ஜெயபாலன் த

ஜெயபாலன் த

நலன்புரிநிலைய பாடசாலைகளுக்கு வழிகாட்டி நூலும், வினாப்பத்திரங்களும் அனுப்பி வைப்பு – த. ஜெயபாலன் & புன்னியாமீன்

04.jpgவவுனியா நலன்புரிநிலைய பாடசாலைகளில் தரம் 05இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக சிந்தனைவட்டம், தேசம்நெற் இணைந்து வழங்கிவரும் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் 1057 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 1 முதல் 4 வரையும் மொத்தம் 4 செயல்நூல்களும், 30 விசேட மாதிரிவினாப்பத்திரங்களும்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாதிரிவினாப்பத்திரங்களும், செயல்நூல்களும் மாணவர்களுக்கு தனித்தனியாக வழங்கப்பட்டு நலன்புரிநிலைய ஆசிரியர்கள் மூலமாக மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுவதாக நலன்புரிநிலைய பாடசாலைகளின் இணைப்பாளரும், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வன்னி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து நலன்புரிநிலையங்களில் தரம் 05 இல் பயிலும் மேலதிக மாணவர்களின் எண்ணிக்கை 3900ஆக உயர்ந்துள்ளது. நலன்புரிநிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள 53 பாடசாலைகளில் இம்மாணவர்கள் பயில்கின்றனர். நலன்புரிநிலைய பாடசாலை இணைப்பாளரும்,  கல்வி அதிகாரியுமான திரு.த. மேகநாதன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த மாணவர்களுக்கான மாதிரிவினாப்பத்திரங்களையும், செயல்நூல்களையும் அனுப்பும் பணியை தற்போது சிந்தனைவட்டமும், தேசம்நெற்உம் ஆரம்பித்துள்ளது. இப்பணிக்கு லண்டனில் அகிலன் பவுண்டேசன் அமைப்பினரும், இலங்கையில் மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியமும்,  மேலும் சில பரோபகாரிகளும் உதவி வருகின்றனர்.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள 4872 நலன்புரிநிலையங்களிலுள்ள மாணவர்களுக்கும் சிந்தனைவட்டம் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

இப்பரீட்சை முடிந்த பின்பு க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க சிந்தனைவட்டமும் தேசம்நெற் உம் முடிவெடுத்துள்ளது. குறுகிய காலத்தில் மாணவர்களை வழிநடத்தக்கூடிய வகையில் இதற்கான செயல்பாட்டு திட்டமொன்றை பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் இணைந்து சிந்தனை வட்டமும், தேசம்நெற் உம் வகுத்து வருகிறது.

‘தமிழ் மக்களுடைய எதிர்ப்புணர்வு இலங்கை அரசுக்கு எதிரானதே அன்றி சிங்கள மக்களுக்கு எதிரான வன்மமாக அமையக் கூடாது’ கொமன்வெல்த் முன்பான ஆர்ப்பாட்டத் தொகுப்பு : த ஜெயபாலன்

Robin_Speech_at_the_Protestபுலம்பெயர் தமிழ் அரசியல் சூழல் மிகவும் குழப்பகரமானதாகவே இருந்து வந்துள்ளது. இன்னமும் அவ்வாறே உள்ளது. இங்கு முன்னெடுக்கப்படும் அரசியல் நடவடிக்கைகள் தாயகத்தில் உள்ள மக்களைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக அம்மக்களை தங்கள் எஜமானர்களுக்குப் பணிய வைப்பதாகவே இருந்து வந்துள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் புலி ஆதரவு அமைப்புகளானாலும் சரி, கிழக்கிலங்கை – தலித் – ஜனநாயக முன்னணிகள் போன்ற பெயரளவில் அல்லது பெயரில் மட்டும் ஜனநாயகத்தைக் கொண்டுள்ள புலி எதிர்ப்பு அமைப்புகளானாலும் சரி தாயகத்தில் உள்ள மக்களுக்கு தாங்களே குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டாலும் உண்மையில் அவர்கள் அம்மக்களின் குரல்களை இருட்டடிப்புச் செய்து தங்கள் அரசியல் நலன்களைத் தக்க வைக்கவே முயன்று வந்துள்ளனர்.

இவற்றுக்கு அப்பால் மக்கள் நலன் சார்ந்து முன்னெடுக்கபடும் போராட்டங்கள் மிக அருமையாகவே நடைபெறுகிறது. இது மிகக் குறைந்தளவினருடன் மேற்கொள்ளப்பட்ட போதும் அப்போராட்டங்கள் அரசியல் ரீதியில் தங்கள் நியாயத்தை உறுதிப்படுத்தி விடுகின்றன. அந்த வகையில் தமிழ் சொலிடாரிற்றி – தமிழ் ஒருங்கிணைப்பு அமைப்பினால் யூன் 24 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் குறிப்பிடத்தக்கது. கொமன்வெல்த் அலுவலகத்திற்கு முன் நூறுக்கும் உட்பட்டவர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சமூகங்களையும் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அதில் கலந்துகொண்ட தமிழர்களுக்கு இணையாக பிற சமூகத்தவர்களும் கலந்துகொண்டதுடன் அவர்களே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

Serra_Leading_the_Protestஒரு ரூபாயோ ஒரு பெனியோ மகிந்த ராஜபக்ச அரசுக்கு கொடுக்கப்படாது!
வழங்கப்பட்ட நிதிக்கு கணக்குகள் காட்டப்பட வேண்டும்!
வன்னியில் உள்ள முகாம்கள் உடனடியாக மூடப்பட வேண்டும்!

போன்ற கோசங்கள் அங்கு ஓங்கி ஒலித்தது. Stop Slaughter of Tamils என்ற சர்வதேசப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களே தமிழர் ஒருங்கிணைப்பு என்ற தலைப்பில் தற்போதைய போராட்டங்களை தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப முன்னெடுக்கின்றனர். பிரித்தானியாவில் உள்ள இடதுசாரி அமைப்பான Committee for Worker’s International என்ற அமைப்பே இப்போராட்டங்களின் உந்து சக்தியாகச் செயற்படுகின்றது. முக்கியமாக ‘த சோசலிஸ்ட’ பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான Sarah இப்போராட்டத்தில் முன்னின்று கோசங்களை வைத்தார். ஏனையவர்களும் ஈடுபட்டனர்.

இடையிடையே கலந்துகொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. பல்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். அவர்கள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டி அதற்காக தாங்கள் தார்மீக அடிப்படையில் குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தை சொல்லிச் சென்றனர்.

Robin_Speech_at_the_Protestகுறிப்பபாக ரொபின் என்பவரது கருத்துக்கள் தமிழ் மக்களது போராட்டங்கள் தொடர்பான மதிப்பீடாக அமைந்திருந்தது. நடந்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசு மீது மிகுந்த கண்டனத்தை தெரிவித்த ரொபின் இது சிங்கள பொது மக்களுக்கு எதிரான வன்மமாக அமையக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்தினார். இங்கு லண்டனில் சிலர் பௌத்த விகாரைக்கு தீயிட்டதையும் லோட்ஸ் மைதானத்தில் யூன் 21 அன்று இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வந்த சிங்கள இளைஞர்கள் தாக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய ரொபின் இவ்வாறான சிங்கள மக்களுக்கு எதிரான வன்மங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிங்கள மக்கள் தமிழ் மக்களுடைய எதிரிகள் அல்லர் அரசாங்கத்திற்கு எதிராகவே செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கட் போட்டியில் தமிழர்கள் சிலர் பாகிஸ்தானின் வெற்றியை எதிர்பார்த்து நின்றதையும் பாகிஸ்தானுக்காக குரல் கொடுத்ததையும் புரிந்துகொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்ட ரொபின் கடைசியாக இடம்பெற்ற யுத்தத்தில் பாகிஸ்தான் முழுமையான இராணுவ ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்கி இருந்ததையும் பாகிஸ்தான் விமான ஓட்டிகள் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டினார். உண்மையில் தமிழர்களுடைய எதிர்ப்புணர்வு பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும் அன்று அமைந்திருக்க வேண்டும் என்றும் ரொபின் கூறினார்.

இலங்கைத் தமிழ் மக்களுக்கான போராட்டம் வெறும் தமிழர்களுடைய போராட்டமாக அல்லாமல் பிற சமூகங்களையும் இணைத்து போராட வேண்டியதன் அவசியத்தை விளக்கிய ரொபின் ஏனைய ஒடுக்கபட்ட மக்களுக்காகவும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் குரல்கொடுக்க வேண்டும் என்றும் பரஸ்பரம் புரிந்துணர்வு வளர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். தமிழர்களுடைய பிரச்சினை மட்டுமல்ல பாலஸ்தீனியர்களுடைய பிரச்சினை காஸ்மீரியரின் பிரச்சினை எல்லாம் ஒரே வகையினதே என்று கூறிய ரொபின் இம்மக்களுடனும் இணைந்து போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இறுதியாகத் தெரிவித்தார்.

இலங்கை அரசும் சர்வதேச நாடுகளும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளும்வரை தங்கள் போராட்டங்கள் தொடரும் என்ற உறுதியுடன் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.

