உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

மன்னாரில் முன்னாள் போராளி மர்மமான முறையில் மரணம்!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (5) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கம்பிகளின் மொழி பிறேம்“ என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம் குமார் என்ற 42 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் ”குறித்த நபர் நேற்று இரவு (05) அடம்பன் வீதியில் உள்ள தனது வீட்டிற்கு முன் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார்.

இதன்போது தன்னை வாகனத்தால் மோதி விட்டுச் சென்று விட்டனர் என சத்தம் போட்டுள்ளார்.

பின்னர் குடும்பத்தினரின் உதவியுடன் உடனடியாக அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த முன்னாள் போராளி ஒரு கால் மற்றும் ஒரு கையையும் இழந்தவர் என்பதுடன் பல்துறை சார் ஆளுமை மிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவு கழகம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

புதிய பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட கல்வி முறையும் அவசியமானது எனவும், அதற்கான கல்விச் சீர்திருத்தங்கள் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

காலி – ஹால் டி கோல் ஹோட்டலில் இன்று (06) நடைபெற்ற கல்வி நவீனமயமாக்கலின் புதிய அத்தியாயமாக தென் மாகாணத்தின் 200 பாடசாலைகளுக்கு 2,000 நவீன வகுப்பறைகள் மற்றும் 2,000 டெப் கணனிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்திர் ரமேஷ் பத்திரன இந்திய அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய தென் மாகாண சபைக்கு கிடைத்த 3,000 இலட்சம் ரூபாய் (30 கோடி) நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்ட 200 பாடசாலைகளில் 150 பாடசாலைகள் காலி மாவட்டத்திலும் ஏனைய 50 பாடசாலைகள் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அமைந்துள்ளன.

ஒரு வகுப்பறைக்கு 10 டெப் கணினிகள் என்ற வகையில் 200 வகுப்பறைகளுக்கு 2,000 டெப் கணினிகள் வழங்கப்பட்டன.

இதன் அடையாள அம்சமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய உயர்ஸ்தானிகர் சந்தூஷ் ஜாவிற்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:

“தற்போது உலகம் நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறி வருகிறது. அதற்கேற்ப, இந்நாட்டின் கல்வி முறையும் நவீன தொழில்நுட்பத்துடன் நடத்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான கல்விச் சீர்திருத்தங்கள் அமைச்சினால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அன்று நாம் பல கல்விக் கொள்கைகளை நாட்டுக்கு அறிமுகப்படுத்தினோம். அந்தக் கல்விக் கொள்கைகள் அன்றைய காலத்திற்கு ஏற்றதாக இருந்தாலும், இன்று ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால், கல்வித் துறையில் புதிய சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.

தற்போது பாடசாலைகளில், செயற்கை நுண்ணறிவுக் கழகங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கல்வியை தொடங்கி சில வருடங்கள் ஆகிறது. இந்த ஆண்டு நாம் ஆரம்பித்திருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சி தேவைப்படும். அதற்குத் தேவையான பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிளை அரசாங்கம் ஏற்படுத்தும். மத்திய கல்லூரிகள் மற்றும் தேசிய பாடசாலைகள் செயற்கை நுண்ணறிவு பாடசாலைகளாக மேம்படுத்தப்பட வேண்டும்.

நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறுவதில் அண்டை நாடான இந்தியாவிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கைக்கு ஐ.ஐ.டி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுடன் எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நடந்து வருகின்றன.

மலேசியாவில் நான் எலான் மஸ்குடன் கலந்துரையாடினேன். அவரது நிறுவனத்தின் இணையத் தொழில்நுட்பம் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் தொலைதூர கிராமங்களில் உள்ள பிள்ளைகளுக்கு தொழில்நுட்பக் கல்வி வழங்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்று தென் மாகாணம் கல்வித்துறையில் அதீத திறமைகளை வெளிப்படுத்தும் மாகாணமாக மாறியுள்ளது. தென் மாகாணத்தின் முதலாவது டச்சு பாடசாலையான பத்தேகம கல்லூரி இன்று தேசிய பாடசாலையாக மாறியுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்காலத்திற்கு ஏற்ற சந்ததியை உருவாக்கி ஒரு நாடாக உலகையே வெல்லும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் வைத்தியர்கள் – அம்பலப்படுத்திய சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் மீது தாக்குதல் நடத்திய வைத்தியர்கள்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் மீது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட வைத்தியர்கள் சிலர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்யையதினம் (04-07-2024) இடம்பெற்றுள்ளது.
யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் உயர் படிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், குறித்த வைத்தியசாலைக்கு வருகை தந்த வைத்தியர் அங்கு இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாடு இன்றி காணப்பட்ட சுகாதார சேவைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தும் விதத்தில் செயற்பட்டார். சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலும் வீடியோ பதிவுகளை தனது முகநூலில் பதிவேற்றியிருந்தார்.


