ஜெயபாலன் த

ஜெயபாலன் த

‘இந்திய அரசே! உன் கைகளிலும் இரத்தம்!’ இந்தியத் தூதரகங்கள் முன் ஆர்ப்பாட்டம் – போராட்டங்கள் தொடர்கிறது. : த ஜெயபாலன் & வி அருட்செல்வன்

இலங்கையில் தொடரும் உள்நாட்டு யுத்தத்தில் இந்தியாவின் பங்களிப்புக்கு எதிர்ப்பும் தெரிவிக்கும் வகையில் உலகின் முக்கிய நகரங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களிற்கு முன்னால் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடைபெற்றது. ஏப்ரல் 8 இந்திய அரசின் யுத்த ஒத்துழைப்பிற்கு எதிரான நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு இப்போராட்டங்களை ‘தமிழர்கள் படுகொலை செய்வதை நிறுத்து’ என்ற போராட்டக்குழு ஏற்பாடு செய்திருந்தது. தங்களது அரசின் இந்த யுத்த ஒத்தழைப்பிற்கு எதிராக இந்திய மக்களும் சென்னையிலும் பெங்களுரிலும் புதுடில்லியிலும் போராட்டங்களை நடத்தி இருந்தனர். மான்ஹட்டன், லண்டன், ரெல்அவிவ், சுவீடன் ஆகிய நகரங்களில் ஒன்றினைக்கப்பட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.

லண்டனில் இந்தியா ஹவுஸிற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ‘தமிழர்கள் படுகொலை செய்வதை நிறுத்து’ போராட்ட அமைப்பின் லண்டன் கிளை ஏற்பாடு செய்த இப்போராட்டத்தில் அதன் சர்வதேச இணைப்பாளர் சேனன் இலங்கை யுத்தத்தில் இந்திய அரசின் ஒத்துழைப்புப் பற்றி விளக்கினார். இப்பொராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த பலரும் தங்கள் கருத்தக்களை வெளியிடவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. மாலை 4:00 மணிமுதல் 5:30 வரை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்தியா ஹவுஸ் அமைந்திருந்த சதுக்கத்தைச் சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பிய வண்ணம் சுற்றி வந்தனர்.

அப்போது பிபிசி செய்தி நிறுவனம் அமைந்திருந்த புஸ் ஹவுஸை ஆர்ப்பாட்ட அணி அண்மித்த போது ‘பிபிசி நீங்கள் எங்கே போனீர்கள்’ என உரக்கக் கோசம் எழுப்பப்பட்டது.

தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்து! இந்திய அரசே! உன் கைகளிலும் இரத்தம்!! மகிந்த அரசுக்கு ஒரு ரூபாயையோ ஒரு குண்டையோ வழங்காதே!!! போன்ற கோசங்கள் ஓங்கி ஒலிக்கப்பட்டது.

புலி ஆதரவு அமைப்புகள் தமிழ் மக்களை மையப்படுத்தி போராட்டங்களை புலிகளது நலன் சார்ந்து மட்டும் முன்னெடுக்கையில் மக்கள் நலன்களையும் முன்னிலைப்படுத்தி சிறிய அளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக லண்டனிலும் மற்றும் முக்கிய நகரங்களிலும் Committe for Workers International அமைப்பினரும் பாரிஸில் சமூகப்பாதுகாப்பு அமைப்பினரும் (Comité de Défense Social) தமிழ் மக்களுக்கு அப்பால் பெரும்பான்மைச் சமூகங்களை இணைத்து போராட்டங்களை முன்னெடுப்பது குறிப்பிடத்தக்கது. இப்போராட்டங்களில் பல இளவயதினர்களும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

இவற்றுடன் லண்டனில் வெஸ்ற் மினிஸ்ரர் பாராளுமன்றம் முன்னாக நடைபெறு போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்கிறது.

london-parliment-meeting2.jpgபிரிட்டன், அமெரிக்காவில் 7 பேர் சாகும்வரை உண்ணாவிரதம்

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரியும் அங்கு போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்தக்கோரியும் இலண்டனில் ஈழத்தமிழர்கள் இருவர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள அதே நேரம், அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரித்தானியாவில் தமிழர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்திவரும்,இலண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த இளைஞர்கள் இருவரும் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாகவுள்ள அமெரிக்காவின் ஐ.நா.வுக்கான தூதுவர் சூசன் றைசின் அலுவலகத்திற்கு முன்பாக ஐந்து தமிழர்கள் 24 மணி நேர நீராகாமின்றி உண்ணா விரதப் போராட்டத்தை நடத்தினர். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட, நீராகாரமின்றிய இநத உண்ணா விரதப் போராட்டம் மாலை 5 மணிவரை நடத்தப்பட்டது.

இதேபோன்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதுவர் அலுவலகத்திற்கு முன்பாகவும் அரசாங்கத்தின் பயங்கரவாதத்திற்கு இந்தியா துணை போகாது ஈழத்தமிழர்களை காப்பாற்ற வேண்டுமென வலியுறுத்தி அமைதியான போராட்டத்தினை இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஐ.நா.வுக்கான மெக்சிக்கோ தூதுவர் அலுவலகத்திற்கு முன்பாக இலங்கை விவகாரத்தை ஐ.நா. சபை வரை கொண்டு வந்ததற்காக மெக்சிக்கோ அரசுக்கு நன்றி தெரிவிக்கும் பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன்

Pirabakaran_V2005 டிசம்பரில் பதவிக்கு வந்த ராஜபக்ச அரசால் ஒஸ்லோவில் இணைத் தலைமை நாடுகளுக்கு கையளிக்கப்பட்ட 5 ஆண்டுகளில் புலிகளை துடைத்தழிக்கும் திட்டமே புரஜக்ற் பிக்கன். பாதுகாப்பு அமைச்சுச் செயலர் கோதபாய ராஜபக்சவாலும் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவாலும் வடிவமைக்கப்பட்ட இந்த இராணுவத் திட்டத்தின் மூன்றாவது வருட நடவடிக்கை இவ்வாண்டு ஏப்ரல் 30ல் முடிவுக்கு வருகிறது. இந்த புரஜக்ற் பீக்கன் திட்டத்தின் பின்னால் இந்தியாவின் பங்களிப்பு இல்லையென்று சொல்வது அர்த்தமற்றவாதம்.

ஆனால் இவ்வாறான ஒரு திட்டம் இலங்கை அரசால் இணைத்தலைமை நாடுகளுக்குவழங்கப்பட்டு அவர்களின் ஆசீர்வாதம் பெறப்பட்டதா என பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரிடம் கேட்டபோது அவ்வாறான ஒரு திட்டம் பற்றி தான் அறிந்திருக்கவில்லை என அவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மகிந்த அரசு எவ்வித அரசியல் தலையீடும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்பதையும் இராணுவத்திற்கான முழுமையான ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்தியது. பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்சவும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் முடிவுகளை சுதந்திரமாக எடுக்க முடிந்தது. இந்தியாவின் இராணுவ ஒத்துழைப்பும் அவர்களுக்கு இருந்தது.

படையினரே எதிர்பாராத வகையில் ஏப்ரல் 5ல் புதுக்குடியிருப்புப் பகுதியை சுற்றி வளைத்ததில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனும் அவரது மகன் சார்ஸ் அன்ரனியும் சுற்றி வளைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கசிந்துள்ளன. படையினரின் வியூகத்தை உடைத்து தலைமையைக் காப்பாற்றும் கடுமையான மோதலில் புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் போராளிகளும் கொல்லப்பட்டு தலைமை அச்சுற்றி வளைப்பை உடைத்து வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அக்குறுகிய சுற்றி வளைப்பில் இருந்து வெளியேறிய போதும் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு உள்ள முல்லைத்தீவு பகுதியின் இராணுவ அரணை உடைத்து வெளியேற முடியவில்லை என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் முக்கிய உறுப்பினர்களை உயிருடன் கைது செய்ய இராணுவத்தினர் மயக்க வாயுவை பயன்படுத்தியதாகவும் அதே தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 5ல் இடம்பெற்ற மோதலில் இரு தரப்பிலும் பலத்த இழப்புகள் ஏற்பட்டது. ஆயினும் புலிகளின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டது மட்டுமல்ல அவர்களின் உடல்கள் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டும் உள்ளது. இவர்கள் வருமாறு அடையாளம் காணப்பட்டு உள்ளனர். புலிகளின் பெண்கள் பிரிவின் மாலதி படையணியின் தலைவரான விதுஷாவும், பிரதித் தலைவரான துர்காவும்,  நாகேஷ், கடாபி மற்றும் தீபன் ஆகிய மூன்று முக்கிய தலைவர்களும் புலிகளின் பிராந்திய பொறுப் பாளர்கள் ஆவர். கடாபி, பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலருமாவார். மணிவண்ணன் புலிகளின் ஆட்டிலறிப்பிரிவுத் தலைவராவார்.

இந்த பாரிய இழப்புகளை வெளியிடுவது உளவியல் ரீதியான பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதால் புலிகள் இந்த முக்கிய தளபதிகளின் இழப்புகள் பற்றி மௌனமாகவே உள்ளனர். புலிகளின் ஆதரவு இணையத் தளமான தமிழ்நெற்றுக்கு சவாலாக உருவாக்கப்பட்ட ‘டிபென்ஸ் எல்கே’ தற்போதைய யுத்தம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் வெளியிடும் ஊடகமாக மாறியுள்ளது. புலிகளின் ஆதரவாளர்கள் உட்பட தமிழ்நெற் பார்ப்பவர்களிலும் பார்க்க டிபென்ஸ் எல்கே பார்த்து யுத்த நிலவரத்தை அறிந்துகொள்பவர்கள் அதிகரித்து உள்ளனர். அதனால் புலிகள் மறைக்க விரும்பும் செய்திகளும் ஆதார பூர்வமாக அங்கு வெளியிடப்படுகிறது. ஒளிவிச்சு, தமிழ்நெற் எல்லாவற்றையும் டிபன்ஸ் எல்கே உங்வாங்கிக் கொண்டுவிட்டது.

புதுக்குடியிருப்பில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து நேற்று மாலை (ஏப்ரல் 5ல்) லண்டனில் அவசர அவசரமாகக் கூடிய புலிகளின் முக்கிய ஆதரவாளர்கள் சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர். அதன் ஒரு கட்டமாக இன்று பிரித்தானியாவின் வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் அடுத்த சில தினங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரு தீவிர ஆதரவாளர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். காவல்துறையினர் சுமுகமாகவே நடந்து கொள்வதாகவும் ஆர்ப்பாட்டம் அமைதியாக இடம்பெறுவதாகவும் அவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

புரஜக்ற் பீக்கன் திட்டத்திற்கு ஆரம்பத்தில் இணைத் தலைமை நாடுகள் அச்சத்துடனேயே தங்கள் ஆதரவை வழங்கி இருந்தனர். குறித்த காலப்பகுதியில் ஒவ்வொரு இலக்கும் அடையப்பட வேண்டும் என்பதை இணைத்தலைமை நாடுகள் வலியுறுத்தி இருந்தன. இத்திட்டத்தின் முதலாவது ஆண்டின் வெற்றி இணைத் தலைமை நாடுகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது.

புரஜக்ற் பீக்கன் இராணுவத் திட்டப்படி புலிகளின் கரையோரக் கட்டுப்பாட்டுப் பகுதி 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றை ஒவ்வொன்றாகக் கைப்பற்ற தீர்மானிக்கப்பட்டது. அதன் படி ஒவ்வொரு பிரிவையும் கைப்பற்ற இலங்கை அரசு 12 மாதங்களாக மூன்று ஆண்டுகளுக்குள் புலிகளின் நிலப் பரப்பைக் கைப்பற்ற திட்டம் இட்டது.

01 மே 2006 – 30 ஏப்ரல் 2007 திருகோணமலையின் சம்பூர் முதல் மட்டக்களப்பின் பனிச்சங்கேணி வரையான கiயோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பகுதிகளையும் கைப்பற்றுவது.
01 மே 2007 – 30 ஏப்ரல் 2008 மன்னார் முதல் பூனேரியன் வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பரப்பையும் கைப்பற்றுவது.
01 மே 2008 – 30 ஏப்ரல் 2009 ஆனையிறவு முதல் கொக்குத்தொடுவாய் வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பகுதியையும் கைப்பற்றுவது.

புலிகளின் கட்டுப்பாட்டை கைப்பற்றும் இந்த திட்டங்களின் படி புலிகளுக்கான ஆயுதங்கள் தரையிறக்கப்படும் விநியோக வழிகளை கட்டுப்படுத்த புரஜகற் பீக்கன் திட்டமிட்டது. அதன்படி அம்பாறை, சிலாவத்துறை, புல்மோட்டை மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகள் இந்த மூன்றாண்டு திட்டத்தில் கைப்பற்றுவது முக்கிய இலக்குகளாக அமைந்தது.

01 மே 2009 – 30 ஏப்ரல் 2011 காலப் பகுதி புலிகளை களையெடுக்கும் காலப் பகுதியாக அமையும். தங்களுக்கான விநியோகங்கள் இல்லாத நிலையில் வன்னி காடுகளுக்குள் உள்ள புலிகளை களையெடுக்கும் காலப் பகுதியாக இது அமையும். ஏப்ரல் 2011க்கு அண்மையாகவே மகிந்த ராஜபக்ச அரசின் முதலாவது ஆட்சிக்காலம் நிறைவு பெற்று பொதுத் தேர்தல் இடம்பெற வேண்டிய காலப்பகுதியாகும்.

01 மே 2006 – 30 ஏப்ரல் 2007 வரையான முதலாவது ஆண்டு காலப்பகுதி இலங்கை அரசுக்கு மிகுந்த வெற்றியை ஏற்படுத்தியது. சம்பூரில் 25 ஏப்ரல் முதலாவது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பகுதி முழுமையும் 30 ஏப்ரல் 2007ல் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இணைத் தலைமை நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் சில அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கை அரசைப் பாராட்டின. தூதரகங்கள் இராணுவ வெற்றிக்கு பாராட்டுச் செய்திகளை வெளியிட்டன. இந்த வெற்றியானது புரஜகற் பீக்கன் திட்டத்திற்கான ஆதரவை மேலும் பலப்படுத்தியது.

முதற்கட்டத்தை முடித்துக் கொண்ட புரஜக்ற் பீக்கன் 2வது கட்டம் மன்னார் – வவுனியா முனையில் 25 ஏப்ரல் 2007ல் ஆரம்பமாகியது. 24 ஏப்ரல் 2008ல் மது தேவாலயப் பகுதியையும் 08 மே 2008ல் அடம்பனையும் இராணுவம் கைப்பற்றியது. புலிகள் பெரும்பாலும் மக்களுடன் பின்வாங்கினர்.

புரஜக்ற் பீக்கன் மூன்றாவதும் இறுதியான புலிகளின் நிலப்பரப்பைக் கைப்பற்றும் யுத்தத்தில் ஜனவரி 3ல் புலிகளின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதுவரை சர்வதேச அபிப்பிராயங்கள் அனைத்தையும் இலங்கை அரசு தக்க வைத்துக் கொண்டது. குறைந்தபட்ச உயிரிழப்புகளே ஜனவரி பிற்பகுதி வரையான புரஜக்ற் பீக்கன் நடவடிக்கைகளில் ஏற்பட்டது. புலிகள் மக்களையும் சாய்த்துக் கொண்டு முல்லைத் தீவிற்குள் பின்வாங்கிச் சென்று ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் ஒடுக்கப்பட்டனர். ஜனவரி பிற்பகுதி முதல் இந்த குறுகிய நிலப்பரப்பைக் கைப்பற்ற இராணுவம் தீவிரமான தாக்குதலை நடத்தியது.

ஜனவரி பிற்பகுதி முதல் தினமும் 40 – 100 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஒரு புறம் இராணுவம் தாக்குதலை நடத்த மறுபுறம் இராணுவத் தாக்குதலில் இருந்து தப்பி ஓடுபவர்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். . பிடித்து வந்து செம்மையாக அடித்து முதுகுத் தொலை உரித்தனர். நாங்கள் பாதுகாப்பு வழங்குவோம் என்று பலவந்தமாக அழைத்து வந்த மக்கள் புலிகளுக்கு மனிதக் கேடயங்களாக மாற்றப்பட்டனர். புலிகள் தங்கள் நன்றிக்கடனை செம்மையாகச் செலுத்தினர்.

இலங்கை அரசாங்கத்தின் மீதும் புலிகளின் மீதும் சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மீது திரும்பும் சர்வதேச அழுத்தங்கள் புலிகளின் நடவடிக்கைகளால் பெரிதும் சமப்படுத்தப்பட்டு இலங்கை அரசு ஒப்பீட்டளவில் சர்வதேச அங்கிகாரத்துடன் தனது இராணுவ நடவடிக்கையைத் தொடர்கிறது.

தற்போது புலிகளின் பலத்த கோட்டையாக விளங்கிய புதுக்குடியிருப்பும் படைகளின் வசம் வீழ்ந்து உள்ளது. இரண்டு மூன்று கிராமங்கள் உள்ளடங்கிய 20க்கும் குறைவான கிலோமிற்றர் பரப்பளவே தற்போது புலிகளிடம் எஞ்சியுள்ளது. புரஜக்ற் பீக்கன் திட்டத்தின் மூன்றாவது கட்டம் இந்தக் கடைசித் துண்டு நிலமும் இலங்கை அரச படைகளின் கட்டுப்பாட்டிற்குள் வருவதுடன் முற்றுப்பெறும். இது இன்னும் சில வாரங்களுக்குள் 30 ஏப்ரல் 2009ற்குள் சாத்தியமாகும் என்பது பெரும்பாலும் உறுதியாகி உள்ளது. இதன் போது பெப்ரவரி 2009ல் நோர்வே உட்பட இணைத் தலைமை நாடுகள் புலிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்திருந்தது. இவை புரஜக்ற் பீக்கன் நடவடிக்கைக்கு இணைத் தலைமை நாடுகள் அழித்த அங்கீகாரத்தை வெளிப்படையாகக் காட்டி உள்ளது.

ஆனால் அடுத்த சில தினங்கள் மிகவும் மோசமான அழிவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் வே பிரபாகரன் உட்பட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைமைகள் இப்பகுதிகளில் சிக்குண்டு இருப்பதால் நடக்கப் போகும் யுத்தத்தில் மிகப்பெரும் மனித அவலம் ஏற்படும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் இந்த யுத்தத்தை வென்றுள்ள இலங்கை அரசு எந்த ஒரு சமாதான முயற்சிக்கும் பேச்சுவார்த்தைக்கும் உடன்படாது என்பது தெட்டத் தெளிவாகி உள்ளது. புலிகளை அழிப்பதில் தமிழ் மக்கள் கொல்லப்படுவது சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பைக் கொண்டு வரும் என்பதைத் தவிர இலங்கை அரசு அப்பாவித் தமிழ் மக்களைப் பலி கொடுத்து தனது இலக்கை அடைவதில் எவ்வித தயக்கமும் காட்டாது. புலிகளைப் பொறுத்தவரை தமது இருப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசுக்கு ஒப்பாக தமிழ் மக்களை பலிகொடுப்பதில் தாங்கள் தயங்க மாட்டோம் என்பதை ஏற்கனவே செயலிலும் காட்டி உள்ளார்கள்.

ஜனவரி இறுதி முதல் மரண வதைக்குள் சிக்குண்டுள்ள வன்னி மக்களுக்கு அடுத்து வரும் நாட்கள் மிக மிகக் கொடுமையானதாக அமைய உள்ளது. தமிழ் தேசியத் தலைமைகளினது குறிப்பாக புலிகளினது முட்டாள்தனமான அரசியல் முடிவுகளுக்கும் அதற்கு தலையாட்டு பொம்மைகள் போன்று தலையைத் தலையை ஆட்டிய ஊடகங்களினதும் புலம்பெயர் உறவுகளினதும் தவறுகளுக்கும் வன்னி மக்கள் அதி உச்ச விலையைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் செலுத்தப் போகிறார்கள். புலிகளின் கட்டுப்பாட்டில் சிக்குண்ட இளம்பராயத்தினர் குறுகிய கட்டாய பயிற்சியின் பின் களமுனைக்கு அனுப்பப்பட்டு பெரும்பாலும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று அஞ்சப்படுகிறது. ஒரு தலைமுறையே இழக்கப்பட்டுள்ளது.

புலிகளின் தலைமை மிக நெருக்கடியான இராணுவ நிலைக்குள் சிக்குண்டு உள்ளது. அவர்களுக்கு உயிராபத்து ஏற்படுத்தும் தாக்குதல்கள் அவர்களைச் சுற்றியுள்ள பல நூற்றுக் கணக்கான ஆயிரக்கணக்கான வன்னி மக்களை உயிரிழக்கச் செய்யும். மிகப்பெரிய மனித அவலம் ஏற்படும். அதுமட்டுமல்ல ஏற்கனவே வன்னிப் பகுதியை விட்டு வெளியேறி எல்லையோரக் கிராமங்களில் உள்ள புலிகள் பழிவாங்கும் நடவடிக்கையாக சிங்கள கிராமங்களைத் தாக்கலாம் என்ற அச்சமும் பலமாக உள்ளது. இல்கையில் சுனாமி ஏற்படுத்திய பேரவலத்திலும் பார்க்க இலங்கை இராணுவமும் புலிகளும் ஏற்படுத்தப் போகும் மனிதப் பேரவலம் எண்ணிக்கையிலும் அதன் கோரத்திலும் மிக மோசமாக அமையலாம். இது தெற்கில் ஒரு இனக் கலவரத்தையும் தோற்றுவிக்கலாம்.

