இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 13 பொதுமக்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோன் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் கடும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நிலக்கரி சுரங்கத்தில் பணியை முடித்து விட்டு திரும்பிய தொழிலாளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனை அடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்ட நிலையில், பலர் காயமடைந்தனர். இதை அறிந்து ஆத்திரமுற்ற அப்பகுதி மக்கள், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதுடன் அவர்களின் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலில் உள்ளூர் மக்கள் 5 பேரும், வீரர் ஒருவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், தீவிரவாதிகள் நடமாட்டம் பற்றி கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டதாகவும், அங்கு நிகழ்ந்த சம்பவம் வருத்தம் அளிப்பதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமேரு எரிமலை நேற்று கடும் சீற்றத்துடன் வெடித்துச் சிதறியது. எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களை சூழ்ந்தன. அப்பகுதி முழுவதும் கரும்புகை மற்றும் சாம்பல் படர்ந்துள்ளது. எரிமலையை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறினர். எனினும் பலர் வெளியேற முடியாமல் வீடுகளில் சிக்கிக்கொண்டனர். அதிகரிக்கும் வெப்ப காற்றால் மக்கள் தவித்து வருகின்றனர்.
அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். எரிமலையை சுற்றி 5 கிமீ சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பிற்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். சுமார் 100 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
என்னுடைய அண்ணன் 1989 இல் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த மோதலில் கொல்லப்பட்ட போது அவனுக்கு வயது வெறும் 23. மரணத்தின் வலியை உணத்திய மரணம். அவனது உடல் கூடக் கிடைக்கவில்லை. போராடப் போனவர்கள் முட்டாள்களா? போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் முட்டாள்களா? அல்லது எமது போராட்டமே முட்டாள்தனமானதா? இதற்கு விடை கிடைக்கவில்லையா அல்லது விடையை அறியத் தயாரில்லையா தெரியவில்லை. ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்துவிட்டும், அதிமுட்டாள்தனமான அரசியலை இன்றும் முன்னெடுக்கின்றோம்.
2003இல் என் தந்தையார் தனது அறுபதுக்களில் மாரடைப்பால் மரணித்த போது, நான் லண்டனில். மரணச் செய்தி எனக்கு கிடைத்த போது தகனக் கிரியைகள் கூட முடிந்துவிட்டது. என்னிரு உறவுகளினதும் மரணத்திற்கு அருகில் நான் நிற்கவில்லை. பார்க்கவில்லை.
2001 செப்ரம்பரில் இரட்டைக் கோபுரங்களில் இருந்து மனிதர்கள் இறந்து கொண்டிருந்ததை நேரடியாக லைப்பாக பார்த்துக்கொண்டிருந்தேன். உலகமே பார்த்துக்கொண்டிருந்தது. உயிரைக் காக்க மாடிகளில் இருந்து குதித்து மரணத்தை தழுவிக்கொண்டிருந்தனர். விமானம் மோதி அதன் எரிபொருள் எரிந்து மக்கள் கருகிச் செத்துக்கொண்டிருந்ததை பாரத்தோம். அவர்களுக்கும் எனக்கும் இடையே மனிதம் என்பதைத் தவிர எந்த உறவும் இருக்கவில்லை. இந்த மரணங்களுக்கும் எனக்கும் பல்லாயிரம் மைல் இடைவெளி.
இப்போது கடந்த 12 மாத காலத்திற்குள் என்னோடு எவ்வித இரத்த சம்பந்தமுமற்ற நெருக்கமான இரு நட்புகளை முற்றிலும் மாறுபட்ட சூழலில் இழந்துள்ளேன். இந்த இரு நட்புகளோடும் இரு தசாப்தங்களுக்கு மேலான ஒரு உறவு இருந்தது. வண்ணத்துப் பூச்சிவிளைவு – butterfly effect என்பார்கள் அது போல் தான் இதுவும். உலகின் ஒரு மூலையில் வண்ணத்துப் பூச்சி பறக்க அந்த வண்ணத்துப் பூச்சியின் அசைவு மலரை அசைக்க மலரின் அசைவு கிளையை அசைக்க கிளையின் அசைவால் … என்று போய் உலகின் இன்னொரு மூலையில் புவிநடுக்கம் ஏற்பட்டது போல்தான்.
1954 நவம்பர் 26இல் வண்ணத்துப்பூச்சி ஏதும் செய்திருந்தால் 1987இல் இந்திய அமைதிப்படை இலங்கை வந்திருக்காது. நான் யாழ் வட்டு இந்துக் கல்லூரியிலேயே படித்துக் கொண்டிருந்திருப்பேன். சிவஜோதியையோ மற்றும் யாழ் விக்ரோரியாக் கல்லூரி நண்பர்களையோ சந்தித்திருக்க வாய்ப்பில்லை. அவன் எனக்கு ஒரு முகவரியற்ற மனிதனாக இருந்திருப்பான். ஆனால் எங்கோ பறந்த வண்ணத்துப் பூச்சியின் விளைவால் நண்பர்களானோம். மரணப் படுக்கையில் இருந்தபடியும் லிற்றில் எய்டைப் பற்றி பேசினான். இன்று அவன் துணைவிக்கு நான் உடன் பிறவா சகோதரன். லிற்றில் எய்ட் னை அவன் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து சுமக்கின்றார்.
அதேபோல் 1991இல் ஸ்பெயினில் நாங்கள் தரையிறக்கப்படாவிட்டால் சுவிஸ்லாந்தில் அகதி அந்தஸ்து கோரியிருப்பேன். சஞ்சீவ்ராஜ் என்ற குட்டியை சந்தித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் எங்கோ பறந்த வண்ணத்துப் பூச்சியின் விளைவால் ஸ்பெயினில் நாங்கள் மாட்டினோம். திருப்பி அனுப்பப்படும் போது லண்டனில் தரையிறங்கினோம். தமிழீழ மக்கள் கட்சியில் வேலை செய்ய ஆரம்பித்தேன். குட்டியைச் சந்தித்தேன். சமூகம், அரசியல் என்று ஓடித் திரிந்த குட்டியுடன் நட்பாகியது. ஏற்ற இறக்கங்கள் எல்லாம் உண்டு. இருந்தாலும் தேசம் சஞ்சிகை, லண்டன் குரல், தேசம்நெற் ஆகியவற்றின் உத்தியோகப்பற்றற்ற செய்தி சேகரிப்பாளன். இறுதியில் அவன் வாழ்க்கையே எங்களுக்கு ஒரு செய்தியாகிவிட்டது.
கடந்த டிசம்பர் 27இல் வீட்டில் தனியாக இருந்தவனோடு நானும் வந்து சேர்ந்தேன். ஊர்த்துலாவரம் எல்லாம் பேசுவோம். கடைசியில் சண்டையும் வரும். ‘உனக்கே வாழத் தெரியவில்லை. உனக்கு என்ன அரசியல் வேண்டிக் கிடக்கு’ என்று சத்தம் போட்டு முடிப்பேன். கொலைவெறியோடு முறைச்சுக்கொண்டு போவான். மறுநாள் பிள்ளைகளுக்கு இறைச்சிக் கறி வைத்து கவனமாக பாத்திரங்களில் போட்டுத் தருவான். எனக்கும் குறைந்தது இரு மரக்கறி வைத்திருப்பான். அவன் ஊரில் சமைப்பதைப் பற்றியெல்லாம் கதையளக்கின்ற போது அந்தச் சுற்றாடலை அப்படியே கண் முன் கொண்டுவந்து நிறுத்துவான். இரு கைகளால் வடைதட்டுவதும் எடுப்பதும் அவன் சொல்கின்ற அழகே தனி. பயிற்றங்காய் பிரட்டல் கறி வைப்தை சொல்லிக்கொண்டு வந்தால் பயிற்றங்காய் பிரட்டல் கறி சாப்பிட்ட திருப்தி வரும். அவ்வளவு சாப்பாட்டில் நுணக்கம். அவனுடைய மஞ்சவனப்பதி முருகன் கோயில் கதைகளும் அரசியல் கதைகளும் என்றால் எவ்வளவு நேரமும் கதைத்துக்கொண்டிருப்பான். சிலவேளை அறுவையாகவும் இருக்கும்.
அவனுடைய வீட்டுக்கு வந்த போது சிவஜோதி எதிர்ப்புசக்தியை தாக்குப்பிடிக்கவல்ல பக்ரீரியா தாக்கத்தினால் யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 30இல் எம்மைவிட்டுப் பிரிந்தான். அவனுடைய மரணம் முற்றிலும் எதிர்பாராதது. அவனொரு பன்முக ஆளுமை. மதுவின் வாசத்தையே அறியாதவன். தனது வாழ்வு முழவதும் மதுவை விலத்தி வைத்தவன். குட்டிக்கு சிவஜோதியை யாரென்றே தெரியாது. நான் சொல்லிக் கேள்விப்பட்டதும், நான் சிவஜோதியுடைய மனைவி ஹம்சகௌரியோடு உரையாடுவதை கேட்டு அறிந்ததும் தான். ஆனால் சிவஜோதியுடைய நினைவு நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்ற போது அதற்கு வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் சிவஜோதியுடைய நினைவாக தென்னங்கன்றுகள் வழங்குவோம் என்று சொல்லி அதற்கான செலவையும் தானே தந்தான்.
எனது ‘வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை’ நூல் வெளியீட்டு விழா பற்றி 2016இல் அவனோடு பேசினேன். ‘டேய் வித்தியாசமா செய்வோம். எங்களுடைய பிள்ளைகளையும் பேச வைப்போம். இரண்டாம் தலைமுறையையும் இறக்குவோம்’ என்றான். அவனொரு ஐடியா திலகம். ஆளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வேலையைச் செய்ய வேண்டும். எனக்கு அந்த எண்ணம் வரவில்லை. அவன் சொன்னதும் நல்லதாகப்பட்டது. அவனுடைய மூத்தவளை வரவேற்புரைக்கும் என்னுடைய மூத்தவனை நூல் அறிமுகத்திற்கும் போட்டு புத்தகவெளியீடு இனிதே முடிந்தது.
2019இல் அவன் மாடியில் இருந்து வீழ்ந்து உயிருக்காக போராடிக்கொண்டிருந்த போது நானும் தோழர் சிவலிங்கமும் அவனைப் பார்க்கச் சென்றிருந்தோம். அவன் நினைவுகளில் குழப்பம் இருந்தது. அவனுக்கு கொழுவப்பட்டிருந்த ரியூப்கள் எல்லாவற்றையும் பார்த்து நான் மருத்துவமனையில் மயக்கமடைந்து விட்டேன். அதற்குப் பிறகு நானும் நண்பர் ஹரியும் சென்று பார்த்து வந்தோம். அப்படி இருந்தவனுக்கு அவள் மறுஜென்மம் கொடுத்து பார்த்தாள்.
