செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இங்கிலாந்தை விரட்டும் கொரோனா – ஒரே நாளில் 78 ஆயிரத்து 610 பேருக்கு கொரோனா பாதிப்பு !

இங்கிலாந்தில் ஒரு பக்கம் ஒமிக்ரோன் தொற்று தீவிரம் காட்டத்தொடங்கி உள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் அங்கு ஒரே நாளில் 78 ஆயிரத்து 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் மக்கள் இதையொட்டிய நிகழ்வுகளில் கலந்து கொள்கிறபோது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் எச்சரித்துள்ளார்.

தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி தேவையில்லாமல் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

வடகொரியாவில் 11 நாட்களுக்கு சிரிக்கவும் அழவும் தடை – மீறினால் கைது !

வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங்-இல் மறைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அந்நாட்டில் 11 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்- உன் முடிவு செய்துள்ளார். இதனால் 11 நாட்களுக்கு அந்நாட்டு மக்கள் யாரும் சிரிக்கவும், மது அருந்தவும், கடைகளில் மளிகைப் பொருட்கள் வாங்கவும் கூடாது என அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் அனைவரும் எந்தவித கேளிக்கை, கொண்டாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது. வீடுகளில் யாராவது இறந்தாலும் கூட சத்தம்போட்டு அழக்கூடாது. இந்த உத்தரவை மீறுபவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு உடனே கைது செய்யப்படுவர் என தெரிவித்துள்ளது.

“மக்கள் நலனுக்காக அமைதி காத்தோம். இனியும் அமைதிகாக்க முடியாது.” – ஜீவன் தொண்டமான்

“மக்கள் நலனுக்காக அமைதி காத்தோம். இனியும் மக்கள் நலன் பாதிக்காத வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும். தீர்வுக்காக போராடுவோம்.” என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஆள முற்படும் தோட்ட நிறுவனங்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கான தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அக்கரபத்தனை நிர்வாகங்களுக்குட்பட்ட தோட்ட நிறுவனங்களுக்கு கெடுபிடிகள் அதிகரித்துள்ளன என சுட்டிக்காட்டி அதற்கு எதிராகவும், தமது தொழில் உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் தோட்டத் தொழிலாளர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அக்கரபத்தனை நிர்வாகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி உட்பட முகாமைத்துவ தரத்திலான அதிகாரிகளுக்கும், இ.தொ.கா. உள்ளிட்ட தொழிற்சங்க பிரமுகர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் பிராந்திய தொழில் ஆணையாளர் தலைமையில் இன்று ஹட்டனிலுள்ள தொழில் திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான்,

அக்கரபத்தனை நிர்வாகங்களுக்குட்பட்ட தோட்டங்களில் வேலைசெய்யும் மக்களுக்கு நியாயம் கிட்டும்வரை பின்வாங்கப்போவதில்லை பெருந்தோட்ட மக்களை மிகவும் மோசமான நிலைக்கு அக்கரபத்தனை நிர்வாகம் தள்ளிக்கொண்டிருக்கின்றது. சில தோட்டங்களில் 10 முதல் 12 கிலோ கொழுந்து பறிப்பதே கடினமாக செயல். இந்நிலையில் 20 கிலோ பறிக்குமாறு நிர்ப்பந்திக்கின்றனர். இதனை நாம் ஏற்கவில்லை.

துரைமாரை இறக்கி கொழுந்து பறிக்க சொன்னோம், அவர்கள் எவ்வளவு பறிக்கின்றார்களோ அவர்களைவிட அதிகமாக 2 கிலோ பறித்து தருவதாக குறிப்பிட்டோம். அதற்கு அவர்கள் உடன்படவில்லை. கொடுப்பனவுகளிலும் பிரச்சினைகள் உள்ளன. எனவே, எமது போராட்டம் தொடரும். கடந்த ஒரு வருடமாக நாம் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கவில்லை.

மக்கள் நலனுக்காக அமைதி காத்தோம். இனியும் மக்கள் நலன் பாதிக்காத வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும். தீர்வுக்காக போராடுவோம். அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கின. அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலில்  நாளொன்றுக்கான பெயருக்கு 20 கிலோ பறித்தாக வேண்டும் என்பது உட்பட தோட்ட நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை.

அதேபோல் தொழிற்சங்கங்களால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை நிர்வாகம் ஏற்கவில்லை. இதனால் உறுதியான இணக்கப்பாடின்றி பேச்சுவார்த்தை முடிவடைந்தது.

அமெரிக்காவை அடுத்து சீன குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள அவுஸ்ரேலியா !

சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த கவலைகள் காரணமாக பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜதந்திர புறக்கணிப்பாக அறிவித்ததில் அமெரிக்காவுடன்  அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.

பீஜிங்கில் 2022 குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அதிகாரப்பூர்வ அமெரிக்க தூதுக்குழுவை அனுப்புவதில்லை என்ற முடிவை பைடன் நிர்வாகம் அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் அவுஸ்திரேலியா இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

சீனாவுடனான உறவு முறிவைக் காரணம் காட்டி, அவர்களது தூதுவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் நிகழ்வைப் புறக்கணிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதாக  அந்நாட்டு ஒலிபரப்புக் கழகம் (ஏ.பி.சி) தெரிவித்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியாவின் தேசிய நலன் கருதியே இதனை செய்வதாகவும் பிரதமர் ஸ்காட் மோரிசன் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா மீதான பீஜிங்கின் சொந்த இராஜதந்திர முடக்கம், சீனத் தலைவர்களிடம் நேரடியாக மனித உரிமைகள் குறித்த தனது கவலைகளை  தெரிவிக்க முடியாததால், விளையாட்டுப் போட்டிகளைப் புறக்கணிக்கும் அதிகாரிகளின் முடிவிற்கு ஊட்டமளித்ததாக மோரிசன் கூறியுள்ளார்.

இதேவேளை அண்மையில்  வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, அமெரிக்க விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்பார்கள். ஆனால் நிர்வாகம், அரசாங்க அதிகாரிகளை விளையாட்டுகளுக்கு அனுப்பாது என்று கூறினார்.

இந்த நடவடிக்கை, ஜின்ஜியாங்கில், குறிப்பாக உய்குர் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக, கட்டாய உழைப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகள் தொடர்பாக, சீனா மீது அமெரிக்கா அழுத்தத்தை அதிகரிப்பதைக் குறிக்கிறது என சி.என்.என்  செய்தி அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற மாநாட்டு நிகழ்வொன்றில்,  சீனாவில் மனித உரிமை மீறல்கள் வழக்கம் போல்  இடம்பெறுவதனை அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா ஒரு தெளிவான செய்தியை அனுப்ப விரும்புவதாக சாகி கூறியுள்ளார்.

இதற்கிடையில், பீஜிங்கில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2022 இராஜதந்திர புறக்கணிப்பு குறித்த அமெரிக்க அரசாங்கத்தின் முடிவை முழுமையாக மதிப்பதாக சர்வதேச ஒலிம்பிக் சபை (IOC) தெரிவித்துள்ளது.

அரசு அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளின் இருப்பு ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் முற்றிலும் அரசியல் முடிவாகும், IOC அதன் அரசியல் நடுநிலைமையை முழுமையாக மதிக்கிறது. அதே நேரத்தில், ஒலிம்பிக் போட்டிகளும், விளையாட்டு வீரர்களின் பங்கேற்பும் அரசியலுக்கு அப்பாற்பட்டவை என்பதையும் இந்த அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம் என  ஐ.ஓ.சி, தனது அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

ஒமிக்ரோன் சிவப்பு பட்டியலில் இருந்து அனைத்து நாடுகளையும் நீக்கியது பிரித்தானியா !

கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மறுபாட்டின் அச்சம் காரணமாக பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட 11 நாடுகளை இன்று முதல் நீக்குவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அங்கோலா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, தென் ஆபிரிக்கா, சிம்பாப்வே ஆகிய 11 நாடுகள் கடந்த நவம்பர் மாதத்தில் சிவப்பு பட்டியல் இணைக்கப்பட்டன.

உலகம் முழுவதும் பரவிவரும் ஒமிக்ரோன் மறுபாடு தற்போது பிரித்தானியாவில் சமூகப் பரவலடைந்து வருவதாக பிரித்தானிய சுகாதார செயலாளர் சஜிட் ஜாவிட் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

மேலும் வெளிநாடுகளில் இருந்து ஒமிக்ரோன் மறுபாட்டின் ஊடுருவலை கட்டுப்படுத்த பயணத் தடை குறைவான செயற்திறனையே கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு பயணங்களுக்காக நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் அதேவேளை சிவப்பு பட்டியலில் இருந்து அனைத்து நாடுகளையும் நீக்குவதாகவும் சஜிட் ஜாவிட் கூறினார்.

“நினைத்ததை விட ஒமிக்ரோன் வேகமாக பரவுகிறது.” – உலகச் சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை !

ஒமிக்ரோன் மாறுபாடு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உலகம் முழுவதும் பரவி வருவதாக உலகச் சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.

