உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இந்திய பிரதமருடனான சந்திப்பில் மீனவர் பிரச்சினைக்கு முதன்மை இடம் வழங்கிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க!

இந்திய பிரதமருடனான சந்திப்பில் மீனவர் பிரச்சினைக்கு முதன்மை இடம் வழங்கிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க!

இந்திய மீன்பிடி படகுகளினாலும் , தமிழக மீனவர்களின் அத்துமீறிய நுழைவினாலும் இலங்கையின் வடக்கு வாழ் மீனவர்கள் கடும் துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இலங்கையின் கடல் பரப்பில் ரோலர் இழுவைப் படகுகளின் அத்துமீறிய நடவடிக்கைகள் அளவுக்கதிகமாக அதிகரித்துள்ளதையும் அவதானிக்க முடிகிறது. தமிழகத்தில் இருந்து இலங்கைக்குள் நுழையும் கப்பல்கள் தனித்து மீன்பிடி என்பதற்கு அப்பால் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை இலங்கைக்குள் கொண்டு வந்து கொட்டுவதையும் அவதானிக்க முடிகிறது. இந்த நிலையில் அண்மையில் தேசம் திரை நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இடதுசாரி செயற்பாட்டாளர் நல்லதம்பி ஜெயபாலன் ” வடக்கு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து தமிழ்தேசியம் பேசும் எந்த தலைமைகளுக்கும் அக்கறை இருந்தது இல்லை. இந்தியாவின் அரசியல் தலைமைகளை சந்திக்கும் போது கூட எந்த பயனுமற்ற விடயங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட தமிழ்தேசியம் பேசும் தலைவர்கள் மீனவர் பிரச்சினைக்கு கொடுத்தது இல்லை. இதற்கான காரணம் தமிழ்தேசியம் என்பது இந்தியாவின் நலன்களுக்கானது என்பதே காரணம்”  என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஆட்சியமைத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக கடல்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்ட இராமலிங்கம் சந்திரசேகர் மீனவர்களுடன் நேரடியான சந்திப்புக்களை நடாத்தியதுடன் இந்தியாவுடான பேச்சு வார்த்தைகளில் மீனவர்கள் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் கட்டாய இடத்தை பிடிக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இந்தியாவுக்கு பயணமாகியுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் “இந்தியா, இலங்கை இடையே நிலவி வரும் மீனவர் பிரச்னைக்கு ஒரு நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார் .

பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பை அடுத்து ஊடகங்களிடம் பேசிய அனுர குமார திசாநாயக்க, இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என பிரதமர் மோடி எங்களுக்கு உறுதி அளித்துள்ளார். இந்தியா, இலங்கை இடையே நிலவி வரும் மீனவர் பிரச்னைக்கு ஒரு நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம். கடல் வளம் காக்க சுருக்குமடி வலை பயன்படுத்துவதை மீனவர்கள் கைவிட வேண்டும். சுருக்குமடிவலை பயன்படுத்துவதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாகவும், ஆகவே சுருக்குமடிவலை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு அனுமதிக்காது எனவும் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதி அளித்துள்ளார்.

 

 

கடும் எச்சரிக்கையுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஊசி அர்ச்சுனா!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் சரணடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சென்று அதன் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டமை தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணியுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சரணடைந்தார்.

இதன்போது அவர் கடும் எச்சரிக்கையுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுமந்திரன் சேர்த்துக்கொள்ளத் தயாரில்லை! தனிக்கட்டைகள்: சிறீதரன் – கஜேந்திரகுமார் – செல்வம் ஏன் ஊசி அர்சுனாவோடு கூட்டமைக்கக் கூடாது? 

சுமந்திரன் சேர்த்துக்கொள்ளத் தயாரில்லை! தனிக்கட்டைகள்: சிறீதரன் – கஜேந்திரகுமார் – செல்வம் ஏன் ஊசி அர்சுனாவோடு கூட்டமைக்கக் கூடாது?

