ஜெயபாலன் த

ஜெயபாலன் த

எளியவனை வலியவன் இன்னும் மிதிக்கின்றான்! மனித சமூகம் நாகரீகமடைந்துவிட்டதா?

அமெரிக்கா – சீனா சண்டை இப்ப நம்மட தவறணைக் கோஸ்டியளின் சண்டை லெவலுக்கு வந்திட்டுது. ஹூவாய் நிறுவனத்தின் பிரதான நிதிப் பொறுப்பாளர் அந்நிறுவனத்தின் உரிமையாளரின் மெங் வன்சூ மூன்று ஆண்டுகளுக்கு முன் கனடாவில் அவருடைய இல்லத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அமெரிக்க அரசின் தடையுத்தரவை மீறி ஈரானுடன் நிதிப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பதிலுக்கு சீனா இரு கனேடிய ராஜதந்திரிகளை தன்நாட்டு இராணுவ இரகசியங்களைக் கடத்தியதாகக் குற்றம்சாட்டி சிறையில் அடைத்து பதிலடி கொடுத்தது.

இப்போது அமெரிக்கா மெங் வன்சூ குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று சொல்லி அவரை விடுதலை செய்ததை அடுத்து சீனாவும் தான் சிறை வைத்த இரு ராஜதந்திரிகளான மைக்கல் கோவ்றிக் மற்றும் மைக்கல் ஸ்பாவ்வோர் இருவரையும் விடுதலை செய்துள்ளது.

இதுவரை உலக பொலிஸ்காரனாக உலா வந்த அமெரிக்காவிற்கும் அதன் வாலாகத் திரிந்த பிரித்தானியாவிற்கும் இனி இந்த பொலிஸ்காரன் விளையாட்டுச் சரிவராது. 2019இல் பிரித்தானிய கடற்படை ஈரானிய பெற்றோல் சுப்பர் ராங்கர் ஒன்றை கில்பிராட் கடற்பகுதியில் வைத்து, ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட சிரியாவுக்கு பெற்றோல் அனுப்பப்படுகின்றது என்று கூறி பிரித்தானிய கடற்படை ஈரானிய ராங்கரைக் கைப்பற்றியது. அதனையடுத்து ஈரான் பதிலடியாக பிரித்தானிய ராங்கரை வளைகுடாப் பகுதியில் கைப்பற்றியது. அதன் பின் இரு தரப்புமே உடன்பாட்டுக்கு வந்து ஈரான் தான் கைப்பற்றிய பிரித்தானியாவின் ராங்கரை விடுவிக்கு ஈரானின் ராங்கரை விடுவிக்கும் நீதிமன்ற உத்தரவைப் பெற்று பிரித்தானியா தான் கைப்பற்றிய ஈரானிய ராங்கரை விடுவித்தது.

சட்டம், ஒழுங்கு, நீதி, நியாயம் எல்லாம் வறுமைப்பட்டவர்களுக்கும் வலுவில்லாதவர்களுக்கும் மட்டுமே. சட்டம்இ ஒழுங்குஇ நீதிஇ நியாயம் எல்லாம் வலுவானவர்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் சாதகமாகவே வேலை செய்யும். இது தனிப்பட்டவர்கள் சார்ந்தது மட்டுமல்ல நாடுகள் மட்டத்திலும் இதுவே நடைபெறுகின்றது. வலுவான நாடுகள் வலுவற்ற நாடுகளை ஆட்டிப்படைப்பதும் இதன் அடிப்படையில் தான்.

டார்வினின் ‘தி சர்வைவல் ஒப் தி பிற்றஸ்ட் – The survival of the fittest’ காடுகளுக்குள் உள்ள விலங்குகளுக்கு மட்டுமல்ல நாட்டுக்குள்ளும் நாடுகளுக்கு இடையேயும் வீடுகளுக்குள்ளும் வீடுகளுக்கு இடையேயும் இதுவே பொதுவிதி.

இப்போது என்னமோ சுத்தமான சுவாமிப்பிள்ளைகளாக சட்டம், ஒழுங்கு, நீதி, நியாயமாக நடக்கும் தங்களை சீனா குறுக்கு வழியில் மடக்கிவிட்டதாக மேற்குநாட்டு ராஜதந்திரிகள் புலம்புகின்றனர். பிடல் கஸ்ரோவை கொல்வதற்கு 600க்கும் மேற்பட்ட தடவைகள் முயற்சி செய்த போது எந்தச் சட்டம், ஒழுங்கு, நீதி, நியாயத்தை கடைப்பிடித்தார்கள்? ருவின் ரவரை தாக்கி அழித்தவர்கள் சவுதிய அரேபியர்கள் ஆனால் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி ஈராக் மீது படையெடுத்து அந்நாட்டில் மனித அழிவுக் கணக்கெடுப்பின்படி உத்தியோகபூர்வ எண்ணிக்கை 200,000. உண்மையான எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகம்.

ஈராக் மட்டுமா, இந்த மேற்குலகம் தலையீடு செய்த அப்கானிஸ்தான், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் இன்றும் உயிரழிவுகள் நடந்தவண்ணமே உள்ளது. ஆனால் சீனா, ரஸ்யா, வடகொரியா போன்ற நாடுகள் வலுச்சமநலையை வைத்திருப்பதால் மட்டுமே இன்று உலகில் ஓரளவு சமாதானம் நிலவுகின்றது. முதலில் யாரும் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதில்லை என்ற ஒப்பந்தமே இதுவரை சமாதானத்தை நிலைநிறுத்தி வைத்திருக்கின்றது.

குடும்பம் என்பது சிறிய அரசியல். அரசியல் என்பது பெரிய குடும்பம். எதிலும் டார்வினின் கூர்ப்புக்கொள்கையே இன்றும் நிலைக்கின்றது. அதாவது ‘தி சர்வைவல் ஒப் தி பிற்றஸ்ட்’. ஆகவே மனிதன் நாகரிகமடைந்துவிட்டான் என்பது வெறும் ஆடை, ஆபரணங்கள், சார்ந்தது என்றால் அதில் ஓரளவு உண்மையுள்ளது. ஆனால் நாகரீகம் சிந்தனை சார்ந்தது என்றால் அது பற்றி மீளச் சிந்திக்க வேண்டும். எளியவனை வலியவன் மிதிக்கின்ற சமூகம் நாகரீகமான சமூகமாக கருதப்பட முடியாது.

பாகம் 8: மிதவாத அரசியலும் ஆயுத அரசியலும் உறவும் – முரணும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 08 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 08

தேசம்: 1983 யூலைக்கு முதல் நடந்த விடயங்களை திருப்பி பார்ப்போம். 70க்கு பிற்பட்ட காலங்களில் தமிழர் எழுச்சியை தமிழரசுக்கட்சி தலைமை தாங்குகிறது. தொடர்ந்து 1980களுக்குப்பின் ஆயுதக்குழுக்களின் கைக்கு மாறுகின்றது. இந்த காலகட்டங்களில் தமிழரசுக் கட்சி – தமிழர் விடுதலைக் கூட்டணி – பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணி – விடுதலை இயக்கங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான உறவு எப்படி இருந்தது அதனை உங்களால் எப்படி உணர முடிந்தது…? முன்னைய பேட்டிகளில் உங்களுக்கு தமிழரசுக்கட்சி மீது பல விமர்சனங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் பொதுவாக நிலை அப்பிடி இல்ல. அந்த நிலை எப்படி ஆனதாக காணப்பட்டது…?

அசோக்: தமிழரசு கட்சியின், தமிழர் விடுதலைக் கூட்டணியின் நடத்தை தொடர்பாக தான் பிரச்சினை இருந்ததே தவிர தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி பேசிய அரசியல் தொடர்பாக எங்களுக்கு சிக்கல் இருக்கவில்லை. இக் கட்சிகள் பேசிய அரசியல் யதார்த்தமான அரசியல். பேரினவாத ஒடுக்குமுறை, குடியேற்றத் திட்டங்கள் தொடர்பான பிரச்சனை, தமிழர்களுக்கான சம உரிமை இன்மை, சிறுபான்மை இனங்கள் நசுக்கப்படுகிறது என்று கூறிய கோரிக்கைகள் உண்மையானவை. அந்த எதிர்பார்ப்புகள் அவர்களுடைய உரிமை தொடர்பான விடயங்கள் உண்மையானவை. எனக்கு இக் கட்சிகளின் நடத்தை தொடர்பாக விமர்சனங்கள் இருந்தது. செயற்பாடு தொடர்பாக அதனுடைய அதிகாரம் தொடர்பான பிரச்சனைகள் நிறைய இருந்தது.

தேசம்: குறிப்பாக

அசோக்: தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வடிவாக கையாண்டு இருக்க முடியும் என நினைக்கிறேன். அவர்களினுடைய அரசியல் முக்கியமாக பாராளுமன்ற கதிரைகளுக்கான அரசியலாக, பேரம் பேசுவதற்கான அரசியலாகபோய்விட்டது. தமிழ் மக்களுக்கான அரசியலாகவன்றி அது தங்களுடைய கட்சி உறுப்பினர்களுக்கான அரசியலாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் செல்வநாயகம் இருக்கும்போதும் அந்த அரசியல் வேறு மாதிரித்தான் இருந்தது. செல்வநாயகம் இருக்கும் வரை ஓரளவுக்கு தமிழரசுக்கட்சி தமிழர்களின் உரிமைக்கான ஒரு குரலாக இருந்தது. ஏனென்றால் முஸ்லிம்களுக்கான தனியலகு பற்றி கூட செல்வநாயகம் பேசி இருக்கிறார். அவர் இனங்களுக்கிடையிலான சமத்துவம், ஒற்றுமை பற்றி எல்லாம் பேசி இருக்கிறார். இந்த உணர்வுகள் பின்பு தமிழரசுக் கட்சியிடம் இருந்ததில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணிடமும் இருக்கவில்லை. முஸ்லிம் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த கட்சிகளை விட்டு வெளியேறியதற்கு காரணமும் இந்த கட்சிகளின் சந்தர்ப்பவாதம்தான்.

தேசம்: நீங்கள் கூறுகின்ற இந்த அரசியல் விளக்கம் அன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடையே எப்படி பிரதிபலித்திருந்தது …? அல்லது தமிழரசு கட்சியோ அதன் பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணியோ தமிழர்களுக்கு விசுவாசமாக இல்லை என்பதை அவர்கள் எப்படி உணர்ந்தனர்…?

அசோக்: வெகுஜன பரப்பில் தமிழரசுக்கட்சி பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணி உன்னதமான ஒரு அமைப்பாகவே உணரப்பட்டது. விமர்சனங்கள் இருந்தது. உதாரணமாக எங்களுடைய குடும்பத்தை எடுத்துப் பார்த்தால் கூட எனக்கு விமர்சனம் இருந்த அளவிற்கு, என்னுடைய குடும்பத்தினரிடம் விமர்சனங்கள் எதுவும் இருக்கவில்லை. எங்களுடைய கிராமத்தில் கூட விமர்சனங்கள் இருக்கவில்லை. அது யாரிடம் வந்தது அரசியல் சமூக அறிவு பெற்ற – இடதுசாரித் தோழர்கள் மத்தியில் தான் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி பற்றிய முரண்பாடுகள் வருது. நீங்கள் கேட்டது போல ஏன் ஆயுதக் குழு இயக்கங்கள் தோன்றின என்பதற்கு இன்னொரு விதமான அரசியல் இருந்தது. என்னவென்றால், தமிழர் விடுதலைக் கூட்டணி தன்னை ஒரு தமிழர்களின் பாதுகாப்புக்கான பாராளுமன்ற கட்சியாக தன்னை நினைத்திருந்தால் குறைந்தபட்சமாவது தமிழர் பிரச்சினைகளைத் தீர்த்து இருக்கலாம். ஒரு உரையாடல் முக்கியம். முரண்பாடு தோன்றிய சமூகத்துடனான உரையாடல் உங்களுக்கு அவசியம். அந்த உரையாடல் எப்பொழுதும் நிகழ்ந்ததில்லை. சிங்கள மக்கள் மத்தியில் தமிழரசுக்கட்சியினர், தமிழர் விடுதலைக்கூட்டணி யாருமே தமிழர்களின் பிரச்சினையை கொண்டு செல்லவில்லை. இயக்கங்களும் கொண்டு செல்லவில்லை.

புளொட் அதற்கான முயற்சியை ஓரளவு மேற்கொண்டது. JVP யில் இருந்து பிரிந்த தோழர்களோடு ஒரு உறவை வளர்த்தது. அதற்கான ‘ தமிழிழம்- சிறிலங்கா நட்புறவுக் கழகம்’ என்ற பெயரில ஒரு அமைப்பை உருவாக்கி இருந்தம். இவ்அமைப்பில் குமரன், முரளி, ஈஸ்வரன், கௌரிகாந்தன் , நானும், சிங்கள தோழர்களும் இணைந்து தென்னிலங்கையில் பல வேலைத்திட்டங்களை தொடங்கினோம். ஆனா புளொட் தலைமை ஒத்துழைப்பு கொடுக்கல்ல. தொடங்கின கையோட முடிஞ்சி போய்ச்சி. சிங்களத் தோழர்களுக்கு எங்களில சரியான ஏமாற்றம். என்டாலும் பறவாயில்ல புளொட் ரேடியோவில சிங்கள சேவிச நடத்திச்சு. அது சிங்கள மக்கள மத்தியில் தாக்கத்தை கொடுத்ததென்றுதான் சொல்லவேண்டும்.

தமிழரசு கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி நினைத்திருந்தால் அவர்கள் நிறைய செய்திருக்கமுடியும். அதற்கான வளங்கள் இருந்தன. அதில் அங்கத்துவம் வகித்தவர்கள் எல்லோரும் சட்டத்தரணிகள். அவர்களுக்கு மொழி ஒரு தடையாக இருந்திருக்காது. நன்றாக ஆங்கிலம் கற்று இருந்தார்கள் பல்வேறு தரப்பினரை சந்தித்து தமிழர்களின் பிரச்சினையை எடுத்துரைத்திருந்திருக்கலாம். எமது நியாயங்களை சிங்கள மக்கள் புரிந்து கொணடிருப்பாங்க.

தேசம்: இந்தக் காலகட்டங்களில் தலைவர் அமிர்தலிங்கம் உள்ளிட்டோருக்காக கைகளைப் கிழித்துக் கொள்ளும் அளவிற்கு எழுச்சிமிக்க இளைஞர்கள் அலை ஒன்று வடக்கில் இருந்தது. இதேபோன்றுதான் நிலை கிழக்கிலும் இருந்ததா…?

அசோக்: ஓ ஓ…, கிழக்கிலும் உணர்ச்சி அரசியல் இருந்தது. எங்களின் கிராமத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி கூட்டங்கள் நடைபெற்றபோது நிறைய இளைஞர்கள் கைகளைப் கிழித்துக்கொண்டு ரத்தத்தை நெற்றியில் பூச கூடிய அளவிற்கு காசி ஆனந்தனுக்கு – அமிர்தலிங்கம் ஆகியோருக்கு எல்லாம் பெரிய ஆதரவு இருந்தது.

தேசம்: நீங்கள் குறிப்பிடக்கூடிய இந்த நிலையில் பின்னர் மாற்றங்கள் ஏதாவது வந்ததா…?

அசோக்: அந்த காலத்திலிருந்த தலைமுறையில் பெரிய அளவிலான மாற்றங்கள் வந்திருக்கவில்லை. என்னுடைய தலைமுறையினரிடம் மாற்றம் வந்ததே ஒழிய முன்னையவர்களிடம் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவுமில்லை. இன்றைய காலத்தில் தமிழரசு கட்சியின் வாக்கு வங்கி அவர்கள்தான். இந்தத் தலைமுறையினர் தான் இன்று 65 – 75 வயது தலைமுறையினராக உள்ளனர். இவர்களுடைய வாக்குவங்கி தான் தமிழரசுக்கட்சியின் பெரும் வாக்கு வங்கியாக உள்ளது. அதற்குப் பின்னர் பெரும்பாலான இளைஞர்கள் அரசியல் ரீதியாக வளர்க்கப்பட்ட – ஓரளவு சிந்திக்ககூடியவர்களாக இருந்தனர். இவர்கள்தான் தமிழரசுக் கட்சி மீதான அரசியல் விமர்சனங்கள் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். மற்றும்படி தமிழரசுக் கட்சிக்கான வாக்கு வங்கி என்றுமே உறுதியாக இருந்துள்ளது. பேரினவாதத்தின் ஒடுக்குமுறை, புறக்கணிப்பு இருக்கும் வரை தமிழ் அரசுக் கட்சி வாழும். அதற்கு மேல ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்.

இன்றும் கூட கடுமையாக நாங்கள் தமிழரசுக் கட்சியை விமர்சிக்கிறோம். ஆனாலும், ஒரு பாராளுமன்ற தேர்தலின் போது வாக்குகள் தமிழரசு கட்சிக்கு தான் போகின்றது. அதற்கு மாற்றீடாக எந்த கட்சிகளுமே இல்லை.

தேசம்: நீங்கள் சொல்கின்ற அந்த 82 – 83 கால கட்டங்களிலும் இதே நிலைதானா…? இளைஞர் இயக்கங்கள் அல்லது அமைப்புகள் பெரிய அளவிறகு மக்களின் மனதை வென்றெடுக்கவில்லை என்டுறீங்க.?

அசோக்: ஆம். வென்றெடுக்கவில்லை. ஏனென்றால் தமிழர் விடுதலைக் கூட்டணி க்கு மாற்றீடான ஒரு கட்சியை இளைஞர்களால் உருவாக்க முடியவில்லைத்தானே…

குறைந்த பட்சம் ஒரு வெகுஜன அமைப்பைக் கூட உருவாக்க இல்லைத்தானே. இளைஞர்கள் உருவாக்கிய ஆயுத இயக்கங்களிடம் இருந்து பெரும்பாலும் மக்கள் அன்னியப்பட்டு பார்வையாளர்களாகத்தான் இருந்தாங்க. பங்களிப்பாளர்களாக ஒரு காலமும் இருந்ததில்லை.

மக்களுக்கு இயக்கங்கள் தொடர்பாய் பிரமிப்பும், பயமும் இருந்ததே தவிர நெருக்கமான உறவு இருக்கல்ல. சில இயக்கங்கள் மக்களிடம் எஜமான் தன்மையுடன்தான் நடந்துகொண்டன. மக்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் மக்களுக்கு தண்டனை வழங்கின. மரண தண்டனை கூட கொடுத்தாங்க. அதிகார ஆணவத்தோடு இந்த இயக்கங்கள் நடந்து கொண்டன. பிறகு எப்படி இவை மக்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுக்கமுடியும்.

ஒரு விடுதலைப் போராட்டத்தில் மக்கள் பங்களிப்பின் முக்கியத்துவம், அதன் அவசியம் இயக்கங்களால் உணரப்படவே இல்லை. அரசியல் சார்ந்த வெகுஜன அமைப்ப கட்டியெழுப்பேல. ஆயுதம் இருந்தால் காணும் என்ற எண்ணம்தான் இருந்தது.

என்றாலும், புளொட், ஈபிஆர் எல் எப் இரண்டும் மக்கள் பங்களிப்பு, அணிதிரட்டல் போன்ற வெகுஜன வேலைத்திட்டங்களில் ஆர்வம் கொண்டிருந்தன.

காந்தியத்தை தடை செய்யாமல் விட்டிருந்தால் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மாற்றான அமைப்பாக காந்தியம் வளர்ந்திருக்கும். ஒருவேளை அது ஒரு எழுச்சியாக அமைந்திருக்கும். ஒரு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து அரசியல் சமூக மேம்பாட்டு இயக்கமாக அது வந்திருக்க முடியும். காந்தியத்துக்கு இருந்த பெரிய பிரச்சனை ஒரு ஆயுத இயக்கம் அதுக்குள் போகும் போது ஒரு வெகுஜன இயக்கத்திற்கும் ஆயுத இயக்கத்துக்குமான பரஸ்பர உறவு முறையாக – கவனமாக கையாளப் பட்டிருக்க வேண்டும். அது புளொட்டிலும் இல்லை.

தேசம்: இதை இப்படி பார்க்கலாமா…? தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு மிதவாத அரசியலை செய்ததாக இருந்த நிலை மாற்றம் கண்டு ஆயுத அரசியல் தான் தமிழர்களுக்கான ஒரு தீர்வைப் பெற்றுத்தரும் என்ற போக்கு தான் அந்த கால கட்டத்தில் இருந்ததா…? அதாவது இவர்கள் அரசியலுக்கானவர்கள்..

அசோக்: தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கம், தமிழர் விடுதலைக்கூட்டணியின், இதனுடைய ஒரு பகுதியாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். இளைஞர் பேரவை தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உபகுழுவாகதான் உருவாக்கப்பட்டது. பிறகு தமிழ் இளைஞர் பேரவைக்கும் – தமிழர் விடுதலைக் விடுதலைக் கூட்டணிக்கும் இடையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு புஷ்பராஜா, வரதராஜப்பெருமாள், முத்துக்குமாரசாமி எல்லாம் பிரிந்தது வேறு வரலாறு. ஆனால், அது தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உப குழுவாக தான் உருவாக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் போதாமை காரணமாக தான் ஆயுத இயக்கங்கள் உருவெடுத்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலில் காணப்பட்ட போதாமை இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஆயுத குழுக்களிலும் காணப்பட்டது.

தனி நாடு, தமிழ் ஈழம், பிரிவினை இப்படித்தான் எங்கள் நோக்கமும் இருந்ததே தவிர உலக அரசிலை யதார்த்தத்தை நாங்கள் அக்காலத்தில புரிஞ்சி கொள்ளல. எந்த ஒரு அரசியல் விழிப்பூட்டல்களும் இடம்பெறவில்லை. ஆயுத இயக்கங்கள் திடீர் வளர்ச்சியடைந்தன.

தேசம்: யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய தமிழர் மாவட்டங்களில் காந்தியத்தின் மீதான ஈடுபாடு காணப்பட்டதும் பிறகு பல இளைஞர்கள் அரசியல் மயப் படுத்தப்பட்டனர் என்ற போக்கு ஒன்று இருக்குது. அதே சமயம் வடக்கிலிருந்து காந்தியம் செய்யப்படல. அங்க வந்து மாணவர் இயக்கங்கள் தான் ஏற்பட்டிருந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்பி கொண்டிருந்தார்கள். இவர்களின் அரசியலும் ஆயுத அரசியலாகத்தான் இருந்ததுவா?

அசோக்: மாணவர் அமைப்பு கெஸ் வந்து ஓரளவு அரசியல் வகுப்பு நடாத்தி இருக்கும் என நினைக்கிறன். எல்லா மாணவர் அமைப்புக்களும் ஆயுத போராட்டத்தை நோக்கித்தான் அரசியல் மயப்படுத்தப்பட்டன. அன்றைய காலத்தில் வெகுஜன அமைப்புக்கள் இயக்கங்களால் தொடங்கப்பட்டாலும் அவற்றிக்கு தனித்துவமான வெகுஜன அரசியல் இருக்கல்ல. இயக்கங்களின் கிளைகளாகத்தான் அவை இருந்தன.

யாழ்ப்பாணத்தில் புளொட் மாணவர் அமைப்பான தமிழிழ மாணவர் பேரவை TESO கலவரத்திற்கு பிறகுதான் தீவிரமாக தொடங்குகிறது. TESO தனித்துவமான வெகுஜன அமைப்பாக செயற்பட முயன்றும் தலைமை இடம் கொடுகல்ல.புளொட்டின் யாழ் மாவட்ட அரசியல்பற்றி பின்னர் கதைக்கும் போது இதுபற்றி சொல்றன். புளொட்டின் தொழிற்சங்க அமைப்புக்களும் இப்படித்தான்.

தேசம்: கெஸ்ல இருந்த எல்லாருமே கடைசியா ஈபிஆர் எல்எப் ல போய்ச்சேருகினமா…

அசோக்: அப்படித்தான் கெஸ் , ஈபிஆர் எல்எப் ஆக மாற்றம் பெறுகிறதென நினைக்கிறன். அதன்ற வரலாறு எனக்கு தெரியல்ல. கெஸ் வந்து மாணவர்களுக்கூடாக கட்டமைக்கப்பட்டதால் ஓரளவு அரசியல் தேர்ச்சி அவங்களுட்ட இருந்திருக்கு. ஏனென்டால் ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர்கள் நிறைய பேரோட கதைக்குறப்போ அரசியல் ரீதியான உரையாடல்களை செய்யக்கூடியதாக இருந்தது. மற்ற அமைப்புகள்ட்ட அது இருக்கல.

தேசம்: அப்ப இந்த தமிழ் இளைஞர் பேரவை போன்ற அமைப்புகளின் அரசியல் வளர்ச்சி…

அசோக்: தமிழ் இளைஞர் பேரவைட்ட தமிழரசு கட்சியின்ற வலதுசாரி அரசியல்தான் இருந்தது. . இடதுசாரி அரசியல் அவங்களிட்ட இல்லை. இடது சாரி அரசியல் கொண்டவங்க காலப்போக்கில் புளொட்டிற்கும் ஈபிஆர்எல் எப்பிக்கும் போறாங்க.

தேசம்: இளைஞர் பேரவை யாழ்ப்பாணத்துக்கு வெளியிலயும் பலமாய் இருந்ததா…?

அசோக்: ஓம் . பலமாய் இருந்தது. மட்டக்களப்பில தமிழ் இளைஞர் பேரவையை காசி ஆனந்தனோடு சேர்ந்து உருவாக்கியதில வசந்தகுமார் முக்கியமானவர். இவர் ரியுட்டரி வைத்திருந்து படிப்பித்தவர். இவருக்கூடாகத்தான் நிறையபேர் தமிழ் இளைஞர் பேரவைக்கு வாறாங்க. காசி ஆனந்தனோடு சிறைக்கு சென்று கடுமையான சித்திரவதைகளை அனுபவிச்சவர்.ஆனா அவர் பெயர் மறக்கப்பட்டுவிட்டது. இவங்களையெல்லாம் பதிவு செய்ய வேணும். நடேசானந்தம், வாசுதேவா, வேணுதாஸ், பரமதேவா, சிவநாதன், ராம்ராஜ் எல்லாம் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்தாக்கள் தானே இயக்கங்களுக்கு வந்தது.வாசுதேவா, சந்ததியார், வரதராஜபெருமாள், கி.பி அரவிந்தன், தங்ககேந்திரன் எல்லாம் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்தாக்கள்தானே. புஸ்பராஜா, வரதராஜபெருமாள், கி.பி அரவிந்தன் தங்ககேந்திரன் எல்லாரும் ஈபிஆர்எல்எஃப் க்கு போய்ட்டாங்கள். சந்ததியார், வாசுதேவா, ராம்ராஜ் போன்றவங்க புளோட்டுக்கு வந்துட்டாங்கள். காசி ஆனந்தன், வேணுதாஸ் பரமதேவா எல்லாரும் எல் ரீ ரீ ஈ க்கு போறாங்க.

தேசம்: அப்ப இந்த இயக்கங்கள்ட வளர்ச்சிக் கட்டத்தில இந்த இயக்கங்கள்ன்ட பொருளாதார தேவைகள் எல்லாம் என்னென்று நிறைவேற்றப்படுது…? ஒரு தொகையான இளைஞர்கள் அதுக்குள்ள இருக்கேக்குள்ள… ஏற்கனவே அங்கு வங்கிக் கொள்ளைகள் எல்லாம் நடந்திருக்கு. இதெல்லாம் எவ்வளவு தூரம் சமூகத்தில பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கு…?

அசோக்: புளோட்டை பொருத்தவரை மக்கள்ட்ட தான் தங்கியிருந்தது. நாங்க மக்கள் மத்தியில தான் சாப்பாடு எல்லாம். பெரிய செலவில்லை. நாங்க போற இடத்தில மக்கள் மத்தியில் சாப்பிடுறது, பிரச்சாரம் பண்றது. ஏனைய அரசியல் வேலைத்திட்டங்களுக்கு, கூட்டங்களுக்கு பலர் அன்பளிப்பு நிதி தந்து உதவினாங்க. ஆயுத ரீதியான இயக்கம் ஒன்றுக்குத்தான் பணம் தேவை. வெகுஜன இயக்கங்களுக்கான ஆதரவு பொருளாதார உதவி மக்களுட்ட இருந்து கிடைத்தது. எல்லாத்தையும் மக்களிட்டையே பெற்றுக் கொண்டோம். வெகுஜன அமைப்பாக தொடங்கி ஆயுத இயக்கமாக மாறுகின்ற போது தான் பணம் தேவைப்படுது. அந்தக் கட்டத்தில்தான் கிளிநொச்சி வங்கி கொள்ளை அடிக்கப்படுது புளோட்டால. எப்ப வந்து நீங்க ஒரு ஆயுத இயக்கமா செயல்பட ஆரம்பிக்குறீங்களோ அப்பதான் பணம் ஒரு தேவையா தெரிய தொடங்குது.

