செய்திகள்

செய்திகள்

செய்திகள்

எம் பி சார்ள்ஸ்ம் கொரோனாவும்: கொரோனா வைரஸில் இருந்து தப்பினாலும் ரிஎன்ஏ வைரஸில் இருந்து தப்பிக்க முடியவில்லை!!!

கொரோனாவையே கட்டுப்படுத்தும் தடுப்பூசி பத்து மாதங்களில் ரெடியாகிவிட்டது. ஆனால் தமிழ் தேசிய வைரஸ்களின் அழிவில் இருந்து தமிழ் மக்களை எந்தக் கடவுளாலும் காப்பாபற்ற முடியவில்லை. ஐம்பது வருடங்களாக இந்த தமிழ் தேசிய வைரஸ்கள் உருமாறி, உருமாறி காலத்திற்குக் காலம் தமிழ் மக்களை அழித்து வருகின்றன. சிங்கள பேரினவாதத்துடன் போட்டி போட்டு தமிழ் மக்களை அழித்து வருகின்ற இந்த தமிழ் தேசிய வைரஸ்கள்: தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய புடுங்கிகள்: (ரெலோ, புளொட், புலி) என்றெல்லாம் உருமாறி தமிழ் மக்களிடம் இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பிடுங்கி எடுத்துக்கொண்டுள்ளனர்.

கேள்விச் செவியன் ஊரைக்கெடுத்த கதையாக தாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோதாவில் வீம்பு பேச்சுக்களும் வீம்புத்தனங்களும் செய்து தமிழ் மக்களை இன்று கடைநிலையில் கொண்டுவந்து விட்டுள்ளனர். அன்று ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் தலைமைகளும் சரி, இன்று பாராளுமன்றம் செல்கின்ற அரசியல் தலைமைகளும் சரி இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. இவர்கள் எல்லோருக்கும் அறிவு எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. அதனால் அவர்கள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் முட்டாள்களாகவே எண்ணுகின்றனர். முன்னவர்களது அதிகாரவெறிக்கு தமிழ் மக்கள் மண் மூட்டைகளாக்கப்பட்டனர். பின்னையவர்களது பாராளுமன்றக் கதிரைகளுக்கு தமிழ் மக்கள் மந்தைக் கூட்டங்களாக்கப்பட்டனர்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் தேசிய ஆயுதக் குழுக்களும் கட்சிகளும் தமிழ் மக்களின் குருதியயை குடித்தே வருகின்றனர். இதில் இரா சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், த சித்தார்த்தன் எல்லோருமே ஒரே டிஎன்ஏ உள்ள வைரஸ்கள் தான். இந்த வரிசையில் கடைசியில் உருமாற்றம் அடைந்தவர்கள் தான் சி வி விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் மற்றும் அவரில் இருந்து திரிபடைந்த மணிவண்ணன்.

வைரஸ்கள் திரிபடைந்து உருமாற்றம் பெறும் பொழுது பொதுவாக அவற்றின் வீரியம் குறைவடைந்து பலவீனமாகும். ஆனால் தமிழ் தேசிய வைரஸ்கள் திரிபடைந்தாலும் அவற்றின் தமிழ் மக்களை அழிக்கின்ற ஆற்றலில் எவ்வித பலவீனமும் ஏற்படவில்லை. அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு அனைத்து நிலைகளிலும் இவர்கள் தமிழ் மக்களை அழித்தொழித்து வருகின்றனர். பொறுப்பற்ற முட்டாள்கள் பொறுப்பான பதவிகளில் அமருகின்ற போது சமூகம் பேரழிவை நோக்கித் தள்ளப்படுவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

இதற்கு வளர்ந்த நாடுகள் வளர்முக நாடுகள் என்று விதிவிலக்குகள் இல்லை. பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனினதும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்மினதும் இந்திய ஜனாதிபதி நரேந்திர மோடியினதும் முட்டாள் தனமான முடிவுகளே இந்நாடுகளில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொரோனாவிற்குப் பலியாகக் காரணம். இன்று உலகமெங்கும் வளர்முக நாடுகளில் கொரோனாவிற்கு மக்கள் பலியாவதற்கு முக்கிய காரணம் பிரித்தானிய, அமெரிக்க அரசுகளின் பணத்தாசை மட்டுமே. அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் பதவிக்கு வரும்வரை கொரொனா தடுப்பூசியின் உரிமத்தை சிறிதுகாலத்திற்கு விட்டுக்கொடுப்பதாகத் தெரிவித்து இருந்தார். ஆனால் பதவிக்கு வந்த பின் அதனை அடக்கியே வாசிக்கின்றார்.