அதைக் கட்டுப்படுத்த நாடுகள் துரிதமாகச் செயல்பட வேண்டும் என்றும் அதன் தலைமை பணிப்பாளர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.

இதுவரை ஒமிக்ரோன் மாறுபாடு 77 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மாறுபாட்டைச் சமாளிக்க அந்நாடுகள் போதுமான அளவு செய்யப்படவில்லை என்றும் கவலை வெளியிட்டார்.

இதேநேரம் இதற்கு முன்னர் பரவிய கொரோனா மாறுபாடுகளை விட ஒமிக்ரோன் மாறுபாடு அடையாளம் காணப்படாமலேயே பரவியிருக்கக்கூடும் எனத் தாம் நம்புவதாக அவர் கூறினார்.

ஒமிக்ரோன பரப்பும் நோய் மிதமானது என முடிவுக்கு வரவேண்டாம் என உலக சுகாதார ஸ்தாபனத்தை சேர்ந்த நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்

விதி, வீதிகளில் விளையாடுகின்றது! – ஒரு மாணவியும் அவளின் கனவுகளும் வாகனத்தின் சக்கரத்தில் நசுங்கி ஒரு மாதம்!!!

இன்றைக்கு டிசம்பர் 15 காலை வீதிப் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஏ9 வீதியில் லிற்றில் எய்ட் அமைப்பினால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டது. லிற்றில் எய்டில் கல்வி கற்கும் மாணவர்கள் உட்பட வெளி மாணவர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் வீதிப் போக்குவரத்தில் பாதுகாப்பை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டது. மாணவர்கள் வீதிப் பாதுகாப்பை வலியுறுத்தும் பதாதைகளை தாங்கி அமைதியான முறையில் இந்நிகழ்வை நிகழ்த்தினர்.

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பாக நவம்பர் 15 காலை 8:15 மணிக்கு கல்லூரிக் கனவுகளோடு மஞ்சள் கடவையில் பாடசாலையை நோக்கி கடந்த மாணவி மதுசாளினி திருவாசகம் (17) பாதசாரிகள் கடக்கின்ற கடவையிலேயே வாகன விபத்தில் கொல்லப்பட்டாள். அப்பதின்ம வயது மாணவியின் நினைவாக விபத்து நடந்த அந்த இடத்தில் லிற்றில் எய்ட் மாணவர்கள் இந்த விழிப்புணவு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். கிளிநொச்சியில் ஊற்றுப்புலம் கிராமப் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் கற்று சிறந்த பேறுபேறுகளைப் பெற்ற மூன்று மாணவிகள் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு உயர்தரம் கற்க அனுமதிபெற வந்த போதே இந்த மோசமான விபத்து நிகழ்ந்தது. தனது மகளை விறகுவெட்டி விற்ற பணத்தில் படிக்க வைத்த தந்தையின் தலையில் பேரிடி.

இலங்கையின் வீதிகள் மரண வீதிகளாகிக் கொண்டிருக்கின்றது என உலக சுகாதார நிறுவன புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் வீதிகளில் சராசரியாக ஒரு நாளைக்கு 10 மரணங்கள் வரை சம்பவிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது. 2020ம் ஆண்டில் இல்கையின் வீதிகளில் 3590 பேர் விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர். தெற்காசியாவிலேயே இலங்கையின் வீதிகளே ஆபத்தானவையாக உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கை தெரிவிக்கின்றது. இலங்கையில் ஒரு லட்சம் பேருக்கு 17 பேர் வீதி விபத்துக்களில் கொல்லப்படுகின்றனர். இவ்வாறு கொல்லப்படுபவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தை ஈட்டக் கூடிய வயதுடையோராகவும் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பாரிய பொருளாதார நெருக்கடியையும் சந்திக்கின்றனர்.

காண்டீபன் ஜெகநாதன் (44) விபத்தினால் தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஓகஸ்ட் 8இல் மரணமடைந்தார். இளம் குடும்பத்தவரான ஒரு குழந்தையின் தந்தையான காண்டிபன் வாகரை டிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர். ஓகஸ்ட் 2 இல் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது மட்டக்களப்பு மாங்கேணி பகுதியில் விபத்துக்கு உள்ளானார்.

