவரை அவர்கள் இரண்டு இராணுவங்களின் பிடியில் சிக்குண்டு உள்ளனர். இரு இராணுவங்களுமே அந்த மக்கள் மீது தமது அதிகாரத்தை நிலைநாட்டும் தங்கள் இறுதி முயற்சியில் மிக ஆக்கிரோசமாக ஈடுபட்டு உள்ளனர்.

இந்த யதார்த்தத்தின் பின்னணியில் தான் யுத்தம் நடைபெறும் முல்லையில் இருந்து பல்லாயிரம் மைல் தொலைவில் அமெரிக்காவில் உள்ள PEARL அமைப்பு அங்குள்ள மக்களை வெளியேற்ற வேண்டாம் என்ற கோரிக்கையை வைத்துள்ளது. ஹொலிவூட் படங்களில் மட்டுமே செல் அடிகளைப் பார்த்துக்  கொள்பவர்கள் கடந்த பல மாதங்களாக செல் அடிக்குள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் மக்களை யுத்தப் பிராந்தியத்தில் இருந்து வெளியெற்ற வேண்டாம் எனக் கேட்கின்றனர்.

PEARL அமைப்பின் கோரிக்கை முல்லையில் உள்ள வன்னி மக்களின் பாதுகாப்பு சார்ந்ததாக இருந்தால்  PEARL  பின்வரும் கோரிக்கைகளையே முன் வைத்திருக்க வேண்டும்.
வெளியெற்றப்படும் மக்களின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவும் சர்வதேசமும் பொறுப்பேற்க வேண்டும்.
வெளியேற்றப்படும் மக்கள் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்படுவதை அமெரிக்காவும் சர்வதேசமும் உறுதிப்படுத்த வேண்டும்.
எல்ரிரிஈ உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
தற்காலிகமான முகாம்களுக்கு சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
மிக விரைவில் சில மாதங்களுக்குள் அம்மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவதை அமெரிக்காவும் சர்வதேசமும் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த யுத்தத்தில் உயிரிழப்புகள், அங்கங்களை இழந்தவர்கள் உடமைகளை இழந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறான கோரிக்கைகளே யுத்தம் நிறுத்தப்படாத பட்சத்தில் யுத்தத்தில் சிக்கியுள்ள மக்களை அதிலிருந்து பாதுகாக்க ஒரே வழி. அதனைவிடுத்து எல்ரிரிஈ அரசியல் பேரம் பேசுவதற்கும் எல்ரிரிஈ இனதும் புலம்பெயர் தமிழர்களதும் அரசியல் அபிலாசைகளுக்காகவும் இந்த மக்களை பணயம் வைக்க முடியாது. இலங்கை அரசு இனவாத அரசு என்ற முடிவுக்கு நாம் வந்தால் வன்னி மக்களை அந்த யுத்தப் பிராந்தியத்தில் இருக்க நிர்ப்பந்திக்க முடியாது. அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வாய்ப்பு அழிப்பது அவசியம்.

வடக்கு – கிழக்கு தமிழர்களில் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் மூன்றில் ஒரு பகுதியான ஒரு மில்லியன் வரையானோர் வெளிநாடுகளுக்கு வந்துவிட்டனர். மீதமுள்ளவர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் தெற்கில் வாழுகின்றனர். வெளிநாடுகளுக்கு வரவும் கொழும்புக்கு வரவும் வசதியற்றவர்களே பெரும்பாலும் இன்று வன்னியில் சிக்குண்டுள்ளனர். அந்த மக்களின் வறுமையைக் காரணம் காட்டி அவர்களின் தலையில் தமிழீழச் சுமையை இறக்கி வைத்துவிட்டு ‘உந்த மோட்டுச் சிங்களவன்களுக்கு பாடம் புகட்ட’ ஒற்றைக் காலில் நிற்கும் கோட் ரை கட்டும் கனவான்களும் கனவாட்டிகளும் யதார்த்தத்தை புரிந்த கொள்ள வேண்டும்.

._._._._._.

People for Equality and Relief in Lanka (PEARL)
Action Alert Archive
Take Action Now! (USA)

U.S. Troops Plan Evacuation in Sri Lanka: Sign Death Warrants for Hundreds of Thousands, Support Ethnic Cleansing
March 2, 2009

Credible reports from Colombo, Sri Lanka reveal the U.S. Pacific Command (PACOM) is planning to lead an evacuation of nearly 200,000 Tamil civilians trapped in the war-torn northern region of Sri Lanka. We urge you to stop these plans immediately, which would only serve to exacerbate the crisis for these civilians and support ethnic cleansing in this region. Instead of an evacuation, the “safe zones” these civilians are currently in should be strengthened, with full access for aid workers, journalists and human rights monitors.

These civilians have been besieged by the Sri Lankan government’s military offensive, which has raged on since September, costing the lives of over 2,000 Tamil civilians and wounding another 7,000 Tamil civilians. Reports reveal that PACOM is planning to evacuate these civilians and deliver them to the Sri Lankan government – who would then imprison them in concentration-style internment camps. Human Rights Watch and other humanitarian agencies have criticized the Sri Lankan government for its treatment of refugees: forcibly keeping them in internment camps, separated from family and secluded from international aid agencies, as they are harshly interrogated and abused.

PACOM evacuating these civilians and delivering them to the Sri Lankan government signs the death warrants of thousands of civilians, who would “disappear” upon entry into government-run camps. The Sri Lankan government has the ignoble title of having the highest rate of state-sponsored abductions in the world, according to the United Nations Working Group on Enforced and Involuntary Disappearances. The government frequently “disappears” civilians, journalists and even aid workers who they believe to be critical of their regime.

