செய்திகள்
செய்திகள்
செய்திகள்
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கான புதிய கணனிகள் ஆய்வுகூடம் மற்றும் புனரமைக்கப்பட்ட புதிய கட்டடம் என்பவை நேற்று திறந்து வைக்கப்பட்டன.
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, நாமல் ராஜபக்ஷ எம்.பி, உதித லொக்குபண்டார எம்.பி. மற்றும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி ஆகியோர் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.
பாடசாலை மாணவர்களுக்குரிய சீருடைகள், பாடநூல்கள் போன்ற வற்றையும் நாமல் ராஜபக்ஷ, கல்வி அமைச்சர் ஆகியோர் வழங்கியதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். மேற்படி கல்லூரிக்கு சுமார் 11 கணனிகள் அடங்கிய புதிய ஆய்வுகூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி அல்லவென்று அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்திய அரசின் குற்றச்சாட்டுகளிலிருந்து அமைச்சர் தேவானந்தா விடுவிக்கப் பட்டுள்ளதால் அவரை தேடப்படும் குற்றவாளியெனக் கூற முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார்.
அனுமதியின்றி ஆயுதங்களை வைத்திருப்பதற்கு எதிரான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின்போதே அமைச்சர் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார். இந்தப் பிரேரணையில் உரையாற்றிய ஐ. தே. க. எம்.பி. ஸ்ரீரங்கா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் ஒரு குற்றவாளியெனவும், அவ்வாறான சர்வதேச குற்றவாளியொருவருடன் ஜனாதிபதி இந்தியா சென்றுள்ளதாகவும் கூறினார். இந்தக் கூற்றை அமைச்சர் தினேஷ் குணவர்தன கடுமையாக எதிர்த்தார். அமைச்சர் டக்ளஸ் குற்றமற்ற நிரபராதி எனவும் அமைச்சர் கூறினார்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரசாங்கம் அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டு வரும்போது சிறுபான்மைச் சமூகங்களின் நலன் குறித்து அதிகளவு சிந்தித்துச் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியலமைப்புத் திருத்தம், தீர்வுத் திட்டங்கள் தொடர்பில் அரசு சிறுபான்மைக் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கம் அரசியலமைப்பைத் திருத்தும் யோசனையை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து அதற்கு அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது தொடர்பாக கேட்டபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம்.ரி.ஹஸன் அலி மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக மேலும் விளக்கமளித்த ஹஸன் அலி கூறியதாவது;
அரசாங்கம் அதன் சொந்த நலன்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சியிலிறங்கியுள்ளது. இவ்வாறான சுயநல நோக்கத்தின் பிரதிபலன் சிறுபான்மை மக்களுக்குப் பாதகமான நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.
இது தொடர்பிலான அரசாங்கத்தின் அடுத்த நடவடிக்கைகளைப்பொறுத்தே எமது கட்சி எந்தத் தீர்மானத்துக்கும் வர முடியும். அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுவிட்டால் மாத்திரம் அரசியலமைப்பை மாற்றிவிட முடியாது. அரசியலமைப்புத் திருத்தத்துக்கான யோசனைகளை அது தயாரித்து பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
அரசியலமைப்புத் திருத்தமோ, தீர்வுத்திட்டமோ, எதுவாக இருப்பினும் அவற்றை நிறைவேற்றுவதற்கு முன்னர் அரசின் யோசனைகள் தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகளின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டறிய வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அவர்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக அவை அமைய வேண்டும்.அரசியலமைப்புத் திருத்தம் தீர்வு விடயங்கள் தொடர்பில் ஆளுந்தரப்பிலுள்ள சிறுபான்மைத் தலைவர்கள் கூடுதல் அக்கறை காட்ட வேண்டிய முக்கியத்துவத்தையும் இங்கு நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். வெறும் கை தூக்கிகளாக அவர்களால் செயற்பட முடியாது. தமது சமூகங்களுக்குத் துரோகமிழைக்கப்படக்கூடிய முடிவுகளுக்கு அவர்கள் துணைபோய்விடக்கூடாது.