தேசம்: அந்த நேரத்தில் பெரும்பான்மையான அமைப்புக்கள் வங்கிக் கொள்ளையில – தவறு என்றும் சொல்ல ஏலாது . இது ஆனால் சர்வசாதாரணமாக நடைபெற்று இருக்குது.

அசோக்: ஓம். நடந்திருக்கு. வங்கிக்கொள்ளைல ஈடுபட்டிருக்காங்க.அது சர்வசாதாரணமாக நடந்தது. வெகுஜன அமைப்புகள் மக்கள் மத்தியில் போய் பேசுதல், அவர்களோடு உறவுகளை வளர்த்தல், மக்களின்ர பங்களிப்பு, மக்களை அணிதிரட்டுதல் மக்கள் போராட்டம் என்ற ஒரு படிமுறை வளர்ச்சி கூடத்தான் ஆயுதப் போராட்டம் நடக்கும்.இப்ப நீங்க கியூபா, வியட்நாம் உட்பட எல்லா இடமும் பார்த்திங்க என்டா நீண்டகால படிமுறை வளர்ச்சி ஒன்று இருக்கு.

எங்க போராட்டத்தில மக்கள் மயப்பட்டபோராட்டங்களில நம்பிக்கை இருகல்ல. ஆயுதப்போராட்டம் ஒன்றுதான் தீர்வென நம்பினோம். அப்ப ஆயுதங்களுக்கு, பயிற்சிகளுக்கு பணம் வேணும் . ஒரே தீர்வு வங்கிக் கொள்ளைகள்தான். அதனோட ஜூலை கலவரம் வந்துட்டு உடனடியாக… அப்ப இங்க அந்த நீண்ட கால வெகுஜன இயக்கத்துக்கான அவகாசம் இல்லாம போயிட்டு.

தேசம்: ஆயுத இயக்கங்கள் கிட்டத்தட்ட ஒரு short cut அதான் பார்க்குறினம் என. மக்கள்கிட்ட போய் அரசியல் செய்யாமல் வங்கிகளையும் சிலஇயக்கங்கள் தனிப்பட்ட மக்கள் சொத்துக்களையும் கொள்ளையிட்டு உள்ளன.

அசோக்: சில இயக்கங்கள் செய்துள்ளன. முழுக்க முழுக்க ஆயுத இயக்கங்கள் என்னதான் சித்தாந்தங்கள், மக்கள் போராட்டம் என்றெல்லாம் அணி திரட்டுதல் என்றெல்லாம் கதைத்தாலும் கூட அவர்கள் முழுவதும் ஆயுத கவர்ச்சியோடதான் இருந்தாங்க.. ஆயுத பலத்தின் ஊடாக புரட்சி செய்து தமிழீழம் கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் எல்லா இயக்கத்திடமும்இருந்தது. அந்த நம்பிக்கை தான் எங்ககிட்ட கூட இருந்தது. ஆனால் இன்றைக்குத் திரும்பிப் பார்க்கும்போது விமர்சனத்துக்குரியதாகத்தான் இருக்குது.

தேசம்: இந்த வங்கிக் கொள்ளைகள் இதுகளால மக்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டு இருக்காங்க. வங்கிக் கொள்ளைகள் மட்டுமில்ல. சங்க கடைகள் கூட அடித்து உடைக்கப்பட்டிருக்குது. இதனால் சாதாரண மக்கள் எவ்வாறான பாதிப்பை எதிர் கொண்டார்கள். நான் நினைக்கிறேன்; களுதாவளை உங்களுடைய கிராமத்தில் கூட மக்கள் சேமிப்புக்காக கொடுத்திருந்த நகைகளை கூட கொள்ளை அடிப்பதற்காக திட்டம் ஒன்றும் இருந்தது.

அசோக் : ஓம். அது வேறு ஒரு அமைப்பு ஒன்று. அப்ப நாங்க JVP ல இருந்து வெளியேறி இருந்த காலகட்டத்தில், வெவ்வேறுபட்ட அமைப்புகள் வந்து எங்கள சந்திப்பாங்க. இப்ப வெளிப்படையா கதைக்கலாம். ஈரோஸ் அமைப்பு அன்னலிங்கம் ஐயா எங்களோட உறவு வைத்திருந்தவர். அவருடைய பிரதானமான நோக்கமாய் இருந்தது எங்க ஊர் வங்கியை கொள்ளை அடிப்பது. இப்படியான கிராமிய வங்கிகளில நகைகளை ஈடு வைச்சிருக்கிறவங்க ஏழை விவசாயிகள்தான். அவங்களுக்கு இந்த கிராமிய வங்கிகளினால் நஷ்ட ஈடு கொடுக்கமுடியாது; பாவம் மக்கள். மக்கள் மத்தியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டீங்க என்டு சொன்னா அது எங்களை மக்கள் மத்தில இருந்து அன்னியப்படுத்திவிடும். தடையாக போயிடும். நீங்க இப்படியான ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டு போலீசுக்கு தெரியவந்தால் உங்களால அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியாமல் போய்விடும். ஆனா இந்த அமைப்புகள் முழுக்க, மக்கள் இயக்கங்களை கட்டமை த்து மக்களிடம் ஆதரவும் நிதியும் பெறுவதை விடுத்து , பொருளாதார ரீதியான வங்கிக் கொள்ளைகளில் தங்கியிருந்தனர். பொருளாதார ரீதியாக மத்தியில் மக்கள் நிதி திரட்டவும், மக்கள் மத்தியில் தங்கி வாழ்வதற்கான சாத்தியங்கள் இருந்தது.அப்படியான நேரத்தில் இந்த வங்கிக் கொள்ளைகள செய்ய நாங்க விரும்பல.

தேசம்: அப்ப வங்கி கொள்ளை இடம் பெற்றதா…?

அசோக்: ஓம் அது நடந்தது வேறு இடத்தில். ஆனால் அது நாங்கள் கடுமையாக எதிர்த்தனாங்க.

தேசம்: இந்த வங்கிக் கொள்ளைகளில் எடுக்கப்பட்ட பணமும் நகையும் எப்படிப் பயன்படுத்தப்பட்டது இந்த இயக்கங்களால…?

அசோக்: அனேகமான வங்கிக் கொள்ளைகள் அனைத்தும் பயிற்சிகளுக்கு ஆயுதங்களுக்கு செலவழிக்கப்பட்டிருக்கு. . தனிநபர் ரீதியாக அது எங்கேயுமே பயன்படுத்தப்படல. ஒரு சில சம்பவங்கள் தவிர்க்க முடியாமல் சின்ன சின்ன தவறுகள் நடந்து இருக்கலாமே தவிர , மற்றும்படி அந்தத் தங்கங்களையும், பணங்களையும், நகைகளையும் இயக்கங்கள் தமக்காகவே பயன்படுத்தினர். அதேநேரம் தனிநபர்க்கூடாக பயன்படுத்தப்பட்டது என்று சொன்னா அது யாழ்ப்பாண ஹட்டன் நெசனல் வங்கி கொள்ளை தான்.

தேசம்: அவர்களுடைய அரசியல் செயற்பாடுகளும் வலு மட்டுப்படுத்தப்பட்டதாக தான் இருந்தது. இராணுவ நடவடிக்கைகளும் அவர்கள் மேற்கொள்ளல என …

அசோக்: அது மட்டுப்படுத்தப்பட்ட காலங்களில்தான் கொள்ளைகளும் அடிக்கப்பட்டது. அதுக்குப்பிறகு இயக்கமும் இல்லாம போயிட்டுது. பணமும் அதுக்குள்ள பயங்கர சிக்கலுக்கு உள்ளாகிட்டுது.

தேசம்: மற்ற அமைப்புகளுக்கு அது வழங்கப்பட்ட தாக சொல்லப்படுகிறதே…

அசோக்: தீப்பொறி இயக்கத்திற்கு கொடுக்கப்பட்டதா சொல்லப்படுது. ஐயருக்கு ஊடாக அது கொடுக்கப்பட்டதாக…!

தேசம்: அதைவிட வேற நான் நினைக்குறேன், ரெலி ஜெகன் எல்லாரும் அவர்களுடைய அமைப்பு சார்ந்து சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்தக் காலகட்டத்தில் சில தனி நபர் அமைப்புகளும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு இருந்த காலகட்டம் இருக்கு தானே… குறிப்பாக யாழ்ப்பாணத்தில.

அசோக்: இந்த இயக்கங்களின் அதிகரித்த உருவாக்கம் இருக்குதானே.., அது எங்க நடக்குது என்று சொல்லி சொன்னா ஒருவிதமான அதிகார மோகத்தினால, ஆயுத கவர்ச்சியாலதான் இந்த இயக்கங்களின் உருவாக்கம் அமைந்திருந்தது. அதனோட மத்தியதர வர்க்க மனோபாவமான ஹீரோசியம் சுயபிரபல்யம் ஒரு காரணமாக இருக்கு. ஈபிஆர்எல்எஃப் , ஈரோஸ் , புளோட் , ரெலோ புலிகள் எல்லாம் இயக்கங்களாக உருவாக்கப்பட்டிருக்குது. குறைந்தபட்சம் இந்த இயக்கங்களிடம் அதற்கான சித்தாந்தங்கள், அரசியல், இருக்குது. இனிமே புதுசா ஒரு இயக்கம் வருதென்டா இந்த இயக்கங்களின் கொள்கைகள் சித்தாந்தங்களை நடைமுறைகளைவிட வலுவான ஒரு காரணம் தேவையாய் இருக்கும். அப்படியான ஒன்றுமே இல்லை. அப்ப புதுசா இயக்கங்கள் வாரத்துக்கான நோக்கம் எங்க உருவாகுதென்டா நான் சொன்ன இந்தக் காரணங்கள்தான். அதேநேரம் அந்தக் காலத்திலே இயக்கம் என்பது பிரமிக்கத்தக்க ஒரு குறியீடாக போயிட்டு. அதால நிறைய இயக்கங்கள் அந்த காலத்தில வருது. அவற்றை தமிழர்களின் விடுதலைக்கான இயக்கங்களாக பார்க்க இயலாது என்று தான் நான் நினைக்கிறேன். ஏனென்டா உண்மையா அவங்க விடுதலைக்கான உந்துசக்தியாக வரவேண்டும் என்று நினைத்திருந்தால் ஏற்கனவே இருந்த இயக்கங்களில் எதுலயாவது சேர்ந்திருப்பார்கள். ஏதாவது ஒரு அமைப்பை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கலாம். அப்படி இல்லாட்டி புதிய அமைப்பை உருவாக்குகின்ற போது ஏற்கனவே உருவாக்கப்பட்ட அமைப்புகளை விமர்சனத்திற்கு ஊடாக கற்றிருக்கோனும். பாக்கப் போனா எல்லாரும் தனிநபர் தாக்குதல்களை நடத்தினார்கள். எல்லாம் தனிநபர் பயங்கர வாதச் செயல்களாகத்தானே இருந்திருக்கு.

தேசம்: நான் நினைக்கிறேன் இயக்கங்கள்ட எண்ணிக்கை அதிகரித்தது இந்த ஜூலை கலவரத்துக்கு முன்னமே தானே.

அசோக்: ஈரோஸ் , ஈபி.ஆர்.எல்.எப், புளோட் ,ரெலோ – எல்ரிரீ இந்த இயக்கங்கள்ட தோற்றம் வருது. நான் நினைக்கிறேன் எவ்வளவு இயக்கம் வந்ததே எங்கட போராட்டத்தினுடைய தோல்விதான். ஒரே கோட்பாட்டுக்காக – ஒரே கொள்கைக்காக ஒரே லட்சியத்திற்காக போறம் என்று சொன்னால் ஈபி.ஆர்.எல்.எப்- ம் மார்க்சிசம் கதைக்குது , ஈரோசும் மாக்சிசம் கதைக்குது , புளோட்டும் மாக்சிசம் கதைக்குது ஆனா எல்லாம் வெவ்வேறு பட்ட அமைப்புக்களா தானே இருக்குது. குறைந்தபட்சம் உடன்பாடுகள் கூட இல்லை தானே. ரெலோவும் – எல்ரிரீயும் ஆயுதம் சார்ந்து சிந்திக்கும் இயக்கங்கள். என்றாலும்கூட இவர்களுக்கு இடையிலான ஒருமைப்பாடு எங்கேயும் இருக்கல்ல தானே. எல்லாமே மத்திய தரவர்க்க குணாம்சங்களோடு உறைந்து போன இயக்கங்கள்தான். அதன்ர வெளிப்பாடுதான் இத்தனை இயக்கங்களும், முரண்பாடுகளும், சண்டைகளும் , அதிகாரப் போட்டிகளும், அழிவுகளும். மக்கள் நலன்களைவிட தனிநபர் மேலாதிக்க மனோபாவம் , சுயநலம், அதிகார ஆசைகள்தான் நம்ம போராட்ட இயக்கங்களை அழிச்சது.இன்றும் தமிழ்க் கட்சிகளிடம் இதுதானே மேலோங்கி இருக்கு.

தேசம்: அப்ப இப்படியான சூழலில் உங்களைப் போன்றவர்கள் அரசியல் செய்கின்ற போது எப்படியான பிரச்சனைகளை எதிர் கொண்டீர்கள்..? மற்ற இயக்கங்க ங்கள் ஆட்களை உள்வாங்கேக்குள்ள எப்படி உங்கள வித்தியாசப்படுத்துறீங்க…;

அசோக்: ஜூலை கலவரத்துக்குப் பிறகு இயக்கங்களோட ஆட்சேர்ப்பு என்பது கடும் விமர்சனத்துக்கு உரியதுதான். இவர்கள் சித்தாந்த ரீதியாக வந்த ஆட்கள் இல்லை தானே. ஒரு ஆர்வம் இருக்கும் தானே .

அதுலயும் நிறையபேர் ஆயுத கவர்ச்சி காரணமாக எந்த இயக்கத்திற்கும் போகத் தயாராக இருந்தார்கள். ஓரளவு சித்தாந்த ரீதியாக அரசியல் ஆர்வம் உடையவர்கள் ஈபிஆர்எல்எஃப் ஐ தேர்ந்தெடுப்பார்கள் – ஈரோசை தேர்ந்தெடுப்பார்கள் – புளோட்டை தேர்ந்தெடுப்பார்கள். வெறும் ஆயுத கவர்ச்சி கவர்ச்சி உடையாக்கள் அதிகமாக ரெலோவுக்கும், எல்ரிரிக்கும் தான் போனார்கள். எங்களைப்போன்ற சிந்தனை கொண்டவர்களுக்கு இந்த ஆள் சேர்ப்பு பெரிய சிக்கல்தான். இந்தியா ,பின்தள பயிற்சி எல்லாம் எங்கட சிந்தனைகளுக்கு, செயற்பாடுகளுக்கு இடம்இல்லாமல் செய்து விட்டது. என்டாலும் 83 ஜூலை கலவரத்திற்கு பின் அந்த நேரத்திலும் நாங்க யாழ்ப்பாணத்தில அரசியல் வகுப்புக்கள் வெகுஜனஅமைப்புக்கள் என்று ஏதோ நம்பிக்கையில வேலை செய்ய தொடங்கி இருந்தம்.

தேசம்: அப்ப 1983 ஜூலை கலவரம் – திருநெல்வேலி தாக்குதல் வரைக்கும் பெரிய அளவிலான ராணுவத் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்று நினைக்கிறேன். அப்படித்தான..?

அசோக்: 83 திருநெல்வேலி தாக்குதல் நடந்த வரைக்கும் பாரிய இராணுவ தாக்குதல் அதுவரைக்கும் நடக்கல. 13 பேர். எல்ரீரியிட முதல் தாக்குதல் அதுதான் என நினைக்கிறன்.

தேசம்: நான் நினைக்கிறேன் அடுத்த பதிவில் அதை செய்யலாம் என்று.

 

பிரித்தானியாவின் பணவீக்கம் இரட்டிப்பானாது! விலைகள் எகுறுகின்றது!! கந்தையானாலும் கசக்கிக் கட்டுங்கள்!!!

பிரித்தானியாவின் பண வீக்கம் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. யூலையில் 2 வீதமாக இருந்த பணவீக்கம் ஓகஸ்ட்டில் 3.2 வீதமாக உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடு அது கோவிட்-19 இனால் ஏற்பட்ட முடக்கத்தை அடுத்து எழுந்த தாக்கம். அதைவிடவும் நீண்ட முடக்கத்தின் பின் பொருளாதாரம் விரைந்து நகர ஆரம்பித்ததும் பொருட்களுக்கான தேவையும் கேள்வியும் அதிகரிக்க மூலப்பொருட்களின் விலை சந்தையில் அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாமல் பொருளாதாரம் இயங்க ஆரம்பித்ததும் எரிபொருளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அதனால் எரிபொருளின் விலை உயர ஆரம்பித்துள்ளது. அதனால் விநியோகச் செலவு அதிகரிக்கும். மூலப்பொருட்களினதும் எரிபொருட்களினதும் விலை உயர்ந்தால் அது பொருட்களின் உற்பத்திச் செலவை அதிகரிக்கும்.

மூன்று குழந்தைகளின் தாயார் தேசம்நெற் க்கு தெரிவிக்கையில் தான் வாராவாரம் சொப்பிங் செய்வதாகவும் இன்று ஐஸ்லண்ட் சுப்பர் மார்க்ற்றில் சொப்பிங் செய்யச் சென்ற போது பொருட்களின் விலை வித்தியாசத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்தார். ஐந்து மாஸ்க் ஒரு பவுண்டுக்கு விற்றவர்கள் இப்போது ஒரு மாஸ்க் இரு பவுண்டுக்கும் மூன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்றும் விற்பதாகத் தெரிவித்தார். இவ்வாறு பல பொருட்கள் விலையேற்றப்பட்டுள்ளது அல்லது பொருட்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் பண வீக்கத்தை 2 வீதத்திற்குள் வைத்திருப்பதே அரசின் செயற்திட்டமாக இருந்த போதிலும் அண்மைய நாட்களில் ஏற்பட்டுள்ள எரிசகத்தியின் விலையதிகரிப்புகள் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கலாம். மேலும் நீண்ட விநியோக லொறிகளின் சாரதிகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டினால் விநியோக வலைப்பின்னலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதை அடுத்து கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்கள் பெருமளவிலானோர் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவிட்டனர். அதனாலும் சாரதிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சில பெற்றோல் நிலையங்களே இன்று விநியோக நெருக்கடி காரணமாக பெற்றோல் முடிந்த நிலையில் மூடப்பட்டு உள்ளது. பிரித்தானியாவில் பழம் பிடுங்குவதற்னே ரூமேனியாவில் இருந்து ஆட்கள் தருவிக்கப்பட்டனர். மேலும் உணவகங்கள் ஹொட்டல்கள் போன்ற வரவேற்புச் சேவை வேண்டிய இடங்களில் வேலையாட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கணணித் தொழில்நுட்பத்துறையில் துறைசார்ந்த அறிவுடையவர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. இதன் காரணமாக சம்பளத்தை உயர்த்தியே வேலைக்கு பணியாளர்களைத் தேட வேண்டியேற்பட்டுள்ளது.

இவற்றின் பின்னணியிலேயே பாங்க் ஒப் இங்லண்ட் இன் தலைவர் அன்ரூ பெய்லி பிரித்தானியாவின் நிதியமைச்சர் ரிஸ்சி சுனாக்கிற்கு கொள்வனவாளர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட விலை அதிகரிப்பைச் சுட்டிக்காட்டி இருந்தார். வழமைக்கு மாறாக அதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் அரசின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி அரசு தற்போது பண வீக்கத்தை 2 வீதத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதையும் சுட்டிக்காட்டி இருந்தார்.

பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் நுகர்வோர் கலாச்சாரத்தை வளர்த்து தேவையற்ற பொருட்களை பெரும் நிறுவனங்கள் எம்மை வாங்க வைக்கின்றன. தேவையும் கேள்வியும் இல்லாதவிடத்து தேவையை உருவாக்கி கேள்வியை அதிகரிக்க வைப்பதே நவீன சந்தைப்படுத்தல் முறையாக வந்துகொண்டுள்ளது. இந்த உற்பத்திக்காக வளங்கள் விரயமாக்கப்பட்டு சுற்றாடல் மாசுபடுத்தப்படுகின்றது. மக்கள் இந்த பெரும் நிறுவனங்களின் வலையில் வீழ்ந்து நுகர்வோர் கலாச்சாரத்தின் அடிமைகளாகாமல் ஒரு பொருளை வாங்கினால் அதிலிருந்து உச்சபட்ச பலனை பெறவேண்டும். நமது முன்னோர் குறிப்பிட்டது போல் கந்தையானாலும் கசக்கிக் கட்டவும். தூக்கி எறிந்துவிட்டு புதிது புதிதாக வாங்கிக் குவிப்பது கொழுத்த நிறுவனங்கள் லாபமீட்டுவதற்கே வழிவகுக்கும்.

புளொட் – ஜேவிபி அரசியல் – அசோக்கின் கைது!!!

பாகம் 7: புளொட் – ஜேவிபி அரசியல் – அசோக்கின் கைது!!!
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 07 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 7

தேசம்: புளொட்டின் உருவாக்கம் பற்றி பேசியிருந்தோம். யார் உங்களை புளொட்டுக்குள்ள கூடுதலாக influence பண்ணின என்று நினைக்கிறீங்க…

அசோக்: கூடுதலாக அதில கேசவன், ரகுமான் ஜானுடைய கருத்துக்கள். இவங்களிடம் இடதுசாரிக் கருத்துக்கள், மார்க்சிய ஐடியோலொஜி இருந்தது. ஈஸ்வரன் அடுத்தது வாசுதேவா. வாசுதேவாவின் பிற்காலம் என்பது விமர்சனத்துக்கு உரியது. அந்த காலத்துல வாசுதேவா முற்போக்கான ஆளாகத் தான் இருந்தவர். காந்தியத்தில் மிக செயற்திறனுடைய ஆளாகத்தான் இருந்தவர். மட்டக்களப்பு தோழர்கள் பலர் புளொட்டுக்குள்ளும், காந்தியத்துக்குள்ளும் உள்வாங்கப்படுவதற்கு வாசுதேவா தான் முக்கிய காரணம். மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக நான் வருவதற்கு வாசுதேவோவும் ஒரு காரணம்.

தேசம்: மாவட்ட அமைப்பாளரின் செயற்பாடுகள் என்ன? என்னென்ன பணிகள் உங்களுக்கு தரப்பட்டது?

அசோக்: கூட்டங்கள் பிரச்சாரங்கள்தான். மக்களை அரசியல்மயப்படுத்தல். அரசியல் வகுப்புகள் நடத்துதல். வெகுன போராட்டங்கள் செய்வது, பத்திரிகைகள், துண்டுப்பிரசுர வினியோகம் இப்படிஇருக்கும். கூடுதலாக புதிய பாதை பேப்பர் விற்பது.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் ராணுவ பயிற்சி அதுகள் இருக்குதா?

அசோக்: அதுகள் ஒன்றுமில்லை. உண்மையிலேயே புளொட்டில் முக்கியமாக இருந்தது அரசியல் வகுப்புக்கள்தான். தோழர்களை புளொட்டில் இணைப்பதும் தான் எங்களுடைய வேலையாக இருந்தது. அந்த நேரத்தில் என்னோடு மிகத் தீவிரமாக வேலை செய்த ஆட்கள், வரதன் என்று ஒரு தோழர், அடுத்தது சக்தி வடிவேல் என்று ஒரு தோழர், அகஸ்டின் என்ற ஒரு தோழர் அவர் பிறகு அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக வந்தவர். பேரின்பம் நிறைய தோழர்கள். செல்வரெத்தினம், பணிக்ஸ், பாக்கி மாமா, கராட்டி அரசன், மங்களம் குணரா ஜா, குருக்கள்மடம், பழுகாமம் கிரமாங்களிலிருந்து நிறைய தோழர்கள். வாழைச்சேனையில் யோகராஜா, பெயர்கள் நிறைய மறந்து விட்டது. அவங்க பெயர்களைலெல்லாம் பதிவு செய்யனும். மாணிக்கம் பிள்ளை என்ற ஒரு தோழர் இருந்தவர். அவர்கள் எல்லாம் மிகத் தீவிரமாக வேலை செய்தவர்கள். வரதன் என்ற தோழர் தன்னை அர்ப்பணித்து வேலை செய்தவர். கடைசி வரைக்கும் நாட்டை விட்டு வெளியேவில்லை.இப்பவும் ஊரில மக்களுக்கு ஏதாவது உதவி செய்து கொண்டுதான் இருக்கிறார்.

தேசம்: ஜே.வி.பி காந்தியம் புளொட் என்று உள்வாங்கப்படுகிறீர்கள். இதுக்கெல்லாம் உங்களை தள்ளுகின்ற முரண்பாடு எதுவாக இருந்தது? இலங்கை அரசாங்கத்தின் எந்த வகையான செயற்பாடுகள் உங்களை எப்படித் தள்ளுது?

அசோக்: எனக்கு ஒரு அனுபவம் இருக்கு என்ன என்று கேட்டால், சின்ன வயதிலிருந்தே பல பிரதேசங்களுக்கு போய் வந்திருக்கிறேன். மலையகத்தில் நான் இருந்தனான். மலையகத்தில் எனக்கு பேனா நண்பர்கள் நிறைய பேர் இருந்தவர்கள். கற்றன், தலவாக்கெல, லிந்துல, டயகம, பொகவந்தலாவ, கொட்டகலை போன்ற இடங்களில் நண்பர்கள் இருந்தாங்க. நெடுஞ்செழியன் என்ற நண்பன் சில வருடங்களுக்கு முன் இறங்துட்டாங்க. பிற் காலத்தில வீரகேசரியில வேலை செய்தவர். அரசியல் சமூக அக்கறை கொண்ட நண்பன். அவரோடு மலையகத்தில் பல இடங்கள் சுற்றியுள்ளன்.

இவர் மூலம்தான் சந்திரசேகரம், விஜயகுமார் மற்ற தீர்த்தக்கரை இலக்கிய அரசியல் நண்பர்கள் பலரின்ற அறிமுகம் கிடைச்சது.

அப்ப நான் அடிக்கடி போவேன். நாங்கள் ஒரு மத்தியதர வர்க்கக் குடும்பத்தில் இருந்தாலும் கூட, எங்களுடைய சிந்தனை முறை வித்தியாசம் தானே. எங்களுடைய கல்வி, வாசிப்பு, அரசியல்…

அப்ப பார்க்கேக்கை, தொழிலாளர் மீதான ஒடுக்குமுறை என்பது சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும், மலையக மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் ஒன்றாகத்தான் இருந்தது. இலங்கை அரசு தமிழ் மக்களை மொழி ரீதியாகவும், இன ரீதியாகவும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் அதேநேரத்தில், தொழிலாளர் ஒடுக்குமுறை என்பது எல்லா பக்கமும் ஒன்றாகத்தான் இருந்தது.

அதனாலதான் நாங்க ஜே.வி.பியிடம் போக வேண்டி வந்தது. பிறகு இனவாத ஒடுக்கு முறை வரும்போது எங்களுக்கு ஒரு சிந்தனை வருது. இதற்கு அங்கால ஒடுக்குமுறையில் ஒரு பரிணாமம் இருக்குத்தான் என்று. இன ஒடுக்குமுறை என்பது திடீரென வந்த ஒன்று இல்லைதானே. அதற்கு ஒரு பரிணாம வளர்ச்சி இருக்குதானே. தமிழ் தேசியத்தின் வளர்ச்சி என்பது திடீரென ஏற்பட்ட ஒன்று இல்லைதானே. அடிப்படைக் காரணங்கள் இருக்கு. அதற்கும் பரிணாம வளர்ச்சி ஒன்று இருக்கு. இனவாத ஒடுக்கு முறையால் தான் அது உற்பத்தி ஆகுது. வளருது. அப்ப நாங்க பார்க்கும்போது அது நியாயமாக எங்களுக்குப்படுது. தமிழரசு கட்சி மீதான விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் மீதான ஒடுக்குமுறை என்பது யதார்த்தம் தானே

தேசம்: அதை எப்படி feel பண்ணுகிறீர்கள்… எல்லைப்புறக் கிராமங்களை கைப்பற்றுவதால் இனக்கலவரங்கள் ஒரு விடயமாக இருந்திருக்கும், போலீஸ் ராணுவ கெடுபிடிகள் இருந்திருக்கும், அதில ஒன்றா தரப்படுத்தல் தொடர்பாகவும் பேசப்பட்டது. இளைஞர்கள் ஆயுத வன்முறையில் ஈடுபட்டதற்கு தரப்படுத்தல் முக்கிய காரணமாக இருந்தது. அது எவ்வாறான தாக்கத்தை கிழக்கு மாகாணத்தில் அல்லது உங்களில் ஏற்படுத்தியது?

