செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கொழும்பு துறைமுக எரிபொருள் குழாய் மாற்றியமைப்பு!

fawzi.jpgகாலன்னாவை எண்ணெய் சுத்தேகரிப்பு நிலையத்தில் இருந்து குழாய் மூலம் எரிபொருள் விநியோகிப்பதற்கான திட்டத்தின் கீழ் மாற்றுக் குழாய்கள் பொருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். 18.7 மில்லியன் அமெரிக்க டொலர் இதற்கு செலவிடப்படவுள்ளது. மேலும் இத்திட்டத்தக்கு சர்வதேச விலைமனுக் கோரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் பௌசி சமர்பித்த மற்றுமொரு அமைச்சரவைப் பத்திரத்துக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு தறைமுக விஸ்தரிப்பு வேலை காரணமாக நிருக்கடியால் செல்லும் எரிபொருள் விநியோகக் குழாய் இடமாற்றப்படவுள்ளது. அதற்கு 432 மில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளதுடன் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி வழங்குகிறது.

வேட்புமனு ஏற்கும் பணி ஆரம்பம்: அரசியல் கட்சியொன்று, இரு சுயேச்சைகள் நேற்று வேட்புமனுத் தாக்கல்

parliament.jpgபொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேர்தல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்ட முதலாவது தினமான நேற்று இரண்டு சுயேச்சைக் குழுக்களும்,  ஒரு அரசியல் கட்சியும் வேட்பு மனுவை தாக்கல் செய்தன.

இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவொன்று நேற்றுக் காலை வேட்புமனுவை தாக்கல் செய்தது. கச்சி மொஹமது மொஹமது ஜுனைதீன் தலைமையிலான குழுவினர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.  நுவரெலியா மாவட்டத்தில் மற்றுமொரு சுயேச்சைக் குழு வேட்புமனுவை தாக்கல் செய்தது என்றும் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

இதேவேளை பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தலைமையிலான ‘ஜனசெத பெரமுன’ கட்சி நேற்றுக்காலை நான்கு மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தது. புத்தளம், கம்பஹா, குருணாகல், கொழும்பு மாவட்டங்களில் நேற்றுக் காலை சுபவேளை 9.30 மணியளவில் வேட்பு மனுவை ‘ஜனசெத பெரமுன’ தாக்கல் செய்தது.

வேட்புமனு தாக்கல் நேற்று 19ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்றுக்காலை 9 மணிமுதல் 4 மணிவரை வேட்புமனுக்களை ஏற்கக் கச்சேரிகள் தயார் நிலையில் இருந்தன. ஆயினும் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்வதில் கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை.

பொலன்னறுவை, திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை, காலி மாவட்டங்களில் வேட்புமனு ஏற்பதற்காக தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஆயத்தமாக இருந்தபோதும் எவரும் கட்டுப்பணம் செலுத்தவோ, வேட்புமனு தாக்கல் செய்யவோ வரவில்லை. இறுதி நேரத்திலேயே பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்புமனுவை தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டும் என்றும் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். பெரும்பாலும் 25ம், 26ம் திகதிகளில் முக்கிய கட்சிகள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஐ. ம. சு. மு. 25ம், 26ம் திகதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (ரீ. எம். வி. பி), மலையக மக்கள் முன்னணி, ஐ. தே. கட்சி உட்பட முக்கிய கட்சிகள் 24, 25, 26ம் திகதிகளில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யுமென கட்சி வட்டாரங்கள் கூறின. ஆயினும், கட்சிகள் இன்னும் பேரம் பேசும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டாகப் போட்டியிடுவதா என்பதில் முடி வெடுக்க முடியாத நிலையில் இருக்கின்றன.

அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் நேற்றும் ஐ. ம. சு. மு.வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.  ஆயினும் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை. ஈ. பி. டி. பியும் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. ஆனால் முடிவுகள் எதுவும் தெரியவில்லை.

இன்னும், சில கட்சிகள் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவதென தெரியாத நிலையில் திண்டாடுகின்றன. இந்த நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னரே வேட்பு மனுத் தாக்கல் சூடு பிடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவின் தலைவர் கச்சி முகம்மது முகம்மது ஜுனைதீன் என்பவரின் தலைமையில் இச் சுயேச்சைக் குழு வேட்பு மனுப் பத்திரத்தை தாக்கல் செய்தது.