“தமிழரசு கட்சி கூடுதலான ஆசனங்களை பெற்றுவிட்டோம் என்பதற்காக வேண்டி அவர்கள் எடுக்கின்ற முடிவுக்கு மற்றவர்கள் ஒத்து வரவேண்டும் என்பது முறையற்ற செயல்” என எம் ஏ சுமந்திரன் நேற்று வெளியிட்ட கருத்துக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநான் பதிலளித்துள்ளார். “இனப்பிரச்சினை தீர்வு சார்ந்த விடயத்தில் ஒரு கட்சி எடுக்கும் முடிவுக்கு மற்றைய கட்சிகள் செல்ல வேண்டும் என்பது சாத்தியமற்ற செயல்” எனவும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார். எம் ஏ சுமந்திரன் தனிக்கட்டைகளான தங்களை: சிறீதரன், கஜேந்திரகுமார், செல்வம் ஆகியோரை திட்டமிட்டு புதிய அரசியலமைப்புச் செயன்முறையிலிருந்து ஓரம் கட்ட முடிவெடுத்துவிட்டார் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ இன்று காட்டசாட்டமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

“தென்னிலங்கையிலே இப்பொழுது இருக்கிற புதிய அரசாங்கமும், ஜனாதிபதியும் ஒரு பலமாக நாங்கள் ஒற்றுமையாகிவிட்டோம் என்று இதை பரிசீலிக்கின்ற நிலையை உருவாக்க முடியும்” என்று செல்வம் அடைக்கலநாதன் ஒரு ஆலோசனையும் சொல்லி இருக்கிறார். இதையெல்லாம் கேட்கின்ற நிலையில் எம் ஏ சுமந்திரன் இருப்பதாகத் தெரியவில்லை. ’தேர்வுச் செவிடனாக’ இதை எதுவுமே கேட்காதவராக எம் ஏ சுமந்திரன் செயல்படுவதும் தெரிகிறது.

இந்த தனிக்கட்டைகள் சேர்ந்து அமைக்கும் கூட்டணிக்கும், வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி வரைபுக்கும் எம் ஏ சுமந்திரன் ஆப்பு வைத்துவிட்டார் என்பதை நேற்றைய செய்தியில் தேசம்நெற் குறிப்பிட்டிருந்தது தெரிந்ததே.

இந்தத் தனிக்கட்டைகளின் ஒற்றுமையும் நேர்மையற்றது. தனிக்கட்டைகளானதால் வலிந்து ஒற்றுமைப்பட்டுள்ளனர். உணர்ந்து ஒற்றுமைப்படவில்லை. பொதுக் கட்டமைப்பில் தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளராக அரியநேந்திரன் நிறுத்தப்பட்ட போது பொன்னம்பலம் கஜேந்திரன் தேர்தலைப் பகிஸ்கரிக்குமாறு கோரினார். தாங்களுடைய கோரிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரித்தனர் என ரீல் விட்டார். எஸ் சிறீதரன் அரியநேந்திரனுக்காக கட்சியை விட்டுவிட்டு வரவில்லை. லண்டனுக்கு ஓடிப்போய் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் கோயிலில் ஒழிந்துகொண்டார். இப்ப வந்து நாங்கள் ஒற்றுமையாய் நிக்கவேணும் என்று ஒற்றைக் காலில் நின்றால், சுமந்திரனும் தமிழரசுக் கட்சியும் நம்பிடுமோ.

தனிக்கட்டைகளுக்கு இருப்பது ஒரே வழி தான். அது தமிழரசுக் கட்சியோடும் சுமந்திரனோடும் போற பஸ்ஸில ஏற வேண்டியது தான். சர்வதேச விசாரணை, வடக்கு – கிழக்கு இணைப்பம், தையிட்டியில புடுங்குவம் என்றால் இனிவரும் தேர்தல்கள் ரொம்ப கஸ்டமாகத்தான் இருக்கும். இல்லாட்டி ஊசி அர்ச்சுனா தலைமையில ஒரு முன்னணி ஒன்றை அமைச்சால் இன்னும் கொஞ்சத்தூரம் போகலாம். சிங்கம் சோசல்மீடியாவ வைச்சு உங்களை ஒரு லெவலுக்கு கொண்டு வரும்.

