உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

யாழ்.தென்மராட்சியில் இயங்கி வந்த விபச்சார விடுதியும், கருக்கலைப்பு நிலையமும் பொலிஸாரால் முற்றுகை !

யாழ்.தென்மராட்சி கரம்பகம் – பாடசாலை வீதியில் இயங்கிவந்த விபச்சார விடுதியும், அதனோடு இணைந்து இயங்கிய கருக்கலைப்பு நிலையமும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கொடிகாமம் பொலிஸார் நேற்றிரவு(10) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த விபச்சார விடுதியும்,கருக்கலைப்பு நிலையமும் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்த இரு பெண்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதோடு,கருக்கலைப்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசுவமடு மற்றும் நல்லூர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த நிலையத்திற்கு மருந்துப் பொருட்களை வழங்கி மந்திகை வைத்தியசாலை ஊழியர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கைதான மூவரும் இன்றைய தினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

“கொரோனா தொற்றைத் தடுத்து மக்களை பாதுகாத்து கிராமிய பொருளாதாரத்தை வளர்தெடுப்பதே எங்கள் நோக்கம்” – சிவநேசதுரை சந்திரகாந்தன்

“கொரோனா தொற்றைத் தடுத்து மக்களை பாதுகாத்து கிராமிய பொருளாதாரத்தை வளர்தெடுப்பதே எங்கள் நோக்கம்”  என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருக்கான காரியாலயத்தை மாவட்ட செயலகத்தில் இன்று (12.11.2020) திறந்துவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் ,   தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்   சிவநேசதுரை சந்திரகாந்தனால் திறந்து வைக்கப்பட்டது. தென் பின்  கடமைகளை பெறுப்பேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

இது பற்றி அவர் தெரிவித்ததாவது,

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக இந்த பொறுப்பை ஏற்றுள்ளேன். இந்த இடத்திற்கு வருவதற்கு பெரும் பங்காற்றிய எனது மக்களுக்கு நன்றி. தேர்தல் காலங்களில் மக்களிடம் அபிவருத்த்தி செய்து தருவாக வாக்குறுதியளித்து தான் இந்த இடத்துக்கு வந்திருக்கின்றோம்

தற்போது உலகலாவிய ரீதியில் சவாலாக இருக்கின்ற கொரோனா மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் வந்திருக்கின்றது. இந்த விடயங்களை அரச கொள்கையின் அடிப்படையில் கையாண்டு சாதாரண மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் அவர்களுடைய உற்பத்தியை அதிகரிக்க கூடிய விடயங்களையும் எப்படி முன்னெடுப்பது என்ற பொதுவான கொள்கைத் திட்டத்திற்கு உழைக்கவேணடும் என்பது எனது எதிர்பார்ப்பு.

அந்த அடிப்படையில் கொரோனா தொற்றைத் தடுத்து மக்களை பாதுகாத்துக்கொண்டு அதனோடு எங்களுடைய கிராமிய பொருளாதாரத்தை வளர்தெடுப்பது எங்கள் நோக்கம் அந்த திட்டத்திற்கு அனைவரது ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன் . நீண்ட காலமாக நான் நிர்வாகத்துடன் தொடர்பு இல்லாத காரணத்தால் இன்று கடமைகளை பெறுப்பேற்ற உடன் நிலமைகளை அவதானித்துக் கொண்டு 13 ம் திகதி பெரும் விமர்சனத்தில் மத்தியில் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தை நடாத்தவுள்ளோம்.

அந்த கூட்டத்தில் முடிந்த வரை 2021 ம் ஆண்டிற்கான செயற்பாடுகளையும் இப்போது இருக்கின்ற மக்களுக்கு உடனடி தேவையான விடயங்களை அவதானித்து அதனை முடித்து கொடுப்பதற்கான திட்டங்களை வகுப்போம் என தெரிவித்துள்ளார் .