இச் சுயேச்சைக் குழுவில் கச்சி முகம்மது முகம்மது ஜுனைதீன், அபூபக்கர் அமீர் ஹம்சா ஜெளபர்கான் சமீன், மீராசாகிபு இஸ்ஸதீன், முஹமத் செய்யத் அலவி சபீர் யூசுப் லெவ்வை பள்ளித்தம்பி, முகம்மட் இப்றாகீம் முகம்மட் இர்பான் முகைதீன் பாவா முபாறக் ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கிராம சுகாதார சிகிச்சை மத்திய நிலையம்!

nimall.jpgமிகவும் பின்தங்கிய கிராமங்களில் சுகாதார சிகிச்சை மத்திய நிலையங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் முதல்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 15 கிராமங்களில் இந்த சிகிச்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சுகாதாரம் மற்றும் போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்பித்திருந்தார். இத்திட்டத்துக்கு அரசாங்கம் 55.7 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

‘ஜே. வி. பி. அலுவலகம் சோதனையிடப்படவில்லை’ – பொலிஸ் பேச்சாளர்

police_logo.jpgஜே. வி. பி.  யின் தலைமை அலுவலகம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை கிடையாது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரஷாந்த ஜெயகொடி தெரிவித்தார்.

ஜே.வி.பி.யின் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸ் சோதனைத் தடையொன்றை ஏற்படுத்துமுகமாக பொலிஸார் அங்கு சென்றிருந்ததாகவும் ஆனால், கட்சி அலுவலகத்தைச் சோதனையிட அவர்கள் செல்ல வில்லையென்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

எனினும், பெலவத்தையில் உள்ள தமது தலைமை அலுவலகம் நேற்றுக் காலை (19) பொலிஸாரினால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஜே. வி. பி. யின் பேச்சாளர் விஜித ஹேரத் கூறியுள்ளார். நீதிமன்றத்தின் அனு மதி பெற்றே கட்சித் தலைமையக த்தைச் சோதனையிடுவதாக பொலிஸார் கூறியதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவலென்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணி கொழும்பில் ஸ்ரீலசுகவுடன் இணைந்து போட்டி

radhakrishnan.jpgபதுளை,  நுவரெலியா மாவட்டங்களில் மண்வெட்டி சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் மலையக மக்கள் முன்னணி கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்தில் முன்னாள் பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் போட்டியிடவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்தார். 

நெடுந்தீவு – குறிகட்டுவான் குமுதினியில் பயணம் செய்ய 120 பேருக்கு மட்டுமே அனுமதி

நெடுந்தீவு, குறிகட்டுவான் பயணிகள் படகு குமுதினியில் ஒரு தடவை பயணிக்கும் பயணிகளின் தொகை 120 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வியாபாரிகளோ பயணிகளோ தம்முடன் பெரிய அளவில் பொருள்களடங்கிய பொதிகளை படகில் ஏற்றிச்செல்ல முடியாது எனவும் இந்த நடைமுறைகள் நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் : கலந்துரையாடல்

Viyoogamஇலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் என்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்றை மே 18 இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. ‘விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டாயிற்று!, தற்போது ஜனாதிபதி தேர்தலும் நடந்து முடிந்து விட்டது!, பாராளுமன்ற தேர்தலுக்கு நாள் குறித்தாயிற்று!’ ஆயினும் ‘யுத்தம் முடிந்த பின்பு அரசியல் தீர்வு என்றார்கள்!’ ஆனாலும் தமிழ் மக்களின் துயரங்கள் தொடர்கின்றன …’ என மே 18 இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

‘தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் என்ன ?’ என்ற கேள்வியுடன் தங்கள் கலந்தரையாடலை மேற்கொள்ள அவர்கள் அனைவரையும் அழைத்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின் மழைக்கு முளைக்கின்ற காளான்கள் போன்று என்ஜிஓ க்களிலும் வேகமாக பல்வேறு அமைப்புகள் ‘புரட்சிகர’ கோசத்துடன் ஆரம்பித்து உள்ளன. ஏற்கனவே உறக்க நிலையில் இருந்த அமைப்புகளும் அறிக்கைகளை வெளியிட்டு தங்கள் இருப்பை வெளியிட்டுக் கொண்டன. இவற்றினிடையே மே 18 இயக்கம் தன்னுடைய கோட்பாட்டு இதழ் ஒன்றையும் வெளியிட்டு தொடர்ச்சியாக ரொறன்ரோ, லண்டன், பாரிஸ் ஆகிய நகரங்களில் சந்திப்புக்களையும் ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவற்றின் தொடர்ச்சியாகவே ஸ்காபுரோவில் தற்போதைய அரசியல் நிகழ்வு பற்றிய பொதுக் கூட்டத்தையும் கலந்துரையாடலையும் மே 18 இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பல்வேறு அமைப்புகளும் அரிசியல் ரீதியில் நழுவல் போக்கைக் கடைப்பிடித்து தங்கள் அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தாமல் இருக்கையில் மே 18 இயக்கம் இடதுசாரித் தலைவரான விக்கிரமபாகு கருணரட்னாவில் விமர்சனங்கள் இருந்த போதும் இன்றைய சுழலில் இலங்கை மக்கள் குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்கள் விக்கிரமபாகு கருணாரட்னவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