அசோக்: தரப்படுத்தலுக்கு அரசியல்ரீதியாக வேற காரணங்கள் இருந்தது. தரப்படுத்தல் கிழக்கு மாகாண , மற்ற கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பாக இருந்தது என்பது உண்மைதான். ஆனா, அது முழுத்தமிழ்ச் சமுகத்தின் கல்வி வளர்ச்சியில் தேக்க நிலையை உருவாக்கியது என்பதை காணத்தவறி விடுறம். பல்கலைக்கழகத்திற்கு எடுபடுவது மாத்திரம் முக்கியம் அல்ல. கல்வியின் திறன், ஆற்றல், கொள்ளளவு, ஆளுமை, வளர்ச்சி இவை எல்லாம் தமிழ் மாணவர்களுக்கு கிடைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்ப் பல்லைக்கழகங்கள் செய்யத்தவறி விட்டன. அதற்கான போதிய வளங்கள் இல்லை. இதற்கு இலங்கை அரசு முக்கிய காரணம். இது பற்றி நாம நேர்மையாக ஆராய்ய வேண்டும். சிங்கள பிரதேசங்களில் கிராமப்புற பகுதிகளில் இருந்து பல்லைக்கழகம் சென்று வெளியேறும் மாணவர்களின் அறிவார்ந்த வளர்ச்சி திறன், ஆற்றல் தமிழ் மாணவர்களிடம் இல்லாமல் போனதை நாம் எப்போதாவது கவனிச்சோமா?

சிங்கள கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சியோடு, திறமையோடு ஒப்பிடும்போது, எமது கிராமப்புற மாணவர்கள் மிக பின்தங்கியவர்களாக இருக்கிறாங்க. பேரினவாத அரசுகள் பின்தங்கிய தமிழ் கிராமப்புற பாடசாலைகளுக்கான கல்வி வளர்ச்சிக்கான கட்டமைப்புக்களில் திட்டமிட்ட புறக்கணிப்புக்கள செய்து வருகிறதை நாம் கவனிக்க தவறிவிடுறம். ஒவ்வாரு வருடமும் இந்திய உயர் கல்வி பல்கலைக் கழகங்ளுக்கு பிஎச்டிக்கு நிறைய மாணவர்கள் போகிறாங்க. டெல்லி ஜேஎன்யு க்கு போன பலரை எனக்கு தெரியும். எங்கட ஆட்கள் என்றால் யாரும் பெரிதாய் இல்லை. என்ன காரணம் இதையெல்லாம் ஆராய்யவேணும்.

இனக்கலவரங்களின் தோற்றத்தின் பிண்னணியை ஆராய்ந்தால், அந்தந்த காலங்களில் ஆட்சி செய்த அரசின் இனவாதமும், திட்டமிட்ட செயலும் தெரியவரும். எந்தவொரு மக்கள் கூட்டமும் இனவாதிகளாக பிறப்பதில்லைத்தானே. அதிகார வர்க்கம் இனவாத சிந்தனைகளை விதைக்கிறது. தமிழ் அதிகார வர்க்கமும், சிங்கள அதிகார வர்க்கமும் விரும்பி இருந்தா, எங்கட தேசிய இன சிக்கல்களை எப்போ தீர்த்து இருக்க முடியும்தானே. இவங்களின்ர இருப்புக்கு முரண்பாடுகள் அவசியம் என்பது அவங்களுக்கு தெரியும்.
எனக்கு அரசுகளின் இனவாத செயற்பாடுகளில் முக்கிய காரணமாகபட்டது.

திட்டமிட்ட குடியேற்றத்திட்டங்கள்தான். பௌத்த மயமாக்கல். தமிழ்மக்களின்ர நிலத்தை பறிப்பது மாத்திரமல் தமிழ் மக்களின்ர உரிமைகளையும் சுதந்திரங்களையும் அந்த நிலத்திலிருந்து பறிப்பதுதான் இதன்ற நோக்கம். கந்தளாய்க் குடியேற்றத் திட்டம் கல்லோயாக் குடியேற்றத் திட்டம்
இவையெல்லாம் இந்த நோக்கத்தோடுதான் செய்யப்பட்டன.

இதைப்பற்றி புள்ளி விபரங்களோடு நிறையக் கதைக்கலாம். வி.நித்தியானந்தம் அவங்க இதைப்பற்றி நிறைய எழுதி இருக்காங்க. யாழ்ப்பாண யூனிவசிற்றில இருந்தவர். இப்ப நி யூசிலாந்து யுனிவசிற்றில இருக்கிறார். நாங்கள் எடுத்த உடனேயே தரப்படுத்தலை தானே பார்க்கிறோம்…

தேசம்: தரப்படுத்தல் யாழ்ப்பாணத்துக்கு வெளியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை…

அசோக்: தரப்படுத்தல் என்பது உப காரணிதான். ஒரு தமிழ் தேசிய போக்கினுடைய வளர்ச்சிக்கும் வீக்கத்துக்கும் போராட்டத்தின் தொடக்கத்திற்கும் உந்து சக்தியாக இருந்தது தரப்படுத்தல்தான். அது ஒரு உப காரணி. அதற்கு முதல் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தில் சமஉரிமை இல்லாதது, சிங்கள குடியேற்றம், பௌத்த மயமாக்கல். தனிச்சிங்களச் சட்டம், புறக்கணிப்புக்கள் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது.

தேசம்: இதெல்லாம் நீங்கள் உணரக்கூடியதாக இருந்தது…

அசோக்: உணரக்கூடியதாக இருந்தது. அடுத்தது இந்த ஒடுக்குமுறை என்பது படுபயங்கரமாக இருந்தது. இரண்டு ஒடுக்குமுறைகள் இருந்தது. ஒன்று இன ரீதியான ஒடுக்குமுறை. அடுத்தது வர்க்க ரீதியான ஒடுக்குமுறை. தேசிய இனமாக ஒடுக்கப்படுகின்ற அதேநேரம் வர்க்க ரீதியாகவும் ஒடுக்குமுறை இருந்தது. அப்போதான் புளொட்டினுடைய தேசிய விடுதலைக்கு ஊடாக வர்க்கப் போராட்டம். வர்க்கப் போராட்டம் என்பது சகல மக்களுக்குமான விடுதலை. தேசிய விடுதலைப் போராட்டத்துக்காக ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டு சிங்கள மக்களுடன் இணைந்து ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்தல். ஒரு தமிழீழப் போராட்டம் என்பது தந்திரோபாயம். அதை வைத்துக்கொண்டு மூலோபாயத்தை நோக்கி போதல் என்பதுதான் புளொட்டினுடைய கோட்பாடாக இருந்தது.

அரசியல் கோட்பாடு எமக்கு உடன்பாடாக இருந்தது. இதப்பற்றி முன்ன கதைச்சி இருக்கம்.
அது சாத்தியமா சாத்தியம் இல்லையா என்பதை இப்ப நாங்கள் யோசிக்க வேண்டி இருக்கு. அந்த நேரம் சாத்தியமாக தான் தெரிந்தது. ஏனென்றால் ஜே.வி.பி எங்களுக்கு ஒரு உந்துதல் சக்தியாக இருந்தது தானே. அது தோல்வியடைந்தாலும் கூட, ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு ஊடாக வர்க்கப் போராட்டத்தை கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையை ஜே.வி.பி எங்களுக்குத் தந்தது.

தேசம்: இந்தக் காலகட்டத்தில்தான் நான் நினைக்கிறேன் 81 காலகட்டத்தில்தான் மாவட்ட சபை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது தமிழீழக் கோரிக்கையை 77 ஆம் ஆண்டு முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணி அதற்குப் பிறகு அந்த கோரிக்கையில் இருந்து பின் வாங்குற ஒரு நிலைப்பாட்டை எடுத்து மாவட்ட சபையை ஏற்றுக்கொள்கின்ற நிலைக்கு வாறினம். மாவட்ட சபையை ஏற்றுக்கொள்கின்ற நிலையில் தான் யாழ்ப்பாணத்தில மாவட்ட சபைத் தேர்தலை ஒட்டி கலவரம் ஒன்று நடக்கிறது. அதை எப்படி நீங்கள் உணர்ந்தீர்கள்? கிழக்கு மாகாணத்தில் அது ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததா?

அசோக்: மாவட்ட சபை என்பது எந்தவிதமான பூரணமான தீர்வையும் தமிழ் மக்களுக்கு தரப்போவது இல்லை என்பதில் மிகக் கவனமாக இருந்தனாங்கள். மட்டக்களப்பிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற ஆட்கள் மாவட்ட சபையை ஏற்றுக் கொண்டவர்கள் தானே. அபிவிருத்தி என்பது வேறு, அரசியல் விடுதலை உரிமை என்பது வேறு. மாவட்ட சபை என்பது எங்களுக்கு அபிவிருத்தி ரீதியான பிரயோசனங்களைத் தரலாமே, ஒழிய அரசியலுக்கான தீர்வாக மாவட்டசபை இருக்க இயலாது. அதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். மாவட்ட சபை என்பது தமிழ் மக்களுக்குரிய பிரச்சினையை தணிப்பதற்கான ஒரு உபாயமாக தான் அரசு கையாண்டது. ஒரு சமூகத்தின் அரசியல் விடுதலை அதன் சம உரிமை சுதந்திரம் இவைகளுக்கூடாகத்தான் புரண அபிவிருத்தி கிடைக்குமே தவிர இந்த அபிவருத்தியெல்லாம் ஒருவகை ஏமாற்று வேலதான்.

தேசம்: இந்த மாவட்ட சபையை கூட தர விரும்பாத ஒரு நிலையில்தான் அரசாங்கம் இருந்தது.

அசோக்: இலங்கை அரசியல் பாரளுமன்ற ஆட்சி அதிகாரம் இனவாதத்தினலாதான் கட்டமைக்கப்பட்டதுதானே. இதற்கு இனமுரண்பாட்டை கூர்மையாக்கல் அல்லது தக்க வைத்துக்கொள்ளல் அவசியம். அப்பதான் ஆட்சியை பிடிக்க முடியும். அதே நேரம் சர்வதேசத்திற்கு, இந்தியாவுக்கு இனமுரண்பாட்டை தணிப்பது போல பாவனையும் காட்டவேண்டும். மாவட்ட சபைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இருந்த தாக்கம் கிழக்கு மாகாணத்தில் இருக்கவில்லை. ஏனென்றால் ஆயுதப் போராட்டத்துக்குரிய தாக்கங்கள், சின்ன சின்ன வடிவங்கள், அமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் தான் இருந்தது. அங்க உருவாகவில்லை.

தேசம்: அந்தக் குழப்பம் யாழ்ப்பாண நூலக எரிப்பு இதுகள் அவ்வளவு தூரம்….

அசோக்: யாழ்ப்பாண நூலக எரிப்பு பெரிய தாக்கத்தை கொடுத்தது. அது ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் நாங்கள் வாசகர் வட்டம், படிப்பு என்று இருந்தபடியால், நூலக எரிப்பு என்பது பெரிய தாக்கத்தை கொடுத்தது.

தேசம்: அதற்கு எதிரான ஊர்வலங்கள் ஏதாவது நடந்து இருக்கா.

அசோக்: அது பெருசா நடக்கல. கிழக்கில் பெருசா நடந்த மாதிரி தெரியல. நாங்க துண்டுப்பிரசுரம் அடிக்க நினைச்சம். முடியல்ல.

தேசம்: புளொட்டில் நீங்கள் இணைந்த பிறகு தான் துண்டுப் பிரசுரங்கள் அதுகளை விநியோகிக்கிறது அப்படியாக செயற்பட்டீர்கள். இதனால் என்னென்ன பிரச்சனைகளை எதிர்நோக்கினீர்கள் அந்த காலத்தில்?

அசோக்: பிரசுரம் தொடர்பாக பிறகு நான் கைது செய்யப்பட்டன். ஆரம்பத்தில் முதலாவது கைது, கல்முனையில் ஒரு சிங்கள முதலாளியினுடைய லாரி ஒன்று எரிக்கப்பட்டது. தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் புளொட் தோழர்கள் கைது செய்யப்பட்டவர்கள்.

அந்த நேரத்தில் நான் மட்டக்களப்பு மாவட்ட புளொட் அமைப்பாளராக இருந்தபடியால் கைது செய்யப்பட்டன். ஆனால் உண்மையில் அவங்களுக்கு அதோட சம்பந்தமில்லை. அரஸ்ட் பண்ணி கொஞ்ச காலம் வைத்திருந்த பிறகு பிணையில் விட்டவங்க. அந்த வழக்கில் அஸ்ரப் தான் பேசினவர். அதற்குப்பிறகு இன்னொரு சந்தர்ப்பத்தில் நான் கைது செய்யப்பட்டேன். சைன் வைக்க வேண்டும் எனக் கூறி விடுவிக்கப்பட்டன். நான் போலீசுக்கு போகாமல் விட்டுட்டேன். போகாமல் விட்டவுடனே நான் தேடப்பட்ட ஆள் ஆகிட்டேன். பிறகு என்னை அரஸ்ட் பண்ணிட்டாங்க. அரஸ்ட் பண்ணி என்னை கொண்டு போயிற்றாங்க. டி.ஐ.ஜி மகேந்திரன் தான் விசாரித்தவர். அது ஒரு சுவாரசியமான சம்பவம்

தேசம்: என்ன நடந்தது அதுல? மஹேந்திரன் பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தின் டி.ஐ.ஜி யாக இருந்தவர் என்று நினைக்கிறேன் யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவ காலத்தில் இருந்தவர் என நினைக்கிறேன்.

அசோக்: என்னுடைய பெயர் யோகன் கண்ணமுத்து தானே அப்ப கண்ணமுத்து என்றவுடன் அவர் நினைத்தார் ஆள் ஒரு பெரிய ஒரு சைசா உடம்பா இருப்பார் என்று. அவருக்கு தெரியாது நான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று. அப்ப நூர்டீன்தான் என்னை அரஸ்ட் பண்ணினது. என்னை டி.ஐ.ஜி மஹேந்திரன் விசாரிப்பதற்காக அவரின் ஒபிசிக்கு கொண்டு போனாங்க… என்னை உள்ளுக்கு அனுப்பினதும். அவர் என்னை எதிர்பார்க்கவில்லை, இந்த தோற்றத்துடன் எதிர்பார்க்கவில்லை.

தேசம்: மாணவனை எதிர்பார்க்கவில்லை.. !

அசோக்: என்னை கொண்டு போன சிஐடி இன்ஸ்பெக்டர் , தம்பிராஜா எம்பியின் மகன். பெயர்
ஜெயக்குமார். எனக்கு நிறைய உதவி செய்தவங்க. அவர் வந்தவர். கூட்டிக் கொண்டு போன மூணு பேரையும் வெளியில போக சொல்லிப்போட்டு என்னைப் பார்த்தார். நான் கை கட்டிக்கொண்டு நின்றேன். என்னை சொன்னார் உட்கார சொல்லி. நான் உட்காரவில்லை. நான் பெரிய அப்பாவி மாதிரி சோகத்துடன் இருந்தன். ஆள் சொல்லிச்சு உட்கார சொல்லி.

கேட்டார் புளொட்டுக்கும் உனக்கும் என்ன உறவு என்று. நான் சொன்னேன் ஒரு தொடர்பும் இல்லை என்று. அப்ப வாசுதேவாவ எப்படி தெரியும்? நான் சொன்னேன், காந்தியத்தில் நான் வேலை செய்கிறேன் என்று. நான் படித்துக்கொண்டு, காந்தியம் சமூக சேவைகள் என்று ஈடுபடுகிறேன். நீ பொய் சொல்ல வேண்டாம் நீதான் மாவட்ட அமைப்பாளராக வேலை செய்கிறாய். ரிப்போர்ட் எல்லாம் வந்திருக்கு. நிறைய வன்செயல்களில் ஆட்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதுக்குப் பின்னாடி நீ இருக்கிறாய் என்று. நான் சொன்னேன், அதற்கும் எனக்கும் தொடர்பே இல்லை. நான் படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் பிரின்ஸிப்பலிடம் கேட்டுப் பாருங்கள் என்று.

அப்ப கேட்டார் தமிழீழம் கிடைக்கும் என்று நீ நம்புறியா என்று. நான் சொன்னேன் எனக்கு அதை பற்றி ஒன்றுமே தெரியாது என்று. நான் காந்தியம் தான் என்று. தமிழீழம் கிடைக்கப்போவதில்லை வீணாக வாழ்க்கையை இழக்காமல் ஏதாவது தொடர்ந்து படி. அல்லது படித்து போட்டு வெளிநாட்டுக்கு போ. இனிமேல் இதில ஈடுபடக்கூடாது என்று போட்டு, இதுதான் கடைசி இனி ஏதாவது பிரச்சனை வந்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்று போட்டு, இவரை ரிலீஸ் பண்ணுங்க என்று சொல்லி அனுப்பிட்டார்.

அதோட என்னை விட்டாச்சு பிறகு. பிறகு என்ன நடந்தது என்று கேட்டால், போலீஸ் தெரியும் தானே, தொடர்ந்து கண்காணிப்பில் தான் நான் இருந்திருக்கிறேன். ஒரு நாள் என்ன நடந்தது என்றால், ஜே ஆர் ஜெயவர்த்தன வடகிழக்கு பிரதேசங்களுக்கு விஜயம் செய்வது தொடர்பாக வடகிழக்கில் மாணவர் பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்று நடந்தது. அதுல யாழ்ப்பாணத்தில ஈபி ஆர்எல் எப் GUES செய்தது. மட்டக்களப்பில் நாங்கள் பொறுப்பெடுத்தோம்.

வடகிழக்கில் பாடசாலைகளை பகிஷ்கரிக்க சொல்லி எல்லாம் ஒழுங்கமைத்தாச்சு. அது தொடர்பா நோட்டீஸ் அடிக்கிறதுக்கு மட்டக்களப்பு ராஜன் அச்சகத்துக்கு நான் போனேன். அங்க ஓடர் கொடுத்திட்டேன் முதலே நோட்டீஸ் எல்லாம் அடிக்கிறதுக்கு. அண்டைக்கு போய் நோட்டீஸ் எடுத்து ரோட்ல வரும்போது அரஸ்ட் பண்ணுப்படுறேன் கையும் மெய்யுமா. அரஸ்ட் பண்ணு பட்டதும் தெரியும்தானே, ஒன்றுமே செய்ய இயலாது ஏனென்றால் கையும் மெய்யுமாக அரஸ்ட் பண்ணபடுறேன். நாங்க நோட்டிசை தமிழ் ஈழ விடுதலைக் கழகம் என்ற பெயரிலதான் அச்சிட்டிருந்தோம்.

தேசம்: என்ன காரணம்…

அசோக்: அது ஒரு அபத்தமாக காரணம். தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் அண்டகிரவுண்ட் என்றும், தமிழ் ஈழ விடுதலைக் கழகம் அதனோட ஓப்பின் வொடி என்றுதான் நாங்க அந்த நேரத்தில இயங்கினம். வெகுஜன வேலைகள் எல்லாம் இதன் பெயரிலதான் செய்தோம். ஆன பொலிசிக்கு தெரியும் ஓரே ஆட்கள்தான் என்று. பெயரில் ஒரு சொல்தான் வித்தியாசம். சாதாரணமாகவே விளங்கும் இரண்டும் ஒன்றுதான் என்று.

அரஸ்ட் பண்ணின உடனே என்னை விசாரித்தது நூர்டீன். அவருக்கு இயக்கங்கள் பற்றி சகலதும் தெரிந்திருந்தது. நாங்கதான் முட்டாள்தனமாக இயக்கம் நடாத்தி இருக்கம்.

அந்த நேரத்தில புளொட்டின் தலைமையிடம் அண்டகிரவுண்ட் அமைப்பின் வடிவம், வெகுஜன அமைப்பின் வடிவம் பற்றிய எந்த அரசியல் புரிதல்களும் இருக்கல்ல. இப்ப நினைக்கும்போது சிறுபிள்ளத்தனமாக இவைகள் தெரிகின்றன. பார்த்தீங்க என்றா அண்டகிரவுன்ட அமைப்பின் பெயர் தமிழ் ஈழமக்கள் விடுதலைக் கழகம். வெகுஜன அமைப்பின் பெயர் தமிழ் ஈழ விடுதலைக் கழகம் யோசித்துப் பாருங்க, இப்படி யாரும் பெயர் வைப்பாங்களா?

தேசம்: அந்த நேரம் புளொட்டின் தலைமை என்று யாரை சொல்கிறீர்ங்க?

அசோக்: உமா மகேஸ்வரன், சந்ததியார், சுந்தரம் போன்றவங்க…

தேசம்: பிறகு என்ன நடந்தது…?

பிறகு, நூர்டீன் என்னை கடுமையாக விசாரிக்க முன்னரே, என்னை சிஐடி அரஸ்ட் பண்ணினபடியால், அவங்க என்னை விசாரிக்க பொறுப்பெடுத்தாங்க. ஒரு அடி கூட விழல.

சிஐடி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் நல்லா கெல்ப் பண்ணினார். அடுத்த நாள் வாசுதேவாவையும் அரஸ்ட் பண்ணிட்டாங்க.

விசாரித்த பிறகு, கோர்ட்டுக்கு கொண்டு போனாங்க. பிறகு ரிமாண்ட் ஒரு மூன்று மாதம் உள்ளுக்கு இருந்தன்.

வாசுதேவாவை ஒரு மாதத்தில விட்டிட்டாங்க. பெட்றிக்சும், பேரின்பநாயகம் என்று சொல்லி யாழ்ப்பாணத்திலிருந்து வந்த லோயர் இரண்டு பேரும்தான் வாதாடுனவங்க. என்னை விடுவிக்கக்கோரி மாணவர் பகிஷ்கரிப்பு போராட்டம் ஊர்வலம் எல்லாம் நடந்தது. அதற்குப்பிறகு, பிணையில் வந்தாலும் கூட தொடர்ந்து சயின் பண்ண வேணும் நான். சைன் பண்றதால என்ன பிரச்சனை என்றால் ஏதாவது பிரச்சனை நடந்தால் என்னை தான் அரஸ்ட் பண்ணறது. அடுத்த தெரியும்தானே. போலீசில் பிடிபட்டால்… அதால நான் தலைமறைவு ஆகிட்டேன். அதற்குப் பிறகு தேடப்படும் ஆளாக ஆக்கப்பட்டேன்.

தேசம்: 82 ஆண்டுக்கு பிறகு நீங்கள் தேடப்பட்ட ஆளா ஆக்கப்பட்டுட்டீங்க. உங்களுடைய கைது தொடர்பா பத்திரிகைகளிலும் வந்தது என்று நினைக்கிறேன்

அசோக்: ஓம் எல்லா பத்திரிகைகளிலும் வந்தது.

தேசம்: அதற்குப் பிறகு உங்களுடைய தலைமறைவுவுக்கு பின் செயற்பாடுகள் எப்படி இருந்தது.

அசோக்: தலைமறைவாக இருந்துகொண்டு நிறைய தோழர்களை வைத்துதான் செயற்பட்டனான். வரதன் சக்திவேல், பேரின்பம், தில்லைநாதன், குணம், பாக்கி மாமா, ஜீவா நிறைய தோழர்கள் இருந்தவர்கள்.

தேசம்: அப்ப இயக்க முரண்பாடுகள் கிழக்கில பெருசா வரேல.

அசோக்: அந்த நேரம் வரேல. மிக தோழமையாக தான் நாங்கள் இருந்தோம். மட்டக்களப்பு ஜெயில் விரேக் வந்து… அதைப் பற்றி கதைக்கலாமா?

தேசம்: அதை அடுத்த பாகத்தில் பார்ப்போம். இந்தக் காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில இயக்க முரண்பாடுகள் பாரிய பிரச்சனையாக வந்து கொண்டிருக்கின்றது என்று.

அசோக்: அந்த டைம்ல அதற்கு முதலில் சுந்தரம், இறைகுமாரன், உமைகுமாரன் படுகொலை எல்லாம் நடந்திட்டு தானே.

தேசம்: அது சம்பந்தமா என்ன அறிந்து இருந்தீர்கள் அந்த நேரம். நீங்கள் சேர முதலே அது நடந்து விட்டது என்று நினைக்கிறேன்

அசோக்: இல்லை சுந்தரம் படுகொலை 82இல் தானே நடக்குது.

தேசம்: சுந்தரத்திற்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருந்தது?

அசோக்: பெரிதாக நெருக்கமான உறவு ஏற் படவாய்ப்பிருக்கவில்லை. இரண்டு தடவைகள் சந்தித்திருக்கிறன். புலிகள் சுந்தரத்தை சுட்ட போது புலிகள் மீது எங்களுக்கு கடும் ஆத்திரம் வந்தது. இயல்பாகவே ஒரு ஆத்திரம் வரும் தானே.

தேசம்: அதுதான் முதலாவது சகோதர படுகொலை…

அசோக்: ஓம், ஆனால் அந்த படுகொலை மட்டக்களப்பில் ஒரு முரண்பாட்டை ஏற்படுத்தவில்லை. எங்களுக்கு அதிருப்தி இருந்தது புலிகள் மீது. மட்டக்களப்பு புலித் தோழர்களுடன் கதைத்தால் அவங்களுக்கும் இதுக்கும் தொடர்பில்லை. அவங்களுக்கும் யாழ்ப்பாணத்தில் நடக்கிற எந்த ஒரு விஷயத்துக்கும் தொடர்பில்லை அப்ப முரண்பட்டும் பிரயோசனமில்லை தானே.

தேசம்: மட்டக்களப்புக்கு யாழ்ப்பாணத்துக்கும் அடுத்த சிக்கல் என்னவென்றால் நிலத் தொடர்போ, நேரடி தொடர்போ இல்லை.

அசோக்: அப்படித்தான் அன்றைய நிலமை இருந்தது. அடுத்தது அங்கு வேலை செய்த தோழர்கள் எல்லாருமே, அப்ப ஈரோசில வேலை செய்த ரமேஷ் என்ற தோழர், ஈபிஆர்எல்எஃப் பில் வேலை செய்த தோழர்கள் பாலா, சிவலிங்கம், கணேஸ், சின்னத்துரை நிறைய தோழர்கள் பெயர்கள் நான் மறந்துட்டேன். எல்லோரும் நாங்கள் ஃபிரண்டா இருந்த ஆட்கள் தானே. ஈபிஆர்எல்எஃப் பில் சின்னத்துரை என்ற ஒரு தோழர் அவர் என்ற பெஸ்ட் பிரெண்ட்.

தேசம்: இதையெல்லாம் பார்க்கும்போது யாழ்ப்பாணத்துக்கும் மட்டகளப்புக்கும் இடையில பெரிய ஒரு கலாச்சார வேறுபாடு ஒன்றும் இருந்திருக்கு

அசோக்: கலாச்சார வேறுபாடு என்று சொல்ல முடியாது. யாழ்ப்பாணத்தில் நடந்த பிரச்சனை, நான் என்ன நினைக்கிறேன் என்றால், இயக்கங்களுக்குள்ள அரசியல் கல்வி இல்லை. ஒரு அரசியல் கல்வி ஊட்டப்பட்டு இருந்தால் ஒரே நோக்கத்துக்காக…

தேசம்: சித்தாந்த அரசியல் கலாச்சாரம் ஒன்று இருக்கேல…

அசோக்: இருக்கேல. அரசியல் கல்வி ஊட்டப்பட்டு இருந்தால் இந்த இயக்க முரண்பாடுகள் வந்திருக்காது. ஒரே நோக்கத்துக்காக, ஒரே போராட்டத்துக்காக, ஒரே கொள்கைக்காக நிக்கிறம் என்ற உணர்வு வந்திருக்கும். மத்தியதர வர்க்கத்திற்குரிய போட்டி, பொறாமை, அதிகார ஆசை இவை எல்லாம் அரசியல் கல்வி, மக்கள் மயப்பட்ட செயற்பாடு சிந்தனை முலம்தான் இல்லாமல் போகும். 83 ஜூலை கலவரத்துக்கு பிறகுதான் யாழ்ப்பாணத்தில நாங்கள் வகுப்புகள் எடுக்கிறோம். சம ணர் குளத்தில் நடந்த வகுப்புகள் ஒன்றுக்குமே யாழ்ப்பாணத்திலிருந்து தோழர்கள் வந்தது குறைவு. நான் அறிய யாருமே வந்ததில்லை. பொன்னுத்துரை தோழர் மாத்திரம் வந்து போவார். வேறு தோழர்கள் வந்ததில்லை.

தேசம்: யாழ்ப்பாணத்தில நான் நினைக்கிறேன் அந்த காலகட்டத்திலேயே இங்க வந்து யுஎன்பி செயற்பாட்டாளரைக் கொலை செய்தது மாதிரி யாழ்ப்பாணத்திலும் சில கொலைகள் நடந்திருக்கு என்று நினைக்கிறேன் ஐக்கியதேசிய கட்சி உறுப்பினர் தியாகராஜா…

அசோக்: மட்டக்களப்பில் நடந்த கொலைகளை எங்களால நிறுத்த முடிந்தது. நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாலா ராமச்சந்திரன் யு என் பி அமைப்பாளராக இருந்தாலும்கூட எங்களுக்கு அந்த கொலையை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இருக்கல்ல. கொலை, தனிநபர் பயங்கரவாதம் என்பது எப்பவுமே விடுதலைக்கு சாத்தியமில்லை.

தேசம்: துரையப்பா படுகொலையை நீங்கள் எப்படி பார்த்தீர்கள் அந்த நேரம்..