தொடர்கதையாகும் ஊடக வன்முறை – யாழ் பத்திரிகைளுக்கு தீ!!! : த ஜெயபாலன்

uthayan_logoஇன்று (யூன் 25) காலை 5 மணியளவில் யாழில் இருந்து வெளிவரும் உள்ளுர் பத்திரிகைகள்  தீக்கிரையாக்கபட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் வலம்புரி உதயன் தினக்குரல் ஆகிய பத்திரிகைகளே தீக்கிரையாக்கபட்டு உள்ளது. யாழ் புறநகர்ப் பகுதிகளான ஆணைப்பந்தி, கன்னாதிட்டி ஆகிய பகுதிகளில் வைத்து இப்பத்திரிகைகள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன.

கன்னாதிட்டியில் நடந்த இச்சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி ஒருவர் இது பற்றி தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்துபேர் வரையானோர் விநியோகத்தரிடம் இருந்து பத்திரிகைகளைப் பறித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாகத் தெரிவித்தார். வந்தவர்கள் தீ வைத்துவிட்டுச் செல்ல மக்கள் அத்தீயை அணைத்ததாகவும் அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

வலம்புரி உதயன் தினக்குரல் ஆகிய மூன்று பத்திரிகைகளும் ஒரே நிறுவனத்தினூடாகவே விநியோகிக்கப்படுவதால் மூன்று பத்திரிகைகளுமே ஒரே நேரத்தில் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளது. மேலும் சாவகச்சேரி பருத்தித்துறை ஆகிய பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்ட பத்திரிகைகளும் தீக்கிரையாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதனை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இச்சம்பவத்தை நேரில் கண்டவர் தேசம்நெற்க்கு தகவல் தருகையில் யாழ் நகரில் உதயன் தினக்குரல் ஆகிய இரு பத்திரிகைகளினது விற்பனையையும் தன்னால் காணக் கூடியதாக இருந்ததாகவும் ஆனால் வலம்புரி பத்திரிகையை நகரில் எங்கும் காணக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இச்சம்பவத்திற்கான காரணம் இன்னமும் சரியாகத் தெரியவில்லை எனத் தெரிவித்த அவர் இப்பத்திரிகைகளில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சிலருக்கு எதிரான செய்தியை பிரசுரிக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் அது பிரசுரிக்கப்படாததனால் இப்பழிவாங்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்று பேசப்படுவதாகவும் தெரிவித்தார்
 
இன்று யாழ் மாநகரசபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை பதிவு செய்யும் இறுதிநாளாகும். தேர்தல் களம் சூடாகி உள்ள நிலையில் எதிர்கால நிகழ்வுகளை கட்டியம் கூறும் நிகழ்வாக இத்தீவைப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

சென்ற வாரம் இலங்கை ஊடக அடக்குமுறை காரணமாக சிறந்த ஊடகவியலாளர்களை இழந்துள்ளதென அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு Committe to Protect Journalist – CPJ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்து உரிய கவனம் செலுத்தப்படாதமை மிகவும் வேதனையளிப்பதாக அவ்வமைப்பிக் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜோல் சிமோன் தெரிவித்திருந்தார்.

இவ்வாண்டில் மட்டும் உலகெங்கும் 17 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களில் சண்டே லீடர் ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்கா சுயாதீன ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்தி ஆகிய இருவரும் இலங்கையர்கள். மே 31 வரையான ஓராண்டு காலத்தில் உலகின் பலபாகங்களிலும் இருந்தும் 37 ஊடகவியலாளர்கள் தங்களது நாடுகளை விட்டு அச்சம்காரணமாக வெளியேறி உள்ளனர். அவ்வாறு வெளியேறியவர்களில் மூன்றில் ஒருவர் – 11 பேர் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது இலங்கையின் மோசமடைந்துவரும் ஊடக நிலைமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொண்டுள்ளதாகக் கூறிக்கொண்டிருக்கையில் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாக ஊடகவியலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

1992 முதல் 2009 வரையான காலப்பகுதியில் இலங்கையில் 18 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இலங்கை ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான முதல் இருபது நாடுகளில் 11வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் ஊடகங்களின் நிலை மிகவும் துயர்மிக்கது. சர்வதேச சமூகத்தை எட்டாத யாழ் தமிழ் ஊடகங்கள் பற்றிய மேலதிக விபரங்களை அறிய விரும்புபவர்கள் அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்.  – Fact-finding report by the International Press Freedom Mission to Sri Lanka : Jaffna’s media in the grip of terror – August 2007. தற்போதைய தீ வைப்புச் சம்பவம் ஊடக சுதந்திரம் இலங்கை ஊடகங்களுக்கு வெகு தொலைவில் உள்ளதையே வெளிக்காட்டுகிறது.

மறைமுக நோக்கங்களற்ற வன்னி மக்களுக்கான போராட்டங்கள் அவசியம்! த ஜெயபாலன்

Veddaiyadu Vilayaduஇன்று (யூன் 24 2009) மாலை நான்கு மணி முதல் மாலை ஆறு மணிவரை லண்டனில் உள்ள கொமன்வெல்த் அலுவலகத்திற்கு முன்பாக வன்னியில் உள்ள இடம்பெயர்வு முகாம்களை உடனடியாக மூடி மக்களை மீளக் குடியேற்றும்படி கோரி போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இலங்கைக்கு வழங்கப்படும் சர்வதே நிதியுதவிகளுக்கு என்ன நடக்கின்றது என்றும் இப்போராட்டம் கேள்வி எழுப்பி உள்ளது. ரமிழ் சொலிடாரிற்றி என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இப்போராட்டமே புலிகளின் அரசியல் நலன்களுக்கு வெளியே வன்னி மக்களின் நலனில் அக்கறையுடன் நடத்தப்படுகின்ற போராட்டமாகும். ஸ்ரொப் தி ஸ்லோட்டர் ஒப் ரமில்ஸ் என்ற போராட்டத்தை முன்னெடுத்தவர்களே தற்போது முகாமில் உள்ள மக்களை வெளியேற்றும்படி கோரும் இப்போராட்டத்தை ரமிழ் சொலிடாரிற்றி என்பதன் கீழ் முன்னெடுக்கின்றனர். இப்போராட்டங்களில் மட்டுமே தமிழரல்லாத பிற சமூகங்களும் இணைந்து தமிழ் மக்களுக்கான ஆதரவினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வகையான போராட்டம் பிராஸ்ஸில் உள்ள இடதுசாரி அமைப்புகளின் கூட்டான சமூகப் பாதுகாப்பு அமைப்பினால் Comité de Défense Social முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

யூன் 20ல் சர்வதேச அகதிகள் தினம். கடந்த ஆண்டு முடிவு வரை 42 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டு உள்ளதாக யுஎன்எச்சிஆர் குறிப்பிடுகின்றது. இவர்களில் 26 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த நாடுகளினுள்ளேயே தமது வாழ்விடங்களில் இருந்து வேரறுக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 80 வீதமானவர்கள் வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளிலேயே வாழ்கின்றனர். ஏனையவர்கள் அகதிகளாகவும் அரசியல் தஞ்சம் கோரியும் வேறு நாடுகளில் வாழ்கின்றனரர். 2008 முடிவில் 504 800 பேர் இடம்பெயர்க்கப்பட்டு வாழ்ந்தனர். இவர்களில் வன்னி மக்கள் 300 000 பேர்வரை தற்போது வடக்கு கிழக்கில் உள்ள 20 முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் 20 ஆண்டுகளுக்கு முன் 1990 ஒக்ரோபர் 20ல் தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் இருந்தும் ஏனைய வடக்கு மாவட்டங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட் முஸ்லீம் மக்கள் இன்னமும் புத்தளத்திலும் கிழக்கிலும் வாழ்கின்றனர்.

மே 18ல் பிரபாகரனின் மரணத்துடன் முடிவுக்கு வந்த இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டு யுத்தம் மிகப்பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியது. இலங்கை அரசு சர்வதேச யுத்த விதிகளை மீறி தனது சொந்த மக்கள் கொல்லப்படுவார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தும் அந்த மக்கள் செறிந்திருந்த பகுதிகள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதை சர்வதேச உரிமை அமைப்புகள் அனைத்துமே சுட்டிக்காட்டி உள்ளன. சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் ஊடகங்கள் எவற்றையும் அனுமதிக்காமல் சாட்சியமற்ற யுத்தத்தை மனிதப்படுகொலைகளை நிகழ்தியதாக அவை சரியாகவே சுட்டிக்காட்டி உள்ளன.

அதே சமயம் தமிழீழ விடுதலைப் புலிகளும் தங்களைப் பாதுகாப்பதற்காக மக்களை மனிதக் கேடயங்களாக்கி மக்கள் மத்தியில் இருந்தே தாக்குதலை நடத்தி மனித அவலம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்துள்ளனர். இதனை முழுமையாக அறிந்திருந்த பிரிஎப் ரிவைஓ மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்த புலி ஆதரவு அமைப்புக்கள் வன்னி மக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கும்படி கோராமல் வன்னி மக்களும் புலிகளும் ஒன்று, மக்கள் சுயவிருப்பிலேயே யுத்தப் பகுதிக்குள் இருக்கின்றனர் என பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டனர்.