இதேவேளை, குறித்த வைத்தியசாலையின் வளங்கள் மக்களுக்கு பயன்படுத்தப்படாத நிலையில் திட்டமிட்ட முறையில் இருட்டடிப்புச் செய்யப்படுவதாகவும் மகப்பேற்று விடுதியை கூட இயங்க விடாமல் வைத்திய குழு ஒன்று தடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனது பதிவில், மகப்பேறு விடுதி திடீர் விபத்து பிரிவு ஆகியவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரைகளை விடுத்ததன் எதிரொலியாக முன்னாள் வட மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தூண்டுதலின் பேரில் தனக்கு எதிராக வைத்திய அதிகாரிகள் சங்கத்தை களம் இறக்கி தன்னை குறித்த வைத்தியசாலையில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் சிலர் சேர்ந்து குறித்த வைத்தியசாலையின் செயற்பாடுகளை மழுங்கடிக்கும் முயற்சியில் கடந்த காலங்களில் செயற்பட்டதாகவும், தான் இந்த வைத்தியசாலைக்கு வருகை தந்ததும் இவ்வாறான விடயங்களுக்கு இடம்கொடுக்க மாட்டேன் என தெரிந்த நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.

மக்கள் போராட்டம்

இந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக வைத்திய அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலை அத்தியட்சகருக்கும் வைத்தியசாலையில் பணிபுரிகின்ற வைத்தியர்களுக்கும் முரண்பாடுகள் தோன்றி இருந்ததையடுத்து சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் பணிபுரியும் வைத்தியர்கள் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நேற்றைய தினமும் இன்றைய தினமும் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற செல்லுகின்ற நோயாளிகள் அனைவரும் திருப்பி அனுப்பப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் தென்மராட்சியின் பொது அமைப்புக்கள், நலன் விரும்பிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இன்று முற்பகல் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த மாகாண சுகாதார பணிப்பாளரை சந்தித்து நிர்வாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முதல் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் இல்லையேல் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவிப்பதற்காக வைத்தியசாலை முன்பாக குழுமி இருந்தனர்.

அவ்வேளை அங்கு வருகைதந்த சாவகச்சேரி பொலீசார் வைத்தியசாலை முன்பாக குழுமி இருந்தவர்களை அகற்ற முற்பட்டனர்.

இதன்போது அமைதியான முறையில் நாங்கள் மாகாண சுகாதார பணிப்பாளரை சந்தித்து சிகிச்சை நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க கோரிக்கை முன்வைக்கவே எந்தவித இடையூறுகளும் செய்யாமல் இருக்கின்றோம் ஆகவே எம்மை கலைந்து செல்லுமாறு கூற முடியாது என்று தெரிவித்த முன்னாள் நகரசபை உறுப்பினர் கிஷோரை அங்கிருந்த சாவகச்சேரி பொலிசார் கைது செய்தனர்.

அது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ்க்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு உடனடியாக விரைந்த மனித உரிமை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் பொதுமக்களோடும் வைத்தியசாலை நிர்வாகத்தோடும் கலந்துரையாடியதோடு உடனடியாகவே சாவகச்சேரி போலீஸ் நிலையத்திற்கு சென்று கைது செய்யப்பட்ட முன்னாள் நகர சபை உறுப்பினரையும் பார்வையிட்டார்.

இதனை அடுத்து சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கிஷோர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விடுதிகளில் தங்கி இருந்து சிச்சை பெற்றவர்கள் அனைவரும் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டதோடு வீடுகளுக்கும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் வைத்தியசாலை வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது.

கிளிநொச்சியில் அதிரடியாக யுக்திய சுற்றிவளைப்பு – ஐஸ் போதைப் பொருட்களுடன் பலர் கைது !

கிளிநொச்சி – தருமபுரம் காவல்துறை பிரிவில் முன்னெடுக்கப்பட்ட யுத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரம் – கல்லாறு பகுதியில் இன்று (05) அதிகாலை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து செயற்பட்டனர்.