இந்த அவலங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான காலங்கள் இழக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. இனவாத அலையிலும் புலி ஆதரவு – புலி எதிர்ப்பு அலையிலும் மனிதம் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

புரஜக்ற் பீக்கன் திட்டத்தை புலிகளும் நன்கு அறிந்தே இருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்திய ஆதரவுடன் இலங்கை அரசு புலிகள் மீது இராணுவ நடவடிக்கையொன்றை மேற்கொள்ள இருப்பதை கிழக்கு விடுவிக்கப்பட்டதன் பின்னர் அறிந்தே இருந்தனர். ஆயினும் கடந்த காலங்களில் மேற்கொண்ட அரசியல் மற்றும் இராணுவத் தவறுகள் அவர்களை அவர்களது முடிவுக்கே துரத்தி உள்ளது. புலிகள் தங்களைச் சூழ நண்பர்களைக் கொண்டிருக்காவிட்டாலும் எதிரிகளை உருவாக்காது இருக்கவில்லை. ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமாக அல்லாமல் ஒரு இராணுவக் குழுவாக செயற்பட்டு தமிழ் மக்களது நியாயமான அரசியல் போராட்டத்தையும் இன்று சிதைத்து தன்னழிவை நோக்கித் தள்ளப்பட்டு உள்ளனர். அதற்கான விலையை ஒட்டுமொத்த இலங்கைத் தமிழ் சமூகமும் செலுத்த வேண்டியுள்ளது.

தோழர் பரா நினைவு ஒன்றுகூடல் : த ஜெயபாலன்

Tholar_Para_05Apr09பணிதல் மறுத்தவர் தோழர் பரா என்ற தலைப்பில் நினைவு ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏப்ரல் 5ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள இந்நிகழ்வு லேய்டன்ஸ்ரோன் குவாக்கர்ஸ் ஹவுஸில் மாலை இரண்டு மணிமுதல் மாலை ஒன்பது மணிவரை நடைபெறவுள்ளது.

தோழர் பரா என அன்புடன் அறியப்படும் குமாரசாமி பரராஜசிங்கம் 2007 டிசம்பர் 16ல் உயிரிழந்தார். புலம் பெயர்ந்த நாடுகளில் இலக்கிய சந்திப்புகளின் முன்னோடியும் சிந்தனை சஞ்சிகையின் ஆசிரியரும் இடதுசாரி அரசியலாளருமான இவர் தனது மரணத்தின் பின்னும் பலரது நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

அவரது மரணத்தை அடுத்து பரிஸ் ‘அம்மா’ மனோ தேசம்நெற் இல் பதிவு செய்த அஞ்சலிக் குறிப்பில் தோழர் பராவை இவ்வாறு நினைவு கூறுகிறார் ”பொதுவாழ்விற்காக தன்வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்த ஒரு மென்மையான மனிதர். தனது கடைசிக்காலம் வரை தன்து சிந்தனையை நிறுத்தாது தொடர்ந்து வந்தவர். சகல ஜனநாயக போர்க்குரல்களிலும் ஆர்வ்த்தோடு உற்சாகமாய் கலந்து தனது பங்களிப்பை வழங்கி வந்தவர். பெறுமதி மிக்க ஒரு மனிதரின் இழப்பு கவலையைத் தருகிறது.”

தோழர் பராவின் மறைவைத் தொடர்ந்து தேசம்நெற்றில் பதிவு செய்யப்பட்ட ஆக்கங்களும் அஞ்சலிகளும் விமர்சனங்களும்:

தோழர் பரா என்ற சிந்தனையானுக்கு எங்கள் இறுதி மரியாதை! :சர்வதேச பிராந்தியங்களின் ஒன்றியம்

இரயாகரன் – அவரது புனைவுகளும் அவர் கட்டமைக்கும் விம்பமும் :த ஜெயபாலன்

ஓரு தலித்திற்கு வாழ்வு கொடுத்த ஆதிக்க சாதியின் உண்மைக்கதை :ஜீவமுரளி

வழமையான? அங்கீகரித்தல்? பெண் கொடுத்தல்? தாமதமாகச் சில குறிப்புகள் :சந்துஸ்

இலக்கிய சந்திப்பு – சில கிறுக்கல்கள் : துடைப்பான்

சுதந்திர சிந்தனையாளர்களை உள்ளடக்கிய சர்வதேச செயலூக்க அரங்கமொன்றை அமைப்பதற்கான சாத்தியப்பாட்டை நோக்கி : அசோக்

நாளை- மார்ச் 29- நான்காவது குறும்படக் காட்சி – ‘லண்டன் மாப்பிள்ளை’

Vili Clipதேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் இணைந்து நடாத்தும் 4வது திரையிடு நிகழ்வு மார்ச் 29 அன்று சறேயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாலை 5:30 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில் விழி, ஆய்சா ஜன்னலூடாக ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது. (திரைப்பட நிகழ்வு : நானும் நீங்களும் விழித்தெழுதலும் : யமுனா ராஜேந்திரன்) திரையிடலைத் தொடர்ந்து சிறு கலந்துரையாடலும் இடம்பெறும். காட்சி விபரங்கள் கீழே.

பெப்ரவரி 21 அன்று அதே இடத்தில் சறேயில் இடம்பெற்ற திரையிடலில் நூறு பேர்வரை கலந்து கொண்டதுடன் கலந்துரையாடலிலும் தங்களை ஈடுபடுத்தி இருந்தனர். இவ்வாறான முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதும் அவர்களுடைய கருத்துக்களில் வெளிப்பட்டு இருந்தது.

வழமைக்கு மாறாக அந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் புதிய பார்வையாளர்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் லண்டனில் குறிப்பாக கிழக்கு லண்டனில் மட்டும் திரையிடப்பட்டு வந்த குறும்படக் காட்சிகள் எதிர்வரும் காலங்களில் லண்டனின் ஏனைய பகுதிகளிலும் திரையிடப்பட உள்ளது.

கடந்த ஆண்டு முதல் தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைப்படக் கழகமும் ஏற்பாடு செய்துவரும் குறும் திரைப்பட முயற்சிகளின் 4வது காட்சி நிகழ்வாக இது அமைகிறது. புலம்பெயர் சினிமாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் மற்றுமொரு குறுந்திரைப்படக் காட்சி இதுவாகும்.

காட்சியைத் தொடர்ந்து இராப்போசனம் வழங்க உள்ளதால் 12 வயதிற்க்கு உட்பட்ட சிறுவர் தவிர்த்து ஏனையோரிடம் £3 கட்டணம் அறவிடப்படும்.
 
தேசம்நெற் ஈழநண்பர்கள் திரைப்படக் கழகத்தின் காட்சியிடலில் உங்கள் படைப்புகளையும் காட்சிப்படுத்தி கலந்துரையாடலை மேற்கொள்ள விரும்புபவர்கள் தேசம்நெற்றுடன் தொடர்பு கொள்ளவும்.

London_Maappillaiமேலும் ஈழத்து சினிமா படைப்புகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஆவணக்காப்பாளரும் நூலகவியலாளருமான என் செல்வராஜா ஈடுபட்டு உள்ளார். உங்கள் படைப்புகளையும் ஆவணப்படுத்திக் கொள்ள தேசம்நெற்றுடன் தொடர்புகொள்ளவும்.

புலம்பெயர் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஆர் புதியவன் மாற்று கனவுகள் நிஜமானால் மண் ஆகியவற்றைத் தொடர்ந்து லண்டன் மாப்பிளை என்ற மற்றுமொரு படத்தை இயக்குகிறார். லண்டனில் படமாக்கப்படும் இம் முழுநீளப்படம் ஆர் புதியவனின் நகைச்சுவை இயல்பை அடிப்படையாகக் கொண்டு இயக்கபட்டு வருகிறது. ஜீட் ரட்ணசிங்கத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த நகைச்சுவைச் சினிமாவுக்கான ஒளிப்பதிவை ரியாஸ்கானும் படத்தொகுப்பை சுரேஸ் ஆர்ஸ்ம் இசையை பாலாஜியும் மேற்கொண்டு உள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ளது. விரைவில் இது திரைக்கு வழவுள்ளது.

Vili Clipகாட்சி விபரங்கள்:

5.30 pm on 29th March 2009.

The Corner house
116 Douglas Road
Surbiton
Surrey
KT6 7SB

மாநாடுகள் முல்லை அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? : த ஜெயபாலன்

Wanni_Tragedy1.

இந்தத் தலைப்பை இட்டுக் கொண்டு இருக்கையில் வந்த தொலைபேசி அழைப்பு, எனது மனைவியின் மைத்துனியும் அவரது மூன்று குழந்தைகளும் நேற்று (26 மார்ச்) நடந்த செல்வீச்சில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது. பிற்பகல் 3 மணியளவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல்களில் 20 பேர் உயிரிழந்தனர். புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை அருகே இடம்பெற்ற இத்தாக்குதலிலேயே இத்தாயும் மூன்று குழந்தைகளும் உயிரிழந்தனர். தனது மனைவியையும் குழந்தைகளையும் பறிகொடுத்த இளம் தந்தை விடுதலைப் புலிகளின் ஒரு முன்னாள் போராளி. பதின்மூன்று வயதில் இயக்கத்தில் இணைந்த ஒரு குழந்தைப் போராளி. இன்று உடல்முழுவதும் சன்னங்களுடன் சிகிச்சை பெறவும் வசதியின்றி தெற்காசிய நாடொன்றில் சிறையில் உள்ளார். அவர் சிறையில் இருப்பது மட்டை போட்டல்ல புலத்து மக்கள் பகட்டுக்காகச் சொல்லும் தாயக விடுதலைக்கு உதவியாக இருந்தமைக்காக.

அவர் தனது மனைவியையும் பிள்ளைகளையும் கண்டு மூன்று வருடங்கள் இருக்கும். இளம் குடும்பம். அவர் புலத்தில் உள்ள உறவுகளுடன் கதறி அழுகிறார். இங்குள்ளவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் வார்த்தைகள் இல்லை. அவரை ஐரோப்பாவிற்கு எடுத்துவிட முடியவில்லையே என்ற குற்ற உணர்வும் நெஞ்சை நெருடியது.

காயப்பட்டதனால் போராட இயலாத நிலையில், தொழில் வாய்ப்புகளும் இல்லாத நிலையில், புலிகளுக்கு வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலேயே அவருடைய குடும்பம் தங்கி இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் அவர் வெளிநாடு வர முயற்சித்து இருந்தார். ஆனால் அவ்வளவு தொகையை அவரால் திரட்டிக் கொள்ள முடியவில்லை. அப்படி முடிந்திருந்தால் அவரது மனைவி பிள்ளைகள் வன்னியில் இருந்திருக்க மாட்டார்கள். இந்த யுத்தத்தில் மடிந்திருக்க மாட்டார்கள்.

தான் இளவயதிலேயே இயக்கத்தில் சேர்ந்து கல்வியைப் பாழடித்ததால் தன்னுடைய மகனை படிப்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் அந்த இளம் குடும்பத்தினரிடம் இருந்தது. ஆர்வம் மட்டுமல்ல அவ்வளவு கஸ்டத்திலும் தாயார் தன் மூத்த மகனை புலமைப் பரிசில் பரீட்சையிலும் சித்தி பெற வைத்தார். இது நடந்தது சில மாதங்களுக்கு முன். இன்று அவர்கள் நினைவுகளில் மட்டுமே உள்ளனர்.

இது விதியல்ல. சிங்கள – தமிழ் அரசியல் தலைமைகளின் சதி. அதில் புலத்து தமிழனுக்கும் பங்கு இருக்கின்றது. இப்படி வன்னி மண்ணில் உள்ள ஒவ்வொருவரிடமும் ஒரு உருக்கமான சொந்தக் கதையுண்டு. சொல்வதற்கு நாதியில்லை. அதனால் புலத்த தமிழன் ‘வணங்கா மண்’ என்று றீல் விடுகின்றான்.

ஒவ்வொரு தாயும் தனது குழந்தையை தனது உயிராகவே கருதுகின்றனர். தாய் தந்தையைப் பொறுத்தவரை குழந்தையின் இழப்பு என்பது அவரகளது மரணம் வரை தொடரும் சோகம். ஆனால் அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது ஏற்படுகின்ற வலியின் கொடுமையில் ‘இந்தப் பிள்ளை எனக்கு வேண்டாம்’, ‘இந்தப் பிள்ளையைக் கொல்லுங்கள்’ என்று தாய் கதறுவாள். அவர்களுக்கு உயிருக்கு உத்தரவாதமும் குழந்தை பிறந்ததும் ஏற்படப் போகும் பெருமகிழ்ச்சியும் இருந்தாலும் வலியின் கொடுமை அவர்களை அவ்வாறு சொல்ல வைக்கிறது.

ஆனால் இன்று வன்னி மக்கள் அனுபவிப்பதோ மரணவலி. அடுத்த நிமிடம் உயிருடன் இருப்போமோ என்கிற பயம். அந்த மரண பயத்தில் தப்பி ஓடினாலும் கலைத்து வந்து சுட்டுத் தள்ளுகிறார்கள் பிடித்துவந்து பச்சை மட்டையால் அடிக்கின்றனர் புலிகள். ஒரு புறம் இலங்கை அரச படைகள் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்துகின்றனர். மறுபுறம் புலிகள் தாக்குதல் நடத்தப்படும் பகுதிகளில் இருந்து வன்னி மக்களை வெளியெறவிடாமல் அடைத்து வைத்துள்ளனர். புலிகளதும் புலத்து தமிழர்களதும் தாயக வேள்விக்கு வளர்க்கப்பட்ட விலங்குகள் போல் ஆகிவிட்டனர் வன்னி மக்கள்.

2.

Sambandan R TNA MPஇந்த நிலையை வேதனையை யாரிடம் சொல்ல முடியும். யாருக்கு எடுத்துரைக்க முடியும். ‘விடுதலை புலிகள் பொதுமக்களை பாதுகாப்பான பிரதேசத்திற்கு வெளியேற விடாது தடுக்கின்றனரா’ என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, ”அம்மக்கள் ஏன் வன்னியை விட்டு வெளியேற வேண்டும்? அம்மக்கள் அப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள்” எனப் பதிலளிக்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர் சம்பந்தன். ஆர் சம்பந்தன் சொல்வது போல் அந்த மக்கள் அந்தப் பிரதேசத்தவர்கள் அவர்கள் வெளியேற வேண்டிய அவசியமில்லை என்றே வைத்துக் கொண்டால் அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தகின்ற இந்த 22 தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் எங்கே? அவர்களது குடும்பங்கள் எங்கே? அவர்கள் மட்டும் ஏன் தங்கள் பிரதேசத்தை விட்டு வெளியேறினார்கள்? தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் மிக மோசமான அவலத்தை எதிர்கொண்டுள்ள போது அந்த மக்களை மரணப்பொறியில் விட்டுவிட்டு கொழும்பிலும் இந்தியாவிலும் ஐரோப்பாவின் நகரங்களிலும் இருந்து கொண்டு ‘வன்னி தமிழர்களின் பூர்வீக மண்’, ‘ஏன் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்’ என்று கேட்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எந்த அரசியல் அருகதையும் கிடையாது. அந்த ‘மக்களை வெளியேற்ற வேண்டாம்’, ‘வெளியேற வேண்டாம்’ என்று சொல்வதற்கு புலத்துத் தமிழனுக்கும் எந்த அருகதையும் கிடையாது.

‘தெற்கிற்குச் சவப்பெட்டிகள் வரும்’ என்று முட்டாள்தனமாகப் பாராளுமன்றத்தில் பேசுவதும், பொழுது போக்காக பொங்கு தமிழ் வைத்து போர் முழக்கம் செய்வதும், இன்று தமிழ் மக்களை எங்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. புலிகளின் அரசியல் வங்குரோத்துக்கு துணைபோன இவர்களின் அரசியலை என்னவென்பது.

‘தமிழ் சமூகம் படித்த சமூகம். லண்டனிலலும் ஆயிரக் கணக்கான டொக்டர்கள் என்ஜினியர்கள் எக்கவுண்டன்கள் இருக்கிறார்கள். இந்த நாட்டுக்கு தங்கள் சேவையை செய்கிறார்கள்.’ என்று மேரிக் கொல்வினை அழைத்து நடத்திய சந்திப்பில் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பில் சென் கந்தையா குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டது. உண்மை. படித்தவர்கள். பிழைக்கத் தெரிந்தவர்கள். லண்டனுக்கும் மேற்கு நாடுகளுக்கும் வந்து தங்கள் சேவையைச் செய்கிறார்கள். தங்கள் பெருந்தன்மையைக் காட்ட ‘வணங்கா மண்’ கப்பல் விடுகிறார்கள். ‘வன்னி மாடுகள்’ படிக்கவில்லை. வசதியும் இல்லை. புலியைக் கட்டிக்கொண்டு மாரடிக்கிறார்கள்.

மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே வருகிறேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிகாந்தா, ஜெயானந்தமூர்த்தி, சிவாஜிலிங்கம் ஆகியோரை தேசம்நெற் க்காக நேர்கண்ட போது கேட்கப்பட்ட பல கேள்விகளில் ஒன்று ‘நீங்கள் ஏன் இந்தப் பாராளுமன்ற உறுப்புரிமையை வைத்துள்ளீர்கள்?’ என்பது. அதற்கு அவர்கள் மூவருமே கிட்டதத்தட்ட ஒரே பதிலையே தெரிவித்தனர். ‘நாங்கள் இந்த உறுப்புரிமையை எடுக்காவிட்டால் அரச ஆதரவாளர்கள் தமிழ் விரோத சக்திகள் அதில் உட்கார்ந்து தமிழ் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளைச் செய்வார்கள்.’ அப்படியானால் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பாராளுமன்றத்தில் இருந்து தமிழ் மக்களுக்காக இதுவரை சாதித்தது என்ன?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் தீர்வை ஏன் முன்வைக்கவில்லை? ‘புலிகள் தமிழ் மக்களுடைய ஒரு ஆயுத அமைப்பு’ என்று எடுத்துக் கொண்டால் தமிழ் மக்களுடைய அரசியலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் முன்னெடுக்கவில்லை. ‘விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் தீர்வுத் திட்டதை முன் வைக்கத் தவறிவிட்டது என்றே நான் கருதுகிறேன். அவ்வாறான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்காதது மிகப்பெரிய தவறு என்றே நான் கருதுகிறேன்’, என்று சிவாஜிலிங்கம் தேசம்நெற் க்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து இருந்தார். இந்தத் தவறிற்கு வன்னி மக்கள் கொடுத்துக் கொண்டுள்ள விலை மிக மிக அதிகம். அது மட்டுமல்ல தமிழ் அரசியல் தலைமைகள் விட்ட வரலாற்றுத் தவறுகள் என்று பட்டியல் இட்டால் அதனைத் தொகுத்து ஒரு புத்தகம் வெளியிடலாம். அந்தப் பட்டியலை தேசம்நெற்றின் கருத்தாளர்களிடமே விட்டுவிடுகிறேன்.

முல்லைத் தீவில் நடைபெறும் மனித அவலத்தில் – இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் அரசு – புலிகள் என்ற இரண்டு தரப்புகள் சம்பந்தப்பட்டு உள்ளன. இந்த அவலத்தை முடிவுக்கு கொண்டு வர இந்த இரு தரப்புகளுமே உடன்பாட்டுக்கு வரவேண்டும். அதற்கு இந்த இரு தரப்புகளுடனும் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுவது அவசியம். நாங்கள் ஒரு தரப்பினருடன் மட்டுமே பேசுவோம் மற்றயைவர்களைத் தீண்டமாட்டோம் மற்றையவர்களுடன் பேசமாட்டோம் என்று அடம்பிடித்தால் எப்பொதுமே இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியாது. இதுவே யதார்த்தம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று (26 மார்ச்)  இடம்பெறவிருந்த சந்திப்பில் தமது கட்சி கலந்து கொள்ளாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்து இருந்தார். ‘வடக்கில் இடம்பெற்று வரும் படை நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை ஜனாதிபதியுடன் தமது கட்சி எந்தச் சந்திப்பையும் மேற்கொள்ளாது’ எனவும் குறிப்பிட்டு ஆர் சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். வன்னிப் படை நடவடிக்கைகள் பெரும்பாலும் இப்பொது ஒரு சில 10 கிரோமீற்றருக்குள்ளேயே முடக்கப்பட்டு உள்ளது. இன்று தினம் தினம் மக்கள் கொல்லப்படுகின்றனர்.  யுத்தத்தை நடத்துகின்ற அரச தரப்பை சந்தித்து தங்களது நிலைப்பாட்டை வலியுறுத்துவதை விட்டுவிட்டு ‘படை நடவடிக்கைகள் நிறுத்தப்படும்வரை சந்திப்பை மேற்கொள்ள மாட்டோம்’ என்று ஜனாதிபதிக்கு கடிதம் போடுவது எவ்வகையில் வன்னி மக்களின் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்று நீங்கள் கேட்பதை மகிந்த அரசு மட்டுமல்ல எந்த அரசும் தந்துவிடாது. அதற்காகப் தொடர்ந்து அவர்களுடன் போராட வேண்டும். ‘நாங்கள் உங்களுடன் டூ. உங்களுடன் பேசமாட்டோம்’ என்று கோபித்துக் கொண்டிருக்க இது என்ன எங்கள் வீட்டு குழந்தைகளின் சண்டையா? மூத்த அரசியல் சாணக்கியன் என்று சொல்லப்படும் ஆர் சம்பந்தனின் அரசியல் சாணக்கியத்தால் என்ன பயன்?

யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வருபவர்கள் சரியான முறையில் கவனிக்கப்படுகிறார்களா என்பதை வன்னி முகாம்களில் நின்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம் பி க்கள் மேற்பார்வை செய்திருக்க வேண்டும். பாராளுமன்றம் சென்று மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும்படி கோரி இருக்க வேண்டும். அப்படி கேட்பதற்கு முடியாவிட்டால் ‘எங்களை வன்னிக்கு அனுப்பி வையுங்கள்! எங்கள் மக்களோடு இருக்க விடுங்கள்!’ என்று பாராளுமன்றத்தில் போராடி இருக்க வேண்டும். அதற்கு அரசு சம்மதிக்கவில்லை என்றால் ஒரே நேரத்தில் தங்கள் பாராளுமன்ற உறுப்புரிமையை திறந்து சர்வதேசத்தின் அழுத்தத்தை இலங்கை அரசுக்கு எதிராகத் திருப்பி நெருக்கடியை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இதுவரை நீங்கள் பிரிதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களுக்கு உங்கள் பாராளுமன்ற பதவியை வைத்து எதுவும் செய்ய முடியவில்லை. இன்று ஒட்டுமொத்த வன்னி மக்களும் அழிந்து கொண்டிருக்கிறார்கள். வன்னி மக்களுக்கு கொள்ளி வைப்பதற்காக நீங்கள் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினீர்கள். உங்கள் எம்பி பதவிகளை எதற்கு இன்னமும் காவிக்கொண்டு திரிகிறீர்கள்.