கொரோனா தடுப்பூசிக்கான உரிமம் விட்டுக்கொடுக்கப்பட்டு இருந்தால் உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பு வக்சின் உருவாக்கப்பட்டு கூடிய விரைவில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் பெரும் தடையாக உள்ளன. இவர்களே இன்றைய கொரோனா கொலையாளிகள். தங்களுக்கு தேவையான போது மனித உரிமை அரசியலைத் தூக்கிப் பிடிக்கும் இவர்கள் இப்பொழுது தங்களால் பல்லாயிரக் கணக்காண மக்கள் கொல்லப்படுவதை நாசுக்காக மூடி மறைக்கின்றனர். இவர்களுடைய மேற்குலக பிரச்சார ஊடகங்களும் அதனை கண்டும் காணாமல் மௌனமாய் உள்ளன. தமிழ் தேசிய வைரஸ்களைப் போன்றவர்களே இன்னும் இந்த காலனித்துவத்திற்கு அடிமைச்சானம் எழுதிக்கொடுத்துவிட்டு கதையளந்து திரிகின்றனர்.

பொது மக்களின் வரிப்பணத்திலும் உலகெங்கும் இருந்து பெறப்பட்ட தகவலையும் அறிவையும் கொண்டு தயாரிக்கப்பட்ட வக்சீனுக்கு இப்பொது ஒரு சில உலகப்பெரும் மருத்துவ நிறுவனங்கள் உரிமம் பாராட்டுகின்றன. ரஸ்யாவினதும் சீனாவினதும் வக்சீனே இன்று வளர்முக நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வக்சீனை உற்பத்தி செய்து பிரித்தானியாவுக்கு வழங்கிய இந்தியாவுக்கே தன்னிடம் உள்ள வக்சினில் ஒரு பகுதியயை பிரித்தானியா வழங்க மறுத்திருந்தது சில வாரங்களுக்கு முன் வந்த செய்தி.

சுற்றத்தில் என்ன நடக்கின்றது என்பதை பார்க்காமல், கேட்காமல், தீரவும் விசாரிக்காமல் சார்ள்ஸ் நிர்மலநாதன் என்ற வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர், “இலங்கை அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியாவை எதிர்த்து சீனாவின் பக்கம் நிற்பதனாலேயே கொரோனா தடுப்பூசிகளை வழங்க குறித்த நாடுகள் முன்வருவதில்லை” என்று பாராளுமன்றத்தில் முழங்கினார்; அல்ல யாருக்கோ முதுகு சொறிந்தார்.

உலகில் கொரோனாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ பொலிஸ் அதிகாரம் உடைய நாடுகளே. அந்தக் கட்டமைப்புத் தான் அந்நாடுகளில் கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவியது. (அது மட்டுமே காரணம் அல்ல என்பதையும் குறித்துக்கொள்க.) அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையும் ஒப்பீட்டளவில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்கள் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கு இலங்கையின் இராணுவக் கட்டமைப்பும் ஒரு காரணம் என்பதை மருத்துவத்துறை சார்ந்தவர்களே ஏற்றுக்கொண்டும் உள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பத்தில் விட்ட அறிக்கைகளில் வடக்கு கிழக்கில் கொரோனா தடுப்பு மையங்களை உருவாக்குவதற்கே எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தாங்களும் ஏதோ அறிக்கை வெளியிட வேண்டும், பாராளுமன்றத்தில் முழங்க வேண்டும் என்பதற்காக சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அறிக்கை விடுவது பின்னர் அதுபற்றி மௌனமாக இருப்பது என்பது இவர்களுடைய சாக்கடை அரசியல் தந்திரம். அதற்கு தானும் சளைத்தவன் அல்ல என்பதை சாரள்ஸ் நிர்மலநாதன் நிரூபித்துள்ளார். “சுகாதாரத்துறையினர் செய்ய வேண்டிய வேலைகளை இராணுவத்தினர் செய்வதனாலேயே நாடு தற்போது பேராபத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த செயற்பாடு தொடர்ந்தால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது” என்று சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்து உள்ளார். எதை எதிர்ப்பது எதை ஆதரிப்பது என்ற விவஸ்தையே இல்லாத முட்டாள்களை பாராளுமன்றம் அனுப்பியதன் விளைவை தமிழ் மக்கள் அனுபவித்துத்தானே ஆக வேண்டும்.