காண்டீபனின் மறைவு அக்குடும்பத்தின் எதிர்காலத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் ஜயமில்லை. வீபத்துக்களினால் உயிரிழந்த வறுமைப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சி கண்டுள்ளதுடன் அவர்களில் மூன்றில் இரு பங்கினர் கடன்வாங்கி வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

2019யைக் காட்டிலும் 2020இல் இலங்கையில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2019இல் 2840 ஆக இருந்து விபத்து மரணங்கள் 2020இல் 3590 ஆகா 26வீதத்தால் அதிகரித்துள்ளது. இவ்விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் பாதிக்கப்படுபவர்களில் 70 வீதமானவர்கள் பொருளாதார ரீதியாக சிக்கனமான போக்குவரத்தை பயன்படுத்துபவர்களாகவே உள்ளனர். விபத்துக்களில் கொல்லப்படுபவர்களில் 50 வீதமானவர்கள் இருசக்கர அல்லது முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள். வீதி விபத்துக்களில் கொல்லப்படுபவர்களில் பாதசாரிகள் மூன்றில் ஒரு பங்கினர் பாதசாரிகள். மேலும் 25,000 பேர்வரை விபத்துக்களில் காயமுறுகின்றனர். இலங்கையில் யுத்தத்திற்குப் பின் உடல் ஊனத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக வீதி விபத்துக்கள் உள்ளன.

லண்டன் சரேயில் வசிக்கின்ற முருகையா சங்கரப்பிள்ளை 2014 இல் தாயகத்திற்குச் சென்றிருந்த போது வீதியோரமாக நடந்த சென்றவரை மோட்டார் சைக்கிளில் வந்தர் மோதியதில் அவருக்கு காலில் பலத்த அடிபட்டுமூன்று இடத்தில் என்பு முறிவு ஏற்ப்பட்டது. அவர் யாழ் நொதேர்ன் மருத்துவமனையில் பத்து நாட்கள் இருந்து பலத்த கஸடங்களுக்கு மத்தியில் பிரித்தானியா திரும்பினார். டீப் வெயின் துரொம்போசிஸ் என்ற இதய – குருதி அழுத்த நோயுடன் இரத்தம் கசிய கசியவே லண்டன் திரும்பி உடன் லண்டன் கிஹ்ஸ்ரன் மருத்துவமனையிலும் பின் கிஹ் ஜோர்ஜ் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு மூன்று மாதங்கள் சிகிச்சையளிக்கப்பட்டு அடுத்த 12 மாதங்கள் வீட்டில் வைத்து மருத்துவ தாதி ஒருவர் சென்று பார்த்து சிகிச்சை பெற்று வந்தார். அவர் முற்றாக குணமடைய மூன்று ஆண்டுகள் எடுத்தது. இச்சம்பவம் ஊரில் உள்ள ஒருவருக்கு ஏற்பட்டு இருந்தால் அவர் மூன்று மாதங்களுக்குள் உயிரிழந்து இருப்பார் என்றார் முருகையா. அதிஸ்ரவசமாக உயிர் தப்பி இருந்தால் உடல் ஊனமடைந்திருக்க வேண்டி வந்திருப்பதுடன் பொருளாதார ரீதியிலும் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பார்.

தெருக்களில் வாகனங்களின் அதிகரிப்பு (கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் வாகன உரிமையாளர்களின் எண்ணிக்கை 70 வீதத்தால் அதிகரித்து இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.)இ பராமரிப்பற்ற அல்லது பாராமரிப்பு குறைந்த வீதிகள்இ வாகன அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் போது நம்பகத்தன்மை மற்றும் உறுதிப்படுத்தல்களில் காட்டப்படும் அசிரத்தைஇ வீதிக் குற்றங்கள் முறையாகத் தண்டிக்கப்படாமைஇ பொதுப் போக்குவரத்து வளர்த்தெடுக்கப்படாமை என்பன வீதி விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்துவிடும் இவ்விபத்துக்கள் பல்லாயிரம் குடும்பங்களை உருக்குலைய வைக்கின்றது. அவர்களுடைய கனவுகளை வண்டிச் சக்கரத்தில் நசித்துவிடுகின்றது. வேகம் ஒரு போதும் விவேகமானதல்ல. உயிரினும் மேலானது எதுவுமில்லை. இன்னொரு உயிரைப் பறிக்கின்ற, எம்முயிரை பறிக்கின்ற வேகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். வேகமாகச் சென்று நாம் எதனையும் சாதித்துவிடுவதில்லை. ஆகையால் விவேகத்துடன் நிதானத்துடன் வாகனத்தை ஓட்டுவோம்.

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – விடுக்கப்ட்டுள்ள சுனாமி எச்சரிக்கை !

இந்தோனேஷியா மௌமரேவில் இருந்து 95 கி.மீ வடக்கே இன்று சக்திவாய்ந்த  ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளது.