இதன்போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டதுடன் ஐஸ் போதைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை காவல்துறை விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“நாடு பற்றி எரிந்தபோது ஓடி ஒழிந்தவர்கள் ஜனாதிபதி தேர்தல் என்றவுடன் நானும் ஜனாதிபதிதான் என்று கூவிக்கொண்டு வருகின்றார்கள்.” – இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்

“நாடு பற்றி எரிந்தபோது ஓடி ஒழிந்தவர்கள் ஜனாதிபதி தேர்தல் என்றவுடன் நானும் ஜனாதிபதிதான் என்று கூவிக்கொண்டு வருகின்றார்கள்.” என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் உறுமைய காணி உறுதி வழங்கும் வேலை திட்டத்திற்கு அமைவாக கிழக்கு மாகாணத்திற்கான நடமாடும் சேவை வியாழக்கிழமை (04) மட்டக்களப்பில் முன்னெடுக்க எடுக்கப்பட்டிருந்தது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுக்கு சொந்தமான காணியில் குடியிருந்து இதுவரையில் காணி உறுதிகள் இல்லாதவர்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் மூன்றாவது நடமாடும் சேவை இதன்போது மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் கோரிக்கைக்கு அமைவாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் இணைந்து இந்த நடமாடும் சேவை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 

இதன் ஆரம்ப நிகழ்வு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான பணிப்பாளர் என்.விமல்ராஜ் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

 

மேலும், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பத்மசிறி லியனகே, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் உட்பட பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

 

இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

 

கிழக்கு மாகாணத்தில் அதிகப்படியான வேலை திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு எம்மிடம் உள்ளது.இந்த நாடு மிகப்பெரிய ஆபத்தான நிலையில் இருந்த வேலையில் நாம் அவர்களை கைவிட்டு ஓடிவிட முடியாது ஒரு குறுகிய காலத்துக்குள்ளே எமது நாடு பொருளாதார ரீதியில் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகின்றது. மக்கள் தலைவர்கள் என்பவர் வெளிச்சத்தை ஏற்பவராக இருக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தல் வர இருக்கின்றது. தினம் தினம் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் வந்து கொண்டே இருக்கின்றார்கள் நாடு பற்றி எரிந்தபோது ஓடி ஒழிந்தவர்கள் ஜனாதிபதி தேர்தல் என்றவுடன் நானும் ஜனாதிபதிதான் என்று கூவிக்கொண்டு இதில் பலர் இந்த நாடு பற்றி எரிந்தபோது,நாட்டு மக்கள் தவிர்த்தபோது வீட்டு மூலைக்குள் ஒழிந்திருந்தவர்களும் இந்த நாடு இன்னும் நூறு வருடத்திற்கு மேல் எழமுடியாது என்று அறிக்கை விட்டவர்களுமே இவர்கள்தான்.

 

நாம் இந்த நாட்டை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும் அப்போது நாட்டை பொறுப்பெடுத்த தலைவர் நாட்டை விட்டு ஓடவில்லை களத்தில் நின்று தான் மக்களுக்காக இறுதிவரை போராடினார். என அவர் இதன்போது தெரிவித்தார்.

சிறுமிகள் குளிக்குமிடங்களை வீடியோ பதிவு செய்த கொடூரம் – யாழ்ப்பாணத்தில் ஆறுதிருமுருகனினால் நடாத்தப்பட்ட சிறுவர் இல்லத்திற்கு சீல் !

சிவபூமி அறக்கட்டளையின் தலைவரான கலாநிதி ஆறு.திருமுருகனால் யாழ்ப்பாணம் தெல்லிப்பழைப் பகுதியில் நடத்தப்பட்டு வரும் துர்க்காபுரம் சிறுவர் இல்லத்தையும், இன்னொரு சிறுவர் இல்லத்தையும் உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

மகளிர் இல்லத்தில் பெண்பிள்ளைகள் குளிக்கும் இடத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கமராக்களால் சிறுமிகள் குளிப்பதும், உடைமாற்றுவதும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சிறுமிகளின் உரிமை மீறப்படுவதாகவும், அவர்கள் சமூகச் சீரழிவுகளை எதிர்கொள்வதாகவும் வழங்கப்பட்ட முறைப்பாடுகளையடுத்தே குறித்த இல்லத்தை மூடும் உத்தரவை ஆளுநர் பிறப்பித்துள்ளார். மற்றைய இல்லம் முறையான அனுமதி பெறப்படாத காரணத்தால் மூடப்பட்டுள்ளது.

