உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

”20ஆம் திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றின் கருத்தை தேடுவதும் ஒரு நல்ல முடிவு” – வாசுதேவ நாணயக்கார

19ஆம் திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டைக் குடியுரிமை குறித்த பிரிவு 20ஆம் அரசியலமைப்பு திருத்தத்திலும் தக்கவைக்கப்பட வேண்டுமென ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கியூபத் தூதுவருடனான சந்திப்பின் பின்னர் அமைச்சர் நாணயக்கார ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

19ஆம் திருத்தத்தில் அநேக சாதகமான அம்சங்கள் இருந்ததால் அதை முற்றாக நிராகரிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.“தகவல் உரிமைக்கு உத்தரவாதமளிக்கும் விதிகள், ஜனாதிபதிக்கான 5 ஆண்டு வரையறை, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடக்கூடிய எண்ணிக்கையை இரண்டாக வரையறுத்தல், இரட்டைக் குடியுரிமை கொண்டோரை தேர்தலில் போட்டியிடாது தடுத்தல் போன்ற 19ஆம் திருத்தத்தில் காணப்பட்ட நல்ல பல அம்சங்களைத் தக்க வைக்க வேண்டும்” என அவர் மேலும் கூறினார்.

20ஆம் திருத்தத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றம் செல்லவுள்ளமை பற்றிக் கேட்டபோது, நீதிமன்றின் கருத்தை தேடுவதும் ஒரு நல்ல முடிவு என்பதால் இது ஒரு சிறந்த நகர்வாகும் என்றார்.

”20வது அரசியலமைப்பு சட்டமூலம் நாமலுக்கானது அல்ல , அது கோட்டாபய ராஜபக்ஷவின் மகனுக்கானது” . – நலின் பண்டார சந்தேகம்!

20வது அரசியலமைப்பு சட்டமூலம் மஹிந்த குடும்பத்திற்கு அல்லாமல் கோட்டாபய ராஜபக்ஷ குடும்பத்திற்கு இலக்கு வைத்து கொண்டு வரப்பட்டுள்ளதென சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இரட்டை குடியுரிமை தடையை நீக்கி ஜனாதிபதி வேட்பாளரின் வயது எல்லையை 30 வரை குறைத்தமையானது நாமல் ராஜபக்ஷவுக்காக அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த திட்டமானது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகனை இலக்கு வைத்து மேற்கொண்டிருக்கலாம் எனவும், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக அவரின் மகனை நிறுத்துவதற்கு திட்டமிடுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

20 ஆவது சட்டமூலம் தொடர்பில் பரிந்துரை முன்வைப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை குப்பையில் வீசப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணக்கப்பாட்டிடிற்கு வர முடியவில்லை என்றால் அதனை முன்னோக்கி கொண்டு செல்வது எவ்வாறு என்ற கேள்வி எழுந்துள்ளதாக நலின் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்த வரைவு முதல் வாசிப்புக்காக இன்று பாராளுமன்றத்தில் !

அரசமைப்பின் 20ஆவது திருத்த வரைவு முதல் வாசிப்புக்காக இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி 20 ஆவது திருத்த வரைவை இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்காகவும், நிறைவேற்றத்துக்காகவும் சபையில் சமர்ப்பிப்பார்.

அதன்பின்னர் எந்தவொரு குடிமகனுக்கும் திருத்த வரைவுக்கு எதிராக ஏழு நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்ய முடியும் என்று நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி‍ எந்தவொரு தரப்பினரோ 20 ஆவது திருத்தத் வரைவை சம்பந்தப்பட்ட காலத்துக்குள் சவால் செய்தால், மனுவைத் தாக்கல் செய்த நாளிலிருந்து 21 நாட்களுக்குள் உயர்நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்க வேண்டும்.

சட்டமா அதிபரின் கூற்றுப்படி, இந்தத் திருத்த வரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகின்றது.

