செய்திகள்

செய்திகள்

செய்திகள்

யாழ். பாடசாலைகளுக்கு 33 தகவல் தொழில் நுட்ப ஆய்வு கூட வசதிகள்

யாழ். மாவட்டத்திலுள்ள 33 பாடசாலைகளுக்கு தகவல் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக கணனிகள் வழங்கும் நிகழ்வு யாழ். நகரில் நடைபெற்றது.

தகவல் தொழில் நுட்ப ஆண்டை முன்னிட்டு நாடு முழுவதும் 1000 தகவல் தொழில் நுட்ப ஆய்வு கூடங்கள் 1000 பாடசாலைகளில் அமைக்கப்படவுள்ளன.

இத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்திற்கு 41 பாடசாலைகளில் 41 ஆய்வு கூடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. யாழ். மாவட்டத்தில் 33 பாடசாலைகளிலும், ஏனையவை வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் அமைக்கப்படவுள்ளன.

அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் இரத்மலானை சிவகுமார் சடலம் மீட்பு; பொலிஸ் காண்ஸ்டபிள் கைது

bambalapitiya.jpgகொழும்பு,  பம்பலப்பிட்டி கடலில் அடித்துக் கொலை செய்யப்பட்டவர் இரத்மலானைப் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது சடலம் நேற்று பம்பலப்பிட்டி கடற் பகுதியில் கரையொதுங்கியது. சடலத்தை மீட்டெடுத்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தரான திமுது சொம்னத் என்பவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

இறந்தவரின் சகோதரர் நேற்று பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார். இறந்த தனது சகோதரர் அங்கொடை மனநோயாளர் மருத்துவ நிலையத்தில் மூன்று தடவைகள் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளார். குறிப்பிட்ட நபரை தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தரும் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

பம்பலப்பிட்டி கடற்கரையில் நேற்று முன்தினம் மாலை பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகளை தனியார் தொலைக்காட்சி யொன்று நேற்றுமுன்தினம் இரவு ஒளி பரப்பியது. இதனையடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டனர்.

விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது: கரையோரத்திலிருந்த இளைஞரொருவர் நேற்றுக்காலை முதல் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மற்றும் ரயில்கள் மீது கற்களை எறிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இறுதியாக ரயில் ஒன்றின் மீது குறித்த இளைஞன் கற்களை வீசி எறிந்த போது அங்கிருந்தவர்கள் கூடி அவனை நையப்புடைத்துள்ளனர்.

அதனையடுத்து கரையோரத்தில் சனக்கூட்டம் அதிகமாகவே அங்கிருந்த ஒருவரினால் இச்சம்பவம் வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. அதில் சிலர் கடலுக்குள் வைத்து குறித்த இளைஞனை பொல்லினால் தாக்க முயற்சிப்பதாயும் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்த நிலையில் கடலுக்குள் அமிழ்ந்து போவது காண்பிக்கப்பட்டது.

உண்மையில் இளைஞன் பொதுமக்களினால் கரையில் வைத்து தாக்கப்படும் போது தவறி கடலுக்குள் விழுந்தானா? அல்லது சம்பவ இடத்துக்கு விரைந்த பம்பலப்பிட்டி பொலிஸார் அவனை கைது செய்ய முற்பட்டவேளை தான் தப்புவதற்காக கடலுக்குள் குதித்தானா? என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மெத்திவக்க தெரிவித்தார்.

உயிரிழந்த இளைஞன் புத்தி சுவாதீனமற்றவன் எனத் தகவல்கள் கிடைத்துள்ளமையால் அது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனக் கூறிய பொலிஸ் பேச்சாளர், இளைஞன் பொல்லினால் தாக்குண்டதினால் தான் கொல்லப்பட்டானா என்பது குறித்தும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேபாள முன்னாள் பிரதமர் புஷ்பகமல் பாராட்டு!

pr-nep.jpgபயங் கரவாதம் ஒழிக்கப்பட்டமைக்கும் நாட்டின் ஏனைய பகுதிகளில் சிறந்த முறையில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தமைக்காகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேபாளத்தின் முன்னாள் பிரதமர் புஷ்பகமல் பாராட்டியுள்ளார்.இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று நேபாளம் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அந்நாட்டு விமான நிலையத்தில் இராணுவ அணிவகுப்புடன் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேபாளத்தின் முன்னாள் பிரதமர் புஷ்பகமல் சந்தித்து பேச்சு நடத்தினார். சுமுகமான முறையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது நாட்டில் 30 வருடங்களாக நீடித்து வந்த பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைககள் முழு உலகிற்கும் சிறந்த முன்னுதாரணமாகுமென முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