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அரசு அதன் யோசனைகளை முன்வைத்த பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை ஆராய்ந்த பின்னரே அடுத்த நடவடிக்கை குறித்துத் தீர்மானிக்கும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலி தெரிவித்தார்.
பகிரங்கமாக முத்தமிடுவதால் சங்கடமான நிலைமை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்ட புகார்களையடுத்தே பொலிஸார் இளம் ஜோடிகளை கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
மாத்தறை,குருநாகல் மாவட்டங்களில் கடந்த இருவாரங்களில் சுமார் 200 ஜோடிகளை தடுத்து வைத்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி ஏ.எவ்.பி. செய்திச்சேவைக்குத் தெரிவித்திருக்கிறார்.பொது இடங்களில் கண்ணியமற்ற முறையில் நடந்துகொண்டதற்காக அவர்களை நாம் தடுத்து வைத்தோம்.வழமையாக பெற்றோருக்கு அறிவித்துவிட்டு அவர்களை விடுவித்து வருகிறோம். குற்றப்பத்திரிகை தாக்கல் செவதில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
ஹோட்டல்களில் அந்தரங்கமாக இருப்பதற்கு அவர்களிடம் பணவசதி இல்லாததால் கடற்கரைகளில் இளம் ஜோடிகள் அந்நியோன்யமாக இருப்பதாக மாத்தறை வாசியொருவர் கூறியுள்ளார்.தலைநகர் கொழும்பின் கடற்கரைகளில் குடைக்கு கீழ் இருக்கும் ஜோடிகள் அடிக்கடி சுற்றிவளைக்கப்படுவதுண்டு.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள சிறிய தாழமுக்கம் காரணமாக புயல் சின்னம் உருவாகும் அபாயம் உள்ளபோதும் எவ்வகையிலும் இலங்கைக்கு பாதிப்புகள் ஏற்படமாட்டாது என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள இத்தாழமுக்கம் காரணமாக தமிழ் நாட்டுக்கே அதிகளவு மழை பெய்யும். இலங்கைக்கு தென் மேற்கு பருவ பெயர்ச்சி மழையுடன் காற்று சற்று வேகமாக வீசும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
குறிப்பாக தென் மாகாணம், சப்பிரகமுவ மாகாணம், மத்திய, மேல் மாகாணங்களுக்கு அதிகளவு மழை வீழ்ச்சி ஏற்படும். நேற்றும், இன்று காலை வேளைகளிலும் வீசிய கடும் காற்றின் வேகம் இன்று மாலை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் எனவும் அவதான நிலையம் தெரிவிக்கிறது.
இதேவேளை வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில்:- கேரளாவிலும், தமிழகத்தின் கேரளாவையொட்டியுள்ள பகுதிகளிலும் தென் மேற்குப் பருவ மழை வலுத்துள்ளது. கர்நாடகத்திலும் மழை தொடங்கி பெய்து வருகிறது.
சில நாட்களுக்கு முன் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டது. இதனால் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
தேசம் நெற் இணையத்தளமும் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் இணைந்து வழங்கும் 7வது திரையிடல் நிகழ்வு சேர்பிற்றன் சறேயில் இடம்பெறவுள்ளது. யூன் 12 மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகவுள்ள இத்திரையிடல் நிகழ்வில் சதா பிரணவனின் இடி முழக்கம், பொன் சுதாவின் நடந்த கதை, பிரேமா சந்தானகுலத்தின் நோய் வீதி, ஜ வி ஜனாவின் மூன்று இரவு நாலு பகல், பாஸ்கரின் நதி ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது. இத்திரைப்படங்கள் இந்தியாவிலும் ஜரோப்பிய திரைப்பட விழாக்களிலும் பரிசில்கள் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
2008 முதல் தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைப்படக் கழகமும் ஏற்பாடு செய்துவரும் குறும் திரைப்பட முயற்சிகளின் 4வது காட்சி நிகழ்வாக இது அமைகிறது. புலம்பெயர் சினிமாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் மற்றுமொரு குறுந்திரைப்படக் காட்சி இதுவாகும்.
தேசம்நெற் ஈழநண்பர்கள் திரைப்படக் கழகத்தின் காட்சியிடலில் உங்கள் படைப்புகளையும் காட்சிப்படுத்தி கலந்துரையாடலை மேற்கொள்ள விரும்புபவர்கள் தேசம்நெற்றுடன் தொடர்பு கொள்ளவும்.