இந்த தமிழ் தேசிய வைரஸ்களுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டால் எஞ்சியுள்ள தமிழ் சமூகமும் அழிந்துபோய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு விடயம் பற்றி பேசுவதாக இருந்தால் அதனைப் பற்றி தேடி ஆய்வு செய்து பேச வேண்டும். இல்லையேல் தெரியாத விடையத்தை பேசுவதைத் தவிர்க்க வேண்டும். தெரியாத விடையத்தை தெரிந்தது போல் காட்டி இப்படி ஊதிக்கெடுக்கின்ற ஆண்டிகள் சேர்ந்து தமிழ் மக்களுக்கு தமிழீழ மடம் கட்டித் தர வெளிக்கிட்டு உள்ளனர். இவர்கள் மடம் கட்டுகிறார்களோ இல்லையோ தமிழ் மக்களுக்கு கொல்லி வைப்பது என்றே விறகுக்கட்டைகளுடன் வலம்வருகின்றனர். ஜாக்கிரதை!

கனடாவில் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் – முஸ்லீம்கள் என்பதால் இனவெறித்தாக்குதலா என்ற சந்தேகம்..?

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் லண்டன் நகரில் உள்ள ஒரு பூங்காவுக்கு அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென அவர்கள் மீது காரை மோதினார்.

இதில் அவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் தங்களுக்கு என்ன நடந்தது என சுதாரிப்பதற்குள் அந்த வாலிபர் மீண்டும் அவர்கள் மீது காரை ஏற்றினார். இதில் அவர்கள் கார் சக்கரங்களில் சிக்கி நசுங்கினர். இந்த கோர சம்பவத்தில் 74 மற்றும் 44 வயதான 2 பெண்கள், 46 வயதான ஒரு ஆண் மற்றும் 15 வயதான சிறுமி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் அந்த குடும்பத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் படுகாயங்களுடன் உயிர் தப்பினான்.‌அதனை தொடர்ந்து காரை மோதி தாக்குதல் நடத்திய அந்த வாலிபர் அங்கிருந்து காரில் தப்பி சென்றார்.‌

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த சிறுவனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொலையாளியை போலீசார் தேடினர். சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே முதற்கட்ட விசாரணையில் காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என தெரியவந்தது.‌ எனவே இது இனவெறி தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.‌ இதனால் அந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஐநாவின் பொதுக்குழு தலைவராக மாலத்தீவின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாகித் 143 வாக்குகளால் தெரிவு !

ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் ஐநாவின் பொதுக்குழு தலைவர் தேர்வு செய்யப்படுவார். பிராந்திய அடிப்படையில் சுழற்சி முறையில் இந்த வாய்ப்பு வழங்கப்படும். இந்த நிலையில் 2021-22க்கான வாய்ப்பு ஆசிய -பசிபிக் குழுவிற்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து கடந்த வருடம் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக மாலத்தீவின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாகித் அறிவித்தார். இவரை எதிர்த்து அப்போது யாரும் போட்டியிட முன்வராத நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இவருக்கு ஆதரவு வழங்கியது.

அதே சமயம் மாலத்தீவு இந்த பதவியை இதுவரை வகித்தது இல்லை. இதனால் பல்வேறு நாடுகள் நல்லெண்ண அடிப்படையில் மாலத்தீவின் வெளியுறவுத் துறை மந்திரி அப்துல்லா ஷாகித்திற்கு ஆதரவு அளித்தது. இந்தியாவும் கடந்த நவம்பரில் அப்துல்லா ஷாகித்திற்கு ஆதரவு அளிப்பதாக அதிகார்பூர்வமாக தெரிவித்தது .