போலி பேராசிரியர்கள் கவனம் : பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எச்சரிக்கை!

போலி பேராசிரியர்கள் கவனம் : பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
சிரேஷ்ட பேராசிரியர், பேராசிரியர் மற்றும் உதவிப்பேராசிரியர் பட்டங்களை குறிப்பிட்ட கல்வி நிறுவனம் அல்லது உயர்கல்வி நிறுவனங்களில் சேவையாற்றும் போது மட்டுமே பயன்படுத்த முடியும். குறிப்பாக பேராசிரியர்கள் ஓய்வு பெற்றபின் அவர்களது பேராசிரியர் பட்டம் செல்லுபடியற்றதாகிவிடும். சில விசேட சந்தர்ப்பங்களில் ஓய்வுபெற்ற பின்னரும் பல்கலைக்கழகத்தால் பட்டம் வழங்கப்பட்டால் பேராசிரியர் என அழைக்கப்படலாம்.
கோப் குழு பரிந்துரையின்படி ஒகஸ்டில் நடந்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டதுள்ளது. இத் தீர்மானம் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் உயர்கல்வி நிறுவனங்கள் சிரேஷ்ட பேராசிரியர், உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பதவிகள் வழங்கும் போது அவர்களது பதவி நியமனக் கடிதங்களில் இச்சரத்தை சேர்க்கும் படி சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக போலிப் பேரசிரியர்கள் தொடர்பில் எழுந்த சர்ச்சையும் சபாநாயகர் அசோக் ரன்வல்லா பதவியை ராஜினாமாச் செய்ததும் தெரிந்ததே. மேலும் பல்கலைக்கழகங்களில் குறிப்பாக கலைப்பீடங்களில் இவ்வாறான போலிப் பேராசிரியர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் காணப்படுகின்றது. யாழ் பல்கலைக்கழகத்தில் கோயில் மலரில் கட்டுரை எழுதி பேராசிரியர் ஆனவர் முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கன். யாழ் பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பைச் சிதைத்து அதனை இறங்குமுகத்தில் கொண்டுவந்து நிறுத்தியவர் வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம் பிள்ளை.

வரி செலுத்தாவிடில் திறைசேரி வங்கிக்கணக்கில் கைவைக்கும்!

வரி செலுத்தாவிடில் திறைசேரி வங்கிக்கணக்கில் கைவைக்கும்!

 

‘உள்நாட்டு இறைவரித் திணக்களத்தின் அறிவுறுத்தல் படி 2023/24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வரிநிலுவைகள் எதிர்வரும் டிசம்பர் 26 முன்னர் செலுத்தப்பட வேண்டும், செலுத்தப்படாத வரி நிலுவைகள் முன் அறிவுறுத்தலின்றி சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளினூடாக அறவிடப்படும்’ என இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. ‘நிலுவையாகவுள்ள சுய மதிப்பீட்டு வரி போன்றன தொடர்பில் உள்நாட்டு இறைவரி கட்டளைச் சட்டத்தின் கள ஆய்வுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன’ எனத் தெரிவித்துள்ள இறைவரித் திணைக்களம், ‘வரி நிலுவையின் தொகையை பொறுத்து குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்படும்’ என அறிவித்துள்ளது.

இலங்கையிலிருந்து உழைக்க வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

உழைக்க வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

உழைக்க வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது. இவ்வாண்டு மூன்று லட்சத்து பதினோராயிரம் பேர் வெளிநாட்டில் வேலைவாயப்புப் பெற்று சென்றுள்ளனர். இவர்கள் ஆறு பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அந்நியச் செலாவணியாகக் கொண்டு வருகின்றனர். சுற்றுலாத்துறைக்கு அடுத்ததாக அதற்குச் சமமாக இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தருபவர்களாக இந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் ஒரு இலட்சத்து எண்பத்தியையாயிரம் பேர் ஆண்களாகவும் ஒரு இலட்சத்து பதினையாயயிரம் பேர் பெண்களாகவும் உள்ளனர்.