நேபாளம், இலங்கை ஆகிய இரு நாடுகளிடையே நீண்டகாலமாக நிலவி வரும் கலாசாரம் மற்றும் மக்கள் தொடர்புகள் தன்னுடைய இந்த விஜயத்தின் மூலம் மேலும் வலுப்பெறுமென தான் நம்புவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
நேபாளத்தில் லும்பினி நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “ஸ்ரீலங்கா மஹாவிகாரை”யினை ஜனாதிபதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்படுகிறது. 

ஜீ. எஸ். பி சலுகை கிடைக்காவிட்டாலும் விளைவுகளை முகம்கொடுக்க தயார் – மத்திய வங்கி ஆளுநர் கப்ரால்

ஜீ. எஸ். பி. + சலுகை கிடைக்காமல் போகும் பட்சத்தில் கூட அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

சரியான தயார்படுத்தல்கள், அணுகு முறைகள், கவனம் செலுத்தல் என்பனவற்றின் மூலம் இது சாத்தியமாகி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சலுகைகளை உரிய முறையில் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்வதுடன் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.

ஜீ.எஸ்.பி. + சலுகை கிடைக்கும் என்று நம்புவதாக தெரிவித்த அவர், அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் முழு நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஜீ.எஸ்.பி + சலுகை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

“இடர் முகாமைத்துவ நோக்கிலிருந்து பொதுவாக்கப்பட்ட முன்னுரிமைகளின் முறைமையும் (ஜீ.எஸ்.பி+) இலங்கையையும் பற்றிய ஒரு பகுப்பாய்வு” என்ற தொனிப் பொருளில் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில்,

ஜீ.எஸ்.பி + சலுகை கிடைக்கும் பட் சத்தில் அது மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். ஆனால் நீக்கப்படும் பட்சத்தில் கூட அந்த சலுகை இல்லாமலேயே முன் னேறிச் செல்வதற்கான தயார் நிலைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பரஸ்பர நன்மையற்ற சலுகைகள் எப்போதும் பாரிய இடர்நிலையையே ஏற்படுத்தும். ஜீ.எஸ்.பி + இதுபோன்ற ஒன்றுதான். ஜீ.எஸ்.பி + மூலம் கிடைக்கும் நன்மைகள் வேறுவகையான இடர்களை தோற்றுவிக்கக்கூடியவை.  எனவே பொருளாதார முகாமைத்துவத்தில் தொடர்ச்சியாக இடர் முகாமைத்து வத்திற்கான ஆயத்தங்களை செய்திருக்க வேண்டும். ஐரோப்பிய யூனி யனுக்கான ஏற்றுமதியை பொறுத்தமட்டில் அதற்கான போட்டியில் கணிசமான அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. நவம்பர் 2008 முதல் ஜனவரி 2009 வரையான காலப்பகுதியில் இலங்கை ஏற்றுமதியாளர்கள் இதில் அதிகரிப்பை காட்டியுள்ளனர்.

இலங்கையின் நாணயப் பெறுமானத்தில் ஏற்பட்ட தேய்வும் இதற்கான காரணமாகும். இந்நிலையில் ஜீ.எஸ்.பி + சலுகை நீக் கப்பட்டால் முன்னுரிமை வரிஎல்லை 7 சதவீதமாக இழப்பினை ஏற்படுத்தக் கூடும். ஆனால் இது நாணயத்தின் பெறு மான தேய்வு எல்லைக்கு உட்பட்டதாகவே இருக்கும். எனவே இந்த சலுகை இழப்பானது ஏற்றுமதிக்கு பாரிய தாக் கத்தை ஏற்படுத்துவதாக அமையாது.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் முன்வைக்கப்படும் சகல தகவல்களையும் கருத்துக்களையும் மத்திய வங்கியின் ஆய்வுக்குழு ஆராய்ந்து அது தொடர்பில் அவ்வப்போது தேவையான நடவடிக்கை களையும் முன்னெடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டாக்டர் டி.எஸ். விஜேசிங்க, உதவி ஆளுநர் டாக் டர் பி.என். வீரசிங்க, பொருளியல் ஆய்வு திணைக்களத்தின் பதில் மேலதிகப் பணிப் பாளர் திருமதி எஸ். குணரட்ன உட்பட முக்கியஸ்தர் பலர் கலந்து கொண்டனர்.