 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-

ஆறு. திருமுருகனால் நடத்தப்பட்டு வரும் மகளிர் இல்லத்துக்கு கடந்த மே மாதம் 29 சிறுமிகள் மலையகத்திலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகளாவர். சிறுமிகளுக்கான விடுதியில் தங்கவைக்கப்பட வேண்டிய அவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டோரைத் தங்கவைக்கும் பெண்கள் விடுதியிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே தன்னை பெரிய வள்ளலாக காட்டிக்கொண்ட தியாகி அறக்கட்டளை வாமதேவன் தியாகேந்திரனினால் நடத்தாப்பட்டு வந்த சிறுவர் இல்லம் தொடர்பான வாத விவாதங்கள் முடிவுக்கு வந்திராத நிலையில் தன்னை கலாச்சார காவலனாகவம்- இந்து சமய மீட்பராகவும் காட்டிக்கொண்ட ஆறுதிருமுருகனினால் நடாத்தப்பட்ட சிறுவர் இல்லமும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது தாக்குதல் – நான்கு இளைஞர்கள் கைது !

யாழ்ப்பாணத்தில்  காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் திருகோணமலையை  சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பேருந்து நிலையத்தில் நேற்று இரவு இளைஞர்கள் குழு ஒன்று அமைதியின்மையை ஏற்படுத்துவதாக யாழ்ப்பாண காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து, பேருந்து நிலையத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கு அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை கைது செய்ய முயற்சித்துள்ளனர்.

இதன்போது, இளைஞர்கள் குழு காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

தாக்குதலில் இரண்டு காவல்துறையினர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நான்கு இளைஞர்களும் காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டமை, கடமைக்கு இடையூறு விளைவித்தமை, பொது இடத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள நான்கு இளைஞர்களையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரவித்துள்ளனர்.

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 3000 தற்கொலைகள்!

நாட்டில் ஒவ்வொரு வருடமும் 3,000 க்கும் மேற்பட்ட உயிர்கள் தவறான முடிவுகளால் இழக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூலை (1)ஆம் திகதி முதல் (7) ஆம் திகதி வரை தேசிய காயம் தடுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், தவறான முடிவுகள் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார அச்சுறுத்தலாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆபத்தான போக்கை எதிர்த்துப் போராடுவதற்கு, மேம்பட்ட மனநல ஆதரவு சேவைகள், சமூக விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் பயனுள்ள தவறான முடிவு தடுப்பு உத்திகள் ஆகியவற்றின் அவசர தேவையை சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் மதுவரி மூலம் 105 பில்லியன் ரூபா வருமானம் !

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை மதுவரி வருமானத்தின் மூலம் 105 பில்லியன் ரூபாவை ஈட்ட முடிந்துள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் தெரிவித்துள்ளது.

இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 17 பில்லியன் ரூபா அதிகரிப்பு என மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் எம்.ஜே.குணசிறி குறிப்பிட்டுள்ளார்.

“2024 ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை,​ மதுவரித் திணைக்களம் திட்டமிட்டபடி 105 பில்லியன் ரூபாயை ஈட்டியுள்ளது.

கடந்த ஆண்டு இந்த நேரத்தில், நாங்கள் 88 பில்லியன் ரூபாவைக் ஈட்டியிருந்தோம். இதன்படி 17 பில்லியன் ரூபா வளர்ச்சியை எட்டியுள்ளோம்.

இந்த 6 மாதங்களுக்குள் 20 பில்லியன் வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.

இயற்கை அனர்த்தங்கள் காரணமாக, எமது பிரதான உற்பத்தியகங்களில் பல சிக்கல்கள் ஏற்பட்டன.

இதனால், சுமார் 3 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டது.

இல்லையெனில், திட்டமிட்டபடி 107 பில்லியன் இலக்கை நோக்கி அடைந்திருப்போம்.

அதன்படி, கடந்த ஆண்டை விட சுமார் 20% வளர்ச்சியை எட்டியுள்ளோம். இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்” என்றார்.

இலங்கையின் 09வது ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே சம்பந்தன் இறந்துவிட்டார் !

இலங்கையின் 09வது ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காலமாகிவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வு தரப்படவேண்டும் என்பதில் இலங்கையின் எட்டு ஜனாதிபதிகளுடன் பேசி நம்பி ஏமாந்த தலைவராகவே நாங்கள் சம்பந்தன் ஐயாவினை பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

மறைந்த தமிழ் தேசிய பெருந்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் ஆத்ம சாந்தி வேண்டி, இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிப்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை பகுதியில் நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. அதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் மற்றும் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டார கிளை தலைவர் செயலாளர், பொருளாளர், இளைஞர் அணி மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.