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  கணபதிப்பிள்ளை கருணாகரன் , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் , சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் மற்றும் கட்சி முக்கிய உறுப்பினர்கள்  கலந்துகொண்டனர்

“திருகோணமலை தென்னமரவாடி, திரியாய் காணிகளில் எந்தவித தலையீடுகளையும் தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளக் கூடாது” – நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இடைக்கால தடையுத்தரவு !

திருகோணமலை தென்னமரவாடி, திரியாய் காணிகளில் காணி உரிமையாளர்கள் சுதந்திரமாக சென்று காணியை பராமாரிக்க எந்தத் தடையையும் தொல்லியல் திணைக்களம் ஏற்படுத்தக் கூடாது எனவும், அதில் எந்தவித தலையீடுகளையும் தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளக் கூடாது எனவும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தவிட்டுள்ளார்.

இம் மனுமீது காலம் தாழ்த்தி உத்தரவு பிறப்பிக்கப்படுமாக இருந்தால் அது, மனுதாரரின் உரிமைகளில் ஏற்பட்ட சேதத்தை மீள பெற முடியாத நிலையை ஏற்படுத்திவிடும் என்ற சட்டத்தரணி கேசவன் சயந்தனின் சட்டவாதத்தை ஏற்று நீதிமன்றம் இவ் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.

தென்னமரவாடி, திரியாய் ஆகிய பகுதிகளில் உள்ள தமது காணிகளுக்குள் தொல்பொருள் திணைக்களம் வர்த்தமானி பிரசுரம் மூலம் தலையீடு செய்துள்ளதாக திரியாய் பகுதி சார்பாக 17 மனுதாரர்களும், 3 தென்னமரவாடி மனுதாரர்களும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஊடாக திருகோணமலை மேல் நீதிமன்றில் அவசர மனுவாக வழக்கு தாக்கல் செய்தனர்.

இவ் வழக்கில் எதிர்மனுத்தாரர்களாக தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் நாயகம் முதல் எதிர்மனுத்தாரராகவும், உதவி காணி ஆணையாளர் மற்றும் காணி ஆணையாளர் ஆகியோர் இரண்டாம் மூன்றாம் எதிர்மனுத்தார்களாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

மேலும் இவ் வழக்கானது அவசர மனுவாக நேற்று திருகோணமலை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பாதிக்கப்பட்ட மனுத்தாரர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கேசவன் சயந்தன், மேற்படி வழக்கானது அவசர மனுவாக எடுத்து இதற்கு தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும். குறிக்கப்பட்ட காணிகள் கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்டதாகும். அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் பிரகாரம் கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட காணிகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க இந் நீதிமன்றுக்கு அதிகாரம் உள்ளது.

மேலும் இம் மனுமீது காலம் தாழ்த்தி உத்தரவு பிறப்பிக்கப்படுமாக இருந்தால் அது, மனுத்தாரரின் உரிமைகளில் ஏற்பட்ட சேதத்தை மீள பெற முடியாத நிலையை ஏற்படுத்தி விடும். எனவே இவ் வழக்கில் தொல்லியல் திணைக்களம் குறித்த காணிகளுக்குள் தலையீடு செய்வதற்கு இடைக்கால தடைவிதிக்குமாறு மன்றை கேட்டுக்கொள்கிறேன் என தனது வாதத்தை முன்வைத்தார்.

மனுத்தாரர் தரப்பு வாதத்தை கவனித்த மன்று, அதில் காணப்பட்ட சட்டவாதத்தை ஏற்று இடைக்கால கட்டளையை வழங்கியது.

இதன்படி, குறித்த காணிகளுக்குள் 14 நாட்களுக்கு தொல்பொருள் திணைக்களம் சென்று எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என இடைக்கால தடையுத்தரவு விதிக்கிறது எனவும் அக் காணிகளில் காணி உரிமையாளர்கள் சுதந்திரமாக சென்று தமது காணிகளை பராமரிக்க எந்தவித தடையும் ஏற்படுத்தக் கூடாது எனவும் இந் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கிறது.

