செய்திகள்
செய்திகள்
செய்திகள்
யூலை 11 மாலை யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட பிரதேசசபை உறுப்பினர் தலைமறைவாகி உள்ளார். சித்தங்கேணி பிள்ளையார் கோவிலின் மகாகும்பாபிசேகக் கணக்கு தொடர்பில் எழுந்த வாக்குவாதத்தில் கேள்விகேட்டவரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினார் வாளால் வெட்டியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கு இலக்கானவர் தலையிலும் கையிலும் வெட்டுக் காயங்களுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலுக்கு உள்ளானவர் யாழ் பல்கலைக்கழகத்தில் தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்கும் பயிற்றுனர் எனவும் தெரியவருகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக அன்று சிவன்கோவிலின் 6ம் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர் ஒருவர் தகவல் தெரிவிக்கையில் சம்பவம் மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றதாகவும் சித்தங்கேணி பிள்ளையார் கோவிலின் கணக்கு வழக்குத் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் வாக்குவாதப்பட்டதை கேட்கக் கூடியதாக இருந்ததாகவும் தெரிவித்தார். சற்று நேரத்தில் வாக்குவாதம் மோதல்நிலைக்குச் செல்ல தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் வாளை எடுத்து வெட்டியதாகவும் அப்பக்தர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
சித்தங்கேணி சிவன் கோவிலும் பிள்ளையார் கோவிலும் சித்தங்கேணிச் சந்தியின் இரு புறமும் அருகருகே உள்ள ஆலயங்கள். இந்த ஆலயங்களின் நிர்வாகசபையில் உள்ளவர்களும் பெரும்பாலும் அதே உறுப்பினர்களாக இருப்பர். இந்த மோதலில் சம்பந்தப்பட்ட இருவருமே இரு ஆலயங்களினதும் நிர்வாகசபையில் உள்ளவர்களே.
தமிழ் பிரதேசங்கள் வன்முறை சம்பவங்கள் மலிந்த பிரதேசங்களாக மாறியுள்ள சூழலில் ஒழுக்கம் பண்புகளைப் பேண வேண்டிய ஆலயத்தில் வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவதற்காக உழைக்க வேண்டிய அரசியல் கட்சியினரே இந்த வாள்வெட்டை மேற்கொண்டும் உள்ளமை தமிழ் பிரதேசங்கள் எதிர்கொள்ளும் ஆபத்தினை கட்டியம் கூறுபவையாக உள்ளன.
தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் இளைஞர்களின் காடைத்தனங்களின் பின்னால் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாப தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு ஆண்டுகளாக இருந்து வருகின்றது. கடைத்தனங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு மாறாக அவர்களை சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வெளியே எடுத்து தங்கள் கட்சியின் நலன்களுக்கு பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டுகள் சமூகவலைத்தளங்களில் பரவலாக பதிவுசெய்யப்பட்டு உள்ளது. இந்தப் பின்னணியிலேயே நேற்று தமிழ் தேசிய முன்னணயின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரே பட்டப்பகலில் ஒரு ஆலய வளாகத்தில் அடியார்கள் முன்னிலையில் வாள்வெட்டில் ஈடுபட்டுள்ளார்.
ஆலயத்தை பாரம்பரியமாக பராமரித்து வருபவர்களிடம் பிடுங்கிக் கொண்ட புதிய நிர்வாகத்தினர் தற்போது ஆலயத்தை மிகமோசமான முறையில் பரிபாலனம் செய்வதாக பெயர் குறிப்பிடவிரும்பாத அடியார் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இதன் உச்சகட்டம் தான் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தாக்குதலில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் தற்போதைய யாழ் மேயர் மணிவண்ணனுக்கு ஆதரவானவர் என்றும் இந்த அணியிலேயே வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடைய பலர் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகின்றது. இவர்களுடைய மிரட்டல்களுக்கு அஞ்சியே யாழ் ஊடகங்கள் சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினரின் கட்சியை குறிப்பிடுவதைத் தவிர்த்துள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் சிவகுமார் கஜேன் மரணித்து இருந்தார். இவருடைய மரணம் கொலையாக இருக்கும் என்ற சந்தேகம் எழுவதற்கும் கட்சியின் வன்முறை போக்கே காரணம் என நம்பப்படுகின்றது. ஆனால் சிவக்குமார் கஜேனின் மரணம் தற்கொலை என இறந்தவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காதலித்த பெண்ணை மணக்க அனுமதியாமல் மற்றுமொரு பெண்ணுடன் திருமணத்திற்கு நிர்ப்பந்தித்ததாலேயே சிவக்குமார் கஜேன் தற்கொலை செய்துகொண்டதாக இராமாவில் பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை தெரிந்ததே
தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் யாழ் மேயர் மணிவண்ணனும் யாழில் நடைபெறும் வன்மறைச் சம்பவங்கள் தொடர்பில் பொறுப்பான முறையில் செயற்பட வேண்டும். கட்சிக்குள் வன்முறையைக் களையும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வன்முறையுடன் தொடர்புபட்டவர்களை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். தங்களுடைய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களே ஒவ்வொருவராக தற்கொலை செய்வதை பொருட்படுத்தாமல் இருந்துகொண்டு சமூகத்துக்கு எப்படி இவர்களால் வழிகாட்ட முடியும்.