20 000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு பிரிஎப் உம் பொறுப்புடையது என தீபம் தொலைக்காட்சியில் யூன் 19ல் இடம்பெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் ‘தேசம்நெற்’ சார்பிலும் ஏனைய நேயர்கள் சிலரும் கேள்வி எழுப்பிய போது பிரிஎப் சார்பில் கலந்துகொண்ட பத்மநாதன் விடுதலைப் ‘புலிகள் யார்? அவர்களும் எம்மவர்கள்தானே. அவர்களை விட்டுவிட்டு எப்படி மக்களை வெளியேறும்படி கேட்க முடியும்.’ என்று பதிலளித்தார். விடுதலைப் புலிகளுக்கு அந்த மக்களை கேடயங்களாக வைத்திருக்க பிரிஎப் உம் உடந்தையாக இருந்ததை அப்பதில் தெளிவாக்கி உள்ளது. அதே நிகழ்ச்சியில் பிரிஎப் போன்ற புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் வழங்கிய மிகைப்படுத்திய பொய்யான தகவல்களே இவ்வளவு மோசமான அழிவுக்கு இட்டுச்சென்றது அதற்கு பிரிஎப் வன்னி மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் போன்ற கேள்விகளுக்கு பத்மநாதனிடம் பதில் இருக்கவில்லை.

நடந்து முடிந்த மனித உரிமை மீறல்களுக்கும் படுகொலைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் சம பொறுப்புடையவர்கள் என்பது பரவலாக அனைத்து மனிதாபிமான மற்றும் உரிமை அமைப்புகளால் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. அப்படியான நிலையில் சிங்கங் கொடியையும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் படத்தையும் கொண்டுவந்து மனித உரிமை பற்றி பேசுவது எவ்வளவு கேலியானதோ அதே போல் புலிக்கொடியையும் அதன் தலைவர் பிரபாகரனது படத்தையும் கொண்டு வந்து மனித உரிமைப் போராட்டம் செய்வதும் கேலிக்குரியதே. வன்னி மக்களின் இரத்தத்தில் தோய்ந்த இவை எப்போதும் மனிதஉரிமைப் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதாகவே அமையும்.

அந்த வகையில் வன்னி மக்களின் இரத்தக் கறைபடியாத ரமிழ் சொலிடாரிற்ரி போன்ற அமைப்புகளின் போராட்டங்களே மனித உரிமையை வென்றெடுக்க வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்காக குரல் எழுப்ப தகமையுடையன. இப்போராட்டங்களில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவினதாக இல்லாவிட்டாலும் அவர்களுடைய போராட்டத்தில் உள்ள நியாயம் கௌரவிக்கப்படும்.

யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் வன்னி முகாம்களில் உள்ள நிலைமைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை. ஒரு முகாம் எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையின் குறைந்தபட்ச விடயங்கள் கூட இன்னமும் முகாம்களில் பிரச்சினையாகவே உள்ளது. சர்வதேச உதவி அமைப்புகளைக் கூட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அவர்கள் பணியாற்றுவதைத் தடுக்கின்றது. அரசு மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகிய நிலையில் வன்னி முகாம்களை பரமரிப்பதில் நிதித் தட்டுப்பாட்டினைக் கொண்டுள்ளது. ஆனாலும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளையும் பணியில் ஈடுபடுத்த அனுமதிக்கவில்லை. இவை இலங்கையரசு தமிழ் மக்களை இரண்டாம்தரப் பிரஜைகளாகவே நடத்துகின்றது என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

இடம்பெயர்ந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் நல்வாழ்வை மட்டுமே கவனத்திற்கொண்டு அம்மக்களின் உரிமைக்கான போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவது தவிர்க்க முடியாதது. அந்த வகையில் மறைமுக நோக்கங்களற்ற ரமிழ் சொலிடாரிற்றி போன்ற அமைப்புகளின் போராட்டங்கள் இலங்கை அரசு மீது தொடர்ச்சியான அழுத்தங்களை மேற்கொள்வதற்கு அவசியம்.

நலன்புரிநிலைய பாடசாலைகளுக்கு 03ஆம் கட்ட வழிகாட்டி நூலும், வினாப்பத்திரங்களும் அனுப்பி வைப்பு – த. ஜெயபாலன் & புன்னியாமீன்

Class 05 Text Bookவவுனியா நலன்புரிநிலைய பாடசாலைகளில் தரம் 05இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக சிந்தனைவட்டம், தேசம்நெற் இணைந்து வழங்கிவரும் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் 1057 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 03உம், விசேட மாதிரிவினாப்பத்திரங்கள் (இலக்கம் 1 – 4 வரையும்) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இம்மாணவர்களுக்கு 02 வழிகாட்டிப் புத்தகங்களும், 14 மாதிரிவினாப்பத்திரங்களையும் தனித்தனியே மாணவர்களுக்கு வழங்கத்தக்க வகையில் வழங்கப்பட்டிருந்தன. இத்தொடரில் மேலும் ஒரு புத்தகத்தையும் (தொகுதி 04) 12 விசேட மாதிரிவினாப்பத்திரங்களையும் எதிர்வரும் வாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தேசம்நெற், சிந்தனைவட்டமும் இணைந்து மேற்கொண்டுள்ளது.

ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வன்னி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து நலன்புரிநிலையங்களில் தரம் 05இல் பயிலும் மேலதிக மாணவர்களின் எண்ணிக்கை 3815ஆக உயர்ந்துள்ளது. நலன்புரிநிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள 53 பாடசாலைகளில் இம்மாணவர்கள் பயில்கின்றனர். நலன்புரிநிலைய பாடசாலை இணைப்பாளரும், கல்வி அதிகாரியுமான திரு.த. மேகநாதன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புதிதாக நலன்புரிநிலையங்களில் இணைந்த 3815 மாணவர்களுக்கும் உதவிகளை வழங்க தேசம்நெற், சிந்தனைவட்டம், மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம், ஐக்கிய இராச்சியத்தில் அகிலன் பவுண்டேசன் போன்ற நிறுவனங்களும் மேலும் சில பரோபகாரிகளும் முன்வந்துள்ளனர். இதற்கான வேலைத்திட்டம் தற்போது வகுக்கப்பட்டு வருகின்றது. புதிதாக இடம்பெயர்ந்த மாணவர்களுக்கும் தனித்தனியே 04 வழிகாட்டி நூல்களையும், 30 மாதிரிவினாப்பத்திரங்களையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 23ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தவிபு தலைவர் பிரபாகரன் உண்மையிலேயே வீர மரணம் எய்தி விட்டார். : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை

Pirabakaran V LTTEதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உண்மையிலேயே வீரமரணம் அடைந்துவிட்டதாக அவ்வமைப்பின் வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள அறிக்கையில் தலைவர் வே பிரபாகரன் சரணடையவோ கைது செய்யப்படவோ இல்லை என்றும் சிறிலங்காப் படையினருடனான மோதலிலே வீரச்சாவு அடைந்ததாகவும் வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் அறிவழகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் குமரன் பத்மநாதன் தலைவர் வே பிரபாகரன் வீரமரணமடைந்தாக வெளியிட்ட அறிக்கைக்கு மாறாக இவர் மே 22ல் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும் நலமாகவும் இருக்கிறார்’ என்று தெரிவித்திருந்தார். ஆனால் அதற்காக வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் தற்போது மன்னிப்புக் கேட்டு உள்ளார்.

பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ள வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் க அறிவழகன் அவருடைய மரணம் என்று நிகழ்ந்தது என்பதை குறிப்பிட்டு இருக்கவில்லை. மே 18 காலையே இவர் மரணமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மரணச் செய்தியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் கெ பத்மநாதன் ஆரம்பத்தில் மறுத்தாலும் அதனை பின்னர் உறுதிப்படுத்தி இருந்தார்.

இதுதொடர்பாக கெ பத்மநாதன் தேசம்நெற்ற்குத் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவில் இருந்த சிலர் தலைவரின் மரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகக் கூறினார். யூன் 14ல் தேசம்நெற்றுக்குத் அவர் மேலும் தெரிவிக்கையில் அவர்கள் ஒவ்வொரு திகதிகளைக் கூறி இழுத்தடித்ததாகவும் ஆனால் தாயகத்தில் உள்ள போராளிகளும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து உடனடியாக தலைவரின் வீர மரணச் செய்தியை அறிவித்தாகத் தெரிவித்தார்.

இச்செய்தியை ஜிரிவி வெளியிட்டதற்காக அதன் நிர்வாகிகளுக்கு பல கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அச்செய்தி நீக்கப்பட்டது. அச்செய்தியை வெளியிட்ட போது கெ பத்மநாதன் ஒருவாரத்தை தேசிய நினைவஞ்சலியாகக் கடைப்பிடிக்கும்படியும் கேட்டிருந்தார். அவ்வஞ்சலியும் நடைபெற்றிருக்கவில்லை.