3. 

இதற்கிடையே லண்டன் கொழும்பு பெங்களுர் என்று இலங்கையின் நிலவரம் பற்றிய மாநாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இலங்கைத் தமிழர்களின் பற்றி எரிகின்ற ஒரு பிரச்சினை பற்றி தமிழர்கள் கலந்துகொள்கிற மாநாடு. ஆனால் மூன்று மாநாடுமே பெரும்பாலும் இரகசியமான முறையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒரு சாரார் மற்றைய மாநாட்டை குழப்பி விடுவார்கள் என்ற அச்சம் இரு தரப்பிலுமே காணப்படுகிறது. இது தமிழ் மக்கள் தங்களுடைய மிக முக்கிய அரசியல் விடயம் தொடர்பாக வெளிப்படையான விவாதம் ஒன்றை மேற்கொள்ள முடியாத சூழல் இருப்பதையே எடுத்துக்காட்டுகிறது.

அறுபது நாட்களுக்குள் 3000 உயிர்கள் இழக்கப்பட்ட போதும் அந்த மக்களின் அவலங்களை அரசியலாக்குகின்ற மூன்றாம்தர அரசியலே நடைபெறுகின்றது. அவல ஓலங்களை ஐபிசி வானலைகளில் பரவவிட்டும், மரணத்தின் அவலத்தை ஜி ரிவியில் காட்சிப்படுத்தியும், தங்கள் புலி அரசியலை விற்கும் இவர்கள், ‘காணத் தவறாதீர்கள் சூரியாவின் ‘அயன்” என்று சொல்லவும் தவறுவதில்லை. மாறாக புலிப் புலம்பல் புலம்பி, அரசுக்கு வக்காலத்து வாங்கி, தங்கள் பழைய இயக்க சாகசங்களை தூசிதட்டி றீல்விடும் இணையங்களுக்கும் குறைவில்லை.

இந்த துருவ அரசியலில் இதுவரை தமிழ் மக்களின் அரசியல் நலன்கள் பந்தாடப்பட்டது. ஆனால் இன்று அதற்கும் மேல் சென்று தமிழ் மக்களின் – வன்னி மக்களின் தலைகளே பந்தாடப்படுகிறது.

இவ்வளவு அவலங்களுக்குப் பின்னரும் ஒரு காத்திரமான அரசியல் விவாதத்தை வெளிப்படையாக நடத்துவதற்கு முடியாத சூழல் இருக்கின்றது என்பது வேதனையான விடயம். புலிசார்பான அமைப்புகள் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்தால், புலி எதிர்ப்புக் குழுக்களும், அரச ஆதரவு சக்திகளும் அதனை குழப்ப விளைகின்றனர். அதேபோல் புலிக்கு ஆதரவற்றவர்கள் மாநாடுகளை போராட்டங்களை ஏற்பாடு செய்தால் புலி ஆதரவு சக்திகள் அவற்றைக் குழப்புகின்றனர். இதன் எதிரொலியே லண்டன் – கொழும்பு – பெங்களுர் மாநாடுகள் இரகசியமாக நடத்தப்படுவதற்குக் காரணம்.

லண்டன் மாநாடு நேற்று (26 மார்ச்) புலிகளுக்கு சார்பான அரசியல் நிலைப்பாட்டையுடைய பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் தமிழர்களுக்கான சர்வகட்சி பாராளுமன்றக் குழு உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. டெல்லியில் நடக்க இருந்து பின்னர் சிங்கப்பூருக்கும் அதன் பின்னர் கொழும்பிற்கும் மாற்றப்பட்ட மாநாடு இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுசரணையுடன் இம்மாத இறுதிப் பகுதியில் நடைபெற இருக்கின்றது. பெங்களுர் மாநாடு இந்திய அரசில் தங்கியுள்ள ஈஎன்டிஎல்எப் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இம்மாநாடு ஏப்ரல் முற்பகுதியில் நடக்க இருக்கிறது.

இந்த மூன்று மாநாடுகளுமே ஒரே விடயத்தைப் பற்றியே பேசுகின்றன. அதாவது இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை. அவர்களின் எதிர்காலம். மூன்று மாநாட்டிலும் புலம்பெயர் தமிழர்கள் முக்கிய பங்கேற்று உள்ளனர். வட அமெரிக்கா ஐரோப்பா அவுஸ்திரெலியாவில் இருந்து வேறு வேறு புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகள் இந்த மாநாடுகளில் பங்கேற்கின்றனர்.

இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் மட்டுமல்ல இந்த மாநாடுகளும் திரைமறைவிலேயே நடத்தப்படுகிறது. ‘ஏன் இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றது, என்ன விடயங்கள் விவாதத்திற்கு எடுக்கப்பட இருக்கின்றது’ என்பது பற்றிய விடயங்களை முன்னரே வெளிப்படுத்தி இருந்தால் அது பற்றிய விவாதங்களை மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தி, மக்களுடைய கருத்துக்களையும் பெற்றிருக்க முடியும். மக்களையும் இன்றைய அரசியலுடன் ஈடுபடுத்தி இருக்க முடியும். அதுவே ஜனநாயகச் செயன்முறையாக இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு இல்லாமல் தெரிவு செய்யப்பட்ட சிலர் (மக்களால் அல்ல), கூடி ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதனை வெளியிடுவது, அதற்கு மக்கள் ஆதரவைக் கோருவது ஜனநாயக நடைமுறையாகாது. இந்த மூன்று மாநாடுகளின் ஏற்பாட்டாளர்களுமே அடிப்படையில் மக்களை மிகத் தொலைவிலே வைத்துக்கொண்டு மக்கள் பற்றிய விவாதத்தை நடத்துகின்றனர்.

இந்த மாநாடுகள் நடத்தப்படுவதும் விவாதங்கள் ஊக்குவிக்கப்படுவதும் அவசியம். ஆனால் இந்த மாநாடுகளை அதன் ஏற்பாட்டாளர்கள் தங்கள் அரசியல் நலன்சார்ந்து கையில் எடுக்கும் அபாயம் உள்ளது. அது தொடர்பான விழிப்புணர்வு அதில் கலந்து கொள்பவர்களிடம் இருப்பது அவசியம். அவற்றிற்கு அப்பால் இவ்வாறான மாநாடுகள் உடனடித் தீர்வை ஏற்படுத்தாத போதும் தீர்வை ஏற்படுத்துவதற்கான விவாதிப்பதற்கான அரசியல் சூழலை உருவாக்க இவை அவசியம்.

லண்டன் – கொழும்பு – பெங்களுர் மாநாடுகள் வேறு வேறு நாடுகளில் மட்டுமல்ல வேறு வேறு அரசியல் பின்புலத்திலும் நடைபெறுகின்றன. இந்த மாநாடுகளின் ஏற்பாட்டாளர்கள், அதாவது பின்னணியில் உள்ளவர்கள், அவர்களே உண்மையான அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்கள். இன்றைய அவலங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய அதிகாரமும் அவர்களிடமே உள்ளது. அவர்களுடன் தொடர்ந்தும் மக்கள் சார்ந்து உரையாடுவதும் விவாதிப்பதும் தவிர்க்க முடியாதது.

30 வருடமாக ஆயுதத்தை நம்பிய தலைமை இன்று மரண ஓலத்தையே தனது அரசியல் ஆயுதமாக்கிக் கொண்டு உள்ளது. ஆனால் 30 வருடம் உறுதியான அரசியலுடன் விவாதித்து இருந்தால் ஏனைய சிறுபான்மை மக்களை மட்டுமல்ல பெரும்பான்மைச் சிங்கள மக்களது ஆதரவையும் தமிழர் போராட்டம் பெற்றிருக்கும்.

இந்திய அமைதிப்படையை வெளியேற்ற முற்பட்ட போது பிரேமதாசாவே பிரபாகரனை தம்பி என்று அழைத்தது மட்டுமல்ல மாவீரர் உரையும் இலங்கை முழுவதும் ஒலிபரப்பப்பட்டது. அதற்கு சிங்கள மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. சுனாமியைத் தொடர்ந்து தமிழ் பகுதிகளுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டியவர்கள் எல்லைப்புற மாவட்டங்களில் உள்ள சிங்கள மக்கள். அன்றைய காலத்தில் தமிழ் – சிங்கள – முஸ்லீம் மக்கள் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் ஒத்தழைத்தனர். ஆனால் திட்டமிட்ட இனவாதப் பிரச்சாரங்கள் அம்மக்கள் இணைந்துவிடமால் தடுத்தது.

இந்த மாநாடுகளால் முல்லை அவலத்தை உடனடியாக தடுத்து நிறுத்திவிட முடியாது. ஆனாலும் இவ்வாறான மாநாடுகள் விவாதங்கள் அதன் மீதான விமர்சனங்கள் மட்டுமே இலங்கையில் உள்ள இனமுரன்பாட்டை தீர்ப்பதற்கான அரசியல் சூழலை ஏற்படுத்தும். சகல சமூகங்களும் நெருங்கி வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். ஆயுதங்களிலும் பார்க்க இந்த மாநாடுகளும் விவாதங்களும் அவற்றின் மீதான விமர்சனங்களும் ஆரோக்கியமானதே.

‘சித்தாந்த தெளிவின்றி ஆயுதம் ஏந்தியதின் விளைவேயே நாம் இன்று எதிர்கொள்கிறோம்.’ அபுயுசுப் சிறி – ரெலோ பேச்சாளருடன் நேர்காணல் : த ஜெயபாலன்

Apuysef_Sri_TELO._._._._._. 

கொம்யுனிஸ்ட் கட்சியில் இருந்து பின்னர் ஈபிஆல்எல்எப் இல் இணைந்து கிழக்கு மாகாணசபையின் அமைச்சராக செயற்பட்ட அபுயூசவ் தற்போது சிறி – ரெலோ அமைப்பின் பேச்சாளராக செயற்படுகிறார். மார்ச் 10 அன்று இவர் வவுனியாவில் தனது அலுவலகத்தில் இருந்த வேளை தொலைபேசியூடாக மேற்கொள்ளப்பட்ட செவ்வி இங்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

._._._._._.

தேசம்நெற்:உங்கள் கட்சியின் நிலைப்பாடுகள் செயற்ப்பாடகள் பற்றி சுருக்கமாக சொல்லுங்கள் ?

அபுயுசுப் : நாங்கள் தற்போது கொழும்பிலும் வட- கிழக்கு மாகாணங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றோம். மாவட்டக் குழுக்கள் அமைத்து அந்த மக்கள் மத்தியில் செயற்;பட்டுக் கொண்டிருக்கிறோம்.

தேசம்நெற் : எவ்வாறான அரசியல் வேலைத் திட்டங்களை முன் வைத்து செயற்படுகிறீர்கள் ?

அபுயுசுப் : ஜக்கியப்பட்ட இலங்கைக்குள் ஓர் தீர்வு கண்டு தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளை எப்படிப் பாதுகாப்பது என்ற திட்டத்துடன் அரசியல் முயற்ச்சியுடன் செயற்ப்படுகிறோம்.

ஒரு நீண்ட போராட்டத்தின் பின்னர் – 3 தசாப்த்தங்களின் பின்னர் தமிழீழம் கேட்டுப் போராடி இன்று தமிழ்பேசும் மக்கள் எங்கு நிறுத்தப்பட்டு உள்ளார்கள்? இயக்கங்கள் மக்களை வழிநடாத்தி போராட்டம் எப்படி வந்து நிற்கிறது என்பதை தெட்டத் தெளிவாக ஆராய்ந்து தமிழ் மக்களுக்கு சேதாரம் இல்லாமல் மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்கள் தமது ஜனநாக உரிமைகளுடன் வாழக்கூடிய போராட்டங்களை எப்படி முன்னெடுப்பது என்றும் நீண்டகால மூலோபாயம் என்ன அதற்காக தற்போது செய்ய வேண்டியது என்ன என்ற தெளிவும் முக்கியமாக அரசியற் கட்சிகளுக்கு தேவை.

ஆயுதப் ஆபாராட்டத்திற்கு முன்பு செய்யப்பட்ட ஜனநாயக போராட்ட அனுபவங்களில் இருந்தும் எமது தற்போதய புதிய ஜனநாயக வழிவகைகளை மூலோ பாயங்களை கண்டறிந்தாக வேண்டும். தற்பேததுள்ள வன்னிப் பிரதேசம் வட – கிழக்கு பிரதேசம் நாடுதழுவிய தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றியும் கருத்திற் கொண்டே இந்த மூலோபாயத்தை கண்டறியும் போராட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தேசம்நெற் : தமிழ் மக்களுக்கான போராட்ட அமைப்புக்கள் தான் தமிழ் மக்களுக்கு தீங்கு இழைத்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்hபக ஆயுதம் தூக்கிய அமைப்புக்கள் கடத்தல் கப்பம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச் சாட்டுக்கள் உண்டு.

அபுயுசுப் : சித்தாந்த தெளிவின்றி ஆயுதம் ஏந்தியதின் விளைவே அன்றி வேறேதும் இல்லை. தனி நாட்டைப்பெற்று உரிமைகளை நிலைநாட்டுவோம் என்று ஆயுதம் ஏந்திப் போராடினர். ஆயுதம் ஏந்தியது பலாத்காரத்தை செய்வதற்காகவா? பலாத்காரத்தை எதிர் கொள்வதற்காகவா? என்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ள தவறி விட்டோம்.

ஆயுதங்களைக் கொண்டு மக்களை அடக்கி விட்டோம் என்பதும் ஆயுதங்களால் மக்களின் அபிலாசைகளை  நிலைநிறுத்தவில்லை என்பதே இந்த நீண்ட போராட்டத்தின் கசப்பான அனுபவம். அதன் காரணமாகத்தான் பல பிரச்சினைகள் தோன்றின. ஆட்கடத்தல் கொலை கொள்ளை கப்பம் போன்ற விடயங்கள் எல்லாம் அரசியல் விழிப்புணர்வு அரசியல் இல்லாமல் ஆயுதம் ஏந்தியதன் விளைவேயாகும்.

தேசம்நெற் : அதை நிறுத்த என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன ?

அபுயுசுப் : ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக வழியில் மக்களை அரசியல் மயப்படுத்தி மக்கள் சக்தியினை நம்பி மக்கள் உரிமைக்காக போராடுவோம். கடந்த கால அரசியல் இராணுவ போராட்டங்கள் தற்போது எமக்கு அரசியல் பாசறைகளாக உள்ளன. இந்த அனுபவங்களைக் கொண்டு இனிமேல் புதிய நடைமுறைகளை வழிமுறைகளை கண்டு போராட வேண்டும் என்பதேயாகும்.

தேசம்நெற் : இந்தப் பாடத்திற்கு கொடுக்கப்பட்ட விலை மிக அதிகம் 100 000 க்கு மேற்பட்ட உயிர்களை பலிகொடுத்துள்ளோம்.

அபுயுசுப் : உண்மை. உண்மை. தனிப்பட்ட கருத்துக்களை சொல்வதானால் போராட்டத்தை ஆரம்பித்த தங்கத்துரை அவர்கள் சர்வதேசம் போராட்டம் ஆயுதம் இவைபற்றியே சர்வதேச பாடங்களில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்தார். போராட்டத்தை ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே அவர் உயிர் துறந்தார். அவர்கள் நினைத்த மாதிரி இந்தப் போராட்டத்தை எடுத்துச் செல்லும் வாய்ப்பு தவறவிடப் பட்டுவிட்டது. அவர்கள் எப்படி மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைத்தார்களோ அவையாவும் வெளிவர முன்பே அவர்கள் உயிர் நீத்ததும் ஒரு காரணமாகும். அதன் பின்னர் ஆரப்பித்த ஆயுதப் போராட்டம் சித்தாந்த தெளிவில்லாமல் போனதால்தான் அதனுடைய அத்தனை விளைவுகளையும் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். லட்சக் கணக்கான உயிர்களையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்திருக்கிறோம். நிர்க்கதியாகி இருக்கிறோம்.

தேசம்நெற் : இப்போ நீங்கள் குறிப்பாக ஒருவிடயத்தை சொல்லியிருக்கிறீர்கள். தமிழ் பேசும் மக்கள் என்ற கருத்தை வைத்துள்ளீர்கள். கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கெதிராக நடந்த செயற்பாடுகளால் குறிப்பாக புலிகளால் முஸ்லிம்கள் தமிழ் பகுதிகளில் இருந்து விரட்டப்பட்டனர். பின்பு முஸ்லிம்கள் தமிழ்பேசும் மக்கள் என்ற தங்கள் அடையாளத்தை நிராகரித்தனர். ஆனால் நீங்கள் தமிழ்பேசும் மக்கள் என்ற அடையாளத்துடனேயே முஸ்லீம்களை பார்க்கிறீர்கள் ?

அபுயுசுப் : தான் எந்த இனம் என்பதை அவரவர் தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு முஸ்லிம் தன்னை முஸ்லிம் என்றோ தமிழன் என்றோ தீர்மானிப்பது எப்படிப்பட்ட நிலையில் தீர்மானிக்கப்படும் என்றால் மொழிதான் தீர்மானிக்கும். மொழி மூலம்தான் சிந்திக்கிறார்கள். மொழிமூலம் தங்கள் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். தான் தமிழன் அல்ல முஸ்லிம் என்று தமிழ் மொழியில்தான் சொல்கிறார். ஆகவே இது இடையிலே ஏற்பட்ட விபத்தும் விபரீதமானதுமாகும். இந்த நாட்டிலே நாம் சுதந்திரத்துக்குப் பின்னர் மொழி அடிப்படையிலேதான் வஞ்சிக்கப்பட்டோம். தமிழ் மொழி பேசியதால் தான் வஞசிக்கப் பட்டோம். ஆகவே விமோசனம் தமிழ்பேசும் மக்களின் விமோசனமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர தமிழர்கள் முஸ்லிம்கள் என்று தனித்தனியாக இருக்க முடியாது. தமிழ்பேசும் மக்கள் என்ற ஒரே அடிப்படையில்தான் இருக்க முடியும்.

முஸ்லிம் என்பது இனம் அல்ல. அது ஒரு மார்க்க அடையாளம் மட்டுமே. இன்று பாலஸ்தீனத்தில் நடைபெறும் போராட்டம் முஸ்லிம்களுக்கான போராட்டம் அல்ல. பாலஸ்தீனத்தில் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். அங்கே அரபுக்களுக்கும் – யூதர்களுக்குமான பிரச்சினையே தவிர அது முஸ்லிம் போராட்டமாக பார்க்க முடியாதே.

இதைவிட எதுசரி எப்படி பிரச்சினைகளை தீர்ப்பது அதற்கான சரியான நடைமுறை என்பதையே கவனத்தில் எடுக்க வேண்டும்.

சாதாரணமாக சொல்வோமானால் இன்று வட கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் பள்ளிக் கூடங்களில் 600க்கு மேற்பட்ட வெற்றிடங்கள் உள்ளன. ஆனால் மாறிமாறி ஆட்சிக்கு வந்த கட்சிகளும் சிங்களவர்களுடைய வெற்றிடங்களை நிரப்புகின்றனவே அன்றி தமிழ்பேசும் மக்களிடையேயான வெற்றிடங்களை நிரப்பத் தயாரில்லை. எனவே இதை தமிழர் முஸ்லிம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. பிரித்துப் பார்த்து தீர்க்கவும் முடியாது.

முஸ்லிம்கள் தமிழ்பேசும் மக்களே என்ற கருத்து பல முஸ்லிம்களிடம் இன்றும் உள்ளது. பலர் இதில் தெளிவாக உள்ளார்கள்.

இந்த தேர்தல் வாக்குகளுக்காக முஸ்லிம்கள் செறிந்த இடங்களின் வாக்குகளுக்காக முஸ்லிம் என்ற அடையாளர் உயர்த்தப்பட்டதே தவிர இது சரியாக தெளிவாக யதார்த்தமாக எடுக்கப்பட்ட முடிவல்ல. அப்படியான முடிவாகவும் இருக்க முடியாது. இந்த சரியான கருத்தை முஸ்லிம்களிடையே தெளிய வைக்க வேண்டியதும் எமது கடமையாகும்.

வடக்கிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் மீளவும் குடியமர்த்தப்படல் வேண்டும். அதேபோல வட கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட  தமிழர்களும் மீளக் குடியமர்த்தப்படல் வேண்டும். அவர்களது உரிமை இது. 

வட கிழக்குப் பிரதேசத்தில் இருந்து வெளியேறிய அத்தனை மக்களும் மீள குடியமர்த்துவது எமது ஜனநாயகப் போராட்டத்தின் ஒரு அம்சமாகும். அந்த மக்கள் தமது பிரதேசங்களுக்கு திரும்பிப் போவது என்பது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட விடயமாகும்.

Apuysef_Sri_TELOதேசம்நெற் : இன்றைய இலங்கை அரசு பற்றிய உங்களது மதிப்பீடு என்ன ?

அபுயுசுப் : இலங்கை அரசு ஒரு முதலாளித்துவ அரசு. நான் ஒரு கமியூனிஸ்ட் இப்படித்தான் சொல்வேன். இனிவரப் போகும் யுஎன்பி அரசம் முதலாளித்துவ அரசுதான். முதலாளித்துவ நடைமுறைகளை கொண்ட அரசு. இந்த முதலாளித்துவ அரசில் முதலாளித்துவ வாதிகள் மட்டும்தான் இருக்கிறார்கள் என்பதல்ல. இந்த அரசுகள் சமாதானப்படுத்தப்ப முடியாத வர்க்க முரண்பாடு காரணமாக தோன்றி விஸ்வரூபம் எடுத்திருக்கிறதொன்று.

