செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஜனாதிபதியின் பிறந்த தினம், பதவியேற்பு; ஒரு இலட்சம் பேருக்கு காணிகள் அன்பளிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 65வது பிறந்தநாள் மற்றும் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு காணியில்லாதவர்களுக்கு காணிகள் மற்றும் காணி உறுதிகளை வழங்க காணிகள் ஆணையாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மாவட்ட செயலகங்கள் ஊடாகப் பதிவு செய்த காணியில்லாதவர்களுக்கே இந்தக் காணிகளும், காணி உறுதிகளும் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக காணிகள் ஆணையாளர் ஆர். பி. ஆர். ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் பேருக்கு காணி உரிமைகள் வழங்கப்படவுள்ளன. காணியற்றவர்கள் தமது பிரதேச மாவட்ட செயலகங்களில் பதிவு செய்யுமாறு கோரப்பட்டிருப்பதுடன் அரசாங்க காணிகளில் சட்ட விரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என காணிகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் பள்ளிவாசல்களுக்கு அண்மையிலுள்ள படை முகாம்கள் அகற்றப்படும்

திருகோணமலை மாவட்டத்தில் பள்ளிவாசல்களுக்கு அண்மையில் இருக்கும் பாதுகாப்பு படையினரின் முகாம்கள் விரைவில் வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என்று பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று தெரிவித்தார். கடந்த 30 வருட காலமாக வடக்கு, கிழக்கில் நிலவிய பயங்கரவாதத்தை ஜனாதிபதியின் சிறந்த வழிகாட்டலின் மூலமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  தற்போது நாட்டில் அமைதி நிலவுகிறது. அதனால்தான் நானும் இப்பிரதேசத்திற்கு வந்து உங்களது கஷ்டங்களையும் குறைகளையும் கேட்டறிகின்றேன் என்றும் பிரதமர் கூறினார்.

கிண்ணியா பெரியபள்ளி வாசலில் திருகோணமலை மாவட்ட உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில், இம்மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம் பிரதேசங்களையும் ஒன்றிணைத்து அதனூடாக கிண்ணியாவில் இஸ்லாமிய கலாசாரத்தினூடாக ஒரு பெரிய பள்ளிவாசலை நிர்மாணித்து புனித நகரமாக உருவாக்குவதற்கு மத விவகார அமைச்சர் என்ற வகையில் சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

மேலும் முஸ்லிம் மக்கள் மூன்று தலைமுறையாக எனக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியுள்ளார்கள். அதே போன்று தான் முஸ்லிம் நாடுகள் எமது நாட்டுக்கு பல ஆண்டு காலமாக உதவிகளை வழங்கி வருகிறது. முஸ்லிம்களுக்கு ஒரே ஒரு அல்லாஹ் ஆனால் அவர்கள் இன்று பல கூறுகளாக பிரிந்து பிரச்சினையில் இருக்கிறார்கள்.

நாங்கள் போய் சமாதானம் புரிய வேண்டியிருக்கிறது. எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் இல்லாமல் குர்ஆனில் கூறப்பட்ட மசூரா அடிப்படையில் உங்களது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுங்கள். இந்நிகழ்வில் புத்தசாசன பிரதி அமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்தன, முன்னாள் அமைச்சர் நஜீப் ஏ. மஜீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ரிஷானா மீது கருணை காட்டுமாறு சவூதி மன்னருக்கு ஜனாதிபதி கடிதம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை தீர்ப்புக்குள்ளாகியுள்ள இலங்கை பணிப்பெண் ரிஷானா நபீக்கிற்கு கருணை காட்டுமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீசுக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

2005ம் ஆண்டு வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவிற்குச் சென்றிருந்த இலங்கையரான ரிஷானா நபீக் தாம் பணிபுரிந்த வீட்டு எஜமானனின் குழந்தைக்குப் புட்டிப்பால் ஊட்டும் போது குழந்தை முச்சுத்திணறி உயிரிழந்துள்ளது.

இதனால் அக் குழந்தையை பணிப்பெண்ணான ரிஷானாவே கொலை செய்ததாக அவருக்கெதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. அவ்வழக்கில் சவூதி அரேபியாவின் தவாமி மேல் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது. இதனை ரியாத் உயர் நீதிமன்றமும் அங்கீகரித்தது.

