செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இலங்கை மக்கள் அரசியல் விழிப்படைந்து விட்டார்களா? அல்லது ஏனைய நாடுகளில் மக்கள் முட்டாள்களாகி விட்டார்களா?

(அமெரிக்காவில் நேற்று படுகொலை செய்யப்பட்ட 19 முன்பள்ளி மாணவர்களில் நால்வர்)

இலங்கையில் பெற்றோலும் எரிவாயுவும் இல்லை என்று கியூவில் நிற்க ஆரம்பித்ததும் ‘கோட்டா கோஓ ஹோம்’ என்று போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவிலும் சர்வதேச நாடுகளிலும் கூடிக் கோஷம் எழுப்பினர். ஆனால் பொருளாதார நெருக்கடிக்கான காரணம் எங்கோ இருக்க அவரவர் தங்கள் முரண்பட்ட அரசியல் இலக்குகளுக்காக எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் போராட்டத்தை நெய்யூற்றி வளர்த்துவிட, அது இலங்கையின் 30 பாராளுமன்ற உறுப்பினர்களது வீடுகளைப் பதம்பார்த்தது. பத்து வரையானோர் கொல்லப்பட்டனர். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் அரை நிர்வாணமாக்கப்பட்டனர். அப்படியானால் இலங்கை மக்கள் அரசியல் தெளிவு பெற்றுவிட்டார்கள்? அரசியல் விழிப்படைந்துவிட்டார்களா?

மறுபக்கம் அமெரிக்கா உலகம் முழக்க ஆயதங்களை விதைத்து, யுத்தங்களை உற்பத்தி செய்து அதன் மூலம் கொள்ளை லாபமீட்டுகின்றது. கோவிட் காலத்தில் கூட அமெரிக்கர்கள் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதைப் பற்றி கவலைப்படாமல் துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் வாங்கிக் குவித்தனர். அவ்வளவுக்கு துப்பாக்கிகள் மீது காதல் கொண்ட சமூகம். இரு வாரங்களுக்கு ஒருமுறை பாடசாலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்துவதை வானவேடிக்கை செய்தியாக அறிந்து பழக்கப்படுத்தி விட்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் 250 வரையான துப்பாக்கித் தாக்குதல்கள் பாடசாலைகளில் இடம்பெற்றுள்ளது.

நேற்று மே 24 ரெக்ஸஸ் மாநிலத்தில் 18 வயது இளைஞன் சிறார்கள் கற்கும் பாடசாலை வகுப்பினுள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் பத்து பதினொரு வயதான 19 மாணவர்களும் இரு ஆசிரியர்களும் கொல்லப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கிகள் மீதான கட்டுப்பாட்டை கொண்டு வருவதற்கு ரிப்பப்பிளிக்கன் – குடியரசுக் கட்சியினர் கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பது மட்டுமல்ல ஆசிரியர்களுக்கு துப்பாக்கிகள் வழங்க வேண்டும் என்றும் கோருகின்றனர். இப்பின்னணியில் கவனர் கிரேக் அப்போட் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திக் கொண்டிருக்க பெற்ரோ ஓ ரொர்க், கவனருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டவர், மாநிலத் தலைவர்கள் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராகக் எதுவும் செய்யவில்லை என்று சத்தமிட்டார். அதற்குப் பதிலாக சத்தமிட்ட அப்பகுதியின் மேயர் டொன் மக்லவ்லின் “நீ ஒரு வருத்தம் பிடித்தவன் பெட்டை நாய்க்குப் பிறந்தவன்” என்று சத்தமிட்டதுடன் அவனைப் பிடித்து வெளியேற்றும்படியும் உத்தரவிட்டார். இத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டும் அதற்கு முதல் வாரம் பத்துப்பேர் இனவெறியனொருவனால் கொல்லப்பட்டும் யாரும் யாருடைய வீட்டையும் எரிக்கவும் இல்லை. யாரும் யாரையும் அரை நிர்வாணமாக்கவும் இல்லை.

