உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

தனியாருக்கு சொந்தமாகும் சிறீலங்கா டெலிகொம்!

சிறிலங்கா தொலைத் தொடர்பு நிறுவனத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான சொத்து எண்ணிக்கை கணக்கிடும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

 

வெளிநாட்டு நிறுவனமொன்றினால் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் ஜகத் குருசிங்க தெரிவித்தார்.

இந்த நிலைமையை தடுக்க எதிர்வரும் நாட்களில் கடுமையான தொழில்சார் நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் மூலம் இந்நிறுவனத்தின் பெறுமதி கணக்கிடப்படுவதாகத் தெரிவித்த அவர், தனியாருக்கு கடன் வழங்குவதே இந்த நிறுவனத்தின் பொறுப்பாகும் என்றார்.

இது மிகப் பெரிய மோசடி என்றும், இதற்கு எதிராக கடுமையான தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

4000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் ஐவர் கைது !

4000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் நீண்ட நாள் மீன்பிடி படகில் பயணித்த 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

பொலிஸ் போதைப்பொருள் பிரிவினரும் கடற்படையினரும் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

இன்று(22) காலை தேவேந்திரமுனை மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்த குறித்த படகை சோதனையிட்ட போது, அதிலிருந்து சுமார் 200 கிலோகிராம் ​ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்படும் அபாயம்..?

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியினை நேற்று நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளார்.

 

கொக்குதொடுவாய் புதைகுழி தொடர்பான விடயத்தை பார்க்கும் போது ஏற்கனவே இறுதி நாளன்று 17 உடலங்கள் புதைகுழியின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும், நிறுத்தப்பட்ட தினத்தின் போது ஒக்டோபர் மாதம் நடுப்பகுதி அல்லது பிற்பகுதி அடுத்த அகழ்வு ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால் அண்மையில் நிதி போதாத நிலமையை சுட்டிக்காட்டி காலதாமதம் ஆகலாம் என்று ஒரு தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

 

எங்களுக்கு இதில் ஒரு ஐயம் ஏற்படுகின்றது என்னவென்றால் காலதாமதங்கள் , நிதி இல்லை என்று கூறுவதும், ஒக்டோபர் மாதத்திற்கு பிற்போடப்பட்டதும், குறித்த காலப்பகுதி மழை காலமாக இருப்பதாலும் இப்படியே மூடி மறைக்கப்பட்டு விடுமோ என்ற சந்தேகம் ஒன்று ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த நிலையில், சட்டத்தின் ஆட்சியை நடத்துமாறும் வெளிப்படைத்தன்மையை மக்களோடு பேணுமாறு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

“நாடாளுமன்றத்தில் மரியாதை, ஒழுக்கம் என்ற ஒன்று இல்லையா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் முறையாக நடந்து கொள்ளாவிட்டால் அதனை எதிர்கொள்ளும் அதிகாரம் வழங்கும் வரைவு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நாளை சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த வரைவை தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரிவித்த ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில் மரியாதை, ஒழுக்கம் என்ற ஒன்று இல்லையா என மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் குறிப்பிட்டார்.

 

எனவே, நாடாளுமன்றத்தின் ஒழுக்கம் மற்றும் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில், இங்கிலாந்தின் நாடாளுமன்ற நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

“காஸாவில் வைத்தியசாலை மீதான தாக்குதலை கண்டிப்பவர்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் எதுவும் கதைக்கவில்லை.” – எம்.ஏ.சுமந்திரன்

காஸாவில் வைத்தியசாலை மீதான தாக்குதலை கண்டிப்பவர்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் எதுவும் கதைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

 

இஸ்ரேல், பலஸ்தீன் பகுதிகளில் இடம்பெறும் கொலைகளுக்காக எமது கண்டனங்களை தெரிவிக்கின்றோம். அங்கு பாரியளவில் மனித அவலங்கள் இடம்பெற்று வருகின்றன.

 

அது சிறிய நாடாக இருந்தாலும் நாங்கள் ஒன்றும் தெரியாதது போன்று நடு நிலையாக இருந்துவிட முடியாது. சரி பிழைகள் தொடர்பில் கூற வரவில்லை இரு தரப்பின் நியாயங்கள் , அநியாங்கள் தொடர்பில் கதைப்பதற்கான நேரமல்ல.

 

வன்முறைகளை எதிர்க்க வேண்டும். இரு தரப்பினரும் யுத்தத்தை நிறுத்தி மனித அவலங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

நீண்ட காலமாக நாங்களும் இவ்வாறான யுத்தம் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு யார் பொறுப்பாளிகள். அத்துமீறியவர்களையே நாங்கள் இனங்காண வேண்டும்.

 

முதலில் அவல யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும். நாடுகள் வன்முறைகளின் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முயல்கின்றன.

 

இந்த காலத்தில் அதற்கு இடமளிக்க முடியுமா? அதனை ஏன் தீர்த்து வைக்க முடியவில்லை. பேச்சுவார்த்தைகள், மத்தியஸ்தம் வகித்தல் ஆகியன மூலம் தீர்வுகளை காணலாம்.

 

உலகில் பல பகுதிகளில் சண்டைகள் நடக்கின்றன. உக்ரேன் மத்திய கிழக்கு நாடுகளில் சண்டைகள் நடக்கின்றன. மத்திய கிழக்கில் நடக்கும் விடயங்களின் தாக்கங்களை நாங்கள் மூன்று தசாப்தங்களாக அனுபவித்துள்ளோம்.

வைத்தியசாலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எமது நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

காஸாவில் வைத்தியசாலை மீதான தாக்குதலை கண்டிப்பவர்கள் இங்கே வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் எதுவும் கதைக்கவில்லை.