இதற்கிடையே, திடீரென ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை மந்திரி சலமாய் ராசூல் இதே பதவிக்கு போட்டியிடுவதாக 6 மாதங்கள் முன் அறிவித்தார். ஆப்கானிஸ்தானுக்கு பல நாடுகள் ஆதரவு தந்தாலும், திடீரென கடைசி கட்டத்தில் வந்ததால் முன்கூட்டியே பலர் மாலத்தீவிற்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்து இருந்தனர்.

அதோடு ஆப்கானிஸ்தான் ஏற்கனவே 1966-67ல் இந்த பதவியில் இருந்துள்ளது. மாலத்தீவு இந்த பதவியை வகித்தது இல்லை. மாலத்தீவு ஏற்கனவே பலரிடம் பேசி ஆதரவை பெற்று இருந்தது.

இந்நிலையில் இன்று நடந்த வாக்கெடுப்பில் மாலத்தீவு வெற்றிபெற்றது. இதையடுத்து ஐ.நா. பொதுச்சபை 76வது தலைவராக மாலத்தீவின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாகித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 193 உறுப்பினர்கள் கொண்ட பொதுச்சபையில் 191 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இவருக்கு ஆதரவாக 143 வாக்குகள் விழுந்தன. 48 வாக்குகள் எதிராக சென்றன.

வரும் செப்டம்பரில் 76-வது பொதுச்சபை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தை ஷாகித் துவக்கி வைப்பார்.

‘தி பேமிலி மேன் 2 தொடர் ஒளிபரப்பை அமேசான் நிறுவனம் நிறுத்தாவிட்டால் உலகம் முழுதும் தமிழர்களுடைய எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும்.” – பாரதிராஜா அறிக்கை !

‘தி பேமிலி மேன் 2’ தொடர் ஒளிப்பரப்பை அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து நிறுத்த வேண்டும் எனக் கூறி இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்,

image

image

“ எங்கள் இனத்திற்கு எதிரான ‘தி பேமிலி மேன் 2’ இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன. அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும் தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர்  திரு.பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும். இத்தொடரில் தமிழ், முஸ்லீம்,வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள்.

தி பேமிலி மேன் 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை
கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அல்-கொய்தா அமைப்பு தலைவர் அய்மான் அல்-ஜவாகிரி உயிருடன் தான் இருக்கிறார்.” – ஐ.நா.சபை அதிர்ச்சி தகவல் !

அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அந்த அமைப்புக்கு அய்மான் அல்-ஜவாகிரி பொறுப்பேற்றார்.

10 ஆண்டுக்கு முன்பு பொறுப்பேற்ற அவர் அமெரிக்காவுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அல்-ஜவாகிரியை கொல்வோம் என்று அமெரிக்கா தெரிவித்தது.

இதற்கிடையே அய்மான் அல்-ஜவாகிரி உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டதாக சமீப காலங்களாக தகவல் வெளியானது. ஆனால் அதை அல்-கொய்தா அமைப்பு உறுதிப்படுத்தவில்லை.

இதனால் அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா என்பதில் கேள்விக்குறி நிலவி வருகிறது. இந்த நிலையில் அல்-கொய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாகிரி இறந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா.சபை தாக்கல் செய்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையேயான எல்லை பகுதியில் வசித்து வருகிறார்கள்.

இதில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வரும் அல்-கொய்தா அமைப்பு தலைவர் அய்மான் அல்-ஜவாகிரியும் உள்ளார். அவர் உயிருடன் தான் இருக்கிறார். ஆனாலும் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் பயங்கரவாதிகளின் பிரசார வெளியீடுகளில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.

அல்-ஜவாகிரி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக முன்னர் வெளியான தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை. அல்-கொய்தா அமைப்புடன் தலிபான் மற்றும் சில வெளிநாட்டு பயங்கரவாதிகளும் உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் உள்ள அல்-கொய்தா மத்திய தலைமையுடன் இணைந்து இந்திய துணை கண்டத்துக்கான அல்-கொய்தா அமைப்பு செயல்பட்டு வருகிறது.