அசோக்: சுதந்திரன் பத்திரிகைக்கு ஊடாக அவரைப் பற்றி மோசமான பிம்பம்தான் கட்டமைக்கப்பட்டு இருந்தது. துரையப்பா அவர் தொடர்பாக பொசிட்டிவான விடயங்கள் இருக்கு. அதை ஏற்றுக் கொள்கிற அதே நேரம், அவர் தொடர்பான நெகட்டிவான விமர்சனங்களையும் நாங்கள் கவனத்தில் எடுக்கத்தான் வேண்டும். அதுக்காக படுகொலை என்பது பிழை. ஆனால் அவரை பிழையற்ற நபராக புனிதராக கட்டமைக்கும் போக்கு ஒன்று இருக்குத் தானே அது பிழை.

ராஜன் செல்வநாயகம் மட்டக்களப்பில் இருந்தவர். அவரும் எஸ்எல்ஃப் பி இல இருந்தவர். துரையப்பா மாதிரிதான் அவர் அபிவிருத்தி வேலை செய்தவர். தமிழர் விடுதலைக் கூட்டணி அதன்ர அரசியல் எல்லாத்திற்கும் எதிரான ஆள். அதே நேரம் விடுதலை இயக்கங்களுக்கு நிறைய சப்போர்ட் பண்ணினவர். ஒரு தடவை பொதுக்கூட்டம் நடத்த எங்களுக்கு பொலிஸ் பெமிசன் தரல்ல. ராஜன் செல்வநாயகம்தான் எடுத்துத் தந்தவர். மாலா ராமச்சந்திரன் படுகொலை செய்யப்படாமல் இருந்தால் அவரும் இயக்கங்களுக்கு சப்போர்ட் பண்ணி இருப்பார். அதால தான் தனிமனித பயங்கரவாதத்தை, கொலைகளை நாங்க எதிர்த்தம். நாக படை உருவாகியிருந்தால் யாழ்ப்பாணம் மாதிரி தனிநபர் பயங்கரவாதம், கொலைக் கலாச்சாரம் உருவாகியிருக்கும். கண்டகண்ட முழுப்பேரையும் எதிரிகளாக்கி சுட்டு இருப்பார்கள். அதே நேரம் ராஜன் செல்வநாயகம் போல துரையப்பா இருக்கல்லதானே.

தேசம்: துரையப்பா செய்வதற்கான சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி அவரை ஒரு எதிரியாகத் தானே காட்ட முற்பட்டது.

அசோக்: எப்பவுமே அரசியல் இருத்தலுக்கு இலங்கை அரசிற்கு தமிழர்களை எதிரிகளாக்குவது போல, தமிழரசுக்கட்சிக்கு, கூட்டணிக்கு எதிரிகளை கட்டமைக்கவேண்டிய அவசியம் இருக்கு. அதற்கான சந்தர்ப்பங்களை துரையப்பா போன்றவங்க வழங்கியது அக்காலங்களில் இவர்களுக்கு சாதகமாக போய்விட்டது.

தேசம்: இயக்கங்களின் மந்தமான ஒரு வளர்ச்சி, இவ்வாறான ஒரு போக்குத்தான் 83 ஜூலை வரைக்கும் தொடர்ந்து கொண்டிருந்ததா?

அசோக்: 83 ஜூலை வரை எல்லா அமைப்புகளும் மந்தமான போக்கா, பெரிய வளர்ச்சி இருக்கல்ல.
புளொட் சித்தாந்த ரீதியாக வளர்ந்த தோழர்களை கொண்டிருந்த போதிலும், ஒழுங்கான கட்டமைப்பு இருக்கல்ல. நான் நினைக்கிறேன் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாக அந்த காலகட்டத்தில் இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் மாத்திரம்தான் என்று… ஈபிஆர்எல்எவ் இல் அரசியல் ரீதியான வளர்க்கப்பட்ட தோழர்கள் நிறைய பேர் இருந்தார்கள். ஓரளவு சித்தாந்த ரீதியாக வளர்க்கப்பட்ட அமைப்பாக, ஒரு கட்டமைப்பை கொண்டு ஈ.பி.ஆர்எல்எஃப் இருந்தது. அது வேறு எந்த அமைப்பிலும் இருக்கவில்லை.

தேசம்: ஆரம்ப காலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தான் ஆகக்கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக இருந்தது. விடுதலைப்புலிகளை காட்டிலும் பன்மடங்கு. இந்த உறுப்பினர்கள் பெரும்பாலும் எந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அல்லது இது இந்த வீக்கம் 83 ஜூலைக் பிறகுதான் வருதா அல்லது அதற்கு முதலே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துக்குள்ள கூடுதலான நபர்கள் உள்வாங்கப்பட்டு விட்டார்களா?

அசோக்: 83 ஜூலைக் கலவரத்திற்கு முற்பாடு புளொட்டுக்குள்ள உள்வாங்கப்பட்ட தோழர்கள் முழுப்பேரும் அரசியல் சித்தாந்த ரீதியாக வளர்க்கப்பட்டவர்கள். ஏனென்றால் பாசறை நடத்தப்பட்டது .யாழ்ப்பாணம் தவிர்ந்த எல்லா இடங்களிலும் பாசறை நடத்தப்பட்டது. அடுத்தது அவர்கள் உழைக்கும் வர்க்கத்தில் இருந்து வந்தாங்க. வடக்குக்கு அங்கால விவசாய குடும்பங்களாக , கடல்தொழிலாளர்கள் குடும்பங்களாக, தொழிலாள குடும்பங்களாக. அல்லது மத்தியதர வர்க்கமாக இருந்தாலும், உழைக்கின்ற சமூகத்தினுடைய அபிலாசைகளையும், குணாதிசயங்களையும் கொண்டிருந்தாங்க. நிறைய தோழர்கள் இருந்தாங்க. 83 ஜூலைக் பிறகுதான் எல்லா இயக்கங்களிலும் வீக்கம் ஏற்படுது. புளொட்டிலும் அப்படித்தான். இலங்கை அரசின் பேரினவாத செயல்களினால், இனக்கலவரத்தால் உணர்ச்சி கொண்ட, பாதிக்கப்பட்ட பலரும் இயக்கங்களில் சேருராங்க. எல்லா மாவட்டங்களிலிருந்தும். கூடுதலா புளொட்டில் யாழ்ப்பாணத்திற்கு வெளியேதான் கூட தோழர்கள் இருந்தாங்க. பெரும்பான்மை தோழர்கள் இப்படித்தான் வந்தவங்க. ஆனால் பின்தளத்தில் இவங்களுக்கு அரசியல் கல்வி ஊட்டப் பட்டது. புளொட்டில் அரசியல் கல்விக்காக, அரசியல் சமூக விஞ்ஞானக் கல்லூரி ஒன்று சென்னையில T3S என்ற பெயரில் தொடங்கப்பட்டது. மற்ற இயக்கங்கள் எப்படியோ தெரியல்ல.

அனைவரது தியாகங்களையும் வரலாறு விடுதலை செய்யும்!!!

இன்று செப்ரம்பர் 11 இன்றைய உலகின் அரசியல் வரலாற்றையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றையும் புரட்டிப்போட்ட நாள். ஆம், 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலினால் 2977 பொதுமக்களும் 17 தற்கொலையாளிகளுமாக 2996 பேர் கொல்லப்பட்டனர் 6000 பேருக்கு மேல் காயப்பட்டனர். விடுதலைப் போராட்டங்களும் கூட பயங்கரவாதமாகப் பார்க்கப்பட வைக்கப்பட்ட நாள். எமது மண்ணில் நடந்தது விடுதலைப் போராட்டமா இல்லையா என்று எதிரும் புதிருமான கருத்துநிலைக்கு இன்னும் விடையில்லை. விடை கிடைக்கப்போவதும் இல்லை. அவரவர் தம் தம் கருத்துநிலைகளில் உறைந்துபோயுள்ளனர்.

ஆனால் எமது மண்ணில் நடந்த யுத்த வேள்வியில் வகைதொகையின்றி நல்ல மனிதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அரசியல் முரண்பாடுகள் பல்வேறு இயக்கங்கள் அரசியல் கட்சிகள் என விதிவிலக்கில்லாமல் பல நூற்றுக்கணக்கான பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்டது. மனிதவளம் பற்றி எவ்வித சிந்தனையும் இல்லாதவர்களால் வழிநடத்தப்பட்ட விடுதலை இயக்கங்கள் மனித உயிர்களை துவசம் செய்து ‘விடுதலை’ காணலாம் என்று எண்ணிய காலம் அது.

அப்படிப்பட்ட காலத்தில் 2001 செப்ரம்பர் 11 க்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் நியூயோர்க்கின் இரட்டைக் கோபுரங்களுக்கு பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்த யாழ்ப்பாணத்தில் வழமைபோல் குண்டு வெடிப்பும் உயிரிழப்பும் நடந்தது. எம்என்எம் அனஸின் ‘பிணம் செய்யும் தேசம்’ ஆக இருந்த அன்றைய யாழ்ப்பாணத்தில் யாழ் மாநகர்சபை மேயர் பொன் சிவபாலன், யாழ் நகர இராணுவத் தளபதி பிரிகேடியர் சுசந்த மெண்டிஸ், சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் சந்திரா பெர்னாண்டோ, உதவிப் காவற்துறை அத்தியட்சகர் சந்திரமோகன், உதவிப் காவற்துறை அத்தியட்சகர் சரத் பெர்னாண்டோ, யாழ். தலைமையககாவற்துறை இன்ஸ்பெக்டர் மோகனதாஸ், யாழ் நகர பிரிகேட் மேஜர் கப்டன் ராமநாயக்க, காவற்துறை கான்ஸ்டபிள் ஜெராட், யாழ் மாநகர சபை உதவி ஆணையாளர் பத்மநாதன், வேலைப்பகுதிப் பொறியியலாளர் ஈஸ்வரன், கட்டட வரைபடக் கலைஞர் திருமதி மல்லிகா இராஜரட்ணம், தட்டெழுத்தாளர் பத்மராஜா ஆகியோர் அடங்கிய பன்னிரண்டுபேர் கொல்லப்பட்டனர்.

மேயர் பொன் சிவபாலன் என் நண்பன் பொன் சிவகுமாரனின் சகோதரன். எங்கள் இரு குடும்பங்களும் ஒரு பிள்ளையை சகோதரணை இழந்தது. இன்று இவர்களைப் பற்றி விமர்சிப்பவர்கள் தொடர் எழுதுபவர்கள் பலர் இந்த ‘விடுதலை போராட்டம்’ என்ற பெயரில் தங்களை வளர்த்து அந்த வரலாற்றை தங்களுக்கு ஏற்ப புனைந்து அதில் குளிர்காய்கின்றனர். நேற்று நண்பன் சிவகுமாரனுடன் பேசிய போது தன்னுடைய அண்ணனை காப்பாற்றியிருக்க வாய்ப்பு இருந்தது ஆனால் முடியவில்லை என்று அன்றைய சூழலை மீண்டும் ஒரு முறை மீட்டுக்கொண்டான். இன்று வரலாற்றுத் தொடர்கள் எழுதி வரலாற்றைப் புனைபவர்களும் அவற்றைக் கொண்டாடுபவர்களும் குண்டுச் சத்தத்தை காதால் கூட கேட்டறியாதவர்கள். தங்கள் முன் நடத்தப்பட்ட அத்தனை படுகொலைகளுக்கும் துணை போனவர்கள். இழப்பின் வலியை அறியாமல் அதனை கொண்டாடியவர்கள்.

பொன் சிவபாலன் ஒரு சிறந்த பேச்சாளர். அவருடைய கவிநயம் கொண்ட பேச்சால் பலரையும் வசீகரித்தவர். இன்று கட்சிக்குள் தலைமைப் போட்டிக்கு ‘ஐயா எப்ப போவார், கதிரை எப்ப காலியாகும்’ என்ற நிலை அன்றில்லை. பொன் சிவபாலன் கட்சியால் – தமிழர் விடுதலைக் கூட்டணியால் எவ்விதத்திலும் பயனடையவில்லை. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அவரால் பயன் கிடைத்தது. பொன் சிவபாலனின் பேச்சுத் திறமை அவருடைய நேர்மையால் கட்சிக்கு ஒரு வாக்கு வங்கி இருந்தது. அவருக்குப் பின் கட்சி காலாவதியாகிப் போய்விட்டது. கட்சிக்கும் மக்களுக்கும் தொடர்பற்றுப் போய்விட்டது.

பொன் சிவபாலன் போன்ற நேர்மைகொண்ட பலரை இந்த சமூகம் இன்று இழந்துவிட்டது. என் அண்ணனைப் போல் விடுதலைக்குப் போன பல ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் யுவதிகள் – இந்த மனிதவளங்கள் வீணடிக்கப்பட்டு விட்டது. இன்று சுயநலம் மிக்க கயமைகொண்ட பலர் வரலாற்றை சூறையாடலாம் என நினைக்கின்றனர். ஆனால் உண்மைகள் நிரந்தரமாக உறங்கிவிடுவதில்லை. அவை தட்டி எழுப்பப்படும். அனைவரது தியாகங்களையும் வரலாறு விடுதலை செய்யும். கலீலியோ கலீலியை வரலாறு விடுவித்தது. திருச்சபையை வரலாறு அம்பலப்படுத்தியது. அதுபோல் உளவாளிகளையும் முகவர்களையும் சந்தர்ப்பவாதிகளையும் வரலாற்றைப் புனைபவர்களையும் வரலாறு அம்பலப்படுத்திவிடும். அவர்கள் இப்போதும் நிம்மதியாகத் தூங்குவதில்லை. சுடுகாட்டிலும் அவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது ஜிம்மி சவேல் மற்றும் எட்வேர்ட் கொல்ஸ்ரன் போல்.

அமெரிக்க மக்களை ஏமாற்றி உலக நாட்டு மக்களை ஏமாற்றி முஸ்லீம் பயங்கரவாதத்தை உருவாக்கி பின்லாடனை வளர்த்துவிட்ட அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலும் அம்மணமாகும்.

காந்தியமும் புளொட்டும் அரசியலும் காதலும் – செல்வி உடனான நட்பும் காதலும்

காந்தியமும் புளொட்டும் அரசியலும் காதலும் – செல்வி உடனான நட்பும் காதலும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 05 & 06 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 05 & 06:

தேசம்: கிட்டத்தட்ட 80 ஆம் ஆண்டு காலம் வரைக்கும் காந்தியத்தோடு உங்களுடைய செயற்பாடுகள் இருக்குது. அதுக்குப் பிறகு காந்தியம் எவ்வளவு காலம் இயங்கியது என்று நினைக்கிறீர்கள்?

அசோக்: 82 இல் வவுனியாவில் விமானாப்படைத் தாக்குதல் நடக்குது தானே. அது புளொட்டின்ட தோழர்கள்தான். அற்புதம் இன்னுமொரு தோழரும் சேர்ந்து தான் அந்த விமானப்படை தாக்குலை செய்கின்றார்கள்.

தேசம்: அற்புதம் இப்ப எங்க இருக்கிறார்?

அசோக்: லண்டனில். அதுல ஒரு தோழர் இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அற்புதம் பிறகு கைது செய்யப்பட்டவர். அதுலதான் காந்தியம் மீதான சந்தேகம் வருது.

தேசம்: எண்பதுகளிலேயே?

அசோக்: இது வந்து 83 ஆரம்பத்தில என்று நினைக்கிறேன். காந்தியம் மீதான போலீஸ் கண்காணிப்பு அதுக்குள்ள தான் வருது. முதலே சந்தேகம் இருந்திருக்கு, இயக்கத்துடன் தொடர்பு இருக்கு எண்டு. இதுல உறுதிப்படுத்தப்பட்டது. கடும் கண்காணிப்பு, அதன் பிறகு 1983 ஏப்ரல் என நினைக்கிறன். உமாமகேஸ்வரன், சந்ததியார் போன்றவர்களோடு தொடர் என்று கூறி டேவிட் ஐயாவும் டாக்டர் இராஜசுந்தரமும் கைது செய்யப்படுகிறார்கள்.

தேசம்: வேறு யார் யார் கைது செய்யப்படுகிறார்கள்?

அசோக்: அந்தக் காலகட்டத்தில் காந்தியத்தில் வேலை செய்த நிறைய பேர்… அதுக்கு முதல் ஒருதரம் சந்தேகத்தின் பெயரில் குமரன் தோழரும் கைது செய்யப்படுகிறார், கோயில்குளம் காந்தீய ஒப்பிசிலிருந்து. அப்பவே சந்தேகம் வந்திட்டு, புளொட்டுக்கு வேலை செய்பவர் குமரன் என்று. கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவர். பிறகு விடுவிக்கப்படுகின்றார்.

தேசம்: ராஜசுந்தரம் எல்லாம் இந்த தாக்குதல் தொடர்பாக தான் கைது செய்யப்படுகிறார்கள்?

அசோக்: காந்தியத்துக்கும், இந்த தாக்குதலுடன் தொடர்புடைய ஆயுத இயக்கத்துக்கும் தொடர்பு இருக்கு என்று சொல்லி அச்சந்தேகமும் இருந்ததினாலும் தான் உமாமகேஸ்வரன், சந்ததியார் போன்றவர்களோடு தொடர் என்று கூறி கூறி டேவிட் ஐயாவும் டாக்டர் இராஜசுந்தரமும் கைது செய்யப்படுகிறார்கள்.

தேசம்: காந்தியத்தில் இருக்கும்போது இது தொடர்பில் ஏதாவது காரணங்களுக்காக நீங்கள் கைது செய்யப்பட்டீர்களா?

அசோக் : காந்தியத்தில் இருக்கும்போது நான் கைது செய்யப்படவில்லை. நான் முதன் முதலாக கைது செய்யப்படும்போது புளொட்டில் …

தேசம்: 80க்கு பிறகுதான் அது நடக்குதா

அசோக்: ஓம்

தேசம்: அப்ப அதைப்பற்றி பிறகு கதைப்போம். இப்ப நீங்கள் பதின்ம வயதில் இருக்கிறீர்கள் அரசியல் துடிப்பு அதெல்லாம் சரி. காதலின் பருவமும் இதுதான். அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். பிற்காலத்தில் நாங்கள் எல்லாரும் அறிந்த உங்களுக்கும் செல்விக்குமான உறவு. அது எப்படி உருவாகிற்று?

அசோக்: இளம்வயது கோளாறுகள் எல்லோருக்கும் இருக்கும் தானே. அது நிறைய நடந்திருக்கு. செல்வியின் உடனான தொடர்பு எப்படியென்றால். அந்த நேரம் பேனா நட்பு என்ற ஒன்று இருந்தது. பத்திரிகைகளில் பேனா நண்பர்களின் முகவரி வரும்.

தேசம்: அது என்ன என்று சொல்ல முடியும் என்றால் நல்லா இருக்கும்.

அசோக்: பத்திரிகைகள் சஞ்சிகைகளில் பேனா நண்பர் பகுதி என்று ஒன்று வரும். அதில பேனா நட்புக்களை விரும்புகின்றவர்களின் பெயர் முகவரி அவர்களின் விருப்பங்கள் ஈடுபாடுகள் பொழுது போக்குகள் பற்றிய விபரங்கள் இருக்கும். உதாரணமாக நான் அசோக் என்றால்… அசோக் வயது போட்டு எனக்கு விருப்பமான துறை, கவிதை, கட்டுரை, இலக்கியம், விளையாட்டுத்துறை என்று எல்லாம் வரும். அப்ப அதில் ஈடுபாடு கொண்டவங்க எல்லாம் பென் ஃப்ரெண்ட் ஆவார்கள். கடிதத் தொடர்புதான்.

தேசம்: அந்த முகவரிகள் பத்திரிகையில் வரும். அதுல இருந்து உறவுகள் ஏற்படும்.

அசோக்: அந்த உறவினால் என்ன நடக்கும் என்று கேட்டால் உங்களுக்கு இடையே ஆழமான ஒரு கருத்து பரிமாற்றத்தை உரையாடலை அது கொண்டுவரும். ஏனென்றால் உங்களுடைய துறை சார்ந்த நபருடன் தானே நீங்கள் தொடர்பு கொள்வீர்கள்..

தேசம்: ஃபேஸ்புக்கும் முதல் வந்த வடிவம்…

அசோக்: பேஸ்புக் என்றது வேறு உலகம். பேனா நட்பு என்பது இது ஆரோக்கியமான உலகம். அது உண்மையில ஆழ்ந்த நட்புக்கான ஒரு வெளி. எழுத்துக்கூடாக நீங்க பல்வேறு சர்ச்சைகள் கருத்துக்களை கதைப்பீங்க. உரையாடல், விமர்சனப் பண்பை வளர்த்துக் கொள்வீங்க… அப்படித்தான் எனக்கு நிறைய பென் பிரண்ட் இருந்தது. அப்படியொரு பென் பிரண்ட் தான் செல்வியும்…

தேசம்: எந்த வயசு கட்டத்துல வந்தது… ?

அசோக்: நான் நினைக்கிறேன், 16 17 வயசுல வந்து இருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது இளந்தளிர் வாசகர் வட்டம் இயங்கிக் கொண்டிருந்த காலகட்டம் என நினைக்கிறன்… அந்த காலகட்டத்திலேயே தான் தொடர்பு வருகிறது. பிறகு நான் காந்தியத்துக்குள்ள வரேக்க செல்வி காந்தியத்துக்கும் வாரா என்ட தொடர்பில. நான் சந்திக்க முதல், செல்வியைச் சந்தித்தது என்னுடைய நண்பர்கள்தான். செல்வியை சந்திக்கிற என்னுடைய நண்பர்கள் செல்வி தொடர்பாக அவர்கள் தாற அபிப்பிராயம் செல்வி மீதான பெருமதிப்பை ஏற்படுத்துது.

தேசம் : உங்களுக்கு 16,17 வயசுல நீங்க தொடர்புகொண்டா அவாவுக்கு எத்தனை வயசு அப்ப?

அசோக்: செல்வி என்னை விட 3 வயது இளமை.

தேசம்: அப்ப அவாவுக்கு கிட்டத்தட்ட 14 வயசு இருக்கும். அப்ப இது பேனா நட்பு என்ற ரீதியில் தான் உருவானது. எப்ப இது நீங்க காதலியாக அல்லது…

அசோக்: அது நீண்ட காலம். காந்தியத்துக்குள்ள வந்ததுக்கு பிறகு தோழர்கள் நிறைய பேர் செல்வியை சந்திக்கினம். செல்வி காந்தியத்துக்குள் வந்து வேலை செய்கிறார். பிறகு புளொட்டுக்கு வாறா. புளொட்டின் ஆரம்ப காலத்தில் தான் அந்த நட்பு உருவாகிறது.

தேசம்: அது எந்த ஆண்டு காலகட்டமாக இருக்கும்?

அசோக்: 83இல் அதான் தொடங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். அதுக்கு முதல் நெருக்கமான பென் பிரண்ட் தான். நேரடியாக சந்தித்த பிறகுதான் அந்த லவ் எனக்கு உருவாகுது.

தேசம்: எப்ப நேரடியாக சந்திச்சனீங்கள்?

அசோக்: 82 நேரடியா சந்தித்திருப்போம்.

தேசம்: நீங்கள் காந்தியத்துக்குள்ள வேலை செய்யும்போது வவுனியாவுக்கு போறீங்க. வவுனியாவில் தான் அந்த சந்திப்பு ஏற்படுதா?

அசோக்: ஓம். நான் முதன்முதல் சந்தித்தது சேமமடுவில. செல்வியின்ர வீட்டில. அண்ணி யாழ்ப்பாண யூனிவசிற்றில படித்துக்கொண்டிருந்தவ. அப்ப செல்வி, யாழ்ப்பாணத்திலே அண்ணியைச் சந்திச்சு இருக்காங்க. அப்ப அண்ணி சொன்னா “செல்வி வந்தது. யாழ்ப்பாணம் வந்தனீ, செல்வியை சந்தித்துவிட்டு போ” என்று.

தேசம்: அப்ப நீங்க வவுனியாவில் சந்திக்கவில்லையா ?

அசோக்: வவுனியாவில் சேமமடுவிலதான் தான் சந்திச்சன். செல்வி யாழ்ப்பாணத்தில் ரியுசன் சென்டரில படித்துக் கொண்டிருந்தவ. அப்ப நான் யாழ்ப்பாணம் வர, செல்வி போயிற்றாங்க சேமமடுவுக்கு. அப்ப அண்ணி சொன்னா, “செல்வி சேமமடுவுக்கு போயிட்டுது, வேணும்டா அங்க போய் சந்தித்துவிட்டு போ” என்று. அப்ப நான் வவுனியா போகும் போது, ஓமந்தையில் இறங்கி , சேமமடுவுக்கு போய் சந்திச்சிட்டுத் தான் ஊருக்கு போனான்.

தேசம்: அப்போ உங்களுக்கு…

அசோக்: லவ் எல்லாம் இல்லை. பிரெண்டாதான் இருந்தது.

தேசம்: இது எத்தனையாம் ஆண்டு நடந்தது ?

அசோக்: 83ஆக இருக்க இயலாது . 82 நடுப்பகுதியாக இருக்கலாம்.

தேசம்: செல்வியின் அரசியல் மாற்றம் என்பது காந்தியத்திலிருந்து புளொட்டுக்குப் போக… நீங்கள்தான் செல்வியையும் காந்தியத்துக்கு கொண்டு வாறீங்கள்…

அசோக்: ஓம் என்ட பிரண்ட் என்டதும் நிறைய பேர் சந்திக்கினம். அப்ப காந்திய ஈடுபாடுகள் வருது. சேமமடு பக்கத்தில காந்திய வேலைத்திட்டங்கள் எல்லாம் இருந்தது. அப்ப காந்திய கருத்தரங்குகளிலும் செல்வி கலந்துகொண்டார்.

தேசம்:அப்ப நிறைய பெண்கள் ஈடுபடுகிறார்களா? பெண்களின் பங்களிப்பு எப்படி இருந்தது காந்தியத்தில்?

அசோக்: காந்தியத்தின் சிறுவர் பாடசாலைகள் முழுக்க பெண்கள் தானே ஆசிரியர்கள். வொலன்டியேர்ஸில குடியேற்றத் திட்டங்கள் போன்ற வேலைகளுக்கு ஆண்கள் ஈடுபட்டார்களேயொழிய கல்வி, சுகாதாரம் சார்ந்த விடயங்களில் எல்லாம் பெண்கள்தான் ஈடுபட்டார்கள். கூட்டுறவு சங்க நியாயவிலை கடைகளில் அவற்றுக்கு பொறுப்பாக இருப்பார்கள். அப்ப செல்வி வந்து இதுல இல்ல. செல்வி வொலன்டியராக கருத்தரங்குகளில் கலந்துகொள்ளுற ஆளாத்தான் இருந்தா.

பாகம் 06:

தேசம்: காந்திய இயக்கத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் மற்றவர்களுடனான உறவுக்கும், அவருடனான உறவுக்கும், எப்படி அது உங்களுக்கான காதல் என்ற நிலைக்கு போச்சுது ?

அசோக்: பேனா நட்பு என்ற உறவு வரும் போது அது இலக்கிய உறவு மாத்திரமல்ல. எங்களுக்கு அரசியல் ஆர்வம் இருந்ததால, அது ஒரு அரசியல் சார்ந்த உறவாகவும் இருக்கும்தானே. ஒரு ஆழமான உரையாடலாக இருக்கும். எங்கட விருப்புக்கள் இதனை தீர்மானிக்கும். அத்தோட பேனா நட்பு பரஸ்பரம் ஆழமான புரிதலை நேசிப்பை அன்பை உருவாக்கும். ஆணும், பெண்ணுமாக இந்த நட்பு இருக் கிற பட்சத்தில love வருவதற்கான சாத்தியம் நிறைய இருக்கு. அப்படித்தான் எங்களுக்குள்ள love வந்தது.

தேசம்: நீங்க அந்த உறவு வருவதற்கு முதல் நீங்கள் புளொட்டில் இணையவில்லை. காந்திய இயக்கத்தில் தான் இருக்கிறீர்கள்.

அசோக்: இரண்டிலும் இருக்கிறேன். அதற்குப் பிறகு செல்வி எங்களோட வந்த வேலை செய்யத் தொடங்குகிறா. காந்தியத்திலும் ஆண், பெண் உறவு என்பது ஆரோக்கியமானதாக இருந்தது. தோழமையுடன் இருந்தது. காதல்களும் இருந்தது. காதல்களும் கூட ஆரோக்கியமான உறவாகதான் இருந்தன.

தேசம்: ஆரோக்கியமான காதல் எனும் போது ? நீங்கள் எதைக் குறிப்பாக சொல்லவாறீங்கள்?