7வது திரையிடல் நிகழ்வு:
காலம்: 12.06.2010
நேரம்: மாலை 6 மணி
இடம்: The Cornerhouse, 116 Douglas Road, Surbiton, Surrey.
படத்தின் பெயர் நேர அளவு இயக்குனர்
1) இடி முழக்கம் 21 நிமிடம் சதா பிரணவன்
2) நடந்த கதை 23 நிமிடம் பொன் சுதா
3) நோய் வீதி 20 நிமிடம் பிரேமா சந்தானகுலம்
4) மூன்று இரவு – நாலு பகல் 21 நிமிடம் ஜ.வி. ஜனா
5) நதி 8 நிமிடம் பாஸ்கர்
படங்கள் குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்கப் படும். சிற்றுண்டி- பானம் அத்துடன் இராப் போசனமும் வழங்கப்படும்.
கடந்த திரையிடல் நிகழ்வில் இலாபமாக வந்த £50.00 மன்னாரில் உள்ள பார்வை குறைந்த சிறுவர்களுக்கு கண்ணாடி வழங்குவதற்காக அனுப்பி வைத்துள்ளோம்.
அன்பளிப்பு: £5.00 தனிநபர். சிறுவர்கள் அனுமதி இலவசம்.
தொடர்புகளுக்கு: ஆர் புதியவன் 07988 589 923
த ஜெயபாலன் 07800 596 786
அதிக பயன்பாடு குறைந்த நேரங்களில் மின்சாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைக் கட்டணம் வழங்கவும் மின்சாரப் பட்டியலை முழுமையாக ஒரு மாதத்துள் செலுத்துபவர்களுக்கும் சலுகை வழங்கவும் மின்சார சபை தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அதிக மின்பாவனை குறைந்த நேரங்களான இரவு 9.30 மணி முதல் காலை 9.30 மணி வரையிலான காலப் பகுதியில் மின்பாவனையை மேற்கொள் ளுமாறு தொழிற்சாலைகளிடமும் கோரவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். மின்சக்தி அமைச்சில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடு நடைபெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் சுமார் 4 மில்லியன் பேர் மின்சார சபைக்கு வாடிக்கையாள ர்களாகவுள்ளனர். ஒரு கோடி மக்கள் மின்சாரத்தை பாவிக்கின்றனர். சாதாரணமாக வீட்டுப் பாவனைகள் இரவு 8.30க்குப் பின்னர் மின் பாவனை குறைவடைகின்றன. குறிப்பிட்ட மின்பாவனை குறைவான காலப் பகுதிக்குள் நீர் வழங்கல் சபை நீர்வழங்கலுக்காக மின்சாரத்தை பயன்படுத்துமேயானால் அவர்களுக்கும் மின் கட்டணத்தில் சலுகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். தொழிற்சாலைகளில் அதிக பயன்பாடு நேரங்களில் மின்சாரத்தைப் பாவிப்பார்களேயானால் மின் கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் கூடுதலாக மின் பாவனையை மேற்கொள்ளும் தேசிய நீர் விநியோக சபை, ஹோட்டல்கள் மற்றும் குளிர்சாதனம் போன்ற வகைகளுக்கு அதிக மின்சாரம் பயன்படுத்தப்படு கின்றது. இவை அதிக பயன்பாடு நேரங் களில் மின்சாரப் பாவனையை தவிர்த்து அதிக பாவனையற்ற நேரங்களில் பயன் படுத்துமாறும் இலங்கை மின்சார சபை அறிவுறுத்தவும் உள்ளது. 2012ம் ஆண்டில் நாட்டில் உள்ள சகல வீட்டுப் பாவனையாளருக்கும் மின்சாரத்தை வழங்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மின்சார பட்டியலிலுள்ள கட்டணத்தை 2 1/2 மாதத்துக்குப் பின்பே பாவனையாளர்கள் செலுத்துகின்றனர். ஒரு மாதத்துக்குள் பட்டியலிலுள்ள தொகையை முற்றாக செலுத்துபவருக்கும் சலுகையொன்றை வழங்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்ற 293 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து 4.5 மில்லியன் ரூபா தண்டப் பணமாக அறவிடப் பட்டுள்ளதாகவும் மின்சார சபையின் தலைவர் வித்தியாகொடை தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் சட்டவிரோத மின் பாவனையாளர்கள் கண்டு பிடிக்கப் பட்டனர். சட்டவிரோத மின் பாவனையாளர்களை கண்டறிந்து தண்டப் பணம் அறவிடும் திட்டம் எதிர்வரும் ஜுலை மாதம் 10ஆம் திகதி நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் மின்சார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஜூன் (1)ம் திகதி ஜூன் (3) திகதி வரை காலப் பகுதியிலேயே மின்சார சபையின் திடீர் சோதனைக் குழுவொன்று மேற்கொண்ட நட வடிக்கையின் பேரிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டன. பொலிஸாரின் அனுசரணையுடன் சம்பந்தப்பட்டோருக்கு, எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டே உடனுக்கு உடன் தண்டப் பணம் செலுத்தக்கூடிய வகையில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.