கடைசிக் காலங்களில் பலரைப் பற்றியும் ஆராய்வோம். தோழர் சிவலிங்கம் பற்றி எப்போதும் உயர்வான மதிப்பீட்டோடு பேசுவான். தோழர் ரகுமான் ஜானின் நூல்வெளியீட்டை முன்நின்று நடத்தினான். பின் பாரிஸ் நூல்வெளியீட்டுக்கு நான், குட்டி ரகுமான் ஜான் மூவரும் சென்று சில தினங்கள் தங்கி வந்தோம். அந்தப் பயணத்தின் போது நான் மிகுந்த மனக்கஸ்டத்தில் இருந்தேன். அவர்களோடு பல விடயங்களையும் பகிர்ந்துகொண்டிருந்தேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவன் மற்றையவர்களின் பலவீனத்தை பயன்படுத்தியது கிடையாது. வீட்டுக்கு வெளியே என் போன்ற நண்பர்களுக்கு அவன் உன்னதமான நண்பன்.
ஆனால் அவனுடைய வாழ்க்கையை சின்னா பின்னமாக்கிக் கொண்டிருந்த அந்த கெட்ட பழக்கத்தில் இருந்து அவனால் மீள முடியவில்லை. அவனை மீட்கலாம் என்று எனக்கு இருந்த நம்பிக்கை நாளாக நாளாகத் தேய்ந்து கொண்டே வந்தது. அவனுடைய கடைசி 12 மாதங்களில் அவனுக்கு நெருக்கமான ஒரே உறவு நான்தான். அவன் கொக்குவில் கிராமத்திலும் நான் அனுராதபுரத்திலும் பிறந்து எங்கெங்கோ வளர்ந்து இறுதியில் லண்டன் நியூமோல்டனில் அவனுக்கு நான் என்றாகியது.
தூரத்தே இருந்தாலும் கட்டியவள் பாசத்தோடு சாப்பாடு எடுத்து வருவாள். நண்பர்கள் ரமேஸ் உம் பிரபாவும் ஞாயிற்றுக் கிழமைகளில் வந்து எங்களையும் நடக்க அழைத்துச் செல்வார்கள். ரமேஸின் குழு குழவென்ற வெண்நிறப் பஞ்சு போலானா அந்நாய் எங்களிலும் பார்க்க கம்பீரமாகவே நடக்கும். அதன் வழி நாங்கள் நடப்போம். சிவமோகன் அடிக்கடி நிலைமையை மதிப்பீடு செய்து கவனமெடுப்பார். ‘உன் நண்பர்களைப் பற்றிச் சொல். உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்ற வாசகத்தை குட்டி முற்றிலும் பொய்யாக்கிக் கொண்டான். வண்ணத்துப் பூச்சி விளைவு விளையாட்டாக ஆரம்பித்த பழக்கம் வினையில் வந்து முடிந்தது. சில வேளை முதல் முதல் அருந்தும் போது இன்னுமொரு வண்ணாத்திப் பூச்சியால் க்கிளாஸ் தட்டி ஊத்தி தடங்கல் வந்திருந்தால் அவன் குடிக்காமலேயே இருந்திருக்கலாம். அல்லது அவனுக்கு குறிப்பு வேறு யாருடனாவது பொருந்தியிருந்தால் வந்தவள் பென்ட் எடுத்திருப்பாளோ என்னவோ… இந்த வண்ணத்துப்பூச்சி விளைவு எங்கெங்கெல்லாமோ முடிச்சவிக்கின்றது. முடிச்சுப் போடுகின்றது.
ஒக்ரோபர் ஒன்பது அவனுக்கு இயலாமலாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஒரிரு நாளிலேயே வந்துவிட்டான். அப்போது தான் ஓரளவு எனக்கும் அவனுக்கும் கூட இனி நிறையக்காலம் இல்லை என்பதை உணர முடிந்தது. எமது உடலுறுப்புக்களில் முக்கிய உறுப்பான ஈரல் செயலிழப்பதாக மருத்துவர்கள் சொல்லி உள்ளனர். அவனுடைய நிலையில் அதற்கான சிகிச்சை அளிப்பதிலும் பலனில்லை என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்திருக்க வேண்டும். அடுத்த ஒரு மாதத்தில் நவம்பர் 12இல் மீண்டும் மருத்துவமனைக்கு. அதுவே அவனது கடைசிப் பயணம் என்பதை என்னால் உணரமுடிந்தது. அதுவே அவனுக்கு இந்த வலி, வேதனையில் இருந்து விடுதலையைக் கொடுக்கும் என்று எண்ணினேன்.
அவனிருந்த வார்டில் சிகிச்சை பெற்றவர்கள் எல்லோருமே எண்பது வயதைத் தாண்டியவர்கள். இவன் மட்டுமே ஐம்பதுக்களில். அவன் வாழ்வதற்கு இன்னும் 30 ஆண்டுகள் இருந்தது. ஆனால் அவனது தவறான முடிவுகள், அவனது முடிவை முன்பதிவு செய்ய காரணமானது. மருத்துவமனையில் இருந்து, கட்டியவளுக்கு தொலைபேசி அழைப்பு இரவு பதினொருமணியளவில். அவளுக்கு எதுவும் புரியவில்லை.
மொழிபெயர்ப்பாளர் தேவை என்றாள். நான் அவளுக்கு நிலைமையை விளக்கினேன். அந்த இடியான செய்தியைச் சொல்லப் போகின்றனர். அவனுடைய கடைசிநாள் இது. அவனது உடல்வலிக்கு இது விடுதலை கொடுக்கும் என்று சமாதானம் சொல்லி தேற்றினேன். உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு அழைப்பு வந்தது. அவளையும் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினோம்.
தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் நிதானமாக விளங்கப்படுத்தினார். “இனிமேல் நாங்கள் செய்வதற்கு எதுவுமில்லை. அவரை நிம்மதியாக கஸ்டமில்லாமல் வழியனுப்பி வைப்பதே ஒரேவழி” என்றார். அவருடைய மருத்துவவியல் மொழியில் நாங்கள் வழியனுப்பி வைப்பதற்காக உயிரைப் பிடித்து வைத்துள்ளனர் என்பது தான் சாரம்சம். ஓரளவு எதிர்பார்த்தது தான். நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவரோடு இருக்கலாம் என்றவர் மெதுவாக திடீரென் எப்பவும் எதுவும் நடக்கலாம், அதனால் தமதிக்காமல் உள்ளே செல்வோம் என தீவிர சத்திரசிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கே வார்ட் எட்டில் எவ்வித சலனமும் இல்லாமல் ரியூப்கள் பொருத்தப்பட்ட நிலையில் அவன். கட்டியவள் அவன் முகத்தை வருடி இதயத்தை வருடி கண்ணீர் விட்டிருக்க பிள்ளைகள் அவன் கையைப் பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்களோடு நானும் அவன் கையைப் பற்றிக்கொண்டேன். பத்து நிமிடங்களிருக்கும் மருத்துவர் என்னை சைகையால் வரச்சொன்னார். இனி தாமதிக்க முடியாது. சிலவேளை பிள்ளைகளுக்கு முன் ஏதும் ஆகிவிடலாம். ஆதனால் அடுத்த 5 நிமிடங்களுக்குள் அவர்களை கூட்டிச்சென்றுவிடலாம்” என்றார். அவ்வாறே பிள்ளைகள் கண்ணீரோடு அப்பாவை வழியனுப்பி வைத்தனர். அவர்களை இன்னுமொரு மருத்துவ தாதி வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றார்.
இப்போது அவனைக் கட்டியவளும் நானும்.
“அவரது இதயத்தை இயக்க வழங்கப்படும் மருந்தை நிறுத்துவோம். இதயத்துடிப்பு படிப்படியாகக் குறையும். அதேநேரம் சுவாசத்தையும் நிறுத்துவோம். அவர் எவ்வித வலியும் இன்றி ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்வார்” என்று மிவும் இதமாக முடிந்தவரை உணர்வுபூர்வமாகச் சொன்னார். அவள் அவனது இதயத்தையும் முகத்தையும் வருடியவாறு நிற்க அவளது கண்ணீர்த்துளிகள் அவன் மீது வீழ்ந்தது. நான் அவன் கைகளைப் பற்றிக்கொண்டேன். இதயத்துக்கு வழங்கப்பட்ட மருந்து நிறுத்தப்பட்டது. இதயத்துடிப்பு வீழ்ச்சியடையத் தொடங்கியது. உயிரை போகவிடாமல் இழுத்து வைத்திருந்த அந்த மெசின் சிவப்பு விளக்குகளை மின்னி மின்னி அலறியது. அந்தத்தாதி எதையெல்லாமோ அழுத்தி அந்த அலறலை மௌனமாக்கினால். இப்போது சிவப்பு விளக்கு மட்டும் மின்னி மின்னிக் கொண்டிருந்தது. சுவாசத்தை சரி செய்து அவனை அமைதியாக சுவாசிக்கச் செய்தனர். பின் சுவாசத்திலும் வீழ்ச்சி. இறுதியில் அவனது இதயம் கடைசியாக ஒரு தடவை துடித்தது. அவன் மார்பில் கை வைத்திருந்தவள் அதை உணர்ந்தாள். அவன் உயிர் பிரிந்தது. அந்த மெசினும் நிறுத்தப்பட்டது.
“என்ரை பிள்ளைகளை உன்ரை பிள்ளைகளைப் போல் பார்க்க மாட்டியா?” என்று கேட்டது மட்டும் என் காதில் எதிரொலித்துக்கொண்டது.
அவன் மரணத்தை நோக்கிச் செல்கின்றான் என்பது மிக உறுதியாகத் தெரிந்தும் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. இன்னுமொரு உயிர் இவ்வாறு இழக்கப்படக் கூடாது என்று எண்ணினேன். சஞ்சீவ்ராஜ் என்ற இந்தக் குட்டியின் முடிவை ஒரு வாழ்க்கை அனுபவபாடமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவனின் கடைசிக் காலங்களில் எனக்கு ஏற்பட்டது. அவனுக்கும் அதனைத் தெரியப்படுத்தி இருந்தேன். அவன் மறுத்தானா சம்மதித்தானா என்பதை என்னால் உணரமுடியவில்லை. அதனாலேயே இப்பதிவுகள். சேற்றில் கால் வைக்காமல் விதைக்க முடியுமா? ஆகவே குட்டியின் மரணம் யாராவது ஒருவருக்காயினும் படிப்பினையானால் அதுவே அவனது ஆத்மாவை சாந்தியடையச் செய்யும். அவ்வாறானவர்களின் வாழ்கையினூடாக அவன் நிம்மதியாக உறங்குவான்.