இதன் எதிரொலியால், கடலில் சுனாமி அலைகள் எழ வாய்ப்புள்ளதாகவும் பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், பாதிப்புகள் அதிகம் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

முன்னதாக, இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர்.26-ம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பேரழிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் வேகமெடுக்க ஆரம்பித்துள்ள ஒமிக்ரோன் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

இங்கிலாந்தில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் திடீரென அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 448 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்தில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,265 ஆக உயர்ந்துள்ளது.
மீண்டும் சமூக கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தாவிட்டால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒமிக்ரோன் வைரஸ் பரவலின் பெரிய அலையை பிரிட்டன் எதிர்கொள்ள நேரிடும் என்று புதிய அறிவியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தில் அதிக அளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள போதிலும், ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது இரட்டிப்பாகி வருகின்றன.  இந்த ஆண்டு இறுதிக்குள் டெல்டா வைரஸ் தாக்கத்தை ஒமிக்ரோன் முந்தியுள்ளது என்பதை இது எடுத்துக் காட்டுவதாக ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற லேசான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒமிக்ரோன் தாக்கத்தை குறைக்க முடியும் என்பது எங்களின் நம்பிக்கை என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் ரோசன்னா பர்னார்ட் தெரிவித்துள்ளார்.  முக கவசம் அணிவது, சமூக விலகல் ஆகியவை இன்றியமையாதவை என்றாலும் அது போதுமானதாக இருக்காது, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் உள்விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் முகக் கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டன. திங்கட்கிழமை முதல், அரசின் மற்றொரு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வீட்டிலிருந்து வேலை செய்வது உள்ளிட்ட சாத்தியமான வழிகாட்டுதல்கள் தொடங்குகிறது. அடுத்த வாரம் முதல், பெரும்பாலான இடங்களுக்குச் செல்வதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அநியாயங்களுக்கும் பின்னிருப்பது லாபம் ஒன்றே! கொரோனா உயிரிழப்புகளும் இந்த லாபத்தினால் தான்!!!

இந்த கொரோனா பரவல் என்னவோ இயற்கைக்கும் மனிதனுக்கும் ஏற்பட்ட ஒவ்வாமையின் விளைவு என்றே ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் இன்று ஈராண்டுகள் கடந்தும் கொரோனாவை மருத்துவ உலகம் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது இயற்கையை மீறிய சக்தியால் அல்ல. சில மனிதர்களை அல்ல பண முதலைகளை ஆட்டி வைக்கின்ற லாபம் என்கின்ற போதையால். இதனை விளக்குவது ‘குவான்டம் மக்கனிக்ஸ்’ அளவுக்கு ஒன்றும் பெரிய விசயம் அல்ல. பாலர் வகுப்புக்குச் செல்லும் பிள்ளைக்கும் விளங்கப்படுத்தக் கூடிய அடிப்படைக் கணிதம். ஆனால் என்னவோ பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தலைமையில் உள்ள பிரித்தானிய கொன்சவேடிவ் அரசுக்கு மட்டும் ஏறுதில்லை.

பிரித்தானிய மண்ணில் உலகப் பிரசித்திபெற்ற ஒகஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அனுசரணையோடு பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட அஸ்ராசெனிக்கா – AztaZeneca வால் தயாரிக்கப்பட்ட வக்சினே முதன் முதலில் மேற்கு நாடுகளில் அங்கிகரிக்கப்பட்ட வக்சீன். இந்த வக்சீன் தயாரிப்பில் பொதுப்பணம் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் பலரும் இந்த பரீட்சார்த்த பரிசோதணைகளுக்கு மனமுவந்து தங்களை ஒப்படைத்தனர். அதே போல் அமெரிக்க நிறுவனமான பைசர் – Pfizer ஜேர்மனியின் பயோன்ரெக் BioNTech நிறுவனத்தோடு சேர்ந்து கொரோனாவுக்கு எதிரான வக்சீனை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டது. ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகள் கணிசமான அளவு பொதுப்பணத்தை குவித்திருந்தன.

அஸ்ராசெனிகா பிரித்தானியாவில் அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கவும் சில வாரங்களிலேயே பைசர் வக்சீனை அங்கீகரித்தது. பிரித்தானியாவும் பைசர் வக்சீனை அங்கீகரித்தது. ஆனால் இன்று வரை அமெரிக்கா அஸ்ராசெனிக்கா வக்சீனுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. பிரித்தானியாவோ பைசருடைய பூஸ்ரர் – booster வக்சீனைத் துரிதப்படுத்தி வருகின்றது.