யாழ்ப்பாணம் நல்லலூரடியில் ஒடுக்கபட்ட சமூகப் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வந்த போது துரிதகதியில் வந்து அவர்களை விரட்டியடிக்க முழுமூச்சுடன் செயற்பட்ட மேயர் மணிவண்ணன் குழுவினர் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் வன்முறை தொடர்பிலும் அவர்களின் தற்கொலைகள் தொடர்பிலும் துரிதகெதியில் செயற்பட வேண்டும்.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று காலை (July 11, 2021) கண்டெடுக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்த, இராமாவில் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கஜேன் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த திங்கள் யூலை 5 வவுனியா தோணிகல் பகுதியில் உதயச்சந்திரன் சஞ்ஜீவ், வீட்டிற்கு வெளியே காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். விபுலானந்தா கல்லூரியில் தரம் 10இல் கல்வி பயிலும் இம்மமாணவர் வீட்டில் தனது பெற்றோருடன் தூங்கச் சென்றவர் காலையில் வீட்டிற்கு வெளியே காயங்களுடன் மரணித்த நநிலையில் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு உள்ளாகவே பிரதேசசபை உறுப்பினர் சிவக்குமாரின் மரணம் கொலையா? தற்கொலையா? என்று நிலையில் வந்து நிற்கின்றது.
தமிழ் மக்கள் மத்தியில் தற்கொலைகளின் எண்ணிக்கை, வன்செயல் நடவடிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலும் தமிழ் அரசியல் வாதிகள் யாரும் இதுபற்றி இதுவரை எவ்வித கவனமும் செலுத்தவில்லை. எவ்வித விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு இருக்கவும் இல்லலை. இந்நிலையில் பிரதேசசபை உறுப்பினர் ஒருவருடைய மரணமே கொலையா? தற்கொலையா? என ஊசாலாடிக்கொண்டுள்ளது.
தங்களைச் சார்ந்த ஒரு இளம் அரசியல் வாதியின் மரணமே இவ்வாறு கேள்விக்குறியாகி நிற்பதைத் தொடர்ந்தாவது இந்த அரசியல் வாதிகள் சிந்திப்பார்களா? எனக் கேள்வி எழுப்புகின்றார் சாவகச்சேரியயைச் சேர்ந்த தேநீர்க்கடை உரிமையாளரான தவநேசன். தேசம்நெற்க்கு தவநேசன் மேலும் தெரிவிக்கையில் யாழ் நகர மேயரும் அவருடைய கட்சியினரும் முதலில் இந்த வன்முறை, தற்கொலை விடயங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்களிடம் அதிகாரம் இல்லாவிட்டால் இதற்கு எதிரான போராட்டங்களை அவர்கள் முன்னெடுக்கலாம் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், சிவகுமார் கஜேன் (வயது 28) ருடைய மரணம் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படுவதாக தமிழ் காங்கிரஸ் கட்சியினரால் ஏற்கனவே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பட்டியலில் ஒருவராக இவர் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மேயர் மணிவண்ணனின் நெருங்கிய மற்றுமொரு உறுப்பினரான பார்தீபன் வரதராஜன் உடன் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் உடனடியாக தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. பார்தீபனுடைய முகநூலிலும் நல்லூர் பூங்கா பற்றிய பதிவே காணப்படுகின்றது. இறந்த சிவகுமார் பற்றிய எப்பதிவுகளும் இல்லை. மேயர் மணிவண்ணனின் முகநூலிலும் தனக்கு ஆதரவான பிரதேசசபை உறுப்பினரின் மரணம் தொடர்பான எவ்வித பதிவுகளும் காணப்படவில்லை.
அதேசமயம் தேசம்நெற் க்கு பிந்திக் கிடைத்த தகவல்களின் படி இவருடைய மரணம் தற்கொலையாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக பிரதேசசபையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் விசாரணைகள் முடிவடையும் வரை உறுதியாக எந்த முடிவுக்கும் வர முடியாது எனத் அவர்கள் தெரிவிக்கின்றனர். தற்கொலையாக இருந்தால் அதற்கு என்ன காரணம் என்பதும் தெரியவரவில்லை. இவருக்கு திருமண நிச்சயம் நடந்திருப்பதாகவும் சில முகநூல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவலை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.