அசோக்: ஒரு பரஸ்பரம் சமநிலை. இப்ப நாங்க சொல்றோம் தானே ஒரு ஆணாதிக்கத்தனம் இல்லாமல் பரஸ்பரம் உரிமைகளை கொண்ட, சமநிலையில் தோழிகளாக பார்த்தல், ஒரு ஆரோக்கியமான சமநிலை உரையாடல். சமத்துவம். ஒரு சிக்கல் இருக்கு தானே, காதலுக்குள்ள. காதல் என்றாலும் கூட ,அதுக்குள்ளேயும் ஒரு ஆணாதிக்கத்தனம், ஆளுமை ஒன்று இருக்கும். அதிகாரம் ஒன்று இருக்கும். அந்த அதிகாரமற்ற முறையில் சுதந்திரமான உண்மையான நேசிப்பு கொண்ட காதல் ஒன்று உருவாகுவதற்கான சாத்தியம் இருந்தது.

தேசம்: பொதுவாகவே காதல் சம்பந்தமான விஷயங்கள் அது மலரேக்க தனிப்பட்ட எதிர்காலம் சம்பந்தமாக தான் கூடுதலாக கதைக்கிறதா இருக்கும். தாங்கள் எப்படி எதிர்காலத்தைக் கொண்டு போவது. இது வந்து முற்றிலும் மாறுபட்ட சூழலாக இருந்திருக்கும். ஏனென்றால், ரெண்டு பேருமே சேர்ந்து அரசியலில் ஈடுபடுகின்றீர்கள். அப்ப உங்களுடைய உரையாடல் பொதுவாகவே அரசியல் சார்ந்து தான் இருக்குமா அல்லது தனிப்பட்ட விருப்பங்கள் சார்ந்து கதைக்கப்படுமா ?

அசோக்: ஆரம்ப காலத்தில பேனா நட்பில இருக்கக்க தனிப்பட்ட எங்களின் எதிர்பார்ப்புக்கள் ஆசைகள் விருப்பங்கள் என்று என்னவெல்லாமோ கதைத் திருக்கிறம். காதல் என்று வரும் போதும் தனிப்பட்ட விஷயங்கள் கதைத்திருப்பம். எதிர்கால இருவரின் இணைந்த வாழ்வு பற்றி நிறைய கதைத்திருக்கிறம். செல்வி மீது செல்வியின்ர அம்மம்மா, அம்மா எல்லோரும் பெரிய நம்பிக்கை கொண்டிருந்தாங்க. செல்விக்கு அப்பா இல்ல. எங்க love செல்வியின்ர அம்மாவுக்கு தெரிய வந்த போது, செல்வியின்ர அம்மா எனக்கொரு கடிதம் எழுதி இருந்தாங்க. கடிதம் ஒரு தாயின்ர நியாயத்தை கொண்டிருந்தது. அது எனக்கு கவலைய வேதனைய கொடுத்திச்சி. படிக்க வேண்டிய வயதில் காதலா என்ற குற்ற உணர்வை என்னில வந்தது. செல்வியின்ர எதிர்கால நல்வாழ்வு என்னால வீணாகிவிடுமோ என்றெல்லாம் நான் அப்ப யோசிச்சி இருக்கிறன்.

தான் கடிதம் எழுதினது பற்றி செல்வியிற்ற சொல்ல வேண்டாம் என அம்மா கேட்டிருந்தா. நான் அத பற்றி செல்வியிற்ற சொன்னதில்ல. நானும் செல்வியும் அம்மாவை ஏமாற்றிவிட்டோமோ என்று இப்ப நினைக்கிறன்.

இயக்கத்துக்கு வந்தபிறகு முழுக்க முழுக்க இயக்கம் சார்ந்த உரையாடல்களாகத் தான் இருந்தது. அடுத்தது இயக்கத்துக்கு வந்ததுக்கு பிறகு இரண்டு பேரும் பிஸியாகிட்டம். அப்ப சந்திக்கிறதும் குறைவு. நாங்க கூடுதலாக சந்திக்க தொடங்கினது யாழ்ப்பாணம் வந்த பிறகுதான்.

தேசம்: உங்கள் அரசியல் தெளிவு மற்ற தோழர்களிடம் இருந்ததா?

அசோக்: இருந்தது ஏனென்றால் வாசிப்பும், அரசியல் அறிவூட்டல்களும் நிறைய நடந்தது. காந்தியத்தில் வேலை செய்த நிறைய தோழர்களைப் பார்த்தீர்கள் என்றால் நான் சந்தித்த தோழர்கள் கருத்தியல் ரீதியாக வளர்ந்தாக்கள் தான். அதற்குக் காரணம் பின்புலம் புளொட் இருந்தது. புளொட்டுக்குள்ள வந்த தோழர்களை பார்த்தீர்களென்றால் ஏதோ ஒரு வகையில் ஒரு சித்தாந்த ரீதியாக வளர்ச்சி அடைந்து தோழர்களாக தான் இருந்திருப்பார்கள். தலைமையை விடுங்கள், தலைமை தொடர்பா எங்களுக்கு நிறைய விமர்சனம் இருந்தது. அதுக்கு கீழ வந்த தோழர்களைப் பார்த்தீர்களென்றால் அவங்க கருத்தியல் ரீதியாக வளர்ச்சியடைந்து தான் புளொட்டைத் தேர்ந்தெடுக்கிறார்கள். புளொட்டை தேர்வு செய்வதற்கான அரசியல் தெளிவு ஆரம்பத்தில் அவர்களிடம் இருந்துள்ளது.

ஏனென்றால், அந்த கால கட்டங்களில் தோன்றிய இயக்கங்கள் தொடர்பாக புலிகள் தொடர்பான விமர்சனம் இருக்கு அவங்களுக்கு. மார்க்சிய ஐடியோலொஜி கொண்ட இயக்கமாக ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ், புளொட் இருக்கு. அப்ப அவர்கள் புளொட்டைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனென்றால் புளொட் மக்கள் மத்தியில் வேலை செய்யுது. அவர்களைப் பொறுத்த வரைக்கும் மக்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டுமென்ற அபிலாசை இருக்கின்றபடியால் அவங்கள் புளொட்டைத் தேர்ந்தெடுக்கிறாங்க. புளொட்டுக்கு வந்ததுக்கு பிறகு நான் சந்தித்த தோழர்கள் முழுப் பேரும் அரசியல் வளர்ச்சி கொண்டவர்களாக இருந்தாங்க. மக்கள் மத்தியில் வேலை செய்யும் ஆர்வமும், அபிலாசையும் கொண்டவர்களாக இருந்தாங்க.

தேசம்: யாழ்ப்பாண நிலையும் இப்படித்தான் இருந்ததா?

அசோக் : 83 யூலை கலவரத்திற்கு பிறகுதான், யாழ்ப்பாணத்தில புளொட்டினுடைய வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதற்கு முயல்கிறோம். அதற்கு முதல் யாழ்ப்பாணத்தில் அமைப்புகள் இருக்கவில்லை. தோழர் சத்தியமூர்த்தியும், தோழர் குமரனும் தான் அங்க முக்கியமான ஆட்களாக இருந்தவை. சத்தியமூர்த்தியும், ரிங்கோ கேதீஸ்வரனும் யாழ்ப்பான யுனிவர்சிட்டியில் இருந்தபடியால், அங்கு பெரிதாக வேலை செய்ய முடியவில்லை. புளொட் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் அவ்வளவுதான்.

எனக்கு தெரிஞ்சு யாழ்ப்பாணத்தில் ஆட்கள் இல்லை. அண்டர்கிரவுண்டுல சுழிபுரத்தில் ஒரு சில தோழர்கள் வேலை செய்தார்கள். சிவசண்முகமூர்த்தியுடன் சுந்தரத்துடன் இயங்கியவர்கள் அவர்கள்.
வெகுஜன மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கு ஆட்களே இல்லை. அந்த காலகட்டத்தில் பலம் வாய்ந்த அமைப்பாக EPRLF இருந்தது. எல்லா வகையிலும் அவங்கள் பலமான அமைப்பாக இருந்தவங்க. கருத்தியல் சார்ந்தும் நிறைய வளர்ச்சி அடைந்த தோழர்கள் அவங்களிட்ட இருந்தாங்க. எங்களுக்கு அப்படி இல்ல. அடுத்தது பொலிஸ் நெருக்கடி ,கண்காணிப்புக்கள் இருந்தபடியால யாழ்ப்பாண பொறுப்பாக இருந்த குமரன் தோழரால் வேலை செய்ய முடியாமல் போய்விட்டது. அதால குமரன் 83 க்கு முன்னர் முல்லைத்தீவு, வவுனியாவில் எங்களுடன் தான் வேலை செய்தவர். 83 யூலை கலவரத்திற்கு பிறகுதான் மக்கள் அமைப்பு அரசியல் வேலைத்திட்டம் என்று யாழ்ப்பாணத்தில் தொடங்குகிறம்.

தேசம்: இந்த காலகட்டத்தில் அரசியலில் பெண்களின் ஈடுபாடு எவ்வாறு இருந்தது? எவ்வளவு தூரம் பெண்கள் ஈர்க்கப்பட்டு இருந்தார்கள்? அரசியலை நோக்கி அல்லது பெண்களை அரசியலை நோக்கி கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா?

அசோக்: காந்தியத்தில் வேலை செய்த பெண்கள் பலரும் புளொட்டில் இணைகின்றனர். நிறைய பெண் தோழர்கள். சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் 83க்கு முன்னர் நிறைய பாசறைகள் நடந்தது.

தேசம்: 83 ஜூலைக்கு முதலே இந்த அரசியல் வகுப்புகள் தீவிரமாக நடக்கிறது…

அசோக் : ஓம், தீவிரமாக நடந்தது. யாழ்ப்பாணத்தில நடக்கேலையேயொழிய, அங்கால நிறைய நடந்தது. வவுனியாவில சமணர்குளம் என்ற இடத்தில தொடர்ச்சியாக அரசியல் பாசறைகள் நடந்தது. தங்கராஜா என்ற தோழர் பழைய JVP தோழர் அரசியல் வகுப்புக்கள் எடுத்தவர். பாசறைகள் வகுப்புகள் இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து நடக்கும். தோழர் கேசவன் எல்லாம் வந்து வகுப்பு எடுப்பார்கள். எல்லா தோழர்களுக்குமான ஒரு அரசியல் வகுப்பாக தான் இருந்தது அது.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் கூடுதலாக அரசு எதிர்ப்பு ஊர்வலங்கள் அப்படியான சம்பவங்கள் கூட நடந்திருக்கும்.

அசோக்: நடந்தது. புளொட் ஆரம்ப காலத்தில் ஒரு வெகுஜன அரசியல் அமைப்பு. ஒரு அண்டர் கிரவுன்ட் அமைப்பாக இருக்கேலதானே. அந்த நேரத்தில் உண்ணாவிரதம், கிராமங்களில் கருத்தரங்குகள் நடத்தி இருக்குறம். 82இல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட போராளிகளை, மக்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டங்கள் நிறைய இடங்களில் நடத்தியிருக்கிறோம். 81ம் ஆண்டும் 82ம் ஆண்டும் திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் மே தினக் கூட்டம் நடத்திஇருக்கிறம். அதால தான் நாங்கள் வெகுஜன அமைப்பாக பரவலாக பார்க்கப்பட்டோம்.

தேசம்: இன்னும் ஒரு விஷயம் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் குறிப்பாக மட்டக்களப்பில் மூன்று சமூகங்களுமே கிட்டத்தட்ட சரி சமமான நிலையில் இருக்கிறது. முதல் உரையாடலில் சொல்லி இருந்தீர்கள், ஜேவிபியின் அரசியல் வகுப்புகள் எடுக்க வந்தவர்களில் முஸ்லிம் தோழர்களும் இருந்தார்கள் என்று. தமிழ் முஸ்லிம் உறவு எப்படி இருந்தது அந்தக் காலத்தில்.

அசோக்: மிக நெருக்கமாக இருந்தது. புளொட்டில் முஸ்லிம் தோழர்கள் நிறைய பேர் இருந்தார்கள். முஸ்லிம், தமிழர் உறவுகள் ஒரு சிக்கலான விஷயமாக போய்விட்டது பிற்காலத்தில்.

மட்டக்களப்பில் ஆரம்ப காலத்தில் முஸ்லிம் தோழர்கள் இருந்தார்கள். உதாரணமாக நாக படையின் உருவாக்கம் எப்படி நடந்தது தெரியும்தானே… புளொட் வெகுஜன அமைப்பு வேலையைத்தான் கூடுதலாக செய்துகொண்டிருந்தது. தீவிரவாத நடவடிக்கைகளில் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. அப்ப புலிகள் வேலை செய்ய தொடங்கி விட்டார்கள். ஒரு சில தோழர்களுக்கு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற உணர்வு ஒன்று இருந்தது.

புளொட்டுக்கு ஆரம்ப காலத்தில் எங்களுட்ட அந்த ஐடியா இருக்கேல. நாங்கள் வெகுஜன மக்கள் மத்தியிலும், காந்தியத்தோடையும் இருந்தபடியால், மக்கள் மத்தியிலான வேலைத்திட்டமாகத்தான், தொடர்பாகதான் எங்களுடைய கொள்கை இருந்தது. அரசியல்மயப்படுத்தல், மக்களை அணிதிரட்டல், அதற்கு ஊடாக மக்கள் யுத்தத்தை கொண்டு வருதல் என்பதுதான் புளொட்டின் கோட்பாடாக இருந்தது. அந்த நேரத்தில இந்த தோழர்கள் மிகத் தீவிரமாக இயங்க வேண்டும் என்று சொல்லி, முடிவெடுத்து அப்படி செயற்படவும் தொடங்கிவிட்டனர். தயா, சிறிபத்மன் கொஞ்சத் தோழர்கள் மிகத் தீவிரமாக இருந்தார்கள். அதுல ஜூனைதீன் இரண்டு மூன்று முஸ்லிம் தோழர்ககளும் இருந்தவர்கள்… இவங்க எல்லாம் சேர்ந்துதான் இந்த நாக படையை உருவாக்கினாங்க… அது கொஞ்சம் எல்லை மீறிப் போகும்போது நாங்கள் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் வந்தது. நாங்கள் தீவிரமாக இல்லை என்று சொல்லி, அவர்கள் தனிநபர் பயங்கரவாதத்தில் ஈடுபட வெளிக்கிட்டாங்க.

தேசம்: அப்படி என்றால் என்ன கொள்ளை போன்ற சம்பவங்களா?

அசோக்: கொள்ளை இல்லை. மட்டக்களப்பு மாலா ராமச்சந்திரன். அந்தக் கொலை அவங்கதான் செய்தது.

தேசம்: இது கழுகு படையா? நாக படையா?

அசோக்: நாக படை. இந்த நாக படைக்கு ஊடாகத்தான் மாலா ராமச்சந்திரன் கொலை நடக்குது. நாகேந்திரன் என்றவர் சுடப்பட்டு அவர் தப்பிவிட்டார்… அப்ப ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலம். யுஎன்பி கட்சியை சேர்ந்தவர்களை சுடுவதுதான் இவர்களின் நோக்கமாக இருந்தது. நடவடிக்கை எடுக்காமல் விட்டிருந்தால் மட்டக்களப்பில பலரை சுட்டிருப்பாங்க. எந்தவொரு அரசியல் தெளிவும் இவங்ககிட்ட இருக்கல்ல. அப்ப நான் மட்டக்களப்பு மாவட்ட புளொட் அமைப்பாளர். இவங்க வாசுதேவாவின் தனிப்பட்ட உறவை வைத்துக் கொண்டு தன்னிச்சையாக இயங்க வெளிக்கிட்டாங்க. இது வாசுதேவாவுக்கும் சிக்கலாகி விட்டது. அது எங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக வந்துட்டது.

ஏனென்றால், இவங்கள் புளொட் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஆட்கள். ஒரு தனி இயக்கமாக நாக படை என்று உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட தொடங்கிவிட்டாங்க… அது எங்களுக்கு பெரிய சிக்கலாக வந்தது. பிறகு அவர்களை எல்லாம் தடுத்து நடவடிக்கை எடுத்து, அதில் ஈடுபட வேண்டாம் என்று சொல்லி. பிறகு சம்பவத்தில் ஈடுபட்ட முக்கியமான தோழர்கள் எல்.ரீ.ரீக்கு போயிட்டாங்க.

தேசம்: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அவ்வளவு தூரம் தீவிரவாத இயக்கமாக இல்லாதபடியால்… அதுல இருந்த முஸ்லிம் தோழர்களுக்கு பிறகு என்ன நடந்தது ?

அசோக்: ஜூனைதீன் என்ற தோழர் புலிகளோடு சேர்ந்து பிறகு லெப்டினட் கேணலாக இருந்து , பிறகு இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். முக்கியமான பதவியில் இருந்தவர். மற்ற முஸ்லிம் தோழர்களின் பெயர் மறந்து போயிட்டேன். அவங்களும் எல்.ரீ.ரீ தான்.

தேசம்: அந்தக் கால கட்டங்களில் 80களின் ஆரம்பம் 83 ஜூலை முதல் மட்டக்களப்பு அல்லது கிழக்கு மாகாணத்தில் எப்படி இந்த வெவ்வேறு இயக்கங்களின் செயற்பாடுகள் இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லோரும் ஒரே மாதிரியான வளர்ச்சி நிலையில் இருந்தினமா? அல்லது…

அசோக்: இல்லை எல்.ரீ.ரீ .ஈ மிகக் குறைந்த அளவில் தான் இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் தோழர்கள் நிறைய பேர் வேலை செய்தவர்கள். ஈபிஆர்எல்எஃப் தோழர்களுக்கும் எங்களுக்கும் மிக நெருக்கமான உறவு இருந்தது. எல்.ரீ.ரீ . ஈ ஆட்களோடும் உறவு இருந்தது. யாழ்ப்பாணத்திற்கு வந்த போது மிகப் பெரிய அதிர்ச்சி எனக்கு இருந்தது. ஏனென்றால் யாழ்ப்பாணத்தில பெரிய முரண்பாடு இயக்கங்களுக்குள்ள. அது மட்டக்களப்பில் இருக்கேல.

எல்.ரீ.ரீயில வேலை செய்த தோழர்கள் எல்லாம் நாங்கள் மிக நெருக்கமாக இருந்தோம். வேணுதாஸ் அண்ணர் எல்லாம் எல்.ரீ.ரீயில் மிக முக்கியமான ஆள். ரஞ்சன் கனகரட்ணம் என்ட ஃப்ரெண்ட். பரமதேவா என்ற ஃப்ரண்ட். புளொட் வாசு தேவாவின் தம்பி. எங்களுக்குள்ள நெருக்கம் ஒன்று இருந்தது. ரஞ்சனும், நானும் பரமதேவாவும் ஜெயிலில் ஒன்றாக இருந்தம். அப்ப அவர்களுக்கு புளொட்டுக்கு வாற ஐடியா இருக்கேல. எல்.ரீ.ரீக்கு போற ஐடியா இருந்தது. அப்புறம் நாங்க வெளில வந்தும் மிக நெருக்கமாகத் தான் இருந்தம்.

தேசம்: யாழ்ப்பாணத்தில் இயக்கங்களுக்கு இடையிலான வன்முறை மிகக்கூர்மையாகவும், மட்டக்களப்பில் நட்பு ரீதியாகவும் இருந்ததற்கு காரணம் என்ன?

அசோக் : யாழ்ப்பாணத்தில் அதிகாரப் போட்டி ஒன்று இருந்ததாக தெரிஞ்சது. நாங்க பிறகு கதைக்கலாம் இதைப் பற்றி. நான் யாழ்ப்பாணம் வரைக்கும் அந்த உறவுகள் எனக்கு நீடித்தது. அப்ப இறைகுமாரன், உமைகுமாரன் யாழ்ப்பாணத்தில கொலை செய்யப்பட்டபோது எங்களுக்கு பெரிய அதிர்ச்சி. இக் கொலைகளை யார் செய்தது என்று உண்மையாக எங்களுக்கு தெரியாது. இறைகுமாரன் வாசுதேவாவின் ஃப்ரண்ட். எனக்கும் தெரியும் இறைகுமாரனை. வாசுதேவவோட இளைஞர் பேரவையில் இருந்து பிரண்ட்.
அப்ப நாங்கள் மட்டக்களப்பில் இறைகுமாரனுக்கு அஞ்சலி கூட்டம் நடத்தினாங்கள். அதற்குப்பிறகுதான் வேணுதாஸ் அண்ணை என்னை கூப்பிட்டு சொல்கிறார் அசோக் உங்கட இயக்கம்தான் செய்தது என்று சொல்லி. உனக்கு தெரியாதா என்று.

தேசம்: இறைகுமாரன், உமாகுமாரன் புலிகளுக்கு ஆதரவாளர்கள்?

அசோக்: ஓம். இரண்டு வாரத்திற்கு பிறகு பிறகு மட்டக்களப்பில் ஒரு ஒரு கூட்டம் நடந்தது. அதற்கு அமிர்தலிங்கம் வந்தவர். அப்பதான் அவர் ஓப்பினா பேசினார் கொலை செய்து போட்டு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்துகிறார்கள் என்று. எனக்கும் வாசுதேவாவுக்கும் பயங்கரப் பேச்சு. அப்பதான் வெளில தெரியும் எல்லாருக்கும் புளொட் தான் செய்தது என்று சொல்லி. அதற்கிடையில் வாசுதேவா புளொட் தான் செய்தது என்று தெரிஞ்ச உடனே யாழ்ப்பாணம் போனார். போயிட்டு வந்து சொன்னார் உண்மையிலேயே புளொட் தான் செய்தது என்று. எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

தேசம்: அதுக்கான காரணங்கள் விளக்கங்கள் தரப்பட்டதா உங்களுக்கு…

அசோக்: அதற்குப் பிறகு சென்டர் கமிட்டில அதெல்லாம் கதைக்கப்பட்டது. தன்னிச்சையாக சில பேர் செய்ததாக. ஆனால் அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கல்ல.

தேசம்: இந்த கொலைகளில் சந்ததியாருக்கு தொடர்பு இருக்கின்றதா?

அசோக் : இல்ல. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தோழர் சந்ததியாரால் அமைப்புக்கு வந்தவங்க. சந்ததியாருக்கு மிகவும் தெரிஞ்சவங்க. இதனால்தான் அப்படி சந்தேகம் பலருக்கு வந்தது. உண்மையிலே தன்னிச்சையான செயற்பாடுதான் இந்த கொலைகள்.

தேசம்: இதெல்லாம் புளொட் ஒரு கட்டமைப்புக்குள் வருவதற்கு முதல் நடந்த சம்பவங்களா அல்லது அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களா… ?

அசோக்: இந்த கொலைகள் நடக்கும் போது யாழ்ப்பாணத்தில் புளொட் கட்டமைப்பு உருவாகல்ல. ஏனைய மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுவிட்டது. இது சுந்தரம் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்வினையான சுந்தரத்தின் விசுவாசிகளால் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. புளொட்டின் கட்டமைப்பு பார்த்தீர்களென்றால் 79 ஆண்டு நவம்பர் புளொட்டின் உருவாக்கமே வருது. தமிழிழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற பெயர் வைக்கப்படுகிறது. அதற்கு முதல் புதியபாதை என்ற அமைப்பு தான் இருந்தது. புதியபாதை என்ற அமைப்பு பிறகு புளொட் என்ற பெயருடன் உருவாக்கப்படுகிறது.

உருவாக்கப்பட்ட மத்திய குழுவில் இருந்தவர்களைப் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். உமா மகேஸ்வரன், சந்ததியார், ஐயர், சாந்தன், சுந்தரம். இதில ஐயரும், சாந்தனும் பிரபாகரனோடு சேர்ந்து புலிகள் அமைப்பை தொடங்கியவர்களுள் முக்கியமானவர்கள். 79 நவம்பர் மாதம் உருவாக்கப்பட்ட மத்திய குழுவின் பிற்பாடு அவங்களுக்குள்ள ஒரு முரண்பாடு வருகிறது .ஏனென்றால் தன்னிச்சையான போக்கு நடக்குது.

தேசம்: இந்த காலகட்டத்தில் நீங்கள்…

அசோக் : புளொட்டில இல்லை நான். இது காலப்போக்கில் கேள்விப்பட்ட விஷயங்கள். என்ன முரண்பாடு வருது எப்படி என்றால். இவங்கள் எப்படி புலிகளில் என்னென்ன தவறு நடக்கக் கூடாது என்று எதிர்பார்த்தார்களோ அதெல்லாம் இங்க நடக்குது. முதலில் வெகுஜன அமைப்புக்களை உருவாக்கி அதன் பலத்தில் இராணுவத் தாக்குதல்களைத் திட்டமிடுவது. பின்னதாக இரண்டு நடவடிக்கைகளையும் சமாந்தரமாக முன்னெடுக்கலாம் என்ற கருத்து தான் இருந்தது. பிறகு மத்திய குழுவில் சுந்தரம், உமாமகேஸ்வரன், சந்ததியார் இவங்கட ஆதிக்கம் மேலோங்க கருத்து முரண்பாடு வருகின்றது. பிறகு சுந்தரம் உமா மகேஸ்வரனும் சந்ததியாரும் சேர்த்து தன்னிச்சையான போக்குல ஈடுபடுகிறார்கள் என்று சொல்லி ஐயரும், சாந்தனும் முரண்படுகின்றாங்க. பிரச்சனை வரும்போது சாந்தனும் ஐயரும் அந்த கமிட்டியை விட்டு போகிறாங்க… அதுல மிஞ்சினது சந்ததியாரும், உமாமகேஸ்வரனும், சுந்தரமும் தான். இப்ப பார்க்கும்போது தெரியுது என்னவென்றால், புலிகளின் அதே அரசியலுடன் தான் இவர்கள் தொடர்ச்சியாக வந்திருக்கிறங்க என்று. ஏனென்றால் மத்திய குழுவுக்குள்ள ஜனநாயகம் எதுவும் இருக்கல்ல.

மக்கள் போராட்டம், தேசிய விடுதலைப்போராட்டம், வர்க்க அணி திரட்டல் எந்த அரசியல் தெளிவும் இவர்களிடம் இருக்கல்ல. அனைத்து ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் என்ற புளொட் வாசகம் எம்மைப் போன்றவங்கள உள்வாங்க பயன்படுத்தபட்ட கோசம் என்பது இப்ப நினைக்கக்குள்ள விளங்குது.

தேசம்: இதே காரணங்களுக்காகத்தானே பிரபாகரனோடு முரண்பட்டு ஐயர் வெளியேறியவர்…

அசோக் : ஓம். அப்போ ஐயரோடு சாந்தன், நாகராஜா, குமணன் போன்றவர்கள் வெறியேறுகிறாங்க. பிரபாகரனோடு ராகவன், மாத்தையா, செல்லக்கிளி போன்றவர்கள் இருக்கிறாங்க.

தேசம்: இதில பார்க்கும் போது இதில ஓரளவு சமப்படுத்தப்பட்ட பலம் ஒன்று சந்தததியார், உமா மகேஸ்வரன், சுந்தரத்துக்கு ஒரு ஈகுவலான பலம் இருந்திருக்கு. அதில சந்ததியாரும் சுந்தரமும் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள்…

அசோக்: உமாமகேஸ்வர் கட்டுவன். ஐயர் புண்ணாலைக்கட்டுவன்.

தேசம்: சாந்தன்…

அசோக்: தெரியல்ல.

தேசம் :இது ஒரு லூசான கட்டமைப்பா…

அசோக்: பெயரளவில்தான் மத்திய குழுவே தவிர அரசியல் இயக்க கட்டமைப்புக்கான எந்த அரசியல் அமைப்பு வடிவங்களை விதிகளை புளொட் கொண்டிருக்கல்ல. இவங்கள் வெளியேறினதுக்கு பிறகு நான் நினைக்கிறேன் அதுக்குள்ள பிறகு கண்ணனும், ராஜனும் சேர்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அதற்குப் பிறகு சென்றல் கமிட்டி என்று உருவாக்கப்படவில்லை. அப்படியேதான் இயங்கிக்கொண்டிருந்தது. பிறகுதான் பூரணமான சென்ட்ரல் கமிட்டி பிற்காலத்தில் உருவாக்கப்படுது 83 ஜூலைக்கு பிற்பாடு.

தேசம்: ஆம் ஆண்டு ஜூலை வரைக்கும் இப்படியான ஒரு கட்டமைப்புதான்?

அசோக்: இப்படியான கட்டமைப்புதான். ஆனா யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில மாவட்ட நிருவாக கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு விட்டன அந்த நேரத்தில். மாவட்ட அமைப்பாளராக நாங்கள் இருந்தோம். மாவட்ட அமைப்பாளர் கூட்டம் வவுனியாவிலும் மற்ற இடங்களிலும் நடக்கும். ஒரு உத்தியோகபூர்வமான அமைப்பா மாவட்ட அமைப்புக்கள் இருந்தது. மாவட்ட அமைப்பாளருக்கு கீழ கிராமிய அமைப்பாளர்கள் எல்லாம் இருந்தாங்க. மட்டக்களப்பு ஜெயில் விரெக் நடந்து பின்தளம் சென்ற பின்னதான் சென்ட்ரல் கமிட்டி பிற்காலத்தில் பூரணமாக உருவாக்கப்படுது.

காந்தியத்தின் தோற்றமும் அதன் செயற்பாடுகளும் புளொட்டின் உருவாக்கமும்!