அல்-கொய்தா, தலிபான் தலைவர்களின் உரையாடல்களை சில நாடுகள் இடைமறித்து கேட்டுள்ளன. சமீப காலமாக இந்த உரையாடல்கள் குறைந்து உள்ளன. இந்திய துணை கண்டத்துக்கான அல்-கொய்தா அமைப்பு ஆப்கானிஸ்தானின் காந்தஹார், ஹெல் மந்த், நிர்முஸ்பில் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.

“ஆண் துணை வேண்டுமானால் அதற்கு திருமண பேப்பர்களில் கையெழுத்துப் போட வேண்டிய அவசியமில்லை.” – பிரிட்டன் பத்திரிகையில் ஆணாதிக்கத்துக்கு எதிராக சாட்டை சுத்திய மலாலா !

எதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தானின் இளம் மங்கை மலாலா யூசுப்ஜாய் கேள்வி எழுப்பியுள்ளமை பாகிஸ்தான் அடிப்படைவாத மதவாதிகள் இடையே கடும் எதிர்ப்பை எழுப்பியுள்ளது.

பிரிட்டனின் பிரபல சஞ்சிகையின் அட்டைப் படத்தில் இடம்பிடித்தார் மலாலா யூசுப்  | Virakesari.lk

அண்மையில் பிரிட்டன் பத்திரிகையான வோக் அட்டையில் மலாலா இடம் பெற்றார். அந்தப் படம் வைரலாகப் பரவியது. அந்த இதழுக்கு அளித்த பேட்டியில் இதுவரை பேசாத தமது தனிப்பட்ட வாழ்க்கையின் பல கேள்விகளுக்கு மலாலா பதிலளித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் , “பிரித்தானியாவில் தன்னுடைய சுவாரஸ்யமான பொழுதுகள் பற்றி விவரித்துள்ளார்.

மேலும் முஸ்லீம் பெண்கள், குறிப்பாக பாகிஸ்தானிய பெண்கள் கலாச்சாரம் என்ற போர்வையில் முக்கியமாக ஆடைக்கலாச்சாரம் என்று ஆணாதிக்கவாதிகள்ளால் நசுக்கப்படுகின்றார்கள். அவர்கள் குரலற்றவர்களாக உள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதில் திருமணம் குறித்து அவர் கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாழ்க்கையில் ஆண் துணை வேண்டுமானால் அதற்கு திருமண பேப்பர்களில் கையெழுத்துப் போட வேண்டிய அவசியமில்லை என்று மலாலா கூறியுள்ளார்.

மலாலாவின் கருத்து பொறுப்பற்றது என்று பாகிஸ்தானில் கண்டனம் வலுத்துள்ளது.

ந்நிலையில் மலாலாவினுடைய புகைபடம் புகழ் வாய்ந்த பத்திரிக்கையினுடைய அட்டைப் படத்தில் இடம் பெற்றது. இதனை தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்து கொண்ட அவர் பெண்களுக்காக ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார்.

அதாவது ஒரு பெண்மணி தெளிவான சிந்தனையுடன் தன்னுடைய இலக்கை நோக்கி பயணம் செய்யும் போது அவளுடைய மனவலிமை எவ்வாறு இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன் என்றார். மேலும் தன்னுடைய புகைப்படம் வந்த அட்டைப்படத்தை பார்க்கின்ற ஒவ்வொரு பெண்மணிக்குள்ளும் இந்த உலகத்தையே தங்களால் மாற்ற முடியும் என்கின்ற நம்பிக்கை உருவாகும் என்று நம்புகிறேன் என அவருடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கு !