The Sri Lankan government currently estimates only 70,000 civilians inhabit the conflict area; most aid organizations including the ICRC, UN and HRW estimate 200,000 civilians. This discrepancy reflects a calculated attempt by the Sri Lankan government to underestimate the size of the population they would come to control, granting them adequate room to “disappear” thousands. These 200,000 civilians chose to live in area controlled by the Liberation Tigers of Tamil Eelam, and will therefore be treated with suspicion and brutality by the Sri Lankan government.

PACOM launching an evacuation of Tamil civilians supports the Sri Lankan government’s campaign of ethnic cleansing of this region. Tamils have been under attack by the Sri Lankan government since last September; evacuating them from Vanni and delivering them to the Sri Lankan government is equivalent to being an accomplice to genocide. As American citizens, we implore you to put an immediate stop to PACOM plans to evacuate these civilians. We do not want their blood on our hands. Instead of an evacuation, we urge the U.S. government to expand the “safe zone” these civilians are in, and strengthen their security by allowing aid workers, journalists and human rights monitors full access to the region. We also ask the U.S. government to pressure the Sri Lankan government to accept a ceasefire to provide respite to these besieged civilians.

இழப்பதற்கு நேரமில்லை. உடனடியாகச் செயற்பட வேண்டும் – There is no time to lose : த ஜெயபாலன்

John_Holmes_UNஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனளிக்காது போயின. நேற்று (பெப்ரவரி 27)ல் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களுக்கு Under-Secretary-General for Humanitarian Affairs ஜோன் ஹொல்ம்ஸ் தனது இலங்கை விஜயம் பற்றிய விபரங்களை தெரியப்படுத்தினார். ஐநா பாதுகாப்பு கவுன்சில் மூலம் இலங்கை அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்த அழுத்தங்கள் வழங்கப்பட்ட போதும் பாதுகாப்பு கவுன்சில், சிறு நிலப்பரப்பிற்குள் சிக்குண்டுள்ள மக்களின் பாதுகாப்புப் பற்றியே கவலை கொண்டுள்ளதாக தங்கள் கரிசனையை வெளிப்படுத்திக் கொண்டதுடன் தங்கள் கடமையை முடித்துக் கொண்டனர். பாதுகாப்பு கவுன்சிலின் மூடிய அறைக்குள் இடம்பெற்ற ஜோன் ஹொல்ம்ஸ் உடனான சந்திப்பு இலங்கை அரசுக்கு சாதகமானதாகவே அமைந்து உள்ளது. http://www.un.org/apps/news/story.asp?NewsID=30046&Cr=sri+lanka&Cr1=

அங்கு ‘There is no time to lose.’ என்று ஜோன் ஹொல்ம்ஸ் சரியாகவே சுட்டிக்காட்டிய போதும் யுத்தத்தில் சிக்குண்ட மக்களின் அவலத்தை மட்டுப்படுத்த உருப்படியான ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை. இந்த பாதுகாப்பு கவுன்சிலின் சந்திப்பில் அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி கலந்துகொள்ளவில்லை. ரஸ்யப் பிரதிநிதி ‘இது ஒரு தடவையே கேட்கப்படும்’ என்று தெரிவித்து உள்ளார். பிரித்தானியா அழுத்தங்கள் எதனையும் வழங்கவில்லை. இச்சந்திப்பின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த பாதுகாப்பு கவுன்சிலின் இம்மாதத் தலைமை ஏற்றுள்ள ஜப்பானியத் தூதுவர் யுக்கியோ ரக்காசு பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதாகக் கூறி உள்ளார்.

இதற்கிடையே இன்று (பெப்ரவரி 28) இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணர்ப் முகர்ஜி இலங்கை அரசு எல்ரிரிஈ இன் யுத்த நிறுத்த அழைப்பை ஏற்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். இந்தியாவிடம் இருந்து வந்துள்ள இந்த வேண்டுகோள் அரசியல் பலமுடையதா அல்லது சர்வதேச கண்டனங்களுக்காக விடுக்கப்பட்ட கண்துடைப்பு வேண்டுகோளா என்பது இன்னும் சில மணி நேரங்களில் அல்லது நாட்களில் தெரியவரலாம்.

இந்த அரசியல் சதுரங்கத்தினிடையே வன்னியில் நிலைமை மோசமாகிக்கொண்டு வருகிறது. புலிகளுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசம் 14 சதுர கிலோ மீற்றர்களாக குறுகியுள்ளது. இந்த 14 சதுர கி.மீ பரப்பளவில் 300 000 மக்கள் உள்ளதாக புலிகள் தெரிவிக்கின்றனர். 200 000 மக்கள் இங்கு சிக்குண்டு உள்ளதாக யூஎன் மற்றும் சர்வதேச அமைப்புகள் குறிப்பிடுகின்றன. 70 000 மக்களே அங்கு சிக்குண்டு உள்ளதாக இலங்கை இந்திய அரசுகள் தெரிவிக்கின்றன.

யுத்தத்திற்கு முன்னான வன்னி மக்களின் சனத்தொகைப் பரம்பலுடன் இதனை ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமானதாக அமையும். வட மாகாணத்தின் யாழ் மாவட்டம் தவிர்ந்த வவுனியா மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி பெருநிலப்பரப்பும் அதன் சனத்தொகைப் பரம்பலும் வருமாறு. மன்னார் – 100 000 (1 996 சதுர கி.மீ) கிளிநொச்சி – 142 000 (1 279 சதுர கி.மீ) முல்லைத்தீவு – 145 000 (2 617 சதுர கி.மீ) வவுனியா – 164 000 (1 967 சதுர கி.மீ). மொத்த வன்னி நிலப்பரப்பு 7 859 சதுர கி.மீ. வன்னியின் மொத்த மக்கள் தொகை – 551 000. (மூலம்: Department of Census and Statistics, Sri Lanka (web) – 2006).