ஆகவே எங்கள் நண்பர்கள் நினைவாக அவர்களுடைய ஆத்மாசாந்தியடைய இந்த ஆண்டு முதல் நாங்கள் மதுவை எம் வாழ்விலிருந்து ஒதுக்கி வைப்பதற்கு கற்றுக்கொள்வோம். வரும் புத்தாண்டுச் சபதம் எடுப்பவர்கள் ஜனவரி மாதத்தை மதுவற்ற மாதமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
இந்த வாழ்க்கை என்பது ஒரு தடவை மட்டுமே. அது வாழ்வதற்கே. மரணம் என்றோ ஒரு நாள் எம்மை அனைத்துக்கொள்ளும். அது தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த மரணத்தைத் தேடி நாம் ஏன் செல்ல வேண்டும்? அதற்காக எம் வாழ்வில் மதுவிலக்குச் செய்வோம்.
மதுவைத் தவிர்த்தால் நோய் நொடியிலிருந்து தப்பலாம்!
மதுவைத் தவிர்த்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளை தவிர்க்கலாம்!
மதுவைத் தவிர்த்தால் உறவுகள் நட்புகள் சேரும் நேசிக்கும்!
மதுவைத் தவிர்த்தால் பொருளாதாரம் சிறக்கும்
மதுவை தவிர்த்தால் வாழ்க்கை மணம் கமழும்!
டீசம்பர் 02இல் லண்டன் அசம்பிளியில் நிக்களஸ் ரோஜர் என்ற அசம்பிளி உறுப்பினர் கொண்டுவந்த ‘ஜனவரி தமிழ் பாரம்பரிய மாதம்’ என்ற தீர்மானத்தை அனைத்துக் கட்சி லண்டன் அசம்பிளி உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இத்தீர்மானம் லண்டனில் வாழும் தமிழர்களின் வாழ்வியலில் பெரும் மாற்றத்தையோ தாக்கத்தையோ ஏற்படுத்தாத போதும், கடந்த நான்கு தசாப்தங்களாக தமிழர்கள் லண்டனின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழங்குகின்ற பங்களிப்பை அங்கீகரிக்கின்ற, அதனை கௌரவிக்கின்ற ஒரு தீர்மானமாக இதனைக் கொள்ளலாம்.
லண்டன் ஒரு பல்லினச் சமூகம் வாழுகின்ற, பலவர்ணம் கொண்ட, ஒருபோதும் உறங்காத ஒரு நகர். உதாரணத்திற்கு லண்டனில் உள்ள ஒரு பாடசாலையில் மட்டும் 56 மொழி பேசுகின்ற மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என்றால் இந்த நகரின் பன்மைத்துவத்தை கற்பனை செய்து பாருங்கள்.
பிரித்தானியாவில் குறிப்பாக லண்டனில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை ஏனைய சமூகங்களோடு (இந்தியர்கள்: குஜராத்திகள், சீக்கியர்கள், பாகிஸ்தானியர்கள், பங்களாதேசிகள், சீனர்கள்) ஒப்பிடுகையில மிக மிகக் குறைவு. லண்டனின் மொத்த சனத்தொகை அண்ணளவாக 9 மில்லியன், கிட்டத்தட்ட இலங்கையின் மொத்த சனத்தொகையின் 50 வீதத்திற்கு சற்றுக் குறைவு. இதில் மொத்த தமிழர்களின் எண்ணிக்கை அண்ணளவாக இருநூறாயிரம் மட்டுமே. ஆகக்கூடியது 2% வீதமானவர்கள் மட்டுமே. இந்த இரண்டு வீதத்திற்குள் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், ரீயூனியன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களில் இலங்கைத் தமிழர்களே லண்டனின் அரசியல், பொருளாதார விடயங்களோடு தங்களை கணிசமான அளவில் இணைத்துக்கொண்டு லண்டனை தங்கள் நகராக்கிக்கொண்டுள்ளனர். அதற்கு அவர்களுக்கு ஒரு தாயகப் பிரதேசம் இல்லாதது அடிப்படைக் காரணமாக உள்ளது. இந்திய, மலேசியத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் லண்டனை ஒரு இடைத்தங்கள் நிலையமாக காண்கின்றனர்.
லண்டன் ஈஸ்ற்ஹாம் என்பது ஒரு குட்டி யாழ்ப்பாணம் என்றால் அதில் மிகையல்ல. அங்கு கவுன்சிலராக பல ஆண்டுகள் வெற்றிபெற்று தைப் பொங்கலை ஈஸ்ற்ஹாம் வீதியில் கடந்த 20 ஆண்டுகளாகக் கோலாகலமாகக் கொண்டாடி வருபவர் முன்னாள் கவுன்சிலர் போல் சத்தியநேசன். தமிழ் சமூகம் பல்வேறு கூறுகளாக முரண்பட்டு இருந்தாலும் அவர்களை இணைத்து தமிழர்களுக்கு என்று ஒரு வரலாற்றை லண்டனில் உருவாக்க வேண்டும் என்பதற்கு வித்திட்டவர்களில் போல் சத்தியநேசன் குறிப்பிடத்தக்கவர். அவருக்கும் பல நெருக்கடிகள் வந்த போதிலும் அவற்றைக் கடந்து சில பல விடயங்களை அவர் சாதித்தும் உள்ளார். லண்டன் அசம்பிளியில் டிசம்பர் 2இல் கொண்டுவரப்பட்ட ‘ஜனவரி தமிழர் பாரம்பரிய மாதம்’ என்ற தீர்மானத்திற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னரேயே அவர் வித்திட்டு இருந்தார்.
தமிழர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் கல்வி, பொருளாதார தேடல் காரணமாக அவர்கள் லண்டனின் கல்வி, மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளில் கணிசமான தாக்கத்தைச் செலுத்தி உள்ளனர். கல்வியைப் பொறுத்தவரை தமிழர்களுடைய சனத்தொகை விகிதாசாரத்துக்கு அதிகமாகவே தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றனர். பெரும்பாலும் இங்கிலாந்தில் உள்ள முன்னணிப் பல்கலைக்கழகங்களில் தமிழ் சொசைற்றி ஒன்றை வைத்திருப்பார்கள். கல்வி மீதான பாரம்பரிய நம்பிக்கை இன்னமும் கணிசமான அளவில் காணப்படுகின்றது. இது ஆசியர்களுடைய குணாம்சங்களில் ஒன்றாகவும் உள்ளது.
லண்டனில் மட்டும் 40 வரையான தமிழ் கோயில்கள் உள்ளன. லண்டனில் தமிழர்கள் கணிசமாக வாழும் ஒவ்வொரு உள்ளுராட்சிப் பிரிவிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் பள்ளிகள், மற்றும் தமிழ் அமைப்புகள் உள்ளன.
லண்டனில் மட்டுமல்ல இந்கிலாந்தில் ரிரெயில் செக்ரரில் தமிழர்களின் சிறு வியாபார நிறுவனங்கள் இல்லாத இடமே இல்லையென்று சொல்லலாம். இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான பெற்றோல் ஸ்ரேசன்கள் தமிழர்களாலேயே நிர்வகிக்கப்படுகின்றது. தமிழர் பாரம்பரிய உணவு வகைகளையும் பல்வேறு சமூகத்தினரும் கொள்வனவு செய்கின்றனர். சட்டத்துறையிலும் தமிழர்களுக்கு குறைவில்லை. பிரித்தானியாவின் சுகாதார சேவைகளில் குறிப்பாக மருத்துவர்களில் கணிசமான பங்கினர் தமிழர்களாக உள்ளனர். தமிழ் மருத்துவர் இல்லாத ஒரு மருத்துவமனை இங்கிலாந்தில் இருக்குமா என்பது தெரியவில்லை. வங்கிகள், ஆசிரியத்துறை, ஊடகத்துறை என தமிழர்கள் பல்வேறு முனைகளிலும் தங்கள் சேவையை வழங்கி வருகின்றனர். தமிழர்களுடைய சனத்தொகைக்கு இத்துறைகளில் கணிசமான பங்கினர் ஈடுபட்டுள்ளனர். அதனால் தமிழர்கள் எண்ணிக்கையில் மிகச் சிறுபிரிவினராக இருந்தாலும் அவர்கள் ஏற்படுத்துகின்ற தாக்கம் கனதியானதாக உள்ளது. அதனால் அவர்கள் தவிர்க்கப்பட முடியாத ஒரு சிறுபான்மையாக உள்ளனர்.
இதுபோன்ற காரணங்களால் தமிழ் சமூகம் சிறுபான்மையாக இருந்தாலும் லண்டனில் ஒரு பார்வைக்குத் தெரியக் கூடிய ஒரு சமூகமாக எப்போதும் இருந்து வருகின்றது. அதனால் லண்டன் அரசியல் தளத்திலும் தமிழ் சமூகம் எப்போதும் ஒரு அதிர்வை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். இந்தப் பின்னணியிலேயே ‘ஜனவரி – தமிழர் பாரம்பரிய மாதம்’ என்ற தீர்மானத்தை லண்டன் அசம்பிளி எடுத்திருந்தது.
டிசம்பர் 02இல் கொன்சவேடிவ் கட்சியின் உறுப்பினர் நிக்களஸ் ரொஜர் இத்தீர்மானத்தைக் கொண்டுவந்திருந்தார். அவர் லண்டனின் உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கை மொசாக் படத்தின் ஒரு கூறாக ஒப்பிட்டுக் குறிப்பிட்டார். சில சமயங்களில் அந்த ஒவ்வொரு கூறையும் ஆழந்து கவனிக்க வேண்டும் என்றும் அந்த வகையில் லண்டன் தமிழ் சமூகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டார். இந்தப் பங்களிப்பு இலங்கையில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தப்பித்து வந்த பின்னரளித்த பங்களிப்பு என்றும் குறிப்பிட்டார். அந்த வகையில் ‘தமிழ் மொழியையும் அதன் வளம்மிக்க கலாச்சாரத்தையும் இந்த மாதத்தில் பதிவு செய்வது பொருத்தமானது. ஜனவரி தமிழர்களுடைய பாரம்பரிய மாதம். அறுவடை நாளான ஜனவரி 14கை நாங்கள் கருத்தில் எடுக்க வேண்டும். இதனை 2016இல் கனடிய அரசு அங்கிகரித்து இருந்தது. அதே போல் லண்டன் மேயரும் லண்டன் உள்ளுராட்சி மன்றங்களும் ஜனவரியை தமிழருடைய பாரம்பரிய மாதமாக அங்கீகரித்து அதனை அரத்தமுள்ளதாக்கி கொண்டாட வேண்டும்’ என்று நிக்களஸ் ரொஜர் விவாதத்தை தொடக்கி வைத்தார்.