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்  இருந்த  தோல்வியடைந்தார்.
ஜோ பைடன் வெற்றி பெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் கடந்த ஜனவரி 7-ம் திகதி அமெரிக்கா பாராளுமன்ற கட்டிடமான கேப்பிட்டல் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. தேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ளாத டொனால்டு-டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். மேலும், தனது பேச்சை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
அவரது பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள கேப்பிட்டல் கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்கள் டொனால்டு டிரம்பின் அதிகாரப்பூர்வ கணக்குகளை முடக்கின.
டொனால்டு டிரம்பின் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களை கோடிக்கணக்கானோர் பின்பற்றி வந்தனர். இந்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து டிரம்பின் டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் நிரந்தரமாக தடை செய்தது. ஆனால், பேஸ்புக் கணக்கு நிரந்தரமாக மூடாமல் தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் பேஸ்புக் பக்க கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி டொனால்டு டிரம்பின் பேஸ்புக் பக்கம் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சினைகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே மீண்டும் டிரம்பின் பேஸ்புக் கணக்கை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து டொனால்டு-டிரம்ப் கூறுகையில், 2 ஆண்டுகள் தனது பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது, தனக்கு வாக்களித்த மக்களுக்கு கிடைத்த அவமரியாதை என தெரிவித்துள்ளார்.

பயணத்தடை நாட்களிலும் 2000க்கு குறையாத தொற்றாளர்கள் – 2இலட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று – ஏன்..? எதற்காக ..? யாருக்காக..? இந்த பயணத்தடை ?

கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்த தவறிவிட்டது என்பதே உண்மை. 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதற்கே அரசு நாட்டை முழுமையாக பல மாதங்கள் முடக்கியது. ஆனால் நாளாக நாளாக அது தொடர்பாக கவனம் செலுத்தப்படாமலேயே போய்விட்டது.

50,000 தொற்றாளர்களை அண்மித்த போதே இலங்கை மருத்துவ சங்கத்தின் அதிகாரிகள் பலரும் 14 நாட்கள் முழுமையான ஊரடங்கை அமுல்படுத்துமாறு வேண்டிய போதும் கூட பொருளாதாரத்தை காரணம் காட்டி அரசு முடக்க பின்வாங்கியது.

ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 600 ஆக பதிவாகி வந்த தொகை ஒரு கட்டத்துடன் கட்டுப்படுத்த முடியாததாகிவிட்டது. பின்பு நாளொன்றுக்கு 1000 தொற்றாளர்களும் அதனை தொடர்ந்து 2000 , 3000 என தொற்றாளர்கள் அதிகரித்துக்கொண்டே சென்றனர்.

May be an image of motorcycle, road and street

இந்த கட்டத்தில் கூட அரசு சுதாகரித்துக்கொண்டதாக தெரியவில்லை. பயணத்தடை அமுலில் இருப்பதாக கூறுப்படுகிறதே தவிர அது முழுமையான நடைமுறையில் என்பதே உண்மை. இங்கு காட்டப்பட்டுள்ள இந்தப்படம்  வெள்ளவத்தையில் எடுக்கப்பட்ட படமாகும். நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் இது போன்ற பல படங்களை காண முடிந்தது. இவ்வளவுக்கு அலட்சியமாக தான் நகர்ந்துகொண்டிருக்கின்றது இலங்கையின்  இந்த பயணத்தடை.

 

இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணி வரை 2,280 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் நாட்டில் இன்று மாலையுடன் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 1,656 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பயணத்தடை விதிக்கப்பட்டு சுமார் 20 நாட்களை அண்மிக்கின்ற நிலையில் கூட தொற்றாளர்களின் தொகை 2000க்கு குறைந்தபாடில்லை. அப்படியானால் ஏன்..? எதற்காக ..? யாருக்காக..? இந்த பயணத்தடை என்ற வினா எழுகின்றது.

எதிர்க்கட்சியினர் விமர்சிப்பதை போலவே கொரோனா கட்டுப்படுத்தல் என்ற விடயத்தில் அரசு தோற்று விட்டது என்றே சொல்ல வேண்டும். பாராளுமன்ற தேர்தலை அண்மித்த காலம் வரை அவ்வளவு கட்டுப்பாடாக கொரோனா தொடர்பான விடயங்கள் கண்காணிக்கப்பட்டன. ஆனால் இன்று எல்லா விடயங்களும் கண்துடைப்பாக மாறிப்போயுள்ளது. இந்த பயணத்தடை கூட கண்கெட்ட பிரகான சூரியநமஸ்காரம் போன்றதே.