” முன்னணியினரின் என் மீதான ஒழுக்காற்று விசாரணை பொது மக்கள், ஊடகங்கள் முன்னிலையில் பகிரங்கமாக இடம்பெறவேண்டும்” – சட்டத்தரணி மணிவண்ணன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவால் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து கடிதம் அனுப்பியுள்ள சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தன் மீதான ஒழுக்காற்று விசாரணை பொது மக்கள், ஊடகங்கள் முன்னிலையில் பகிரங்கமாக இடம்பெறவேண்டும் என்று    தெரிவித்துள்ளார்.

அத்தோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்கள் மீதும் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் கேட்டுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உறுப்பினர் தகுதி நிலையிலிருந்து  சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை இடைநிறுத்துவதாக கடந்த 5ஆம் திகதி அறிவித்த அந்தக் கட்சியின் தலைவர், அதுதொடர்பில் மணிவண்ணனுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

“கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு பதிலளிக்க மணிவண்ணனுக்கு 14 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர் தனது பக்க நியாயங்களை கட்சிக்கு அறிவிக்கவேண்டும். அதன்பின்னர் கட்சியால் அவர் மீது முன்வைக்கப்படும் 6 குற்றச்சாட்டுத் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என்று அத்தோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களிடம் தெரிவி்த்திருந்தார்.

இந்த நிலையில் கட்சியினால் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு சட்டத்தரணி வி.மணிவண்ணன் தனது பதில் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

கட்சியினால் முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று விசாரணைக்கு ஒத்துழைப்பேன். ஆனால் ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது ஒழுக்காற்று விசாரணையை நடத்தும் முன் அனுபவமும் கட்சிசாராத சுயாதீன அதிகாரியாக உள்ள குறைந்தது மூவர் கொண்ட குழு முன்னிலையில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கேட்டுள்ளார்.

அத்தோடு தன் மீதான ஒழுக்காற்று விசாரணை பொது மக்கள், ஊடகங்கள் முன்னிலையில் பகிரங்கமாக இடம்பெறவேண்டும் என்றும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்கள் மீதும் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் கேட்டுள்ளார்.

”பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை மற்றும் அவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ

”ஐக்கிய நாடுகள் சபையானது மாநிலங்களின் இறையாண்மை, சமத்துவத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என்பதுடன் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை மற்றும் அவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்”  என  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் உயர் மட்டக் கூட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) காணொளி தொடர்பாடல் மூலம் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி, “கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சில மாதங்களுக்குள் பொருளாதாரங்கள், சுகாதார அமைப்புகள் மற்றும் சமூகங்களைப் பாதித்துள்ளது. கொரோனா சவாலை இலங்கையால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது. இலங்கையில் முதல் நோயாளி கண்டறியப்படுவதற்கு முன்பே கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கைக் குழுவை நாங்கள் அமைத்தோம்.

எங்கள் அணுகுமுறை இராணுவம், சுகாதாரம், தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் உள்ள பொதுத்துறை அதிகாரிகளை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் மீட்பு வீதம் உலகளாவிய மீட்பு வீதத்தை விட 90வீதம் அதிகமாக உள்ளது. எங்களின் இந்த வெற்றிக்கு அடையாளப்படுத்தல், தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மிகப்பெரிய பலமாக இருந்தன.

இதேவேளை, நிலையான அபிவிருத்தி நோக்கின் அடிப்படையில் 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கை உறுதியளித்துள்ளது. வேளாண் அடிப்படையிலான உற்பத்திப் பொருளாதாரத்தின் மூலம் வறுமையை ஒழிப்பது எனது அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோள்.

உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு உதவுவதற்கும் இறக்குமதிகள் மீதான ஓரளவு கட்டுப்பாடுகள் உட்பட இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாங்கள் ஆரம்பித்த நடவடிக்கைகள் முக்கியம் பெறுகின்றன.