 

இங்கேயும் அரச பயங்கரவாதமே இருந்தது. எவ்வகையாக வன்முறையாக இருந்தாலும் அவை கண்டனத்திற்குரியதே. இஸ்ரேல் காஸாவை விட்டு விலக வேண்டும். எவராக இருந்தாலும் மக்கள் உயிர்களை பறிக்க எந்த உரிமையும் கிடையாது.

 

இங்கே சிலர் இரட்டை வேடத்துடன் செயற்படுகின்றனர். அரசியல் ரீதியான பிரச்சினையே பல நாடுகளில் நடக்கின்றன. அவற்றை அரசியல் ரீதியில் தீர்க்க முடியும். இங்கேயும் அதே நிலைமையே இருக்கின்றது.

 

அரசியல் தீர்வாக இராணுவ தீர்வு அமைய முடியாது என்று மஹிந்த ராஜபக்ஷ் கூறினார். ஆனால் இறுதியில் அவர் இராணுவ தீர்வையே முன்னெடுத்தார்.

 

எவ்வாறாயினும் இவ்வாறான வன்முறைகளை அனுமதிக்க முடியாது. இவற்றை கண்டிக்க வேண்டும். துன்பப்படும் மக்கள் யாராக இருந்தாலும் நாங்கள் ஒற்றுமையுடன் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

உலகின் சிறந்த 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் !

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் Elsevier நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

 

இந்தப் பட்டியலில் இலங்கையிலிருந்து உள்ளடக்கப்பட்டிருப்போரில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்களான பேராசிரியர் நவரட்ணராஜா சதிபரன்,கலாநிதி ரி.மதனரஞ்சன் ஆகிய இருவரும் இடம் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

பணிநாள் மற்றும் வருடாந்த அடிப்படையில் விஞ்ஞானிகளைப் பல்வேறு காரணிகளைக் கொண்டு தர வரிசைப் படுத்தி இந்தப் பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

 

22 அறிவியல் துறைகள் மற்றும் 176 துணைத்துறைகளில் இருந்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியலில் இணைக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்றத்தில் தாக்கப்பட்ட விவகாரம் – விசாரணை குழு நியமனம்!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தெரிவித்தார்.

 

இந்த விடயம் தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் 07 ஆம் திகதி சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (20) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக சபாநாயகர் குழுவொன்றை அமைத்துள்ளார்.

 

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸவின் தலைமையிலேயே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 

இந்த குழுவில் ஆளுங்கட்சி சார்பில் சமல் ராஜபக்ஸ மற்றும் ரமேஷ் பத்திரண ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

எதிர்க்கட்சி சார்பில் கயந்த கருணாதிலக்கவும் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரும் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மேலும் 9 தனியார் பல்கலைக்கழகங்கள்!

மேலும் 9 தனியார் பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

 

தற்போதுள்ள பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இரண்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் p சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

 

குறித்த பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“திவுல்பத்தான மக்கள் மீது மீண்டும் கை வைத்தால் தமிழ் – சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும்.” – எச்சரிக்கிறார் சரத் வீரசேகர !

விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்ட திவுல்பத்தான மக்கள் மீது மீண்டும் கை வைத்தால் தமிழ் – சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும் என சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு பகுதி, நாட்டில் ஒதுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் புலிகள் அமைப்பை தோற்கடித்ததையடுத்து, இன்று ஜெனிவாவில் போர்க்குற்றச்சாட்டுக்கு முகம் கொடுத்துள்ளோம். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளினாலேயே நாம் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். இந்த நாடுகள் அன்று எம்மை போர் நிறுத்தம் செய்யுமாறு அறிவித்தன. ஆனால், இன்று காஸா மீது போரைத் தொடருமாறு அமே நாடுகள்தான் தெரிவித்து வருகின்றன. இது உண்மையில் வெட்கத்துக்குரிய விடயமாகும்.

வெளிநாடுகளில் வாழும் தமிழ்ப் பிரிவினைவாதிகள், இன்றும் ஈழக்கனவுடன்தான் இருக்கிறார்கள். அந்த நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளுக்கு இவர்கள் அழுத்தம் கொடுக்கிறார்கள். நாம் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள்.

இந்நிலையில், திவுல்பத்தான கிராமத்திலிருந்து சிங்கள மக்களை வெளியேற்ற வேண்டும் என இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவருக்கு ஒன்றை தெரிவிக்க வேண்டும். இந்த விடயத்தில் தேவையில்லாமல் தலையிடாதீர்கள். யுத்த காலத்தின்போது புலிகளால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் அந்த கிராமத்திலிருந்து சிங்கள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து தான், அந்த விவசாயிகள் தங்களின் பூர்வீக நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இவர்களின் பெயர் பட்டியல் அனைத்தும் கிராம சேவகரிடம் உள்ளது. இந்த அப்பாவி மக்களை அங்கிருந்து வெளியேற்ற நினைப்பது தவறாகும்.

இது மீண்டும் தமிழ் – சிங்கள முரண்பாட்டுக்கு இடமளிக்கும். ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு பகுதி, நாட்டில் ஒதுக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்பது புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவாகும் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, நாடாளுமன்றுக்கு வரும் முன்னர் பிரபாகரனிடம்தான் பதவியேற்றார்கள். எனவே, நாட்டில் இல்லாத பிரச்சினையொன்றை ஏற்படுத்த வேண்டாம் என் இவர்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

கடந்த ஆண்டை விட 97.5 வீதத்தினால் அதிகரித்த இலங்கை சுற்றுலாத்துறை வருமானம்!

இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த ஆண்டை விட 97.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

இந்த வருடத்தின் வருமானம் 478.7 பில்லியன் ரூபா என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் சுற்றுலா வருமானம் 242.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியது.