செய்திகள்

செய்திகள்

செய்திகள்

யாழ். வசாவிளான் கல்லூரி ரூ. 50 இலட்சத்தில் புனரமைப்பு – ஜனவரியில் கல்வி நடவடிக்கை ஆரம்பம்

யாழ். பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் ஐம்பது இலட்சம் ரூபா செலவில் உடனடியாக புனரமைக்கப் படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ். பாதுகாப்புப் படைகளினதும் மேற்படி பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் நலன்விரும்பிகளின் பூரண ஒத்துழைப்புடன் இந்த புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்தப் பாடசாலை கடந்த மாதம் 29ம் திகதி பாதுகாப்புப் படையினரால் கல்வி நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டது. சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் மீளக் கையளிக்கப்பட்ட இந்த பாடசாலையை அபிவிருத்தி செய்தல், புனரமைப்பு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழுவினர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

மேல் மாகாண தமிழ் சாகித்திய விழா இன்று

மேல் மாகாணத் தமிழ் சாகித்திய விழா பிரதான நிகழ்வுகள் இன்று மாலை மூன்று மணிக்கு கொழும்பு- 10 மருதானை- எல்பின்ஸ்ரன் மண்டபத்தில் நடைபெறுகிறது. நிகழ்வுக்கு மேல் மாகாண சபை உறுப்பினரும் சாகித்திய விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான எஸ். இராஜேந்திரன் தலைமைதாங்குவார்.

மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா பிரதம அதிதியாகவும் கெளரவ அதிதிகளாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேல் மாகாண கலாசார அமைச்சர் உபாலி கொடிகார, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், முன்னாள் எம். பீ. மனோ கணேசன், மேல் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ந. குமரகுருபரன், முன்னாள் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பீ. பீ. தேவராஜ், மேல் மாகாண பிரதம செயலாளர் விக்டர் சமரவீர, மேல் மாகாண கலாசார அமைச்சின் செயலாளர் ஏ. ராமநாயக்க ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

சிறப்பு அதிதிகளாக பேராசிரியர் சோ. சந்திரசேகரன், லேக் ஹவுஸ் ஆசிரியர் பீடப் பணிப்பாளர் சீலரட்ன செனரத், தொழில் அதிபர்கள் சுந்தரம் பழனியாண்டி, ஜே.பி. ஜெயராம் ஜே.பி. ஆகியோர் கலந்து சிறப்பிப்பார்கள்.

மேல் மாகாணத்தின் தமிழ் மொழி மூலப் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்படுவதுடன், 25 பேர் சாகித்திய விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர். நம் நாட்டு கலைப் படைப்புகளைப் பிரதிபலிக்கும் இசை நிகழ்வுகளும் கலை நிகழ்வுகளும் விழாவைச் சிறப்பிக்கும். இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் இராஜேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த வருடம் விருது பெற்றவர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கப் படுகிறது.

புனர்வாழ்வு நிலையங்களின் பராமரிப்புக்கு ரூ. 100 மில். செலவு

புனர்வாழ்வு நிலையங்களில் பராமரிக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு உணவுக்காக மட்டும் நாளொன்றுக்கு நூறு மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறதென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மாலை 306 முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மார்ச் மாதம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைக்குரிய தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்தத் தேர்தலில் நீங்களும் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக வரமுடியும். அதன் வழியாக அரசியல் பலமும் அரச பலமும் கிடைக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதுவரையில், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஐயாயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டு சமூகத்துடன் இணைந்து கொண்டுள் ளனர்.

வளர்முகநாடுகளின் நிலைக்கு சமனான முறையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. போரின்போது வெற்றிகொண்ட இராணுவத்தினர் சரண் அடைந்த போராளிகளையும் மனித நேய அடிப்படையில் முக்கியத்துவம் கொடுத்து பராமரித்து வருகின்றது. புனர்வாழ்வு நிலையங்களில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியிருந்தவர்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 306 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். 200 பெண்களும், 106 ஆண்களும் அடங்கியிருந்தனர். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இவர்களை பொறுப்பேற்றனர்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஆலோசகர் எஸ். சதீஸ்குமார், செயலாளர் எம். திசாநாயக்க, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுகந்த ரணசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கைக் கிடைத்த ஒரே ஒரு தங்கமும் பறிபோகுமோ?

manju.gifஇந்தியாவில் நடைபெற்ற 19ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 56 கிரோ கிராம் எடைப் பிரிவு குத்துச் சண்டைப் பிரிவில் வெற்றிபெற்று இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த மஞ்சு வன்னியாராச்சி தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து தற்போது கருத்துக் கூற முடியாதென இலங்கை விளையாட்டுப் பிரிவின் வைத்திய பொது முகாமையாளர் வைத்தியர் கீதாஞ்சன மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