இன்று 2 617 சதுர கி.மீ பரப்பளவுடைய முல்லைத்தீவு மாவட்டத்தில் வெறும் 14 சதுர கி.மீ பரப்பளவிலேயே கிளிநொச்சி (சனத்தொகை 142 000) – முல்லைத்தீவு (சனத்தொகை 145 000) மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர். இந்த மரணப் பொறிக்குள் சிக்குண்ட மக்களின் அவலம்  தாங்கொண்ணாதது.

”53 வயதானவருடைய குடும்பம் ஒரு நாள் முழுவதையும் சாப்பாடு தண்ணீர் இன்றி பங்கரில் கழித்தது. பசியின் கொடுமையிலும் தாகத்தின் தவிப்பிலும் செல்கள் வந்துவிழுவதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் பங்கரை விட்டு வெளியே வந்து சாப்பாட்டைத் தேடிய போது 15 பேருள்ள குடும்பத்தில் மூவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.  அவருடைய மகள் மோசமான பாயத்திற்கு உள்ளாகி வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருடைய சில உறவுகள் வன்னியிலேயே தங்க வேண்டியதாகி விட்டது. அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா என்பதும் இந்த வயதானவருக்குத் தெரியாது. இது ஒரு உதாரணமே. பலரும் இவ்வாறான சொந்த சோகக் கதைகளுடனேயே இருக்கின்றனர்.”
Doctors Without Borders/Médecins Sans Frontières (MSF) / Feb 26, 2009 : http://www.doctorswithoutborders.org/news/article.cfm?id=3440&cat=field-news&ref=home-center

”மருத்தவமனையில் சிறுவர்கள் துணையின்றி உள்ளனர். அவர்கள் வீரிட்டு அம்மாவைத் தேடி அழுகின்றனர். வயதானவர்களும் துணையின்றி உள்ளனர். சிலருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டு உள்ளது. சிலருக்கு அவயவங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது. அல்லது மிகவும் மோசமாக கூர்மையாக வெட்டப்பட்டு உள்ளது. யுத்த பிராந்தியத்தில் இருந்து தப்பி தஞ்சம் கேட்க முற்படும் 10 பேரில் ஆறு பேர் கொல்லப்படுகின்றனர்.”
Doctors Without Borders/Médecins Sans Frontières (MSF) / Feb 13, 2009 : http://www.doctorswithoutborders.org/news/article.cfm?id=3403&cat=field-news&ref=related-sidebar

பிரான்ஸை தளமாகக் கொண்ட எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு கடந்த இரு வாரங்களில் யுத்தப் பகுதியில் இருந்து வந்த காயப்பட்ட மக்களுக்கு 300 சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு உள்ளதாகவும் இது உருகும் பனிப்பாறையின் ஒரு சிறு பகுதியே எனவும் தெரிவிக்கின்றனர். ஏனைய மனிதாபிமான அமைப்புகள் போன்று எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பினரும் வன்னிப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தனர். தற்போது இவர்கள் யுத்த பிராந்தியத்தின் எல்லையாக உள்ள வவுனியாவில் மருத்துவ பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

அண்மைய வாரங்களில் 35000 பேர் வரை யுத்தப் பகுதிகளில் இருந்து தப்பித்து வந்துள்ளனர். இவர்களிலும் நோயாளிகள் காயப்பட்டோர் அடங்குகின்றனர். மேலும் 2000 நோயாளிகள் காயப்பட்டோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் மீட்கப்பட்டு உள்ளனர். இந்தக் காயங்கள் சில வாரங்களாக சிகிச்சையளிக்கப்படாததால் தொற்று ஏற்பட்டு நிலைமையை மேலும் மோசமாக்கியும் உள்ளது. சில சந்தர்ப்பங்களில் அவயவங்களைத் துண்டிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு உள்ளதாக மருத்துவப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது யுத்த பிராந்தியத்தின் அயலில் உள்ள திருகோணமலை வவுனியா மருத்துவமனைகள் 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட்டு இருப்பதுடன் காயப்பட்டவர்களின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாத அளவுக்கு திணறிக் கொண்டிருப்பதாகவும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவிக்கிறது.

இவ்வாறு மனித அவலங்கள் மிக மோசமாகிக் கொண்டு உள்ளது. செல் வீச்சில் கொல்லப்பட்ட தனது தந்தையின் சிதறிய உடலை பதினாறுவயதுப் பையன் பையினுள் அள்ளிச் சென்றதாகவும் உடல்கள் வீதிகளில் அனாதரவாக கிடப்பதாகவும் வன்னியில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசு சர்வதேச செய்தியாளர்களையும் மனிதாபிமானப் பணியாளர்களையும் யுத்தப் பகுதிக்குள் அனுமதிக்காத போதும் தகவல் தொடர்பின் வளர்ச்சியும் மின்னியல் ஊடகங்களின் வளர்ச்சியும் ஓரளவுக்காவது தகவல்களை வெளியே கொண்டு வருகின்றன. இந்த அவலங்களை புலிகளின் சார்பு ஊடகங்கள் வெளிக் கொணருவதில் அவர்களுக்கு வேறு அரசியல் நோக்கங்கள் இருந்த போதும் தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்கின்ற உண்மை ஓரளவுக்கேனும் வெளியே கொண்டு வரப்பட்டதில் அந்த ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

வன்னி யுத்தமானது மனித நாகரிகத்தின் அனைத்து பண்புகளையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டுள்ளது. நவீன ஆயுதங்களுடன் நடத்தப்படும் காட்டுமிராண்டித் தனமான யுத்தத்தில் அவலங்கள் அரசியலாக்கப்படுகிறது. தமிழ் மக்களின் அவலத்தின் மீது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெற்றுக் கொள்ளும் இராணுவ வெற்றி சிங்கள மக்களின் வெற்றியாக கற்பிதப்படுத்தப்படுகிறது. தனது குழந்தைக்கு பால் மா வாங்கப் பணமில்லாத ஏழைத் தொழிலாளிக்கு ஜனாதிபதி ரம்போவாகவும் பிரபாகரனை வில்லனாக்கியும் பிலிம் காட்டுகிறார்.