இதேவேளை, ஒரு சிலரின் நலன்களுக்காக எந்த நாடும் பிணைக் கைதிகளாக இல்லாதபோது, உறுப்பு நாடுகளுக்கும் ஐ.நா.வுக்கும் இடையிலான கூட்டாண்மை மிகச் சிறந்த முறையில் தொடர்கிறது என்பதை நம்புகிறேன்.

உலகம் ஒரு பொதுவான மற்றும் நிகரற்ற அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் எங்களுக்குத் தேவைப்படும் ஐக்கிய நாடுகள் சபையானது மாநிலங்களின் இறையாண்மை, சமத்துவத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என்பதுடன் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை மற்றும் அவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

இதேவேளை, நாங்கள் விரும்பும் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக இந்த மாபெரும் நிறுவனமான ஐக்கிய நாடுகள் சபையை வலுப்படுத்தும் முயற்சிகளில் நாங்கள் எங்களை அர்ப்பணிப்போம்.

அந்தவகையில், அமைதி காக்கும் நடவடிக்கைகள் முதல் அதன் சிறப்பு அமைப்புக்களின் திட்டங்கள் வரை ஐக்கிய நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறோம். அத்துடன், நாங்கள் எங்கள் மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் கடமைப்பட்டிருக்கிறோம்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. தனது 75ஆவது ஆண்டு நிறைவை 2020, செப்டம்பர் 21ஆம் திகதி உயர்மட்டக் கூட்டத்துடன் கொண்டாடுவதற்கு ஐ.நா. உறுப்பு நாடுகள் தீர்மானித்திருந்தன.

இதன்படி, ‘பன்முகத்தன்மைக்கான எங்கள் கூட்டு உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துதல்’ என்ற அடிப்படையில், பொதுச் சபையின் 75 ஆவது அமர்வின் தலைவர் வோல்கன் போஸ்கிர், 180 நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் தங்கள் பிரதிநிதித்துவங்களை அளித்த கூட்டத்தில் தொடக்க அறிக்கையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக நூற்றுக்கும் அதிகமான முறைப்பாடுகள் !

நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக நூற்றுக்கும் அதிகமான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்வதாக பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.

குறித்த அரச வங்கிகள் அதனுடன் தொடர்புடைய தொழிற்சங்கள் மற்றும் பொதுமக்களினால் இந்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதால் முறைப்பாடுகளை ஏற்கும் இறுதி திகதி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடுகளை பரிசீலித்த பின்னர் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தரப்பினரை அழைத்து வாக்குமூலம் பெறப்படவுள்ளது. 5 முன்னணி அரச வங்கிகளில் 2015 ஜனவரி மாதம் 08 ஆம் திகதிக்கு பின்னர் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் எதிர்காலத்தில் அவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் தடுப்பதற்கும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பிலான சிபாரிசுகளை முன்வைப்பதற்கும் நட்டத்திற்கு பொறுப்புக் கூறவேண்டிய அதிகாரிகள் மற்றும் வெளிதரப்பினரை அடையாளங் காண்பதற்குமான பொறுப்பும் இந்த குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக அரச வங்கி கட்டமைப்பை செயற்றிறன் மிக்கதாக மாற்றுதல் மற்றும் அரச வங்கிகளில் இடம்பெறும் குளறுபடிகளை ஆராய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராக முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு ஏற்ப இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

”ஐ.எஸ் அமைப்பில் இணைந்துகொண்டவர்களுக்கு எதிராக எந்த உடனடி நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டாம் என மைத்திரிபால சிறீசேன தெரிவித்தார் ” – ஹேமசிறி பெர்ணான்டோ

