உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இரண்டரை லட்சத்துக்கு ஏலம் போன ஒரு மாம்பழமும் ! புலம்பெயர் செல்வச் செருக்கை காட்ட வழிவிடும் ஆலயங்கள் !

இரண்டரை லட்சத்துக்கு ஏலம் போன ஒரு மாம்பழமும் ! புலம்பெயர் செல்வச் செருக்கை காட்ட வழிவிடும் ஆலயங்கள் !

புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தில் மாம்பழம் ஒன்று 2 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் ஐந்தாம் நாள் மாம்பழத் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட மாம்பழமே இவ்வாறு விற்பனையாகியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதமளவில் வவுனியா, உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழமொன்று 2,85,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமையும் கவனிக்கத்தக்கது.

அண்மைய காலங்களில் புலம்பெயர் தேசங்களில் இருந்து வருகை தரும் பலர் தங்களது பணச்செருக்கை காண்பிக்க ஆலயங்களில் பல லட்சங்களில் சேலை வாங்குதல், மாம்பழம் வாங்குதல், கோயில்களின் வரலாற்று சிறப்பை சிதைத்து கோயில்களை இடித்து பெரிதாக்க நிதியுதவி வழங்கல் போன்ற இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

போரால் பாதிக்கப்பட்ட ஓர் மக்கள் கூட்டம் வாழும் நிலத்தில் அடிப்படை வாழ்க்கை செலவுகளை கூட நடாத்தி முடியாமல்- பிள்ளைகளின் கல்வி செலவை கொண்டு நடாத்த முடியாமல் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், புலம்பெயர்ந்து சென்ற சிலருடைய ஆடம்பரமான நடவடிக்கைகள் தொடர்பில் பலரும் விசனம் வெளியிட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு உட்பட்ட 15 பிரதேச செயலர் பிரிவுகளில் போதிய உணவு இன்றி 13 ஆயிரத்து 888 பேர் உள்ளனர் என்று 2023ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் வெளியிட்டிருந்த புள்ளிவிவரங்கள் தெரிவித்திருந்தன

மேலும் யாழ் . மாவட்டத்தில் போதிய உணவில்லாது இருப்போர் பட்டியலில் ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகம் முதலிடத்தில் உள்ளது எனவும் புள்ளிவிபரங்கள் வெளியாகியிருந்ததுடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் மந்த போசணை உள்ளவர்கள் எட்டாயிரத்துக்கு அதிகம் எனவும் குறித்த மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

நிறைவெறியில் தள்ளாடும் இலங்கை பொலிஸ் அதிகாரிகள் – இடமாற்றம் போதுமா?

நிறைவெறியில் தள்ளாடும் இலங்கை பொலிஸ் அதிகாரிகள் – இடமாற்றம் போதுமா?

இரு நாட்களுக்கு முன்பாக, கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் வீதியின் மறுபக்கத்திற்கு கடக்க முற்பட்ட வயோதிப பெண் ஒருவரை உந்துருளியில் பயணித்த பொலீஸார் மோதியத்தில் தலையில் படுகாயமடைந்த பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். உந்துருளியில் பயணித்த இரண்டு போலீஸாரும் அதிக மது போதையில் காணப்பட்டனர். அவர்கள் பயணித்த உந்துருளியில் மதுபானங்கள் இருந்தன என தகவல்கள் வெளியாகியிருந்தன.

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக யாழில் குடி போதையில் சிவிலில் வந்த பொலிஸார் போட்ட ரவுடித்தனம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

வரகாபொல, தொலங்கமுவ பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது பொலிஸ் கெப் வண்டியால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற குற்றத்திற்காக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் மதுபோதையில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

அண்மையில் பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள் சிலர் மது போதையில் உறங்குவது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாரிய சர்ச்சையா மாறியிருந்தது. எனினும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்திருந்தார்.

இதேவேளை பொலிஸ் அதிகாரிகள் சட்டத்துக்குப் புறம்பான வகையில் செயற்படுகின்ற போது வெறுமனே இடமாற்றம் மட்டுமே தண்டனையாக வழங்கப்படுவதாக பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

மகிந்த ராஜபக்சவின் உடல் பொது மக்கள் பார்வைக்காக பாதுக்காக்கப்பட வேண்டும் – மகிந்த ராஜபக்ச சகா !