மேலும் இவ் வழக்கில் எதிர்மனுத்தாரர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளோர் எதிர்வரும் 23.11.2020 அன்று நீதிமன்றில் முன்னிலையாகி தமது தரப்பு ஆட்சேபனையை முன்வைக்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

இலங்கையின் சமூக அபிவிருத்தித்திட்டத்துக்கான ரூபாய் 600 மில்லியன் பெறுமதியான இலங்கை-இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்து!

இந்திய நிதி உதவியின் கீழ் ரூபாய் 600 மில்லியனுக்கும் அதிகமான செலவில் இந்நாட்டில் செயற்படுத்தப்படும் சமூக அபிவிருத்தி திட்டத்திற்காக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே நேற்று(10.11.2020)புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

நிதி அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.ஆர்.ஆட்டிகல அவர்கள் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இவ் ஒப்பந்தமானது 2005ஆம் ஆண்டு தற்போதைய கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் என்பதுடன் அது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களின் பங்கேற்புடன் விஜேராமவிலுள்ள கௌரவ பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

குறித்த ஒப்பந்தத்திற்கு அமைவாக விசேட அபிவிருத்தி திட்டத்திற்கான செலவு ரூபாய் 300 மில்லியனுக்கும் அதிகமாவதுடன் அவசரகால அம்பியூலன்ஸ் சேவை, வீடமைப்பு திட்டம், புதிய யாழ். கலாசார மத்திய நிலைய செயற்பாடுகள் என்பன இதனூடாக செயற்படுத்தப்படும்.

சிறு அபிவிருத்தி திட்டத்திற்காக அதிகபட்சமாக ரூபாய் 300 மில்லியன் செலவிடப்படுவதுடன், மீள்குடியேற்றம், தங்குமிடம், வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் தொழிற்பயிற்சி, கல்வி மற்றும் ஆராய்ச்சி, கலாசார நடவடிக்கை, விளையாட்டு, தொழிற்துறை மேம்பாடு, மருத்துவ நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வைத்திய உபகரணங்களை பெற்றுக் கொடுத்தல் என்பனவும் இதன் கீழ் செயற்படுத்தப்படவுள்ளன.

“சாக்குப்போக்குக் காரணங்களைத் கூறாது நாட்டை முடக்கும் உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்க வேண்டும்”  – சஜித் பிரேமதாஸ வலியுறுத்தல் !

“சாக்குப்போக்குக் காரணங்களைத் கூறாது நாட்டை முடக்கும் உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்க வேண்டும்”  என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“கொரோனா வைரஸ் தொற்றின் பேராபத்து மையமாக மேல் மாகாணம் விளங்குகின்றது. இந்தநிலையில், இம்மாகாணத்தை 10 நாட்கள் மட்டும் முடக்கியிருந்த அரசு, அதை மீண்டும் திறந்துவிட்டுள்ளது.

இதனால் கொரோனாத் தொற்றுப் பரவல் நாடெங்கும் பரவும் அபாயம் உள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றது.

இதனைக் கருத்தில்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பட வேண்டும். சாக்குப்போக்குக் காரணங்களைத் தெரிவிக்காது முன்னறிவித்தல் வழங்கி முழு நாட்டையும் குறைந்தது 14 நாட்களுக்காவது முடக்கும் உத்தரவை ஜனாதிபதி வழங்க வேண்டும். அந்தக் காலப்பகுதிக்குள் நாடெங்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளையும் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வேகமாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகின்றமையை பலரும் சுட்டிக்காட்டிவருகின்றனர். குறிப்பாக இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“அமெரிக்க நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதி ஈழத் தமிழ் மக்களின் அவலங்களைப் போக்கும் வகையில் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்” – சுரேஷ் க.பிரேமச்சந்திரன் வேண்டுகோள் !

“அமெரிக்க நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதி ஈழத் தமிழ் மக்களின் அவலங்களைப் போக்கும் வகையில் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்” என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்கா தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சுரேஷ் க.பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுளார்.