30 வருட போராட்டத்தை முன்னெடுத்த உலகின் பலபாகங்களிலும் வியாபித்திருந்த ஒரு செல்வந்த இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்துவதற்குள்ளேயே இவ்வியக்கத்தின் உட்பூசல்களும் அதிகாரப் போட்டிகளும் வெளிப்பட்டு உள்ளது. வெளியகப் புலனாய்வுத்துறையும் சர்வதேச இணைப்பாளரும் புலிகளின் தலைவர் வீரமரணம் அடைந்ததை உறுதிப்படுத்திய போதிலும் சர்வதேசப் பிரிவிற்குப் பொறுப்பாக இருக்கும் நெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் பிரிவு இது பற்றி இன்னமும் மெளனமாகவே உள்ளனர். இவர்களிடமே சர்வதேச ரீதியில் திரட்டப்பட்ட நிதியும் ஊடகங்களும் கைவசமுள்ளதாகத் தெரியவருகிறது.

Pirabhakaran_Jothidamஇந்த சர்வதேசப் பிரிவு பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்தும் போது அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள அசையும் அசையாச் சொத்துக்கள் மற்றும் நிதி பற்றிய சர்ச்சைகள் ஏற்படும் என்பதால் அவர்கள் பிரபா இன்னமும் உயிருடன் உள்ளார் என இந்திய அரசியல்வாதிகளுடாக தெரிவித்து வருகின்றனர். இந்த தமிழகத் தலைவர்களே பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்திய, இறுதிவரை பிரபாவுடன் தொடர்பில் இருந்த கெ பத்மநாதனை தேசியத் துரோகி எனப் பட்டம் சூட்டினர். தற்போது பிரபாகரனின் சாதகப்படி அவர் 80 வயதுவரை நலமுடன் இருப்பார் என்றும் செய்தி வெளியிட்டுக் கொண்டு உள்ளனர். 2010 பிரபாவிற்குப் பொற்காலம் என்றும் இந்த ஜோதிடச் செய்தி தெரிவிக்கிறது.

பல்வேறு அரசியல் முரண்பாடுகள் விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வழிநடத்தி அதில் தனக்கிருந்த நம்பிக்கையில் தன்னையும் தனது மனைவி பிள்ளைகளையும் முழுவதுமாக இழந்த ஒரு போராளிக் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச கெளரவத்தைக்கூட தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ய மறுத்துள்ளனர்.

இன்னமும் பிரபாவின் மரணம் ஒரு கேலிக் கூத்தாக ஆக்கபட்டதற்குரிய பெரும்பான்மைப் பொறுப்பு நெடியவனின் தலைமையில் உள்ள சர்வதேச பிரிவையே சார்ந்துள்ளதாக முன்னாள் போராளிகள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். நெடியவன் சர்வதேச விவகாரங்களைக் கவனிப்பதற்காக காலம்சென்ற புலிகளின் தலைவர் வே பிரபாகரனால் அனுப்பி வைக்கபட்டதாகவும் அப்போராளிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பிரபாவின் இறுதி நாட்களில் அவருடன் ‘கெ பி அண்ணரே’ தொடர்பில் இருந்ததாகவும் அவருடைய தகவல்களே சரியானது என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அப்போராளிகள் தேசம்நெற்றுக்குத் தெரிவிக்கின்றனர்.

தற்போது இவ்வறிக்கையை வெளியிட்டுள்ள வெளியக புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் லண்டனில் வாழ்வதாக தேசம்நெற்றுக்கு தெரியவருகிறது.

._._._._._.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கீழே:

வெளியகப் பணிப் பிரிவு
புலனாய்வுத்துறை
18. 06. 2009

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம்

எம் பாசத்துக்குரிய தமிழ் பேசும் மக்களே!

எமது இயக்கத்தின் தலைவரும் பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது.

தேசியத் தலைவர் அவர்களைப் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேரச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த – தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள – எமது புலனாய்வுப் போராளிகள் வேறு துறைப் போராளிகள் மற்றும் சிறிலங்கா படைத் துறையின் உயர் பீடத்துடன் தொடர்புடைய எமது தகவலாளர்கள் ஆகியோர் தலைவர் அவர்களது வீரச்சாவினை இப்போது உறுதிப்படுத்துகின்றனர்.

கடந்த மே மாதத்தின் நடுப் பகுதியில் – 15 (வெள்ளிகிழமை) முதல் 19 ஆம் திகதி (செவ்வாய்கிழமை) வரையான காலப் பகுதியில் வன்னி – முள்ளிவாய்க்கால் களப் பிரதேசத்திலிருந்து முரண்பட்ட பல தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன. சீரான தகவல் பரிமாற்ற வசதிகள் இருக்காமையாலும் அங்கிருந்து வெளியேறிய எமது புலனாய்வுப் பேராளிகள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று சேர முடியாமல் இருந்தமையாலும் அவர்களால் அனுப்பப்பட்ட பல தகவல்கள் சிதைவடைந்த நிலையிலேயே வெளியில் கிடைத்திருந்தன. அதனால் – அப்போது கிடைத்த தகவல்களைச் சீர்ப்படுத்தி எடுத்ததன் அடிப்படையில் – எமது அன்புக்குரிய தலைவர் அவர்கள் நலமாக இருப்பதாகக் கருதியே அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட நாம் மே மாதம் 22 ஆம் நாள் தீர்மானித்தோம்.

இதே வேளை – தலைவர் அவர்களது பாதுகாப்பான இருப்பு மற்றும் நகர்வுகள் தொடர்பாக – இறுதிவரை அவருடன் கூட இருந்த தளபதிகளால் பல தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன. இவற்றின் அடிப்படையிலேயே – எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுத் துறையின் இயக்குனர் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்களும் – ஆரம்பத்தில் – இரு வேறு முரண்பட்ட செய்திகளைத் தரும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தார் என்பதையும் எம்மால் உணர முடிகின்றது.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அந்த மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை 22 ஆம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதே வேளையில் அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது.

எமது தேசியத் தலைவரின் வீரச்சாவு தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும் சரண் அடைந்ததாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் – எந்த செய்தியினையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வுத்துறையினர் ஆகிய எமக்கு உண்டு. அதனடிப்படையில் – தேசியத் தலைவர் அவர்கள் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்பதையும் அவர் சிறிலங்கா படையினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார் என்பதையும் நாம் மிகத் திடமாக உறுதிப்படுத்துகின்றோம்.

இப்போது தோன்றியுள்ள மிக உச்ச நெருக்கடியான கால கட்டத்தில் – எம் பெருந் தலைவர் அவர்கள் உருவாக்கி வளர்த்தெடுத்து நமது கைகளில் தந்து விட்டுச் சென்றுள்ள எமது விடுதலைப் போராட்டத்தை – அதே உறுதிப்பாட்டுடனும் அதே கட்டுக்கோப்புடனும் அதே ஒருங்கிணைவுடனும் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் எமது இறுதி இலட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக – தற்போது உருவாக்கப்படவுள்ள ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எம் முன்னால் உள்ள கடமையாகும்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும் அவருடன் வீரச்சாவடைந்த எமது இயக்கத்தின் போராளிகள் தளபதிகளுக்கும் வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன் இந்தப் போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை தனது அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

கதிர்காமத்தம்பி அறிவழகன்
பொறுப்பாளர்
வெளியகப் பணிப் பிரிவு
புலனாய்வுத்துறை

75 நாட்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்!!! : த ஜெயபாலன்

Protest_Hunger_Strike_London_._._._._
1. உடனடியான நிரந்தர யுத்த நிறுத்தம்
2. உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லும் வணங்கா மண் கப்பலை உடனடியாக சர்வதேச கண்காணிப்பாளர்களுடன் பொதுமக்களை அடையச் செய்ய வேண்டும்.
3. ஐ நா பொதுச்செயலாளர் பான்கி மூன் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுணை எமது பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
4. தமிழீழ விடுதலைப் புலிகளே எங்களது ஏக பிரதிநிதிகள். பிரித்தானியாவில் உள்ள அவர்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
5. தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்துபோக விரும்புகிறார்களா? அல்லது இலங்கையின் பகுதியாக இருக்க விரும்புகிறார்களா? என்பதை அறிய ஐக்கிய நாடுகள் சபை தமிழ் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

கவன ஈர்ப்புப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை மீளவும் ஒருமுறை பார்ப்பதன் மூலம் 75 நாள் கவன ஈர்ப்புப் போராட்டத்தை மதிப்பீடு செய்து கொள்ளலாம்.
_._._._._

பிரித்தானிய தமிழ் மாணவர்கள் – இளையோர்களால் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன் முன்னெடுக்கப்பட்ட கவன ஈர்ப்புப் போராட்டம் இன்று (யூன் 17 2009) முடிவுக்கு வருகின்றது. பலருக்கும் இவர்கள் இன்னமும் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர் என்பது தெரிந்திருக்கவில்லை. 75 நாட்கள் இடம்பெற்ற இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டம் வன்னி மக்கள் மிக மோசமான மனித அவலத்தை எதிர்கொண்ட வேளையில் ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் நடத்தப்பட்டது. யுத்த பூமியில் இருந்து பௌதிக ரீதியில் மட்டுமல்ல யதார்த்தத்திலும் வெகுதொலைவில் நின்று நடத்தப்பட்ட இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் – உண்ணாவிரதப் போராட்டங்கள் வன்னி மக்களை அவலத்தில் இருந்து காப்பாற்றுவதற்குப் பதிலாக அந்த அவலத்திற்கு உள்ளே வாழ நிர்ப்பந்தித்து உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு அங்கம் போன்று செயற்பட்ட ஐக்கிய இராச்சிய தமிழ் மாணவர் ஒன்றியம் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன முன்னெடுத்ததாகக் கூறப்படும் இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் தாயகத்தில் இருந்து ஒஸ்லோ உடன்பாட்டிற்கு பின்னான காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இளையோரினால் முன்னெடுக்கப்பட்டது என்பது பரகசியமான உண்மை. இந்த அமைப்புகளின் கட்டமைப்பு பரவலாக்கம் என்பனவே இந்த அமைப்புகளின் பின்னணியைப் பறைசற்றும். ஜெனவாவிற்கு முன்னாக இடம்பெற்ற தீக்குளிப்புச் சம்பவமும் இந்தப் பின்னணியிலேயே இடம்பெற்றதாக செய்திகள் வெளிவந்திருந்தது.