மஞ்சு வன்னியாராச்சி தொடர்பில் பல தகவல்கள் கசிந்துள்ள போதும் உத்தியோகப் பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் முறையான விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் உறுதியான தகவல்களை தெரிவிக்க முடியுமென வைத்தியர் கீதாஞ்சன மெண்டிஸ் கூறியுள்ளார். எனினும் மஞ்சு வன்னியாராச்சி போட்டியில் பங்குபற்றுவதற்கு முன்னர் அவரிடம் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பிரயோகித்துள்ளமை உறுதியாவதாகவும், பொதுநலவாய விளையாட்டுக் குழு இந்திய டில்லியில் இருந்து இலங்கைக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர் இலங்கை அதிகாரிகள் மஞ்சு வன்னியாராச்சியிடம் வினவியபோது, தான் அப்படியொரு ஊக்கமருந்தை பயன்படுத்தவில்லை என அவர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் தான் நோய் ஒன்றுக்காய் சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டதாக மஞ்சு வன்னியாராச்சி கூறியுள்ளார். இந்நிலையில் மஞ்சு வன்னியாராச்சியிடம் இலங்கை ஒலிம்பிக் குழு எதிர்வரும் 14 நாட்களுக்குள் உரிய விளக்கமளிக்குமாறி கோரியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்கரையில் கண்டெடுத்த டப்பா வெடித்து 8 வயது சிறுவன் பலி. மேலும் 4 சிறார்கள் காயம்: மூதூரில் சம்பவம்

மூதூர் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்டெடுத்த டப்பா ஒன்று வெடித்ததில் எட்டு வயதுச் சிறுவன் கொல்லப்பட்டதோடு மேலும் நான்கு சிறார்கள் காயமடைந்தனரென பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை 9.45 அளவில் மூதூர் தக்வா நகர் வட்டம் கடற்கரை பகுதியில் நடந் துள்ளதாக பொலிஸார் கூறினர்.

ஐந்து சிறுவர்களும் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கு கண்டெடுத்த டப்பா ஒன்றை திறக்க முற்பட்டுள்ளனர். அப்போது அது பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த ஐந்து சிறார்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் முகாஜிதீன் சர்பான் என்ற எட்டு வயதுச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாரென ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறின.

காயமடைந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் அடங்குகின்றனர். காயமடைந்தோரின் விபரம் வருமாறு, ஸல்மான், (வயது – 10), சாஜித் (வயது 05), சையிப் (வயது- 03) என்பவர்களுடன் யாரியா கரீம்- இம்ராக் (வயது 08) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.

முன்னாள் அமைச்சர் தர்மதாச பண்டா காலமானார்

முன்னாள் அமைச்சர் தர்மதாச பண்டா தனது 72 வது வயதில் காலமானார். சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுக் காலமானார்.

1965 ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலைப் பாராளுமன்ற உறுப் பினராகத் தனது அரசியல் பயணத்தை இவர் ஆரம்பித்திருந்தார்.

பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிய இவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் முன்னைய அமைச்சரவையில் துணை வேளாண்மை மற்றும் பயிர்ச்செய்கை அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.

புனர்வாழ்வு பெறுவோர் விபரங்கள் – www.bcgrsrilanka.com இணையத்தில்

தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள், கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவோர் பற்றிய விபரங் களை மக்கள் அறிந்து கொள்வதற்கான இணையத்தளம் யாழ்ப்பாண செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இணையத்தளத்தின் முகவரி www.bcgrsrilanka.com என்பதாகும். இந்த இணையத்தளம் அதிகளவு ஊடகவிய லாளர்களுக்கு பயனுடையதாக விருக்குமென கருதப்படுகிறது.

தெல்லிப்பழை புனர்வாழ்வு முகாமிலுள்ள 23 பெண்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

யாழ். தெல்லிப்பழை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 பெண்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இப்பெண்களை அவர்களின் பெற்றோர் உறவினர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை தெல்லிப்பழையில் இடம்பெற்றது.

சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகரவினால் இவர்கள் ஒப்படைக்கப்பட்டதுடன் இவர்களின் விடுதலைக்கான சான்றிதழ்களை அமைச்சர் டியூ குணசேகர வழங்கினார். தடுத்து வைக்கப்பட்ட பெண்கள் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் புனர்வாழ்வு முகாமில் வைக்கப்பட்டவர்களாவர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டியூ குணசேகரா வவுனியா ஓமந்தை புனர்வாழ்வு நிலையத்தின் புனர்வாழ்வு முகாம் மூடப்படுவதாக தெரிவித்தார். அந்த முகாமில் இருப்பவர்களில் சுமார் 150 பேர் வியாழக்கிழமை விடுதலை செய்யப்படுவதாகவும், ஏனையவர்கள் வேறு முகாம்களுக்கு மாற்றப்படுவர் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் சிறைச்சாலைகள் மற்றும், புனர்வாழ்வு பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்சா, அமைச்சின் செயலாளர் திசநாயக்க, அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார், புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுகந்த ரணசிங்க, புனர்வாழ்வு அதிகார சபைத் தலைவர் சமரசிங்க, தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின் மற்றும் புனர்வாழ்வு நிலைய அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக யாழ். அரச செயலகத்திற்கு நேற்று அமைச்சர் டியூ குணசேகர வருகை தந்த போது அங்கு காத்திருந்த தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் பெற்றோர், உறவினர், காணாமல் போனோரின் பெற்றோர் உறவினர் என்போர் அமைச்சரை சந்தித்து கண்ணீர் விட்டு அழுதனர். தங்கள் உறவினர்களை விடுதலைசெய்யுமாறும், காணாமல் போனோர் குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரியே இவர்கள் அமைச்சரிடம் அழுது மன்றாடினர். பொதுமக்கள் கொண்டு வந்திருந்த மனுக்களை அமைச்சர் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதேவேளை, தடுப்பு முகாமில் உள்ளவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் குறித்த விபரங்களைக் கொண்ட இணையத்தளம் ஒன்றை அமைச்சர் டியூ குணசேகர நேற்று யாழ். கேட்போர் கூடத்தில் வைத்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இன்று சனிக்கிழமை முதல் இந்த இணையத்தளத்தில் இவ்விபரங்களைப் பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. www.bcgrsrilanka.com என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் 2வது பதவிக் காலம் – 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டம்