கொன்சவேடிவ் கட்சியின் மற்றுமொரு உறுப்பினரும் கறுப்பினத்தவரான சோன் பெய்லி தமிழர்களுடைய பங்களிப்பை விதந்துரைத்ததுடன் (ஒக்ரோபர் மாதம்) கறுப்பின வரலாற்று மாதம் எவ்வாறு கறுப்பின மக்களுக்கு பயனைக் கொடுத்ததோ அதுபோல் தமிழர்களுடைய பாரம்பரியம் ஜனவரியில் மேற்கொள்ளப்படுவது அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றார். கறுப்பின வரலாற்று மாதம் பாடசாலைகளிலும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அடிமைத் தனத்தில் இருந்து கறுப்பின மக்கள் போராடி விடுதலை பெற்று பல்வேறு சாதனைகளைப் படைத்ததை நினைவு கூருவதனூடாக கறுப்பின இளம் தலைமுறையினருக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் கறுப்பின மக்களின் பங்களிப்புப் பற்றி இம்மாதத்தில் பேசப்படும்.
லண்டன் அசம்பிளியின் துணைத் தலைவரான கெய்த் பிரின்ஸ் கொன்சவேடிவ் கட்சியைச் சேர்ந்தவர் குறிப்பிடுகையில் ஜனவரி மாதம் அறுவடை நாள், தமிழர்களுடைய தைப்பொங்கல் தினம் என்றும் அவர்களுடைய பங்களிப்பை இம்மாதத்தில் கௌரவிப்பது பொருத்தமானது என்றும் தெரிவித்தார்.
தொழிற்கட்சியின் அசம்பிளி உறுப்பினர் குருபேஸ் ஹிரானி, தமிழர்களுடைய பங்களிப்பை விதந்துரைத்து தீர்மானத்தை வரவேற்பதில் தான் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.
தொழிற்கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான ஒன்ஹார் ஸோஹோற்றா பேசுகையில் தமிழர்கள் பல்வேறு முனைகளிலும் தங்கள் பங்களிப்பை வழங்கி உள்ளனர் எனக்குறிப்பிட்டு தமிழர்கள் முன்ணுதாரணமாகத் திகழ்ந்துள்ளனர் என்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஜனவரி 14 தைப்பொங்கலை தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும் குறிப்பிட்டார். தொழிற் கட்சியின் மற்றுமொரு உறுப்பினராக உன்மேஸ் தேசாய் குறிப்பிடுகையில் 1984 இல் முதல் தொகுதி தமிழர்கள் குண்டுவெடிப்புகளில் இருந்து தப்பி குறிப்பாக யாழ்ப்பாண நகரில் இருந்து வந்ததாகக் குறிப்பிட்ட அவர் அவர்கள் தன்னுடைய பகுதியான ஈஸ்ற்ஹாமிலேயே குடியேறியதாகவும்; ஈஸ்ற்ஹாம் ரெட்பிரிஜ் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு தமிழ் வீடுகளிலும் உள்ளவர்களின் அவர்களின் ஊரில் உள்ள வீடுகளில் ஒருவரையாவது இந்த மோசமான யுத்தத்தில் இழந்துள்ளனர். உடல் ஊனமுற்றுள்ளனர் என்றார். தமிழர்கள் இல்லாமல் ஈஸ்ற்ஹாம் ஹைஸரீற் இல்லையென்றும் யுத்த வடுக்களோடு வந்து லண்டன் நகரோடு இரண்டறக் கலப்பதற்கு தமிழர்கள் ஒரு முன்ணுதாரணம் என்றும் கூறி தீர்மானத்தை வரவேற்றார்.
‘வணக்கம்’ என்று சொல்லி தான் பேச்சை ஆரம்பிக்க விரும்புவதாகக் கூறி ஆரம்பித்த லிபிரல் டெமொகிரட் கட்சியைச் சேர்ந்த ஹினா புஹாரி மற்றையவர்களைப் போல் தாங்களும் இத்தீர்மானத்தை மிகவும் வரவேற்பதாகவும் தமிழர்களுடன் தங்கள் கட்சி நெருக்கமாகச் செயற்படுவதைச் சுட்டிக்காட்டியதுடன் தமிழ் சமூகத்திற்கு ‘நன்றி’ என்று சொல்லி தன் பேச்சை முடித்தார்.
கொன்சவேடிவ் கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான ரொனி டெவினிஸ் சுருக்கமாக குறிப்பிடுகையில் நிக்களஸ் ரொஜர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் தான் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டார். கிரீன் பார்ட்டியைச் சேர்ந்த ஸாக் பொலாஸ்கி தமிழர்களுடைய பங்களிப்பையும் தீர்மானத்தையும் வரவேற்றுக் குறிப்பிட்டார்.
இறுதியாக நிக்களஸ் ரொஜர், தீர்மானத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
லண்டனில் தமிழர்களுடைய அரசியல் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும் அது அதன் முழவீச்சில் இன்னும் இல்லை. இதுவரை தமிழர் யாரும் பாராளுமன்ற உறுப்பினராக வரவில்லை. அதற்கான வாய்ப்புகளும் அண்மைய எதிர்காலத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் தமிழர்களுடைய சனத்தொகை கணிப்பின்படி ஒவ்வொரு தொகுதி தமிழர்களும் ஒரே மாதிரி வாக்களித்ததால் 50 உள்ளுராட்சி கவுன்சிலர்கள் வரக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் உள்ளுராட்சி உறுப்பினர்கள் பத்து முதல் பதினைந்து பேர் வரையே உள்ளனர். தமிழர்களுடைய அரசியல் செல்வாக்கு என்பது இன்னமும் தமிழ் தேசிய அரசியலை ஒட்டியதாகவே இன்னமும் உள்ளது. இங்குள்ள அரசியல் வாதிகளை வைத்து இலங்கை அரசுக்கு எதிராக எதையாவது சாதித்திட வேண்டும் என்ற முனையிலேயே லண்டன் தமிழ் அரசியல் இன்னமும் உள்ளது.
இவ்வாறு எல்லாவற்றையும் முன்ணுதாரணமாகக் காட்டுவதால் லண்டன் தமிழ் சமூகத்திற்குள் பிரச்சினையே இல்லையென்ற தவறான முடிவுக்கு யாரும் வந்துவிடக் கூடாது. இளைஞர் குழக்களின் வன்முறை தேசிய அளவில் பேசப்படும் அளவுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. கடந்த இரு தசாப்தங்களில் லண்டனை உலுக்கிய சில கொலைகள் உட்பட 30 வரையான தமிழ் படுகொலைகள் தமிழர்களால் நடந்துள்ளன. ரெயிலில் குதித்து தற்கொலை செய்ததாக செய்தி வந்தால் அது தமிழராக இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து தாய்மார் பிள்ளைகளைக் கொலை செய்து தற்கொலைக்கு முயற்சித்தனர். அவ்வளவுக்கு தமிழ் சமூகத்தில் மனநிலை பாதிப்புகள் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. குடும்ப வன்முறைகள் அதனால் பிள்ளைகள் அரச சமூகப் பிரிவின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் நிலைகளும் இங்குள்ளது.
ஆகவே ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் உள்ள சிக்கல்களும் கஸ்டங்களும் தமிழ் சமூகத்திற்குள்ளும் உள்ளது. அவற்றை ஆராய்ந்து பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டு அடுத்த கட்டம் நோக்கி தமிழர்கள் நகரவேண்டும். யாழ்ப்பாணத்தில் மழை பெய்தால் ஈஸ்ற்ஹாமிலும் ஹரோவிலும் குடை பிடிக்கும் அரசியல் இன்னும் எத்தினை நாளைக்கு. லண்டனில் பலநூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்களில் குடும்பவன்முறை பெரும் பிரச்சினையாக உள்ளது. அதற்கு அதீத மதப்பழக்கம் முக்கிய காரணமாக உள்ளது. மனவழுத்தம் பற்றிய விழிப்புணர்வு இன்னமும் சரியான வகையில் கையாளப்படவில்லை. இவை ஒரளவு வெளித்தளத்தில் தெரிகின்ற பிரச்சினைகள் இதைவிடவும் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் பலவும் உள்ளது. இங்குள்ள தமிழர்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளும் அவசியமாகின்றது. லண்டன் அசம்பிளி ‘ஜனவரி தமிழர் பாரம்பரிய மாதம்’ என்று அறிவித்தது போல் லண்டன் தமிழர்கள் ஜனவரியை மது விலக்கு மாதமாக அறிவிக்க வேண்டும். கடைப்பிடிக்க வேண்டும். திருமணம் மற்றும் விழாக்களில் மதுவை முற்றாகத் தடை செய்ய வேண்டும். பொது நிகழ்வுகளிலும் சமூக வலைத்தளங்களிலும் மதுப் பாவனையையும் அதன் படங்களைப் போட்டு கொண்டாடுவதையும் முற்றாக நிறுத்த வேண்டும்.
இலங்கைப் பிரஜை பாகிஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 100ற்கும் மேற்பட்டவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சியால்கோட்டில் உள்ள வசிராபாத் சாலையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் முகாமையாளராகப் பணிபுரியும் இலங்கைப் பிரஜை ஒருவர், இன்று வெள்ளிக்கிழமை ஒரு கும்பலால் கடவுளை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சித்திரவதை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார் என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனியில் தொடருந்து கட்டுமான தளத்தில், 76 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாம் உலகப்போர் குண்டு வெடித்ததில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டாம் உலகப்போர் 1939 ஆம் ஆண்டு, செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
வெடிக்காத போர்க்கால குண்டுகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகளால் எறியப்பட்ட குண்டுகள், போர் முடிந்து 76 ஆண்டுகள் ஆன நிலையிலும் ஜேர்மனியில் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுகின்றன.
அதன் காரணமாக அந்தப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு, பெரும்பாலான குண்டுகள் வெடிக்காமல் நிபுணர்களால் செயலிழக்க செய்யப்படுகின்றன.