மகிந்த ராஜபக்சவின் உடல் பொது மக்கள் பார்வைக்காக பாதுக்காக்கப்பட வேண்டும் – மகிந்த ராஜபக்ச சகா !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உடல் எதிர்கால சந்ததியினருக்காக பொதுமக்கள் பார்வைக்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக மஹிந்த ராஜபக்ச நாட்டின் புகழ்பெற்ற நபராக மாறினார் என தெரிவித்த அஜித் ராஜபக்ச, எனவே, அவரது மறைவுக்குப் பிறகு, மறைந்த சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்நாமின் புரட்சிகரத் தலைவர் ஹோ சி மின் போன்ற மஹிந்த ராஜபக்சவின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கனடாவுக்கு புலம்பெயர்ந்த விவசாயதுறைசார் அறிஞர் யாழில் மரணம்

கனடாவுக்கு புலம்பெயர்ந்த விவசாயதுறைசார் அறிஞர் யாழில் மரணம்

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் விவசாயத்துறை நிபுணர் டொக்டர் பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் யாழில் திடீர் மரணமடைந்துள்ளார். இவர் கனடா ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் விவசாய ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார். கலாநிதி பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் ஒரு் காலப்பயணமாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

இவ்விஜயத்தின் போது ,, வடமாகாணத்தின் புவியியல் மற்றும் காலநிலை மற்றவர்கள் “ தொடர்பிலான சொற்ப்பொழிவுகளை நிகழ்த்த இருந்தார். அவ்வாறான ஒரு சொற்பொழிவை ரவிச்சந்திர நேசன் கடந்த 25 ஆம் திகதி ஜனவரி யாழ்ப்பாண வேளாண் மையத்தில் நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில் மயக்கமுற்று விழுந்து இறந்துள்ளார்.

இவர் யாழ்ப்பாணம் கோப்பாய் – கட்டைப் பகுதியை பூர்வீகமாக கொண்டவர். டொக்டர் ரவிச்சந்திரனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வட மாகாண அமைச்சருமான பொன்னுத்துரை ஐங்கரநேசனின் சகோதரர் ஆவார். இவர் இடதுசாரி கருத்தியல்பால் கொண்ட ஈடுபாட்டால் “வைகறை” என்ற பத்திரிகையை நடத்தி வந்ததாகவும், அதனால் அவர் வைகறை ரவி என்றும் அழைக்கப்பட்டார்.

நாய்க்கு தூக்கு தண்டனை கொடுத்த பெண் முல்லையில் கைது !

நாய்க்கு தூக்கு தண்டனை கொடுத்த பெண் முல்லையில் கைது !

 

தன் வீட்டு ஆட்டை கடித்த நாய் ஒன்றை தூக்கிலிட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் வடமாகாணம் – மாங்குளத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில், ஒட்டுசுட்டானில் உள்ள இணக்கச்சபை ஒன்றில் விசித்திரமான தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் அதில் நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் பதிவு ஒன்று அதிகம் பகிரப்பட்டு வந்தது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் இல்லை அரசு – மீட்டுத்தரக்கோரி சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனம் செய்து மக்கள் போராட அழைப்பு !

காணாமல் ஆக்கப்பட்டோர் இல்லை அரசு – மீட்டுத்தரக்கோரி சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனம் செய்து மக்கள் போராட அழைப்பு !

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக நினைவு கூர்ந்து தமிழ் மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் சர்வதேசத்திற்கு மட்டுமல்ல அனுர அரசுக்கும் எடுத்துக்கூறுவதற்கு அணிதிரளுமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு அதிகமாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிவேண்டிய போராட்டத்தை முன்னெடுத்த உறவுகளின் அன்னையர்கள் 300 இற்கும் அதிகமானோர் தமது அபிலாசைகளை எட்டாது இறந்துள்ளனர் என தெரிவித்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம், நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் எமது மக்களுக்கு இன்னமும் அதன் பலாபலன்கள் கிடைக்கவில்லை. இவ்வாறான பின்னணியில் வரவுள்ள இலங்கையின் 77 ஆவது சுதந்திர நாளை கரி நாளாக அனுஸ்டிக்க அழைப்பு விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ‘ வீரகேசரி ‘ நாளிழுக்கு வழங்கிய செவ்வியில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் “காணாமல் போனவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா..? என வீரகேசரி வார இதழின் ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , அவர்கள் காணாமல் போனதில் இருந்து ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டதாகவும் , அவர்கள் திரும்பி வருவார்கள் என நம்ப முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இம்முறை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவும் அது சார்ந்த வழக்குகளை விசாரிக்கவும் சட்டத்தின் முன் நிறுத்தவும் உறுதியளித்துள்ளோம் . காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. பாதிக்கப்பட்ட மக்களின் உடல் காயங்களுக்கு மருந்து போடலாம் . ஆனால் உள்ளக்காயங்களுக்கு மருந்துபோட இயலாது. போர் முடிவடைந்து 15 வருடங்களாகிறது. எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இனியும் வருவார்கள் என நம்பமுடியாது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது பிரச்சினையை சர்வதேச அரசுகளும் பயன்படுத்துவதாகவும், அதற்காகப் போராடுபவர்களுக்கு நிதியும் அரசியல் பின்னணியும் உள்ளதாகவும் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன.