‘உலகின் நான்காவது பெரிய இராணுவத்தை துரத்தினனாங்கள்’ ‘மோட்டுச் சிங்களவனுக்கு பாடம் படிப்பிக்கிறோம்’ என்று மாவிலாற்றில் ஆரம்பித்த புலிகளின் இராணுவ அணுகுமுறை அவர்களுக்கே வினையாக வந்த நிற்கிறது. பொங்கு தமிழ் வைத்து யுத்தத்திற்கு அறைகூவிய புலம்பெயர் தொப்புள் கொடிகள் இன்றைக்கு யுத்தத்தை நிறுத்தச் சொல்லி பேச்சுவார்த்தைக்கு அழைக்கச் சொல்லி ஆயிரம் பத்தாயிரம் நூறாயிரம் என்று திரண்டு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவில்லை என புலம்புகின்றனர்.

மறுதலையாக யுத்தத்தை நிறுத்தினால் புலிகள் மீண்டும் தலைதூக்கி விடுவார்கள். வலியோடு வலியாக புலிகளை அழித்துவிட்டு மற்றையவை பற்றிச் சிந்திப்போம் என்று புலியெதிர்ப்பு ஜனநாயகம் புலம்புகிறது. நண்பர் சேனன் இதனை சரியாகவே தனது கட்டுரையில் சுட்டிக்காட்டி உள்ளார். வன்னியில் எஞ்சியவர்கள் பெரும்பான்மையினர் தலித்துக்கள் என்றும் களத்தில் போராடுபவர்களும், தலித்துக்கள் என்றும் மாநாடுகளில் ஓங்கி ஒலித்த குரல்களை இப்போது கேட்க முடியவில்லை. அவர்களும் புலி எதிர்பு ஜனநாயகத்தினுள் மூழ்கிவிட்டனர்.

சமூக ரிதியாக ஒடுக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியவர்களாகவே உள்ளனர். இன்று வன்னியில் சிக்குண்டவர்களில் மிகப் பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களே. வே பிரபாகரன் என்ற அரசியல் தலைமையின் முடிவுகளுக்காக வன்னி மக்களையும் போராளிகளையும் பலி எடுக்கும் இந்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். அதற்காக பெப்ரவரி 27 மற்றும் 13ம் திகதிகளில் யுத்தத்தை நிறுத்தி நிரந்தர அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்ற கோரிகையின் அடிப்படையில் Forum for Peace, Democracy and Permanent Political Solution என்ற அமைப்பு பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்னால் கண்டணப் போராட்டங்களை நடத்தியது. இன்னும் நடத்த உள்ளது.

இதனை மாற்றுக் கருத்துத் தளத்தில் உள்ளவர்களே மேற்கொண்டும் இருந்தனர். ஆனாலும் நடைபெற்ற போராட்டங்களில் ‘மாற்றுக் கருத்து’ப் புலியெதிர்ப்பாளர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. யுத்தத்தை நிறுத்தினால் புலிகள் மீண்டும் பிழைத்துக் கொள்வார்கள் என்று புலியெதிர்ப்பு அணியும் மக்களை வெளியேற்றச் சொல்வதால் புலிகளை அழிக்க முற்படுகிறீர்கள் என்று புலி அதரவு அணியும் இந்தக் கண்டணப் போராட்டத்தை எதிர்த்ததாக ஏற்பாட்டாளர் மனவருத்தத்துடன் தெரிவித்தார். ‘இன்றைக்கு உள்ள நிலையிலும் இவர்கள் மக்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்றால் இவர்கள் என்ன ஜனநாயகம் பேசுகின்றனர்’ என்றும் அவர் நொந்துகொண்டார்.

சர்வதேச நாட்டு அரசுகள் முதல் சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் புலி ஆதரவு – ஜனநாயக அமைப்புகள் வரை தங்களுடைய அரசியல் பின்னணி மற்றும் அரசியல் நலனில் நின்றே வன்னி மக்களின் அவலத்தை பார்க்கின்றனர். இவர்களுக்கு பசிக்கொடுமை ஏற்படுவதில்லை. தண்ணீர்த் தாகம் இல்லை, இவர்களுக்கு அருகில் செல் வந்து வீழ்வதில்லை. இவர்களுக்கு மரண பயம் இல்லை. அதனால் புலத்தில் உள்ள புலி அதரவாளர்கள் தமிழ் மானம் பற்றியும் தன் மானம் பற்றியும் தமிழீழம் பற்றியும் ‘நெஞ்சுரத்துடன்’ பேசுவார்கள்.

அதேபோல் புலத்தில் உள்ள புலிஎதிர்ப்பாளர்களும் இந்த அரசினை நம்ப முடியாது என்று தெரிந்தாலும் யுத்தத்தின் அவசியத்தையும் புலிகள் அழிக்கப்படுவதன் அவசியத்தையும் மிகவும் ‘உறுதியுடனும் தெளிவாகவும்’ பேசுவார்கள். ஏனெனில் இவர்களுக்கும் பசிக்கொடுமை ஏற்படுவதில்லை. தண்ணீர்த் தாகம் இல்லை, இவர்களுக்கு அருகில் செல் வந்து வீழ்வதில்லை. இவர்களுக்கு மரண பயம் இல்லை.