கடந்த 2017 ஆம் ஆண்டு, பிராங்பர்ட் நகரில் 1.4 டன் எடையுடைய ‘பிளாக் பஸ்டர்’ குண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது, 70 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், ஜேர்மனியில் முனிச் நகரில் டோனர்ஸ்பெர்கர் பாலத்துக்கு அருகே தொடருந்து துறை கட்டுமான தளத்தில் கட்டுமானப்பணி இடம்பெற்று வருகிறது.
அந்தப்பகுதியில் நேற்று முன்தினம், இரண்டாம் உலகப்போர் குண்டு ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்தது.
பாலத்துக்கு அருகே சுரங்கப்பாதை பணியின்போது இந்த குண்டு வெடித்ததாக அந்நாட்டு
கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றி பின்னர் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அதன் பாதிப்பு குறைய தொடங்கிய போது கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது.
இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயரிடப்பட்டது. இதில் டெல்டா வகை உருமாறிய கொரோனா மற்றவைகளை விட அதிக வீரியம் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டது. டெல்டா வகை வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் முன்பு உருமாறிய வைரஸ்களை விட மிகவும் வீரியத்துடன் இருப்பது தெரிய வந்தது.
ஒமிக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்த வைரஸ் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்படுமா? என்பதில் கேள்விக்குறி நிலவி வருகிறது.
ஒமிக்ரான் வைரஸ் சில நோய் எதிர்ப்பு சக்திகளை தகர்க்க கூடியது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் அந்த வைரசை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் டெல்டா வைரசை விட 3 மடங்கு அதிக பாதிப்பை ஒமிக்ரான் வைரஸ் ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
தென்ஆப்பிரிக்க நாட்டின் சுகாதாரத்துறை ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக சேகரித்த தரவுகள் அடிப்படையில் இது தெரிய வந்துள்ளது. தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகளின் ஆரம்ப கட்ட ஆய்வில் டெல்டா அல்லது பீட்டா வைரசுகளுடன் ஒப்பிடும் போது ஒமிக்ரான் வைரஸ் மீண்டும் நோய் தொற்று ஏற்படுத்தும் வாய்ப்பு 3 மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 27-ந்திகதியில் இருந்து 35 ஆயிரத்து 670 பேர் மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 90 நாட்கள் இடைவெளியில் அவர்கள் மீண்டும் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா விஞ்ஞானி ஜூலியட் புல்லியம் கூறும்போது, “தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை ஒமிக்ரான் எந்த அளவுக்கு தவிர்க்கிறது என்பதை இன்னும் மதிப்பிட முடியவில்லை” என்றார்.
மற்றொரு விஞ்ஞானியான அன்னேவான் கோட் பெர்க் கூறும்போது, “நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். தடுப்பூசிகள் இன்னும் கடுமையான நோய்களில் இருந்து பாதுகாக்கும் என்று நம்புகிறோம். தடுப்பூசிகள் எப்போதுமே தீவிர நோய், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்பு ஆகியவற்றுக்கு எதிராக தீவிரமாகவே போராடுகிறது” என்றார்.
இலங்கை பிரஜையொருவரை பாக்கிஸ்தானின் சியால்கோட்டில் பெருமளவு மக்கள் அடித்துக்கொலை செய்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் இம்ரான்கான் குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்
சியால்கோட்டில் தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் இலங்கையை சேர்ந்த மேலாளர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் காரணமாக இன்றைய நாள் பாக்கிஸ்தானிற்கு அவமானகரமான நாளாக மாறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நான் விசாரணைகளை மேற்பார்வை செய்துவருகின்றேன் கைதுகள் இடம்பெறுகின்றன காரணமானவர்கள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் இது குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 18 (ஒளிப்பதிவு செய்யப்பட்ட திகதி 10.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
பாகம் 18
தேசம்: நாங்கள் எண்பத்தி நான்காம் ஆண்டு காலப்பகுதி வரைக்கும் கதைத்து இருக்கிறோம். இந்த காலப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கு பாரிய அளவில் ஆயுதங்கள் எவையும் பெருசாக கிடைக்கவில்லை. ஆனால், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இருந்த அமைப்புகளில் அரசியல் கல்வியூட்டும் விடயங்களை மேற்கொண்டு இருந்தது என்று நினைக்கிறேன். சமூக விஞ்ஞான கல்வியினுடைய உருவாக்கம் அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். அது என்ன நடந்தது, அதில யார் யார் தொடர்புபட்டவை. உமா மகேஸ்வரனுக்கு தொடர்பு இல்லாமல் இருந்ததா அல்லது அவர் அதை மறுத்து அப்படியான கல்விவூட்டல்களை நிராகரித்தாரா? அதுகளைப் பற்றி கதையுங்கள் என்ன நடந்தது?
அசோக்: T3S என்று சொல்லப்பட்ட தமிழ் ஈழ சமூக விஞ்ஞான பாடசாலை 1984 யில் சென்னை கே. கே. நகரில் தொடங்கப்பட்டது. மார்ச்சிய அரசியல் கல்வி மற்றும் சமூகவியல், பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில் நுட்பம் சர்வதேச உறவுகள், அபிவிருத்தி திட்டமிடல் இப்படி எதிர்காலத்தை முன் வைத்து இந்த பாடசாலை தொடங்கப்பட்டது. இதற்கு பயிற்சி முகாங்களிலிருந்து தோழர்கள் தெரிவு செய்யப்பட்டாங்க. இந்தியாவில் உள்ள இடதுசாரி கட்சியை சேர்ந்தவர்கள், பேராசிரியர்கள் நிறைய பேர் அந்த வகுப்புக்களை எடுத்தாங்க. அது ஒரு தரமான அரசியல் கல்வி ஏனென்றால், அவர்கள்தான் காலப்போக்கில் தளத்திற்கு வந்து வகுப்புகள் எடுக்கிற தோழர்களாகவும், முகாம்களில் வகுப்புகள் எடுக்கிற தோழர்களாகவும் தான் உருவாக்குவதற்காக தான் அது ஏற்பாடு செய்யப்பட்டது. அதை உருவாக்குவதில் பலருடைய ஆர்வம் இருந்தது. உமாமகேஸ்வரன், சந்ததியார், யோதீஸ்வரன், வாசுதேவா, ரகுமான் ஜான் எல்லா பேரும் சேர்ந்து தான் அதை உருவாக்கியவர்கள்.
தேசம்: அப்படி ஒரு கல்லூரியின் தேவையை எல்லோரும் உணர்ந்து இருந்தவை?
அசோக்: ஓம் எல்லாரும் சேர்ந்துதான் உருவாக்கினது.
தேசம்: அது கடமைக்காக ஆரம்பிக்கப்படவில்லை. உணர்வுபூர்வமாக தான் ஆரம்பிக்கப்பட்டது.
அசோக்: உண்மையில் நல்ல நோக்கத்தோடு நம்பிக்கையோடுதான் ஆரம்பிக்கப்பட்டது. முகுந்தனுக்கு அந்த நம்பிக்கை இருந்ததா என்பது இப்ப யோசிக்கும் போது சந்தேகம்தான். ஏன் என்றால், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அது இயங்கல்ல. அதில படித்த தோழர்களை பார்த்தீர்களென்றால் அரசியல் ரீதியாக மிக வளர்ச்சி பெற்ற தோழர்களாக தான் இருக்கிறார்கள். லண்டனில் பணிக்ஸ் என்ற தோழர் இப்ப இருக்கிறார். இதில் படித்தவர். அவரோடு அடிக்கடி உரையாடுவேன். அரசியல் மற்ற பல விசியங்களை அவரிடம் அறிய முடியும். சீனு, அரசிளங்கோ, கணன், சாமி இப்படி பல தோழர்கள். அஜீவன் சுவிஸில் இருக்கிறார் அவரும் T3S இல் படித்தவர்தான்.
தேசம்: என்னுடைய சகோதரரும் T3Sல் படித்தவர்தான். அதோட நேதாஜி என்ற பிரேம்சங்கர் என்று அறியப்பட்டவர் அவரும் சமூக விஞ்ஞான கல்லூரியில் படித்தவர்.
அசோக்: இந்த அரசியல் வகுப்பு 40 பேர் கொண்ட வகுப்புக்களாக நான்கு பிரிவுகள் நடத்தப்பட்டது. சுமார் 160 தோழர்கள் அதில் படித்திருப்பார்கள் என நினைக்கிறன். அதன்பிறகு புளொட்டில் ஏற்பட்ட குளப்பங்களும் முரண்பாடுகளும் தொடர்ந்து நடத்த முடியாமல் செய்துவிட்டன. லண்டனில் இருந்து வந்த தோழர் ராஜா நித்தியன் அதற்கு பொறுப்பாக இருந்தவர். அதே நேரம் முகாம்களிலும் அரசியல் கல்வி நிறைய ஊட்டப்பட்டது. ஆரம்ப காலங்கள் ஆரோக்கியமாகத்தான் இருந்தது. உதாரணமாக பார்த்தீர்களென்றால் பல்வேறு முகாம்களில் இருந்து அரசியல், கலை, இலக்கிய கையெழுத்துப் பிரதிகள் வந்திருக்கு அந்த நேரத்தில். தினக்குரல் ஆசிரியர் பீடத்தில் இருந்தவர் ரவி வர்மன் என்று சொல்லி. சில காலங்களுக்கு முன்னர் இறந்திட்டார். அப்ப நாங்கள் அவரை தோழர் மது என்று அழைப்போம். அவரும் பயிற்சி முகாம்மில் இருக்கும் போது தரமான சஞ்சிகை ஒன்றை கொண்டுவந்தார். இப்படி பல சஞ்சிகைகள். தோழர்கள் இப்படி பல ஆக்கபூர்வமான வேலைககளில் ஈடுபட்டார்கள். தெளிவான அரசியலை கொண்டிருந்தார்கள்.
என்ன பிரச்சனை என்று கேட்டால், இந்த முகாம்களில் இருக்கின்ற தோழர்களை நிர்வகிக்கின்ற பொறுப்பாளர்கள் அதற்கேற்ற தகுதி வாய்ந்தவர்களாக அரசியல் அறிவு கொண்டவர்களாக இருக்கவில்லை. அவர்கள் முகுந்தனின் விசுவாசிகளாக மட்டுமே இருந்தார்கள். எந்த சமூக அக்கறையும் அவர்களிடம் இருக்கல்ல. முதலில் அரசியல் கல்வி ஊட்டி இருக்க வேண்டும். அது இருக்கல்ல. முகுந்தன் விசுவாசி என்ற ஒரு தகுதி இருந்தாலே போதும் பொறுப்புக்களுக்கு வந்து விடலாம் என்ற நிலைதான் இருந்தது. அந்த மன நிலையை மாற்றி இருக்க வேண்டும். கட்டுப்பாட்டுக்குழுவோ அல்லது மத்திய குழுவோ எந்த அக்கறையும் இதில் கொள்ளவில்லை.