உடன்படிக்கை மூலம் ஐ.தே.கவினால் புலிகளுக்கு இறைமை தாரைவார்ப்பு – அநுர பிரியதர்ஷன யாப்பா

0000anura.jpgபுலி களுடனான போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலம் புலிகளின் தனி அரசை ஏற்றுக் கொண்டு, நாட்டின் இறைமையைக் காட்டிக் கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு, இராணுவ வெற்றியை விமர்சிக்க அருகதை உள்ளதா என அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. புலிகளின் தனி அரசுக்கு அங்கீகாரம் வழங்கியது பற்றியும் அவர்களுக்கு அரசாங்கத்தின் செலவில் வானொலி உபகரணங்களைப் பெற்றுக் கொடுத்தது பற்றியும் ஐக்கிய தேசிய கட்சி பதிலளித்தாக வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய செயற்பாடு நாட்டை அராஜகத்திற்குள் தள்ளும் ஒரு சூழ்ச்சியின் ஆரம்பம் என்று குறிப்பிட்ட அமைச்சர் யாப்பா, அதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென்றும் வலியுறுத்திக் கூறினார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்குமுகமாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரித்தார்.

“நாடு அடைந்துள்ள வெற்றி குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு விதமான கருத்துகளை விதைக்க முனைகிறார்கள். “கசப்பான வில்லையொன்றை சொக்கலட்டுக்குள் வைத்து மூடி விழுங்கச் செய்யப் பார்க்கிறார்கள். இதற்கு இடம் கிடையாது,” என்று கூறிய அமைச்சர் யாப்பா, 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலம் இலங்கை காட்டிக் கொடுக்கப்பட்டதாகவும், இந்த உடன்படிக்கையின் ஐந்தாண்டு பூர்த்தியையொட்டி புலிகள் வெளியிட்ட கருத்துகள் மூலம் இது உறுதியாகுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

புலிகளின் தாயகத்தை அங்கீகரித்து, தனித் தமிbழ அரசுக்கான சனத்தொகை, பொலிஸ், பாதுகாப்புப் படை, நீதிக் கட்டமைப்பு, சிவில் நிர்வாகம், எல்லை வரையறை ஆகியவற்றை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக் கொண்டிருந்ததாகப் புலிகள் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் யாப்பா குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் செலவில் வானொலி உபகரணங்கள்

வானொலி உபகரணங்களை அரசாங்கத்தின் செலவில் தருவித்து அதனை புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள். இதற்கு ஊடகத்துறை அமைச்சு நிதி வழங்கியதா, அல்லது பாதுகாப்பு அமைச்சு வழங்கியதா? என்பதை ஐக்கிய தேசியக் கட்சி வெளிப்படுத்த வேண்டு மென்றும் அமைச்சர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புச் செயலாளராகவிருந்த ஒஸ்ரின் பெர்னாண்டோவின்  நூலில் 673 ஆம் பக்கத்தில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளாரென்று குறிப்பிட்ட அமைச்சர் யாப்பா, நோர்வே அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம் கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாடொன்றில் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலேயே வானொலிக் கருவிகள் தருவிக்கப்பட்டதாகக் கூறியுள்ளாரென்றும் தெரிவித்தார்.

இலங்கையின் இறைமையைப் பார தூரமாகப் பிழிந்தெடுத்த ஐக்கிய தேசியக் கட்சி, அந்த நிலையை மேலும் வலுவாக்க முனைந்தவேளையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடன்படிக்கையை இல்லாது செய்து நாட்டை மீட்டெடுத்தார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“இன்று பல வெளிநாடுகளில், இலங்கையில் புலிகள் இருந்த அதே கால கட்டம் நிலவுகிறது. பாகிஸ்தானில் நிலைமை – அவ்வாறு தான் உள்ளது. அதனைத்தான் இலகையில் தோற்கடித்துள்ளோம்.