காந்தியத்தின் தோற்றமும் அதன் செயற்பாடுகளும் புளொட்டின் உருவாக்கமும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 04 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 4

தேசம்: 77 ஆம் ஆண்டு கலவரத்துக்குப் பிறகு ஜே.வி.பியுடனான உறவு முறிந்து ஒரு இடைவெளிக்குப் பிறகு, காந்தியத்திட்ட போறீங்க. காந்தியத்தின் செயற்பாடுகள் அந்த காலத்தில் எப்படி இருந்தது?

அசோக்: 77 ஜே.வி.பியினுடைய தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்பு, நாங்க சுயமாக வாசகர் வட்டம், தேசிய இளைஞர் சேவை மன்றம், அவர்கள் நடாத்தும் விளையாட்டு முகாம், தலைமைத்துவ பயிற்சி நெறி, சிரமதானம் என்று இதிலையும் ஈடுபடுகின்றோம். இலக்கியங்களுக்கு ஊடாக வெளிக்கிடுறம். அந்த நேரத்துல காந்திய வேலைத்திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் தொடங்கிவிட்டது. மாலையர்கட்டு என்ற இடத்தில் காந்திய பண்ணை போடுவதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டு இருக்கு. அந்த நேரத்தில் தொண்டர் இல்லை , காந்திய வேலைத்திட்டங்கள் செய்ய. நிறைய சிறுவர் பாடசாலைககளும் ஆரம்பிக்க ப்பட்டன.

தேசம்: அப்ப நீங்கள் ஈடுபட தொடங்கும்போதே காந்தியம் இயங்கத் தொடங்கிவிட்டது…

அசோக்: ஆம் காந்தியம் இயங்கத் தொடங்கிற்று… வடக்கிலே கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, இவையெல்லாம் தொடங்கிவிட்டது. யாழ்ப்பாணத்தில இயங்கவில்லை. திருகோணமலையில் எல்லாம் ஃபுல்லா இயங்க தொடங்கிற்று.

தேசம்: அதன் பின்னணி என்ன மாதிரி ? யார் யார் காந்தியத்தை உருவாக்கினது?

அசோக்: நான் நினைக்கிறேன் என்னவென்றால், 77 இல் கே சி நித்தியானந்தா தமிழர் புனர்வாழ்வு கழகம் ரி.ஆர்.ஆர்.ஓ என்ற அமைப்பை தொடங்குகிறார்…

தேசம்: கே.சி நித்தியானந்தா தான் தோழர் டக்ளஸ் தேவானந்தாவினுடைய வளர்ப்பு தந்தை என்று சொல்வது. அவர் ஒரு தொழிற்சங்கவாதியாக இருந்தவர்.

அசோக்: ஆம். அன்றைய தொழிற்சங்கவாதிகளாக இலங்கையில் விளங்கிய திசாநாயக்க, கந்தசாமி, வைகுந்தவாசன், ஆசிர்வாதம், எஸ்.டி.பண்டாரநாயக்க, திருமதி தமரா இலங்கரத்ன, பிலிப் குணவர்தன, போன்றவர்களுடன் மிகவும் நெருக்கமாக தொழிற்சங்க வேலைகள் செய்தவர் கே. சி. நித்தியானந்தா. அதே காலகட்டத்தில் தான் டேவிட் ஐயா ஆட்கள் காந்திய அமைப்பை தொடங்குகிறார்கள்.

தேசம் : ரீ.ஆர்.ஆர்.ஓ தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தில் தான் காந்தியமும் தொடங்கப்படுகிறது…

அசோக் : ஆமா ஏனென்றால், அந்த இனக்கலவரத்துக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மலையக மக்களை குடியேற்ற வேண்டும், அவர்களுக்கு புனர்வாழ்வு, எதிர்கால நம்பிக்கைகளை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் தொடங்கப்படுகிறது. காந்தியத்தை தொடங்குவதில் முக்கியமாக இருந்தவர்கள் டேவிட் ஐயா, டாக்டர் ராஜசுந்தரம், சாந்தினி, அடுத்தது கூடுதலா சண்முகலிங்கம் , அதுல கூட ஈடுபாட்டுடன் இருந்தவர்.

சரோஜினிதேவி என்டு கனடாவில இருக்கிறா, அவங்களின்ர தம்பிதான் சண்முகலிங்கம். ஏனென்டா, அவர் மலையகத்தில வேலை செய்தவர். ஜே.வி.பியோட உறவா இருந்தவர். அவருக்கு நிறைய மலையகத் தொடர்பெல்லாம் இருந்தது. அடுத்தது, அவர் காந்தியத்தை உருவாக்கினதில ஒராள் இல்ல. காந்தியத்தோட ஈடுபட்டவர். காந்திய உருவாக்கத்தில வந்து நாலு, ஐந்து பேர் இருக்கிறாங்க. டேவிட் ஐயா, ராஜசுந்தரம், சாந்தினி, ஒரு சிங்களத் தோழரும் அதில இருந்தவர் என்று நினைக்கிறேன்.

தேசம்: இந்த காந்தியம் தொடங்கினாக்களுக்கும், தமிழரசுக் கட்சிக்கும் அல்லது தமிழ்த்தேசிய அரசியலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கா?

அசோக்: டேவிட் ஐயாவுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில எந்த உடன்பாடும் இருக்கேல. காந்திய குடியேற்றத் திட்டங்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சிக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால், அவர்கள் நினைத்தார்கள் காந்தியம் காலப்போக்கில், ஒரு அரசியல் கட்சியாக வரும் என்ற ஒரு பயம் அவங்களுக்கு இருந்தது. காந்தியப் பணிகள் தொடங்கி, பாராளுமன்ற கட்சியாக வருமோ என்ற பயம் இருந்தது. அதால காந்திய அமைப்புக்கு மிக எதிராகத்தான் தமிழரசு கட்சி இருந்தது. அடுத்தது, டேவிட் ஐயாவுக்கும் கோட்பாட்டு ரீதியாக, அரசியல்ல தமிழரசுக் கட்சியை பிடிக்கல. தமிழ் தேசியவாதியாக அவர் இருந்தாலும்…

தேசம்: டேவிட் ஐயாவின் பின்னணி பற்றி சொல்லுறீங்களா?

அசோக்: அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் யுனிவசிற்றியில் ஆக்கிடெக்கில் பட்டம் பெற்றவர். லண்டனிலும், நைஜீரியாவிலும் Urban planning study முடித்தவர். பிறகு கென்யாவின் மொம்பாசா urban planning யில முதன்மைக் கட்டடக் கலைஞராகப் பணியாற்றினாங்க. உலகம் முழுதும் பிரபல ஆர்க்கிடெக் ஆக இருந்து வந்தவர். வந்து காந்தியத்தைத் தொடங்குகிறார்.

தேசம் : எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் அவர்?

அசோக்: நான் நினைக்கிறேன், யாழ்ப்பாணம் தீவுப் பகுதியை சேர்ந்தவர். கரம்பன் என்று நினைக்கிறேன். இளவாலை சென் கென்றிஸில் தான் படித்திருப்பார் என்று நினைக்கிறேன். பல்வேறு பிரபலமான ஆக்கிடெக் கட்டடங்களை எல்லாம் அவர் உருவாக்கியிருக்கிறார் ஐரோப்பிய நாடுகளில். அவருடைய வரலாற்றை படித்தால் தெரியும், அவர் எங்கெங்கு வேலை செய்திருக்கிறார் என்று. பிரபலமான ஆர்க்கிட்டெக்காக இருந்திருக்கிறார். ஆர்க்கிட்டெக் பற்றி அறிய உலகமெல்லாம் சுத்தி இருக்கின்றார். காந்தியம் பண்ணைய தொடங்குவதற்கு முதல் அவர், மாதிரி கிராமம், மாதிரிகூட்டுப் பண்ணை பற்றி நிறைய ஐடியாக்கள், டேவிட் ஐயாவிடம் இருந்திருக்கு. கூட்டு பண்ணையை பற்றி படிப்பதற்காக இஸ்ரேவேலுக்கெல்லாம் போய் இருக்கிறார்.

தேசம்: அப்ப காந்தியத்தின்ட அந்த concptயை, ஐடியாவை அவர்தான் கொண்டு வாரார்?

அசோக்: அவர்தான் கொண்டு வாரார். காந்தியக் சித்தாந்தத்தின் மீது தீவிரமான ஈடுபாடு இருந்திருக்கு. பல நாடுகளுக்கு போய் கூட்டுப்பண்ணை, சுய பொருளாதார கட்டமைப்புக்கள் எப்படி உருவாக்கப்படுது என்றெல்லாம் பார்க்திருக்கிறார். அந்த மாதிரித் திட்டத்தைதான் இங்க கொண்டு வாறார், காந்திய பண்ணைகளை உருவாக்குவதற்கு. பாடசாலைகள், சுகாதார வசதிகள், சத்துணவு திட்டம், சிறுவர்களுக்கான பால், மா விநியோகம், பெண்களுக்கான வேலை வாய்ப்புகள், நடமாடும் மருத்துவமனைகள், பெண்களுக்கான பயிற்சி நிலையங்கள், ஆசிரியர்கள் பயிற்சி திட்டங்கள் என்று பல்வேறு திட்டங்களை கொண்டு வாறார்.

தேசம்: டேவிட் ஐயா பற்றி சொன்னீர்கள். கே.சி நித்தியானந்தா காரைநகர் …
அசோக்: ஆனா, கொழும்பில்தான் கே.சி நித்தியானந்தா இருந்தவர். அவருடைய இருப்பிடம் அங்கதான். தொழிற்சங்கவாதியாக அங்க இருந்தவர். அங்கதான் டக்ளஸ் தோழர் இருந்து வளர்ந்தவர் என்று நினைக்கிறேன். லங்கா சமசமாஜக் கட்சியிர அரசாங்க எழுதுவினைஞர் சேவை நலச் சங்கத்தை ஆரம்பித்து வைத்தவர்களில் முக்கியமானவர் இவர்.

தேசம்: டாக்டர் ராஜசுந்தரம் அவரைப் பற்றி…

அசோக்: அவர் டாக்டர். வவுனியாவில் கிளினிக் வைத்திருந்தவர். அவர் வைஃப் சாந்தினி அவங்களும் டாக்டர். “சாந்தினி கிளினிக்” என்று வவுனியாவில் பிரபலமாக இருந்தது. ராஜசுந்தரம் மலையகத்தில் வைத்தியராக இருந்தவர். அந்த இணைப்பு தான் அவரை காந்தியத்துடன் இணைக்குது. அவருக்கும் நிறைய ஈடுபாடு இருந்தது. மலையக மக்கள் மீதான ஒரு கரிசனையும் இருந்தபடியால்… பொருளாதார பெரும்பங்கு டேவிட் ஐயாவின் சொந்தக் காசுதான் . மற்றப்படி பல்வேறு அமைப்புகள் தனிநபர்களுக்கு ஊடாகவும் பணம் பெறப்பட்டது என நினைக்கிறன்.

தேசம்: வேறு யார் குறிப்பாக ஈடுபட்டிருக்கிறார்கள் ?

அசோக்: காந்தியத்தில் நிறைய பெயர் ஈடுபட்டிருக்கின்றார்கள் சரோஜினி அடுத்தது…

தேசம்: அவருக்கு ஏதாவது அரசியல் பின்னணி இருக்கா… ?

அசோக்: சரோஜினி பிறகு புளொட்டில சென்றக் கமிட்டில இருந்தவ. காந்தியத்த்துக் ஊடாகத்தான் நிறையபேர் புளொட்டுக்கு வாறாங்கள். அந்த காலகட்டத்தில் காந்தியத்தில் வேலை செய்தாக்கள் வந்து… தோழர் சந்ததியார் வேலை செய்தவர்.

தேசம்: நீங்கள் போகும்போது சந்ததியார் காந்தியத்தில் இருந்தவரா?

அசோக்: சந்ததியார் காந்தியத்தில் இருந்தவர். நான் நினைக்கிறேன் ஜென்னி காந்தியத்தில் இருந்தவ. ஜெயச்சந்திரன் பார்த்தன் காந்தியத்தில் இருந்தவர். வாசுதேவா… அடுத்தது, ஜென்னிட அம்மா பிலோமினா லோரன்ஸ் அவா தான் திருகோணமலைக்கு மாவட்ட காந்திய பொறுப்பாளராக இருந்தவா.

தேசம்: ஆனா அவாவும் தமிழ்தேசிய தமிழரசுக் கட்சிதானே…

அசோக் : தமிழரசுக் கட்சியின் பிரதம பேச்சாளர். மங்கையர்கரசி மாதிரி ஒரு பேச்சாளர். நன்றாக பேசக்கூடியவர்.

தேசம்: தமிழரசுக் கட்சிக்கு பெரிய உடன்பாடு இல்லாவிட்டாலும் அதுல உறுப்பினர்கள் சிலர் இருந்திருக்கினம்.

அசோக்: தமிழரசுக் கட்சி நிறைய பேர் காந்தியத்தில் இருந்திருக்கிறாங்கள். தலைமைக்கு அதோட உடன்பாடு இருக்கேலயேயொழிய, அதைக்கூட வெளிப்படையாக காட்டவில்லை. அது உள்ளுக்குள்ள ஒரு பனிப்போர் இருந்ததேயொழிய, வெளிப்படையாக காட்டேல. வெளிப்படையாத் தெரிஞ்சாதான் இவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அது உள்ளுக்குள்ளேயே இருந்ததுதான்.

அப்ப வாசுதேவா எங்களை சந்திக்கிறார். சந்தித்து காந்தியத்துக்கூடாக இப்படி அபிவிருத்தி வேலைகள், மக்கள் நலப்பணிகள் செய்யலாம் என்று சொல்ல, எங்களுக்கு உடன்பாடு வருது. ஏனென்றால், எங்களுக்கு சமூக போராட்டம், சமூக அக்கறை இருக்கிறபடியால், நாங்கள் இதுல வேலை செய்யலாம் என்று சொல்லி…

தம்பலவத்தை என்ற ஒரு கிராமம் இருக்கு, மண்டூருக்கு அங்கால. அது வந்து எல்லைப்புற கிராமம். அந்த கிராமத்திற்கு பக்கத்தில் மாலையர்கட்டில்ல வந்து ஒரு காந்திய குடியேற்றத் திட்டம் செய்ய வேண்டும் என்று சொல்லி வாசுதேவா கூப்பிடுகின்றார். அப்ப நாங்கள், அங்க போய் காடுகளை அழித்து வீடுகள் அமைத்து இந்த குடியேற்றத் திட்டத்தில நாங்கள் உதவி செய்கிறோம்.

தேசம்: அது எல்லைப்புற கிராமமா?

அசோக்: எல்லைப்புற கிராமம். அதுல முக்கியமா பேரின்பம் என்ற ஒரு தோழர் வேலை செய்தவர். அவர் எங்கே என்றே தெரியல. அவர் முக்கியமா அதுல ஈடுபட்டவர். காந்தியப் பண்ணைக்கு பொறுப்பாக இருந்தது சண்முகம் என்று ஒரு தோழர், அவர் இப்பவும் இருக்கிறார். மிக முக்கியமாக இருந்தவர்.

தேசம்: போராட்டங்களோடு சம்பந்தப்பட்ட பலர் இந்தக் காந்தியதுத்துடன் தொடர்பில இருக்க வாய்ப்பு இருந்ததா?

அசோக்: ஓம். மண்டுர் மகேந்திரன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவரெல்லாம் தொடர்பு இருந்தது.

தேசம் : யாழ் மாவட்டத்தில் இருந்து வந்த இளைஞர்கள் பலர் அதுல இருந்திருக்கினமா?

அசோக்: மட்டக்களப்பு காந்தியத்திலாவா…

தேசம் : இல்ல பொதுவா காந்தியத்தில…

அசோக்: யாழ்ப்பணத்தில காந்தியம் இருக்கேலத்தானே.

தேசம்: இல்ல அங்கே இருந்து வந்தவர்கள் காந்தியத்தில் ஈடுபட்டார்களா… ?

அசோக்: தோழர் சந்ததியார் இருந்தவர். காலப்போக்கில் வவுனியா வேலைத்திட்டங்களில் யாழ்ப்பாணத் தோழர்கள் என்று சொல்லி… தோழர் பொன்னுத்துரையை, குமரனை, தோழர் ஜூலியை தெரியும். குமரன் புளொட்டுக்கூடாக வந்ததேயொழிய, காந்திய வேலைத்திட்டங்களில் யாழ்ப்பாணத் தோழர்கள் குறைவு.
சில வேளைகளில் ஏனைய குடியேற்றத்திட்டங்களில் வேலை செய்திருப்பாங்க. 81ம் ஆண்டு என நினைக்கிறன், யாழ்ப்பாணத்தில ஒரு கிராமத்தில சில சிரமதான வேலைகள், குடிசைகள் அமைச்சி கொடுத்தம். கிராமத்தின் பெயர் ஞாபகம் இல்லை. அப்ப நாங்கதான் வவுனியாவில இருந்தும் மட்டக்களப்பில இருந்தும் போய் இருந்தம். யாழ்ப்பாணத்தில இருந்து குமரன் தோழரும் இன்னொரு தோழரும் வந்திருந்தாங்க.

தேசம்: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், காந்தியத்தில் இருந்தவைக்கு கூடுதலா பிற்காலத்தில் புளொட்டுடன் தான் தொடர்பு கூட வந்திருக்கா அல்லது வேறு அமைப்புகளுடனும் தொடர்பு வந்திருக்கா?

அசோக்: காந்திய பண்ணைகளை உருவாக்குவதற்கு தொண்டர்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் புளொட் உருவாகிவிட்டது. அப்ப சந்ததியார் காந்தியத்தில் இருந்தபடியால், சந்ததியார் என்ன செய்தார் என்றால் புளொட் இளைஞர்களை காந்தியத்துக்குள் இணைத்தார். அப்ப யார் யாரெல்லாம் புளொட்டில் இருந்தார்களோ அவர்கள் எல்லாம் காந்தியத்தில் வேலை செய்தார்கள். அதனாலதான் புளொட்டுக்கும் காந்தியத்துக்கும் உறவு வந்திச்சுது. காந்தியத்தில் இருந்த தோழர்கள் வேறு அமைப்புக்களுக்கு போனமாதிரி நான் அறியல்ல.

தேசம்: தொண்டர்கள் புளொட் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று டேவிட் ஐயாவுக்கு தெரியுமா?

அசோக்: இந்த தொண்டர்கள் புளொட் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று டேவிட் ஐயாக்கு ஓரளவு தெரியும் . புளொட் ஆயுத அமைப்பு என்று டேவிட் ஐயாவுக்கு தெரிந்திருந்தால் நான் நினைக்கவில்லை, அவர் விரும்பி இருப்பார் என்று. ஒரு ஆயுத இயக்கத்தோடு காந்தியத்தை இணைப்பதற்கு அவர் விரும்பி இருக்க மாட்டார். அவர் நினைத்திருப்பார் புளோட் ஒரு வெகுஜன அரசியல் இயக்கம் தான் என்று.

ஆனால் டாக்டர் ராஜசுந்தரத்துக்கு தெரிந்திருக்கும். ஏனென்றால், சந்ததியாரும் டாக்டர் ராஜசுந்தரமும் நல்ல நெருக்கம். சந்ததியார் அண்டர்கிரவுண்ட் இயக்கத்தில் இருக்கிறார் என்று கட்டாயம் டாக்டர் ராஜசுந்தரத்துக்கு தெரிந்திருக்கும். டேவிட் ஐயாவுக்கு அதெல்லாம் தெரிந்திருக்க சான்ஸ் இருந்திருக்காது. டேவிட் ஐயா நினைத்திருப்பார், சந்ததியார் சமூக அக்கறையோடு, காந்திய அமைப்பில ஆர்வத்தோட சமூக சேவைக்கு வாரார் என்று.

இப்படித்தான் வாசுதேவாவும் காந்தியத்தில் இணைந்தவர். சந்ததியார் கூட பெருசா வெளியில தெரியல. வாசுதேவா வெளிப்படையாகவே புளொட்டினுடைய அமைப்புச் செயலாளராக இருந்தவர். அதோட காந்தியத்தினுடைய கிழக்குமாகாண இணைப்பாளர். அப்ப புளோட் அண்டர்கிரவுண்ட் இயக்கம் இல்லை. அண்டர்கிரவுண்ட் ஆனது எப்ப என்று கேட்டால், சுந்தரத்தின் படுகொலைக்குப் பிறகு. அப்போ புளொட் ஒரு வெகுஜன அரசியல் இயக்கம்தான்.

தேசம்: காந்தீயம் ஒரு சமூக பொருளாதார மேம்பாட்டு அமைப்பு. புளொட் ஆயுத விடுதலை அமைப்பு. காந்தியத்தோடு தொடர்வு வைத்தால் அது காந்திய அமைப்பின் வளர்ச்சிக்கு ஆபத்து என்று சந்ததியாருக்கு தெரியவில்லையா ? இதை எப்படி பார்க்கின்றீங்க…

அசோக்: உண்மையில இப்ப யோசிக்கும் போது, நிறைய தவறுகள் விட்டிருக்கிறம். மக்கள் நல அபிவிருத்தி சமூக மேம்பாட்டு அமைப்பு ஒன்று, சுதந்திரமாக இயங்குவதுதான் சரி என்ற அரசியல் புரிதல் அன்று எங்களுக்கு இல்லாம போயிற்று. சமூக மேம்பாட்டு வெகுஜன அமைப்புக்களுக்கும், இராணுவ கட்டமைப்பு கொண்ட விடுதலை இயக்கத்திற்குமான உறவு நிலை, தொடர்வு பற்றிய அரசியல் தெளிவு எங்கட்ட இருந்திருந்தால் காந்திய அமைப்பை காப்பாற்றி இருக்க முடியும். இப்ப யோசிக்கும்போது எங்க தவறு தெரிகிறது.

தேசம்: புளொட் வெகுஜன அமைப்பாக அது பதிவு செய்யப்பட் டதா?

அசோக்: இல்லை. புளொட் ரெஜிஸ்ட்டர் பண்ணுப்படல. புளொட் வந்து ஒரு அரசியல் வெகுஜன இயக்கமாக வெளியில இயங்குகிறது. உண்ணாவிரதம், பகிஷ்கரிப்பு, துண்டு பிரசுரம் அடித்தல், புதிய பாதை பத்திரிகை, கருத்தரங்குகள் போன்ற சட்டத்திற்கு உட்பட்ட வெகுஜன அரசியல் வேலைத் திட்டங்களில ஈடுபடுகிறது.

ஆயுத இயக்கம் என்றால் தானே தடை செய்யப்படும். அது ஏதாவது குற்றங்களில் ஈடுபட்டு… புளொட் வெளிப்படையாக குற்றங்களிலில ஈடுபடவில்லை. ஆனைக்கோட்டை பொலிஸ் நிலைய தாக்குதலில் கூட, புளொட் என்று வெளிப்படையாகத் தெரியாது. எப்ப அடையாளப்படுத்தப்படுகிறது என்றால், சுந்தரம் படுகொலைக்குப் பிறகுதான் அடையாளப்படுத்தப்படுகிறது. சுந்தரம் புளொட் என்று தெரிய வருகிறது.

தேசம்: காந்தியத்தில் உங்களுடைய செயற்பாடுகள் எப்படி அமைந்தன?

அசோக்: காந்தியத்தில் எங்கள் செயற்பாடுகள் என்னென்று கேட்டால்… படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்…

தேசம்: அப்ப நீங்கள் ஏ எல் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்…

அசோக்: ஓ.எல் எடுத்துட்டன். ஏ.எல் எடுக்கல நான் குழப்பிட்டன். அந்தக் காலகட்டத்தில் சனி – ஞாயிறுகளில், ஒரு விடுமுறை காலத்தில்தான் காந்திய வேலைத்திட்டங்களில் ஈடுபடுவது. முக்கியமாக ஈஸ்வரன் தோழர்… காந்தியத்தில் மிக முக்கியமானவர். அவர் புளொட்டில மத்தியகுழுவில் இருந்தவர். எனக்கு முதன் முதல் புளொட் தோழர் என்று அறிமுகமானவர் ஈஸ்வரன் தோழர்தான். ஈஸ்வரன் முதலில் வந்து காந்தியத்தின் ஆளாகத்தான் எனக்கு அறிமுகமானவர். அப்ப அவருக்கு வேறு பெயர்.

மாலையர்கட்டு பண்ணை வேலை முடிந்த பிறகு, செட்டிகுளம் கல்லாறு பண்ணையை ஈஸ்வரனே பொறுப்பு எடுக்கிறார். அவர்தான் முன்நின்று அதனை தொடங்குகின்றார். அவரும் நானும் தான் முதல் முதல் அந்தக் செட்டிக்குளம் கல்லாறு பண்ணைக்கு போறோம். பயங்கர முசுரு காடு. ஈஸ்வரன் மிகப்பெரிய உழைப்பாளி, மிக எளிமையானவர். நான் சொகுசாய் இருந்த ஆள்தானே… அப்ப நம்மட வேலைகள் தெரியும்தானே. அவர் மிக நேர்மையான உழைப்பாளி. அவருக்கு ஊடாகத்தான் நான், உடல் உழைப்பு என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டேன்.

ஒடுக்கட்ட வறிய மக்களோடு அவர்களாக மாறி அவர்களுக்காக சேவை செய்வதென்பதை ஈஸ்வரன் தோழரிடம் நாம் கற்கவேண்டும். அவ்வளவு எளிமையானவர். மிகப்பெரிய காந்திய வேலைத்திட்டம் அது என்று நினைக்கிறன். நிறைய செட்டிக்குள தோழர்கள் உதவி செய்தார்கள். தர்மலிங்கம் என்றொரு தோழர். இதில முக்கியமானவர். இப்ப அழிந்து போய் இருக்கும் என நினைக்கிறேன். மலையக மக்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை.

தேசம்: செட்டிகுளத்திலயா…

அசோக்: செட்டிக்குளத்திற்கு பக்கத்தில் கல்லாறு பண்ணையில்…

தேசம்: காந்திய இயக்கத்தில் அதில் உங்களுக்கு அரசியல் ரீதியான அறிவூட்டல்களும் நடந்ததா?

அசோக்: இல்லை இல்லை. காந்திய பண்ணையில் சேவை மனப்பான்மைதான். காந்தியத்தில் இருக்கும்போதுதான் வாசுதேவா ஊடாக அரசியல் உறவுகள் வருது எனக்கு. உண்மையிலேயே வாசுதேவா காந்தியத்துக்குள் எங்களை ஈடுபடுத்தியது புளொட்டுக்குள்ள கொண்டு போகத்தான். நேரடியாக நாங்கள் புளொட்டுக்குள்ள போக விரும்பமாட்டோம் என்பதற்காக…

தேசம்: அதுக்குள்ள ஒரு ஹிடின் அஜெண்டா இருந்திருக்கு…

அசோக் : அஜெண்டா இருந்திருக்கு. அதுக்கு பிறகு அவர் புளொட் பற்றிக் கதைக்க வெளிக்கிடுறார். அப்ப சில அறிமுகங்கள் வருது. நான் முன்ன சொன்ன மாதிரி ஈஸ்வரன் தோழரை முதலில் புளொட் என்று எங்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். பிறகு தோழர் டொமினிக், கேசவன், ஜெயச்சந்திரன் – பார்த்தன், ரகுமான் ஜான், குமரன் பொன்னுத்துரை, முரளி எனப்பலரும் அறிமுகம் ஆகிறார்கள்.

தேசம்: தோழர் கேசவன் பிற்காலத்தில் தீப்பொறி…

அசோக்: ஆம் . புதிய தோர் உலகம் நாவல் எழுதியவர். புலிகளால கொலை செய்யப்பட்டவர்.

தேசம்: இதெல்லாம் காந்தியத்தில் நீங்கள் இருந்த காலகட்டத்தில்…

அசோக்: ஆம். காந்தியத்தில் இருந்த காலகட்டத்தில் புளொட்டுக்குள்ள போவதற்கான முதல் ஆரம்பம். அந்த அறிமுகங்கள் நடக்குது. அப்ப இவங்கள் புளொட்டுக்கு வேலை செய்கிறார்கள்.

தேசம்: காந்தியத்திலும் இருக்கினம், புளொட்டிலும் இருக்கினம்.

அசோக்: ஆம். அப்ப எங்கட அரசியல் தெரியும்தானே… எங்களுக்கு தமிழீழம் தனிநாடு கோரிக்கை இதிலெல்லாம் ஈடுபாடில்லை என்று தெரியும் தானே. அப்ப இவங்கள் எங்களுக்கு முன்னுக்கு வைக்கிற கோஷம் என்னவென்றால் வர்க்கப் போராட்டம். தேசிய முரண்பாடுகள், இனப்பிரச்சனைகள், தமிழ் மக்களுக்கு உரிமை அற்ற தன்மை, பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனைக்கான முதல் தீர்வும், அதன் பின் வர்க்கப்போராட்டமும். அதாவது, தேசிய விடுதலைப் போரட்டத்தின் ஊடாக வர்க்கப்போராட்டம். கிடைக்கின்ற சோசலிச தமிழ் ஈழத்தினுடாக, எதிர்காலத்தில் சிங்கள உழைக்கும் தொழிலாள விவசாய வர்க்கத்தின் – பாட்டாளி வர்க்கத்தின் இணைப்போடு, தென்னிலங்கை மக்களின் வர்க்கப்போராட்டத்திற்கு ஆதரவளித்தல்.