ஐ.எஸ் அமைப்பில் இணைந்துகொண்டவர்களுக்கு எதிராக எந்த உடனடி நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் பிரச்சினைகளை உருவாக்குவது குறித்து சிறிசேன அச்சம் கொண்டிருந்தார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் பிரச்சினைகளை உருவாக்குவது குறித்து சிறிசேன அச்சம் கொண்டிருந்தார் என்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இஸ்லாமிய போதகர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்தார் எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ், அல்ஹைதா போன்ற அமைப்புகளுடன் தொடர்புகளை பேணுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தான் முன்னாள் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டதோடு, அவ்வாறான அமைப்புகளிடம் ஆயத பயிற்சியைப் பெற்று நாடு திரும்பியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எனினும் அவர், அவ்வாறான நடவடிக்கைகளால் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் பிரச்சினைகள் ஏற்படும் என தெரிவித்ததோடு, உடனடி நடவடிக்கைகளை எதுவும் எடுக்கவேண்டாம் என உத்தரவிட்டார் எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

“பௌத்தத்திற்கு முன்னுரிமைக் கொடுத்து, அதேநேரம் ஏனைய மதங்களுக்கும் சம உரிமைக் கொடுத்து ஓர் ஆட்சியை ஸ்தாபிக்க வேண்டும்“ – சஜித் பிரேமதாச

“ஐக்கிய நாட்டுக்குள் பௌத்தத்திற்கு முன்னுரிமைக் கொடுத்து, அதேநேரம் ஏனைய மதங்களுக்கும் சம உரிமைக் கொடுத்து ஓர் ஆட்சியை ஸ்தாபிக்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்“ என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “நாம் 20ஆவது திருத்தச்சட்டத்தை என்றும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. இதனை தோற்கடிக்க தேவையான அனைத்து ஜனநாயக வழிமுறைகளையும் மேற்கொள்வோம்.

மக்கள் இதற்காக அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை. எனினும், அரசாங்கம் இதனை மறந்துதான் தற்போது செயற்பட்டு வருகிறது. எவ்வாறாயினும், எதிர்க்கட்சி எனும் ரீதியில் நாம் 20 இற்கு எதிராக எம்மால் முடிந்த அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்வோம்.

அத்தோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பயணம் தற்போது உறுதியாகவுள்ளது. இந்தப்பயணத்தில் யார் வேண்டுமானாலும் இணையலாம். எமது கதவுகள் திறந்து தான் காணப்படுகிறது.

ஐக்கிய நாட்டுக்குள் பௌத்தத்திற்கு முன்னுரிமைக் கொடுத்து, அதேநேரம் ஏனைய மதங்களுக்கும் சம உரிமைக் கொடுத்து ஓர் ஆட்சியை ஸ்தாபிக்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.

ஐக்கிய மக்கள் சக்தி என்பது மிகவும் புதியக் கட்சியாகும். பொதுத் தேர்தலின்போது எமக்கு சரியான முறையில் அமைப்பாளர்கள்கூட இருக்கவில்லை. இந்த நிலையில்தான் இவ்வாறான வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளோம். தற்போதுதான் கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று உள்ளார்கள். இது உண்மையில் புரட்சி என்று தான் கூறவேண்டும்.

இப்படியான எமது பலத்தை பயன்படுத்தி 20 இற்கு எதிராக மட்டுமன்றி, சுற்றாடல் அழிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட அனைத்துக்கு எதிராகவும் செயற்படுவோம்.

மக்கள் கொஞ்சம் தூரநோக்கோடு சிந்தித்து வாக்களித்திருந்தால், அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருக்காது. எவ்வாறாயினும், எதிர்க்கட்சி எனும் ரீதியில் நாம் அனைத்து மக்களுக்காகவும் செயற்படுவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

”13வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையை நீக்கும் விவகாரம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எண்ணியுள்ளோம்” – அமைச்சர் சரத்வீரசேகர

”13வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையை நீக்கும் விவகாரம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எண்ணியுள்ளோம்” என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மாகாண சபைகளின் எல்லைகளை பண்டைய காலத்தில் காணப்பட்ட ராஜ்ஜியங்களின் அடிப்படைகளில் மீளவரையறை செய்யவேண்டும் என்ற யோசனை எமக்கு கிடைத்துள்ளது.