ஆளும் அதிகாரம் மிக்க அரசியல் வர்க்கத்தின் அடக்குமுறை யந்திரம்தான் அரசு என்று எமக்கு தெரியும். அதை பல்வேறு விதமாக ஜனநாயக அரசு என்று சொல்லிக் கொள்வார்கள். இந்த நாட்டடில் முதலாளித்துவம் இருக்கும் வரையில் முதலாளித்துவ அரசாகத்தான் இருக்கும். அது தனது நலனை பாதுகாக்கவே முற்படும். அது அந்த வர்க்க நலனுக்காக இனப்போராட்டத்தையும் தீவிரமடைய வைக்கும். தமிழர்கள் சிங்களவர்கள் இடையே இனக்குரோதத்தை வளர்த்தால்தான் தனது நலன் பேணப்படும் என்றால் அதை தந்திரமாகவும் நளினமாகவும் அது செய்து கொண்டிருக்கும். அதைத்தான் இவ்வளவு காலமும் செய்து கொண்டுவந்தது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை மக்களின் தேசிய ஜனநாயக உரிமைக்காக தமிழபேசும் மக்களைத் தயார்படுத்துவதும் சிங்கள மக்களை தயார்படுத்துவதும் அவசியம். இதற்கு ஜனநாயக சக்திகளை நாம் இனம் கண்டு அந்த சக்திகளடன் இணைந்து செயற்பட வேண்டும். இலங்கையிலுள்ள ஒட்டுமொத்தமாக அனைத்து அல்லல்படுகின்ற துன்பப்படுகின்ற மக்களுக்காக செயற்ப்படுவதன் மூலம் தமிழ்பேசும் மக்களின் தேசிய ஜனநாயக போராட்டம் மேலும் வீரியமடையும் என்பது எமது கருத்து.

தேசம்நெற் : நீங்கள் உங்களை கம்யுனிஸ்ட் இடதுசாரி என்று கூறுகிறீர்கள். அப்படியான பின்னணி உடைய நீங்கள் ரெலோ என்ற அமைப்புடன் எப்படி உங்களை அடையாளம் காண்கிறீர்கள்?

அபுயுசுப் : நான் ரெலோ என்பதற்கு முன்பாக ஈபிஆர்எல்எப் டன் என்னை அடையாளம் கண்டு கொண்டேன் அங்கிருந்து தான் ரெலோவிற்கு வந்தேன். சமூகத்தில் போராட்டம் நடக்கிறது என்றால் இங்கு கம்ய+னிஸ்ட்டுக்களின் பங்களிப்பு இருக்கத்தானே வேண்டும்.

தேசம்நெற் : கம்ய+னிச சித்தாந்த பாரம்பரியத்தை கொண்ட நீங்கள் ஈபிஆர்எல்எப் இடமிருந்து ரெலோவிற்கு வருவதன் காரணம் என்ன?

அபுயுசுப் : அடிமைப்பட்ட மக்கள் அல்லவா? அந்த மக்களுக்காக போராடுவது கம்யூனிஸ்டின் கடமையல்லவா? சமூகத்தில் போராட்டம் நடக்கிறது என்றால் இங்கு கம்ய+னிஸ்ட்டுக்களின் பங்களிப்பு இருக்கத்தானே வேண்டும். கம்யூனிஸ்ட் அந்த பங்களிப்பை நிராகரிக்க முடியாதே கண்மூடித்தனமாக பார்க்காமல் இருக்க முடியாதே.

இலங்கையில் உள்ள அனைத்து பாட்டாளி வர்க்கப் போராட்டத்திற்கா தமிழ்பேசும் மக்களின் பாட்டாளிகளையும் அழைக்க வேண்டிய கடமை உண்டல்லவா. தமிழ் பாட்டாளி வர்க்கத்தின் செயற்ப்பாட்டை முதலாளித்துவ வழியில் செல்லவிடாது இழுத்துச் செல்லும் கடமையை கம்யூனிஸ்ட் செய்ய வேண்டும் அல்லவா. அதற்காக நாங்கள் இந்த அமைப்புகளினுள்ளும் சென்று அரசியல் வேலைகளை செய்வதன் மூலம்தானே அது சாத்தியப்படும்.

தேசம்நெற் : ஆனால் துர்திஸ்டவசமாக அது நடக்கவில்லையே?

அபுயுசுப் : நடக்கவில்லை. சில தமிழ் மார்க்ஸிஸ்ட்டுக்கள் முயற்ச்சித்தார்கள். பலர் அதை கண்டு கொள்ளவில்லை அதே போல சிங்கள மார்க்ஸிஸ்ட்டுக்களும் இவர்களுடன் செயற்ப்படவில்லை. அது அவர்களடைய தப்பு. நான் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தான் ஈபிஆர்எல்எப் க்கு ஒரு அமைச்சராக போனேன்.

தேசம்நெற் : எந்த கம்ய+னிஸ்ட் கட்சியிலிருந்து?

அபுயுசுப் : இலங்கை மாஸ்கோ சார்பு கம்ய+னிஸ்ட் கட்சியிலிருந்து அந்த கட்சியின் அரசியல் குழு அங்க்த்தவனாக இருந்தவன். அங்கு இருக்கும் போது தோழர் நாபா நீங்கள் எமது அமைச்சரவைக்கு வாருங்கள் என்று கேட்டார். நானும் சென்றேன். தமிழ் பாட்டாளி வர்க்கத்தை உலக பாட்டாளி வர்க்கத்துடன் இணைத்து செயற்ப்படும் கடமை ஒன்று இருந்தததை உணர்ந்து தான் அவர்களுடன் இணைந்து செயற்ப்பட சென்றேன். இந்த மக்களை சர்வதேச பாட்டாளி வர்க்கத்துடன் இணைக்க வேண்டும் என்று தான் செயற்ப்பட்டடேன்.

தேசம்நெற் : இன்று வன்னியில் நடைபெறும் யுத்தம் இலங்கையில் தமிழ் சிங்கள மக்களிடையேயான இனவாதத்தை அதன் உச்ச அளவிற்கு தூண்டியுள்ளதே?

அபுயுசுப் : இருபக்மும் உள்ள இனவாதிகள் தமது சுயநலன்களுக்காக இனவாதமாக  மாற்றிவிட்டார்கள். இந்த யுத்தத்தை தமிழர்க்கும் சிங்களவர்க்கு மிடையிலான யுத்தமாக மாற்றிவிட்டார்கள்.

தேசம்நெற் : இந்த இனவாதத்ததை கடந்து தமிழ் முஸ்லீம் மலையக சிங்கள மக்கள் ஒன்னிணைந்த போராட்டத்தை நடாத்த முடியும் என்று நம்புகிறீர்களா?

அபுயுசுப் : நிச்சயமாக. இன்னும் ஆழமாக நம்புகிறேன். அதுதான் ஒரே வழி. இலங்கையின் விமோசனத்திற்கு தமிழ் மக்களின் சிங்கள மக்களின் முஸ்லீம் மக்களின் விமோசனத்திற்கு மட்டுமல்ல முழு இலங்கையின் விமோசனத்திற்காக இலங்கையில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கான சமானிய அன்றாட ஜீவியத்திற்க்காக பாடுபடும் மக்களின் விமோசனத்திற்கு அனைத்து மக்களும் சர்வதேசிய பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படையிலான கொள்கையில் செயற்ப்பட வேண்டும். அது இப்போது செய்ய முடியாது. இப்போது அழைக்க முடியாத. அழைத்தால் சிரித்துவிட்டுப் போவார்கள்.

இப்போது யுத்தம் நடக்கிறது. இந்த யுத்த்தின் விளைவு என்ன? இதிலிருந்து நாம் மக்களை அரசியல் மயப்படுத்தி முன்னெடுத்துச் செல்வது என்பது ஒரு பாரிய பணியாகும். ஒரு பாரிய காரியமும் ஆகும.; அந்த காரியத்தை சித்தாந்த தெளிவு உள்ளவர்களாலேயே நடாத்த முடியும். அது மட்டுமல்ல அவை அன்றாடம் செய்யப்பட வேண்டியவைகளுமாகும்.

இந்த நாட்டிலே உண்மையான  தேசிய ஜக்கியம் உருவாக்கப்பட வேண்டும் என்றால் தமிழ்பேசும் மக்களும் சிங்கள மொழிபேசும் மக்களும் அந்த மக்கள் மத்தில் உள்ள அனைத்து பாட்டாளி வர்க்க மக்களும் ஒன்னிணைய வேண்டும். அப்போது தான் தேசியங்களின் விடுதலை பற்றி பேச முடியும். அப்போதுதான் தமிழ் பேசும் மக்களும் சுபீட்சம் பெறமுடியும்.

அதற்காக போராடுவோம் எமது போராட்டத்தில் அதுவும் ஒரு அம்சம். தமிழ்பேசும் மக்கள் படும் கஸ்டம் போலவே பெரும்பாலான சிங்கள மக்களும் கஸ்டப்படுகிறார்கள் அவர்களக்காகவும் போராட வேண்டியது தெளிவடைந்த அரசியற் கட்சிகளின் கடமையாகும். இது இந்த யதார்த்த்ததை புரிந்து கொண்ட மக்கள் சிந்தனையாளர்களைக் கொண்ட கட்சியால்த்தான் அது முடியும்.

தேசம்நெற் : இறுதியாக தேசம்நெற் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்களா ?

அபுயுசுப் : சொல்வதற்கில்லை. இனி செய்தாக வேண்டும். செய்ய நிறையவே உண்டு. செய்ய வேண்டிய கடமைகளைப் புரிந்து கொண்டு தெளிவான பார்வையுடன் தெளிவான போராட்டததை தியாக மனப்பானமையுடனும் முன்னெடுத்துச் செல்வோமேயானால் தமிழ்பேசும் மக்கள் மட்டுமல்ல சிங்கள மொழி பேசும் மக்களும் ஜக்கியமாகவும் சந்தோசமாகவும் இங்கே வாழ முடியும்.

எங்கள் போராட்டம் சிங்கள பாட்டாளி வர்க்கத்தினருடன் இணைந்து நடத்தப்பட்டு இருந்தால் எங்கேயோ போயிருக்கும். ஜேவிபி கூட அந்த தவறை செய்துள்ளது.

ஜேவிபி யின் திட்டமே ‘சிங்கள இனவெறியைத் தூண்டி பதவிக்கு வந்து நியாயமான விடயங்களை செய்வோம். அதில் தமிழ் மக்களுக்கும் நியாயம் கிடைக்க வைப்போம்’ என்ற உபாயம். அவர்கள் குட்டிப்பூர்சுவாக்கள் தானே இப்படியான உபாயங்களைத் தான் அவர்கள் வளர்ப்பார்கள். குட்டிப்பூர்சுவாக்களின் உபாயம் அப்படித்தான் இருக்கும்.

அவர்கள் பாரிய பின்னடைவை சந்தித்தார்கள் அவர்களே இரண்டாக பிளவடைந்து மக்களால் தூக்கி எறியப்பட்டார்கள். கடந்த தேர்தலில் மக்கள் இவர்களின் பேச்சை நம்பவில்லை. எந்த சிங்கள மக்களை நம்பி போராட்டத்தை ஆரம்பித்தார்களோ அந்த மக்கள் கடந்த தேர்தலில் அவர்களை நிராகரித்து விட்டனர்.

அந்த இருதரப்பு ஜேவிபி யினரையும் மக்கள் நிராகரித்தது விட்டனர். உபாயத்தை சரியாக வகுக்காதுவிட்டால் அந்த உபாயம் வர்க்க எதிரியின் கையில் ஒரு ஆயுதமாகிவிடும்.

தமிழ் மக்களின் உரிமைகளை மறுக்கும் எந்த இனவாத உபாயத்தை எடுத்தார்களோ அந்த உபாயம் இவர்களுக்கு எதிராக போய்விட்டது.

‘வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்று சேர யாரும் முன்வருவதில்லை. எல்லோரும் மற்றவர்களை குறை கூறுவதில்தான் அக்கறையுடன் இருக்கிறார்கள்’ உதயராஜா சிறி ரெலொ நேர்காணல் : த ஜெயபாலன்

Uthayarajah_Sri_TELOபாலசிங்கம் உதயராஜா – சிறி ரெலோவின் செயலாளர் நாயகம். ஜரோப்பாவிலிருந்து 2004ல் மீண்டும் இலங்கை சென்று சிறீ ரெலோவை ஆரம்பித்தார். மார்ச் 10 அன்று இவர் வவுனியாவில் தனது அலுவலகத்தில் இருந்த வேளை தொலைபேசியூடாக மேற்கொள்ளப்பட்ட செவ்வி இங்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தேசம்நெற்: சிறீ ரெலோவை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் தோன்றியது?

உதயன்: புலிகள் ரிஎன்ஏ யிலுள்ள அமைப்புகளை தனது ஆதரவு அமைப்பாக செயற்படுத்தத் தொடங்கியபோது புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தனித்துப் போய்விட்டார்கள். இது ரிஎன்ஏயிலுள்ள எல்லா அமைப்பினர்க்கும் பொருந்தும். ரெலோ ஈபிஆர்எல்எவ் ரியுஎல்எவ் போன்ற தலைவர்களை கூப்பிட்டு புலிகள் கதைத்துவிட்டு கடந்தகால பிரச்சினைகளுக்கு எவ்வித பதிலும் இல்லாமல் மறைத்துவிட்டு தங்களுடன் சேர்ந்து வேலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்பு நாங்கள் – ரெலோவில் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள்- ஒன்றாக தனித்து செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

புலிகள் தமக்கு ஆதரவளித்த இயக்கங்களை தமக்காக செயற்பட வைத்துவிட்டனர். எமது தலைவரையும் 300 போராளிகளையும் கொன்ற புலிகள் தற்போதய தலைமையை கூப்பிட்டு கதைத்து தமக்காக பேச வைத்துள்ளார்கள். இதேபோல ஈபிஆர்எல்எவ் இலும் நடந்துள்ளது.

நாங்கள் ரெலோவின் தனித்துவத்தையும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதற்காகவும் சிறீ ரெலோவை ஆரம்பித்தோம். இதேபோல நாபா ஈபிஆர்எல்எப் உருவாக்கப்பட்டுளளது.

தேசம்நெற்: இப்போது உங்கள் சிறீ ரெலோவில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்? எங்கெங்கே உங்கள் அலுவலகங்கள் செயற்ப்படுகிறது?

உதயன்: முழுநேர அங்கத்தவர்களாக 250 பேர் மட்டிலும் வட – கிழக்கு மாகாணங்கள் எல்லாவற்றிலம் செயற்ப்படுகின்றோம்.

தேசம்நெற்: உங்களுக்கான பாதுகாப்பு விடயங்களை யார் செய்து கொள்கிறார்கள்?

உதயன்: எல்லா முகாம்களுக்கும் பொலீசார் பாதுகாப்பு தருகிறார்கள் வவுனியாவில் யாழ்பாணத்தில் மட்டக்களப்பில் கொழும்பிலும் பொலீஸ் பாதுகாப்பு அரசினால் தரப்பட்டுள்ளது.

தேசம்நெற்: இன்று இரண்டு ரெலோ இயங்குகிறது. ஒன்று புலிகளுடனும் மற்றையது அரசடனும் சேர்ந்து இயங்குகிறது. இதில் என்ன தனித்துவம் கொள்கை உள்ளது?

உதயன்: ரெலோவின் முக்கிய உறுப்பினர்கள் ரெலோ என்று இருந்தால் கூட நல்லது ஆனால் அப்படி இல்லை அவர்கள் பல காலமாக ரெலோ என்று அறிக்கை விடுவதில்லை அவர்கள் புலி சார்பான பிரச்சாரங்களையே செய்கிறார்கள்.

தேசம்நெற்: இன்றைய காலத்தில் அப்படி ஒரு பிரச்சாரம் தேவையா? ரெலோ ஈபிஆர்எல்எப் என்று கட்சி அரசியல் தேவையா? மக்கள் தேவைகள் பற்றி மக்கள் சார் அரசியல் தானே பேச வேண்டும். ஏன் நீங்கள் கட்சி அரசியல் பற்றி கதைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

உதயன்: மக்கள் கட்சி என்று ஒன்று இல்லையே. புலிகள் தாங்களும் மாவீரர்களும் பற்றித்தான் கதைக்கிறார்களே அல்லாமல் இதில் மக்கள் சம்பந்தப்படவில்லை. மக்கள் சார்ந்த நடவடிக்கைகள் என்று புலிகள் சொல்வதற்கு எதுவுமில்லை. புலிகள் கடற்புலிகள் ஆகாயப் புலிகள் என்று சொல்லுகினமே தவிர மக்களின் தேவைக்கான புலிகள் என்று ஒன்று இல்லைத்தானே?

புலிகளால் பாதிக்கப்பட்டோம் என்பது இரண்டாவது தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் என்று யார் பேசுகிறார்கள்.

தேசம்நெற்: நீங்கள் என்ன மக்கள் வேலைகள் செய்கிறீர்கள்? மக்கள் சார்பான என்ன கொள்கைகள் வைத்திருக்கிறீர்கள்? மக்கள் தொடர்பாக என்ன சேவைகள் செயற்ப்பாடுகள் செய்கின்றீர்கள்?

உதயன்: நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. மக்களுக்கான சேவைகளை செய்யும் பணியாளர்களாக இருக்கிறோம்.

தேசம்நெற்: அதைத்தான் கேட்கிறேன். நீங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

உதயன்: இன்று புலிகள் பிரதேசத்திலிருந்து வரும் மக்களுக்கு என்ன செய்யலாம். எப்படி உதவலாம் என்று அரசுடன் பேசுகிறோம். இது பற்றி அரச தரப்பினரிடமும் மற்றவர்களிடமும் பேசுகிறோம்.

வன்னியிலிருந்து வரும் மக்களின் பாதுகாப்பும், அப்படி வந்து சேர்ந்த மக்களின் குடும்பங்கள் பிரிந்திருப்பதையும் சுட்டிக்காட்டி ஒன்றுபடுத்த வேண்டும் என்று அரசிடம் கேட்டுள்ளோம்.

உதாரணமாக வன்னியிலிருந்து தப்பி வந்த மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்கும் பட்சத்தில் அச்செய்தி அறிந்து ஏனையவர்களும் புலிகளின் கட்டுப்பாடடுப் பகுதிகளை மீறி வெளியேறுவர்.

தேசம்நெற்: ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டை மீறி வரும் மக்களை ஆயுதக் குழுக்கள் துன்புறுத்துகிறார்கள் என்று பல்வேறு செய்திகள் வெளிவருகிறது.

உதயன்: ஓம்

தேசம்நெற்: ஆப்படியாயின் வன்னியிலிருந்து வெளியேறும் மக்கள் யாரை நம்புவது? புலிகளையா? அரசாங்கத்தையா? ஆயுதக் குழுக்களையா? எல்லோரும் மக்களுக்கு எதிராகத்தானே செயற்ப்படுகிறார்கள்?

உதயன்: அது சரி அப்படியான நிலையில்த்தான் வன்னி மக்கள் இருக்கிறார்கள். உடைத்துக் கொண்டு போவதா அல்லது இப்படியே இருந்து சாவதா? இங்கே வவுனியாவில் ஆட்களை கடத்துகிறார்கள் துன்புறுத்துகிறார்கள் என்ற செய்தி அவர்களை அடையத்தான் செய்யும்.

தேசம்நெற்: இவற்றை தடுத்து நிறுத்த நீங்கள் சிறீ ரெலோ அல்லது மற்ற அமைப்புக்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

உதயன்: மற்றவர்களைப் பற்றி சொல்ல முடியாது. ஆனால் புலிகள் வன்னியில் மோசமான பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள் வன்னியில் இராணுவம் பெண்களை கற்பழிக்கிறது கொடுமை செய்கிறது என பிரச்சாரம் செய்கிறார்கள்.

தேசம்நெற்: அண்மையில் உங்கள் அமைப்பு உறுப்பினர்கள் கூட கொல்லப்பட்டு உள்ளனர் அல்லவா?

உதயன்: ஓம்

தேசம்நெற்: இது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது?

உதயன்: இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அமைப்புடன் கதைக்கப்பட்டுள்ளது அதற்கு பதில் கிடைக்குமென நம்பவில்லை. மக்களுக்கு தெரியும் யாரால் செய்யப்பட்டுள்ளது என்று.

தேசம்நெற்: ஒரு அரசியல் குழுவாக செயற்ப்படும் உங்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் ஒரு சாதாரண மகனுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது?

உதயன்: நான் இதைத்தான் அரசுக்கும் எடுத்து சொல்லியுள்ளேன்.

தேசம்நெற்: அப்படியாயின் நீங்கள் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை எனச் சொல்கின்றீர்கள்?

உதயன்: மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே புலிகளின் பிரதேசத்திலுள்ள மக்கள் வெளியேற முற்படுவர் என்பதே எனது கருத்து.

தேசம்நெற்: இப்போது  உங்கள் அமைப்பின் மீதும் மக்கள் விரோதச் செயற்ப்பாடுகள் சம்பந்தமாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளதே?

உதயன்: கடந்த வாரம் நெருப்பு இணையத் தளத்தில் வந்த செய்தியும் இது பற்றியும் நாங்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளோம். மக்களைப் பொறுத்தவரையில் எல்லோருக்கும் தெரியும் யார் இதை செய்திருக்கின்றார்கள் என்று.

தேசம்நெற்: தற்போது வவுனியாவில் உங்களுக்கும் புளொட்டுக்கும் பல முரண்பாடுகள் வளர்ந்துள்ளது. அண்மையில் உங்களுடைய உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டும் உள்ளனர். இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

உதயன்: இது பற்றி புளோட் சித்தார்த்தனுடன் கதைத்து உள்ளோம். அவர் இது தொடர்பாக தனது தோழர்களுடன் கதைத்து விட்டு பதில் தருவதாக கூறியுள்ளார். அப்படித் தவறு நடைபெற்றால் அவர்களுக்குரிய தண்டனைகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

தேசம்நெற்: நீங்கள் ஈபிடிபி கட்சியுடன் இணைந்து செயற்ப்படுவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?

உதயன்: ஈபிடிபி யுடன் போதிய நட்புறவு உள்ளது. அவர்கள் ஈபிடிபி நாங்கள் ரெலோ.

தேசம்நெற்: ஈபிடிபியுடன் சேர்ந்து இயங்குவது வேலை செய்வது தேர்தல்களை ஒன்றாக சந்திப்பது சம்பந்தமான வாய்ப்புக்கள் உண்டா?