வன்னியில் நடப்பது ஒன்றும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான யுத்தம் அல்ல. நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான யுத்தமல்ல. சரிகளையும் தவறுகளையும் வேறு பிரித்தது ஆராய முடியாத அளவுக்கு மிகவும் சிக்கலான கூர்மையான அரசியல் முரண்பாடு உடையவர்களுக்கிடையே நடைபெறுகின்ற ஈவிரக்கமற்ற யுத்தம். இந்த யுத்தத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகள் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை. ஆனால் அவர்களின் பெயரிலேயே நடைபெறுகின்றது. அந்த மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்படுகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய அரசியல் நடவடிக்கைகளில் தமிழ் மக்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும்.

நேற்று (பெப்ரவரி 27) பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இலங்கை நிலைமை பற்றி எடுத்தக் கூறிய ஜோன் ஹொல்ம்ஸ், ‘எல்ரிரிஈ வன்னி மக்களின் நடமாட்டத்தை இப்பவும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு கட்டுப்படுத்தி உள்ளதாகக் குற்றம்சாட்டி உள்ளார். சிறு சிறு குழுக்களாக வெளியேறுபவர்கள் மீதும் எல்ரிரிஈ துப்பாக்கிப் பிரயோகம் செய்து உள்ளதாகவும்’ அவர் குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கம் பற்றிக் குறிப்பிடுகையில் மென்போக்கை கொண்டிருந்த ஜோன் ஹொல்ம்ஸ் பெருமளவான பொது மக்களின் உயிரிழப்புகளுக்கு அரசாங்கத்தின் தாக்குதல்கள் காரணமாக இருந்தது பற்றி அழுத்தமாக எதனையும் குறிப்பிடவில்லை. பொது மக்களின் உயிரிழப்புகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் எதனையும் வழங்கவில்லை.

‘பொது மக்கள் பாதுகாப்பாக அப்பிரதேசங்களில் இருந்த வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும்’ என்ற மென்மையான வேண்டுகோளே விடுக்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு சண்டையை சற்று நிறுத்தி வைக்கலாம் அல்லது பாதுகாப்பாக மக்கள் வெளியேறுவதற்கான வழி ஒன்றை ஏற்படுத்தலாம் என்றளவில் சில ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார்.

சர்வதேசமே அவதானித்துக் கொண்டிருக்க பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம், புலியழிப்பு யுத்தம் என்ற பெயர்களில் தமிழ் மக்கள் வகைதொயின்றிக் கொல்லப்படுகின்றனர். இக்கொலைகள் பற்றி பல்வேறு தரப்பினரும் தங்கள் வேதனைகளை வெளிப்படுத்தினாலும் அந்த மக்களின் நலனின் அடிப்படையில் இருந்து குரல் கொடுப்பவர்கள் மிகக் குறைவானவர்களாகவே உள்ளனர்.

புலம்பெயர்ந்த புலி அதரவாளர்கள் யுத்தத்தை நிறுத்தச் சொல்லிக் கோருகின்ற அதேநேரம் வன்னி மக்களின் சுதந்திர நடமாட்டத்தை அனுமதிக்கும்படி புலிகளுக்கு அழுத்தங்கள் எதனையும் கொடுக்கவில்லை. வெளியெறுகின்ற மக்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களை கண்டிக்காதது மட்டுமல்ல, அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே இருட்டடிப்புச் செய்ய முற்படுகின்றனர். இலங்கை அரசினால் கொல்லப்பட்டவர்களிலும் பார்க்க புலிகளால் கொல்லப்பட்டவர்கள் மிக மிகச் சிலரே. ஆயினும் எந்த மக்களுக்காகப் போராடுவதாகக் கூறினார்களோ அந்த மக்கள் மீதே ஒடுக்குமுறையையும் துப்பாக்கியையும் பயன்படுத்துவது அடிப்படைத் தவறு. புலிகளுடைய புலம்பெயர்ந்து வாழ்பவர்களுடைய அரசியல் நலன்களுக்கு அப்பால் மரணப் பொறிக்குள் உள்ள மக்களை காப்பாற்றுவதனை இலக்காகக் கொண்ட அரசியல் நடவடிக்கைகள் முடக்கி விடப்பட வேண்டும்.

பாதுகாப்பு கவுன்சிலில் ஜோன் ஹொல்ம்ஸ் உறுப்பு நாட்டுப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கையில் ‘எல்ரிரிஈ யின் நிலைப்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள், மக்களை வெளியேற அனுமதிக்கும்படி எல்ரிரிஈ க்கு அழுத்தம் கொடுக்கும்படி’ கேட்டுக்கொண்டு உள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இழப்பதற்கு நேரமில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள ‘ஜனநாயகவாதிகள்’, ‘மாற்றுக் கருத்தாளர்கள்’, ‘மறுத்தோடிகள்’, ‘முற்போக்காளர்கள்’ அனைவரும் இன்று சர்வதேச ஏகாதிபத்தியங்களின் பாதுகாப்புச் சபை எடுக்கும் அதே நிலைப்பாட்டுக்கே வருகின்றனர். இன்றைய யுத்தத்திற்கு மௌனமாக ஆதரவு வழங்குவதன் மூலம் வன்னி மக்களின் படுகொலைகளையும் மௌனமாக அங்கிகரிக்கின்றனர்.
 