முகாங்களில் இருந்த தோழர்கள் அரசியல் ரீதியாக வளர்ச்சி கொண்டவர்கள். அப்ப என்ன நடக்கும் என்றால் அவர்கள் நீண்ட காலமாக முகாம்களில் இருக்கும் போது ஏற்படும் சிக்கல் இருக்குதானே, முரண்பாடு வரும். அவங்கள் கேள்வி கேட்பார்கள். அரசியல் சார்ந்த உரையாடலுக்கு இவர்கள் பொறுப்பாளர்கள் தயாரில்லை. இவர்கள் வெறும் சுத்த இராணுவ கண்ணோட்டம் கொண்டவர்கள்.
தேசம்: முகாமில் இருக்கிற உறுப்பினர்கள் அரசியல் ரீதியாக வளர்ந்து இருப்பார்கள். அவர்களை வழிநடத்துற தோழர்களுக்கு அரசியல் கல்வி போதாமை இருக்கு.
அசோக்: ஓம். அவங்கள் நீண்டகாலமாக முகாமில் இருந்தவர்கள் தானே, நாட்டிக்கு போவது தொடர்பாக, யுத்தம் தொடர்பாக, போராட்டங்கள் தொடர்பாக அரசியல் கேள்விகள் கேட்டால் இவங்களுக்கு பதில் தெரியாது. அப்போ முரண்பாடு வரும். காலப்போக்கில் இந்த முரண்பாடு அரசியல் கதைக்கிறவன் எல்லாம் சந்ததியார் ஆள் என்று குற்றம் சுமத்தும் நிலைக்கு போய்விட்டது.
தேசம்: இந்தக் காலகட்டத்தில் இந்த முகாம் பொறுப்பாளர்களை யார் நியமித்தது. ஏனென்றால் அனைத்து முகாம் பொறுப்பாளர்கள் தோழர் ஜான் இருந்திருக்கிறார்.
அசோக்: அவர் இராணுவ ஆலோசகர் என்று நினைக்கிறேன்.
தேசம்: கட்டுப்பாட்டு குழுவுக்கு முகாம் பொறுப்பாளர்களை நியமிக்கின்றது தொடர்பா அல்லது அவர்களுக்கு இருக்கின்ற தகுதி தொடர்பா விளக்கம் ஏதும் இருக்கேலயா?
அசோக்: கட்டுப்பாட்டு குழுவுக்கு ஜெயில் பிரேக் நடந்த உடனேயே குறிப்பிட்ட ஆட்களுக்கு பதவி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அந்நேரம் தங்களை சுற்றியுள்ள ஆட்களுக்கு ஏதாவது பதவிகளை கொடுத்து அவர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நிலை இவங்களுக்கு. குறிப்பாக, முகுந்தனுக்கு இருந்தது. எல்லாருக்கும் ஏதாவது ஒரு அதிகாரமிக்க பதவி கொடுக்க வேண்டும். மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கோ அரசியல் கல்வி பெறுவதற்கோ இவங்கள் தயாரில்லை. சிறையில் அடைக்கப்பட்டு வந்த அவ்வளவு பேருக்கும் மற்ற சுற்றியுள்ள பேர்வழிகளுக்கும் நீங்கள் ஏதோ ஒரு வகையில் பதவி கொடுக்க வேண்டும். அப்போ அவர்கள்தான் அனைத்து முகாம் பொறுப்பாளர்கள் உட்பட எல்லா பதவிகளுக்கும் நியமிக்கப்படுகிறார்கள்.
தேசம்: அவர்களுக்கு தகுதி இருந்ததோ இல்லையோ சிறையிலிருந்து அதுதான் அவர்களுடைய தகுதியாக..
அசோக்: புளொட்டில் ஆரம்பகால உறுப்பினர்களாக இருந்து இருப்பார்கள். இதுதான் இவர்களின் ஒரே தகமை. அரசியல் கல்வி அவர்களிடம் இல்லை. புளொட்டின் அரசியல் யாப்பை பார்த்தீர்களென்றால் அது தரமானதொரு அரசியல் கோட்பாடு கொண்டது. அனைத்து அடக்குமுறைகளையும் உடை த்தெறிவோம் என்ற கோஷமே உங்களுக்கு விளங்கும். அரசியல் மட்டங்களில், சமூக மட்டங்களில், கலாச்சார மட்டங்களில் இருக்கிற அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான ஒரு கோஷமாக கொள்கையாக தான் அது இருக்குது.
தேசம்: இந்த அரசியல் யாப்பு எல்லா போராளிகளுக்கும் வழங்கப்பட்டதா.
அசோக்: அரசியல் வகுப்புகள் எடுக்கப்பட்டிருக்கு. அந்தநேரம் பார்த்தீர்கள் என்றால் நிர்மாணம் என்று ஒரு பத்திரிகை வந்தது. அது இலங்கையினுடைய சாதிய ஒடுக்குமுறை தொடர்பாக, சாதியம், பெண்ணியம் தொடர்பான கட்டுரைகளை எண்பத்தி மூன்று கடைசியிலேயே வெளியிட்டிருக்கு இருக்கு. எண்பத்தி நாலிலும் வந்தது. நாலு ஐந்து சஞ்சிகைகள் வந்திருக்கு. அதில சிவசேகரம், கௌரிகாந்தன் எல்லாரும் எழுதி இருக்கிறார்கள். பெரிய விவாதமே நடந்திருக்கு. அத்தோட spark என்று ஆங்கிலத்தில் அரசியல் சஞ்சிகை வெளி வந்தது.
தேசம்: நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது ஆரம்ப கட்டத்தில் எல்லாமே ஒரு சரியான பாதையில் தான் பயணித்துக் கொண்டிருந்திருக்கு.
அசோக்: அந்த ஆரம்ப பாதையை மிக நிதானமாகவும் ஆரோக்கியமாகவும் முன்னெடுத்திருந்தால் வேறு ஒரு திசைக்கு கொண்டு போயிருக்கலாம். ஏனென்றால் ஆரம்ப காலங்களில் அரசியல் சார்ந்து ஆழ்ந்து எழுதுகிற பத்திரிகைகள், சஞ்சிகைகள் எல்லாம் புளொட்டில் வெளிவந்திருக்கு. புளொட்டின் ஆரம்பகால துண்டு பிரசுரங்களையும், எழுத்துக்களையும், புத்தகங்களையும் பார்த்தீர்களென்றால் மிக அரசியல் சார்ந்த பிரதிகளாகத்தான் அவை இருந்தது. முரண்பாடுகள் வந்ததும் எல்லாம் சிக்கலாக போய்விட்டது.
தேசம்: இதுல ஒரு முக்கியம் என்ன என்று கேட்டால் தங்களுடைய இயக்கத்துக்கு வாற தோழர்களை, உறுப்பினர்களை கல்வி ஊட்டுவது என்பது முக்கியமான விடயம். அந்தக் கல்வியை ஊட்ட வேண்டும் என்ற உணர்வு எல்லார்கிட்டயும் இருந்திருக்கு. ஆனால் அதால வரக்கூடிய பிரச்சனைகளை அடுத்த கட்டத்துக்கு அவர்களைக் கொண்டு போவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
அசோக்: உண்மையில் என்ன செய்திருக்க வேண்டும் என்றால் சகல மட்டங்களுக்கும் அரசியல் கல்வி ஊட்டப்பட்டிருக்க வேண்டும். முதலில் மத்திய குழுவிலிருந்த முழுப்பேருக்கும் அரசியல் கல்வி ஊட்டப்பட்டு இருக்க வேண்டும். அரசியல் கல்வி சமூக அக்கறை ஜனநாயக பண்பாடு கொண்ட தோழர்களை பொறுப்புக்களுக்கு நியமித்திருக்க வேண்டும்.
தேசம்: நீங்கள் சொல்வதன் படி சங்கிலியன் எல்லோரும் மத்திய குழுவில் இருந்து இருக்கிறார்கள்.
அசோக்: சங்கிலி கந்தசாமி மாத்திரம் அல்ல. பலர் இப்படி. நாங்கள் மூன்று மாதத்திற்கு ஒருக்கா மத்திய குழுவுக்கு போவோம். ஒரு கட்டத்துக்குப் பிறகு முரண்பாடுகள் வந்த உடனே நாங்கள் போகாமல் விட்டுட்டோம்.
தேசம்: ஏன் நீங்கள் போகாமல் விட்டீர்கள்…
அசோக்: விரக்தியாக போய் விட்டது. ஏனென்றால் அங்க போய் ஒரு பிரயோசனமும் இல்லை.
தேசம்: உண்மையிலேயே இந்த பயணம் உயிரை பணயம் வைத்து போற பயணம். இலங்கையிலிருந்து அடுத்த கரைக்கு போய்ச் சேர வேண்டும். எவ்வளவு நேர பயணம் அது ?
அசோக்: ஒரு மணித்தியாலம் இரண்டு மணித்தியாலத்தில் போகலாம். அது நேவிய பொறுத்து இருக்கு. நேவி துரத்தி பிரச்சனைப்பட்டால் சிக்கல் தான்.
தேசம்: அப்படி போய் வரேக்க உங்களுக்கு நெருக்கடிகள் இருந்ததா…
அசோக்: ஓம் ஒரு தடவை பயங்கர நெருக்கடி. நான் ஈஸ்வரன், முரளி, தோழர் கேசவன் இரவு 11 மணிக்கு மாதகலிலிருந்து கிளம்பினாங்கள். நாங்கள் போகும் போது நேவி கண்டு விட்டது. அவர்கள் துரத்த தொடங்கி விட்டார்கள். கோடியாக் கரைக்கு போகவேண்டிய நாங்கள் ஓடி ஓடி கடைசியில் பெற்றோலும் முடிந்த நிலையில், அதிகாலை 4மணியளவில் மல்லிப் பட்டணத்தில் கரை ஒதுங்கினோம். இப்படி இந்த கடல் பயணங்களில் பல அனுபவங்கள்.
தேசம்: இலங்கை கடற் பிராந்தியத்தை தாண்டி நேவி கலைத்து அடிக்கிறது.