மருத்துவ செலவீனங்களின் அடிப்படையில் இந்த வக்சீன்களின் அடிப்படையான எம்ஆர்என்ஏ வக்சீனை உருவாக்குவதற்கு அடிப்படையான செலவு 76 பென்ஸ் – 76 pence (£0.76) (ஒரு வக்சீனைத் தயாரிக்க ஒரு பவுண்டிலும் பார்க்க குறைவான செலவு) என செல்பீல் பல்கலைக்கழக மருத்துவ வக்சீன் ஆய்வாளர் பேராசிரியர் ஒருவர் தெரிவிக்கின்றார். இதனை அஸ்ராசெனிக்கா மூன்று பவுண்களுக்கு விற்பனை செய்கின்றது. இதன் விலை மிகவும் கண்ணியமானது. இவ்வாறான வக்சீன்களை உருவாக்குவதற்கு நீண்டகால ஆய்வுகள் பரிசோதணைகள் மற்றும் அவற்றை சேமிப்பது, பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்வது போன்ற போக்குவரத்து என அதற்கு மேலதிகமான நிர்ணயிக்கப்பட்ட செலவீனங்கள் இருக்கும். தயாரிக்கும் வக்சீன்களின் எண்ணிக்கை கூடக் கூட ஒரு வக்சீனுக்கான நிர்ணயிக்கப்பட்ட செலவீனம் குறைந்து செல்லும். இதனையே எக்ககொமிஸ் ஒப் ஸ்கேல் என்பார்கள். ஒரு பொருளை பெரும்தொகையில் உற்பத்தி செய்கின்ற போது மேலதிகமான நிர்ணயிக்கப்பட்ட செலவீனம் குறையும்.

ஆஸ்ராசெனிக்கா மூன்று பவுண்களுக்கு விற்பனை செய்யும் வக்சீனை பைசர் கடந்த ஆண்டு எட்டுப் பவுண்களுக்கு விற்பனை செய்தது. இந்த ஆண்டு இந்த பூஸ்ரர் வக்சீனை 22 பவுண்களுக்கு விற்பனை செய்கின்றது. முன்னைய ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பைசர் தனது வருமானத்தை 7 பில்லியன் அமெரிக்க டொலராக 134 வீதத்தால் அதிகரித்து இருக்கின்றது. செல்வந்த நாடுகளுக்கு மட்டும் தனது வக்சீன்களை விற்பனை செய்து லாபமீட்டும் பைசர் நிறுவனம் உலகின் ஏனைய பாகங்களுக்கு வெறும் கண்துடைப்பிற்கு ஒரு சில மில்லியன் வக்சீன்களையே வழங்க முன்வந்திருந்தது. அதுவும் உடனடியாக வழங்கப்படவில்லை.

மேலும் உலக சுகாதார நிறுவனம் ஆரம்பம் முதல் ஒரு விடயத்தை மிகத் தெளிவாக குறிப்பிட்டு வருகின்றது. அதாவது எல்லா நாடுகளிலும் கொரோனா கட்டுப்படுத்தப்படாவிட்டால் ஒரு கொரோனாவில் இருந்து தப்ப முடியாது. தற்போது பரவி வருகின்ற ‘ஒமிகுரொன் – Omicron கொரோனா அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, உலகிலேயே மிகக் கூடுதலான வக்சீன் போடப்பட்ட சனத்தொகையுடைய, ஒரு தீவுமான பிரித்தானியாவில் ஒமிகுரோன் வேகமாகப் பரவி வருகின்றது. காரணம் உலகின் ஏனைய பாகங்களில் மக்கள் தொகையில் ஓரிருவீதமானோருக்கு கூட வக்சீன் கிடைக்கவில்லை. லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட மருத்துவ முதலைகளான இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இதனை எப்படி தயாரிப்பது என்ற தொழில்நுட்பத்தை வழங்க மறுக்கின்றன.

