செய்திகள்

செய்திகள்

செய்திகள்

யாழ்தேவி, உதயதேவி புறப்படும் நேரங்கள் மாற்றம் – 15 ஆம் திகதி முதல் அமுல்

கொழும்பு கோட்டையிலிருந்து தினமும் புறப்படும் தாண்டிக்குளம் யாழ்தேவி கடுகதி ரயில், மட்டக்களப்பு உதயதேவி கடுகதி ரயில் ஆகியவை புறப்படும் நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த நேர மாற்றம் அமுலுக்கு வரும் எனவும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி கொழும்பு கோட்டையிலிருந்து தாண்டிக்குளம் நோக்கி புறப்படும் ரயில் காலை 5.45 க்கு புறப்படும். தாண்டிக்குளத்திலிருந்து 11.30 க்கு கொழும்பு நோக்கி புறப்படும்.

மட்டக்களப்பு நோக்கி புறப்படும் உதயதேவி புகையிரம் கொழும்பு கோட்டையிலிருந்து காலை 6.10 க்கு புறப்படும். இதேபோன்று கொழும்பு – அநுராதபுரம், கல்ஓயா – மட்டக்களப்பு, கல்ஓயா – திருமலை, திருமலை – மஹவ, பொலன்னறுவை – மட்டக்களப்பு வரையிலான ரயில் பஸ் சேவை, கல்ஓயா – மட்டு ரயில் பஸ் சேவை, குருணாகல் – மஹவ பேபி ரயில், மஹவ – பொல்கஹவல பேபி ரயில் நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

”பிரபாகரன் கையெழுத்துக் காட்டி நிதி திரட்டுகின்றனர்.” தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம்

வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் பிரபாகரனின் கையெழுத்துடனான ஆவணங்களைக் காட்டி புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் நிதி சேகரித்து வருவதாக சிறிலங்கா அரசின் சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் பேணாட் குணதிலக தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் நேற்று சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறி அவர் கையெழுத்திட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி அவர்கள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2002ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் பேச்சுவார்தைகள் நடைபெற்ற போது தாம் அதில் முக்கிய பங்காற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழு அதன் முதலாவது விசாரணையை நேற்று கொழும்பில் உள்ள லக்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகளுக்கும் ஆய்வுகளுக்குமான நிலையத்தில் தொடக்கி வைத்தது. எதிர்வரும் காலங்களில் பல முக்கியஸ்தர்கள் இவ்வாணைக்குழுவில் சாட்சியங்களை அளிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17ம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச சாட்சியமளிக்க முன்வந்துள்ளதாகவும், 25ம் திகதி அரச உத்தியோகத்தர்கள், அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், புத்திஜீவிகள் சாட்சியமளிப்பர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, இலங்கையின் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் யுத்தக்குற்றங்களுக்கான விசாரணைகள் வெறும் கண்துடைப்பு நடவடிக்கை என நியூயோர்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

செப்ரெம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் விவசாயக் கண்காட்சி!

Agriculture_in_Jaffnaஎதிர்வரும் செப்ரெம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் விவசாயக் கண்காட்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘சுற்றப்பறச் சூழலுடன் நட்பான சந்தை அடிப்படையிலான விவசாயக் கண்காட்சி’ என்று இதற்குப்  பெயரிடப்பட்டுள்ளது. இதன் தொனிப்பொருளில் இக்கண்காட்சியை நடத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுற்றுப்புறச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் தொழில்நுட்பம் தொடர்பான ஆக்கத்திறன்களை விவசாயிகளும், பொதுமக்களும் அறிந்து கொள்ளக்கூடியதான கணிகாட்சியாக இது அமையும் என யாழ்ப்பாண விவசாயப் பணிப்பாளர் எஸ். சிவகுமார் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச குழுவினர் பூனகரிக்கு விஜயம்.

Namal_Rajaparksaபாராளுமன்ற உறுப்பினரும் ‘இளைஞர்களுக்கான நாளை’ என்ற அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவினர் நேற்று (Aug 11 2010) பூனகரிப் பகுதிக்கு விஜயம் செய்தனர். பூனகரிப் பிதேசத்தின் காரைக்காய்தீவு மகாவித்தியாலயம், ஞானிமடம் அ.த.க பாடசாலை, நல்லூர் மகாவித்தியாலயம் உட்பட பூனகரி  கோட்ட பாடசாலைகளுக்கு இக்குழுவினர் விஜயம் செய்து அப்பாடசாலைகளின் குறைபாடுகள் மாணவர்களின் கல்விநிலை என்பனவற்றை ஆராய்ந்தனர்.

இதே வேளை, அப்பகுதி பொதுமக்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்ததோடு அப்பிரதேச விவசாய நடவடிக்கைகளுக்கான உதவிகளை மேற்கொள்வது, பாடசாலைகளைப் புனரமைப்பது, கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது போன்ற மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கைகள எடுப்பதாகவும் இக்குழுவினர் உறுதியளித்தனர்.

இக்குழுவில் நாமல் ராஜபக்சவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

குற்றப்புலனாய்வு அதிகாரிகள் என தமிழ் பயணிகளிடம் கொள்ளையிட்டு வந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்!

fort-railway-stationபுகையிரத்தில் பயணிகளிடம் கொள்ளையடித்து வந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு அதிகாரிகள் என்று தங்களைக் கூறிக்கொண்டு, அதற்கான போலி அடையாள அட்டைகளையும் காண்பித்து, புகையிரத்தில் பயணம் செய்யும் தமிழ் மக்களை அச்சுறுத்தி, அவர்களிடமிருந்து பணம் நகைகளை இவர்கள் அபகரித்து வந்தள்ளனர்.

விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

fort-railway-stationபொலகாவல, மீரிகம, வெயங்கொட, ராகம மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் இவர்கள் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெயங்கொட, கட்டான ஆகிய பகுதிகளில் வைத்து இந்நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் இருவரும் : மாகாணசபை உறுப்பினர் ஒருவரும் கைது

vijitha-herath.jpgபாராளு மன்ற உறுப்பினர்களான அஜித் குமார, விஜித ஹேரத் மற்றும் மாகாணசபை உறுப்பினரான நளின் ஹேவகே ஆகியோர் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காலியில் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு நடைபெற்ற போராட்டத்தின் பின் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ய சென்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் குமார, விஜித ஹேரத் மற்றும் மாகாணசபை உறுப்பினரான நளின் ஹேவகே ஆகியோர் பொலிஸார் மீது போராட்டத்தின் போது கல்வீச்சு செய்த இருவரை விடுதலை செய்யுமாறு வாக்குவாதப்பட்டு பொலிஸாருக்கு தாக்கமுறபட்டதாலேயே கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயர் அதிகாரி கிங்ஸிலி ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவை விடுதலை செய் – காலி பிரதேசத்தில் போராட்டம்

galle12082010.jpgகாலி பிரதேசத்தில் ஜனநாயக தேசிய கூட்டணி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி நடைபெற்ற ஊர்வலம் காலி பொலிஸ் நிலையத்தை அண்மிக்கும் போது பொலிஸார் கண்ணீர்ப் புகை குண்டை வீசியுள்ளனர்.

களனி பிரதேச சபை முன்பாக ஆர்ப்பாட்டம்

mervyn.jpgகளனி பிரதேச சபை உறுப்பினர்களும் மேர்வின் சில்வாவின் ஆதரவாளர்களும் தற்போது ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் களனி பிரதேச சபை முன்பாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேவின் சில்வாவின் கட்சி அங்கத்துவம் மற்றும் பிரதியமைச்சு பதவி, களனி தொகுதி அமைப்பாளர் என்ற பதவிகளில் இருந்து விலக்கப்பட்டமையை கண்டித்தும் அவருக்கு அந்த பதவிகளை மீண்டும் வழங்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது.

சிங்கப்பூரில் பலவந்தமாக பாலியல் தொழில்களில் ஈடுபடுத்தப்படும் இலங்கை யுவதிகள்!

இலங்கையைச் சேர்ந்த பெண்கள் சிங்கப்பூரில் பாலியல் தொழில்களில் பலவந்தமாக ஈடுபடுத்தப்படுவதாகவும் இது தொடர்பாக குற்றப்புலனபய்வு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

இலங்கையிலிருந்து நடன நிகழ்சிகளுக்கு என சிங்கப்பூருக்கு அழைத்துச்செல்லப்படும் யுவதிகளே இவவாறு பாலியல் தொழிலுக்குட்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பெண்களை ஏமாற்றி அழைத்துச் செல்லும் நபர்கள் பெருமளவு பணத்தை இதன் மூலம் சம்பாதிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நவடிக்கையில் பிரதான நபராக செயற்பட்ட ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related News:

பெண்கள் மற்றும் சிறுவர்களை துன்புறுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

இலங்கையில் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையிலான பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேர்வின் சில்வா மீதான நடவடிக்கை ஜனாதிபதிக்கு சமுர்த்தி சங்கம் பாராட்டு

mervyn.jpgமேர்வின் சில்வாவை பிரதியமைச்சர் பதவியிலிருந்து அகற்றி அவரின் ஸ்ரீ.ல.சு.கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதன் மூலம் ஜனாதிபதி துணிச்சலாகச் செயற்பட்டிருப்பதாக சமுர்த்தி அதிகாரிகள் சங்கம் பாராட்டியுள்ளது.

சமுர்த்தி அதிகாரியொருவரை மரத்தில் கட்டிய மேர்வின் சில்வாவுக்கு ஜனாதிபதி இத்தகைய நடவடிக்கைகளை எடுத்ததற்காக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜகத்குமார பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்.

மேர்வின் சில்வாவுக்கு எதிராக நடவடிக்கையெடுத்ததன் மூலம் தமக்கு மிகவும் நெருங்கியவராக இருந்தால் கூட பொறுப்பற்ற விதத்தில் எவராவது செயற்பட்டால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை ஜனாதிபதி நிரூபித்துள்ளார் என்று ஜகத்குமார நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.

சமுர்த்தி அதிகாரிகள் ஒருபோதும் அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படவில்லை. அமைச்சருக்கு எதிராக மட்டுமே ஆர்ப்பாட்டங்களை அவர்கள் மேற்கொண்டனர். டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்றுவதை ஒருபோதும் அதிகாரிகள் வாபஸ்பெறப் போவதில்லை. இதற்குத் தொடர்ந்தும் அவர்கள் ஆதரவளிப்பார்கள். சட்டத்தை தமது கையிலெடுத்துக் கொள்வோருக்கு இது சிறந்த படிப்பினையாகும்.இந்தச் சம்பவத்தால் மேர்வின் சில்வா தனது நடத்தையைச் சிறப்பான முறையில் மாற்றிக்கொள்வார் என்றும் ஜகத்குமார கூறினார்.