அதிலும் கொடுமை இரண்டாவது கொரோனா அலைக்கு காரணமான ஆடைத்தொழிற்சாலைகள் தொடர்ந்தும் இயங்குவதாகும். பலரும் ஆடைத்தொழற்சாலைகளை மூடுங்கள் என வேண்டுகோள் விடுத்தும் அரசு கவனம் செலுத்தியதாய் தெரியவில்லை. செலுத்தப்போவதாயுமில்லை. தடுப்பூசி விடயத்தில் கூட முன்களப்பணியாளர்களான வைத்தியசாலைத்தாதியர்களை அரசு கவனத்தில் கொண்டதாய் தெரியவில்லை.  இதனாலேயே அவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்க தயாராகின்றனர்.

சுகாதாரத்துறை அமைச்சருடைய நகர்வுகள் இன்னும் கேலிக்குரியதாக மாறிவருகின்ற நிலையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. களனியில் கொரோனாவை விரட்ட சடங்கு செய்தமை , சித்தவைத்தியரின் கொரோனாப்பாணியை ஆதரித்தமை மற்றும் அதனால் அங்கு அலை மோதிய மக்கள் கூட்டம் என பல முன்யோசனையற்ற செயற்பாடுகளுக்கு அவர் பொறுப்பு கூற வேண்டியவர். ஆனாலும் அவர் புரிந்து கொள்வதாயில்லை. அண்மையில் கூட அவரை குறித்த பொறுப்பிலிருந்து மாற்றுமாறு சில வைத்தியர்கள் கோரிக்கை முன்வைத்திருந்தமையும் நினைவிற்கொள்ளத்தக்கது.

சரி மக்களாவது பொறுப்புடன் நடந்து கொள்கிறார்களா என்றால் சிறிதளவு கூட சிந்திப்பதாயில்லை. ஒரு நாள் பயணத்தடை எடுத்தால் கூட கடைகளில் குவிந்து மொய்த்து விடுகிறார்கள். சரி என்னிடம் ஓரளவு பயணத்தடை நாட்களை தாக்குப்பிடிக்க கூடியளவிற்கு பொருட்கள் உள்ளன. போதும் என்ற திருப்தியில் யாராவது இருக்கிறார்களா என்றால் .., ஆகச்சிலரே நிலையயை உணர்ந்து செயற்படுகின்றனர். ஏனையோர் கொரோனாவை ஒரு விடயமாகவே பொருட்படுத்தவேயில்லை. சரி நம்மில் எத்தனை பேர் முகக்கவசங்களையேனும் முறையாக அணிகின்றோம்..,? நாம் முகக்கவசம் அணிவதும் , தலைக்கவசம் அணிவதும் பொலிஸாருக்காகவே தவிர நமது நன்மைக்காக என நாம் எண்ணும் வரை சில விடயங்கள் மாறப்போவதில்லை.

அரசியல் தலைமைகளும் மக்கள் மத்தியில் இது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவோராயில்லை. முடியுமானவரை வழமையான காழ்ப்புணர்ச்சி அரசியலை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனரே தவிர மக்களை விழிப்பூட்டுவதாயில்லை.

அண்மையில் “கொரோனா பரவலின் தற்போதைய நிலைமையை கவனத்தில் கொள்ளும் போது, இலங்கையின் நிலைமையானது இந்தியாவை விட மோசமானது” என சுகாதாரம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் கலாநிதி சஞ்சய பெரேரா தெரிவித்திருந்தமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

தனித்து அரசாங்கத்தை மட்டுமே விமர்சிப்பவர்களாயிராது நாம் பாதுகாப்பாக இருப்பதுடன் நம் சார்ந்தவர்களையும் பாதுகாக்க அனைவரும் பொறுப்புடன் செயற்பட முன்வர வேண்டும். விழிப்புணர்வுடன் இருங்கள். அரசாங்கங்கள் மாறிக்கொண்டுதான் இருக்கும். நம் சார்ந்த அன்பானவர்கள் பற்றி நாம் தான் சிந்திக்க வேண்டும். ஆகவே பொறுப்புடன் செயற்படுவோம்..!