அசோக்: அவர்கள் துரத்த தொடங்கினால், இந்திய எல்லைக்குள் எல்லாம் வருவாங்க. அது அவங்களுக்கு பிரச்சனை இல்லை. வோட்டில் பின் தளம் போகும் போது பெரிய பயம் தேவையில்லை. இலங்கை நேவி துரத்தி சுட்டாலும், எப்படியோ தப்பித்து இந்தியா கரைக்கு போய்விடமுடியும். ஆனால் அங்கிருந்து கரையை நோக்கி வரேக்க பெரிய ஆபத்துகள். நேவி கண்டால் சிக்கல்தான்.
தேசம்: வரேக்க உங்களுக்கு கரையில் தகவல் தருவதற்கு ஆட்கள் இருந்தவையா?
அசோக்: அப்படி ஒன்றும் இல்லை. ஓட்டி தான் கடற்பரப்பை கண்காணித்துக் கொண்டு வரவேணும்.
தேசம்: வெறும் கண்ணால பார்த்து
அசோக்: கண்ணால தான் பார்க்க வேண்டும். அப்ப எங்களிடம் பெரிய ஆயுதங்கள் எதுவும் இல்லை.
தேசம்: அந்த நேரம் பயணங்களில் நிறைய பேர் உயிரிழந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
அசோக்: ஓம் எல்லா இயக்கங்களிலும் நடந்திருக்கு.
தேசம்: பாக்கு நீரினை கடலில் விடுதலை போராளிகள் காவியமே படைத்திருக்கிறீனம்.
அசோக்: மிகவும் பரிதாபத்துக்குரிய மரணங்கள் அவை.
தேசம்: இவ்வாறான பயணங்கள் எப்படி நடக்கிறது? கிழமையில் 1, 2 நடக்குமா…
அசோக்: அந்த நேரத்தில் பின்தளத்திற்கு பயிற்சி பெற செல்லும் தோழர்களின் எண்ணிக்கையை பொறுத்து இப்பயணங்கள் நடக்கும்.
தேசம்: அப்போ நீங்கள் இவ்வளவு உயிரை பணயம் வைத்து அங்கே போகும்போது அது மதிக்கப்படுதா?
அசோக்: அதுதான் பிரச்சனை. ஆரம்ப காலத்தில் எங்களுக்கு பெரிய நம்பிக்கை தானே இருந்தது. தோழர் ரகுமான் ஜான், தோழர் கேசவன், தோழர் சந்ததியார் போன்றவங்க ஒரு அரசியல் சார்ந்து இருக்கேக்க பெரிய நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஒருகட்டத்தில் அவங்களுக்குள்ள முரண்பாடு தோற்றம் பெறுவது எங்களுக்கு தெரிந்துவிட்டது. பிரச்சனை என்னவென்றால் நாங்கள் சந்ததியாரின் ஆளும் இல்லை முகுந்தனின் ஆளும் இல்லை. தளத்திலே பொறுப்பு நாங்கள் அவ்வளவுதான்.
தேசம்: உங்களுக்கு இவர்களுடைய தொடர்பு …
அசோக்: மிகக் குறைவு எங்களுக்கு. பின்தளம் போனால் மாத்திரம் சந்திப்போம். உரையாடுவோம்.
தேசம்: உங்களுக்கு ஆரம்பத்திலேயே… நீங்கள் கிழக்கு மாகாணம் என்றபடியால் ரகுமான் ஜானுடன் ஏற்கனவே தொடர்புகள் இருக்கு.
அசோக்: எனக்கு ஆரம்பத்தில் தெரிந்த தோழர்கள் ரகுமான் ஜான், சந்ததியார், பார்த்தன், சலீம், வாசுதேவா போன்றவர்கள்தான். உமா மகேஸ்வரனை எல்லாம் பின் தளத்தில் வைத்து தான் நான் சந்திக்கிறேன். அரைவாசிப் பேரை சென்ட்ரல் கமிட்டியில் தான் சந்திக்கிறேன்.
தேசம்: அப்ப நீங்க பின் தளத்துல போயிருக்கிற நேரம் ரகுமான் ஜான், சந்ததியார், சலீம் இவர்கள அங்க சந்தித்து உரையாடுறனீங்களா? உரையாடக்கூடியதா இருந்ததா?
அசோக்: ஒரு காலகட்டத்தில் சலீம் பிடிபட்டு சிறைக்கு போயிட்டார். அவர் சென்ட்ரல் கமிட்டிக்கு வாறது இல்லை. ரகுமான் ஜான், சந்ததியர் எல்லாரையும் சென்றல் கமிட்டியில் சந்திப்பன்.
தேசம்: அங்கதானே நீங்கள் ஒன்றும் கதைக்கிறதில்லை.
அசோக்: தனிப்பட்ட வகையில் உரையாடுவோம் …
தேசம்: அந்த உரையாடல்கள் ஆரோக்கியமாக இருந்ததா? அந்த உரையாடல்களில் நீங்கள் இயக்க பிரச்சனைகள் பற்றி கதைப்பீர்களா? பொதுவாகப் பார்த்தீர்கள் என்றால் கூட்டத்துக்கு வெளியில இன்னொரு கூட்டம் நடக்கும். அந்தக் கூட்டத்தில் தான் கூடுதலாக முக்கியமான விடயங்கள் பேசப்படும். மனம்விட்டு நிறைய பேசக் கூடியதாக இருக்கும். அவர்கள் பிரிந்து போவது சம்பந்தமாக அல்லது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளேக்க அதற்கான ரெக்ரூட்மெண்ட்ஸ் வேறயாட்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள். அப்படி அந்த வகையில உங்களுடைய உரையாடல்கள் அமைந்திருந்ததா?
அசோக்: எண்பத்தி நான்கு நடுப்பகுதி வரைக்கும் அவர்கள் எங்களிடம் முரண்பாடுகள் பிரச்சனைகள் பற்றி கதைத்தது குறைவு . தோழர் ரகுமான் ஜான் பாலஸ்தீன பயிற்சிக்கு போனதால் மத்தியகுழு கூட்டங்களுக்கு வந்தது குறைவு. அவரை அக்காலங்களில் சந்தித்ததும் குறைவு. ஆரம்பகாலங்களிலும் கடைசி காலங்களிலுதான் அவரை சந்திக்க முடிந்தது.
முரண்பாடுகள் வரேக்க தானே இது பற்றிய உரையாடல்கள் வரும். அதிருப்திகளை சொல்லுவாங்க. ஆனா 84இல் நடுப்பகுதியில் அந்த முரண்பாடு வந்துட்டுது. கொலைகள், சித்திரவதைகள் பற்றிய வதந்திகள் நிறைய வரத் தொடங்கி விட்டது. ஆனால் கமிட்டியில் கதைக்க மாட்டாங்க. அடுத்தது நாங்களும் கதைக்க இயலாது. கதைத்தால் முகுந்தன் கேட்கும் எப்படி உங்களுக்கு தெரியும் என்று. பிறகு ஆதாரம் கேட்பார். ஒருதடவை நான் கேட்டு முகுந்தன் டென்சன் ஆகி. இதைப்பற்றி போன உரையாடலில் கதைத்திருக்கிறன்.
தேசம்: முகுந்தனுக்கு இருக்கிற அதே அதிகாரம் தானே சந்ததியருக்கோ, ரகுமான் ஜானுக்கோ, சலீமுக்கோ உங்களுக்கோ இருந்தது.
அசோக்: ஆரம்ப காலங்களில் இவங்களுக்கு கட்டுப்பாட்டுக் குழுக்கு அதிகாரம் இருந்தது. அதை இவங்க ஆரோக்கியமாக பயன்படுத்த தவறிட்டாங்க. என்னைப் பொறுத்தவரை நான் வைக்கிற விமர்சனம் என்ன என்று கேட்டால் முகுந்தன் உடைய அதிகாரம் வளர்வதற்கான காரணம் நாங்கள் தான். இது தொடர்பா முன்னமே கதைத்திருக்கிறன்.
தேசம்: சொன்ன விஷயம் எல்லாம் வைத்து பார்க்கும்போது அந்தப் பலத்தை முகுந்தன் தக்க வைத்துக் கொண்டதற்கு முதல் எல்லோரும் கிட்டத்தட்ட சம பலத்தில் தான் இருந்திருக்கிறீர்கள். அப்போ எங்கேயோ ஒரு இடத்தில் தளர்வு ஒன்று நடக்குது. முகுந்தனிட்ட இந்த அதிகாரங்கள் எல்லாம் கை மாறுது. அதற்கு இவர்களும் துணையாக இருந்து இருக்கிறார்களா என்ற ஒரு கேள்வி எழுகின்றதல்லவா?
அசோக்: ஆரம்ப காலத்தில் இந்த முரண்பாடு வரேக்க ஒரு உரையாடலை செய்திருக்கலாம். எல்லாரும் வளர்ந்த தோழர்கள். காலப்போக்கில் இந்த முரண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக கூர்மையடைந்த படியால் முரண்பாட்டுக்கான காரணங்கள் ஆராய்ப்படவும் இல்லை களையப்படவும் இல்லை. அது கூர்மை அடைந்ததுதான் மிச்சம்.
தேசம்: குறிப்பா மத்திய குழுவுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கு என்னவென்றால். கிட்டத்தட்ட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் அமைப்பில் உள்வாங்கப் பட்டிருக்கிறார்கள். மிகப்பெரிய அமைப்பு. அவர்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடமை இந்த மத்திய குழு உறுப்பினர்களுக்கு இருக்கு.
அசோக்: நாங்கள் எங்களுக்குள் பிரச்சனைகள் இந்த அதிகாரத்தனம், தன்னிச்சையான போக்குகள் பற்றி கதைப்பம். தீர்வு காணக் கூடிய எந்த வல்லமையும் அதிகாரமும் தளத்தில் இருந்த எங்களுக்கு இருக்கல்ல. அத்தோட பின் தளத்தை பொறுத்தவரை நாங்க அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. பின் தளத்தில் நாங்க மனம் விட்டு கதைக்கக் கூடிய தோழராக தங்கராஜா தோழர் ஒருவர்தான் எங்களுக்கு இருந்தார். மற்றவர்களோடு கதைக்க பயம் இருந்தது. எல்லோரும் முகுந்தன் விசுவாசிகளாகத்தானே இருந்தாங்க.
தேசம்: ஆனால் அவர் மத்திய குழுவில் இருக்கிறாரோ.