தமிழீழம்தான். ஆனா அது ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஊடாக வர்க்கப் போராட்டம். தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஊடாக வர்க்கப் போராட்டத்தை நோக்கிய பயணம்தான். அதற்கான முதல் படிதான் இந்த தேசிய விடுதலைப் போராட்டம். அப்ப எங்களுக்கு தேசிய ஒடுக்குமுறை இருக்குத்தானே.
தேசிய விடுதலைக்கூடாக ஒரு வர்க்கப் போராட்டத்தை கொண்டு போறது என்ற சித்தாந்தம் எங்களுக்கு பிடித்துக்கொண்டது. அப்ப கேட்க உண்மையாத்தான் எங்களுக்கு இருந்தது.

இப்ப பரிசீலிக்கும் போது, எனக்குள் பல்வேறு விமர்சனங்கள் உள்ளது. அப்ப மிக திருப்தியாக இருந்தது. அப்ப நாங்க நினைச்சம் அதுல போய் சேர்ந்து வேலை செய்யலாம் என்று.

பிறகு வவுனியாவுக்கு வாறம். தோழர் சந்ததியார் எல்லாரையும் சந்திக்கிறோம். அந்த நேரத்தில் மட்டக்களப்பில் அமைப்பாளராக சின்னாச்சி என்ற ஒரு தோழர் வேலை செய்தவர். அம்பாறை மாவட்டத்தில் கருணாநிதி என்ற தோழர் வேலை செய்தவர். அவர்கள் பெருசாக இல்லை. பிற்காலத்தில் இரண்டு பேரும் புலிகளுக்கு பொயிற்றாங்க.

அப்ப மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளராக என்னையும், அம்பாறைக்கு ஜீவா என்கிற அகஸ்டின் செபமாலையையும் நியமிக்கிறாங்க. இப்ப அவர் ஜேர்மனியில் இருக்கின்றார். எனக்கு உதவியாக வரதன் என்கிற ராகவன் தோழர் நியமிக்கப்படுகின்றார். அவர் இப்ப நாட்டிலதான் இருக்கிறார்.

தேசம்: மாலையர்கட்டு முடிய நீங்கள் செட்டிகுளம் போறீங்க. எவ்வளவு காலம் காந்தியத்துடன் உங்களுடைய செயற்பாடு இருந்தது?

அசோக்: காந்தியத்தில ஒரு வருஷத்துக்குள்ள தான் இருந்தது.

தேசம்: ஒரு வருஷம் என்றால் 79 ஆம் ஆண்டு மட்டில…

அசோக்: அப்படித்தான். 80 க்கு பிறகுதான் நான் புளொட்டின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஆகினது. 80 நடுப்பகுதியில் புளொட்டில் சேர்ந்திருப்பேன். ஏனென்றால் புளொட்டின் உருவாக்கம் நடந்தது 79 ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் தான். தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் என்ற பெயருடன், அப்போதுதான் உருவாகினது.

தேசம்: இந்தக் காலகட்டத்தில் கூடுதலாக மலையகத் தமிழர்களுடன் வேலை செய்வதற்கான வாய்ப்பு இருந்ததா உங்களுக்கு?

அசோக்: நிறைய இருந்தது. மாலையர்கட்டில, செட்டிகுளத்தில எல்லாம் மலையக மக்கள் தானே…

தேசம்: மலையக தமிழர்களுக்கும், தமிழ் சமூகத்திற்குமான உறவுகள் எப்படி பார்க்கப்பட்டது அந்த காலத்தில்?

அசோக்: எல்லைக் கிராமங்கள் தானே. எல்லைக் கிராமங்கள் என்று சொன்னால் கொஞ்சம் தள்ளித்தான் தமிழ்க் கிராமங்கள் இருக்கும். மலையக தமிழ் மக்களுக்கும் அந்தப்பகுதி தமிழ் மக்களுக்கும் உடனே பெரிய தொடர்புகள் இருக்கேல. காலப்போக்கில் உறவு ஒத்துழைப்பு என்று இருந்தது. ஐந்து ஆறு மைல் தள்ளித்தான் சிங்களக் கிராமங்கள் இருக்கும். பல்வேறு விமர்சனங்கள் அந்த காலத்துல வந்தது. எல்லை கிராமங்கள்ல மலையக மக்களை நாங்கள் பலிகடா ஆக்குறம் என்று.

தேசம்: அந்த நேரமே இந்த விமர்சனங்கள் இருந்ததா?

அசோக்: சில இடங்களில் இருந்து வந்தது. விமர்சனங்கள் எப்பவும் இருக்கும் தானே. அதை நாங்கள் உதாசீனப்படுத்திட்டம். ஏனென்றால் அது தமிழ்அரசுக் கட்சியை சேர்ந்த சில பேரால் வைக்கப்பட்டது. அந்தக் காணிகள் தமிழ்ப் பிரதேசத்துக்குரிய காணிகள்தான். எல்லை பிரதேசமாக இருந்தாலும், சிங்கள கிராமங்கள் பக்கத்தில் இல்லை. தமிழ் எல்லை பிரதேசங்களில் ஏனைய தமிழ் கிராமங்களும் இருந்தது. பல்வேறு கிராமங்களுக்கு இடையில்தான் இந்த குடியேற்றங்கள் உருவானது. நெருக்கமான கிராமங்களாக இருக்கவில்லை. ஒரு மைல் அப்படி இடைவெளிகள் இருக்கும். கல்லாறுப் பண்ணையில் வந்து பக்கத்தில் பல்வேறு கிராமங்கள் இருக்கு. கிளிநொச்சி, முல்லைத்தீவு மட்டக்களப்பில் அப்படித்தான் தமிழ்க் கிராமங்களை அண்மித்துத்தான் குடியேற்றங்கள் செய்யப்பட்டது.

தேசம்: மலையக மக்களுக்கும், தமிழ்மக்களுக்கும் இரு சமூகங்களுக்கும் இடையிலான உறவு, குடியேற்றம் செய்யப்பட்ட இடங்களில் எப்படி இருந்திருக்கும் அந்த நேரம். வரவேற்கிற தன்மை இருந்ததா?

அசோக் : முரண்பாடு இருக்கேல. அந்த பிரதேச மக்கள் நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கிறார்கள். நாங்கள் அந்த வேலைத் திட்டம் செய்யேக்குள்ள பக்கத்து கிராமப்புற மக்கள் எல்லாம் வந்து ஹெல்ப் பண்ணுவாங்க. செட்டிகுளம் கல்லாறு பண்ணைக்குள்ள நிறைய செட்டிகுளம் பையன்கள் எல்லாம் வந்து ஹெல்ப் பண்ணி இருக்கிறார்கள். முரண்பாடு இருக்கேல, ஆரம்பத்தில் நெருக்கம் இருக்கல்ல. சமூக உறவுகள் காலப்போக்கில்தானே உருவாகும். ஆனா நாங்க கிராமக் குழுக்களை அமைத்திருந்தோம். இக்குழுவில மலையக இளைஞர்களும், அந்தப் பிரதேச இளைஞர்களும் அங்கம் வகிச்சாங்க. அது காலப்போக்கில் தானே ஏற்படும்.

தேசம்: வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இந்த மலையக மக்களுக்கு எதிரான, வேற பெயர் சொல்லிக் கூப்பிடுற தன்மைகள் இருந்தது. வடக்கத்தையான், தோட்டக்காட்டான், கள்ளத்தோணி இப்படியான விஷயங்கள் எல்லாம் இருந்தன. இப்படியான எதிர்மறையான கருத்து நிலைகள் மற்ற பகுதிகளில் இருந்ததா?

அசோக்: நிச்சயமாக இல்லை. இருந்திருந்தால் குடியேற்றங்கள் செய்திருக்கேலாது. யாழ்ப்பாண சமூகத்தின் ஒருசாரர்களின் மலையக மக்கள் மீதான வெறுப்புணர்வுக்கு இவ்வாறான கண்ணோட்டத்திற்கு பல்வேறு அரசியல் பொருளாதார பின்புல காரணிகள் இருக்கு. அங்கு கிழக்கு மாகாணத்தில அந்த காரணிகள் இல்லை. ஏன் இங்க வருது என்று கேட்டால், பொருளாதார ரீதியாக ஆசிரியர் வேலைவாய்ப்புக்கள் ஏனைய தொழில் என்று அங்க போய்… எப்ப முரண்பாடு வரும் என்று கேட்டால், அந்த பிரதேசத்துக்கும் எங்களுக்கும் சமூக பொருளாதார அரசியல் உறவெண்டு வரும்போதுதான். அந்த உறவை சமத்துவமாக சமநிலையாக நேச உறவாக நாங்க பேணமுடியாம, அதிகார சாதிய வர்க்க பிரதேச கண்ணோட்டத்தோடு அணுக வெளிக்கிடக்குள்ள முரண்பாடுகள் வரும் . இந்த அதிகாரத்தனம், ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட, புறக்கணிப்புக்கு உள்ளாப்பட்ட மக்களிடமிருந்து எங்களை அந்நியப்படுத்திவிடும்.

அங்க கிழக்கு மாகாண மக்களுக்கும், மலையக மக்களுக்கும், யாழ்ப்பாண சமூகத்தைப்போன்று, மலையகத்தில் பெரிய உறவுகளும் தொடர்புகளும் நெருக்கங்களும் இருந்ததில்லை. அப்ப முரண்பாடுகள் சிக்கல்கள் உருவாக சாத்தியம் இல்ல. அப்ப அந்த முரண்பாட்டுக்கான தளம் இல்லாமல் போய்விடுகின்றது. மலையக மக்களை குடியேற்றும் போது அந்த பிரதேச மக்கள் சொந்த மக்களாகதான் பார்த்தாங்க… உடனடியாக ஒரு சமூக உறவு வராதேயொழிய, முரண்பாடுகள் வராதுதானே.

கிளிநொச்சியிலயோ முல்லைத்தீவிலயோ மட்டக்களப்பிலயோ குடியேற்றம் செய்த இடங்களில் முரண்பாடு இல்லை.

தேசம்: வட மாகாணத்துக்கு உள்ள நடந்த குடியேற்றங்களில் பெரிய சிக்கல்கள் இருக்கவில்லை…

அசோக்: யாழ்ப்பாணத்தில் குடியேற்றங்கள் நடக்கேல தானே.

தேசம்: எல்லைக் கிராமங்களில் நடந்த குடியேற்றத்திட்டங்கள் தொடர்பான அந்த விமர்சனத்தில் ஒரு உண்மையான நிலையும் இருக்கும் தானே. ஏற்கனவே சிங்கள சமூகத்தால பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை, நாங்கள் எல்லை கிராமத்தில் கொண்டு வந்து குடியேற்றும் போது திருப்பியும் அவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்ற குற்றச்சாட்டு நியாயமானதுதானே…

அசோக்: எங்கட உரையாடல் பிரயோகத்தில் எல்லைக் கிராமம் என்ற வார்த்தையை பயன்படுத்துறதால அந்தக் கேள்வி உங்களுக்கு வந்தது என நினைக்கிறன். கிராமங்களிடையேதான் முன்ன நான் சொன்ன மாதிரி நாங்க குடியேற்றம் செய்தனாங்க. என்டாலும் இதுபற்றி ஆராயவேண்டும்.

எல்லைக் கிராமங்களில் தான் திட்டமிட்டு நடந்தது என்று இல்லை. எதிர் விமர்சனங்கள் எப்படி வைக்கப்பட்டது என்றால், நாங்கள் ஒரு பாதுகாப்பு அரணாக மலையக மக்களை பயன்படுத்துகிறோம் என்று. தவிர்க்க முடியாம சில எல்லைக் கிராமங்களில் குடியேற்ற வேண்டிவந்தது. ஏனென்றால் அங்குதான் காணிகள் இருந்தது. எல்லை கிராமங்களில் அது அமைந்தவுடன் இந்த விமர்சனம் முன்வைத்தவர்களுக்கு அது சாதகமாக அமைந்துவிட்டது. தமிழரசுக் கட்சிக்கும் இது…

தேசம்: தமிழரசுக் கட்சி அந்த விமர்சனம் வைத்ததா?

அசோக்: ஆம் சில பேர்களுக்கு இருந்தது.

 

 

‘யார் இவர்’

யார் இவர்:
இப்படிவத்தை நிரப்புவதற்கு முன் இதனைக் கவனமாக வாசித்து இதிலுள்ள வழிகாட்டலுக்கு அமைய நிரப்பவும். இதனை நிரப்புவதற்கு 30 முதல் 60 நிமிடங்கள் தேவைப்படும். சிவப்பு புள்ளியிடப்பட்ட பகுதிகள் கட்டாயமாக நிரப்பப்பட வேண்டும். அவை நிரப்பப்படாவிட்டால் நீங்கள் படிவத்தை சமர்ப்பிக்க முடியாது.

‘யார் இவர்’ அறிமுகம்: இலங்கைத் தமிழ் சமூக ஆளுமைகள் பற்றிய விபரத் திரட்டு. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டு இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் வாழ்கின்ற; தமிழ் சமூகத்திற்குள்ளும் அதற்கு அப்பாலும் சமூக முன்னேற்றத்திற்காக உழைத்தவர்களை, உழைக்கின்றவர்களை ஆவணப்படுத்தும் ஒரு முயற்சி. தேசம் வெளியீட்டகம் மேற்கொள்ளும் இந்த விபரத்திரட்டு காலத்திற்குக் காலம் புதுப்பிக்கப்பட்டு தொகுத்து வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

நோக்கம்: எமது ஆளுமைகளை ஆவணப்படுத்துவதும் அடுத்த தலைமுறையினருக்கு எமது ஆளுமைகளை பற்றிய குறிப்புகளைக் கையளிப்பதுமே ‘யார் இவர்’ வெளியீட்டின் நோக்கம். மேலும் துறைசார்ந்த ஆளுமைகளிடையே ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்தவும் தமிழ் சமூகத்தின் வாழ்நிலையை மேம்படுத்த நினைப்பவர்களிடையே ஒரு வலைப்பின்னளை ஏற்படுத்தி செயற்திறனை அதிகரிப்பதும் இதன் நோக்கமாக உள்ளது.

‘யார் இவர்’ குழு: நூலகவியலாளர் என் செல்வராஜா; ஊடகவியலாளர் த ஜெயபாலன்; ஆவணப் பதிவாளர் சி ஹம்சகௌரி; சமூக செயற்பாட்டாளர் க அரிமர்த்தனா.

தகவல் பாதுகாப்பு: நீங்கள் வழங்குகின்ற தகவல்களை ‘தேசம் பதிப்பகம்’ மட்டுமே கையாளும். வேறு எந்த நோக்கங்களுக்கும் பயன்படுத்தப்படமாட்டாது. இதில் தங்களுடைய தொலைபேசி இலக்கங்கள் நீங்கள் வாழும் நாடுகளின் சர்வதேச தொடர்புக்கான இலக்கத்துடன் பதிவு செய்யப்பட வேண்டும். நீங்கள் விரும்பாத பட்சத்தில் உங்களுடைய தொலைபேசி இலக்கங்கள், மின் அஞ்சல் மற்றும் முகவரிகள் எதுவும் வெளியிடப்படமாட்டாது. ஆனால் தேசம் வெளியீட்டகம் தொடர்புகளை மேற்கொள்ள நீங்கள் மேற்கொண்ட விபரங்களை இங்கு பதிவு செய்ய வேண்டும்.

கவனிக்க: பதிவுகளை கேட்கப்பட்ட கேள்விக்கு அமைய சரியாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். சில பகுதிகளை in English / தமிழில் என்று குறிப்பாகக் கேட்டுள்ளோம். தயவு செய்து கேட்கப்பட்ட மொழியில் பதிவை மேற்கொள்ளவும். இப்படிவத்தை சமர்ப்பிற்கு முன் மீளவும் தகவலைச் சரிபார்த்து சமர்ப்பிக்கவும்.

கால ஒழுங்கு: கல்வி, தொழில், வெளியீடுகள், விருதுகள் அனைத்தும் கால ஒழுங்கில் முன்னையவை முதலிலும் பின்னையவை இறுதியிலும் வரவேண்டும். வழங்கப்பட்ட உதாரணங்களைப் பின்பற்றி உங்கள் பதிவை ஒழுங்குமுறையில் பதிவிடவும். மேலும் காற்புள்ளி , அரைப்புள்ளி ; மற்றும் முற்றுப்புள்ளி . என்பவற்றை உதாரணத்திற்கு அமைய பயன்படுத்தவும்.

‘யார் இவர்’ ஆவணப்படுத்தல் சர்வதேச ஆவணப்பதிவு விதிமுறைக்கு அமையவே மேற்கொள்ளப்படுவதால் தயவு செய்து பதிவுகளை வழங்கப்பட்ட உதாரணங்களைப் பின்பற்றி அதற்கு அமைய மேற்கொள்ளவும். ஆங்கிலத்தில் பதிவிடும் போது சின்ன எழுத்தையே (small letters) பிரதானமாகப் பயன்படுத்தவும். முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தில் (Capital Letters) அமையலாம்.

மேலுள்ள பதிவிடும் முறையயைப் பின்பற்றுவதன் மூலம் எமக்கு ஏற்படும் வேலைப்பழுவை நீங்கள் குறைக்க முடியும். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.

இறுதியாக, இப்படிவத்தை பூர்த்தி செய்து அதனைச் சமர்ப்பித்த பின்; உங்கள் புகைப்படம் ஒன்றை, உங்கள் முழுப்பெயருடன் whoiswhotamil@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.

த ஜெயபாலன் (தேசம்)
‘யார் இவர்’ வெளியீட்டுக் குழு
whoiswhotamil@gmail.com

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeN0GSPSE8FyXiZ03VUzqAMQ5eNTIdkScXdX15q8LjGqojlUw/viewform

குறிப்பு: இப்படிவத்தை நிரப்புவதற்கு முன் கவனமாக வாசித்து இதிலுள்ள வழிகாட்டலுக்கு அமைய நிரப்பவும். இதனை நிரப்புவதற்கு 30 முதல் 60 நிமிடங்கள் தேவைப்படும். சிவப்பு புள்ளியிடப்பட்ட பகுதிகள் கட்டாயமாக நிரப்பப்பட வேண்டும். அவை நிரப்பப்படாவிட்டால் நீங்கள் படிவத்தை சமர்ப்பிக்க முடியாது.

அரசியல் பக்கம்: ஜேவிபி உடன் இணைவும் முறிவும்: பாகம் 3

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 03 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 3

தேசம்: இளந்தளிர் வாசகர் வட்டம் தொடர்பில் கதைத்திருந்தோம். அந்த நேரம் உங்களுக்கு கிட்டத்தட்ட 15 வயது வந்திருக்கும். அந்த காலகட்டத்தில் உங்களுடைய தந்தையார் இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அப்போது எத்தனை வயது உங்களுக்கு?

அசோக்: அப்பா இறக்கும் போது, எனக்கு பத்து வயது இருக்கும் என்று நினைக்கிறன்.

தேசம்: அது ஞாபகம் இருக்கா உங்களுக்கு…

அசோக்: பெரிதாக ஞாபகம் இல்ல. கொஞ்சம் ஞாபகம் இருக்குது. அப்பாக்கு தொடர்ந்து அஸ்மா தான். மட்டக்களப்பில் செல்லையா டாக்டர் என்று ஒருத்தர் இருந்தார். டிசம்பர் மாத காலத்தில், அப்பா எங்கட வீட்டில் இருக்கிறேல. Paying ward என்டு காசுக்கட்டி, செல்லையா டாக்டரிட வார்டில அப்பா அட்மிட் ஆகிடுவார். அந்தக் காலம் அங்கதான் அப்பா இருப்பார். ஏனென்றால் மார்கழி மாதக்குளிரில் அப்பாவுக்கு வருத்தும் கூட.

தேசம்: அந்த காலகட்டத்தில அப்பா ஓய்வு பெற்றுவிட்டாரா?

அசோக்: ஆம். அப்பா ஓய்வு பெற்றிட்டார். செல்லையா டாக்டரிட வாட்டிலதான் அப்பா இறந்தார். அம்மாவின் மடியில்தான் அப்பா இறந்தாக, அம்மா சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். நான் கடைசி ஆள் என்றபடியால், நான்தான் கிரியை செய்ய வேண்டும். அப்ப மொட்டையடித்து கொள்ளி வைத்தது அதெல்லாம் ஞாபகம் இருக்கு.

தேசம்: அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையிலான உறவு நிலையை எப்படிப் பார்க்கின்றீர்கள்? அவர்கள் விரும்பித் தான் செய்தவை. அவர்களுக்குள் சமத்துவம் இருந்ததா?

அசோக் : அப்ப தெரியல. ஆனால் இப்ப பார்க்கேக்கை, அப்பாட்ட ஒரு அதிகாரத்தனம் இருந்தது. தலைமை ஆசிரியரும் தானே அப்பா. அரசியல் ரீதியாக அப்பா ஒரு தமிழ்த் தேசியவாதியாகவும், பெரியாரிஸ்டாக இருந்தாலும், கூட வீட்டில ஒரு சட்டம்பியாகத்தான் இருந்தார். எனக்கு தெரிய படங்கள் எல்லாம் அவர் சொல்ற படங்கள் தான் அக்காக்கள் பார்க்க வேண்டும்.

தேசம்: பெண்களை பாதுகாக்கிற ஒரு எண்ணம்…

அசோக்: ஓம், சிவாஜி படங்கள் தான் பார்க்க வேண்டும். வேறு யாருடைய படங்களையும் பார்க்க கூடாது.

தேசம்: தன்னுடைய விருப்பங்கள் சார்ந்து செய்றார்.

அசோக் : சத்தியாகிரக போராட்டத்தில் அம்மா திருகோணமலைக்கு ஊர்வலமாக போனார் என்பது எங்களுக்கு முற்போக்காக பட்டாலும் கூட அது, அப்பாவினுடைய அபிலாஷையாகத்தான் இருக்க முடியும் என்று நான் நினைக்கிறன். அம்மா விரும்பி இருக்கலாம். ஆனால், அம்மாவுக்கு பெரிய ஒரு சுதந்திர வெளி இருந்ததாக தெரியவில்லை. ஆனால், அதற்காக அடக்குமுறை அடிப்பது அதுகள் இல்லை. ஆனா ஒரு ஆணாதிக்க தனம்தான் அப்பாவிடம் இருந்தது. அதிகார சட்டம்பித்தனந்தான் குடும்பத்தில் இருந்தது.

தேசம்: பெரும்பாலான முற்போக்கு பேசுபவர்களின் குடும்பங்களிலும் அதுதானே இன்றும் நிலைமை. அது அம்மாவை பாதிக்கும் விதமாக இருக்கவில்லை…

அசோக்: அப்படி இருக்கவில்லை. இதைவிட பெரிய பிரச்சினை கொடுக்கக்கூடிய ஆளாக நான் தான் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். என்னொரு விடயம் என்னென்றால், எங்கள் வீட்டில் அண்ணாக்கள் எல்லாருடையதும் காதல் திருமணம். அண்ணிமாரைத் திருமணம் செய்து அவங்கள்தான் அனைத்து பொறுப்பையும் பார்க்குற ஆட்களா இருந்தார்கள். அந்நேரம் அப்பா எதிர்ப்பு காட்டினாலும் கூட, காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஆளாக மாறிட்டார்.

தேசம்: திருமணத்தை தடுத்து நிறுத்தக்கூடிய அளவுக்கு எல்லாம் போகேலை

அசோக்: இல்லை

தேசம்: அப்பா இல்லாத காலத்தில் அந்தக் கால சமூகத்தில் ஆண் இல்லாமல் குடும்பத்தை கொண்டு நடத்துவது அல்லது முன்னுக்கு கொண்டுவருவது என்பது மிக கஷ்டமாக இருந்திருக்கும். நீங்கள் ஏழு வயதாக இருக்கும் போதே அப்பா இறந்துட்டார். அதற்குப் பிறகான உங்களை வளர்த்தெடுப்பதில் அம்மாவின் உடைய பங்கு எப்படி?

அசோக்: 7 வயதில்லை. எனக்கு அப்போது 10 வயது இருக்கும். அப்பா இறக்கும் போது அண்ணாக்கள் ஓரளவு வளர்ந்துட்டாங்க . ஆனா யாருக்கும் உத்தியோகம் இல்லை. அப்பாவினுடைய பென்ஷன் இருந்தது. காணிகள் வருமானங்கள் இருந்தது. அப்பா இறந்ததற்கு பிறகு என்ன நடந்தது என்றால் அப்பா அரசியல் நடவடிக்கைகள் சார்ந்து நிறைய கடன் பட்டிருந்தார். அப்பா நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார்.
எங்களுக்கு காணி, பூமி நிறைய இருந்ததால் அதை வைத்துதான் காலப்போக்கில் கடன்கள் எல்லாம் அடைத்தோம்.

78 ல் மட்டக்களப்பில் சூறாவளி வரும் வரைக்கும் தென்னந்தோப்பால் பெரிய வருமானம் இருந்தது. பொருளாதார ரீதியாக பெரிய பிரச்சனை இருக்கவில்லை. அம்மாவுக்கு நான் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற விருப்பம் நிறைய இருந்தது. 5ம் வகுப்பு கொலர்சிப்பில் பாஸ் பண்ணும் அளவுக்கு திறமை இருந்தது. ஆரம்ப இளம்வயதில் விளையாட்டுத்தனம் இருந்தாலும் இடைக்காலத்தில் நல்ல மாணவனாக நான் இருந்தேன். கிருஸ்ணபிள்ளை சேர், இவர் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்தவர். என்னில் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். இப்படித்தான் அம்மாவும்.

என் சிந்தனைகளும், போக்கும் அவங்களுக்கு நிறைய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என இப்ப நினைக்கிறன்.

தேசம் : அந்த நேரம் அப்பா தமிழரசுக்கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்திருக்கின்றார். அந்த காலகட்டத்தில் அப்பாவின் இழப்பு தமிழரசுக்கட்சி க்கு எப்படி இருந்தது?

அசோக்: தமிழரசுக் கட்சிக்கு அப்பாவினுடைய இழப்பு பெரிய ஒரு இழப்பாக இருக்கவில்லை. ஏனென்றால் அதை ஈடு செய்வதற்கு அவர்கள் இன்னொருவரை தேர்ந்தெடுத்து இருப்பார்கள்.

தேசம் : அவருக்கான கௌரவத்தை கொடுத்ததாக இல்லை?

அசோக் : இல்லை அப்பா தமிழரசுக்கட்சியை நேசித்தாரேயொழிய, தமிழரசுக்கட்சி அப்பாவை பயன்படுத்தியது. அது எனக்கு காலப்போக்கில் தெரியவந்தது. எனக்னொரு அத்தான் இருந்தார். இரா. பத்மநாதன் என்று பேர். சுதந்திரன் பத்திரிகையில் எஸ் .டி. சிவநாயகம் ஆசிரியராக இருந்த காலத்தில் அத்தான் அதன் துணை ஆசிரியராக இருந்தார். மட்டக்களப்பு எம்பியாக இருந்த இராஜ துரையின் வகுப்புத் தோழன். மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக உழைத்தவர். அத்தான், அப்பா போன்றவர்கள் பயன்படுத்தப்பட்டார்களே தவிர, எந்த கௌரவமும் அவர்களுக்கு கிடைக்கல்ல.

தேசம் : அதை எப்படி பார்க்குறீர்கள்? ஏன் அந்த உணர்வு உங்களுக்கு வருகிறது? நீங்கள் எந்த காலத்திலும் தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து வேலை செய்யவில்லை?

அசோக் : இல்லை. அண்ணாக்கள் தமிழரசுக் கட்சியுடன் மிகத் தீவிரமாக இருந்தவர்கள். ஒரு அண்ணன் இருக்கிறார் அவர் இப்போதும் தீவிரமான தமிழரசுக் கட்சிதான். எங்க குடும்பம் தமிழரசுக் கட்சி குடும்பமாக தான் எப்பவும் இருக்கிறது. எனக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவங்களின்ர காலத்தில் இருந்த அரசியல் நோக்கமும், போராட்ட உணர்வும் தமிழரசுக் கட்சியிடம் இல்லாமல் போய் விட்டது. அவர் உண்மையாகவே தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும், மலையக மக்களுக்குமான தீர்வை விரும்பினார். முதன் முதலில் முஸ்லிம் மக்களுக்காக தனிஅலகுக் கோரிக்கையை முன்வைத்தவர் அவர்தானே. முஸ்லிம் தமிழ் உறவை வளர்த்தவர். ஆனா, என்ன செய்வது வேறு தேர்வுகள் இல்லை. தமிழ் அரசுக் கட்சிதான் இருக்கிற திருடர்களில் நல்ல திருடனாக இருக்கிறது.