எனவே, என்ன விதத்தில் உடையணிந்து கொண்டு ஐக்கிய தேசிய கட்சியினர் இராணுவ வெற்றியை விமர்சிப்பார்கள்? ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்பாளர் ஒருவர் இல்லாததாலும், தோல்வியைத் தழுவுவது நிச்சயம் என்பதாலும், இப்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை பற்றிப் பேசுகிறார்கள்!  இந்த ஜனாதிபதி முறைமை இருந்தால் தான் பயங்கரவாதத்தை ஒழிக்க முடிந்தது. அது போல், ஜனாதிபதியின் அரசியல் தலைமைத்துவம் தான் இதற்கு வழி கோலியது.

ஜனாதிபதி முறையை மாற்றுவதென்பது எடுத்த எடுப்பில் செய்ய முடியாது. அது நீண்டகாலச் செயற்பாடு. ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்தில் புதிய யாப்பு கொண்டு வந்தபோது அதனை எரித்துச் சாம்பராக்கினார்கள்.  இலங்கை அரசியலமைப்பின் 3 ஆவது திருத்தத்தின்படி ஜனாதிபதி பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததும், மீண்டும் மக்களின் ஆணையைக் கோர முடியும்.

நிலைமை இவ்வாறிருக்க எதிர்க்கட்சியியிர் நாட்டை அராஜகத்தில் தள்ளுவதற்கு முயற்சிக்கிறார்கள். இதற்கு இடமளிக்கப் போவதில்லை. எந்தச் சூழ்நிலையையும் எதிர்க்கொள்ள அரசு தயாராகவே உள்ளது,” என்றார் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா.

பம்பலப்பிட்டி கடலில் இளைஞன் அடித்துக் கொலை – பொலிஸ் விசாரணைக்கு உத்தரவு

பம்பலப்பிட்டி கடலில் நேற்று மாலை இளைஞரொருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார். குறித்த இளைஞனை பொல்லினால் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து தடுப்புக் காவலில் வைக்குமாறுதான் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மெத்திவக்க கூறினார்.

இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எவராகவிருப்பினும் கைது செய்யப்படும் அதேவேளை, பொலிஸாராயிருந்தாலும் பக்கச்சார்பின்றி உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார். பம்பலப்பிட்டி கரையோரத்தில் நேற்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:-

கரையோரத்திலிருந்த இளைஞரொருவர் நேற்றுக்காலை முதல் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மற்றும் ரயில்கள் மீது கற்களை எறிந்து வந்ததாக கூறப்படுகிறது. இறுதியாக ரயில் ஒன்றின் மீது குறித்த இளைஞன் கற்களை வீசி எறிந்த போது அங்கிருந்தவர்கள் கூடி அவனை நையப்புடைத்துள்ளனர். அதனையடுத்து கரையோரத்தில் சனக்கூட்டம் அதிகமாகவே அங்கிருந்த ஒருவரினால் இச்சம்பவம் வீடியோ படமாக்கப்பட்டுள்ளது.

அதில் சிலர் கடலுக்குள் வைத்து குறித்த இளைஞனை பொல்லினால் தாக்க முயற்சிப்பதாயும் சிறிது நேரத்தில் அவன் உயிரிழந்த நிலையில் கடலுக்குள் தாழ்ந்து செல்வதாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

உண்மையில் இளைஞன் பொதுமக்களினால் கரையில் வைத்து தாக்கப்படும் போது தவறி கடலுக்குள் விழுந்தானா? அல்லது சம்பவ இடத்துக்கு விரைந்த பம்பலப்பிட்டி பொலிஸார் அவனை கைது செய்ய முற்பட்டவேளை தான் தப்புவதற்காக கடலுக்குள் குதித்தானா? என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மெத்திவக்க தெரிவித்தார். உயிரிழந்த இளைஞன் புத்தி சுவாதீனமற்றவன் எனத் தகவல்கள் கிடைத்துள்ளமையால் அது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனக் கூறிய பொலிஸ் பேச்சாளர், இளைஞன் பொல்லினால் தாக்குண்டதினால் தான் கொல்லப்பட்டானா என்பது குறித்தும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் நேற்று இரவுவரை மீட்கப்படவில்லை. மீட்புப் பணி கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் பணியை துரிதப்படுத்த மேலும் 5 நவீன இயந்திரங்கள்

மக்களை துரிதமாக மீளக் குடியமர்த்துவதற்கு ஏதுவாக மிதிவெடிகள், நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்குடன் மிதிவெடிகள் அகற்றும் மேலும் ஐந்து நவீனரக இயந்திரங்கள் இன்று இலங்கைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்படுகின்றன.