உதயன்: இது சம்பந்தமாக பேசுகிறோம். எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து பேசி முடிவுகள் எடுப்போம்.

தேசம்நெற்: உங்கள் அமைப்பு சார்பான பொறுப்புக்களில் உள்ளவர்கள் சம்பந்தமாக சொல்ல முடியுமா?

உதயன்: ஒழுங்கமைப்பாளரும் பேச்சாளரும் திரு அபுயூசப் இங்கு என்னுடன் உள்ளார்

தேசம்நெற்: எனைய மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா?

உதயன்: வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு அகிலன்
யாழ் மாவட்டப் பொறுப்பாளர் திரு தாஸ்
திருகோணமலைப் பொறுப்பாளர் திரு பரமேஸ்வரன்
மட்டக்களப்பு பொறுப்பாளர் திரு நாதன்
மன்னார் பொறுப்பாளர் திரு சுதன்

தேசம்நெற்: எப்ப அடுத்த தேர்தல் வரும் என எதிர்பார்க்கிறீர்கள்?

அடுத்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் இது பற்றி தெரியவரும் என எதிர்பார்க்கிறோம்?

தேசம்நெற்: நீங்களும் உங்கள் கட்சியும் தேர்தலில் பங்கெடுப்பீர்களா?

உதயன்:  நிச்சயமாக பங்கேடுப்போம். கூட்டாக செயற்ப்படுவது சம்பந்தமாக யோசித்துக் கொண்டிருக்கிறோம். முடிவு எடுக்கவில்லை. மற்றய கட்சிகளுடனும் அரசடனும் கதைத்துள்ளோம்.

தேசம்நெற்: உங்கள் சிறீரெலோ கட்சி அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையாளரிடம் பதிவு செய்யப்பட்டுவிட்டதா?

உதயன்: ஓம்

தேசம்நெற்: இன்று இலங்கை அரசு தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பல்வேறு முரண்பாடுகளை ஏற்ப்படுத்தியுள்ளது. கிழக்கில் கருணா – பிள்ளையான் மற்றும் டக்ளஸ் என்று பிரித்து அரச பிரித்தாளும் தந்திரத்தை வைத்திருக்கிறது. இந்த சிறீரெலோவைக் கூட உருவாக்கிய விடயம் அப்படித்தான் என்று பார்க்கப்பட முடியும்தானே!

உதயன்: நிச்சயமாக இல்லை. நாங்கள் மட்டுமல்ல மலையக கட்சிகள், ஈபிஆர்எல்எப் போன்ற பல கட்சிகள் இப்படித்தான் உடைந்துள்ளது. இது அரசு உருவாக்குகிறது என்று சொல்ல முடியாது.

தேசம்நெற்: நீங்கள் சிறீரெலோ அரசிடம் அரசியல்த் தீர்வை முன்வைக்குமாறு அழுத்தங்களை கொடுக்கிறீர்களா?

உதயன்: நிச்சயமாக அது மட்டுமல்ல ஜனநாயக நடைமுறைகளையும் செயற்ப்படுத்துமாறும் கேட்டுள்ளோம்.

தேசம்நெற்: இந்த அரசியல்த் தீர்வு சம்பந்தமாக அரசு எல்லா கட்சிகளையும் கூப்பிட்டு ஒரு சந்திப்பை நடாத்தியதா?

உதயன்: இல்லை நடாத்துவதாக சொல்லியுள்ளது.

தேசம்நெற்: வன்னியிலிருந்து வெளிவரும் தமிழ் மக்களின் பாதுகாப்பு சம்பந்தமாக அரசு ஏன் தன்னுடன் இயங்கும் தமிழ் அமைப்புகளிடம் கூடிப் பேசவில்லை?

உதயன்: இல்லை புலிகள் கட்டவிழ்த்து விடும் பொய்ப் பிரச்சாரங்கள் அதிகம். பெண்களைக் காணவில்லை, கொலை செய்யப்பட்டு உள்ளனர் இப்படி பல. பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர் என்பது உண்மை.

தேசம்நெற்: ஆனால் அரசாங்கம் கிட்டத்தட்ட நாஜி முகாம்கள் வைத்திருந்தது போன்று ஒன்றை திட்டமிட்டு செயற்ப்படுத்துகிறது. இதில் குடும்பங்களையும் பிரித்து வைத்திருக்கிறது. உறவினர்கள் பார்வையிடவும் தடை விதித்து இருக்கிறது.

உதயன்: புலிகளும் மக்களோடு மக்ளாக வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களை அடையாளப்படுத்துவது சம்பந்தமாகவும் பெற்றோருக்கு தெரியாமலே பிள்ளைகள் புலிகளின் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். இதனாலேயே சில பெற்றோர்களையும் பிள்ளைகளையும் இராணுவம் பிரித்து வைத்துள்ளது. புலிகளில் இப்படியான பல நிலைமைகள் உண்டு.

தேசம்நெற்: தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டுமுன்னணி உருவாக்கும் வாய்ப்புக்கள் உண்டா?

உதயன்: இது பற்றி எல்லோரிடமும் கதைத்துள்ளோம். புளொட் சித்தார்த்தன், கூட்டணி ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப், கிழக்கு தலைவர்கள் எல்லோரிடமும் கதைத்த போதும் யாரும் முழுமனதுடன் செயற்ப்பட முன்வருவதாக தெரியவில்லை. எல்லோரும் தங்கள் தங்கள் அமைப்புக்களின் திட்டங்கள் பற்றி கதைக்கிறார்களே அன்றி ஒன்னிணைவு பற்றி கதைக்கிறார்கள் இல்லை.

தேசம்நெற்: மக்கள் நலன்தான் இந்தக் கட்சிகளுக்கு முக்கியம் என்றால் ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்று சேரலாம் அல்லவா? ஏன் ஒன்று சேர முடியாதுள்ளது?

உதயன்: இதற்கு யாரும் முன்வருவதில்லை என்றே சொல்லலாம். எல்லோரும் மற்றவர்களை குறை கூறுவதில்தான் அக்கறையுடன் இருக்கிறார்கள் எம்மிடையே ஒற்றுமையின்மையே முக்கிய காரணமாகும். இன்றய காலகட்டத்தில் தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்தால் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமையும். பல விடயங்களைச் சாதிக்கலாம்.

தேசம்நெற்: இந்த மகிந்த அரசு யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ளது. இவ் யுத்த முடிவில் ஒரு அரசியல்த் தீர்வை முன்வைக்கும் என்று நம்புகிறீர்களா?

உதயன்: எல்லா தரப்பினரும் இது நடக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். நாமும் எதிர்பார்கிறோம்.

புலத்து தமிழ் மக்களின் இஸ்ரேலியக் கனவு ‘வணங்கா மண்’ : த ஜெயபாலன்

Exodus_1947Exodus 1947 :

1947 யூலை 11 அன்று ஒரு கப்பல் பிரான்ஸ் Port of Sète துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. இதில் பயணித்தவர்கள் ஹிட்லரின் வதைமுகாம்களில் இருந்து தப்பிய யூத மக்கள். வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள், பெற்றோரை இழந்த குழந்தைகள் என 4515 பேர் தங்களுக்கான தாயகத்தை உருவாக்கப் போகிறோம் என்ற கனவுடன் தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர்.

1928ல் சேவைக்கு விடப்பட்ட இக்கப்பல் “President Warfield” மக்கள் போக்குவரத்திலும் படையெடுப்பிலும் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலக மாகா யுத்தத்தின் பின் இக்கப்பல் Potomac Shipwrecking Co என்ற நிறுவனத்திற்கு பழைய இருப்புக்கு பேரிச்சம் பழம் என்பது போல் விற்கப்பட்டது. ஆனால் இந்தக் கப்பலை வாங்கிய Potomac Shipwrecking Co இடம்இருந்து அதனுடன் தொடர்புடைய Hagana என்ற யூத அரசியல் அமைப்பினூடாக இறுதியில் பலஸ்தீனத்தில் தலைமறைவாக செயற்படும் இரகசிய இயக்கமான Hamossad Le’aliyah Bet இன் கைகளில் சென்றடைந்தது.

Hagana அமைப்பு இந்தக் கப்பலை தங்களுக்கு என்று ஒரு தாயகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தியது. அன்று பிரித்தானிய காலனி ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீனத்தில் தங்களுக்கு என்று ஒரு தாயகத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இறங்க இக்கப்பல் தயாரானது. பைபில் காலத்தில் குறிப்பிடப்படும் எகிப்தில் இருந்து கன்னான் க்கு இடம்பெற்ற இடம்பெயர்வைக் குறிக்கும் வகையில் Exodus 1947 இக்கப்பலுக்கு எனப் பெயரிடப்பட்டது.

1947 யூலை 11 அன்று பிரான்ஸ் Port of Sète துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட Exodus 1947 ஒரு வாரத்தில் யூலை 18 அன்று பாலஸ்தீனக் கடற்பரப்பை அடைவதற்கு முன்னரேயே பிரித்தானிய கடற்படை போர்க்கப்பல்கள் Exodus 1947யை சுற்றி வளைத்தன. இதில் நடந்த கலகத்தில் Exodus 1947 இன் செலுத்திகளில் ஒருவரும் யூதப் பயணிகள் இருவரும் கொல்லப்பட்டனர் பலருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டது. அதன் பின் பிரித்தானிய கடற்படையினர் கப்பலை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.

இந்த கப்பல் பயணிகளின் பயணம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது. ஹிட்லரின் வதைமுகாம்களில் இருந்து தப்பியவர்களின் நாடு தேடும் பயணம் என்ற வகையில் அதற்கு அதீத முக்கியத்துவம் இருந்தது. இருந்தாலும் சட்ட விரோதமானவர்கள் என்ற அடிப்படையில் அவர்களைத் திருப்பி வந்த இடத்திற்கே அனுப்புவது என்று பிரித்தானிய காலனியாளர்களால் முடிவெடுக்கப்பட்டது. தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த Exodus 1947 யை பாலஸ்தீனத்தின் ஹய்பா துறைமுகத்திற்கு கொண்டு சென்று பயணிகளை வேறு மூன்று திருப்பி அனுப்புவதற்கு தயாரான Runnymede Park, Ocean Vigour, Empire Rival கப்பல்களில் ஏற்றி வந்த இடத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டனர். கப்பல்களில் பிரித்தானிய கடற்படையினரும் பயணம் செய்தனர்.

திருப்பி அனுப்பப்ட்ட கப்பல்கள் பிரான்ஸின் Port-de-Bouc துறைமுகத்தை அடைந்தது. ஆனால் தாயகம் அமைக்கும் கனவுடன் சென்ற பயணிகள் பிரான்ஸில் தரையிறங்க மறுத்தனர். அவர்களைப் பலவந்தமாக தரையிறக்குவதற்கு ஒத்துழைக்க பிரான்ஸ் மறுத்துவிட்டது. அதனால் பிரித்தானிய அரசு தனது கட்டுப்பாட்டு பகுதிக்கு கப்பலைக் கொண்டு வந்து பயணிகளைத் தரையிறக்க முற்பட்டது. அதற்கு ஜேர்மனியே அவர்களுக்கு அருகில் அமைந்திருந்தது.

ஏற்கனவே சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்த இந்த கப்பல் பயணம், ஹிட்லரின் வதைமுகாம்களில் கொடுமைப்படுத்தப்பட்ட அதே மக்களை ஜேர்மனியிலேயே கொண்டு சென்று தரையிறக்க முற்படுவது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது விளக்க வேண்டிய அவசியம் அற்றது. அவர்களை கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தி முட்கம்பி முகாம்களில் அடைக்கவும் பிரித்தானிய அரசு முடிவு எடுத்தது. ஜேர்மனியின் ஹம்பேக் துறைமுகத்தில் பயணிகள் தரையிறக்கப்பட்டனர். பெண்கள் குழந்தைகள் நீண்ட அலைச்சலில் சோர்வடைந்து போராட வலுவற்று தரையிறங்கினர். ஆண்கள் போராடினாலும் இறுதியில் பலவந்தமாகத் தரையிறக்கப்பட்டனர்.

திருப்பி அனுப்பப்பட்ட கப்பலில் பிரித்தானிய படைகள் மோசமாக நடந்துகொண்டதாக விபரிக்கப்பட்டது. ஒரு உதைபந்தாட்ட மைதானத்தில் விளையாடுவது போல் பிரித்தானிய படைகள் நடந்துகொண்டதாக உலக யூத கொங்கிரஸ் செயலாளர் Dr Noah Barou பதிவு செய்கிறார். கப்பலில் கொண்டு வரப்பட்டவர்கள் நாசி வதைமுகாம்களில் இருந்து தப்பியவர்கள் என்ற கரிசனை கூட இன்றி தாக்கப்பட்டதாக அப்பதிவு தெரிவிக்கிறது. கப்பலில் இருந்த யூத மக்கள் பிரித்தானிய படையினரை ‘Hitler commandos’, ‘gentleman fascists’, ‘sadists’ என்றெல்லாம் வர்ணித்து உள்ளனர்.

இந்த Exodus 1947 கப்பல் அகதிகள் பிரித்தானியாவை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தியது. குறிப்பாக நாசி வதைமுகாம்களில் இருந்து தப்பியவர்களை ஜேர்மனியிலேயே தரையிறக்கி தடுத்து வைத்தது பிரித்தானிய அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அபகீர்த்தியானது. அந்த வகையில் Exodus 1947 ன் தாயகத்தை அமைக்கும் கனவு உடனடியாக நிறைவேறாது போனாலும் சர்வதேச கவனத்தை யூத மக்களின் மீது திருப்பியதுடன் சர்வதேசத்தின் ஆதரவை தமக்காகத் திருப்பியதிலும் வெற்றிகண்டது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள யூத மக்களின் போராட்டங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரித்தானிய அரசு தனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அவமானத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள யூத மக்கள் மீது அனுதாபம்கொள்ள ஆரம்பித்தது.

இறுதியில் 1948ல் பிரித்தானிய அரசு இஸ்ரேல் அரசை அங்கீகரித்தது. இஸ்ரேல் அரசு அங்கீகரிக்கப்பட்டதற்கு அப்போது இருந்த புவியியல் அரசியல் காரணங்களின் தாக்கம் மிக முக்கியமானது. குறிப்பாக இரண்டாம் உலகப்போரின் முடிவைத் தொடர்ந்து உருவான பனிப்போர் மத்திய கிழக்கில் மையங் கொண்டிருந்தமை முக்கிய அம்சமாகும்.

1948 ஏப்ரலில் ஜேர்மனியில் இருந்த இரு முகாம்களிலும் Exodus 1947 கப்பலில் பயணித்த 1800 அகதிகள் மட்டுமே இருந்தனர். ஏனையோர் பாலஸ்தீனத்துக்கு செல்ல முயல்கையில் கைதாகி காலவரையறையின்றி பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்த சைப்பிரஸ்ஸில் தடுத்து வைக்கப்பட்டனர். இஸ்ரேலிய அரசு அங்கிகரிக்கபட்ட பின்னர் இவர்கள் தங்கள் தாயகபூமியாகக் கருதும் இஸ்ரேலைச் சென்றடைந்தனர்.

இவர்கள் பயணம் செய்த கப்பல் Exodus 1947, 1952ல் கடல் மட்டத்திற்கு எரிக்கப்பட்டு ஹய்பா கடற்கரையில் நிறுத்தப்பட்டது. 1963ல் இத்தாலிய நிறுவனத்தினால் பிரித்து மேயப்பட்டது.

Vanni_Mission வணங்கா மண் 2009 :

._._._._._.

“வணங்கா மண்”:  உலகமே கை விட்ட பின் எம் உறவுகளின் உயிர் காப்பதற்க்கான தாயகம் நோக்கிய பயணம்.

பிரித்தானிய வாழ் புலம் பெயர்ந்த உறவுகளால் ஈழத்து உறவுகளுக்கான உணவு மற்றும் உயிர்க்காப்பு மருந்துக்களுடன் தாயகம் நோக்கிய பயணத்திற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு “வணங்கா மண்” ஒருங்கிணைப்பு குழு கேட்டுக்கொள்கிறது.

தற்போதைய யுத்த நடவடிக்கையில் என்றுமில்லாதவாறு உணவு ஆயுதமாக பாவிக்கப்படுகின்றது. இதற்கு ஜநா முதல் உலகநாடுகள் அனைத்துமே எம்மக்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கிறது. இந்நிலையில் எம் உறவுகளுக்காக பிரித்தானிய தமிழர்களால் “வணங்கா மண்” நடவடிக்கை இன்று முதல் பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் குண்டுமழையில் சாவுக்குள் வாழ்வாய் வாழும் மக்களை பட்டியால் சாவு கொள்ள விடுவோமா? வேதனைகள் சோதனைகளை கடந்து வந்து புலம் பெயர்ந்து வாழும் நாம் எம்மினம் அழிய விடுவோமா? அரசுகள் கைவிட்டால் என்ன? மனிதநேயம் கொண்ட மக்களிடம் எடுத்து செல்லுங்கள் எம்துயரை, பெற்றுக்கொள்வோம் அவர்கள் ஆதரவை. காத்திடுவோம் எம் உறவுகளை என்று வேண்டிநிற்கிறது.

“வணங்கா மண்” ஒருங்கிணைப்பு குழு.

பிரித்தானியாவில் இருந்து ஒப்பரேஷன் “வணங்கா மண்” எனப்படும் கப்பல் அத்தியாவசிய பொருட்களையும் மருந்துவகை மற்றும் குழந்தைகளுக்கான பால்மா பொருட்களுடன் நேரடியாக முல்லைத்தீவு துறைமுகம் செல்லவிருக்கிறது.

இந்த நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் “வணங்கா மண்” என பெயரிடப்பட்டுள்ளது. சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ள நிலையில் இக்கப்பலில் கொண்டு செல்ல உலர் உணவுப் பொருட்களை ஏற்பாட்டாளர்கள் புலம் பெயர் பிரித்தானியர்களிடம் கோரி நிற்கின்றனர்.

நன்றி-பாரிஸ்தமிழ்.கொம்

._._._._._. 

Operation Vananga-Man  Vanni Mission என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பொருட்களை சேகரிப்பதில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. மருந்துப் பொருட்கள் உலர் உணவுப் பொருட்கள் என்பன சேகரிக்கப்படுகின்றன. ஆனால் தற்போது பொருட்களாக இல்லாமல் பணமாக அன்பளிப்புச் செய்யுமாறு கேட்கப்படுவதாக தகவல்கள் எட்டுகிறது. இந்த நடவடிக்கைக்கு பிரித்தானிய பொதுஸ்தாபன ஆணையகத்தின் கீழ் பதிவு செய்யப்ட்ட Tamil Aid,  Tamils Health Organisation,  The Tamils Support Foundation,  Technical Association of Tamils ஆகிய அமைப்புகள் நிதி மற்றும் உதவிகளை வழங்குவதாகக் கூறப்பட்டு உள்ளது.

இந்த வணங்கா மண் நடவடிக்கையை எவ்வாறு அனைவருக்கும் அறியப்படுத்த முடியும் என பிரித்தானிய தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரன் மார்ச் 17ல் ஊடகவியலாளர் மேரி கொல்வினுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கேட்ட போது சர்வதேச ஊடகவியலாளர்களையும் இந்தக் கப்பலில் ஏற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

‘சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ளது’ என்று செய்திகள் கசியவிடப்பட்ட போதும் ‘வணங்கா மண்’ முல்லைத்தீவுத் தரையை தட்டும் என்பது ஒரு பகற்கனவாகவே உள்ளது.  நாம் அறிந்திராத நாடுகளின் கொடிகளுடன் எல்லாம் புலிகளின் கப்பல்கள் ஓடுகின்றன. அதனால் ஒரு கப்பலை அமர்த்தி பொருட்களை ஏற்றி பிரித்தானியத் துறைமுகம் ஒன்றில் இருந்து கப்பலை ‘வணங்கா மண்’ என்று பெயரிட்டு அனுப்புவது ஒன்றும் புலத்து புலி ஆதரவு அமைப்புகளுக்கு ஒரு விடயமே அல்ல. கப்பலில் இலங்கைக்கு பொருட்களை ஏற்றி இறக்கும் நிறுவனங்கள் இதனையே செய்கின்றன.

‘வணங்கா மண்’ இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதிக்கப்படுமா என்பதே இங்குள்ள முக்கிய கேள்வி. இலங்கை அரசும் பிரித்தானிய தூதரகமும் அவ்வாறான ஒரு கப்பலின் வரவு பற்றி தாங்கள் அறிந்திருக்கவில்லை எனத் தெரிவித்து உள்ளனர். மனிதாபிமான நோக்கத்துடன் அவ்வாறான ஒரு கப்பல் வருமாக இருந்தால் அது இலங்கைக் கடற்பரப்பினுள் அனுமதிக்கப்படுமா எனக் கேட்டபோது, இலங்கையின் கப்பல் போக்குவரத்து மற்றும் சுங்க விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

‘வணங்கா மண்’ ஒரு பிரச்சார நடவடிக்கையாகவே அமைய உள்ளது. ‘வணங்கா மண்’ ஏற்பாட்டாளர்களுக்கு முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் மட்டுமல்ல இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதற்கும் இலங்கை அரசின் அனுமதி அவசியம் என்பது தெரியும்.

1947ல் பிரான்ஸில் இருந்து பாலஸ்தீனத்திற்கு Exodus 1947 புறப்பட்டது போல் ஆங்கிலேயருக்கு பணியாது போரிட்ட பண்டார வன்னியன் வாழ்ந்த மண் – வன்னி மண் – வணங்கா மண் முல்லைத்தீவு நோக்கிப் பிரித்தானிய துறைமுகம் ஒன்றில் இருந்து புறப்படலாம். இலங்கைக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் அதனை இலங்கை கடற்படை வழிமறிக்கலாம். மனிதாபிமானக் கப்பல் வழிமறித்ததைத் தொடர்ந்து தமிழகத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் கொதித்தெழலாம். தீக்குளிக்கலாம். சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்க்கலாம். ஆனால் தமிழ் மக்களின் மேல் சர்வதேச அனுதாபத்தை அதனால் ஏற்படுத்த முடியுமா?

அன்றிருந்த சர்வதேச அரசியல் நிலவரம் பனிப்போர் இன்றில்லை. இது பயங்கரவாதத்திற்கு எதிரான அரசியல் ஆதிக்கம் பெற்றுள்ள காலம். மார்ச் 1ல் Tamils Against Genocide என்ற அமைப்பு அமெரிக்க சட்டவாதி புரூஸ் பெயின் என்பவரை அழைத்து லண்டனின் பல்வேறு பகுதிகளிலும் மரதன் ஓட்டத்தில் கருத்தரங்குகளை நடாத்தியது. அதில் ஒன்றில் நானும் கலந்து கொண்டிருந்தேன். ‘அமெரிக்காவில் உள்ள செனட்டர்களிடம் தமிழ் என்று சொன்னாலே அவர்கள் தமிழ் புலிகளையும் பெண் தற்கொலைக் குண்டுதாரிகளையும் தான் நினைக்கிறார்கள். அதனால் தமிழ் மக்களுடைய நியாயமான பிரச்சினையை அவர்களுக்கு புரிய வைப்பது கடினமானதாக இருக்கின்றது’ எனத் தெரிவித்தார். தமிழ் புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்பதை முதலில் நிறுவ வேண்டி இருப்பதாகவும் அவர் கூறினார். இதுவே இன்றைய யதார்த்தம். அமெரிக்காவில் உள்ள சட்டத்தரணி தனது வாதத்தை வெல்வதற்கு தமிழ் மக்களும் தமிழ் புலிகளும் ஒன்றல்ல என்கிறார். இலங்கை அரசு புலிகளை அழிக்கிறது என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது இன அழிப்பைக் கட்டவிழ்த்து விட்டு உள்ளது என்று சரியாகவே தனது வாதத்தை ஆங்கிலத்தில் வைக்கின்றார்.

ஆனால் இந்த அமைப்புகள் புலம்பெயர் மக்களுக்கு தமிழில் பேசும் போது தமிழ் மக்களையும் புலிகளையும் பிரிக்க முடியாது புலிகள் தான் தமிழ் மக்கள் தமிழ் மக்கள் தான் புலிகள் என்று சொல்லி முல்லைத்தீவு மக்களை மரணப்பொறிக்குள் நிறுத்தி வைத்துள்ளனர். அதுமட்டுமல்ல வாயும் வயிறும் கட்டப்பட்டு உள்ள மக்களுக்காக குரல்கொடுப்பதாகக் கூறிக்கொண்டு பூர்வீக மண்ணைவிட்டு – அந்த மரணப் பொறியைவிட்டு அவர்கள் வெளியெற மாட்டார்கள் என்று இவர்கள் குரல் எழுப்புகிறார்கள். ரொறன்ரோ லண்டன் சிட்னி என்று வீடும் வளவும் வாங்கி விட்டுவிட்டு முல்லைத்தீவை பூர்விக மண் என்று அந்த மக்களின் தலையில் கட்டிவிட்டு கதையளக்கிறார்கள் புலத் தமிழர்கள்.

‘வன்னி மாடுகளை (மக்களை) ஒரு கட்டு வைக்கோலுடன் சமாளிப்பேன்’ என்றவர் ‘அடங்காத் தமிழன் வன்னியசிங்கம்.’ இங்கு புலத் தமிழன் ‘வணங்கா மண்’ கப்பல் அனுப்புகிறான் வன்னி மக்களுக்கு. வன்னி மக்கள் எல்லாத்துக்கும் தலையைத் தலையை ஆட்டுவார்கள் என்ற நினைப்பில் ‘வணங்கா மண்’ என்று றீல் விடுகிறார்கள்.

இலங்கை அரசு பேரினவாத அரசு என்பதை மட்டும் சரியாகவே இனம்காட்டி தமது தலைமைகளைத் தக்க வைத்துக் கொள்வதைத் தவிர தமிழ் அரசியல் தலைமைகளால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வெற்றிகொள்ள முடியவில்லை. அதற்கு தந்தை செல்வா முதல் அண்ணன் அமிர்தலிங்கம் உட்பட தம்பி பிரபாகரன் வரை யாரும் விதிவிலக்கல்ல. முன்னையவர்கள் இருவரும் மிதவாத அரசியல் தலைவர்கள். அவர்களின் பார்வை தமிழ் வாக்கு வங்கியின் மீதே இருந்தது. அதனால் அவர்களுக்கு ஓரளவு தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் இருந்தது. பின்னையவருக்கு அந்தக் கவலையும் இல்லை. ஏகபிரதிநிதி. தனிக்காட்டு ராஜா.
 
தமிழ் மக்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக இழக்கப்பட தியாகிகளும் துரோகிகளும் என்று கொல்லப்பட்டவர்களின் பட்டியல் எகிறிக்கொண்டே சென்றது. துரோகிகளின் வரைவிலக்கணங்கள் காலத்திற்குக் காலம் மாற்றப்பட்டு இன்று தங்கள் உயிரைக்காக்க மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பிக்க ஓடுபவர்களும் துரோகியாகி விட்டார்கள். ரொறன்ரோவிலும் லண்டனிலும் பாரிஸிலும் இருந்து கொண்டு தமிழ் மக்களின் பூர்வீக பூமி பற்றி விசேட கருத்தரங்குகள். மரணத்தின் விளிம்பில் நின்றாலும் பரவாயில்லை பூர்வீக மண்ணை பாதுகாப்பதற்காக இறுதிவரை போராட வேண்டுமாம். அதற்காக தாங்கள் ஐரோப்பாவில் இருந்து உணவும் மருந்தும் வணங்கா மண்ணில் முல்லைத் தீவுத் துறைமுகத்திற்கு வந்து சேருமாம்.

இலங்கை அரசுகளுடைய பேரினவாதப் போக்கும் தமிழ் தலைமைகளின் குறுந்தேசியவாதப் போக்கும் அரசியல் வறுமையும் தமிழ் மக்களை இன்று மிக மோசமான போர்ச் சூழலில் நிறுத்தி உள்ளது. மீளவும் தங்கள் தலைமையை நிறுவ புலிகள் தங்களிடம் உள்ள அனைத்து துருப்புச் சீட்டக்களையும் பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்று வன்னி மக்களின் உயிரிழப்புகளால் ஏற்படக் கூடிய மனித அவலம் என்பதும் வெளிப்படையாகி விட்டது. ஒரு பக்கம் இனவாத அரசு. மறுபக்கம் அதற்கு பலிகொடுக்கத் தயாராக நிற்கும் புலிகள். இரண்டுக்குமிடையே வன்னி மக்கள்.
 
‘நான் 25 வருடமாக யுத்தத்தை எதிர்த்து வருபவன். இன்று முல்லைத்தீவில் 1 1/2 முதல் 2 1/2 இலட்சம் வரையான மக்கள் நெருக்கடியான நிலைக்குள் அகப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது மனிதநேய நெருக்கடியிலிருந்து அழிவை நோக்கி நாம் செல்கின்றோம். இது போன்ற நிகழ்வு முன்னர் இங்கு இடம்பெற்றதில்லை. இது தொடர்பில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வராவிட்டால் 30 ஆயிரம் மக்கள் மடியலாம். இதனை எந்தவொரு நவீன சமூகமும் ஏற்காது. எனவே நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்க வேண்டிய நிலையிலுள்ளோம்.’

கலாநிதி குமார் ரூபசிங்க

இன்று எல்லோர் முன்னும் உள்ள மிகப்பெரிய பொறுப்பு ஏற்படப் போகின்ற மனித அவலத்தை தடுத்து நிறுத்தவது. தாகத்திற்கு தண்ணி தாருங்கள் என்று மக்கள் உயிருக்கு தவிக்கிறார்கள். ஆறாயிரம் மைலுக்கு அப்பால் இருந்துகொண்டு ‘வணங்கா மண்’ணில் தண்ணி அனுப்புவம் என்று றீல் விடுவதை விட்டுவிட்டு அங்குள்ள அவலத்தை தடுக்க யதார்த்த்தமான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மரணத்தின் விளிம்பில் வன்னி மக்கள் நிற்க, லண்டனில் ….. : த ஜெயபாலன்

Marie_CalvinMarie_CalvinMarie_Colvin_Before1._._._._._.

வன்னி மக்கள் மீது இலங்கை இராணுவம் மேற்கொள்ளும் பாரபட்சமற்ற தாக்குதல்கள் பற்றி விருதுகள் பெற்ற யுத்தச் செய்தியாளர் மேரி கொல்வின் வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்றக் கட்டிடத்தில் பார்வையாளர்களுக்கு விளக்கியது மட்டுமல்ல பிரித்தானியாவின் தேசிய நாளிதலான சண்டே ரைம்ஸ் பத்திரிகையிலும் விரிவாகவே எழுதி உள்ளார். இலங்கை இராணுவத்தின் பிடியில் தமிழர்கள் எதிர்நோக்கக் கூடிய இன்னல்கள் பற்றி அவர் யாரிடமும் கேட்டு அறிய வேண்டிய தேவை இருக்கவில்லை. 2001ல் வன்னிப் பகுதிக்குள் சென்று திரும்பியவர் இராணுவத்தின் பிடியில் ஏற்பட்ட சொந்த அனுபவமே தமிழர்களின் நிலையை விளக்க போதுமானதாக இருந்தது.’The Forgotten Conflict in Sri lanka’ என்ற தலைப்பில் மார்ச் 17 நடைபெற்ற விசேட கருத்தரங்கில் மேரி கொல்வின் வன்னி மக்களின் அவல நிலைபற்றி எடுத்துக் கூறினார். அமெரிக்க ஊடகவியலாளரான மேரி கொல்வின் பிரித்தானிய தேசிய நாளிதலான ரைம்ஸ் பத்திரிகையில் பணிபுரிகிறார்.

200 000 பேர் வரையானவர்களை புலிகளே தடுத்து வைத்துள்ளனர் என்ற இலங்கை அரசின் பிரச்சாரத்தை நிராகரித்த அவர் வன்னி மக்களுக்கு இலங்கை இராணுவத்தின் மீதுள்ள பீதி பயம் அவர்களைப் புலிகளுடனேயே செல்ல நிர்ப்பந்தித்தாகவும் கூறினார். புலிகள் தங்களைப் காப்பவர்கள் என்ற எண்ணமே வன்னி மக்களிடம் இருப்பதாகவும் அவர்களிடம் பெரும்பாலும் புலிகளுக்கான ஆதரவு இருப்பதாகவும் மேரி கொல்வின் சுட்டிக்காட்டினார்.

ஊடகங்கள், மனிதாபிமான அமைப்புகள் அனைத்துக்கும் இலங்கை அரசு தடைவிதித்துள்ள நிலையில் ஊடகங்கள் வன்னி யுத்தம் பற்றி செய்திகளை வெளியிட இயலாத நிலை இருப்பதைச் சுட்டிக்காட்டிய மேரி கொல்வின் ஊடகங்கள் – தாங்கள் அங்கு நின்று செய்திகளை வெளியிடவே விரும்பவதாகவும் ஆனால் அதற்கு தாங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

சர்வதேச சமூகம் இப்பிரச்சினையில் பாராமுகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர் பிரித்தானியாவிற்கு காலனித்துவ பொறுப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இக்கருத்தரங்கை All Party Parlimentary Group for Tamils அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கிற்கு இவ்வமைப்பின் முக்கியஸ்தரும் பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கியஸ்தருமான சென் கந்தையா தலைமை தாங்கினார். வன்னி மக்களின் நிலை தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மேற்கொண்ட முன்னெடுப்புகள் எதுவும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றும் ஆயினும் தொடர்ந்தும் கவனத்தை ஈர்ப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சென் கந்தையா தெரிவித்தார். காஸாவில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலை 22 நாட்களில் முடிவுக்கு கொண்டு வந்த சர்வதேச சமூகம் அதனிலும் மோசமான யுத்தம் நடைபெறும் வன்னியில் தாக்குதலை நிறுத்த முயற்சிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். இலங்கை அரசாங்கம் பிரச்சார ரீதியில் நங்களிலும் பார்க்க முன்னுக்கு நிற்பதையும் சென் கந்தையா சுட்டிக்காட்டினார்.

சென் கந்தையாவின் தலைமை உரையை அடுத்து வன்னி யுத்த களத்தில் பதிவு செய்யப்பட்ட 10 நிமிட விடியோப் பதிவு காட்சிப்படுத்தப்பட்டது. அப்பதிவில் வன்னி மக்கள் ஒவ்வொரு நிமிடமும் எதிர்கொள்ளும் சொல்லொனாத் துயரமும் விபரிக்க முடியாத வேதனையும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதற்கு அப்பால் அதனை விபரிக்க வேண்டிய அவசியம் தன்ககு; இல்லையென அதனைத் தொடர்ந்து உரையாற்றிய மேரி கொல்வின் குறிப்பிட்டு இருந்தார்.

இவற்றைத் தொடர்ந்து வன்னியில் தங்கள் உறவுகளை இழந்தவர்கள் தங்கள் துயரை வெளிப்படுத்தினர். நடேசன் மயில்வாகனம் என்பவர் சாதாரண காய்ச்சல் வந்து அதற்கு சிகிச்சை எடுக்க முடியாத நிலையில் தனது வயோதிபத் தந்தை காலமானதை வேதனையுடன் சுட்டிக்காட்டினார். தந்தையைக் காண வவுனியாவின் எல்லைவரை சென்ற நடேசன் மயில்வாகனம் தந்தையை உயிருடன் பார்க்க முடியவில்லை.

இன்னும் சிலர் தங்கள் உறவுகள் உயிரிழந்த செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர்.

ஆனால் தனது சகோதரி, தனது தாய், தனது அண்ணி என குடும்பத்தில் மூவரை ஒரே நேரத்தில் பறிகொடுத்த பெண்ணொருவர் கண்ணீர் மல்க தனது இழப்பை பகிர்ந்து கொண்டது அங்கிருந்த ஒவ்வொருவரது உள்ளத்தையும் தொட்டது. உயிரிழந்த உறவுகளை கண்ணாடிச் சட்டத்தினுள் தாங்கியவாறு நின்ற அப்பெண் எதுவும் பேசவில்லை. அதுவே பல விடயங்களைப் பேசியது. வார்த்தைகளிலும் பார்க்க அந்த மௌனம் அந்தக் கண்ணீர் உண்மையானதாக இருந்தது. உணர்வுகளைத் தொட்டது.

இக்கருத்தரங்கில் All Party Parlimentary Group for Tamils அமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக தொழிற்கட்சி லிபிரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களே பெரும்பாலும் கலந்து கொண்டிருந்தனர். தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கொன்சவேடிவ் பாராளுமன்ற உறுப்பினர் லியம்பொக்ஸ் வெளியிட்ட அறிக்கை இலங்கை அரசுக்கு சார்பானதாக அமைந்ததாக அங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. பிரதமர் கோர்டன் பிரவுணும் அவரது அமைச்சரவையும் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் கரிசனையுடன் நடந்துகொள்வதாகப் பாராட்டிய சென் கந்தையா பிரித்தானியாவே முதலில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தியதாகவும் பிரித்தானியாவின் அழுத்தத்தினாலேயே அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து அறிக்கையை வெளியிட்டதாகவும் அங்கு குறிப்பிட்டார்.

ஆனால் இதற்கு முற்றிலும் எதிர்முனையாக இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் தங்கள் அரசாங்கத்தைக் கொண்டு மகிந்த ராஜபக்ச அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். தாங்கள் மாணவர்களாகவும் தமிழ் மக்களும் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட போதும் பிரித்தானிய அரசு அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை என்று குறிப்பிட்ட அம்மாணவர், இலங்கை அரசு இனப்படுகொலை புரிவதாகவும் நைஜீரியா பிஜி பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பொதுநலவாய அமைப்பில் இருந்து நீக்கியது போல் இலங்கையையும் பொதுநலவாய அமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரினார்.

அதற்குப் பதிலளித்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானியா அதற்கு முயற்சிப்பதாகக் கூறினார். யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தவும் இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுக்கவும் பிரித்தானிய அரசு கடுமையாக உழைப்பதாகக் கூறிய அவர் யுஎன் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதை ரஸ்யா தடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இரண்டு மணிநேரம் வரை நீடித்த இந்தக் கருத்தரங்கில் வழமையான புலிப் பல்லவிகளுக்கும் சரணங்களுக்கும் எவ்வித பற்றாக்குறையும் இருக்கவில்லை. மேற்குறிப்பிட்ட ஒரு சிலர் ஒரு சில விடயங்கள் தவிர மற்றும்படி வழமையான கோயில் மேளங்களே முழங்கின. அதனால் அங்கு பேசப்படக் கூடிய ஆரோக்கியமான அம்சங்களும் கோயில் மேளத்தின் சத்தத்தில் கரைந்து போனது.

2._._._._._.

‘தமிழீழமே எமது மக்களுக்கு ஒரே தீர்வு.’ ‘புலிகளுடைய தடையை நீக்க வேண்டும்.’ புலிகள் சிறுவர்களை படையில் சேர்ப்பதில்லை.’ ‘புலிகள் மனித உரிமைகளை மீறுவதில்லை.’ ‘சர்வதேசம் இலங்கை அரசு சொல்வதையே நம்புகிறது.’ போன்ற விடயங்கள் இவ்வாறான புலி ஆதரவு அமைப்புகளால் நடாத்தப்படும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் அதே  நபர்களால் கூறப்படுகிறது. கருத்தரங்கு என்னவோ மறக்கப்பட்ட வன்னி மக்களுக்காக என்று சொல்லப்பட்டாலும் வன்னி மக்களை அந்த மரணப் பொறியில் இருந்து எவ்வாறு விடுவிக்கலாம் என்பதிலும் பார்க்க இந்த அவலத்தைக் கொண்டு தங்கள் தமிழீழக் கனவுக்கு உறுதி சேர்ப்பதாகவே கருத்துக்கள் அமைந்தது.

வழமையான புலி ஆதரவுக் கூட்டங்களில் கருத்துச் சொல்ல எழும் அம்மையார் ஒருவர் இந்தக் கருத்தரங்கையும் விட்டுவைக்கவில்லை. புலிகள் சிறுவர்களை படைகளில் சேர்ப்பதாக பொதுவாக குற்றம்சாட்டப்படுகிறது என்று ஆரம்பித்த அவர் தான் சிறுமியாக இருக்கும் போதே இங்கு வந்துவிட்டதாகவும் ஆனால் தனக்கு குழந்தைகள் இருந்திருந்தால் அவர்கள் வீணாக இறப்பதிலும் பார்க்க புலிகளில் சேர்ந்து இறந்திருந்தால் அதனை எண்ணிப் பெருமைப்பட்டு இருப்பேன் எனக் கூறினார். அதற்கு அங்கிருந்தவர்கள் பலத்த கரகோசம் எழுப்பினர். விசிலடிக்காத குறை. இதிலுள்ள உண்மை என்னவென்றால் அந்த அம்மையார் குழந்தைக்கு தாயானவர் அல்ல. திருமணமாகாதவர். அரசியல்வாதிகள் போல் கைதட்டல்களுக்காகவும் விசிலடிச்சான் குஞ்சுகளைத் திருப்திப்படுத்தவும் மிக முக்கியமான விடயங்களை கவர்ச்சியாக்கி பேசும் இப்போக்கு தமிழரசுக் கட்சி கூட்டணி என்று இன்று லண்டனிலும் தொடர்கிறது.

இது அந்த அம்மையாரில் மட்டும் தவறு அல்ல. அதற்கு கூட இருந்து கைதட்டிய சீமான்களும் சீமாட்டிகளும் அவருக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்களும் அல்ல. பெரும்பாலும் பிரைவேட் ஸ்கூலில் படிக்கும் டொக்டராகவும் இன்ஜினியராகவும் இல்லாவிட்டால் குறைந்தது எக்கவுண்டனாக ஆவது வரக் கனவு காணும் தங்கள் பிள்ளைகளை தங்கள் தமிழீழக் கனவுக்கு அனுப்புவார்களா? ஆனால் வன்னியில் உள்ளவர்கள் மட்டும் தங்கள் குழந்தைகளை விரும்பி புலிகளின் படைகளில் சேர்ப்பிக்கிறார்கள். அதற்கு இவர்கள் கைதட்டி பாராட்டுகிறார்கள்.

நாங்கள் எங்கள் வருமானத்தைப் பார்க்காமல் வேலைகளை விட்டுவிட்டு பெல்ஜியத்துக்கு சென்று குரல் எழுப்பினோம் ஆனால் எந்தப்பயனும் இல்லை என்று குறைப்பட்டார் அங்கு கருத்து வெளியிட்ட ஒரு வர்த்தகப் பிரமுகர். ஒரு சில நாள் போராட்டத்திற்கே கணக்குப் பார்க்கும் இவர் கடந்த முப்பது வருடமாக போராடி கடந்த மூன்று மாதகாலமாக தங்கள் பதுங்கு குழிகளே புதைகுழிகளாகலாம் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அந்த மக்களின் கணக்கு வழக்கைப் பார்க்கத் தயாரா?

இந்த உரையாடலில் சென் கந்தையா கொள்கை விளக்கம் அளிக்கிறார். வன்னி மக்களை வெளியேற்றுவது பற்றி பிரித்தானிய தமிழர் பேரவை ஒரு உறுதியான நிலைப்பாடு எடுத்து உள்ளதாம். அந்த மக்களை அவர்கள் வாழும் பூர்வீகப் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றுவதை புலம்பெயர்ந்த மக்கள் அனுமதிக்க முடியாதாம். வடக்கு கிழக்கை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து விட்டனர். மிகுதமானோரில் அரைப்பங்கினர் தெற்கிற்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள். ஆக மொத்தம் வெளிநாடுகளுக்குப் போக வசதியுள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றாகிவிட்டது. வசதி சற்று குறைந்தவர்கள் கொழும்புக்குச் சென்றாகிவிட்டது. எதற்கும் நாதியற்றவர்கள் முல்லைத்தீவில். இவர்களுக்கு இல்லாத பூர்வீக பூமியின் அக்கறை முல்லைத் தீவில் மரணத்தின் விளிம்பில் உள்ளவர்களுக்கு இருக்கிறதாக சென் கந்தையா விளக்கம் அளிக்கிறார். கேக்கிறவன் கேனையன் என்றா இப்படித்தான் கொள்கை விளக்கங்கள் இருக்கும்.