இத்தொழிலாளர்களில் 75,000 பேர் குவைத்துக்கும் 50,000 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் பயணிக்கின்றனர். அதையும் விட தென்கொரியா, இஸ்ரேல், ரொமேனியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் 10,000க்கும் உட்பட்டவர்கள் செல்கின்றனர்.

இந்த அந்நியச் செலாவணியை இலங்கைக்கு கொண்டு வருவதில் மேற்கில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் அவர் பணத்தை உண்டியல் மூலமாக அனுப்புகின்ற போது அந்நியச் செலாவணி இலங்கையை அடைவதில்லை. அந்தப் பணம் அந்த நாடுகளிலேயே தங்கிவிடுகிறது. அதற்குச் சமமான இலங்கை ரூபாய் இலங்கையில் உள்ளவருக்கு வழங்கப்படும். அது டொலராகவோ அல்லது ஏனைய அந்நியச் செலாவணியாகவோ இலங்கைக்கு கிடைப்பதில்லை.

 

அரசு புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பும் பணத்தை டொலர் கையிருப்பாக மாற்ற வேண்டும்!

அரசு புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பும் பணத்தை டொலர் கையிருப்பாக மாற்ற வேண்டும்!
வெளிநாடுகளில் குறிப்பாக மேற்குலகில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்தை அந்நியச் செலவாணியாகப் பெற்றுக்கொள்ள இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அரசியல் பொருளியல்  ஆய்வாளர் த ஜெயபாலன் தெரிவிக்கின்றார். இதனை மாற்றி அமைப்பது பற்றி பிரதி வெளிவிவகார வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கவனமெடுத்து இதற்கான பொறிமுறையை உருவாக்கி அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரிக்க முயலவேண்டுமென அவர் தெரிவிக்கின்றார்.
இதன் மூலம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தற்போது ஈட்டித்தருகின்ற ஆறு பில்லியன் டொலர் அந்நியச் செலாவணியிலும் பார்க்க அதிகமான டொலர் வருமானத்தை இலங்கை அரசு ஈட்டலாம் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
தற்போது புலம்பெயர்ந்த தமிழர்கள், முஸ்லீம்கள், சிங்களவர்கள் அனைவருமே பெரும்பாலும் உண்டியல் முறைமையூடாகவே தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு பணத்தை அனுப்புகின்றனர். இம்முறையினூடாக அந்நிய நிதி இலங்கையின் வங்கிகளுக்கு வருவதில்லை. குறித்த பணம் அனுப்பும் நாட்டில் உள்ளவர், அங்குள்ள நிதி நிறுவனத்தை அணுகி குறித்த அனுப்ப வேண்டிய பணத்தை பெற்றுக்கொண்டு இலங்கையில் உள்ள முகவருக்கு இவ்வளவு தொகை ரூபாயை இலங்கையில் உள்ள பெற்றுக்கொள்ள வேண்டியவரின் வங்கிக் கணக்கில் வைப்பிட தகவல் அனுப்புவார். சம்பந்தப்பட்ட முகவர் குறித்த தொகையை வைப்பிடுவார். அத்தோடு பணப் பரிவர்த்தனை முற்றுப் பெற்றுவிடும்.
குறித்த நாட்டில் உள்ள நிதி நிறுவனத்திற்கு முகவராகச் செயற்பட்டவர் வழங்கிய பணம் அந்த முகவருக்கு குறித்த நாட்டில் சொத்துக்களை வாங்கவோ ஏனைய வியாபார மற்றும் விடயங்களுக்கோ பயன்படும். இந்த அந்நிய நிதி இலங்கையின் வங்கியை அடையாது. இலங்கையின் டொலர் மற்றும் ஏனைய அந்நிய நிதிகளின் கையிருப்பை பாதிக்காது.
தற்போது வெளிநாடுகளில் உள்ள உண்டியல் முறையை மேற்கொள்ளும் நிதி நிறுவனங்களுக்கு மாற்றாக இலங்கையின் அரச வங்கி அவ்வாறானதொரு செயற்திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இலங்கையில் உள்ள அந்த வங்கிக்கணக்கிற்கே பணம் அனுப்புபவர் பணத்தை வைப்பிட்டால் அதனை பணம் பெற்றுக்கொள்பவர்களுடைய கணக்கு இலக்கத்துக்கு அந்த வங்கி வைப்பிட முடியும். இல்லையேல் பணம் அனுப்புபவர்களுக்கும் பெற்றுக்கொள்பவர்களுக்கும் பெரிய தடைகளின்றி வங்கிக் கணக்கை ஏற்படுத்தி இந்தப் பரிவர்த்தனையைச் செய்ய முடியும்.  இதற்கான கட்டணம் இந்த உண்டியல் முகவர்களின் கட்டணத்திற்குப் போட்டியானதாகவும் அவர்களின் நாணய மாற்று வீதத்திற்குப் போட்டியானதாகவும் இருந்தால் இலங்கை ஒரு சில ஆண்டுகளிலேயே இன்னுமொரு 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணியாக ஈட்டமுடியும் என்கிறார் த ஜெயபாலன்.

வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலையாப்பு பதில் அமைச்சராக அருண் ஹேமச்சந்திரா நியமனம்!

வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலையாப்பு பதில் அமைச்சராக அருண் ஹேமச்சந்திரா நியமனம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் குழுவினரும் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா புறப்பட்டுச் சென்றதன் காரணமாக 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஜனாதிபதியின் கீழ் காணப்படும் டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி மற்றும் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய 03 அமைச்சுக்களுக்கும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு ஆகியவற்றுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, பதில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, பதில் பாதுகாப்பு அமைச்சராக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, நிதி மற்றும் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பதில் அமைச்சராக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, பதில் தொழில் அமைச்சராக, பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அன்று பயங்கரவாதி – இன்று: இலங்கை ஜனாதிபதி அநுராவிற்கு அமோக வரவேற்பு! அனுராவின் பதாதைகள் டெல்லி வீதிகளில்!

அன்று பயங்கரவாதி – இன்று: இலங்கை ஜனாதிபதி அநுராவிற்கு அமோக வரவேற்பு! அனுராவின் பதாதைகள் டெல்லி வீதிகளில்!
‘இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது பொருளாதார உறவை மேம்படுத்துவது, சுற்றுலாத்துறையை முதலீட்டை ஊக்குவிப்பது, எரிசக்தியில் பங்காளித்தன்மையை வலுப்படுத்தவது, பிராந்திய பாதுகாப்பு பற்றிய விடயங்கள் பேசப்பட்டதாகவும், இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம், இலங்கை – இந்திய உறவை மேலும் உறுதிப்படுத்துவாக அமைந்துள்ளது’ என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 15 ஆன நேற்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பிற்பகல் 5:30 மணியளவில் டெல்லியை சென்றடைந்தார். ஐனாதிபதிக்கு இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan), இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, (Santosh Jha), இந்து சமுத்திர வலயத்தின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால் (Puneet Agrawal), இந்திய உபசரணைப் பிரதானி அன்கூமன் கவூர் (Anshuman Gaur) உள்ளிட்ட இராஜதந்திரிகள் விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பளித்தனர். மேலும் டெல்லித் தெருக்களில் இலங்கை ஜனாதிபதியை வரவேற்கும் படி அவரது நிழற்படத்தோடு அலங்கார பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன.
தற்போது நக்சல்பாரிகளை இல்லாதொழிப்போம் என்று சபதமிட்டு, சதீஸ்கரில் அவர்களைப் படுகொலை செய்துவரும் இந்தியா, இதே பாணியில் 1971 ஏப்ரலில் தென்பகுதிக் காடுகளில் ஜேவிபியை வேட்டையாடியது. வேட்டையாடப்பட்ட ஜேவிபியின் பாசறையில் வளர்ந்த ஒருவருக்கு இலங்கையின் ஜனாதிபதியாக செங்கம்பள வரவேற்பை இந்தியா வழங்கியுள்ளது. இலங்கை பல்வேறு நல்லவிடயங்களுக்குமாக சர்வதேசத்தில் தன்னுடைய பெயரை நிலைநிறுத்தியுள்ளது. அதில் இதுவும் ஒன்றாக அமைகின்றது. 1971 இல் இந்தியப் படைகள் தெற்கில் என்ன செய்தனர் என்பதை இக்காணொலி கூறுகின்றது:
இப்பயணம் இந்தியாவிற்கான  மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம். வழக்கப்படி இலங்கையில் புதிதாக பதவியேற்கும் ஜனாதிபதிகள் முதன் முதலில் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள் இந்தியாவிற்கேயாகும். ஜனாதிபதி அநுரவின் இந்தியப்பயணத்தில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த ஆகியோரும் உடனிருந்தார்கள்.  இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய உயர்மட்ட இராஜதந்திரிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
அத்துடன் டெல்லியில் நடைபெறும் இரு நாடுகளுக்கிடையேயான முதலீடு மற்றும் வியாபார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான வர்த்தகக் கூட்டத்திலும் ஜனாதிபதி அனுரா கலந்து கொள்கின்றார். இப்பயணத்தின் இறுதியாக டெல்லியில் அமைந்துள்ள புத்த காயாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரச வேலையே வேண்டும் – கலைப்பட்டதாரிகள் விடாப்பிடி : இவர்கள் வரிச்சுமையை கூட்டப் போகின்றனர் – மக்கள் விசனம்