இக்கலந்துரையாடலிலும் மே 18 இயக்கம் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் தனது அறிவிப்பை தெரிவிக்கும் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை எவ்வாறு செலுத்த வேண்டும் என அவர்கள் தெரிவிக்கலாம்.

பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்: மே 18 இயக்கம்
முடிவல்ல… புதிய தொடக்கம்!

இடம்: Scarborough Civic Center (Room 1 & 2)
காலம்: 20-02-2010 (Saturday)
நேரம்: 2:30 pm – 6:00 pm

தொடர்புகளுக்கு: viyooham@gmail.com

மே 18 இயக்கம் தொடர்பான முன்னைய பதிவுகளுக்கு:

இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!

 ‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

இரயாகரன் சார்! எனக்கொரு உண்மை தெரிந்தாக வேணும் : த ஜெயபாலன்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

ஒபாமா, தலாய் லாமா சந்தித்துப் பேச்சுவார்த்தை! சீனாவுக்கு அதிருப்தி

obama__dalailama.jpgசீனாவின் கடும் அதிருப்திக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா,  திபெத்தின் பௌத்த தலைவர் தலாய் லாமாவை சந்தித்துப் பேசினார். அஹிம்சை முறையில் பிரச்னைக்கு தீர்வு காண முயன்று வருவது பாராட்டத்தக்கது என்று தலாய் லாமாவுக்கு ஒபாமா புகழாரம் சுட்டியுள்ளர்.

அமெரிக்கா சென்றுள்ள தலாய் லாமாவை,  அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா வாஷிங்டனில் சந்தித்துப் பேசியதுடன் திபெத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது உள்பட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது. இந்த சந்திப்பின் போது பத்திரிகை புகைப்படக்காரர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. வெள்ளை மாளிகை அதிகாரிகள் பின்னர் புகைப்படத்தை பத்திரிகைகளுக்கு அளித்தனர். சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

சீனாவுக்கும்,  திபெத்துக்கும் உள்ள பிரச்னையைத் தீர்க்க தலாய் லாமா அஹிம்சை முறையில் போராடி வருவது பாராட்டத்தக்கது. அந்த இரு நாடுகளும் தங்களுக்கிடையிலான பிரச்னைகளை நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒபாமா கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தலாய் லாமாவை சந்தித்துப் பேசக் கூடாது என்று அமெரிக்காவை சீனா வலியுறுத்தியது. சீனாவின் எதிர்ப்பை நிராகரித்து தலை லாமாவை ஒபாமா சந்தித்துப் பேசியதை தங்களுக்கு கிடைத்த வெற்றியாக திபெத் மக்கள் கருதுகின்றனர். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனையும் தலாய் லாமா சந்தித்துப் பேசவுள்ளார்.

மறைந்த லசந்தவுக்கு சர்வதேச பத்திரிகை அமைப்பின் ‘நாயகன்’ விருது

lasantha.gifசண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் மறைந்த லசந்த விக்ரமதுங்கவுக்கு சர்வதேச பத்திரிகை அமைப்பு, ‘உலக பத்திரிகை சுதந்திரத்தின் நாயகன்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்த அறிவிப்பு 17 மாலை வெளியிடப்பட்டது.

தேர்தல் களத்தில் முரளி கண்டியில், சுசந்திகா கேகாலையில்…

muralidharan.jpgவிளையாட் டுத்துறை பிரபலங்கள் பலரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சனத் ஜயசுரிய ஆளும் கட்சியில் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக முன்னர் அறியக் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மேலும் பல விளையாட்டுதுறை முக்கியஸ்தர்களும் தேர்தல் களத்தில் குதித்துள்ளதாக தெரியவருகின்றது.

அதன்படி இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட வேட்பாளர் பட்டியலில் உபதலைவராக போட்டியிடவுள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கட்டுகளை வீழ்த்தி முத்தையா முரளிதரன் உலக சாதனைப் படைத்துள்ளார். முத்தையா முரளிதரனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இணைப்பதன் மூலம் தமிழ் சிங்கள இளைஞர்களின் வாக்குகள் குவியும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் தெரிவுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக இன்றையதினம் தேர்தல் தெரிவுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.