அந்த அறிக்கையில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவிற்கான 46ஆவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து முடிவடைந்துள்ளது. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோஸப் ரொபினட் பைடன் ஜனாதிபதியாகவும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹரிஷ் துணை ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஈழத் தமிழ் மக்களின் இதயபூர்வ வாழ்த்துகள்.

ஆபிரிக்க கறுப்பின வழித்தோன்றலான ஒபாமாவை ஜனாதிபதியாக்கி அழகுபார்த்த அமெரிக்க மக்கள், தென்னாசியாவைச் சேர்ந்த பெண் ஒருவரை துணை ஜனாதிபதியாக்கி ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளனர்.

தேர்தலில் வென்ற அமெரிக்கத் தலைவர்களுக்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பும் இலங்கையின் அரசியல் தலைவர்கள், இந்தப் புதுமைகளையும் பழகிக்கொள்ளவேண்டும். ஆனால் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று இலங்கையில் அரசியல் செய்வோர் மிக மோசமான இனவாதிகளாக உருவெடுப்பது வெட்கக்கேடானதும் வேதனைக்குரியதுமாகும்.

இலங்கை அரசாங்கத்தால் ஈழத் தமிழ் மக்கள் மேல் யுத்தம் திணிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் வகைதொகையின்றி கொன்று குவிக்கப்பட்டனர். இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டனர். சர்வதேச சாட்சியங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, சாட்சியமற்ற யுத்தம் ஒன்று நடாத்தி முடிக்கப்பட்டது.

இதனால் மனித உரிமை மீறல்களும், யுத்தக்குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் வகைதொகையின்றி அரங்கேற்றப்பட்டது. இவ்வாறு யுத்தத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பல தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா முன்னின்று உழைத்ததை நாங்கள் நன்றியுடன் நினைவு கூர்கின்றோம்.

ஆனால் இப்பொழுது, ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களுக்கு தன்னால் உடன்படவோ அல்லது அதற்குக் கட்டுப்படவோ முடியாதென கூறி இலங்கை அந்தத் தீர்மானங்களிலிருந்து வெளியேறியுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளையும், உறவுகளையும் தேடி ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மற்றும் சகோதரிகள் ஆயிரத்து ஐநூறு நாட்களைக் கடந்தும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

உலகமெல்லாம் மனித உரிமைக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் குரல் கொடுக்கும் அமெரிக்க ஜனநாயகக் கட்சியினரும் அதன் தெரிவு செய்யப்பட்ட இன்றைய தலைவர்களான ஜோ பைடன் மற்றும் கமலா ஹரிஷ் போன்றவர்கள் பாதிக்கப்பட்ட மற்றும் நீதி கோரிநிற்கும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமெனவும் அவர்களது இழப்புகளுக்கு நீதியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒரு சர்வதேச விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு, அவர்களுக்கான நீதி மற்றும் நிவாரணம் கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

யுத்தக் குற்றங்களை மேற்கொண்ட இலங்கை அரசாங்கத்தை சர்வதேச மன்றங்களில் பாதுகாப்போம் என இலங்கைக்கு விஜயம் செய்த சீனத் தலைவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு உறுதிமொழி அளித்திருக்கின்றார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்தவிதமான நீதி விசாரணைகளும் நடாத்த உலக நாடுகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.

மனித உரிமைகள் குறித்து பேசினால் கூட சீன அரசாங்கம் தாங்கள் அரசுகளுடன் மாத்திரம்தான் உறவுகளைப் பேணுவதாகவும் மனித உரிமைகள் என்பது உள்நாட்டு விவகாரம் என்று தட்டிக்கழிக்கும் போக்கையே காணமுடிகின்றது. இந்த நிலையில், அமெரிக்க நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதியும் மற்றும் துணை ஜனாதிபதியும் ஈழத் தமிழ் மக்களின் அவலங்களைப் போக்கும் வகையில் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமென்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டிநிற்கின்றோம்.