பொதுமக்களின் வரிப்பணத்தை வழங்கி அரசுகள் ஆய்வுகளை மேற்கொள்ள உதவின, மக்கள் தங்களை பரிசோதணைகளுக்கு ஒப்படைத்திருந்தனர். ஆனால் லாபத்தை சுரட்டுவதற்காக பைசர் போன்ற நிறுவனங்கள் கொரோனாவை முற்றாக அழிந்து போகவிடாமல் செய்வதற்கான நடவடிக்கைகளில் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது என பிரித்தானியாவின் நம்பகமான தொலைக்காட்சி நிறுவனமான சனல் 4 channel 4, டிசம்பர் 10 டிஸ்பச்சஸ் – dispatches என்ற ஆவணப்படத்தினூடாக குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் பைசர் ஏனைய வக்சீன்களின் தரத்தை குறிப்பாக அஸ்ராசெனிக்காவின் தரத்தை திட்டமிட்டமுறையில் மழுங்கடிக்கும் பிரச்சாரத்திற்கு ஒரு துணை நிறுவனத்தை பயன்படுத்தி வருகின்றது. அஸ்ராசெனிகா பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்ற தொனியிலும் புற்றுநோயை உருவாக்கும் என்ற தொனியிலும் இந்த பிரச்சாரங்கள் சுகாதார அமைப்புகள் மத்தியில் பரவலாக பரப்பப்பட்டு வருகின்றது. இந்தக் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை. இந்த பிரச்சாரங்களினால் நான் வக்சீன் போடச் சென்றபோது அஸ்ராசெனிக்காவை போடுவதில் என்னையும் அறியாதவொரு பயம் இருந்தது. ஆனால் பல லட்சம் மில்லியன் பேர் தற்போது அஸ்ராசெனிக்கா வக்சீனைப் பயன்படுத்தி உள்ளனர். ஆனால் பைசர் நிறுவனம் பரிசோதணை காலத்தில் பல தில்லுமுல்லுகளில் ஈடுபட்டதுடன் அவற்றை வெளிக்கொணர்ந்த ஒருவரை வேலை நீக்கம் செய்திருந்தது. தற்போதைய நிலையில் இவ்விரு வக்சீன்களுமே விலையைத் தவிர நோய்த்தடுப்பை பொறுத்தவரை ஒரே மாதிரியான தாக்கத்தையே ஏற்படுத்தி உள்ளன.

மேலும் பைசருடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி பைசருக்கு எதிராக வழக்குகள் வந்தால் அவை பிரித்தானியாவில் நடத்தப்பட முடியாது என்றும் அவைபற்றி வெளியே தெரியப்படுத்தக் கூடாது என்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதையும் சனல் 4 அம்பலப்படுத்தி உள்ளது. இவ்வாறான மோசமான உடன்படிக்கைகள் பிரித்தானிய பிரதமர் பொரிஸ்ஜோன்ஸனின் ஆட்சியில் மட்டுமே நடக்கின்றது. வேறு எந்தவொரு நாடும் இவ்வான அதிகூடிய விலையில் வக்சீனை வாங்கவோ மோசமான உடன்படிக்கைகளில் கையெழுத்திடவோ இல்லை.

இந்த லாபம் மீதான காதல் ஒன்றும் பல்தேசியக் கொம்பனிகளுக்கு மட்டும் உரித்தானது அல்ல. கண் மருத்துவப் பரிசோதகராக இருக்கின்ற இங்கிலாந்தில் வாழும் மௌலியா செல்வராஜா இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கண் சிகிச்சை முகாமை நடாத்தி வறுமைக் கோட்டில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவச கண்ணாடியை வழங்குவதற்கு திட்டமிட்டு இருந்தார். இவ்வாறான ஒரு சிகிச்சை முகாம் பல இடர்பாடுகளுக்கு மத்தியில் முல்லைத்தீவில் இறுதியில் நடாத்தி முடிக்கப்பட்டது. ஆனால் இவ்வாறான ஒரு முகாமை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு முடியவில்லை. அதற்கு முட்டுக்கட்டை போட்டது வேறு யாரும் அல்ல யாழ்ப்பாணத்தில் தனியார் கண் சிகிச்சை நிலையங்களை நடாத்தி வந்த தமிழ் கண்மருத்துவர்கள். இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலுமே லாபமே நோக்கமாகின்ற போது அவை பல்வேறு அநியாயங்களுக்கும் இட்டுச்செல்கின்றது.

இன்று புற்றுநோய் காரணமாக பல்லாயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தப் புற்றுநோயை ஏற்படுத்துவதில் புகைத்தல் முக்கிய காரணியாக இருக்கின்றது. சிகரெட் பாவனைக்கு வந்த காலங்களிலேயே அது உணரப்பட்டும் இருந்தது. ஆனால் அது உயிராபத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் தான் அதன் விற்பனை முடக்கிவிடப்பட்டு பல லட்சம் பேர் புகைத்தலுக்கு அடிமையாக்கப்பட்டனர். லாபத்திற்காக.

பாலம் கட்டும் பொறியியலாளர்கள் ஏன் கட்டுமானத்தில் ஏற்ற பொருட்களைப் பயன்படுத்துவதில்லை? 2017இல் கிறீன்பெல் ரவர் – Greenfell Tower எரிந்து 80 வரையான குடியானவர்கள் கொல்லப்பட என்ன காரணம்? தீப்பிடிக்காத பொருட்களில் அமைக்கப்படவேண்டிய க்ளேடிங் – cladding கிங்கு பதிலாக இலகுவில் தீப்பற்றக்கூடிய க்ளேடிங் – cladding கை பயன்படுத்தியது. ஏன்? உணவுப் பொருட்களில் கலப்படம் எதற்கு? உற்பத்தியைக் கூட்டினால் சுற்றாடல் மாசடையும் என்று தெரிந்தும் ஏன் ஆடம்பரப் பொருட்களை மிதமிஞ்சி உற்பத்தி செய்கின்றோம்?