மேயர் மணிவண்ணனுக்கு ஆதரவான பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் ஓராண்டுக்கு முன்னதாக தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரியவருகின்றது. கோப்பாய் பிரதேச சபையைச் சேர்ந்தவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இத்தற்கொலை தொடர்பாகவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மரணிக்கின்றனர் என்பது தற்செயலான நிகழ்வுகளா? அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா? என்பது ஆராயப்பட வேண்டியதொன்று என கடந்த ஆண்டு மரணித்த கோப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் ஊரவரான, தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத பெண் தேசம்நெற் க்கு தெரிவித்தார்.
புகைத்ததால் நுரையீரல் பிரச்சினை என்றால் இழுத்து சுவாசத்தை சீராக்கலாம் என புகைத்தல் வணிகக் நிறுவனம் பிலிப் மொறிஸ் இன்ரநசனல் நிறுவனம் புதிய முதலீட்டை மேற்கொண்டுள்ளது. சுவாசப் பிரச்சினையைச் சீராக்கி சுவாசத்தை சீர்படுத்தும் ‘இன்ஹேலர்’ உபகரணத்தை தயாரிக்கும் பிரித்தானியாவின் மருத்துவ நிறுவனமான வெக்ரூரா நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் பிலிப் மொறிஸ் இன்ரநசனல் நிறுவனம் இறங்கி உள்ளது. ஒரு பில்லியன் டொலருக்கு வெக்ரூரா நிறுவனத்தை வாங்குவதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளது. இதன்படி புகைத்தலுக்கு அப்பால் பிலிப் மொறிஸ் இன்ரநசனல் நிறுவனம் ஆண்டுக்கு ஒரு பில்லியன் வருமானத்தை ஈட்டலாம் என மதிப்பிடுகின்றது.
பிலிப் மொறிஸ் இன்ரநசனல் புகைத்தலுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்கான மருத்துவ சுவிங்கம் தயாரிக்கும் டெனிஸ் நிறுவனத்திற்கு 820 மில்லியன் டொலர் செலுத்தியுள்ளது. அதேசமயம் தனக்கு போட்டியான அல்ற்றியா நிறுவனத்தையும் தனக்குள் வளைத்துப் போட்டுக் கொள்ள, 200 பில்லியன் டொலர்களை பிலப் மொறிஸ் இன்ரநசனல் செலவழித்துள்ளது. இந்த இணைவின் மூலம் சிகரெட் பிடிப்பவர்களை அதனிலும் சற்று ஆபத்து குறைந்த புகைத்தல் முறைக்கு அடிமையாக்குவததை நோக்கி பிலிப் மொறிஸ் இன்ரநசனல் இறங்கியுள்ளது. பிள்ளையயையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் பல்தேசிய நிறுவனங்களும் அதற்குத் துணைபோகும் அரசுகளும் இப்படித்தான் இயங்குகின்றன.
முற்றிலும் இலாப நோக்கத்தோடு செயற்படும் நிறுவனங்களிடம் மக்களின் சுகாதார பராமரிப்பும் அது தொடர்பான ஆய்வுகளும் கையளிக்கப்படுவது தற்போது வைத்தியர்களால் வழங்கப்படும் மருந்துகள் தொடர்பில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
உடலில் சீனியயைக் கட்டுப்படுத்தும் (நீரிழிவு) மருந்துகள், கொலஸ்திரோலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள், இதயத் தாக்கத்தை கட்டுப்படுத்தும் மருந்துகள் என ஆண்டாண்டு காலத்துக்கும் மருந்து எடுக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படும் மருந்துகள் தொடர்பில் பலர், மருத்துவ நிபுணர்கள் உட்பட கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மருந்துகளின் அதீத பாவனையால் 500,000 பேர் கொல்லப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. அதல் 70 வீதமான மரணங்கள் ஓபியோய்ட் எனப்படும் போதைப்பொருள் சேர்க்கையுள்ள மருந்துகளின் தாக்கத்தால் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது. 2017ம் ஆண்டில் 117,000 பேர் ஓபியோய்ட் அதிதமான காரணத்தினால் மரணத்தை தளுவியுள்ளனர்.
தற்போது உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையை ஏற்றுள்ள சௌமியா சுவாமிநாதனின் தந்தை சுவாமிநாதன் இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்துகின்றேன் என்று ஆரம்பித்து, செயற்கை உரங்களுக்கு இந்தியப் பயிர்களையும் செயற்கை உர மற்றும் மருந்து பல்தேசிய கொம்பனிகளுக்கு இந்திய விவசாயிகளையும் அடிமையாக்கியவர். இதனால் பல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடன்சுமை தாங்காமல் தற்கொலைக்கும் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிணமானாலும் பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தோடு முற்றிலும் இலாபநோக்கத்தோடு இயங்கும் பல்தேசிய நிறுவனங்களின் பெயர்களை உச்சரித்துக்கொண்டே மக்கள் அவர்களுக்கான சவக்குழியயை தாங்களே வெட்டுகின்றனர். பொருளாதார வளர்ச்சி என்ற மாயைக்காட்டி அரசுகளும் இதற்கு உடந்தையாகவே இருக்கின்றது.
பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் சுற்றாடலை அசுத்தப்படுத்தவும் எமது உடல்களை அசுத்தப்படுத்தவும் பிலிப் மொறிஸ் இன்ரநசனல் போன்ற பல்தேசியக் கொம்பனிகள் இயங்கவும் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தவும் விற்பனை செய்யவும் அரசுகள் ஒப்புதல் அளித்தன. இப்போது ஒப்புதல் அளிக்கின்றன.
கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வளரும் உறுப்பு நாடுகளுக்கு தடுப்பூசி தொடர்பான ஆதரவை வழங்க டிசம்பர் 2020 இல் தொடங்கப்பட்ட ஆசிய பசிபிக் தடுப்பூசி அணுகல் வசதியின் ஒரு பகுதியாக இந்த நிதி வழங்கப்படவுள்ளது.
கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கவும், பாதித்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும் இந்த கடனுதவியை வழங்க தீர்மானித்துள்ளதாக வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகவா தெரிவித்துள்ளார்.
குறித்த கடன் ஒப்பந்தத்தில் திறைசேரியின் செயலாளர் எஸ். ஆர். அட்டிகலே மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
கரீபியன் தீவு நாடான ஹெய்டி நாட்டின் ஜனாதிபதி ஜோவனல் மோயிஸ் (வயது 53) கடந்த புதன்கிழமை அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த பயங்கர சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவரது மனைவி மார்டின் மோயிஸ் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில் ஹெய்டிஜனாதிபதி படுகொலை செய்யப்பட்டதின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருந்தது தற்போது அம்பலமாகி உள்ளது. ஜனாதிபதி ஜோவனல் மோயிசை படுகொலை செய்த கூலிப்படையினர் தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார் உடனடியாக அங்கு விரைந்து அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது கூலிப்படையினர் போலீசாரை துப்பாக்கியால் சுட்டனர்.
பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இறுதியாக கூலிப்படையினர் 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்களில் 15 பேர் கொலம்பியாவை சேர்ந்தவர்கள் என்பதும் 2 பேர், ஹெய்டி-அமெரிக்கர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும் ஜனாதிபதி படுகொலையில் கொலம்பியாவை சேர்ந்த 26 பேர் மற்றும் 2ஹெய்டி -அமெரிக்கர்கள் என மொத்தம் 28 பேருக்கு தொடர்பு இருப்பதும், அவர்களில் 8 பேர் தற்போது தலைமறைவாகி உள்ளதும் தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஹெய்டி ஜனாதிபதி கொலையில் தொடர்புடைய கொலம்பியாவை சேர்ந்த 26 பேரில் பெரும்பாலானோர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் தொற்றாளர்களது எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்து வருகின்ற போதிலும் நாளாந்த உயிரிழப்புகள் தொடர்ச்சியாக பதிவாகும் நிலை நீடித்து வருகிறது.
ஜூலை 01 முதல் ஜூலை 07 வரையான ஒரு வாரத்தில் மட்டும் இவ்வாறு 12 கொரோனா இறப்புகள் யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.
இதன்படி, ஜூலை மாதம் முதலாம் திகதி 4 பேரும், ஜூலை 2ஆம் திகதி 2பேரும், ஜூலை 4 ஆம் திகதி ஒருவரும், 5ஆம் திகதி ஒருவரும், ஜூலை 6ஆம் திகதி 3 பேரும், 7ஆம் திகதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் ஜூலை 7ஆம் திகதி வரையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பிரதேச செயலர் பிரிவு வாரியாக நோக்கும் போது, யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் – 33 பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 12 பேரும், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 12 பேரும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் – 09 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவு, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவு மற்றும் சங்கானை பிரதேச செயலர் பிரிவில் தலா 8 பேரும், தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் 5 பேரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவு, சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவு, வேலணை பிரதேச செயலர் பிரிவு ஆகியவற்றில் தலா 3பேரும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 2பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் ஒருவரும் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் இன்று (09) முதல் ஓகஸ்ட் 08 வரை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது என குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கொரோனாத் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் காலவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப் பகுதிக்கான வீசாக்கட்டணம் மாத்திரம் அறவிடப்படும் என்பதுடன், அதற்காக எவ்வித தண்டப்பணமும் அறிவிடப்படாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.