250 மில்லியன் ரூபா பெறுமதியான மேற்படி 5 இயந்திரங்களும் ஸ்லோவேக்கியா நாட்டிலிருந்து தருவிக்கப்படுவதாக தேசநிர்மாண அமைச்சு அறிவிக்கிறது. இன்று காலை 7.30 க்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் மேற்படி 5 இயந்திரங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்கும்.

மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தேச நிர்மாண அமைச்சர் எஸ். எம். சந்திரசேன, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, தேசநிர்மாண அமைச்சின் செயலாளர் டபிள்யூ. கே. கே. குமாரசிறி ஆகியோர் இன்று விமான நிலையத்தில் மேற்படி இயந்திரங்களை பொறுப்பேற் கவுள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களை உடனடியாக குடியமர்த்துவதற்கு ஏதுவாக மேற்படி மிதிவெடிகள் அகற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இதேபோன்று ஏற்கனவே 10 இயந்திரங்களும் தருவிக்கப்பட்டுள்ளன. அவை வவுனியா வடக்கு, மன்னார் பகுதிகளில் மிதிவெடி, கண்ணிவெடிகள் அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன

மரமுந்திரிகை இறக்குமதி!

மரமுந்திரிகை சார்ந்த தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் தொழில் பாதுகாப்புக்கருதி தற்காலிகமாக மரமுந்திரிகை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை மேலதிக தோட்டப் பயிர் அபிவிருத்தி  அமைச்சர் ஆர். எம். தர்மதாச பண்டா  சமர்பித்திருந்தார்.

அதன்படி 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை தென் ஆபிரிக்கா மற்றும் இந்தியாவல் இருந்து 4000 மெட்ரிக் தொன் மரமுந்திரிகை இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இதற்கான அனுமதிப் பத்திரங்கள் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப மக்கள் நிறுவன்ஙகளுக்கு வழங்கப்படவுள்ளன.

யுத்தத்தில் இராணுவத்திற்கு கிடைத்த வெற்றி அதிஷ்டலாப சீட்டில் கிடைத்த வெற்றியல்ல- ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவில் தெரிவிப்பு

இராணுவத்தின் இந்த வெற்றி மிகவும் இலகுவாக, அதிஷ்டலாப சீட்டில் அதிர்ஷ்டம் கிடைத்தது போலானது என எடைபோட்டு விடக்கூடாது. அந்த வெற்றியின் உண்மை தன்மை குறித்து விடுதலைப் புலிகளுடனான போரில் ஈடுபட்டிருந்தோருக்கே தெரியும் என்று பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது சுமார் 5200 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் படையினரில் 28000 பேர் காயமடைந்தனர். இராணுவத்தினரும் பொதுமக்களும் இணைந்திருக்காவிடின் என்னதான் இராணுவ தளபதியாக இருந்தாலும் , அரசியல் வாதியாக இருந்தாலும் இந்த வெற்றியை பெற்றுக்கொண்டிருக்கமுடியாது என்றும் அவர் சொன்னார். அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள விகாரையொன்றுக்குச் சென்று உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் கூறியதாவது :

நான் முதன் முறையாக பௌத்த விகாரையொன்றில் உரை நிகழ்த்துகின்றேன். அதிலேதும் பிழை இருந்தால் மன்னிக்கவும். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் நான் என்ன நினைக்கின்றேன்? என்பது குறித்து இந்த விகாரையின் பிரதம தேரர் தர்மசிறியுடனான சந்திப்பின் போது தெளிவுபடுத்தினேன். அங்கு இதுவரையிலும் என்ன நடந்தது. எதிர்காலத்தில் என்ன நடக்க வேண்டும் என்பது தொடர்பில் அங்கு கலந்துரையாடினோம். அமெரிக்காவுக்கு நான் கடந்தமுறை வந்திருந்தபோது என்னைச் சந்தித்த சிலர் இன்றும் இவ்விடத்தில் கூடியிருக்கக் கூடும். அன்று நான் அவர்களிடம் என்ன உறுதியளித்தேன் என்று அவர்களுக்கு தெரியும் . இந்த வருடத்துக்குள் அதாவது 2009ஆம் ஆண்டுக்குள் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று நான் அன்று அவர்களிடம் உறுதியளித்தேன். அந்த உறுதிமொழியின் பிரகாரம் அதனை கடந்த மே மாதம் 18 ஆம் திகதி நிறைவேற்றினேன். அதற்காக நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். நாட்டிற்குள் ஊடுருவியிருந்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து எதிர்கால சந்ததியினர் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ வழிசமைக்கக்கூடிய நாடொன்றாக உருவாக்குவோம் என்னும் உறுதியினை நிறைவேற்றினோம்.