வன்னிக்கு வாழ்க்கையில் ஒரு தடவையோ சில தடவையோ சென்ற ஒரு ஊடகவியலாளரைக் கூட்டிவந்து தமிழ் மக்களுக்கு வன்னி அவலத்தை விளக்க வேண்டிய அவசியம் பிரித்தானிய தமிழர் பேரவைக்கு ஏன் வந்தது என்பது தெரியவில்லை. (சில சமயம் போராட்ட காலத்துக்கு முன்பே புலம்பெயர்ந்த டொக்கடர் என்ஜினியர்களுக்கு ஆனந்தி அக்கா சொன்னால் விளங்காது ஒரு வெள்ளைத் தோல் ஜேர்னலிஸ்ட் மூலம் தான் கதைசொல்ல வேண்டும் என்றும் கருதி இருக்கலாம்.) பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிரித்தானிய ஊடகவியலாளர்களையும் அழைத்து வந்து இந்த கருத்தரங்கை அவர்களுக்காக நடத்தி இருந்தால் வன்னி நிலவரத்தை சர்வதேச மயப்படுத்த உதவியிருக்கும். இவ்வாறான கோயில் மேளங்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து நடத்தப்படும் கருத்தரங்குகள் கூட்டங்கள் …… வாக்கு வங்கிகளுக்கு மட்டுமே உதவும்.

அத்துடன் கூட்டத்தின் முடிவில் 5 பவுண்களுக்கு ‘Free Tamil Eelam’ விற்கலாம். நேற்றும் விற்றார்கள். புலம்பெயர் மக்கள் 5 பவுண்களுடன் தமிழீழத்தை பெற்றுக்கொண்டார்கள்.

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம்: சட்டரீதியாகவோ வழக்குகளின் அடிப்படையோ மாறவில்லை. ஆனால் நீதிமன்றங்கள் நீதி வழங்குகின்ற பொறுப்பை தட்டிக் கழிக்க பார்க்கிறார்கள். – அருண் கணநாதன் உடனான நேர்காணல் : த ஜெயபாலன்

Arun Gananathan ._._._._._.
அருண் கணநாதன் பிரித்தானியாவில் நன்கு அறியப்பட்ட அரசியல் தஞ்ச சட்டவல்லுனர். பிரித்தானிய அரசின் அரசியல் தஞ்சம் தொடர்பான கடும் போக்கை கடுமையாக விமர்சிப்பவர். பிரித்தானிய அரசில் தஞ்ச நடைமுறைகளுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்து வருபவர். ‘தேசம்’ ஏற்பாடு செய்த அரசியல் தஞ்சம் தொடர்பான நடவடிக்கைகளில் எப்போதும் தனது ஆதரவை வழங்குபவர். இன்று ஒரு புறம் இலங்கையில் மிக மோசமான மனித அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கையில் பிரித்தானியாவில் இருந்து அகதிகளைத் திருப்பி அனுப்புகின்ற நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகிறது. இவை தொடர்பாக லண்டன் குரல் பத்திரிகைக்கு சட்ட வல்லுனர் கணநாதன் வழங்கிய நேர்காணலின் முழுமை இங்கு தரப்படுகிறது.
._._._._._.

ல.குரல்: பிரித்தானிய அரசியல் தஞ்ச நடைமுறைகள் அண்மைக்காலத்தில் எவ்வாறு உள்ளது?
கணநாதன்: சட்டரீதியாகவோ வழக்குகளின் அடிப்படையோ மாறவில்லை. ஆனால் உள்துறை அமைச்சினுடைய அணுகுமுறையில் கடும் போக்கு ஏற்பட்டு உள்ளது. அத்தோடு நீதி மன்றங்களும் பாராபட்சமாக தனிப்பட்ட வழக்ககளில் தலையிட்டு நீதி வழங்குகின்ற பொறுப்பை தட்டிக் கழிக்க பார்க்கிறார்கள். இப்படியான மாற்றங்கள் தான் ஏற்பட்டு இருக்கிறது. அகதிச் சட்டத்தில் சட்ட ரீதியான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.

பப்ளிக் லோ (public law) என்று எடுத்தால் அதற்குள் தான் இமிகிரேசன் (immigration) வருகிறது. ப்ளட்கேற் (floodgate) என்று சொல்வார்கள். எத்தனை எத்தனை பேர் நாட்டுக்கு வருகிறார்கள் நாட்டின் நலன் என்ற அரசியல்கள் கட்டாயம் இருக்கும். அது தொடர்பான விசயங்களைக் கொண்டு தான் முடிவுகளை எடுப்பார்கள். தனிப்பட்ட அகதித் தஞ்ச வழக்கில் கொள்கை, ப்ளட்கேற்றை வைத்து முடிவெடுப்பது வந்து பக்க சார்பன தீர்ப்பாகிவிடும். அதனால் அவர்கள் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் மறைமுகமாக அதைத்தான் செய்கிறார்கள்.

ல.குரல்: நீதித்துறையின் இந்த தட்டிக் கழிக்கும் போகை;கை சட்டப்டி எதிர்கொள்ள முடியாதா?
கணநாதன்: இன்றைக்கு இமிகிரேசன் ஜடஜ் ஆக இருக்கட்டும், அப்பீல் கோட் ஜட்ஜ் ஆக இருக்கட்டும், ஹைக்கோட் ஜட்ஜ் ஆக இருக்கட்டும் இந்த நீதிபதி வந்தால் அகதிக்கு எதிராகத்தான் தீர்ப்பு வழங்குவார் இந்த நீதிபதி வந்தால் அகதிக்கு சார்பாக நீதி வழங்குவார் என்பது பெரும்பாலும் எல்லாருக்கும் தெரியக் கூடிய வகையில் தீர்ப்பு வழங்கிக் கொண்டு வருகிறார்கள். அப்படி இருந்தும் இந்த நீதிபதி அகதிக்கு சார்பாக எப்போதும் நீதி வழங்காதவர் என்ற அடிப்படையில் வழக்கைத் தொடருவதற்கு பிரித்தானிய நீதித்துறையில் ஒரு செயன்முறையில்லை.

அதனை எப்படி எதிர்கொள்ளலாம் என்றால் இந்த நீதிபதி தட்டிக்கழித்து நீதி வழங்காதவிடத்து வேறு சட்டக் காரணங்களின் அடிப்படையில் அவ்வழக்கு மேலே செல்லும் போது அந்த நீதிபதி அகதிக்கு சார்பாக தீர்ப்பளிப்தற்கான வாய்ப்பு ஏற்படும்.

அதில் இப்போது உள்ள பிரிச்சினை என்னவென்றால் வழக்கை மேலே கொண்டு செல்வதற்கான செலவீனம். இவ்வாறு அரசியல் தஞ்சத்தை இறுக்கமாக்கிய உள்துறை அமைச்சு சட்ட உதவி வழங்குவதையும் தொண்ணூறு வீதம் வரை குறைத்துவிட்டுள்ளது. அதனால் அகதிகளும் தொடர்ந்தும் பணத்தை இறைத்து இந்த வழக்குகளைத் தொடர முடியாத நிலையில் வழக்குகளைக் கைவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ல.குரல்: பிரித்தானியாவில் இருந்து அண்மையில் 150 பேர் வரை இலங்கைக்கு திருப்பி அனுப்பபட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இது பற்றி நீங்கள் அறிந்தவற்றைக் கூற முடியுமா?
கணநாதன்: ஈராக் போன்ற நாடுகளுக்கு கனகாலமாக இப்படி செய்துகொண்டு இருக்கினம் ஆனா இலங்கையைப் பொறுத்தவரை charter flight புக் பண்ணி ஆட்களை திருப்பி அனுப்பினது இது தான் முதற்தடவை. இதை பிரித்தானிய தூதரகமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. தமிழ் மக்கள் பத்தியில் 150 பேர் அனுப்பப்பட்டதாக கதை உலாவுகிறது. ஆனால் நான் அறிந்த அளவில் 40 முதல் 50 பேர் வரையே திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.

இலங்கையில் உள்ள பிரித்தானிய துதரகமும் இவர்கள் திருப்பி அனுப்பபட்டதைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். இலங்கையில் யுத்தம் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது அதனால் தான் தாங்கள் இப்படியான இறுக்கமான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறம் என்றும் சொல்லி இருக்கிறார்கள். மற்றது திருப்பி அனுப்பப்படுவது தொடர்பாக இலங்கைக்கும் பிரித்தானியாவுக்குமிடையே ஒரு பிரத்தியேக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டு உள்ளதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

எங்கள் சமூகத்தில் உள்ள பிரச்சினை என்னென்று கேட்டால் வழமையாகவே 10 முதல் 30 பேர் வரை கிழமைக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதை நாங்கள் கண்டும் காணாமல் விட்டுவிட்டு இருந்துவிடுகிறோம்.

ஆனால் இந்த சாட்டர் ப்ளைட்டில் தொகையாக ஆட்கள் அனுப்பட்ட விடயம் தான் ஒரு பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. அது தான் அரசாங்கத்தின் நோக்கமும். இந்த அரசாங்கம் வந்து போடர்களை ரைற்ரின் பண்ணி இந்த நாட்டில் சட்ட விரோதமாக வந்து அகதி அந்தஸ்து கேட்கிற நிலையை சரியாகக் குறைத்து விட்டது. மற்றைய நாட்டவர்களை விட இலங்கையர்கள் தொடர்ந்து இவர்களது எல்லையை கட்டுப்பாடுகளை உடைத்து விசாக்களை எடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டுக்கு வந்தால் அகதி அந்தஸ்து வழங்கப்படும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது என்று பிரித்தானிய அரசாங்கம் பயப்படுகிறது. இந்த நம்பிக்கையை உடைத்து திருப்பி அனுப்பப்படுவினம் என்ற திகிலை ஏற்படுத்தவதற்குத் தான் பிரித்தானிய அரசாங்கம் இந்த சாட்டர் ப்ளைற் என்ற நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள் என்றது என்னுடைய கருத்து.

Asylum_Cartoonல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் திருப்பி அனுபப்பப்படுவது தீவிரமடைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இது பற்றி விரிவாகக் கூறமுடியுமா?
கணநாதன்: இதற்கு முதல் ஒரு சமூகமாக வந்து கூடி இந்த திருப்பி அனுப்பப்படுவதை பேசியது வந்து 2007 யூனில். அப்போது எல்பி என்றவரின் வழக்கு முடிவு வரப்போகிறது. அந்த முடிவு வந்தால் அது அகதி வழக்குகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதனால் அதற்கு முன்னர் உள்துறை அமைச்சு திருப்பி அனுப்புவதில் துரிதகதியில் செயற்பட்டது. அதற்குப் பின்னர் என்ஏ என்பவருடைய வழக்கு ஈரோப்பியன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால் திருப்பி அனுப்பப்படுவது ஓரளவு நிறுத்தப்பட்டது. தமிழர்கள் ஐரோப்பிய நீதிமன்றத்திற்குப் போய் தடை உத்தரவுகளைப் பெற்று ஓரளவு இந்த நாடுகடத்தலை தவிர்த்துக் கொண்டு வந்தனர். அதற்குப் பிறகு ஈரோப்பியன் கோட் போன வருடம் 2008 ஏழாம் மாதம் தங்களுடைய தீர்ப்பினை வழங்கியது. அது சாதகமான தீர்ப்பாகத் தான் இருந்தது. ஆனால் தடை உத்தரவை வந்து வெறுமனே தமிழர் என்ற அடிப்படையில் வழங்க முடியாது என்று தெரிவித்திருந்தது. ஆனால் என்ஏ இன் வகைக்குள் வருபவர்களுக்கு அதுவும் யுகே நீதிமன்றங்கள் முழுமையாக நிராகரித்த பின்னர்தான் தாங்கள் தடையுத்தரவை வழங்குவோம் என்று ஈரோப்பியன் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

அதற்குப் பிறகும் தமிழர் என்ற அடிப்படையில் தருப்பி அனுப்புவதை நிறுத்தவதற்கான தடையுத்தரவைக் கேட்டவர்களுக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுக் கொண்டு வந்தது. இப்ப ஒரு இரண்டு மூன்று மாதமாக திருப்பி அனுப்புவது தீவிரம் அடைந்திருக்கிறது. ஒரு வருடமாக ஈரோப்பியன் கோர்ட்டின் தடையால் அனுப்ப முடியாமல் போன வெற்றிடத்தை துரித கதியில் அனுப்பி ஈடுசெய்ய உள்துறை அமைச்சு முற்பட்டு உள்ளது.

ல.குரல்: அண்மைக்காலத்தில் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் யாராவது மீண்டும் அழைக்கப்பட்டு இருக்கிறார்களா?
கணநாதன்: அண்மைக்காலத்தில் இல்லை. ஆனால் 2001ல் குமரகுருபரனுடைய வழக்கை கூறலாம். குமரகுருபரன் இந்த நாட்டில் இருந்து அனுப்பப்பட்டு விட்டார். அப்படியிருக்க அவரை திருப்பிக் கொண்டுவர வெண்டும் என்று கோரி நாங்கள் ஹைக் கோட்டுக்குப் போய் நிரூபித்து திருப்பிக் கொண்டு வந்து வதிவிட உரிமையையும் பெற்றுக் கொடுத்தோம்.

அதற்கு முன்னரும் 1987 – 88 காலப்பகுதியில் சிவகுமாரன் என்பவருடைய வழக்கு ஐரோப்பிய நீதிமன்றம் வரை சென்றது. திருப்பி அனுப்பப்பட்டவர் மீண்டும் திருப்பி அழைக்கப்பட்டார்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடர முடியாமல் எத்தனை பேர் உள்ளனர் என்று மதிப்பிட முடியுமா? அவர்களின் எதிர்காலம் என்ன?
கணநாதன்: என்னைப் பொறுத்தமட்டில் குறைந்தது நூற்றுக் கணக்கிலாவது இருப்பார்கள் என்று தான் நினைக்கிறேன். பலபேர் 1990க்களில் வந்து நிராகரிக்கப்பட்டவர்கள். அதற்குப் பிறகு வழக்கு கைவிடப்பட்ட நிலையில் அப்படியே இருக்கிறார்கள். அதற்கப் பிறகு 2000 – 2004 ம் ஆண்டுக்கு இடையில் நடந்த வழக்குகளால் பல பேர் அப்படியே காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த திருப்பி அனுப்புதல் என்பது 2005, 2006க்குப் பின்னர்தான் தொடங்கப்படுகிறது. அதற்கு முன்னர் பெரிய அளவில் இலங்கைத் தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படவில்லை.

லிகசி கேஸஸ் (legacy case) என்ற அடிப்படையில் 2007ல் இருந்து பல குடும்பங்களுக்கு விசாக்கள் வழங்கி தஞ்ச வழக்கு முடிவுகள் தெரியாமல் இருந்தவர்களின் தொகையை சரியாகக் குறைத்துக் கொண்டார்கள். 2008லும் விசாக்கள் வழங்கப்படாமல் இழுபட்ட பல வழக்குகளுக்கு விசாக்களை வழங்கி அந்தத் தொகையைக் குறைத்துக் கொண்டார்கள்.

என்னுடைய மதிப்பீட்டின்படி அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடர முடியாதவர்களின் எண்ணிக்கை குறைந்தது 5000 பேராவது இருப்பார்கள். இவர்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துக் கொண்டால் சற்று கூடுதலாக இருக்கும். அவர்களுக்கு முடிவில்லாத சூழ்நிலை ஒன்று இருப்பதையும் பீதி ஒன்று நிலவுவதையும் பார்க்கக் கூடியதாய் இருக்கிறது. திருப்பி அனுப்பப்டுவதற்கான அச்சமும் இருக்கிறது.

உள்துறை அமைச்சைப் பொறுத்தவரை லிகஸி கேஸ் அடிப்படையில் 2007 – 2008 நடுப்பகதி வரை விசாக் கொடுக்க வேண்டியவர்கள் எல்லோருக்கும் விசா கொடுத்தாகி விட்டது. இனி உள்ளவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டியவர்கள் தான் என்ற மனநிலையுடன் செயற்படுவதாகவே நான் நினைக்கிறேன். இப்படியான பார்வையால் ஏற்படுகின்ற உளவியல் தாக்கம் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களது வழக்கையும் தட்டிக்கழிக்கின்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது. அதனால் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டு ஆனால் விதிவிலக்குகளின் அடிப்படையில் (எக்செப்சனல் லிவ்ற்று ரிமெயின் – Exceptional Leave to Remain ELR) விசா வழங்கப்பட்டவர்களின் விசாக்கள் பறிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா?
கணநாதன்: இப்ப எக்செப்சனல் லீவ்ற்று ரிமெயின் என்பதை நிப்பாட்டி டிஸ்கிரேசனல் லீவ்ற்று ரிமெயின் (Discretionary Leave to Remain) என்பதைத்தான் கொடுத்து வருகினம். அதற்கு உரிமைகள் கொஞ்சம் குறைவாகவே உள்ளது. முன்னர் வந்து 4 வருடம் ஒருவர் ஈஎல்ஆர் ல் இருந்தால் அவருக்கு ஐஎல்ஆர் வழங்கப்பட்டு வந்தது. இப்ப ஒருவர் ஆறுவருடம் டிஸ்கிரேசனல் லிவ்று ரிமெயினில் இருந்தால் தான் அவருக்கு ஐஎல்ஆர் கொடுக்கப்படலாம். ஆனால் ஐஎல்ஆர் (Indefinite Leave to Remain ILR) கொடுக்கிற தன்மை வந்து இப்ப குறைந்து வருகிறது.

அப்படி இருந்தாலும் கொடுத்ததை பறிக்கிற தன்மை என்பது அவர்கள் இந்த நாட்டில் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. பொய்சொல்லி பிழையாக நடந்து இந்த விசாவைப் பெற்று இருந்தால் விசாவுக்கு கொடுத்த காரணங்கள் இல்லாமல் போனால் அதாவது திருமணம் முடிக்கும் போது அதற்காக மற்றவருக்கு வழங்கப்பட்ட விசா அவர்களுடைய திருமணம் விவாகரத்தில் முடிந்தால் மற்றவருடைய வீசா மீளப் பெறப்படலாம். எல்லாவற்றிலும் மிக மிக முக்கியமானது சம்பந்தப்பட்டவர்கள் கிரிமினல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு அதற்காகத் தண்டணை பெற்றல் அவர்களுக்கு வழங்கப்பட்ட விசா பறிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

Arun Gananathanல.குரல்: தஞ்சம் மறுக்கப்படுவதில் சட்டத்தரணிகளின் கவலையீனங்கள் அறிவீனங்கள் முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. அது பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
கணநாதன்: சட்டத்தரணிகளின் கவலையீனங்கள் பற்றி நாங்கள் வருடாவருடம் கதைத்துக் கொண்டு வாறம். அது வந்து ஒரு புதிய ரொப்பிக் இல்லை. ஆனால் நான் அவர்கள் பிழைவிடவில்லை என்று சொல்லவரவில்லை. அது இருந்துகொண்டுதான் இருக்கிறது. அது ஒரு பிரச்சினை தான். அது தமிழருக்க மாத்திரம் உரித்தானது இல்லை. மற்ற சமூகங்களுக்கும் உள்ள பிரச்சினைதான்.

ஆனால் என்னுடைய கருத்து வந்து இந்த நாட்டில் இந்த சட்டங்களின் தரம் குறைந்துவிட்டது. மற்றும்படி எல்லாத் துறைகளிலும் தங்கள் தொழில்சார்ந்த பொறுப்புகளை உணராதவர்கள் செய்யாதவர்கள் இருக்கிறார்கள். அப்படி சட்டதுறையிலும் இருக்கிறார்கள். ஆனால் இதைப்பற்றிய விழிப்புணர்வு எங்களுடைய மக்கள் மத்தியில் நிறைய இருக்கிறது. அதனால் நல்ல சட்டத்தரணிகளுக்கும் சட்ட ஆலோசகர்களுக்கம் கூட சங்கடங்கள் உண்டு. ஏனென்று சொன்னால் அந்த நம்பகத் தன்மை வந்து சரியாக உடைக்கபட்டுவிட்டது. நல்ல சட்ட ஆலோசனைகளை வழங்கினாலும் அதனையும் சந்தேகத்துடன் பார்க்கின்ற போக்கு வந்தள்ளது.

சட்டத்தரணிகள் கவலையீனமாக இருந்தாலும் அதனை கவனித்தக் கொள்ள பல வழிகள் இருக்கின்றது. முக்கியமாக நாங்கள் அடிப்படை ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். பத்திரங்களைப் பார்த்து என்ன நடந்து இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அடுத்தது முக்கியமாக பைலை வைத்திருக்க வேண்டும். அதுக்கு முக்கியமாக சட்டத்தரணிகளோ சட்ட ஆலோசகரோ தான் பிழையென்று சொல்ல முடியாது. 10 – 12 வருடங்கள் இருப்பார்கள். ஆனால் இரண்டு துண்டு பேப்பர் மட்டும்தான் அவர்களிடம் இருக்கும். தங்களுடைய பத்திரங்களின் கொப்பிகளை கவனமாக எடுத்து வைக்கிறதில்லை. அதைத் தவறவிட்டு இருந்தால் கூட உள்துறை அமைச்சிற்கு 10 பவுண்களைச் செலுத்தி அதற்கான பிரதிகளை எடுத்து வைத்திருக்க வேண்டும். இப்படி நாடுகடத்தப்படுகின்ற அபாயமான சூழல் உள்ள இந்தக் காலப்பகுதியில் ஒவ்வொருத்தரும் 10 பவுணைக் கட்டி தங்கள் பைலை முழுமையாக எடுத்து வைத்திருக்க வேண்டும். அப்பதான் நாடு கடத்துவதற்கு பிடித்தவுடன் அதைத் தடுப்பதற்கான முதலாவது ஜீடிசல் ரிவியூவை (judicial review)செம்மையாகப் போட்டு நாடுகடத்தல் அபாயத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

ல.குரல்: பிரித்தானியா உட்பட சர்வதேச அளவில் பொருளாதார விழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இது அரசியல் தஞ்ச விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதா?
கணநாதன்: ஓம். தாக்கத்தை ஏற்கனவே ஏற்படுத்தி இருக்கிறது. எப்படியென்று கேட்டால் சட்ட ரீதியாக சட்டங்கள் எதனையும் உட்புகுத்தவில்லை. ஆனால் இன்றைக்கு வந்து அகதிகளை மிகவும் பிழிந்து மிகவும் கஸ்டமான நிலையில் தான் இந்த அரசாங்கம் தள்ளி வைத்திருக்கிறது. பொதுவாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட குற்றச்செயல்கள் அதிகரிக்கும். அதில் இந்த அகதிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்படுவார்கள் என்ற பயம் இவர்களுக்கு இருக்கிறது. அது கொள்கை ரீதியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

அதைவிட இன்னொரு காரணம் என்னவென்றால் உள்துறை அமைச்சில் பொலிசி என்றொன்று இருக்கிறது. மற்றது அதனை நடைமுறைப்படுத்துவது. அலுவர்கள் மட்டத்தில் நடைமுறைப்படுத்துபவர்கள் தங்களுடைய வேலைக்கு தங்களுடைய குடும்பத்தினரின் வேலைக்கு ஆபத்து வருமா என்ற கலக்கத்துடன் விண்ணப்பங்களை பரசீலிக்கும் போது அவர்கள் பெருந்தன்மையாக நடக்கக் கூடிய சூழ்நிலை இல்லாமல் போகிறது. அது அவர்களையும் கடும்போக்கு உடையவர்களாக்குகிறது.