இதனால் மேற்படி தீர்ப்பு தொடர்பாக ரிஷானாவின் குடும்பத்தினர் முன்வைத்த மேன்முறையீட்டு மனு சவூதி உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க சட்ட ரீதியாக ரிஷானா நபீக்கின் சார்பில் மேலும் மேன்முறையீடுகளை முன்வைப்பதற்கான வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிலையிலேயே இலங்கை பணிப்பெண் ரிஷானா விடயத்தில் கருணை காட்டுமாறு கோரி ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இந்தோனேஷியாவில் சுனாமிக்கு 108 பேர் பலி

tsunami.jpgஇந்தோ னேஷியாவின் மேற்கு பகுதியில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சுனாமி உருவானது. இதில் 108 பேர் பலியாகினர். பெண்கள், குழந்தைகள் என 502 க்கும் மேற்பட்டோர் காணாமல் போய்விட்டனர்.

இந்தோனேசியாவின், மேற்குப் பகுதியில், சுமத்ரா தீவின் அருகிலுள்ள மென்டாவாய் தீவுக்கருகில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 7.7 ஆக பதிவான இந்த நில நடுக்கம், மேற்கு சுமத்ரா தீவிலுள்ள பல்வேறு மாகாணங்களில் உணரப்பட்டது.

நில நடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது. மென்டாவாய் தீவுகளில் 20 கி. மீ. தூரத்துக்கு சுனாமியால் ஏற்பட்ட அலைகள் புகுந்தன.

இந்தச் சுனாமியில் சிக்கி மென்டாவாய் தீவுகளில் 150 வீடுகள் சேதம் அடைந்தன. மென்டாவாய் தீவுகளில் தெற்கு பகாய் என்ற இடத்தில் உள்ள பெலு மொங்கா உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 380 பேர், வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போய்விட்டனர். மல்கோபா என்ற கிராமத்தில் 80 சதவீத வீடுகள் அழிந்து விட்டன. உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தீவுகளின் அருகில், படகில் சுற்றுலா மேற்கொண்டிருந்த 10 அவுஸ்திரேலியர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 1,100 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் தே. வீ. அ. சபை அலுவலகம் நவம். 1 இல் திறப்பு

கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகக் கட்டடம் புனரமைக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது. புனரமைப்பு செய்யப்பட்ட கட்டடத்தை நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச திறந்து வைப்பார்.

அன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட வீடமைப்பு நிர்மாணப் பணிகள் பற்றிய அபிவிருத்திக் கூட்டமும் புதிய அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பொன் நகரில் ஐம்பது பயனாளிகளுக்கு வீடமைப்புக் கடன்களை வழங்கியுள்ளது.

பிரபா – பொட்டு ஆகியோரின் மரணத்தை இந்திய நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

Pirabakaran 2007தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதை இந்திய நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் அவ்வமைப்பின் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டம்மான் என்கின்ற சண்முகநாதன் சிவசங்கரன் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்டு உள்ளது.

இந்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ வழங்கிய தகவலின் அடிப்படையில் ராஜீவ்காந்தி கொலைவழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்தள்ளது.

ரஜீவ்காந்தி கொலைவழக்கின் 01ஆவது குற்றவாளியான வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் 02ஆவது குற்றவாளியான சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோர்மீதான குற்றச்சாட்டுக்கள் கைவிடப்படுவதாக ரஜீவ்காந்தி கொலைவழக்கை விசாரணை செய்துவரும் சென்னை தடா நீதிமன்ற நீதிபதி தட்சணாமூர்த்தி தீர்ப்பளித்துள்ளார். குற்றவாளிகளின் இறப்புகளுக்குப் பின்னர் அவர்கள்மீதான குற்றச்சாட்டுகள் இல்லாது போகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
Pirabaharan_Still_Alive‘இந்தியா இன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ளவில்லை’ ஆகவே அவர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்ற கதைகளை புலம்பெயர் புலி ஆதரவு சக்திகள் இன்னமும் பரப்பி வருகின்ற நிலையில் இத்தீர்ப்பு வெளிவந்துள்ளது. தமிழக வர்த்தகப் பத்திரிகைகளும் இத்தலைவர்கள் உயிருடன் உள்ளதாக பரபரப்புச் செய்திகைள வெளியிட்டு வருகின்றமை தெரிந்ததே.

13வது திருத்தச் சட்டத்தினை ஆரம்பப் புள்ளியாக வைத்து ஒரு நிரந்தரத் தீர்வுக்கு அரசாங்கம் முன்வர வேண்டும் நல்லிணக்க ஆணைக்குழுவில் புளொட் தலைவர் சாட்சியம்

sitharthan.jpg13வது திருத்தச் சட்டத்தினை ஆரம்பப் புள்ளியாக வைத்து இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அரசாங்கம் முன்வர வேண்டும் என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நேற்று (ஒக்ரோபர் 25 2010) சாட்சியம் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

த சித்தார்த்தன் தனது சாட்சியத்தில் கூறியதாவது, ”யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைத் தீர்வுக்கான எந்தவொரு அறிகுறியும் தென்படாதிருப்பதால் தமிழ் சமூகம் தாங்கள் செய்த தியாகங்கள், அர்ப்பணிப்புகள் எல்லாமே வீணாகி விட்டதோ என்ற ஏக்கத்தில் உள்ளனர். இந்நடவடிக்கையானது அரசாங்கம் இவ்விடயத்தில் அக்கறை எடுக்காமல் இருக்கும் தன்மையையே வெளிக்காட்டி நிற்கின்றது.