உறுதி மொழிகளை நிறைவேற்றுவதற்காக நாம் பல அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டோம். இந்த வெற்றி மிக இலகுவாகப் பெறப்பட்டதல்ல. அதற்காக பெரும் கஷ்டங்களைச் சந்தித்தோம். தைரியமாகச் செயற்படுவதற்காக பல பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டோம். அதன்மூலமாகவே இந்த வெற்றி கிட்டியது. நாட்டிலுள்ள பெருமளவானோருக்கு இந்த வெற்றி இலகுவாகக் கிடைத்ததொன்றாகத் தோன்றுகிறது. அதனால் தான் அந்த வெற்றியைப் பங்கிட்டுக்கொள்வதற்கு பலரும் முயற்சிக்கின்றனர். யுத்த வெற்றி தொடர்பில் பலரும் பலவற்றை பேசுகின்றனர். ஆனால் அந்த வெற்றியின் உண்மை தன்மை குறித்து விடுதலைப் புலிகளுடனான போரில் ஈடுபட்டிருந்தோருக்கே தெரியும்.

வெற்றியை எவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் பெற்றுக் கொண்டோம் எனும் உண்மையை அவர்கள் மாத்திரமே அறிந்திருக்க முடியும். அதிலும் விஷேடமாக இராணுவத்தினரே அறிந்திருக்க முடியும். இராணுவத்தினரின் அர்ப்பணிப்பு தொடர்ப்பில் இந்த இடத்தில் நான் தெரிவிக்காவிட்டால் அது எனது சேவைக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.

யுத்த காலத்தின் போது இராணுவத்தில் சுமார் ஒரு இலட்சம் பேர் இணைந்துகொண்டனர். அத்தொகையினர் இணைந்திருக்காவிடின் நாம் இன்னமும் வவுனியா பிரதேசத்திலேயே நின்றுகொண்டிருந்திருப்போம். அங்கிருந்து முன்னோக்கிச் செல்ல முடியாது போயிருக்கும். பொதுமக்கள் எமக்கு வழங்கிய ஆசிர்வாதம் மற்றும் கௌரவம் போன்றவையே எமது வெற்றிக்கு ஊன்றுகோலாக விளங்கியது.

இராணுவத்தில் இணைந்துகொண்டவர்களில் சுமார் 80ஆயிரம் பேர் இன்னமும் சேவையில் ஈடுபட்டுள்ளனர். ஏனைய 20 ஆயிரம் பேர் விடுமுறை இல்லாமையால் விட்டு சென்றிருக்கலாம். இராணுவத்தில் இணைந்துகொண்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இல்லாவிடின் என்னதான் இராணுவ தளபதிகளாக அல்லது அரசியல்வாதிகளாகவே இருந்திருந்தாலும் இந்த வெற்றியினை அடைந்திருக்க முடியாது. இந்த காலகட்டத்திற்கு முன்னரும் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு செய்யும் யோசனை இருந்தது. இருப்பினும் வருடத்துக்கு 3000 பேரையேனும் இணைத்துக்கொள்ள முடியாது போயிற்று. ஆனால் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது வருடத்துக்கு 40ஆயிரம் பேர் இராணுவத்தில் புதிதாக இணைந்துகொண்டனர் அதுவும் நாம் பெற்றுக்கொண்ட வெற்றி என்றே கூறவேண்டும்.