வன்னி யுத்தத்தில் வன்னி மக்கள் பணயம் வைக்கப்படுகிறார்கள். மிகப்பெரிய மனித அவலம் ஒன்று நிகழப் போகின்றது என்பதை தேசம்நெற் நண்பர்கள் வேட்டையாடு விளையாடு என்ற தெரு நாடகம் ஒன்றின் மூலம் ஆரம்பத்திலேயே எச்சரித்து இருந்தனர். ( யுத்தத்தை நிறுத்துங்கள்!! வன்னி மக்களை விடுவியுங்கள்!!! – ஈஸ்ற்ஹாம் பிரதான வீதியில் ‘வேட்டையாடு விளையாடு’ : த ஜெயபாலன் ) இந்த வன்னி மக்கள் சுயாதீனமாக தங்கள் நகர்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு சுயாதீனமாக தங்கள் நகர்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தால் யுத்தப் பிராந்தியத்தில் இருந்து தப்பி மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும். மிகப்பெரும் மனித அவலம் ஒன்று தடுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இவர்களின் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் இலங்கை அரசை மிகச் சரியாக கண்டித்த போதும் யுத்தத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிய போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை பலாத்காரமாக தங்களுடன் தங்கள் மண்மூட்டைகளாக இழுத்துச் சென்றதை கண்டிக்கத் தவறியது. மக்களது சுயாதீனமான நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் மிக மோசமான முறையில் கட்டுப்படுத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த மோசமான நடவடிக்கையே பல்லாயிரக் கணக்கான வன்னி மக்கள் உயிரிழக்கவும் இன்னும் பல்லாயிரக் கணக்கான மக்கள் காயமடையவும் காரணமானது. மேலும் வன்னியில் உள்ள சக மாணவர்கள் இளையவர்கள் பலாத்காரமாக முறையான பயிற்சிகள் கொடுக்கப்படாமல் யுத்த முன்னரங்கு நிலைகளுக்கு அனுப்பப்படுவது பற்றியும் கொல்லப்படுவது பற்றியும் கூட இவர்கள் மௌனமாகவே இருந்தனர்.

மே 1 2006ல் சம்பூரில் ஆரம்பிக்கப்பட்ட புரொஜக்ற் பீக்கன் இராணுவ நடவடிக்கையில் டிசம்பர் 31 2008 வரையான 19 மாதங்களில் சில நூறு பொது மக்களே கொல்லப்பட்டு இருந்தனர். இக்காலப் பகுதியில் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நிகழவில்லை. உண்ணாவிரதப் போராட்டங்கள் நிகழவில்லை. யுத்த நிறுத்தமும் கோரப்படவில்லை. ஆனால் ஜனவரி 1 2009 முதல் மே 18 2009 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் படுகொலை செய்யப்படும்வரையான 5 மாதங்களிற்குள்ளாக 20 000 பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதற்குக் முக்கிய காரணம் மன்னார் வவுனியா கிளிநொச்சி முல்லைத் தீவு என்று பரந்திருந்த மக்கள் ஒரு குறுகிய பிரதேசத்தை நோக்கி நகர்த்தப்பட்டு அப்பிரதேசத்தை யுத்தகளமாக்கியது. இலங்கை இராணுவத்தின் மரபுவழி யுத்தத்திற்கு தாக்குப் பிடிக்க இயலாது பின்வாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு கெரில்லா போராட்டத்திற்கு தங்களைத் தயார்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பிற்கு மாறாக தாம் அழைத்து வந்த மக்களுக்குள் ஒழிந்திருந்து தாக்குதலைத் தொடுத்தனர்.

காலத்திற்குக் காலம் பதவிக்கு வந்த சிங்கள பெரும்பான்மையின அரசுகள் சுதந்திரம் அடைந்தது முதல் தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து ஒடுக்குமுறையை தமிழ் மக்கள் மீது மேற்கொண்டது. அதற்கு எவ்விதத்திலும் மாறுபடாத வகையில் தற்போதைய அரசும் நடந்துகொண்டது. ஒரு பயங்கரவாத அமைப்பின் பிடியில் இருக்கும் மக்களை விடுவிப்பதாகக் கூறிக்கொண்ட போதும் வன்னித் தமிழ் மக்கள் விடயத்தில் இலங்கை அரசு மாற்றாந்தாய் மனப்போக்குடனேயே நடந்து கொண்டது. புலிகள் தாக்குதல் நடத்தும் பகுதிகள் மக்கள் செறிவானதாக உள்ளதை நன்கு அறிந்திருந்த போதும் என்ன விலை கொடுத்தும் புலிகளை வேரறுப்பதிலேயே அரசு கண்ணும் கருத்துமாக இருந்தது. மக்களின் அவலங்கள் பற்றியோ அம்மக்களுக்க ஏற்படப் போகும் அழிவு பற்றியோ அரசு கவனமெடுக்கவில்லை.

யுத்தத்தில் சிக்குண்டிருந்த மக்கள் பற்றி யுத்தத்தில் ஈடுபட்டு இருந்த இலங்கை அரசோ தமிழீழ விடுதலைப் புலிகளோ சிந்தித்து இருந்தால் இந்தப் பாரிய இழப்புகளை பெருமளவில் தடுத்திருக்க முடியும். யுத்தத்தில் ஈடுபட்டு இருந்த இரு தரப்பினருக்கும் எதிராக புலம்பெயர்ந்த மக்கள் குரல் எழுப்பி இருந்தாலும் இந்த அவலத்தைத் தடுத்திருக்க முடியும்.

ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்கள் வன்னி மக்களின் நலன்களுக்கு எதிராகவே அமைந்தது. இப்பெரும் தவறே 20 000 பொது மக்களின் அழிவுக்கு வித்திட்டது. இன்னும் ஆயிரக் கணக்கானவர்களைக் காயங்களிற்கு உள்ளாக்கியது. புலிகளும் மக்களும் ஒன்று என்று இவர்கள் போட்ட கோசம் இன்று இன்று 300 000 வரையான வன்னி மக்களை முகாம்களுக்குள் முடக்கி வைத்துள்ளது.

யுத்தத்தில் சிக்குண்ட மக்கள் பற்றி எவ்வித அக்கறையையும் புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற கவன ஈர்ப்புப் போராட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் கொண்டிருக்கவில்லை. அமெரிக்காவில் இருந்து இயங்குகின்ற People for Equality and Relief in Lanka (PEARL) அமைப்பு மார்ச் 2ல் வெளியிட்ட அறிக்கையில் புலிகளின் கட்டுப்பகுதியில் யுத்தத்தில் சிக்குண்ட மக்களை வெளியேற்ற வேண்டாம் எனத் தெரிவித்து இருந்தனர். ( முல்லை மக்களை யுத்த பிராந்தியத்தில் இருந்து வெளியேற்ற வேண்டாம்! பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்துங்கள்!!! அமெரிக்கத் தமிழ் அமைப்பு PEARL : த ஜெயபாலன் ) வன்னி மக்கள் எப்படியாவது யுத்தப் பகுதியில் இருந்து தப்பிக்க முயல்கையில் வன்னி மண் அந்த மக்களின் பூர்வீக மண் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டாம் என புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆர்ப்பாட்டங்கள் அமைந்திருந்தது.

இன்று முடிவுக்குக் கொண்டு வரப்படும் 75 நாள் கவன ஈர்ப்புப் போராட்டம் கூட வன்னி மக்களின் நலனில் முன்னெடுக்கப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டம் முற்று முழுதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சி. முற்று முழுதாக தோல்வியடைந்த ஒரு போராட்டம்.

படையினரே எதிர்பாராத வகையில் ஏப்ரல் 5ல் புதுக்குடியிருப்புப் பகுதியை சுற்றி வளைத்ததில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனும் அவரது மகன் சார்ஸ் அன்ரனியும் சுற்றி வளைக்கப்பட்டனர். படையினரின் வியூகத்தை உடைத்து தலைமையைக் காப்பாற்றும் கடுமையான மோதலில் புலிகளின் முக்கிய தளபதிகள்  தீபன் கடாபி நாகேஸ் ஆகியொர் கொல்லப்பட்டனர். இவர்களுடன் பெண்கள் பிரிவின் மாலதி படையணியின் தலைவரான விதுஷாவும், பிரதித் தலைவரான துர்காவும் பல நூற்றுக்கணக்கான பொராளிகளும் கொல்லப்பட்டனர்.  ( Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன் )

ஏப்ரல் 5ல் இடம்பெற்ற இத்தாக்குதலைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் எதிர்காலம் ஆபத்தில் சிக்கியது புலம்பெயர்நாடுகளில் உள்ள பொறுப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மறுநாள் காலை விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர்கள் கவன ஈர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஏப்ரல் 7ல் பரேமேஸ்வரன் சிவசுப்பிரமணியம் சிவதர்சன் சிவகுமாரவேல் ஆகிய இருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இது பின்னர் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் பரவியது.

இந்த உண்ணாவிரதிகள் வைத்த கோரிக்கைகள்
1. உடனடியான நிரந்தர யுத்த நிறுத்தம்
2. உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லும் வணங்கா மண் கப்பலை உடனடியாக சர்வதேச கண்காணிப்பாளர்களுடன் பொதுமக்களை அடையச் செய்ய வேண்டும்.
3. ஐ நா பொதுச்செயலாளர் பான்கி மூன் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுணை எமது பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
4. தமிழீழ விடுதலைப் புலிகளே எங்களது ஏக பிரதிநிதிகள். பிரித்தானியாவில் உள்ள அவர்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
5. தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்துபோக விரும்புகிறார்களா? அல்லது இலங்கையின் பகுதியாக இருக்க விரும்புகிறார்களா? என்பதை அறிய ஐக்கிய நாடுகள் சபை தமிழ் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

ஐ நா பொதுச்செயலாளரையும் பிரித்தானிய பிரதமரையும் தங்களுடைய பிரதிநிதிகள் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற ஒரு அர்த்தமற்ற கோரிக்கையைத் தவிர வேறு எவ்வித கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (ஐ நா பொதுச் செயலாளரையும் பிரித்தானிய பிரதமரையும் சந்திக்க உண்ணாவிரதம் இருந்து அனுமதி பெற்றவர்கள் இந்த உண்ணாவிரதிகளின் பிரதிநிதிகளாகவே இருப்பார்கள்.)

இந்தக் கோரிக்கைகள் அனைத்துமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒக்ஸிஜன் வழங்கும் கோரிக்கைகளே அன்றி நடைமுறைச்சாத்தியமான வன்னி மக்களின் நலன்சார்ந்த கோரிக்கையாக அமையவில்லை.

உண்ணாவிரதிகளில் சிவதர்சன் சிவகுமாரவேல் ஆரம்பத்திலேயே உண்ணாவிரதத்தை கைவிட்டார். பரமேஸ்வரன் சிவசுப்பிரமனியம் பின்னாட்களில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். பிரித்தானிய அரசு சில உறுதிமொழிகளைத் தந்துள்ளதன் அடிப்படையில் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகக் கூறிய பரமேஸ்வரன் சிவசுப்பிரமணியம் பிரித்தானிய அரசின் உறுதி மொழிகளை தற்போது வெளியே தெரிவிக்க முடியாது என்று மறுத்தவிட்டார். ஆனால் அந்த உறுதிமொழி என்னவென்பது பின்னர் வெளிவந்தது. மனிதக் கேடயங்களாக உள்ள வன்னி மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் விடுவித்தாலேயே பிரித்தானிய அரசு மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதே பரமேஸ்வரன் சிவசுப்பிரமணியம் என்ற உண்ணாவிரதிக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த 75 நாள் கவன ஈர்ப்புப் போராட்டம் மெற்றோ பொலிட்டன் பொலிசாருக்கு எட்டு மில்லியன் பவுண்களுக்கு மேல் நட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. வன்னி மக்கள் இலங்கை அரசபடைகளால் கொல்லப்படுவதற்கு புலம்பெயர் மக்களும் காரணமாக இருந்துள்ளனர். இம்மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி அவர்களுக்கு மிகக் கொடுமை புரிந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியையும் அதன் தலைவர் வே பிரபாகரனின் படத்தையும் பிடித்துக் கொண்டு மனித உரிமை பேசுவதற்கும் சிங்கக் கொடியையும் முப்படைத் தளபதி சரத்பொன்சேகாவின் படத்தையும் பிடித்துக் கொண்டு மனித உரிமை பேசுவதற்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது.

புலம்பெயர்ந்த மாணவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள இளையவர்கள் இயக்க கட்சி அரசியலுக்குள் அள்ளுண்டு செல்லாது தங்களுக்கான ஜனநாயக பூர்வமான அமைப்புகளைக் கட்டி அதனூடாக மக்கள் நலன்சார்ந்த அரசியலை முன்னெடுக்க வேண்டும். இதனை அவர்கள் சுயாதீனமாக மேற்கொள்ள வேண்டும். அதனை விட்டு இறக்குமதி செய்யப்பட்ட தலைமைத்துவங்களுக்குப் பின் மந்தைக் கூட்டமாக இழுக்கப்படுவதை இவர்கள் நிராகரிக்க வேண்டும்.

தங்கள் கைகளிலும் வன்னி மக்களின் குருதி படிந்திருப்பதை இவர்கள் உணர்ந்து சுயவிமர்சனத்திற்கு தங்களை உட்படுத்திக் கொண்டே அடுத்த நகர்வை ஏற்படுத்த முடியும்.

இன நல்லுறவுடன் வன்னி முகாம்களில் உள்ள மாணவர்களுக்கான கல்வித் திட்டம் : த ஜெயபாலன்

mr-wais.jpgவன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்த தேசம்நெற் முன்னெடுத்த முயற்சிக்கு இலங்கை மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் சங்கம் உதவ முன் வந்துள்ளது. இருபத்து எட்டு லட்சம் ரூபாய் நிதித்திட்டத்தில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் முகாம்களில் உள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் 5 பயிற்சி நூல்கள் மற்றும் வழிகாட்டி நூல்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக 2009 ஏப்ரல் 01ஆம் திகதி இடம்பெயர்ந்த தரம் 05இல் கல்விபயிலும் 1057 மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்டமும், தேசம்நெற் உம் இணைந்து மாதிரிவினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கியது.

2009.06.01ஆம் திகதி உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் இயங்கும் 53 பாடசாலைகளிலும் உள்ள இடம் பெயர்ந்த தரம் 5 மாணவர்களின் எண்ணிக்கை 4872 ஆக உயர்ந்துள்ளது.

எனவே, வவுனியா நலன்புரி நிலையங்களில் செயற்படும் இடம்பெயர்ந்த மாணவர்களுக்காக வேண்டி அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் இணைப்பாளரும், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளருமான திரு.த. மேகநாதன் அவர்களின் வேண்டுகோளின்படி மேலதிகமான 3815 மாணவர்களுக்கும் மேற்படி உதவியினை வழங்க தேசம்நெற் உம், சிந்தனைவட்டமும் முடிவெடுத்தது. அத்துடன், இந்த வேலைத்திட்டத்தில் சில அமைப்புகளையும் இணைத்துக் கொள்ள முடிவெடுத்தது.

ஒரு மாணவனுக்கு 570ரூபாய் வீதம் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவினம் 2, 777,040 ரூபாவாகும். இச்செலவில் முன்றிலொரு பங்கினை சிந்தனைவட்டம் பொறுப்பேற்றுக் கொண்டது. இரண்டாம் கட்டமாக 3815 மாணவர்களுக்கு வினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை நாணயப்படி 7 இலட்சம் ரூபாய்களை வழங்க மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நேற்று சிந்தனைவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற வைபவத்தின்போது மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றிய செயலாளர் ஜனாப் ஏ.எம். வைஸ் அவர்கள் சிந்தனைவட்ட பணிப்பாளர் கலாபூசணம் புன்னியாமீன் அவர்களிடம் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியாக காசோலையை கையளித்தார்.

மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றிய செயலாளரும் சட்டத்தரணியும், தேசிய சேமிப்பு வங்கியின் மாவட்ட சட்ட அதிகாரியும், சத்திய பிரமாண ஆணையாளரும், சமாதான நீதவானும், மத்திய இலங்கை தகவல் பேரவையின் தலைவரும், தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பினதும், ஸ்ரீலங்கா மீடியா போரத்தினதும் கண்டி மாவட்ட இணைப்பாளருமான சட்டத்தரணி ஏ.எம். வைஸ் அவர்கள் “தேசம்நெற்”க்கு வழங்கிய விசேட நேர்காணல் எதிர்வரும் தினங்களில் இடம்பெறும்.

வன்னி அவலமும் ஜிரிவி, தீபம், ஐபிசி, ஒரு பேப்பர் புலிகளுடன் செய்த கூட்டுக் கலவியும்.