அத்துடன் வடக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றமையானது சிங்களக் குடியேற்றத்திற்கான முன்னேற்பாடுகள்தான் என மக்கள் மத்தியில் சந்தேகமும் நிலவி வருகின்றது. இந்நடவடிக்கையினை வன்னியில் ஏற்கனவே இருந்த இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் ஒரு கபட நோக்கம் கொண்ட செயலெனவும் மக்கள் கருதுகின்றனர்.

இதேவேளை 13வது திருத்தச் சட்டத்தினை ஆரம்பப் புள்ளியாக வைத்து அதிலிருந்து தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும். இதுவே நாட்டின் எதிர்காலம் செழிப்பாவதற்கும், நாட்டு மக்கள் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்வதற்கும் வழிவகுக்கும்.

கடந்த இரு தலைமுறையினர் அனுபவித்து வந்த துன்பங்களும், துயரங்களும், இழப்புகளும், வேதனைகளும், நெருக்கடிகளும் வருங்கால சந்ததியினருக்கு வரக்கூடாதென்பதே எமது ஆத்மார்த்தமான விருப்பமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

புளொட் சர்வதேசக் கிளைகளின் மாநாடு : புளொட்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேசக் கிளைகளின் மாநாடு இம்மாதம் 30ம் 31ம் திகதிகளில் ஜெர்மனியின் ஸ்ரூட்காட் நகரில் நடைபெறவுள்ளது. இதன்போது கழகத்தின் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

இம்மாநாட்டில் புளொட்டின் அனைத்து கிளைகளையும் சேர்ந்த அமைப்பாளர்கள், மற்றும் உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மாநாட்டு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

முதல்நாள் நிகழ்வுகளாக மௌன அஞ்சலி, வரவேற்புரை, கிளைப் பொறுப்பாளர்களின் உரை என்பவற்றைத் தொடர்ந்து கழகத்தின் செயற்பாடுகளில் வெளிநாட்டுக் கிளைகளின் பங்களிப்பு, அரசாங்கத்தின் நடவடிக்கைகள், எதிர்காலத்தில் கழகம் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளன.

இரண்டாம் நாள் நிகழ்வுகளாக தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு, அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் உதவிகள், வெளிநாட்டுக் கிளைகளின் செயற்பாடுகள், நாட்டில் கழகத்தின் செயற்பாடுகள் என்பன தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

 நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்.

படிப்பனைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் 11ஆம் திகதியிலிருந்து 13ஆம் திகதி வரை மூன்று தினங்கள் ஒன்பது இடங்களில் அமர்வுகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் நாள் அமர்வு ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு மக்களுக்காக புனித அந்தோனியார் தேவாலயத்திலும், வேலணை மக்களுக்காக மண்கும்பான் பிள்ளையார் ஆலய கல்யாண மண்டபத்திலும், யாழ்ப்பாணம் மற்றும் கரைநகர் மக்களுக்காக குருநகர் கலாசார மண்டபத்திலும், நல்லூர் மக்களுக்காக அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்திலும் நடைபெறும்.

இரண்டாம் நாள் அமர்வுகள் கோப்பாய் பிரதேச மக்களுக்காக நீர்வேலி கிராம முன்னேற்றச் சங்க மண்டபத்திலும், தெல்லிப்பழை, சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில் பிரதேச மக்களுக்காக அளவெட்டி மகாஜன சபை மண்டபத்திலும், கரவெட்டி, பருத்தித்துறை மக்களுக்காக நெல்லியடி முருகன் கோவிலிலும் நடைபெறும்.

மூன்றாம் நாள் அமர்வுகள் மருதங்கேணி மக்களுக்காக குடத்தனை தேவாலயத்திலும், சாவகச்சேரி மக்களுக்காக சாவகச்சேரி கலாசார மண்டபத்திலும் நடைபெறும். இந்த அமர்வுகளில் சாட்சியமளிக்க இதுவரை 366 பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாத, சாட்சியமளிக்க விரும்பும் எவரும் முன்வந்து ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் ஒன்பது வயது மாணவன் குளத்தில் சடலமாக மீட்பு!