அசோக்: மத்திய குழுவில் இல்லை. அவர் தோழர்களுக்கு அரசியல் வகுப்பெடுக்கும் பொறுப்பில் இருந்தவர். அவர் சொல்லுவார். இவங்கள் எல்லோரும் சேர்ந்து இயக்கத்தை அழிக்கப் போறாங்கள் என்று. எங்கட கௌரவத்துக்காக நாங்கள் மத்தியகுழு என்று சொல்லிக் கொண்டோமே ஒழிய எந்த பிரயோசனமும் பின் தளத்திலும் இல்லை. தளத்திலும் இல்லை.
தேசம்: அது நேரடியாக உமாமகேஸ்வரன் என் கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தது.
அசோக்: உமா மகேஸ்வரனின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
தேசம்: மற்றவர்கள் கதைக்க முற்படவில்லை
அசோக்: முடியாது. உதாரணமாக யாழ்ப்பாணத்தில் ஒரு தவறு நடந்தால் நாங்கள் கட்டுப்படுத்த இயலாது. ஒரு கட்டத்துல நாங்கள் யாழ்ப்பாணத்திலேயே இருக்கிறதில்லை. ஈஸ்வரன் கிழக்கு போயிருப்பார். முரளி வன்னிக்கு போயிருப்பார். நான் நான் தொழிற்சங்க, மாணவர் அமைப்பு வேலைக்காக கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவுக்கு போயிட்டே இருப்பேன். ஏனென்றால் நின்று பிரயோசனம் இல்லை. நின்றால் உங்களுக்கு மண்டை வெடிக்கும். தன்னிச்சையான போக்கு ஆரம்பத்தில் இருந்தே. இதைப் பற்றி போன உரையாடல் ஒன்றில விரிவாக கதைத்திருக்கிறன் என நினைக்கிறன்.
தேசம்: இதை யாழ்ப்பாணத்துக்கு உரிய குணாம்சமா? அல்லது வடக்கின் ஏனைய மாவட்டங்களில் இதை காணக்கூடியதாக இருந்ததா
அசோக்: நான் ஆரம்பத்திலேயே சொன்னதுதான். நில உடமைக் குணாம்சங்களோடு இணைந்த மத்திய தரவர்க்க மனோபாவம் என்பது, இலங்கையில் எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கும். யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை சாதிய, மத மேலாதிக்க மனநிலையும் அதன் அடையாளங்களும் சேர்ந்து தொழிற்படும் போது இதன் வெளிப்பாடும் தாக்கமும் அதிகமாக இருக்கப் பார்க்கும். இது சமூகத்தில் இயல்பானது. இவற்றை மாற்றி அமைக்கத்தானே நாம் போராட வேண்டும். நீண்ட நெடுங்காலமாக எங்களிட்ட ஊறிப்போன இவ்வாறான குணாம்சம் குறிப்பிட்ட காலத்தினுள் எங்களிட்ட இருந்து மாறிப்போகும் என்று நாம் எதிரபார்க்க முடியாதுதானே.
ஆனா அதற்கெதிரான போராட்டம் முயற்சி அவசியம். அதற்கு மார்க்கிய அரசியல் கல்வி அவசியம். அரசியல் பண்பாட்டுத்தளத்தில் மாற்றங்கள் அவசியம். இல்லாட்டி நாங்க அதிகார ஆசை கொண்ட ஆட்களாக, ஒரு அதிகார வர்க்கமாக தான் இருப்பம். ஒரு ஏ.ஜி.ஏ டிவிசனில் இருப்பவர் ஏஜி ஆக அதிகார மனநிலை இருப்பர். மாவட்ட அமைப்பாளர் மாவட்ட ஜி ஏ மாதிரிதான் நடப்பார். மக்கள் மத்தியில் அதிகாரம் காட்டப்படும். மக்கள் எங்களுக்கு அன்னியமாக தெரிவாங்க. அதிகார இருத்தலுக்கு ஆயுதம், வாகனங்கள் தேவைப்படும். நடத்தல், சாதாரண சைக்கிள் பயணம் எங்களுக்கு தேவைப்படாது.
தங்களை அர்ப்பணித்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி மக்களுக்குரிய விடுதலையை பெறுவதற்கான உணர்வு இவ்வாறான ஆட்களிடம் இருந்ததே இல்லை.
தேசம்: மற்றது யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் கல்வி கற்று அதற்குள் இருந்து வாரவர்களுக்கான ஒரு தெனாவட்டு இருக்கு என்று சொல்லுவார்கள் தானே.
அசோக்: அந்த கல்லூரி என்று இல்லை, பொதுவாகவே மத்திய தர வர்க்கத்துக்கான குணாம்சம் இப்படித்தான் இருக்கும். ஆனால் நீங்கள் சொல்வதில் சில உண்மைகள் உண்டு. இது யாழ்ப்பாண இந்துக் கல்லூரிக்கு மாத்திரம் அல்ல, இந்து மத அடிப்படைகளை, சாதிய உணர்வுகளை கொண்ட பல பாடசாலைகளுக்கு இது பொருந்தும். இயக்கங்களில் மிக மோசமான நடத்தை கொண்டவர்கள் அதிகார மனநிலை கொண்டவர்கள் இந்த பிண்ணனியைக் கொண்டவர்களாக ஒரு சிலர் இருந்திருக்கிறார்கள்.ஆனால் இவற்றை பொதுமைப்படுத்தக் கூடாது.
யாழ்ப்பாண சமூகத்தின் மனநிலை எப்படி இருக்கும் என்று கேட்டால் ஒன்று படித்தால் உங்களுக்கான பதவி உத்தியோகம் வேண்டும். அது இயக்கங்களுக்கு வரும்போது அந்த எதிர்பார்ப்பு இருக்கு அவர்களிடம். ஒரு ஆள் மொரட்டுவ யுனிவர்சிட்டியில் ஆர்க்கிடெக்ட் படித்துக்கொண்டு இடையில் வந்தால் அவர் வந்து கீழ் மட்டங்களில் வேலை செய்ய மாட்டார்.
தேசம்: பார்க்கிற மாதிரிக்கு இன்றைக்கு இருக்கிற பாராளுமன்ற அரசியலை தான் அன்றைக்கு இயக்கங்களும் பிரதிபலித்த மாதிரிதான் எனக்கு தெரியுது. மிதவாத கட்சிகளில் சேர்ந்து எங்கள் என்றால் உங்களுக்கு பாராளுமன்ற பதவி கொடுக்கப்பட வேண்டும். ஆசனங்களுக்காக ஃபைட் பண்ணுவினம். ஆசனங்கள் வழங்கப்படாட்டி கட்சியை விட்டு வெளியேறுவது இப்படியான நடைமுறைகள் இருக்கும். கிட்டத்தட்ட இதுவும் அப்படித்தான்…
அசோக்: அப்படித்தான். இதுபற்றி முன்னர் உரையாடி இருக்கிறம்.
தேசம்: பார்க்கிற மாதிரிக்கு இப்ப நாங்கள் குறிப்பாக பேச வேண்டியது அதிகாரம் எங்க இருக்கோ அதைப் பற்றித்தான் பேச வேண்டும். அதிகாரம் மத்திய குழுவிலும் கட்டுப்பாட்டு குழுவிலும் தான் குவிக்கப்பட்டிருக்கு. இவ்வளவு காலமும் என்னுடைய பார்வை அதற்குள் குறிப்பிட்ட ஆட்கள் முற்போக்காளர்கள் இடதுசாரி பார்வை கொண்டவர்களாக தான் நான் பார்த்தேன். உங்களோடு இவ்வளவு நேரம் நடந்த உரையாடலில் எனக்கு அந்த வித்தியாசம் இருக்கிற மாதிரி தெரியவில்லை. சில வேளை அவர்கள் இடதுசாரிக் கருத்துக்களை வைத்து இருந்திருக்கலாம். ஆனால் நடைமுறையில் அப்படி இருந்த மாதிரி தெரியவில்லை.
அசோக்: இடதுசாரி என்பது வெறும் கருத்தியல் சார்ந்த வெறும் அறிவாக இருக்காது. அது ஒரு வாழ்க்கை முறை. வட இலங்கைக் கம்யூனிஸ்ட் பாட்டிகளை பார்த்தீர்களென்றால், சாதியத்துக்கு எதிரான போராட்டங்களை செய்தவர்கள் இடதுசாரிகள். அவர்கள் மக்களோடு மக்களாக வேலை செய்தார்கள். சித்தாந்த ரீதியாக வளர்ந்தார்கள். அவர்கள் இடதுசாரிகள். இவர்கள் தங்களை இடதுசாரியாக சொல்லுகின்ற நபர்களேயொழிய இடதுசாரியத்தை வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. அது நான் உட்பட எல்லாருக்கும் இது பொருந்தும். ஏனென்றால் நாங்கள் மிக நேர்மையாக, மார்ச்சிய உணர்வு கொண்டவர்களாக இருந்திருந்தால், புளொட் இந்த அளவுக்கு போயிருக்காது. புளொட்டின் அழிவுக்கு எல்லோரும் பொறுப்பேக்க வேண்டும். அது சந்ததியாராக இருந்தால் என்ன, உமாமகேஸ்வரனாக இருந்தால் என்ன, நானாக இருந்தாலும், யாராக இருந்தாலும், பொறுப்புக்கூற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கு. நாங்கள் இன்னொருவரை குற்றம்சாட்டி போக இயலாது.
யாழ்ப்பாணத்தில் மூன்று தீவுகளில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கும் வேலைத் திட்டத்தைச் சீனா இடைநிறுத்தியுள்ளது.
இலங்கையில் உள்ள சீன தூதரகம் தனது ட்விட்டர் தளத்தில் இந்தத் தகவலைப் பதிவு செய்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் சம்பந்தமாக மூன்றாம் தரப்பு ஒன்றிலிருந்து எழுந்துள்ள பாதுகாப்பு கரிசனை கருதி இந்த வேலைத் திட்டம் இடைநிறுத்தப்படுவதாக அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இதே மாதிரியான 12 தீவுகளில் கலப்பு மின்னுற்பத்தி மையங்களை அமைக்கும் வேலைத் திட்டம் ஒன்றுக்காக மாலைதீவு அரசாங்கத்துடன் கடந்த 29ஆம் திகதி சீனாவின் நிறுவனம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய இடங்களில் இந்தச் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான வேலைத் திட்டத்தைச் சீனா முன்னெடுக்கவிருந்தது.
இதற்கான அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக இந்தியா தனது கரிசனையை வெளியிட்டுள்ளதுடன் தமிழ் அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தின. இந்த நிலையில் தற்போது இந்த வேலைத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.