சுயநலம் காப்பது  பொதுநலன் பேணுதற்கே..!

நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை !

நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த நாட்டு ஜனாதிபதி மொஹமட் புஹாரி அண்மையில் டுவிட்டரில் பதிவிட்ட கருத்து நீக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Rage as Nigerians report Buhari's "genocidal tweet" en masse

மொஹமட் புஹாரிக்கு எதிராக நைஜீரியாவின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. இந்நிலையில் ஜனாதிபதி தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தூண்டுவது போன்று அவர் பதிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்களது விதிகளை மீறும் வகையில் அவர் கருத்து வெளியிட்டதாக அறிவித்த டுவிட்டர் அவரது பதிவையும் நீக்கியது.

இந்நிலையில் காலவரையன்றி அந்நாட்டில் டுவிட்டர் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

இலங்கையின் வரலாற்றில் இல்லாத சுற்றுச்சூழல் அனர்த்தம்! இரு வாரங்களாகியும் அணையாத தீ!!

எம்வி எக்ஸ் பிரஸ் பேர் என்ற சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கப்பல் இரு வாரங்களாகியும் தொடர்ந்தும் எரிந்துகொண்டும் கடலுக்குள் வெடித்துச் சிதறிக்கொண்டும் உள்ளது. இலங்கை – இந்திய கரையோர கடற்படையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவர முடிந்த போதும் பல முயற்சிகளை எடுத்த போதும் கப்பல் தொடர்ந்தும் எரிந்த வண்ணமே உள்ளது. தற்போது இலங்கையயை நோக்கி விசுகின்ற பருவக்காற்று இத்தீயை கட்டுப்படுத்த பெரும் தடையாக இருந்து வருகின்றது. கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் சிப்பந்திகள் 25 பேர் காப்பாற்றப்பட்டுவிட்டனர். ஆனால் கப்பலில் ஏற்றி வரப்பட்ட ஆபத்தான இரசாயணப் பொருட்கள் மற்றும் 300 தொன் எரிபொருட்கள் என்பன அளவிட முடியாத சேதத்தை இலங்கையின் கடற்பரப்பில் ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையின் மேற்கு கரையான நீர்கொழும்பு களுத்துறையைச் சுற்றியுள்ள 50 மைல் பிரதேசம் பாரிய பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. நுண் பிளாஸ்ரிக் துகள்கள் மற்றும் இரசாயணப் பொருட்கள்: நைற்றிக் அமிலம், சோடியம் குளோரைட் என்பன கடலில் கலப்பதுடன் கடல் வாழ் உயிரினங்களையும் பாதிப்படையச் செய்கின்றன. இப்பகுதிகளில் மீன் பிடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டு உள்ளதுடன் அயலில் உள்ள பகுதிகளிலும் மக்கள் கடலுணவுகளை பெற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர். ஏற்கனவே கோவிட் இனால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள சுற்றுச் சூழல் நெருக்கடியால் மேலும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

“கடலுக்குள் செல்லாமல் வியாபாரத்தைச் செய்யாமல் எப்படி தனது குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்?” தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றார். டேவிட் பெர்னான்டோ. நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் நீர்கொழும்புப் பகுதி மீனவர். இந்த அனர்த்தத்தால் சிறிது காலத்திற்கு மக்கள் கடல் உணவுகளை தவிர்க்கவே விரும்புவார்கள் என்று சொல்லும் டேவிட் பெர்னான்டோ அவர்கள குற்றம்சொல்ல முடியாது என்றும் அவர்கள் கடலுணவை சாப்பிடத் தயங்குவது நியாயம்தானே என்றும் டேவிட் பெர்னான்டோ தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

கடற்பரப்பில் கடந்த இரு வாரங்களாக தொடரும் இந்த அனர்த்தம் சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது. கரையொதுங்கும் கழிவுகள் எதனையும் தொட வேண்டாம் என கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அனர்த்தத்தை கட்டுப்படுத்தவும் கரையொதுங்கும் கழிவுகளை பாதுகாப்பானமுறையில் அகற்றவும் ஆயிரக்கணக்கான கடற்படையினர் பாதுகாப்பு அங்கிகளோடு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.