உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் வருடந்தோறும் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவுக்கு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். அவர்களில் படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்ற பேதங்கள் இல்லை.
அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். ஒத்துழைப்பும் ஒற்றுமையுமே அதன் அர்த்தம் என்று பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
அச் செய்தியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது :-
இன்று எமக்கு தேவையாக இருப்பது இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பும் ஒன்றுமையுமேயாகும். எமக்கிடையில் ஒத்துழைப்பும் ஒற்றுமையும் இல்லாமற் போனதன் விளைவாக நாம் வருடக்கணக்கில் வருந்த வேண்டியிருந்தது. சமாதானம் மகிழ்ச்சிக்கு பதிலாக சந்தேகம் வேறூன்றியதால் தான் சமாதான தேசமாகிய இலங்கையில் பயங்கரவாதம் தலைதூக்கியது- அதன்காரணமாக நாட்டிலுள்ள இளைஞர்கள் பலரின் பெறுமதியான உயிர்கள் எமக்கு இல்லாமற் போயின. அந்த நிலையை மாற்றி நாட்டில் சமாதானம் எற்படுத்த இப்போது எம்மால் முடிந்துள்ளது.
பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதானம் ஏற்பட்டுள்ள இலங்கையில் இருந்து முதல்முறையாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கும், உலகளாவிய ரீதியில் ஹஜ் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களுக்கும் எமது பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என்று பிரதமரின் வாழ்த்துச் செய்தி கூறுகிறது.