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் நால்வர் பலி !

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 04 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

51 வயதுடைய ஆண், கொழும்பு 10 ஐ சேர்ந்த 45 வயதுடைய ஆண், கம்பஹாவை சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரும் 55 – 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

“இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு ஜோ பைடனும் கமலா ஹரிஷும் உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்” – இரா.சம்பந்தன்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 தொகுதிகளைக்  கைப்பற்றி 46ஆவது ஜனாதிபதியாகவும், கமலா ஹரிஷ் அமெரிக்காவின் முதலாவது பெண் உப ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் இருவரையும் வாழ்த்தி கருத்துத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினரான  இரா.சம்பந்தன்  “இலங்கையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில்  உறுதியான மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு ஜோ பைடனும் கமலா ஹரிஷும் உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடனும், உப ஜனாதிபதியாக கமலா ஹரிஷும் தெரிவு செய்யப்பட்டமை மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் இவர்களுடன் தொடர்புகொண்டு பேசுவோம்.

2009ஆம் ஆண்டு தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க தமிழர் விவகாரத்தை அமெரிக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்குக் கொண்டுவந்திருந்தது.  அப்போது அமெரிக்காவில் பராக் ஒபாமா தலைமையிலான ஜனநாயகக் கட்சியே ஆட்சியில் இருந்தது.

இந்தநிலையில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாகவும், கமலா ஹரிஸ் உப ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இது மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

இவர்கள் இருவரும் ஜனநாயகவாதிகள். அரசியல் ரீதியில் நீண்ட காலம் அனுபவம் பெற்றவர்கள். ஜோ பைடன், செனட் சபையிலும் இருந்திருக்கின்றார்; அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் இரண்டு தடவைகள் உப ஜனாதிபதியாகவும் பதவி வகித்திருக்கின்றார்.

கமலா ஹரிஸ், இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணின் மகள். நீண்ட காலம் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார். இவர்கள் இருவரும் சமத்துவம், நீதி, நியாயம், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளுக்குப் போதிய மதிப்பு வழங்கிச் செயற்படக்கூடிய தலைவர்கள்.

இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் இவர்களுடன் தொடர்புகொண்டு பேசுவோம். இலங்கையில் சமத்துவத்தின் அடிப்படையில் – நீதியின் அடிப்படையில் – நியாயத்தின் அடிப்படையில் – சமாதானத்தின் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும்.

இலங்கைத் தீவில் நீண்டகாலமாக அவ்விதமானதோர் அரசியல் தீர்வு இன்னமும் ஏற்படவில்லை. அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் – உறுதியான மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு ஜோ பைடனும் கமலா ஹரிஷும் உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். ஏனெனில் இவர்கள் உதவக்கூடிய பக்குவம் உடையவர்கள். அதில் ஆற்றல் உடையவர்கள்; அறிவுடையவர்கள்” எனவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

“சுரேன் ராகவன் தான் வந்த வேலையை பார்க்காமல் இனப்படுகொலை செய்த மொட்டு கட்சியில் இருந்து வந்து இப்பொழுது எங்களுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்” – சிவாஜிலிங்கம் காட்டம் !

அண்மையில் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் தற்போதைய அரசின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் நீதி அமைச்சரிடம் தமிழ் அரசியல்கைதிகள் தொடர்பான அரசின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியிருந்தார். அது தொடர்பாக பல விமர்சனங்கள் தமிழர் அரசியல் தலைமைகளால் முன்வைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சீ.வி.விக்னேஸ்வரன் போன்றோர் சுரேன்ராகவன் தொடர்பான  தங்களுடை்ய நிலைப்பாடு தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் “சுரேன் ராகவன் தான் வந்த வேலையை பார்க்காமல் இனப்படுகொலை செய்த மொட்டு கட்சியில் இருந்து வந்து இப்பொழுது எங்களுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்” என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் சுரேன்ராகவன் கருத்து தொடர்பாக தன்னுடைய நிலப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

“முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் தற்போதைய அரசின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சுரேன் ராகவன் தான் வந்த வேலையை பார்க்காமல் இனப்படுகொலை செய்த மொட்டு கட்சியில் இருந்து வந்து இப்பொழுது எங்களுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

தமிழ் கட்சிகளினுடைய தலைவர்கள் எல்லோரும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்.தவறாக செயற்படுகிறார்கள் என அவர் தெரிவித்திருக்கிறார். நான் ஒன்றைகேட்க விரும்புகின்றேன். நீங்கள் வடக்கு மாகாண ஆளுநராக இருந்த போது மக்களே உங்களுடைய குறைபாட்டை தாருங்கள் நான் அதை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கிறேன் என்று சொன்னவர் நான் உட்பட பலர் கொடுத்த குறைபாடுகளை குப்பை கூடையில் போட்டாரோ? என தெரியவில்லை. இப்பொழுது அரசியல் கைதிகளை விவகாரத்தை பற்றி பரிசீலிப்பதற்கு 9 மாதங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.

கௌரவ சுரேன் ராகவன் அவர்கள் விரும்பினால் வடக்கில் தேர்தலில் போட்டியிடலாம் மக்கள் ஆதரவு இருந்தால் வெல்லலாம் அல்லது உங்களுடைய பூர்வீகமான இடத்தில், கொழும்பில் போட்டியிடலாம்.அது அவருடைய விருப்பம். எனினும் வடக்கு-கிழக்கு மக்களுடைய பிரதிநிதிகள் பற்றி விமர்ச்சிக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டாம். இல்லாவிட்டால் அவரைப் பற்றி நாங்கள் இன்னும் பல விடயங்களை சொல்லவேண்டிவரும். அவருடன்நேரடியான விவாதத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

ஆகவே அவருடைய விமர்சன கருத்துக்களை இத்துடன் நிறுத்தவேண்டும். இதை நாங்கள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் ராகவனுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்”  என தெரிவித்துள்ளார்.

“நாட்டை முடக்கும் தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்கமுடியாது. அதனை சுகாதார அமைச்சுதான் தீர்மானிக்கவேண்டும்” – அமைச்சர் நாமல் ராஜபக்ச

“நாட்டை முடக்கும் தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்கமுடியாது. அதனை சுகாதார அமைச்சுதான் தீர்மானிக்கவேண்டும்” என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (09.11.2020) வடக்கிற்கு வருகை தந்திருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ச , வவுனியாவில்  இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தென்பகுதியில் இருந்து வட பகுதிக்கு வருகின்ற அமைச்சர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகின்ற அதேவேளை நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் கொரோனா இருந்தது. அவர்கள் எங்களைவிட மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். ஆனாலும் இப்போது அவர்கள் வாழ்க்கை முன்னேறிக்கொண்டு தான் செல்கிறது. நாங்களும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.

பொதுமக்களோ, சுகாதார தரப்பினரோ பொருளாதாரம் முடங்குவதை விரும்பவில்லை. நாட்டை முடக்கும் தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்கமுடியாது. அதனை சுகாதார அமைச்சுதான் தீர்மானிக்கவேண்டும். அவர்கள் வழங்கும் விடயங்களை வைத்துக்கொண்டுதான் அரசாங்கம் முடிவெடுக்கும்.

ஆனால், பொருளாதாரத்தை முடக்குவதுதான் எதிர்க்கட்சியினரின் நோக்கமாக இருக்கிறது. நாடு முடக்கப்பட்டாலும் அவர்கள் வெளியில் நடமாடுவார்கள். அவர்கள் கருமங்களை அவர்கள் செய்வார்கள். இதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். நாங்கள் அதை விரும்பவில்லை. பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லவே நாங்கள் விரும்புகிறோம்” எனத தெரிவித்தார்.