இலங்கை அரசு புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மிகக் குறைந்த இழப்புகளுடன் மேற்கொண்டிருக்க முடியும். இன்றும் இலங்கை அரசினால் வன்னியில் நடைபெறும் மனித அவலத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும். இந்திய அரசும் சர்வதேசமும் கூட இலங்கையை அதற்கு வற்புறுத்தி இருக்க முடியும். ஆனால் இலங்கை அரசு தனது வெற்றியை நிலைநாட்டுவதில் காட்டும் அக்கறையை தமிழ் மக்களின் உயிர்கள் பற்றிக் கவலைப்படவில்லை என்பதே யதார்த்தம். சர்வதேசத்தைப் பொறுத்தவரை இலங்கை ஒரு கேந்திர முக்கியத்தவமான புவியியல் மையத்தில் இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரை பிராந்திய வல்லரசான தனக்கு சவால் விடப்பட்டதற்கு பழிவாங்குகிறது மேலும் இந்தியாவுடைய நலன் இலங்கை அரசு சார்ந்து இருப்பதிலேயே தங்கி உள்ளது. இன்று புலிகளின் (வே பிரபாகரனின்) அரசியல் வறுமைக்கும் அரசியல் தவறுகளுக்கும் குறுகிய இராணுவக் கண்ணோட்டத்திற்கும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் போராளிகளும் மிகப் பெரும் விலையைச் செலுத்துகின்றனர்.

ஆனால் இலங்கை அரசையும் சர்வதேச சமூகத்தையும் பொறுத்தவரை புலிகள் பயங்கரவாதிகள் என்ற முடிவுக்கு ஏற்கனவே வந்துள்ளனர். அப்படியானால் சட்ட ரீதியான அரசுதான் அந்த நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டிய முழுப்பொறுப்பையும் உடையது. அதனைத் தட்டிக்கழிப்பதன் மூலம் இலங்கை அரசும் புலி எதிர்ப்பு அணியும் மறுதலையாக புலிகளைப் பலப்படுத்துகின்றனர். இந்த நச்சுச் சுழற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்காத வரை அண்மைக் காலத்தில் தமிழ் மக்களது அவலம் தொடர்கதையாகும் அச்சம் உள்ளது.

”எல்ரிரிஈ யின் யுத்த நிறுத்தத்தை இலங்கை ஏற்க வேண்டும்” இந்தியா

Pranab_Mukherjeeஎல்ரிரியின் யுத்த நிறுத்தத்தை இலங்கை ஏற்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணர்ப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்து உள்ளார். இச்செய்தியை ஐஏஎன்எஸ் வெளியிட்டு உள்ளது. இவர் ஏற்கனவே விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசு மறுத்திருந்த நிலையில் இந்த வேண்டுகோள் இன்று (பெப்ரவரி 28) மீண்டும் விடுக்கப்பட்டு உள்ளது. எல்ரிரி, இன் இந்த யுத்த நிறுத்த அழைப்பு தங்கள் ஆயுதங்களைப் போடுவதற்கு சற்றுக் குறைவானதாக இருக்கலாம் ஆனாலும் எங்களது நிலைப்பாடு இலங்கை அரசு இந்த யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

யுத்தப்பகுதியில் சிக்குண்டுள்ள மக்களை விடுவிப்பதற்கான பாதுகாப்பான வழியை ஏற்படுத்தி அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான உடனடி வேலைகளை இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசாங்கம் கேட்டுக் கொள்வதாகவும் வெளிநாட்டு அமைச்சர் பிரணர்ப் முகர்ஜி தனது வேண்டுகொளில் குறிப்பிட்டு உள்ளார்.

எல்ரிரிஈ உடனான இந்த யுத்தத்தை இந்தியாவே பின்னின்று நடத்துவதாக பெரும்பாலான இராணுவ மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் இந்தியாவிடம் இருந்து வந்துள்ள இந்த வேண்டுகோள் அரசியல் பலமுடையதா அல்லது சர்வதேச கண்டனங்களுக்காக விடுக்கப்பட்ட கண்துடைப்பு வேண்டுகொளா என்பது இன்னும் சில மணி நேரங்களில் அல்லது நாட்களில் தெரியவரலாம்.

இந்திய வெளிநாட்டு அமைச்சர் பிரணர்ப் முகர்ஜி வன்னி யுத்தத்தில் சிக்குண்டுள்ள 70000 மக்கள் பற்றிய கரிசனையின் அடிப்படையிலேயே இந்த வேண்டுகோளை விடுவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார். எல்ரிரிஈ தங்களது கட்டப்பாட்டுப் பிரதேசத்தில் 300000 மக்கள் உள்ளதாகத் தெரிவித்து வருகின்றனர். யுஎன் உட்பட சர்வதேச அமைப்புகள் யுத்த பிரதேசத்திற்குள் உள்ள மக்களின் எண்ணிக்கை 200000 என்று மதிப்பிடுகிறது. ஆனால் இலங்கை மற்றும் இந்திய அரசுகள் 70000 பேர் மட்டுமே யுத்தப் பிரதேசத்தினுள் சிக்குண்டு உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் மருத்துவக் குழுக்களையும் மருத்துவப் பொருட்களையும் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கியுள்ளதாக இந்தியா அறிவித்து இருந்தது.