தேசம்: இந்த இளந்தளிர் வாசகர் வட்டம் தான் உங்களுடைய அரசியலின் அரும்பு நிலை என்று நினைக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் எப்படியான அரசியலை நீங்கள் தேர்வு செய்கின்றீகள்?

அசோக்: இளந்தளிர் வாசகர் வட்டத்துக்குள் இருக்கும்போது அப்ப 71 ஆம் ஆண்டு ஜனதா விமுக்திப் பெரமுன ஜே.வி.பி யின் ஆயுதப் புரட்சி நடக்குது.

தேசம்: அது தொடர்பாக உங்களுக்கு ஏதும் ஞாபகம் இருக்கின்றதா?

அசோக்: அது ஞாபகம் இருக்குது. அம்பாறையில் சென்றல் கேம் என்ற இடத்தில் ஒரு சிறைச்சாலை உருவாக்கி அங்கு அட்களை கொண்டு போனார்கள். அது மட்டக்களப்பிலிருந்து எங்கட ரோட்டாலதான் போனது. அப்பா சின்ன வயசுல நாங்க ….. கொண்டு போறாங்க என்று ஆட்கள் போய் பார்த்தவங்க. அந்த ஞாபகம் இருக்கு.

தேசம்: ஜே.வி.பி தொடர்பான பிரமிப்பு ஒன்று அந்த நேரம் இருந்திருக்கு…

அசோக் : அதுக்குப் பிறகு என்ன நடந்தது என்றால். 1977 ம் ஆண்டு இது நடக்குது. ஆறு வருஷத்தால ஜே.வி.பி வெகுஜன இயக்கமாக. ஜனநாயக முறைக்குத் திரும்புவதாக அறிவித்து அவங்கள் தங்களை பிரகடனப்படுத்துறாங்கள்.

78ஆம் ஆண்டு அவங்களுடைய கொள்கைப் பிரகடனம் தமிழில் வருது. இந்தப் பிரகடனத்தை படிக்கிறம் நாங்கள். ரஷ்யப் புத்தகங்களைப் படித்தது. கியுபா புரட்சி, வியட்நாம் போராட்டம் சேகுவேரா, பெடல் கஸ்ரோ, மார்க்சீய சித்தாந்தம் தொடர்பில் எங்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்ததுதானே. அந்தக் கொள்கை பிரகடனம் எங்களை கவர்ந்தது.

இலங்கையில் ஒரு வர்க்கப் போராட்டத்தை கொண்டு வரலாம் ஒரு முழுமையான புரட்சி என்ற சிந்தனை எங்களுக்கு இருந்தது.

தேசம்: கிட்டத்தட்ட 77 ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே உங்கட பார்வை ஒரு இடதுசாரி பார்வையாக வந்திட்டுது.

அசோக்: ஆம் ஏனென்றால் மாக்சிச புத்தகங்கள், ரஷ்யா நாவல்கள்: தாய், வீரம் விளைந்தது எல்லாம் படிக்கத் தொடங்கிவிட்டோம். லைபிறரில இந்த புத்தகங்கள் எல்லாம் வாரது தானே. அதால ஓரளவு இடதுசாரி அரசியல் எங்களுக்குள் உருவாகிவிட்டது. அதால தான் நாங்கள் அந்த கொள்கை பிரகடனத்தை படித்தவுடனேயே அதிலும் இலங்கையில் வர்க்கப் போராட்டம், தொழிலாளர் புரட்சி என பல்வேறு விடயங்கள் கதைக்க பட்டிருந்தது.

அப்ப நான் என்ன செய்தேன் என்றால் அந்த புத்தகத்தைப் படித்துவிட்டு, லயனல் பொபேகேவுக்கு கடிதம் எழுதுறன். அதுல ஒரு அட்ரஸ் போட்டிருந்தது. உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகின்றோம் என அனுப்பிட்டன். அனுப்பி ஒரு பதினைந்து இருபது நாள் போக அந்த கடிதத்தோடு தோழர் முபாரக் என்றவர் வீட்டில் வந்து என்னை சந்திக்க வாரார். நீங்கள் தோழருக்கு கடிதம் எழுதி இருந்தீங்க. உங்களோட கதைக்க வந்துள்ளேன் என்றார். அப்பதான் ஜனதா விமுக்திப் பெரமுனவுக்கும் எனக்கும் தொடர்பு ஏற்படுகிறது. பிறகு நாங்கள் தோழருடன் எல்லா நண்பர்களும் சந்தித்து வகுப்பெடுத்து…

தேசம்: நீங்கள் சொல்வது தனிப்பட்ட முறையிலா அல்லது இளந்தளிர் வாசகர் வட்டமாகவா?

அசோக்: இளந்தளிர் வாசகர் வட்டம்தான். நாங்கள் அவங்களுடைய கொள்கைப் பிரகடன த்தை படித்துவிட்டு தொடர்பு கொள்ளலாம் என்று முடிவெடுத்த பின்பு நான்தான் அந்த கடிதத்தை எழுதுறன். அவர் வந்து எங்களை சந்தித்த பிறகு கேள்விகள் கேட்கிறம். அந்தக் கேள்விக்கு எல்லாம் அவர் பதில் அளித்த பிறகு எங்களுக்கு சேர்ந்து வேலை செய்யலாம் என்று நம்பிக்கை வருது. எங்களுடைய முதல் வேலை போஸ்டர் ஒட்டுறது. துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது.

தேசம்: நீங்கள் சொல்லுகின்ற இதே காலகட்டத்தில் நீங்கள் ஜேவிபி சார்பாக போறீங்க அதே நேரம் உங்கட குடும்பம் வந்து தமிழரசு கட்சியுடன் தமிழ்தேசியத்தோட ஐக்கியமாகி இருக்கு. இதே காலகட்டத்தில் தான் வடக்கில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பாக நீங்கள் அந்த காலத்தில் ஏதும் அறிந்திருந்தீர்களா?

அசோக்: அப்பா சுதந்திரன் பத்திரிகை தொடர்ச்சியாக எடுக்கிறவர். அப்பா இறந்த பின்பும் சுதந்திரன் பத்திரிகை வீட்டுக்கு வாரது. அதற்கூடாக நாங்கள் அறிந்திருக்கிறோம்.

தேசம்: அறிந்திருந்தும் தான் நீங்கள் அங்கு செல்கிறீர்கள்?

அசோக்: ஓம். எனக்கு தமிழரசு கட்சியின் மீதான வெறுப்பு நிலை இருக்குதானே. இப்போ நினைத்துப் பாத்தா தமிழரசுக் கட்சி மீதான வெறுப்பு நிலையை விட அது கட்சி சார்ந்த எம் பிக்களின் போக்குகள் நடத்தைகள் காரணமாக வந்திருக்கும் எண்ணுகிறன்.

தேசம்: நீங்கள் ஒரு தமிழ் தேசிய அரசியல் குடும்பத்தில் இருந்து கொண்டு இடதுசாரி அரசியலை எடுக்கிறீர்கள். அதேநேரம் இடதுசாரி அரசியலை படிச்சுப்போட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பா தமிழ்த்தேசிய அரசியலுக்க போனவர்கள் இருக்கிறார்கள் தானே. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

அசோக்: அவர்கள் உண்மையான இடதுசாரி கருத்துக் கொண்டவர்களாக இருந்திருக்கெலாது. இருந்திருந்தால் புலி அரசியலுக்குள் போய் இருக்க முடியாது. இயக்கங்களை தேர்ந்தெடுத்து அங்கு போனதற்கு ஒவ்வொருவருக்கும் அரசியல் காரணங்கள் இருக்கு. அவங்ளின்ர அரசியல் வர்க்க நிலையும் இத தீர்மானிக்கும்தானே.

தேசம்: உங்களுக்கு ஜேவிபியோட இருக்கிற அரசியல் உறவிலிருந்து எப்படி நீங்கள் விடுபட்டீர்கள் பிறகு?

அசோக் : ஜே.வி.பியோட நாங்கள் தீவிரமாக வேலை செய்திருக்கிறோம். பாசறைக்கெல்லாம் போய் இருக்கின்றோம். படுவான்கரையில் ஒரு கிராமத்துல வீடெடுத்தனாங்கள். நாங்க ஒரு பதினைந்து இருபது தோழர்கள் போய் அங்கேயே தங்கி ஒரு வாரம் நின்று வகுப்பெடுத்து மிகத் தீவிரமாக இருந்தனாங்கள்.
அந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு முபாரக், உதுமாலெப்பை என்ற ஒரு தோழர் அவர் வந்து கொழும்பு மாவட்டத்தில் ஜேவிபினுடைய மாவட்ட சபை உறுப்பினராக இருந்தவர் என்று நினைக்கிறன். வகுப்பெடுத்தார்கள். முஸ்லிம் தோழர்கள் நிறைய பேர் ஜே.வி.பியில இருந்ததாங்க… அதுதான் மிகவும் ஆச்சரியமான விடயம். எங்களுக்கு வகுப்பெடுத்த 3 – 4 தோழர்கள் முஸ்லிம்கள். ஒரு தமிழ் தெரிந்த சிங்களத் தோழர். சிங்கள தோழர்கள் எடுக்கிறதை இவர்கள் மொழிபெயர்ப்பார்கள்.

தேசம்: மட்டக்களப்பில் தமிழ், சிங்களம், முஸ்லிம் சமூகமும் இருந்தபடியால் தான் ஜே.வி.பியினுடைய ஆதிக்கம் அங்கு வருதா? வடக்கில் நான் நினைக்கல இப்படியொரு ஆதிக்கம் இருந்தது என்று.

அசோக்: வடக்கில் இடதுசாரி கட்சிகள், இயக்கங்கள் இருந்தபடியால் அந்த இடத்தை ஜே.வி.பியால் நிரப்ப முடியவில்லை.

எங்களுக்குள்ள இடதுசாரித் தாக்கம் ஒன்று இருந்தபடியால் எங்களுக்கான இடம் வந்து ஜே.வி.பியாத்தான் இருந்தது. யாழ்ப்பாணத்தில இருந்த கம்யூனிஸ்ட் பார்ட்டி வேற ஏதும் வந்திருந்தால் நாங்கள் அவர்களுடன் சேர்ந்து இருப்போம்.

இடதுசாரி இயக்கம் வந்து, வர்க்கப் போராட்டம் என்று வந்திருந்தால், நாங்கள் அதற்குத்தான் போயிருப்போம். ஆனால் கிடைத்தது ஜே.வி.பி தான். பிறகு என்ன நடந்தது என்றால் அனுராதபுரத்தில் இனக்கலவரம் நடந்தது. அதற்குப் பின்னால் ஜே.வி.பி முக்கிய பங்கு வகித்தது என்ற ஒரு கதை வந்தது. அந்த கதை தொடர்பான உரையாடல்தான் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு வந்தது. பிறகு நாங்கள் அவர்கள் ஒரு இனவாதக் கட்சி தான் என்ற முடிவுக்கு வாறம். அதுல இருந்து நாங்க ஒதுங்குறம்.

தேசம்: ஜேவிபியினுடைய நீங்கள் சொன்ன ஐந்து பாடத்திட்டத்தில் ஒன்று இந்திய எதிர்ப்பு என்று நினைக்கிறேன்

அசோக்: அது எங்களுக்கு எடுக்கப்படவில்லை இந்திய விஸ்தரிப்புவாதம் என்ற அந்த வகுப்பு எங்களுக்கு இல்லை.

தேசம்: தமிழ் மக்களுக்கு எதிரான அந்த பகுதியே எடுத்துட்டாங்க

அசோக்: எடுத்திட்டாங்கள். வகுப்பில வந்து வந்து சுயநிர்ணய உரிமை பற்றி. தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் சம உரிமை, சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம்… சோசலிசம் இப்படி அரசியல் வகுப்புக்கள் இருக்கும். அவர்கள் எங்களுக்கு எடுக்காமல் விட்ட இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற வகுப்பு, மலையக மக்களுக்கு எதிரான இனவாதம் கொண்டது என்பதை அவர்களை விட்டு வந்த பிறகு அறிந்து கொண்டோம். ஜே.வி.பி இடது சாரி போலிமுகம் கொண்ட மோசமான இனவாதக்கட்சி.

தேசம் : கிட்டத்தட்ட 77ஆம் ஆண்டு காலகட்டம் என்றால் நீங்கள் ஜி.சி.இ எடுக்கிற காலகட்டம் என்று நினைக்கிறன்.

அசோக்: ஆம். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. சனி ஞாயிறு தான் எங்கடை சந்திப்புகள் எல்லாம் நடக்கும். ஒரு பாடசாலை விடுமுறை காலத்தில் தான் நாங்க பாசறைக்கு போனோம்.

தேசம்: பாசறை எங்க நடந்தது என்று சொன்னீர்கள்?

அசோக்: அது படுவான்கரையில் விவசாய நெல் காணியில் ஒரு வீடு எடுத்து, அங்கேயே தங்கி சமைச்சு சாப்பிட்டு அங்குதான் வகுப்பு நடந்தது.

தேசம்: இப்ப இந்த ஜே.வி.பியின் பிரச்சனைக்குப் பிறகு உங்களுக்கு இடைவெளி ஒன்று வரப்போகுது…

அசோக்: நாங்கள் என்ன செய்த என்றால் வெளியேறிவிட்டு, இளந்தளிர் வாசகர் வட்டம் , விளையாட்டுகள் என்று திரியிறம். இக் காலங்களில தேசிய இளைஞர் சேவை மன்றத்தோடும் நாங்க இருக்கம். அப்ப மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகஸ்தராக செட்டிபாளையத்தைச் சேர்ந்த செல்வநாயகம் அண்ணர் பொறுப்பாக இருந்தார். அவர் எங்களுக்கு நிறைய உதவிகள் செய்தார். அவர்கள் நடாத்தும் விளையாட்டு முகாம், தலைமைத்துவ பயிற்சி நெறி, சிரமதானம் என்று இதிலையும் ஈடுபடுகின்றோம். இந்த டைமில தான் 77 கலவரம் முடிந்து 78 என்று நினைக்கிறேன் காந்திய வேலைத்திட்டங்கள் அங்க மட்டக்களப்பு பிரதேசங்களில தொடங்குது.

தேசம்: 77 கலவரம் என்ன மாதிரி உங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது? அதுல கொஞ்சம் நீங்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?

அசோக்: அதை ஒரு இனவாதமாகத்தான் நாங்கள் பார்த்தனாங்கள். அதுல வந்து ஜே.வி.பி பெரிய ஈடுபாடு கொண்டிருந்தது என்பது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இடதுசாரி இயக்கமே அதுல பின்னணியாக இருந்தது என்பது பெரிய தாக்கமாக ஏமாற்றமாக இருந்தது. அது தாக்கத்தை கொடுத்தபடியால்த்தான் நாங்கள் காந்தியத்தோட வேலை செய்யத் தொடங்கினாங்கள். மக்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களோடு வேலை செய்ய வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு இருந்தது.

தேசம்: அப்பவும் தமிழ்தேசியத்தோடு அதற்கு போவதற்கு நீங்கள் விரும்பவில்லை?

அசோக் : இனவாதம், தேசிய இனப்பிரச்சனை, புறக்கணிப்புக்கள், தமிழர் மேலான வன்முறைகள், உரிமை மறுப்பு, கொடுமைகள் தொடர்பாய் எங்களுக்கு பார்வைகள் எண்ணங்கள் இருந்தன. திட்டமிட்ட சிங்கள குடியேற்ற திட்டங்களான கல்லோயா, கந்தளாய் பற்றியெல்லாம் அப்ப அறிந்திருந்தோம். தனிநாட்டுக் கோரிக்கை தொடர்பாக எங்களுக்கு அந்த ஐடியா இருக்கவில்லை. காசி ஆனந்தனின் பேச்சுக்கள் உணர்ச்சியூட்டக்கூடிய பேச்சுக்கள் எல்லாம் எனக்கு அந்த நேரமே அலர்ஜியாகத்தான் இருந்தது. அமிர்தலிங்கம் மங்கையர்கரசியின் பேச்சுக்களெல்லாம்… எப்பவுமே நான் இந்தக் கூட்டங்களில் ஆர்வம் காட்டியதில்லை.

தேசம்: அது முக்கியம் ஏனென்றால் அந்தப் பதின்ம வயதில் பெரிய அரசியல் விழிப்புணர்வு ஒன்று இருந்திருக்காது. இருந்தும், அது ஒரு சலிப்புத் தாற, உண்மைக்குப் புறம்பான விடயமாகத் தான் நீங்கள் பார்க்கிறீர்கள்?

அசோக்: காசி ஆனந்தனின் பாட்டெல்லாம் இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை கொடுத்தது ஆனால் எனக்கு எவ்வித தாக்கத்தையும் கொடுக்கவில்லை. இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை இலங்கைத் தொழிலாளர்களின் வறுமைப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது தமிழரசுக் கட்சியால் முடியாது என்பது அந்த வயதில் இந்த எண்ணம் எங்களிடம் இருந்தது. எங்க கிராமத்தில் தமிழரசுக் கட்சிக்கு செல்வாக்கு இருந்தது. எங்கள் மத்தியில் அது பெரிய தாக்கத்தை கொடுத்ததாக தெரியவில்லை. எனக்கு தெரிய மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி எம்பி மார்களின் குடும்பம் ஊழல் கொண்டதாகவே இருந்தது.பணம் ஒன்றே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.

இலங்கைத் தமிழ் இடதுசாரி கட்சிகள் ஈடாட்டம்!

இலங்கைத் தமிழ் இடதுசாரி கட்சிகள் ஈடாட்டம்ிய வகையில் இடதுசாரிப் பாரம்பரியத்தோடு செயற்படுகின்ற ஒரே கட்சியான புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி மற்றும் இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழர்களால் பிரித்தானியாவில் அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் சொலிடாரிட்டி என்ற இரு கட்சிகளும் கொரோன காலத்து குழுவாத சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டுள்ளன. தனிநபர் குழுவாத முரண்பாட்டால் கட்சியின் உறுப்பினர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டார். அதற்கு முன்னரும் பின்னரும் இக்குழுவாத போக்கு காரணமாக கட்சியில் இருந்து சிலர் வெளியேறியும் உள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழ் சொலிடாரிட்டி அமைப்பும் இக்குழுவாத போக்கிற்குள் இழுத்துவிடப்பட்டு உள்ளது.

இவ்விரு கட்சிகளுமே சராசரி மக்களைப் பொறுத்தவரை முகவரியற்ற கட்சிகளாக இருந்த போதும் நுண் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட அமைப்புகள். அமைப்பு வடிவத்தில் இயங்குகின்ற போராட்டங்களை முன்னெடுக்கின்ற அமைப்புகள். புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி இலங்கை தமிழர்கள் மத்தியில் பல போராட்டங்களை நடத்திய வரலாற்றைக் கொண்டது. சில ஆண்டுகளுக்கு முன் கிந்துசிட்டி மயானப் போராட்டம் முக்கியமானது. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் ஒரு பலமான குரலாக இருந்து வருகின்றது. அதேபோல் பிரித்தானியாவில் தமிழ் சொலிடாரிட்டி அகதிகள் உரிமை, தொழிலாளர் உரிமை போன்றவற்றிற்காக பிரித்தானியாவில் உள்ள ஏனைய இடதுசாரி மற்றும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராடி வருகின்றது. இவ்வமைப்புகள் மீது பல விமர்சனங்கள் இருந்த போதும் அமைப்பு வடிவில் இயங்குகின்ற இடதுசாரி நிலைகொண்ட அமைப்புகள் இவையிரண்டுமே.

உங்களுக்கு தெரிந்த வலதுசாரிகளை அடையாளம் காட்டுங்கள் என்று சொன்னால் அந்தப் பட்டியல் மிக மிக நீண்டு செல்லும். ஆனால் உங்களுக்கு தெரிந்த இடதுசாரிகளை அடையாளம் காட்டுங்கள் என்று கேட்டுப் பாருங்கள். ஓரிரு பெயர்களை முன் வைத்ததுமே ‘அவரை இடதுசாரி என்று யார் சொன்னது? என்ற கேள்வி வெவ்வேறு திசைகளில் இருந்து வரும். ‘தோழர்’ என்று பெயருக்கு முன் போட்டால் இடதுசாரியா? ‘மார்க்ஸ், லெனின், கார்ள் மார்க்ஸ்’ படத்தை முகநூல் வட்ஸ் அப் ப்ரோபைலில் போட்டால் இடதுசாரியா? மார்க்ஸ் படம் போட்ட தேநீர் கப்பில் ரீ குடித்தால் இடதுசாரியா? இப்படி ஆளுக்கு ஒரு அடையாளத்தோடு நான் கொம்னிஸ்ட், நான் சோசலிஸ்ட், நான் லெப்டிஸ்ட் என்ற தோரணையோடு பலர் உலாவருகின்றனர்.

இலங்கையிலும் இலங்கைக்கு வெளியே வாழ்கின்ற இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியிலும் இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்டவர்கள் மிகச் சிறுபான்மையினராகவே உள்ளனர். வலது சாரிக் கருத்தியலுடன் ஒப்பிடுகையில் இடதுசாரிகள் முற்போக்கானவர்களாகவும் சக மனிதர்களை மதத்தவரை இனத்தவரை ஒடுக்கப்பட்ட சாதியினரை பெண்களை மதிப்பவர்களாக இருந்த போதிலும் பல்வேறு காரணங்களாலும் இக்கருத்தியல் பிரிவினரின் கருத்தியல் பிரதான அரசியல் சமூக நீரோட்டத்தில் இல்லை. அதற்கு தங்களை இடதுசாரிகளாக காட்டிக்கொள்ளும் பலரின் தனிமனித நேர்மையின்மையும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

இந்தப் பின்னணியிலேயே தனிப்பட்ட ஆண் – பெண் உறவை அடிப்படையாகக் கொண்டு அவர்களுடைய அரசியலையும் அவர்கள் சார்ந்த அரசியல் அமைப்புகளையும் மலினப்படுத்தும் போக்கு இக்கொரோனா காலத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு முதற் களப்பலியானவர் புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சியின் நன்கு அறியப்பட்ட உறுப்பினர் மு மயூரன். இவ்வாண்டு மார்ச் 21 கட்சியின் அரசியற் குழு வருமாறு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் மு மயூரன் பெண்களுடன் முறைகேடாக நடந்துகொண்டுள்ளார்; என்ற குற்றச்சாட்டுக்கள் கட்சிக்கு முன்வைக்கப்பட்டதாகவும் மு மயூரன் முன்வைத்த விளக்கங்கள் நம்பகத்தன்மையற்றவையாகவும் முன்னுக்குப் பின் முரணாணதாக இருப்பதாகவும்; கட்சி குற்றம்சாட்டி அவரை கட்சியின் வெகுசன அமைப்புகளிலும் வகித்த பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக இடை நிறுத்தி வைப்பதென அறிக்கை வெளியிட்டது.

ஆனால் இக்குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்ட பெண், மு மயூரனுக்கும் தனக்கும் இருந்த உறவை வஞ்சக எண்ணத்தோடு அரசியல் பழிவாங்கல்களுக்கு பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி இருந்தார். அவர் மு மயூரன் மீது சுமத்தப்பட்ட பழியை களைவதற்காக தனது முகநூலில் குற்றம்சாட்டியவர்களை கடுமையாக விமர்சித்தும் வருகின்றார்.

கட்சிக்கு அல்லது கட்சியில் உள்ள முக்கியஸ்தர் ஒருவருக்கு நிதிப்பங்களிப்பினைச் செய்த மோகனதர்ஷினி என்பவர் மேற்கொண்ட தனிநபர் தாக்குதலே இதுவென கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றன. மோகனதர்ஷினியிடம் இருந்த பெறப்பட்ட பணம் மீளளிக்கப்பட்ட போதும் அவர் கட்சியில் அதீத செல்வாக்கை செலுத்துவதாகவும் அவ்வட்டாரங்கள் தேசம்நெற் க்கு தெரிவிக்கின்றன. இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த ஒரே இடதுசாரி அமைப்பான புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி யின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இதன் தலைவராக சி கா செந்தில்வேல் உள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் பொதுவெளியில் கருத்துக்கள் எதையும் வெளியிடவில்லை. ஆனால் பலரும் அவருக்கு இந்நிலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இதே போன்றதொரு குற்றச்சாட்டு பிரித்தனியாவில் கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி கண்டுவரும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் உறுப்பினர் மீதும் சுமத்தப்பட்டு உள்ளது. தமிழ் சொலிடாரிட்டி அமைப்பை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்தரும் தமிழ் அரசியல், கலை, இலக்கிய எழுத்துக்கள் மூலமும் அறியப்பட்டவரான சேனன் உருவாக்கி இருந்தார். இன்று இவ்வமைப்பு கணிசமான உறுப்பினர்களைக் கொண்டிருப்பதுடன் புலம்பெயர் நாடுகளில் அமைப்பு வடிவில் உள்ள ஒரே தமிழ் இடதுசாரி அரசியல் ஸ்தாபனம் இதுவென்றால் அது மிகையல்ல.

தங்களை முற்போக்காளர்கள் பெண்ணிய போராளிகள் என முத்திரைகுத்திக் கொண்ட 20 பேர் கையெழுத்திட்ட முகநூல் போராட்டம் ஒன்று ஓகஸ்ட் பிற்பகுதியில் பெரும் பரபரப்புடன் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சியின் உறுப்பினர் மோகனதர்ஷினி, தீப்பொறி அமைப்பினரான ராகுல் சந்திரா (ரகுமான் ஜான்) ஆகியோர் கையெழுத்திட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். குற்றம்சாட்டப்பட்டவருடனும் குற்றம்சாட்டப்பட்ட தமிழ் சொலிடாரிட்டி அமைப்புடனும் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்தவர்களும் அவர்களைப் பற்றி முழுமையாக அறிந்திருந்தவர்களுமே இப்போராட்டத்தில் குதித்துள்ளனர். முற்றிலும் தனிப்பட்ட வஞ்சம் தீர்க்கின்ற செயலாகவே இது பார்க்கப்படுகின்றது.

தமிழ் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிக உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கும் சூழலில் தங்கள் சொந்த நலன்களை முன்நிறுத்தி அப்பாவிப் பெண்களின் பெயர்களை தெருவுக்கு இழுத்துவிடுகின்ற முயற்சியாக மட்டுமே இதனைப் பார்க்க முடிகின்றது. ஏற்கனவே தமிழ் பெண்கள் பொது வெளிக்கு வரமுடியாத அளவுக்கு அவர்கள் அச்சமான சூழலில் உள்ள போது காதல் மற்றும் உறவுப் பிரச்சினைகளை பொதுவெளியில் கொண்டுவந்து விவாதித்து பெண்களை கேவலப்படுத்துவதும் இடம்பெற்று வருகின்றது. தங்களுடைய கருத்துக்கு மாறான பதிவுகளுக்கு ‘லைக்’ போட்டவர்களை அணுகி அவர்களை அச்சுறுத்திய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் ‘தம்பி எனக்கு வயசாச்சு இவையோட எனக்கு மல்லுக்கட்ட முடியாது. அது தான் ‘லைக்’கை எடுத்துப்போட்டன்’ என தேசம்நெற் க்கு தெரிவித்தார். ‘தம்பி நாளைக்கு உங்களைப் பற்றியும் ஏதும் எழுதிப் போடுவினம், கவனம்’ என்று என்னை எச்சரிக்கையும் செய்தார். முகநூல் ரவுடிகள் ஜாக்கிரதை.

புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி போல் குழுவாதத்திற்குள் சிக்காத தமிழ் சொரிடாரிட்டி அமைப்பு மேற்படி குற்றச்சாட்டை முற்றிலும் பாறுபட்ட கோணத்தில் அணுகியுள்ளது. தமிழ் சொலிடாரிட்டியின் முக்கியஸ்தர் ராஜரஞ்சன் புஸ்பராகவன் இவ்விடயம் தொடர்பில் வெளியிட்ட பதிவில்: “அரசியல் ரீதியாக அமைப்பை எதிர்கொள்ள வக்கற்றவர்கள் இத்தகைய சிறுமைத்தனமான செயல்களில் – அவதூறுகளில் ஈடுபடுகிறார்கள். இதில் சம்மந்தப்பட்டவர்கள் பலரது அரசியற் போதாமை பல முன்பே விமர்சிக்கப் பட்டிருக்கிறது. இதில் பலர் சமூக விரோத அரசியலை நீண்ட காலம் செய்து வருபவர்கள் என்பது தெரிந்த விசயமே” எனத் தெரிவித்துள்ளார். மேலும் “அவதூறுகளுக்கு நாம் அடிபணியப் போவதில்லை“ என்றும் அறிவித்துள்ளனர்.

இவ்வாறான தனிமனித உறவு சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் இது ஆரம்பமும் அல்ல முடிவும் அல்ல என்பது தெளிவாகின்றது. தமிழ் இடதுசாரி அரசியல் ஒரு தெளிவுக்கு வருவதற்கு முன் இன்னும் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என்பது திண்ணம். இவற்றை கடந்துசெல்லும் வல்லமை ஏற்கனவே நலிந்துள்ள இடதுசாரி ஆர்வலர்களிடம் இருக்கின்றதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.