உயிழிழந்த பொதுமக்கள் 20 000
காயமடைந்த பொதுமக்கள் 60 000
உயிரிழந்த சிறுவர்கள் 3600 (மார்ச் வரை)
காயமடைந்த சிறுவர்கள் 7650 (மார்ச் வரை)
உயிரிழந்த இராணுவத்தினர் 6200
காயமடைந்த இராணுவத்தினர் 30 000
உயிரிழந்த வி புலிகள் ?
காயமடைந்த வி பு ?
புனர்வாழ்வு முகாம்களிலுள்ளோர் 7500
இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ளோர் 275000

‘300 000 வன்னி மக்களுக்கும் மரணத்துள் வாழ்வு’ என்ற தலைப்பில் பெப்ரவரி 11ல் வெளியான லண்டன் குரலில் முன் பக்கச் செய்தியை வெளியிட்டு 10 000 வரையான பொது மக்கள் கொல்லப்படலாம் என்றும் அச்சம் வெளியிட்டு இருந்தோம். அந்த அச்சம் நிஜமானது மட்டுமல்ல கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 000க்கும் அதிகம் என ஐநா செய்மதிப் புகைப்படங்களை ஆராய்ந்தும் ஏனைய தகவல்களின் மூலமும் யுகே ரைம்ஸ் பத்திரிகை ஆய்வுகளை வெளியிட்டுள்ளது.

பெப்ரவரி முற்பகுதியிலேயே விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாததைச் சுட்டிக்காட்டியதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டி இலங்கை இராணுவத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வன்னி மக்களை மரணத்தின் விளிம்புக்கு தள்ளி உள்ளது என்பதையும் எச்சரித்து இருந்தோம். யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் பொதுமக்கள் பற்றி எவ்வித அக்கறையையும் கொண்டிருக்கவில்லை.

பெப்ரவரி முற்பகுதியிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்து அரசியல் தீர்வுக்கு முன்வர வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தி இருந்தோம். ஆனால் இவைபற்றி கருத்தில் எடுக்காமல் இந்தியத் தேர்தல் முடிவுக்காக காத்திருந்து அனைத்தும் முடிவுக்கு வந்தபின் சரணடைந்து தங்கள் உயிர்களை இழந்துள்ளனர் புலிகளின் தலைமை. இவர்களின் முட்டாள்தனமான அரசியல் முடிவுகளுக்கு 20 000 பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அதனைப் போன்று பல மடங்கினர் காயத்திற்குள்ளாகி உள்ளனர். ஒட்டுமொத்த வன்னி மக்களும் 275 000 பேர் அகதிகளாக்கப்பட்டு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணை மூடிக்கொண்டு பாழ்ங் கிணற்றில் வீழ்தது மட்டுமல்ல அதற்கு முன் வன்னி மக்களை அப்பாழ்ங்கிணற்றில் தள்ளிவிட்டுள்ளனர். புலிகள் மட்டுமல்ல புலம்பெயர்ந்த புலி ஆதரவுக் குழுக்களும் குறிப்பாக புலி ஆதரவு ஊடகங்கள் இந்த அழிவுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

யுத்தப் பிரதேசத்தின் யதார்த்த நிலையை விளங்கிக் கொள்ளாமல் புலிகளின் தலைமைக்கு எதுவெல்லாம் மகிழ்ச்சியைக் கொடுக்குமோ அவற்றை மட்டுமே தொலைக்காட்சியில் காட்டியும் வானொலியில் முழங்கியும் பத்திரிகையிலும் இணையங்களிலும் எழுதியும் வந்தனர். ‘வன்னி மக்கள் பெரும் அவலத்திற்குள் தள்ளப்படுகின்றனர். அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தக் கூடாது. இலங்கை அரச படைகளின் மூர்க்கத்தனமான தாக்குதலில் மக்கள் கொல்லப்படுவார்கள். அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.’ என்ற எண்ணம் இந்த ஊடகங்களிடம் இருக்கவில்லை. மாறாக கொல்லப்பட்டவுடன் அதனைப் பிரச்சாரப்படுத்தி அரசியல் செய்யவே முற்பட்டனர்.

இந்த மக்களின் குருதியில் அரசியல் பிரச்சாரம் செய்த ஜி ரிவி தீபம், ஐபிசி, ஒரு பேப்பர் மற்றும் புலிகளின் ஊது குழல்களான ஊடகங்கள் மக்களின் உயிரிழப்புகளும் அவலமும் தவிர்க்க முடியாதது என்ற வகையிலும் அவ்வாறான அழிவுகளே தமிழீழ உருவாக்கத்திற்கு வழியேற்படுத்தும் என்றும் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டன.

வன்னி மக்கள் எதிர்நோக்கிய மரண வாழ்வுக்கும் அவலத்திற்கும் இலங்கை இராணுவமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சம பொறுப்புடையவர்கள் என்பதே சுயாதீன அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனால் இதனை முற்றாக மறைத்து வன்னி மண் பூர்வீக மண். அந்த மக்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது என்று ஐரோப்பிய மற்றும் மேற்குநாடுகளில் உள்ள இந்த ஊடகங்கள் வன்னி மக்களை மரண வாழ்வுக்குள் இருக்க நிர்ப்பந்தித்தனர். இந்த மக்களின் அவலத்தில் புலிகளுக்கும் சம பொறுப்பு இருப்பதை தட்டிக் கேட்காமல் புலிக் கொடிகளையும் எங்கள் தலைவர் பிரபாகரன் என்று பிரபாகரனின் படத்தையும் தாங்கி நடத்தப்படும் ஊர்வலங்களுக்கு வக்காலத்து வாங்கினர்.

இலங்கை இராணுவம் மூர்க்கத்தனமான செல் தாக்குதலை நடத்த அதிலிருந்து தப்பி ஓடும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றனர். இங்குள்ள ஊடகங்கள் இதனைக் கண்டு கொள்ளவேயில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் திருப்திப்படுத்த இவர்கள் செய்த ஆய்வுகளும் விமர்சனங்களும் கானல் நீர் போலாக இன்று புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டு வன்னி மக்களும் அவலத்திற்குள் தள்ளி விடப்பட்டுள்ளனர்.

புலிகளின் தலைமை அழிப்பதற்கு இருபத்திநான்கு மணிநேரத்திற்கு முன்னரும் தமிழீழத்தை அடைவதற்கு நெருங்கிவிட்டோம் என்று ஆய்வுகளும் விமர்சனங்களும் செய்த இந்த ஊடகங்களால் விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டது என்பதைக் கூடச் சொல்ல முடியவில்லை.

புலிகளை தட்டிக்கொடுக்கும் இடத்தில் தட்டிக்கொடுத்து இடித்துரைக்க வேண்டிய இடத்தில் இடித்துரைத்து இருந்தால் புலிகளின் தலைமையும் காப்பாற்றப்பட்டு இருக்கும் வன்னி மக்களும் இந்த அவலத்திற்கு உட்பட்டிருக்க மாட்டார்கள்.

ஆனால் காட் விற்பனையையும் விளம்பரத்தையும் மட்டும் நோக்காகக் கொண்டு சிற்றின்பத்திற்காக ஜி ரிவி தீபம் ஐபிசி ஒரு பேப்பர் போன்ற ஊடகங்கள் புலிகளுடன் செய்த கூட்டுக்கலவியே புலிகளுக்கு உயிராபத்தான நோயை ஏற்படுத்தியது. இறுதியில் சடுதியான அழிவையும் ஏற்படுத்தியது.

இந்நோய் புலிகளின் மூளையின் நரம்புத் தொகுதியைத் தாக்கி அவர்களின் சிந்தனைத் திறனை அழித்து கற்பனையுலகில் உலாவிட்டது.

இந்நோய்குரிய அறிகுறிகள் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் நிற்கும் வேட்பாளர் ஜனனி ஜனநாயகத்திலும் தென்படுகிறது. ஊடகங்களுடனான இந்தக் கூட்டுக் கலவியில் இருந்து விலத்தி யதார்த்தை புரிந்துகொண்டு செயற்படுவது ஜனனியின் அரசியல் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.

வணங்கா மண்: வசூல் மர்மம் தொடர்கிறது! பொருட்கள் இல.அரசிடம் ஒப்படைக்கப்படும்!!! : ரி கொன்ஸ்ரன்ரைன் & த ஜெயபாலன்

Nithiyananthan_DrVanni_MissionMoorthy N S DrThaya_Idaikadar_Clrசெய்தி: கெப்டன் அலி கப்பல் கடற்படையால் கைப்பற்றப்பட்டது.

கெப்டன் அலி என்ற கப்பல் இன்று (SL_June 05 2009) அதிகாலை கடற்படையால் கைப்பற்றப்பட்டது. இலண்டனிலிருந்து அகதிகளுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்து வந்ததாக கூறப்படும் இக்கப்பல் இலங்கை அரசின் அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் நுழைந்த போதே கடற்படையால் கைப்பற்றப்பட்டது எனக்கூறப்படுகிறது.