‘வன்னியில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை இனப்படுகொலையென வரையறுக்க முடியாது. எல்ரிரிஈ யும் தமிழ் மக்களை கொல்கின்றனர். காயப்படுத்துகின்றனர்.’ மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு : த ஜெயபாலன்

Frances HarrisonCharu Lata Hogg‘வன்னியில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை இனப்படுகொலையென வரையறுக்க முடியாது. எல்ரிரிஈ யும் தமிழ் மக்களை கொல்கின்றனர் காயப்படுத்துகின்றனர். அதற்கு ஆதாரபூர்வமான ஆவணங்கள் உண்டு’ என சாரு லட்டா ஹொக் பெப்ரவரி 24 (நேற்று) லண்டனில் இடம்பெற்ற பொது விவாதம் ஒன்றின் போது தெரிவித்தார். Sri Lanka – a hollow victory? என்ற தலைப்பில் சுயாதீன ஊடகக் கழகமான ‘புரொன்ட்லைன்’ ஏற்பாடு செய்திருந்த பொது உரையாடலின் போதே சாரு லட்டா ஹொக் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பிபிசி சிங்கள சேவைப் பணிப்பாளர் பிரியத் லியனகே இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இவ்வுரையாடலில் இலங்கையில் பிபிசி ஊடகவியலாளராகப் பணியாற்றிய பிரான்ஸஸ் ஹரிசன், தமிழ் ஊடகவியலாளர் பேர்ள் தேவநாயகம், தமிழ் டெமொகிரட்டிக் கொங்கிரஸ் தலைவர் ஆர் ஜெயதேவன் ஆகியோரின் சிற்றுரைகளைத் தொடர்ந்து கேள்விகளுக்கு இடம்கொடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களது உரையில் இலங்கை ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் கடினமான சூழலை விளக்கியதுடன் இலங்கை அரசு மனித உரிமைகளையும் ஊடகங்களின் அடிப்படை உரிமைகளையும் மீறுவதைச் சுட்டிக்காட்டினர்.

ரிச்சட்டி சொய்சாவின் படுகொலை முதல் இதுவரை 37 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டிய பேர்ள் தேவநாயகம், அண்மைய காலங்களில் சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலேயே ஒரளவு பயமற்ற சூழல் இருந்ததாகத் தெரிவித்தார். இன்றைய ஜனாதிபதி மகிந்தவின் ஆட்சி மிகவும் ஆபத்தானதாக இருப்பதாகக் குறிப்பிட்டார். இலங்கை நிலவரம் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் கடைப் பிடிக்கும் போக்கு இலங்கையர்கள் மனிதர்களுக்கு குறைவானவர்கள் என்ற எண்ணத்தில் இயங்குவது போல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்கள் பங்குபற்றும் இந்நிகழ்வில் தான் கலந்துகொண்டதன் ஊடகப்பின்னணியைக் கூறி ஆர் ஜெயதேவன் தன்னுரையை ஆரம்பித்தார். எல்ரிரியும் இலங்கை அரசும் மனித உரிமைகளை மீறுகின்றன என்றும் ஆனால் இலங்கை அரசு என்ற வகையில் பொறுப்புடன் செயறபடுவது அவசியம் என ஆர் ஜெயதேவன் தெரிவித்தார். இலங்கை அரசு அரசியல் ரீதியான தீர்வு ஒன்றை வைத்து பொறுப்புடன் செயற்படாத வரை புலிகளும் இருப்பார்கள் என்று குறிப்பிட்ட ஆர் ஜெயதேவன் இலங்கை விடயத்தில் இந்தியா முக்கிய பாத்திரத்தை வகிப்பதாகவும் கூறினார்.

நிர்மலராஜனின் படுகொலையைச் சுட்டிக்காட்டிய பிரான்ஸஸ் ஹரிசன் இலங்கை ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தனது அனுபவத்தினூடாகப் பகிர்ந்து கொண்டார். இலங்கையில் எண்ணை வளம் இல்லை, அணுகுண்டுகள் இல்லை, இலங்கைக்கு பிராந்திய முக்கியத்துவமும் இல்லாததால் இலங்கைப் பிரச்சினை சர்வதேச ஊடகங்களின் கவனத்திற்கு வருவதில்லை என்றும் பிரான்ஸஸ் ஹரிசன் தெரிவித்தார்.

சர்வதேச ஊடகவியலாளராக ஆசியாவில் கடமையாற்றிய சாரு லட்டா ஹொக் தெற்காசியாவின் அரசியல் பொருளாதார பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக அரசுக்கும் அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கும் விளக்கும் பொறுப்புடையவராக இருந்தவர். தற்போது அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வாளராக உள்ளார். இவருடைய உரையின் அடிப்படையே கேள்வி நேரத்தின் பெரும்பகுதியை எடுத்துக் கொண்டது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச மனிதாபிமானப் பணியாளர்களை வன்னிக்குள் அனுமதிக்காதது, அங்கு நிலவும் உணவு மற்றும் மருந்துத் தட்டுப்பாடுகள் பற்றியெல்லாம் குறிப்பிட்ட சாரு ஹொக், அரசாங்கம் நலன்புரி நிலையங்கள் என்ற பெயரில் அரச கட்டப்பாட்டுப் பகுதிக்குள் வருவோரைத் தடுத்து வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். இந்த யுத்தத்தில் இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரை 2000 பொது மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் 5000 பொது மக்கள் காயமடைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின் போது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சார்பில் கேள்வி எழுப்பிய அர்சுனன் எதிர்வீரசிங்கம் பொஸ்னியா, சூடான் ஆகியவற்றின் உதாரணங்களைக் குறிப்பிட்டு, தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்படும் படுகொலையை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ‘ஏன்? இனப்படுகொலை என்று குறிப்பிடவில்லை’ எனக் கேள்வி எழுப்பினார். இந்நிகழ்வு ஏற்பாடானது முதலே புரொன்ட் லைன் கழகம், பிபிசி, மனித உரிமைகள் கண்காணிகப்பு அமைப்பு ஆகியன இலங்கையில் இடம்பெறும் படுகொலைகளை இனப்படுகொலை எனக் கூற மறுப்பதாக எல்ரிரிஈ க்கு ஆதரவான அமைப்புகள் குற்றம்சாட்டி இருந்தன. அதன் தொடர்ச்சி புரொன்ட்லை ஏற்பாடு செய்த நிகழ்விலும் முக்கிய இடத்தைப் பெற்றது.