அரச வேலையே வேண்டும் – கலைப்பட்டதாரிகள் விடாப்பிடி : இவர்கள் வரிச்சுமையை கூட்டப் போகின்றனர் – மக்கள் விசனம்

தனியார் வேலையோ அல்லது சுயதொழிலோ எமக்கு வேண்டாம்.  அரசாங்க நியமனங்களை அரசு தமக்கு வழங்கியே ஆகவேண்டும் என வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் மீண்டும் போராட்டம் நடத்தியுள்ளனர். இதேவேளை இத்தனை வருடங்கள் தம்முடைய வரிப்பணத்தில் இலவசக் கல்வியில் படித்துவிட்டு 5 வருடங்களாக நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிக்காமல் வீட்டில் இருந்துகொண்டு மேலும் தம் வரிச்சுமையை கூட்டுவதற்கு அரச வேலை கேட்டு போராட்டம் நடத்துகின்றனர் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ்மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றபோது மாவட்ட செயலகத்தின் முன்பு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தாங்கள் பட்டப் படிப்பினை நிறைவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்ற போதிலும் அரச வேலைவாய்ப்பு தமக்கு இதுவரை வழங்கப்படவில்லை. புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் அரசாங்கம் தமக்கான அரச நியமனத்தை வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.  இதில் கலந்துகொண்டிருந்தோரில் மிகப்பெரும்பாலோனோர் கலைப்பீட பட்டதாரிகளாகவே காணப்பட்டனர்.  அவர்களிடம் பல்கலைக்கழக கல்வி தொடர்பான போதிய புரிதலோ அல்லது அதன் நோக்கம் பற்றிய தெளிவையோ காண முடியவில்லை.

பாடசாலைக் கல்வி தொடக்கம் பல்கலைக்கழகம் வரையான தம்முடைய கல்வியின் நோக்கம் அரச வேலைக்கானது என்பதே அவர்களுடைய எண்ணமாக உள்ளமையை அவதானிக்க முடிந்தது. அரசவேலையற்ற கல்வி வீணானது என்ற கருத்தை அவர்கள் வெளியிட்டிருந்தனர். வேலையில்லா பட்டதாரிகளை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அரச்சுனா அரசாங்கம் வேலைதராது என்றும், போராடுவது வீண் என்றும் – ஏதாவது திட்டங்களை தொடங்கி வேலை கொடுப்பதாக தெரிவித்திருந்தார். அத்தோடு நின்று விடாமல் மாவட்டத்திற்கு ஒரு குறைகாண் அதிகாரிகளை நியமித்து பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தப் போவதாகவும் அவர்களுக்கான சம்பளத்தை புலம்பெயர் தமிழர்கள் பொறுப்பெடுக்க வேண்டும் என்றும் முகநூலில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என்ற பெயரில் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்காமல் பெரும்சுமையாக ஒருதொகை அரச உத்தியோகத்தர்கள் காணப்படுகின்ற நிலையில் குறைகேள் அதிகாரிகள் எனும் பெயரில் பட்டதாரிகளை நியமித்து அந்தச் சுமையை புலம்பெயர் தமிழர்களின் தலையில் கட்டுவதற்கு அர்ச்சுனா தயாராகிவிட்டார்.  நாடு எதிர்நோக்கியுள்ள பெரும் பொருளாதார சரிவுக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று அரசசேவைகளில் தேவைக்கு அதிகமானோர் உள்ளீர்க்கப்பட்டமை என்பது வெளிப்படையானது.

பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதும் கடந்த கால அரசாங்கங்கள் வாக்கு வங்கிக்கான கருவியாக அரச நியமனங்களை பயன்படுத்தியுள்ளன என்பதும் மிகத் தெளிவாக பேசப்பட்டு வருகின்றது . அவ்வாறான நிலையில் பட்டதாரிகளின் இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான கருத்துக்கள் பெரும் அதிர்ச்சியையும் அவர்களின் தகமை தொடர்பில் கேள்விகளையும் எழுப்பியுள்ளன . பட்டதாரிகளின் இந்த நிலைக்கு அவர்கள் மட்டுமல்லாது இலங்கையின் கல்வி முறையிலுள்ள குறைபாடும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் குறிப்பாக கலைப்பீடத்தின் வினைத்திறனற்ற செயற்பாடுகளும் பயனற்ற கற்கை நெறிகளுக்கான விரிவுரையாளர்களின் ஆட்சேர்ப்பும் முக்கிய காரணங்களாகும் . இலங்கையில் வேலைவாய்ப்புகள் தாராளமாக உள்ளபோதும் அவற்றுற்குரிய தகமைகள் கலைப்பீட பட்டதாரிகளிடம் போதுமானதாக இல்லை. சந்தையில் இருக்கும் கேள்விகளுக்கு ஏற்ப தம்மை வளர்த்துக்கொள்ளும் ஆர்வமும் அவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை . தற்போதைய அரசாங்கம் டிஜிட்டல்மயமாக்கத்தை நோக்கி நாட்டை நகர்த்த ஆரம்பித்துள்ளது.  அதற்கான ஆளணிப் பற்றாக்குறையும் நிலவுகிறது. ஆனால் இவற்றுக்கு பொருத்தமானவர்களாக கலைப் பட்டதாரிகள் இல்லை என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.  அரசாங்க வேலை இல்லாமையால் தங்களுடைய காலம் வீணடிக்கப்பட்டுவிட்டது என்று பட்டதாரிகள் புலம்புகின்றார்கள் . உண்மையில் இவர்கள் இந்த நாட்டுக்கும் சமூகத்துக்கும் பயன்கொடுப்பார்கள் என்று நம்பி மக்களுடைய வரிப்பணத்தில் இவர்களுடைய இலவசக் கல்விக்காக இறைக்கப்பட்ட பெருமளவு முதலீட்டை 5 வருடங்களாக வீட்டிலிருந்து இவர்கள் வீணடிக்கின்றனர் என்பதை இவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.  பல்கலைக்கழகத்தில் பெறப்படும் கல்வியின் நோக்கம் துறைசர்ந்த திறமைகளைப் பெறுவதோடு , புதியதொரு பார்வையை உருவாக்கி . தனிமனித வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டுக்கும் பங்களிக்க முடியுமாறு ஒருவரை தயாரிப்பதாகும்.அதைவிடுத்து மக்களின் வரிப்பணத்தில் படித்து விட்டு மீண்டும் அரச வேலை எனும் பெயரில் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் நாட்டுக்கும் சமூகத்துக்கும் முன்னேற்றகரமான முயற்சிகளை நோக்கி இவர்கள் நகரவேண்டும் .