ஆயினும் வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவினர் ஏற்கனவே இலங்கை அரசுடன் இரகசியமாக மேற்கொண்ட உடன்படிக்கைக்கு அமையவே கப்பல் இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைய அனுமதிக்கப்பட்டது. எந்தவொரு கப்பலும் அதன் புறப்படும் துறைமுகத்திலிருந்து புறப்படும் போது அது எத்துறைமுகத்திற்குச் செல்கிறது என்பது போன்ற விதிமுறைகளுக்கு அமையவே புறப்பட முடியும். அதற்கு ஏற்ப வணங்கா மண் ஏற்பாட்டாளர்கள் இலங்கை அரசுடன் ஒரு இரகசிய உடன்பாட்டுக்கு வந்தே கப்ரன் அலியை இலங்கைக்கு அனுப்பி வைத்ததாக ‘லண்டன் குரல்’ பத்திரிகைக்கு தெரியவந்துள்ளது. ‘வணங்கா மண்’ ‘கப்டன் அலியாகி’ இலங்கைக்குச் செல்ல இலங்கை அரசு அவர்களைக் கைது செய்வது போல் கைதுசெய்து விடுவிக்க உள்ளது.

லண்டன் வந்துள்ள வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லகமவிடம் வணங்கா மண் தொடர்பாக தேசம்நெற் ஆசிரியர் ரி சோதிலிங்கம் இன்று (யூன் 4) கேள்வி எழுப்பியபோது, கப்பல் தகுந்த ஆவணங்கள் இன்றி இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைந்தால் இலங்கை அரசு தனது பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கும் எனத் தெரிவித்தார். வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவினருடன் இரகசிய உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது தொடர்பாக அவர் எதனையும் குறிப்பிடவில்லை. கப்பலில் உள்ள பொருட்கள் பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் மனிதாபிமான உதவிப் பொருட்கள் விதிமுறைகளுக்கு அமைவாக வழங்கப்பட்டால் அவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதில் எவ்வித தடையும் இல்லை என்பதை இலங்கை உயர்ஸ்தானிகர் தேசம்நெற் இற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார். இதற்கான இரகசிய உடன்பாடும் ஏற்கனவே ஏற்பட்டு இருந்தது.

செய்தியின் பின்னணி:

இன்று லண்டனில் வெளியான ‘லண்டன் குரல்’ பத்திரிகையின் பிரதான செய்தி. தேசம் நெற் வாசகர்களுக்காக மீள் பிரசுரமாகிறது. இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவின் நேர்காணலை பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்.

வணங்காமண் ஏற்பாட்டலர்களை நேர்காண்கிறார்கள் GTV www.tubetamil.com 2

வணங்காமண் ஏற்பாட்டலர்களை நேர்காண்கிறார்கள் GTV www.tubetamil.com 3

வணங்கா மண் தொடர்பாக வெளியான முன்னைய கட்டுரை.

புலத்து தமிழ் மக்களின் இஸ்ரேலியக் கனவு ‘வணங்கா மண்’ : த ஜெயபாலன்

வணங்கா மண்: வசூல் மர்மம் தொடர்கிறது! பொருட்கள் இல.அரசிடம் ஒப்படைக்கப்படும்!!!

‘உலகமே கை விட்ட பின் எம் உறவுகளின் உயிர் காப்பதற்க்கான தாயகம் நோக்கிய பயணம்.’ என்று பெரும் எடுப்பில் ஆரவாரித்த வணங்கா மண் ஒருங்கிணைப்புக் குழுவின் வசூல் மர்ம் இன்னும் தொடர்கிறது.

‘சாவுக்குள் வாழ்வாய் வாழும் மக்களை பட்டினியால் சாவு கொள்ள விடுவோமா? வேதனைகள் சோதனைகளை கடந்து வந்து புலம்பெயர்ந்து வாழும் நாம் எம்மினம் அழிய விடுவோமா? அரசுகள் கைவிட்டால் என்ன? மனிதநேயம் கொண்ட மக்களிடம் எடுத்து செல்லுங்கள் எம்துயரை, பெற்றுக்கொள்வோம் அவர்கள் ஆதரவை. காத்திடுவோம் எம் உறவுகளை!!!’ என்று உணர்ச்சிகளைத் தூண்டி முழுவீச்சில் வணங்கா மண் பொருட்களையும் நிதியையும் சேகரித்தது.

ஆனால் பட்டினியால் தவித்த மக்களின் இறுதிப் பகுதியினர் மீட்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டு இருவாரங்கள் கடந்தும் இன்னமும் இக்கப்பல் வன்னி மக்களை நெருங்கவில்லை. முல்லைத் தீவு கடற்பரப்பிற்கு கொண்டு சென்று சர்வதேச கவனத்தை ஈர்க்கப் புறப்பட்ட வணங்கா மண் தற்போது இலங்கை அரசிடம் கையளிக்கப்பட உள்ளது. தற்போது சுயஸ் கால்வாயைக் கடக்கும் இக்கப்பல் இலங்கை அரசின் உடன்பாட்டுடன் கொழும்புத் துறைமுகத்தை அடைந்து பொருட்கள் அரசினால் கையேற்கப்பட உள்ளதாக லண்டன் குரலுக்குத் தெரிய வருகிறது. 

புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்த மக்களுக்கு உணவு விநியோகத்தை மேற்கொள்ள ஆரம்பிக்க்பட்ட இந்த வணங்கா மண் கப்பல் திட்டம் அதன் ஆரம்பத்திலேயே விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது தங்கள் ஆரம்ப முடிவில் இருந்து U-turn எடுத்து இலங்கை அரசிடம் பொருட்கள் கையளிக்கப்பட உள்ளது.

மார்ச்சில் ஆரம்பிக்க்பட்ட “Mercy Mission to Vanni” என்றழைக்கப்பட்ட இக்கப்பல்த் திட்டத்திற்கு கவுன்சிலர் தயா இடைக்காடர், கலாநிதி நித்தியானந்தன், Dr புவி ஆகியோரைக் கொண்ட Dr மூர்த்தி தலைமையிலான குழு பொறுப்பாக இருந்தது. இக்குழுவில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவருடன் லண்டன் குரல் தொடர்பு கொண்ட போது இது பற்றிய விபரங்கள் தனக்கு தெளிவாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

வன்னிமிசன் என்ற பெயரில் உள்ள உத்தியோகபூர்வ இணையத்தளமும் முக்கிய தகவல்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. வன்னிமிசனில் அனுப்பப்படும் பொருட்களின் விபரம், அதற்கு சேகரிக்கப்பட்ட நிதி விபரம் அதற்கான செலவு விபரங்கள் எதுவுமே அறிவிக்கப்படாமல் கப்ரன் அலி, சிரியா நாட்டுக் கொடியுடன் கப்பல் இலங்கை நோக்கிச் செல்கிறது.

இக்கப்பலின் கொள்ளளவு Maximum TEU capacity : 5560 Reefer containers : 1080. ஆனால் கப்ரன் அலியின் கொள்ளளவிலும் மிகக் குறைவான தொகையான 900 மெற்றிக்தொன் வரையான உணவுப் பொருட்களும் மருந்துப் பொருட்களுமே அனுப்பப்படுகின்றது.குறைந்த அளவான பொருட்களுக்கு தனியாக ஒரு கப்பலை ஒழுங்கு செய்து அனுப்புவதற்கான செலவுத் தொகை மிக மிக அதிகமாகும்.

பிரித்தானியாவில் உள்ள இந்துக் கோவில்கள் ஒன்றியம் மட்டும் 200 000 பவுண்களை வன்னிமிசனுக்கு வழங்க முன்வந்து 50 000 பவுண்களுக்கு காசோலையை உடனடியாக வழங்கி இருந்ததாக வன்னிமிசன் செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.

வன்னி மக்களின் அவலத்தை முன்நிறுத்தி ஆபிரிக்காவில் உள்ள உயர்ந்த மலைச் சிகரமான கிளிமொஞ்சதாரோ மலையில் ஏறிய கீரன் அரசரட்ணம் என்ற இளைஞர் 30 000 பவுண்சை சேகரித்து வணங்கா மண் திட்டத்திற்கு வழங்கி உள்ளார்.

இதனைவிட வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஆலயங்கள், வியாபார ஸ்தாபனங்கள், சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், பொது அமைப்புகள், தனிநபர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் இந்த வன்னிமிசனுக்கு பொருளாகவும் நிதியாகவும் உதவிகளை வழங்கி உள்ளனர்.

ஆனால் இந்த வன்னி மிசனின் ஏற்பாட்டுக் குழுவினர் ஒரு கப்பலை ஒழுங்கு செய்து  பொருட்களை அனுப்பினால் தங்கள் பொறுப்பு முடிந்தது என்ற வகையில் நடந்துகொள்கிறார்கள் என இவர்களுடன் தொடர்பு கொண்ட பொதுமக்கள் லண்டன் குரலுக்குத் தெரிவித்தனர்.

இத்திட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினரான கவுன்சிலர் தயா இடைக்காடர், கலாநிதி நித்தியானந்தன், Dr புவி, Dr மூர்த்தி ஆகியோர் இந்த வன்னிமிசன் தொடர்பாக பொறுப்புடன் நடந்து கணக்கு மற்றும் விடயங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்ற குரல்கள் தற்போது எழ ஆரம்பித்து உள்ளது.