அவர் மேலும் தகவல் தருகையில் :- கிளிநொச்சியிலிருந்து சுன்னாகம் வரை செல்லக்கூடிய மின்சாரத் திட்டமொன்று அடுத்த மாதம் அமுல்படுத்துவதற்கு வெளிநாட்டு நன்கொடை நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் கைச்சாத் திடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடன் அட்டை (கிரடிட் காட்) மோசடிகளைத் தடுப்பதற்கு காத்திரமான செயற்திட்டமொன்றினை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
இதற்கிணங்க கடன் அட்டைப் பாவனைமுறை தொடர்பில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளதுடன் அவ்விபரங்களை வர்த்தமானியில் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பதில் பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர்; கடனட்டை மோசடிகளைத் தடுக்கும் ஒரு அம்சமாக கடனட்டை சேவை வழங்குநர்கள் தமது விபரங்களை மத்திய வங்கியில் பதிவது கண்டிப்பானதாக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தியா வுக்கும் இலங்கைக்குமிடையே பொருளாதாரம், சமூகத்துறை, நீதித்துறை, மகளிர் விவகாரம், மின்சாரம், போக்குவரத்து ஆகிய துறைகளுடன் சம்பந்தப்பட்ட ஏழு உடன்படிக்கைகள் நேற்று கைச்சாத்திடப்பட்டன.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும் நேற்று (09) மாலை ஹைதராபாத்திலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இந்தச் சந்திப்பின் போதே மேற்படி உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
சிறுகைத்தொழில் தொடர்பாக ஏற்கனவே இருந்துவந்த உடன்படிக்கையை புதுப்பிக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கை முதலில் கைச்சாத்தானது.
இலங்கை வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர். தண்டனை விதிக்கப்பட்ட சிறைக் கைதிகளை பரிமாறிக் கொள்ளும் புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் நீதித்துறை உதவிகள் தொடர்பான உடன்படிக்கை ஆகியவற்றில் இலங்கை யின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் இந்தியாவின் உள் துறை அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஸ்ரீ. ஜீ. கே. பிள்ளையும் கைச்சாத்திட்டனர்.
மகளிர் வர்த்தக நிலையம் மற்றும் சமூக ஆய்வு நிலையம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை, இரு நாடுகளுக்கு மிடையிலான கலாசார பரிமாற்றம் தொடர்பான உடன்படிக்கை, மற்றும் இந்தோ – லங்கா மின்சார கட்டமைப்பு தொடர்பான சாத்திய ஆய்வு உடன்படிக்கை ஆகியவற்றில் இலங்கையின் சார்பில் இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசமும் இந்தியாவின் சார்பில் வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவும் கைச்சாத் திட்டனர்.
மன்னாரில் இருந்து மடு வரையிலான ரயில் பாதைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கையின் சார்பாக ரயில்வே பொது முகாமையாளர் பி. பி. விஜேசேகரவும் இந்தியாவின் சார்பில் ரயில்வே பாதை முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீமோஹன் திவாரியும் கைச்சாத்திட்டனர்.