என்பிபி அமைச்சர்கள் எவரும் பாதுகாப்பு கோரவில்லை ! தமிழ் தலைவர்களுக்கு தமிழ் பகுதிகளில் பாதுகாப்பு வேண்டுமாம் !

என்பிபி அமைச்சர்கள் எவரும் பாதுகாப்பு கோரவில்லை ! தமிழ் தலைவர்களுக்கு தமிழ் பகுதிகளில் பாதுகாப்பு வேண்டுமாம் !

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மெய்பாதுகாவலர்களின் பாதுகாப்பை பெற்றுக் கொள்ளவில்லை. இதேவேளை, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாண ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், எமது அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் யாருமே பொலிஸ் பாதுகாப்பைக் கோரவில்லை எங்களுக்கு எங்களுடைய மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இங்கு இருக்கின்ற அரசியல் வாதிகள் இன்னமும் தங்களுக்கு பாதுகாப்பு போதாது என்று கூக்குரலிடுகின்றனர் என தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

இரண்டு வாரங்களில் நாமல் கைது ! – யோஷிதவுக்கு பிணை !

இரண்டு வாரங்களில் நாமல் கைது ! – யோஷிதவுக்கு பிணை !

2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தற்போதைய அரசாங்கம் அஞ்சுவதானால் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்கான அரசாங்கத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மைய கைதுகள் பற்றி கருத்து தெரிவித்த பா.உ நாமல் ராஜபக்ச, “ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று என்னிடம் கேட்காதீர்கள். பிரதிப் பாதுகாப்பு அமைச்சர், காவல்துறை அமைச்சர் மற்றும் நாட்டின் ஜனாதிபதியிடம் கேளுங்கள். ஆனால் அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அரசியல்வாதிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வேட்டையாடுவதில் நேரத்தைச் செலவிடுகிறது.” நாட்டின் பாராளுமன்றத்தில் நான்தான் கூச்சலிடுகிறேன். என் சகோதரன் சிறைக்குச் சென்றார் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் யோஷித ராஜபக்ஷ கைதுசெய்யப்படவில்லை என தெரிவித்திருந்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, குற்றச்செயல்கள் ஊழலுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்திருந்தார்.

“சமஷ்டி, 13 ” தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினையல்ல – அமைச்சர் சந்திரசேகர் !

“சமஷ்டி, 13 ” தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினையல்ல – அமைச்சர் சந்திரசேகர் !

சமஷ்டியை தருவதற்காக நான் யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருக்கிறார் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வந்த போதே நான் இங்கு வருவது உங்களுக்கு 13ஐ தருவதற்கோ, ஈழத்தை தருவதற்கோ, சமஷ்டியை தருவதற்கோ இல்லை என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டார். தமிழர்கள் ஏராளமான பிரச்சினைகளால் ஒடுக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்தப் பிரச்சினைகளை மக்களோடு உரையாடுவதன் மூலமாக தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். 15 வருடமாக இருக்கின்ற கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு எங்களுடைய அரசாங்கம் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும். ஆனால் இந்த வெற்றியில் பங்குகொள்ள சிலர் விரும்புகின்றனர்” என்றார்.

ரோஹிங்கியா அகதிகளை இலங்கை பாதுகாப்புடன் நடத்தும் – ஐ.நா நம்பிக்கை !

ரோஹிங்கியா அகதிகளை இலங்கை பாதுகாப்புடன் நடத்தும் – ஐ.நா நம்பிக்கை !

அகதிகளாக வந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை இலங்கை பாதுகாப்புடன் நடத்தும் என்று நம்புகிறோம் என ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ப்ரான்ச் தெரிவித்தார்.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ப்ரான்ச் மற்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர ஆகியோருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை இலங்கை பாதுகாக்கும் விதம் குறித்து பாராட்டுக்களை தெரிவித்தார்.

அந்த மக்களை மீண்டும் மியன்மாருக்கு அனுப்பாமல் பாதுகாப்பான ஒரு நாட்டில் தங்க வைப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபை அவதானம் செலுத்தியுள்ளதாக கூறிய ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே, அதுவரை ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை இலங்கை பாதுகாப்புடன் நடத்தும் என்று நம்புகின்றோம் என தெரிவித்தார்