கிளிநொச்சியில் ஒன்பது வயது மாணவன் ஒருவன் குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று நேற்று திங்கள் கிழமை இடம் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி பாரதிபுரத்தில் தனியார் கல்வி நிலையமொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் 45 வயது மதிக்கத்தக்க நபரொருவர் இம்மாணவனை சைக்கிளில் பலாத்காரமாக பிடித்து ஏற்றிச் சென்றதாகவும், இரவாகியும் வீடு திரும்பாத அம்மாணவனின் பெற்றோர் பல இடங்களில் தேடி அலைந்து விட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் பின்னர் நேற்று திங்கள் கிழமை அம்மாணவன் கானகாம்பிகைக் குளத்தில் சடலமாக மிதந்த நிலையில் மீடகப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழுத்தில் காயத்துடன், வாயிலும் மூக்கிலும் இரத்தம் சிந்திய நிலையில் சடலம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மடாவட்ட நீதவான் சிவகுமாரின் உத்தரவின் பேரில் இம்மாணவனின் சடலம் வவனியா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் நபரொருவரால் கடத்தப்பட்ட நிலையில் குளத்தில் சடலமாக மீடக்கப்பட்டதான செய்தி கிளிநொச்சி பெற்றொர் மத்தியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று பாரதிபுரம், கனகாம்பிகைக்குளம் பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்த ‘தேசம் நெற்’ அப்பகுதி பாடசாலை அதிபர் ஒருவரிடம் கேட்ட போது இச்சமபவம் குறித்து வெளியாகியுள்ள விடயங்கள் பெற்றோர்கள் மத்தியில் வீணான பதற்றத்தையும் சந்தேகங்களையும் எற்படுத்தியுள்ளதாகவும், குறித்த மாணவன் பாடசாலை அல்லது தனியார் கல்விநிலையத்திற்கு சென்று வரும் வழியில் கனகாம்பிகைக் குளத்தில் மீன்பிடிப்பதை பொழுது போக்காக கொண்டவன் எனவும், இதன் போது அம்மாணவன் நீரில் மூழ்கியிருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

எனினும் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் பெண்களிடம் தங்கச் சங்கிலிகளை அறுத்துச்செல்லும் கள்வர்கள்!

Gold_Chainகிளிநொச்சியில் பட்டப்பகலில் பெண்களில் கழுத்து நகைகளை அறுத்துச்செல்லும் கள்வர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் வேளையில் இவ்வாறான சம்பவம் ஒன்று கிளிநொச்சி உதயநகர் மேற்குப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

பிறபகல் ஒரு மணியளவில் உதயநகர் மேற்கிலுள்ள மக்கள் குடியிருப்பு ஒன்றின் ஒழுங்கையில் நின்றிருந்த இரு இளைஞர்கள் அவ்வழியால் வந்த பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை பிடித்து அறுக்க முயன்றுள்ளனர் அப்பெண் அக்கள்வர்களோடு போராடி சங்கிலியை அறுத்துக்கொண்டு செல்வதை தடுத்துள்ளார். இதனால் பெண்ணின் கழுத்தில் காயமேற்பட்டுள்ளது.

பெண்ணின் கூக்குரலைக்கேட்டு அயலவர்கள் ஓடி வருவதைக்கண்ட கள்வர்கள் சைக்கிளில் தப்பியோடி விட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இதே கிராமத்தில் இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றது.

ஒழுங்கையொன்றில் தனியாக நடந்து வந்த வயோதிபப் பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அவ்வீதியால் சைக்கிளில் வந்த நபரொருவர் அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். கிளிநொச்சியில் மக்கள் மீள் குடியமர்த்தப்பட்ட கிராமங்களில் முன்பின் அறிமுகமற்ற பலர் நடமாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏ-9 பாதை திறப்பிற்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம்.

Child_Protectionகுடாநாட்டில் ஏ-9 பாதை திறக்கப்பட்டதன் பின்பு அதிகளவிலான சிறுவர் துஸ்பிரயோக நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு 35 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்தால் பாதிக்கபட்டு உள்ளதாகவும், இவ்வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் நேற்று திங்கள் கிழமை வரை 36 சிறுவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி அலுவலகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 12 தொடக்கம் 15 வயது வரையான சிறுவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்கள் உள்ளடங்கவதாகவும், அதிலும் குறிப்பாக பெற்றோரை இழந்த சிறுவர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இவ்வாறான பெற்றோரை இழந்த சிறுவர்கள் தனிமையில் வாழ்வதாலும், பொருளாதார பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம் கொடுப்பதாலும்  பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாவதாகவும் பாதிக்கப்பட்ட, அடையாளம் காணப்பட்ட சிறுவர்களுக்கு பல்வேறு தரப்பினராலும் உளநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.