மதுபானத்திற்கு பல லட்சம் பேர் அடிமையாகின்றனர். குடும்ப வன்முறையில் இருந்து தன்னுணர்வு இழப்பு என்று மரணத்திற்கும் இட்டுச்செல்கின்றது. ஆனால் குடிக்கும் தண்ணீரின் விலையிலும் பியரின் விலை குறைவாக இருக்கின்றது. ஏன்?

அவ்வளவு ஏன் இந்த சிற்றின்பங்கள் எல்லாவற்றையும் திறந்து பேரின்பப் பெருவாழ்வு பெறுவோம் என்று எம் பெருமானின் சன்நிதானத்துக்கு போனால் ஜயா அர்சினைக் ரிக்கற் கேட்கின்றார். ஏன்?

உலகின் மிகச் சிறந்த பொருளியல் சிந்தனையாளர்கள் அடம் சிமித் – கார்ள் மார்கஸ். முற்றிலும் முரண்பட்ட பொருளியல் சிந்தனைகள். கைத்தொழில் புரட்சிக்கு வித்திட்ட காலகட்டத்தில் பிறந்த அடம் சிமித் ஒவ்வொரு மனிதனும் மற்றையவர்களைப் பற்றி எண்ணாமல் தனது நலனின் அடிப்படையில் மட்டும் செயற்பட்டால் எம்மை அறியாமலேயே மறைத்திருக்கின்ற கைகள் சமூகத்தை நேர்வழியில் இட்டுச்செல்லும் என்கிறார். அவரின் கருதுகோள் என்னவென்றால் சந்தைக்கு பொருட்களை கொண்டுவருபவர்கள் தங்களுடைய பொருட்களுக்கு என்ன விலையை நிர்ணயித்தாலும் இறுதியில் அங்கு இயற்கையான சமநிலையொன்று கொண்டு வரப்படும் என்கிறார். அதாவது அதீத லாபம் வைத்து பொருட்களை ஒருவர் விற்றால் அவரிடம் இருந்து யாரும் பொருட்களை கொள்வனவு செய்ய மாட்டார்கள். மாறாக பொருட்களை மிகக்குறைவான விலைக்கு விற்றால் அப்படி விற்பவரால் செலவை ஈடுசெய்ய முடியாது. ஆகவே சந்தை எப்போதும் ஒரு சமநிலையைப் பேணும். அதனை கட்டுப்படுத்த வேண்டியதில்லை.

அடம் சிமித் சொன்னதை இவ்வாறும் எமது மொழியில் சொல்லலாம்: யார் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை, நான் லாபமீட்டினால் போதும் என்று ஒவ்வொருவரும் செயற்பட்டால் சந்தை இதையெல்லாம் சீராக்கி, சமநிலைக்கு கொண்டுவரும். நடக்கின்ற காரியமா?

ஆடம் சிமித் வாழ்ந்த காலத்துக்கு நூறாண்டுகளுக்குப் பின் கைத்தொழில் புரட்சி முடிவுக் காலகட்டத்தில் பிறந்த கார்ள் மார்க்ஸ் லாபத்தின் கொடுமைகளை உணர்கின்றார். வறுமையில் பிறந்து வறுமையில் வாழ்ந்து வறுமையில் இறந்தவர் அதன் கொடுமையை துல்லியமாக எதிர்வு கூறியும் உள்ளார். அடம் சிமித் இன் மாயக் கைகள் எதையும் வழிநடத்தாது என்பதையும் லாபம் தனிநபர்களை நோக்கி குவியும் என்பதையும் அந்த லாபம் உற்பத்தி சாதனங்களை பெருக்கி அந்த சந்தையையே கட்டுப்படுத்தும் எனபதையும் வியாபார நிறுவனங்களின் வளர்ச்சியை முளையிலேயே அறிந்து இற்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன் பிறந்த கார்ள் மார்ஸ் அன்றே பைசர் போன்ற நிறுவனங்களின் கேடித்தனங்களைச் சுட்டிக்காட்டி இருந்தார்.

இவ்வாறான நிறுவனங்கள் லாபத்திற்காக எதனையும் செய்யும் என்பதை தெளிவுபடுத்தி இருந்தார். இன்று பைசர் தனது லாபத்திற்காக உலக மக்களின் உயிர்களோடு விளையாடிக்கொண்டிருக்கிறது. பைசர் மட்டுமல்ல சில குட்டி ஜம்பவான்களும் தான்.