tree.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு மற்றும் பிறந்த நாளை முன்னிட்டு ஒரே நேரத்தில் 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரக் கன்றுகளை நடும் திட்டமொன்று நவம்பர் 15ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான ஏற்பாடுகளை சுற்றாடல் வளத்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளது.

நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமுள்ள அரச நிறுவனங்கள், மாகாண சபைகள், மற்றும் பாடசாலைகளில் இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என சுற்றாடல் வளத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் யாப்பா, 30 ஆண்டு காலமாக இடம்பெற்று வந்த பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக சூழல் உட்பட மரம். செடிகள் என்பவற்றிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது.

பசுமையான சூழலொன்றினை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விழிப்பூட்டுவதற்காகவே நாடளாவிய மர நடுகை வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் உருவாகியுள்ள அமைதியான சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்த முடியுமென்று கூறிய அமைச்சர், இன்று உலகிலே சூழலை பாதுகாத்துவரும் நாடுகளில் இலங்கை முன்னிலை வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இவ்வாறு ஒரே தடவையில் அதிகளவு கன்றுகளை நட்டிய நாடு பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரையில் இல்லை என்பதால் சிலவேளை இதுவொரு கின்னஸ் சாதனையாகக் கூட இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக ஆட்களை கொண்டு வருவோருக்கு 10 வருட சிறை

கனடாவுக்குள் நுழையும் சட்ட விரோதக் குடியேற்றவாசிகள் மற்றும் ஆட்கடத்தல்களைத் தடுக்கும் நோக்கில் கனேடிய அரசாங்கம், குடிவரவுச் சட்டத்தை மாற்றியமைத்துள்ளது. சட்ட விரோதமாக கனடாவுக்குள் நுழைபவர்கள் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்தச் சட்ட மூலம் மாற்றப்பட்டிருப்பதாகக் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக்டோவ்ஸ் தெரிவித்தார். இந்த புதிய சட்டத்துக்கமைய சட்ட விரோதமாகக் கனடாவுக்குள் நுழைபவர்கள் குறைந்தது ஒரு வருடத்திற்காவது சிறையில் அடைக்கப்படுவதுடன், அவர்களுக்கான மருத்துவ உதவிகள் உட்பட அடிப்படை வசதிகள் குறைக்கப்படும்.

மேலும் அவர்களது நிரந்தர வதிவுரிமைக் கோரிக்கை நிராகரிக்கப்படலாமென்றும், அதுமட்டுமின்றி அவர்களின் புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவர்கள் 5 வருடங்களுக்கு நிரந்தர வதிவிடவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாதென்றும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்ட சட்டவிரோதமாக குடியேற்ற வாசிகளை கனடாவுக்குள் அழைத்துச் செல்பவர்களுக்கும் குறைந்தபட்சம் 10 வருட காலச் சிறைத்தண்டனையும் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த கனேடிய அமைச்சர் விக்டோல்ஸ்; கடந்த வருடங்களில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் கனடா வருகை அதிகரித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள், மற்றும் அகதிகளுக்கு கனடா வழங்கிவரும் சலுகையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஆட்கடத்தல் காரர்களின் செயற்பாடுகள்அதிகரித்துள்ளன.இதனை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம் ஆட்கடத்தல் காரர்களுக்கும், சட்ட விரோதக் குடியேற்றவாசிகளுக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 492 இலங்கையர்கள் எம். வி. சன்.  கப்பல் மூலம் சட்ட விரோதமாகக் கனடாவுக்குள் நுழைந்து, தமக்குப் புகலிடம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்தே, கனடா சட்ட விரோதக் குடியேற்ற வாசிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியது.

இதன் ஒரு அங்கமாக ஆட்கடத்தல்காரர்களுக்கும் சட்ட விரோதக் குடியேற்றவாசிகளுக்கும் சிறைத்தண்டனை வழங்கும் வகையில் குடிவரவுச் சட்டம் நேற்று முன்தினம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கும் பாரியளவில் ஆதரவளிக்கும் நாடாகக் கனடா உள்ளது. ஆனால் இந்தச் சலுகையை யாரும் துஷ்பிரயோகம் செய்வதற்கு அனுமதிக்கப்படாது எனக் கனேடியக் குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.