அதாவது மாகாண சபைகளை, சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாற்றியமைக்கவேண்டும் என்றே பெரும்பாலானோர் யோசனை முன்வைத்துள்ளனர்.

மேலும், தற்போதைய மாகாண சபை முறையை நீக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களும் விடுக்கப்படுகின்றன. மாகாணசபைகளை இல்லாமல் செய்வது என தீர்மானிக்கப்பட்டால் நாட்டை ருகுணு, மாயா, பிகிட்டி என்ற மூன்று மகாணங்களாக பிரிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக புதிய மாகாணசபைகள் தெரிவு செய்யப்படாத நிலையில் மாகாண சபை முறை எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.

13வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையை நீக்கும் விவகாரம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எண்ணியுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். ஜனாதிபதி அவர்கள் தனது பயணத்தை ஆரம்பித்து மதுரங்குளி பாலச்சோனை விவசாய தோட்டத்தின் செயற்பாடுகளை கேட்டறிந்து கொண்டார்.

அங்கு 900 ஏக்கர் நிலப்பரப்பில் தேங்காய், மரக்கறிகள் உள்ளிட்ட பல பயிரினங்கள் பயிரிடப்பட்டுள்ளன. 10 ஏக்கர்களில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மாதிரி திராட்சை பயிர்ச் செய்கையும் ஜனாதிபதியின் பாராட்டைப் பெற்றது.

புத்தளத்திற்கு ஜனாதிபதி இன்று கண்காணிப்பு விஜயம் - அவரே நேரடியாக  குறிப்புகளை எடுத்தார் ~ Jaffna Muslim

இத்தாலி அரசாங்கத்தினால் பேராயர் வண. கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கிடைத்த நன்கொடை ஒன்றின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட விவசாய தொழிநுட்ப நிறுவனத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார். 50 மாணவர்கள் தங்கி இருந்து பயிற்சி பெறக்கூடிய வகையில் நிறுவனம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தின் குறைந்த வருமானமுடைய பிள்ளைகளுக்கு பயிற்சியை வழங்குவதற்கு இங்கு அதிக சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று கார்தினல் ஆண்டகை குறிப்பிட்டார்.

கொழும்பு பேராயர் மாளிகையின் கண்காணிப்பின் கீழ் நிறுவனம் நிர்வகிக்கப்படும். பயிற்சி நிலையத்தின் பாதிரிமாருடன் ஜனாதிபதி சுமூகமாக கலந்துரையாடினார்.

மதுரங்குளி மாதிரி பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதி, மாணவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார். பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை நிர்மாணித்துத் தருமாறு மாணவர்கள் விடுத்த வேண்டுகோளை இராணுவ தளபதிக்கு அறிவித்த ஜனாதிபதி, உடனடியாக அதனை நிர்மாணித்துக் கொடுக்குமாறு குறிப்பிட்டார்.

வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையை இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றை நிர்மாணித்துத் கொடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தார். வீதிகள் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் பொதுமக்களின் பல பிரச்சினைகளை கேட்டறிந்த ஜனாதிபதி, அவற்றுக்கு உடனடியாக தீர்வினையும் வழங்கினார்.

மதுரங்குளி பாலச்சோனை முதல் தலுவ பிரதேசத்திற்கு பயணித்த ஜனாதிபதி, வீதியின் இருபுறமும் கூடியிருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார். பீட்ரூட், புகையிலை, மிளகாய் மற்றும் வெங்காய பயிர் நிலங்களை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், பயிர்ச் செய்கைக்காக விவசாயிகளை ஊக்குவித்தார்.

தலுவ நிர்மலபுர காற்று விசையின் மூலம் இயங்குகின்ற மின் நிலையத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார். பேராயர் வண. கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சின்தக்க மாயாதுன்னேவும் இதன்போது இணைந்து கொண்டனர்.