யுத்த வெற்றியின் போது புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார், அதனால் அனைத்தும் முடிந்துவிட்டது எனக்கூறி சந்தோசமாக காலத்தை கழிப்பதை நாம் விரும்பவில்லை. பிரபாகரன் என்றொருவர் இருக்கவில்லை. கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் அவர் உருவாக்கப்பட்டார். இதனை மறந்துவிடுவதற்காக எமது பிரஜைகள் கடந்த 30 வருடங்களாக எவ்வளவு கஷ்டப்பட்டனர். நாம் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டதுடன் சவால்களுக்கும் முகம்கொடுத்தோம். அவற்றிலிருந்து விடுதலைபெற எவ்வளவு கஷ்டப்பட்டோம். அர்ப்பணிப்புக்களை செய்தோம் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

எமது அர்ப்பணிப்புகளை இந்த பரம்பரையினர் மறந்தால் அடுத்த பரம்பரையினர் கட்டாயமாக இவ்வாறான பிரபாகரன்களை சந்திப்பார்கள் என்பது எனது அதீத நம்பிக்கையாகும். அதனால், தேரர் என்னிடம் சொன்னது போன்று அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஒற்றுமையை கட்டிக்காப்பது மிக மிக அவசியமாகும். அவ்வாறாயின்,அனைத்துத் தரப்பினரும் அனைவரது தேவைகளையும் கருத்திற் கொண்டு எல்லாப் புறத்திலிருந்தும் வரும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு உண்மையானவர்களாக செயற்பட வேண்டும். அப்படி நடந்தால் தான் எமது நாட்டை தொடர்ந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன்.

எம்மால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டிய சேவைகளை நாம் சரிவர செய்து வருகின்றோம். சீருடையணிந்த ஜெனரல்கள் இந்த சேவையிலேயே இருந்து விடமுடியாது. நான் ஓய்வு பெறும் வயதையும் தாண்டி மேலதிகமாக 4 வருடங்கள் சேவையாற்றியுள்ளேன். இருப்பினும் நாடு முழுமையானளவில் பயனடைந்து விட்டது என்று கூறுவதற்கில்லை. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பதால் நாட்டின் பாதுகாப்பு 100 வீதமாக முழுமையடைவில்லை. யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த பொதுமக்கள் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுப்பதன் மூலமே பயங்கரவாதம் எனும் நோய்க்கிருமி மீண்டும் நுழைய விடாமல் தடுக்க முடியும். நலன்புரி முகாம்களில் தற்போது தங்கியுள்ள பொதுமக்களுடன் ஆயிரக்கணக்கான புலி உறுப்பினர்களும் தங்கியுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் அதேவேளை, அப்பாவிப் பொதுமக்களை மீளக் குடியேற்றி அவர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுப்பதால் மட்டுமே நாம் வெற்றிகொண்ட யுத்தத்தில் வெற்றியை கண்டோம் என்று மகிழ்ச்சியடைய முடியும்.அதனால் அந்த கொள்கையை நோக்கி நாம் பயணிக்கவேண்டும்.

நாட்டின் அபிவிருத்திக்கும் பாதுகாப்பிற்கும் எடுக்கக்கூடிய நடவடிக்கை இருக்குமாயின் நாட்டின் பிரஜை என்றவகையில் அதனை நடைமுறைப்படுத்துவது அவர்களின் கடமையாகும். பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றி தொடர்பில் கதைத்தே காலத்தை கழிப்பதை விட எதிர்காலத்தில் என்ன நடக்கபோகிறது என்பது தொடர்பில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாகும்.

யுத்த காலத்தின் போது நாட்டின் எதிர்காலம் குறித்து கவலையுற்றவாறே எதிர்வரும் காலங்களிலும் நாடு தொடர்பில் கவனம் செலுத்தி அதனை சரியான திசையில் கொண்டு செல்வதா? அல்லது கொண்டு செல்லவேண்டுமா? நாட்டிற்கான பாதுகாப்பை வழங்குவதா? என்பது தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும். அதன் மூலம் நாட்டிற்கு சேவையாற்றினோம் என்ற திருப்தியை அனைவரும் உணரவேண்டும்

வீரகேசரி நாளேடு 10/29/2009

தென் மாகாண சபை உறுப்பினர் இன்று சத்தியப் பிரமாணம்

220909southern_province.jpgதென் மாகாண சபை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் இன்று (29) பதவிப் பிரமாணம் செய்கின்றனர். முன்னாள் முதலமைச்சர் சான் விஜேலால் த சில்வா மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ளதோடு முன்னாள் அமைச்சர்களான ஹேமால் குணசேகர, வீ. கே. இந்திக, யூ. ஜி. டீ. ஆரியதிலக மற்றும் மாத்தறை மாவட்ட ஐ. ம. சு. முன்னணி உறுப்பினர் பிந்து வீரசிங்க (கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.