உதாரணமாக அண்மைக்காலமாக வேர்க் பெர்மிசன் (work permision) வந்து பல பேருக்கு நிப்பாட்டி வந்தார்கள். ஒரே ஒரு குழுமத்தைத் தான் விட்டு வைத்தார்கள். அதாவது ஒரு வருடத்திற்கு மேல் தஞ்ச விண்ணப்பம் தொடர்பாக முடிவெடுக்கப்படாதவராக இருந்தால் வேர்க் பெர்மிசன் கொடுக்க வேணும் என்று இமிகிரேசன் லோவில் இருக்கிறது. அந்த வகைப்பட்டவர்களுக்கு வேர்க் பெர்மிசன் கொடுத்து இருந்தார்கள். அதைவிட முன்னர் வேர்க் பெர்மிசன் வழங்கி அவர்களுடைய வழக்கு முடிவுக்கு வராமல் இருந்தாலும் வேர்க் பெர்மிசனை கொடுத்து வந்தார்கள். அண்மைக் காலத்தில் திடீரென்று ஐடி கார்ட்டில் வேர்க் பெர்மிசன் இருக்க வேண்டும் என்பது கட்டாயமானது. அப்படி இருக்கும் போது கடந்த 3 – 4 மாதங்களுக்குள் ஐடி காட் புதுப்பிக்க வேண்டும் என்று கூப்பிட்டுப் விட்டு வேர்க் புரொகிபிற்றற் (work prohibited) என்று புது ஐடி காட்டை அடித்து கொடுக்கிறார்கள். இது நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதார வீழ்ச்சி அகதி விண்ணப்பங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதையே காட்டுகிறது.

ல.குரல்: இலங்கையில் இன்று இராணுவச் சமநிலையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் பிரித்தானியாவிலும் ஐரோப்பாவிலும் அரசியல் தஞசம் கோரியுள்ளவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
கணநாதன்: உண்மையாக ஒரு மாற்றத்தையும் கொண்டு வரக்கூடாது. ஏனென்று கேட்டால் யுத்தம் என்றது சிவில் வோர். சிவில் வோர் ரிப்பியூஜிஸ் 1951 கொன்வென்சனுக்குக் (Civil War Refugees – 1951 Convention) கீழ் அடங்க மாட்டார்கள். அதனால் தான் எங்களுக்கு யுத்த காரணங்களுக்காக அகதி அந்தஸ்து வழங்கப்படுவதில்லை. இருந்தாலும் பிரித்தானிய தூதரகம் அதனையும் ஒரு காரணமாகக் காட்டி உள்ளது. அதாவது இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த கொண்டிருக்கிறது அதனால் தான் அகதிகளைத் திருப்பி அனுப்புவதில் தீவிரமாக இருக்கிறோம் என்று.

அவர்களுக்கு உள்ள பயம் என்னென்று கேட்டால் வடக்கில் நடக்கிற கொன்வென்சனல் வோர் வந்து பிரச்சினைக்கு உள்ளானால் தென்பகுதியில் வந்து கொரில்லா முறையிலான யுத்தம் பரவும் என்று பயப்படுகின்றார்கள். இந்த நாட்டில் அகதிகளின் வழக்குகள் வந்து கொழும்பில் என்ன நிலைமைகள் என்பதை வைத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது. உள்துறை அமைச்சுக்கு உள்ள பீதி என்னென்றால் யுத்தம் கொழும்புக்கு பரவுகிற நிலை ஏற்பட்டால் அது அகதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும். அதனால் தங்களால் அகதிகளைத் திருப்பி அனுப்ப முடியாமல் போவதுடன் அகதி அந்தஸ்து வழங்க வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம் என்பது.

ல.குரல்: இலங்கை யுத்தத்தின் இராணுவச் சமநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் விடுதலைப் புலிகளின் போராளிகள் அல்லது விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய பலர் அரசியல் தஞ்சம் கோருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவர்களுடைய விண்ணப்பங்கள் எவ்வாறு பரிசீலிக்கப்படும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
கணநாதன்: விடுதலைப் புலிகள் மாத்திரம் என்றல்ல பொதுவாக வேரர்க் க்ரைம் (war crime) என்று 1951 அகதிச் சட்டத்திலேயே கூறப்பட்டு இருக்கிறது. அதாவது தனிப்பட்ட முறையில் அகதித் தஞ்சம் கோருபவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் அல்லது பெரிய அளவில் மனித உரிமை மீறும் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்திருந்தால் அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கக் கூடாது என்று என்று எக்ஸ்குளுசன் குளோஸ் (exclusion clause)என்ற தன்மையும் தமிழர்களுடைய வழக்குகளை நிராகரிக்கின்ற தன்மை 2006ல் இருந்து காணப்பட்டு வருகிறது.
 
இது தமிழீழ விடுதலைப் புலிகளை மாத்திரமல்ல எந்த இயக்கத்தைச் சார்ந்திருந்தாலும் அவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்களா? அந்த அமைப்புகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனவா? என்று பார்த்து அதற்கு சிறு ஆதாரமாவது இருந்தால் அதனைக் காரணமாகக் காட்டிக் கூட அவர்களது வழக்குகளை நிராகரித்து வருகிறார்கள். அப்படி நிராகரித்தாலும் அவர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்ப முடியாது. ஏனெனில் அகதி அஸ்தஸ்து கிடைக்காவிட்டாலும் மனித உரிமை சாசனத்தின் ஆட்டிக்கிள் 3 இன் கீழ் அவர்களை இந்த நாட்டில் இருந்து திருப்பி அனுப்பாமல் பாதுகாப்புத் தேடக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.

இந்த அடிப்படையில் வழக்குள் நிராகரிக்கப்பட்டு தொடர்ந்தும் வழக்குகள் நீதிமன்றங்களில் வாதாடப்பட்டு தொடர்ந்தும் அகதி அந்தஸ்து பெற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு சில வழக்குகள் இந்த எக்ஸ்குளுசன் குளோசில் சேர்க்கப்பட்டு அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களாகவும் ஆட்டிக்கிஸ் 3 இன் கீழ் திருப்பி அனுப்பப்படுவதில் இருந்து பாதுகாப்புப் பெற்றும் இருக்கிறார்கள்.

ல.குரல்: அண்மைக்காலத்தில் அரசியல் தஞ்ச விண்ணப்பங்கள் தஞ்சம் கோரியவருக்கு சாதகமாக பரிசீலிக்கப்பட்டு உள்ளதா? எவ்வாறான விண்ணப்பங்கள் தஞ்சம் கோரியவருக்கு சாதகமாகப் பரிசிலிக்கப்பட்டு உள்ளது?
கணநாதன்: இது புதிதாக வந்து அரசியல் தஞ்சம் பெற்றவர்களுக்கான கேள்வி என்று பார்க்கிறேன். அப்படி பார்க்கும் போது ஓம்! இந்த நியூ அசைலம் மொடல் ஏப்ரல் 2007ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்குக் கீழ் வந்த வழக்குகள் சாதகமான முடிவுகளைப் பெற்றது. அதுவும் இப்ப 2008 கடைசிப் பகுதியில் இருந்து மோசமான நிலைக்கு போய்விட்டது. பழைய ஹோம் ஒபிஸ் மாதிரி எதையும் நிராகரிக்கிற நிலைக்குப் போய்விட்டது. இது இலங்கை அகதிகளுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் அப்படியான நிலையே ஏற்பட்டு இருக்கிறது.

ல.குரல்: வழமையாக வழங்கப்படும் ஐஎல்ஆர் முறை நீக்கப்பட்டு தற்போது எல்எல்ஆர் Limited leave to remain (LLR) வழங்கப்படுவது பற்றி சற்று விளக்கவும்?
கணநாதன்: இந்த நடைமுறை வந்து 2005லேயே வந்துவிட்டது. அகதி அஸ்தஸ்து கிடைத்தாலும் ஐஎல்ஆர் வழங்கப்படுவதில்லை. எல்எல்ஆர் 5 வருடங்களுக்கு வழங்குகிறார்கள். அதுக்குப் பிறகு அவர்கள் இந்த நாட்டில் எந்தவித குற்றங்களும் புரியாமல் இருந்தால் அவர்களுடைய நாட்டின் சூழ்நிலை குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் காணாத இடத்தில் அவர்களுக்கு அந்த 5 வருடங்களின் பிறகு ஐஎல்ஆர் வழங்குவது என்பது தான் நடைமுறையாக இருக்கிறது. அதில் ஒரு விடயம் முக்கியமாக வருகிறது. என்னவென்றால் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையில் அல்லது இந்தியாவில் இருந்தால் (அவர்கள் அகதி அந்தஸ்து கோருவதற்கு முன்னரேயே திருமணமாகி இருந்தால் பெரிய மாற்றம் இல்லை.) அவர்கள் தங்கள் குடும்பங்களைக் கூப்பிடக் கூடியதாக இருக்கிறது. இல்லாமல் தனி இளைஞராக வந்து அவரது அரசியல் தஞ்சம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு எல்எல்ஆர் வழங்கப்பட்டால் அவர் மற்ற நாட்டுக்குச் சென்று திருமணம் முடித்து ஸ்பொன்சர் செய்யும் போது சில சிக்கல்கள் ஏற்படும்.

Asylum_Cartoonல.குரல்: அரசியல் தஞ்சம் கோரி உலகின் பல பாகங்களிலும் பலர் தங்கள் பயணத்திற்காகக் காத்து இருக்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் என்ன ஆலோசனை வழங்க முடியும்?
கணநாதன்: சட்டத்தின் கீழ் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது சரியான நடவடிக்கை இல்லை. பொதுவாக ஒரு அரசியல் என்று கதைத்தால் அது அவர்களுடைய முடிவு. இன்றைக்கு இலங்கையின் மனித உரிமைநிலைமை மிகவும் மோசமானதாக இருக்கிறது. அரசியலில் சம்பந்தப்படாத ஒரு தமிழரும் கூட நிம்மதியாக வாழ முடியாத சூழல் ஒன்று அங்கிருக்கிறது. அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவது என்பது எங்களுக்கு விளங்கக் கூடியதாக இருக்கிறது. அவர்களை வரவேண்டாம் என்று சொல்கிற உரிமை எங்களுக்கு இல்லை. நாங்கள் என்ன சொல்லலாம் என்றால் இங்கு வந்தவுடன் ஏதோ அள்ளிக் கொடுக்கினம் இங்க வந்தவுடன் அகதி அந்தஸ்து கிடைக்கிறது என்ன மாயையை வந்து நாங்கள் கொடுக்கக்கூடாது. இந்த நாட்டின் போக்கு வந்து ஒவ்வொருநாளும் இறுக்கமாகவும் கடும் போக்கிலும் தான் போய்க் கொண்டு இருக்கிறது. ஆனால் ஒருவருக்கு உயிராபத்து இருக்கிறது என்று சொன்னால் அவர் இந்த நாட்டுக்கு வரத்தான் வேணும். அதுக்கான சட்டத்தை இந்த நாடு வைத்திருக்கிறது. அதற்குக் கீழ் அரசியல் தஞ்சம் கேட்க வேணும் என்றால் கேக்கத்தான் வேணும். சரியான வழியில் சரியான சட்ட ஆலோசணைகளைப் பெற்று முதற்தடவையே சரியான முறையில் வழக்கை நடத்தி முடிவைக் காண வேண்டும்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் அங்கிருந்து தாம் திருப்பி அனுப்பப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா?
கணநாதன்: ஓம். இதுவும் ஒரு தட்டிக்கழிக்கின்ற கடும் போக்குத்தான். இங்கிருந்து திருப்பி அனுப்பப்படும் போதே எப்படி அனுப்பகிறார்கள் என்றால் யூடிசியல் ரிவியூ போட்டு முதலாவது படியில் தோற்றாலும் அவர்கள் மேலும் போகக் கூடிய உரிமை சட்டத்தில் இருக்கிறது. மேற் கொண்டு செல்லும் போதும் முதலாவது படியில் நிராகரிக்கும் போது நீதிமன்றம் என்ன சொல்கிறது என்றால் உங்களை நிராகரிக்கிறது மாத்திரமல்ல உங்களை நாடுகடத்துவதற்கும் எதிராக உங்கள் விண்ணப்பத்தை மேற்கொண்டு சென்றாலும் நாடுகடத்துவதை நிறுத்தமாட்டோம் என்று முதலாவது படியில் வழங்குகிற தீர்ப்பிலேயே சொல்கிறார்கள். அதனால் தான் அவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்.

இருந்தாலும் யூடிசியல் ரிவியூவை அவர் நாடு கடத்தப்பட்ட பிறகும் தொடரலாம். முதலாவது படியில் நீதிபதி மறுத்திருந்தாலும் நான் இந்த வழக்கைத் தொடர விரும்புகிறன் என்று இங்கு தன்னுடைய சட்டத்தரணியூடாக தொடர வேண்டும். என்னை திருப்பி அனுப்பியது சட்டத்திற்குப் புறம்பானது திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை ஆதாரபூர்வமாகக் காட்டி தன்னை திருப்பி பிரித்தானியாவுக்க அழைக்க வேண்டும் என்று ஹைக்கோட்டிடம் முறையிடலாம். ஹைக்கோட் சாதகமாகத் தீர்ப்பு வழங்கினால் அவர் இந்த நாட்டுக்கு திருப்பி அழைத்தவரப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இதைவிட பிரித்தானிய தூதரகத்திற்கும் சென்று முறைப்பாடுகளைச் செய்யலாம். ஆனால் நடைமுறையில் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தமிழ் பொது அமைப்புகளின் செயற்பாடுகள் எப்படி உள்ளது? அவர்கள் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?
கணநாதன்: அகதிகளுக்காக ஒரு அமைப்பு மட்டும் தான் இயங்குகிறது. என்று நினைக்கிறன். மற்றும்படி எந்த ஒரு தமிழ் அமைப்பும் அகதிகளுக்காக இயங்கவில்லை.

ல.குரல்: நீங்கள் ருவானைக் குறிப்பிடுகிறீர்களா?
கணநாதன்: ஓம். வேறு ஒரு அமைப்பும் அகதிகள் சம்பந்தமாக இயங்குவதாக எனக்கு தெரியவில்லை. வடிவாகப் பார்த்தால் ஹோம் ஒபிஸ் வந்து அந்த நிலையை ஒரு சிஸ்ரமற்றிகாககத்தான் உருவாக்கியது. முன்னர் நிதிகளைக் கொடுத்து சமூகத்தை பலப்படுத்தி வந்தார்கள். ஆனால் பிறகு இதையெல்லாம் குறைத்து அத்தோடு எங்களுக்குள்ள போட்டிகள் பிரச்சினைகளுக்காகவும் எல்லாம் சேர்ந்து குறைத்துக் கொள்ளப்பட்டது. இப்ப அந்த அமைப்புகள் எதுவும் அகதிகள் பிரச்சினையைத் தொடுவதே இல்லை. ருவானும் பொலிசி வேர்க் என்றில்லாமல் கேஸ் வேர்க்குகள் செய்துதான் தனிப்பட்ட முறையில் உதவி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ல.குரல்: இந்த விடயத்தில் தமிழ் பொது அமைப்புகள் ஏதாவது செய்யலாம் என்று நினைக்கிறீர்களா?
கணநாதன்: இந்தக் க்ளைமற்றில அவர்கள் பங்களிக்கிறதுக்கு இல்லை. அவர்கள் திருப்பியும் பிழையான நம்பிக்கைகளைக் கொடுக்காமல் அவர்கள் அப்படியே இயங்காமல் போறது நல்லது. அப்படி இருக்கும் போது அகதிக்காவது நான் என்னுடைய அலுவலைப் பார்க்க வேண்டும் என்ற பொறுப்பு ஏற்படும். அவை இருக்கினம் இந்த அமைப்பு இருக்கு அவை கம்பைன் பண்ணுறார் என்று பார்த்து அது எந்த பலனையும் தாற சூழ்நிலை இன்றைக்கு இல்லை. அப்படியான நிலையில இந்த அமைப்புகள் நச்சுரல் டெத்தை சந்தித்தது என்னைப் பொறுத்தவரை நல்லது. அந்த அமைப்புகள் இனி உருவாக்கப்பட்டாலும் அதன் பங்களிப்பு மிகக் கடினமாகத்தான் இருக்கும்.

ல.குரல்: திருப்பி அனுப்பப்படுவதை தடுக்கின்ற விடயத்தில் தமிழ் அமைப்புகள் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?
கணநாதன்: இந்த திருப்பி அனுப்பபடுகிற விசயத்தை நாங்கள் சமூகமாக விழிப்புணர்ச்சியோடு பார்க்கிறம். ஆனால் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டதும் நாஙகளும் திருப்பி அனுப்பப்டவரும் அதை அப்படியே விட்டுவிடுறம். ஹோம் ஒபிஸ் என்ன சொல்லப் பார்க்கிறது என்றால் இத்தனை பேரை திருப்பி அனுப்பின நாங்கள். அவை அங்கு போய் பிரச்சினை இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் நாங்கள் திருப்பி அனுப்பிறது சரி என்று. அதனால் தாங்கள் அகதிகளைத் தொடர்ந்து திருப்பி அனுப்பிக் கொண்டுதான் இருப்பம் என்று. அப்ப திருப்பி அனுப்பப்பட்ட ஆட்களுக்கு என்ன நடந்தது என்ற ஆதாரங்கள் சேகரிக்க முடியும் என்றால் அது இங்குள்ளவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

புதிய அமைப்புகளை உருவாக்குவதிலும் பார்க்க திருப்பி அனுப்புகிறவர்களுக்கான அட்வைஸ் லைன் ஒன்றை உருவாக்கி அவர்களுக்கான உதவிகளை வழங்க முடியும் என்றால் அது பெரிய உதவியாக இருக்கும்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்படுவதை நிறுத்தவதற்கு ஏதாவது வழிகள் உண்டா?
கணநாதன்: இன்றைக்கு அகதிகளைத் திருப்பி அனுப்புவதை நிறுத்தச் சொல்வதையும் இலங்கையில் யுத்தத்தை நிறுத்தி யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வரக் கோருவதையும் நான் ஒன்றாகத்தான் பார்க்கிறன். இன்றைக்கு நாங்கள் லொபி பண்ணி யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வரலாம் என்று சொல்லுவாராக இருந்தால் நிச்சயமாக அகதியை அனுப்புவதையும் நிறுத்தலாம். அரசியலில் அடிபட்ட ஒருவருக்குத் தெரியும் இரண்டுமே சரியான கஸ்டம். கொள்கை முடிவுகள் எங்கெங்கோ எடுக்கினம் அதுக்கு ஜனநாயக மூலாமைப் பூசி வைக்கினம். அதில மக்களோ லொபி குறூப்போ வந்து இம்பக்றை ஏற்படுத்த முடியாமல் இருக்கிறது. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல பொதுவான ஒரு நிலை. முன்னர் ஒரு அகதியைத் திருப்பி அனுப்பினால் அகதி அமைப்புகள் குரல் கொடுக்கும், பிசப் குரல் கொடுப்பார் எத்தினையோ என்ஜிஓ எல்லாம் போர்க்கொடி எழுப்பும்.

ஆனால் இப்ப சட்ட ரீதியாக வாதாடக் கூடிய அடிப்படை உரிமைகளையே கொடுக்காமல் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் உயிராபத்தில் உள்ளவர்களே கண்மூடித்தனமாக திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். அவ்வளவத்திற்கு அரசாங்கத்தின் போக்கு கடுமையாக இருக்கிறது. அதனை எதிர்கொண்டு தடுக்கிறது மிகவும் கஸ்டமாக இருக்கிறது.

அரசியல் ரீதியாகவோ லொபி செய்தோ அதைச் செய்யலாம் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

தனிப்பட்ட வழக்குகளில் சட்டரீதியாகச் சென்று முதலில் இருந்தே சரியான முறையில் வாதிட்டு முதற்தடவையே சரியான முறையில் வழக்கு கையாளப்பட்டால் இந்த சூழலிலும் சாதகமாக தஞ்ச விண்ணப்பத்தை பரிசிலிக்கச் செய்ய முடியும். அப்படி இல்லாமல் நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தலைத் தடுப்பதற்கு முதல் முறையாகப் போடுகிற ஜீடிசறி ரிவியூவை செம்மையாகப் போட்டு இருந்தாலும் உச்ச நிதிமன்றம் வரை சென்று நாடுகடத்தலை நிப்பாட்டக் கூடிய சூழல் இருக்கிறது. அதில் நிராகரிக்கப்பட்டால் கூட ஐரோப்பிய நீதிமன்றம் வரை சென்று நாடுகடத்தலை நிறுத்த முடியும்.