அர்ச்சுனன் எதிர்விரசிங்கத்துக்குப் பதிலளித்த சாரு ஹொக் ”நான் 2000 பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் 5000 பொது மக்கள் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டது இலங்கை இராணுவத்தினால் மட்டும் ஏற்பட்டது அல்ல. எல்ரிரிஈ யும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தி தமிழ் மக்களைக் கொன்றுள்ளனர். காயப்படுத்தி உள்ளனர். இந்நிலைக்கு இரு தரப்புமே காரணம். ஆகையால் இதனை ஒரு இனப்படுகொலை என்று வரையறுக்க முடியாது” எனத் தெரிவித்தார். சாரு ஹொக்கின் இந்தப் பதில் அங்கு வந்திருந்த எல்ரிரிஈ ஆதரவு அமைப்பினருக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது.

அடுத்து கேள்வி எழுப்பிய நிமலன் சீவரத்தினம், ”தமிழ் மக்கள் தான் புலிகள். புலிகள்தான் தமிழ் மக்கள். மக்கள் 100 000 பேர் திரண்டு புலிகளை ஆதரிக்கிறார்கள். அவர்கள் இனப்படுகொலை என்று சொல்கிறார்கள்.” என்று கூறி, ”நீங்கள் சொல்வது சரியா? நாங்கள் சொல்வது சரியா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சாரு ஹொக், ”100 000 பேர் வந்து சொன்னால் எதுவும் உண்மையாகிவிடாது. அதற்கு ஆதாரங்கள் வேண்டும். சர்வதேச விதிமுறைகள் இருக்கிறது. மனித உரிமைகள் அமைப்பு யுத்தத்தில் காயப்பட்டு வந்தவர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் பெற்ற வாக்கு மூலங்களின் அடிப்படையிலேயே இதனைக் குறிப்பிடுகிறோம். நீங்கள் அந்த அறிக்கையைப் (War on the Displaced – Sri Lankan Army and LTTE Abuses against Civilians in the Vanni : http://www.hrw.org/sites/default/files/reports/srilanka0209web_0.pdf ) படியுங்கள்” என்று குறிப்பிட்டார்.

இந்த இனப்படுகொலை பற்றிய விவாதம் மீண்டும் மீண்டும் எழுந்தது. ரிஆர்ஓ, பிரிஎப், ரமிழ்ஸ் எகைய்ன்ட்ஸ்ட் ஜினோசைட், ரிவைஓ, தமிழ் பள்ளிகளின் கூட்டமைப்பு என வேறுவேறு அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்வதாகக் குறிப்பிட்டு கருத்து வெளியிட்டவர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வாளர் சாரு ஹொக்கைத் தனிமைப்படுத்தி அவமதிப்புச் செய்ய முயன்றனர். 30 பள்ளிகள் தங்களுக்குக் கீழ் இயங்குவதாகக் குறிப்பிட்ட ஒருவர் சாரு ஹொக்கிடம் ‘நீர் எப்படி வேலை எடுத்தீர்’ என்று கேள்வி எழுப்பினார். இன்னுமொருவர் ‘முட்டாள்தனமானது’ என்று குறிப்பிட்டடார். மற்றுமொருவர் ‘உங்கள் கைகளில் இரத்தக்கறையுள்ளது அதனை முதலில் கழுவுங்கள்’ என்றார். இவ்வாறு விவாதம் எல்ரிரிஈ ஆதரவு வட்டத்திற்கு உள்ளேயே முடங்கியது. அந்நிகழ்வின் ஓரிடத்தில் பிரான்ஸஸ் ஹரிசன் தனக்கு வந்த மிரட்டல்கள் அவமதிப்புகள் பற்றி குறிப்பிட்டார். தன்னை றோ ஏஜென்ட் என்றவர்கள் பலதையும் கூறியதாக அவர் தெரிவித்தார்.

இடையிடையே இந்நிகழ்வை மீண்டும் பொது விவாதத்திற்கு பிரியத் லியனகே கொண்டு வந்த பொழுது ஏனைய சில கேள்விகளும் எழுப்பப்பட்டது. ‘இந்த யுத்தம் எல்ரிரிஈ இன் முடிவா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரான்ஸஸ் ஹரிசன், ‘எல்ரிரிஈ நிலங்களை இழந்துள்ளார்கள். மிகக் குறுகிய நிலப்பரப்பிலேயே உள்ளனர். ஆனால் ஒரு உறுதியான இராணுவமாகச் செயற்பட்ட அவர்களுடைய கனரக ஆயுதங்கள் எதனையும் இலங்கை இராணுவம் கைப்பற்றவில்லை. அவர்களிடம் அதி விசேட கடற்படைக் கலங்களும் இருந்தது. அவையும் கைப்பற்றப்படவில்லை. புலிகளை அவ்வளவு இலகுவாக அழித்துவிட முடியாது அவர்கள் வேறு வடிவத்தில் வெளிப்படுவார்கள்’ என்ற வகையில் தனது கருத்தை வெளியிட்டார்.

இதே கருத்தை வெளியிட்ட பிரியத் லியனகே அரசாங்கம் ஓடு பாதைகளைக் கைப்பற்றியதாகக் கூறிய பின்னரும் வான் புலிகள் கொழும்பிற்கு வந்துள்ளனர். அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனுடன் பேசிய போது அவர்கள் வழமைபோல் முழுமையான மறுப்பையே வழங்குவதாகக் கூறி உண்மை நிலையைக் கணிப்பது கடினமானதாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இவற்றைவிடவும் சில கேள்விகள் எழுப்பப்பட்டது. இரு மணி நேரம்வரை நிகழ்வு நீடித்தது.