இங்கு பிரித்தானியாவில் கோவிட் காலத்தின் ஒரு மூன்றுமாத காலாண்டில் பெற்ற 200 பில்லியன் பவுண் கடனில் பத்துவீதம் 20 பில்லியன் பவுண் பிரித்தானிய பிரதமர் பொறிஸ்ஜோன்சனின் சகபாடிகளுக்கு லஞ்சமாக, ஊழலாக, மோசடியாக வழங்கப்பட்டது. தினம் தினம் நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் கோவிட் காரணமாக பிரித்தானிய மக்கள் உயிரிழந்துகொண்டிருக்கையில் மரணப்படுக்கையில் உள்ளவரை இரத்த உறவுகள் கூட அருகிருந்து வழியனுப்பி வைக்க முடியாமல், நாட்டை முடக்கி வைத்திருந்தார் பிரதமர் பொறிஸ்ஜோன்சன். ஆனால் அந்த முடக்கத்தின் போது மகாராணியின் கணவர் பிலிப்பின் மரணத்தின் போது கூட ஒன்றல்ல இரண்டல்ல இருபது வரையான லொக்டவுன் பட்டிகளை பிரதமரின் உத்தியோகபூர்வமான வாஸஸ் தலமான 10 டவுனிங் ஸரீற்றில் பொறிஸ் ஜோன்சன் கொண்டாடி கூத்தடித்துள்ளார். இதனை எழுதும் போது கூட பிரித்தானியாவில் சராசரியாக 200 பேர்வரை கோவிட் காரணமாக இறந்துகொண்டுள்ளனர். ஆனால் பிரித்தானியாவில் கொன்சவேடிவ் கட்சியினர் இன்னமும் கோர்ட்டும் சூட்டும் போட்டு தினாவெட்டாகத் தான் திரிகிறார்கள். யாரும் யாருடைய வீட்டையும் எரிக்கவும் இல்லை. யாரும் யாரையும் நிர்வாணமாக்கவும் இல்லை.

பிலிப்பைன்ஸில் மிக மூர்க்கத்தனமாக லஞ்சம், ஊழல், போதைவஸ்து பாவனையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிரபலமான ஜனாதிபதி ரொட்றிகோ டுரர்ரே இம்மாதம் முற்பகுதியில் இடம்பெற்ற தேர்தலில் லஞ்சம், ஊழலுக்கு பெயர்பெற்ற தம்பதிகளின் மகனிடம் பதவியைக் கையளிக்க வேண்டியதாயிற்று. இத்தேர்தலில் லஞம், ஊழல், மோசடிக்கு பெயர் போன பேர்டினன்ட் – இமெல்டா மார்க்கோஸ் தம்பதிகளின் புதல்வன் பொங்பொங் மார்க்கோஸ் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையினதும் சர்வதேசத்தினதும் சூழல் இலங்கை மக்கள் அரசியல் விழிப்படைந்து விட்டார்களா? அல்லது ஏனைய நாடுகளில் மக்கள் முட்டாள்களாகி விட்டார்களா? என்ற குழப்பத்தையே தருகின்றது.

அமெரிக்காவின் தொடக்க பள்ளியில் துப்பாக்கி சூடு – 19 சிறுவர்கள் பலி !

அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளி, வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் துப்பாக்கி சூடு நடக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்க வரலாற்றில் பள்ளியில் மோசமான துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டெக்சாஸ் மாகாணம் உவால்டே நகரில் தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இப்பள்ளியில் வாலிபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர் திடீரென்று அங்கிருந்த மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதனால் மாணவர்கள் அலறியடித்தபடி ஓடினார்கள். துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

அதேபோல் ஆசிரியர்கள் சிலரும் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசார் பள்ளியை சுற்றிவளைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் பள்ளிக்குள் நுழைந்து வாலிபரை பிடிக்க முயற்சித்தனர். அப்போது போலீசார் துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலியானார்.

வாலிபர் நடத்திய கொடூர துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு ஆசிரியர் உள்பட 2 பேர் பலியானார்கள். படுகாயம் அடைந்த மாணவர்கள் பலரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி முன்பு பெற்றோர்கள் குவிந்தனர். உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் கதறி அழுதது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. பள்ளிக்குள் இருந்த மாணவர்களை போலீசார் வெளியே அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் அப்பகுதியை சேர்ந்த சால்வடார் ராமோஸ் என்பது தெரியவந்தது. 18 வயதான இவர் தனது பாட்டியை வீட்டில் வைத்து கொலை செய்துவிட்டு பின்னர் தொடக்கப்பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்.

துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரின் மற்ற விபரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் பற்றி தெரியவில்லை. பலியான மாணவர்கள் 5 முதல் 11 வயதுக்குட்பட்டவர்கள் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு: தன்னிறைவுப் பொருளாதாரமா? திறந்த பொருளாதாரக் கொள்கையா?: மாணவர் பட்டி மன்றம்

இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தன்னிறைவுப் பொருளாதாரத்திற்கு மாற வேண்டுமா? இல்லையேல் திறந்த பொருளாதாரக் கொள்கையையே கடைப்பிடிக்க வேண்டுமா என்ற தலைப்பில் லிற்றில் எய்ட் மாணவர்கள் பட்டிமன்றம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். மே 25 பிற்பகல் 2:30 மணிக்கு கிளிநnhச்சி திருநகர் கனகராசா வீதியில் உள்ள லிற்றில் எய்ட் மண்டபத்தில் இப்பட்டி மன்றத்தோடு கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட லிற்றில் எய்ட் சஞ்சிகை பற்றிய விமர்சனமும் நடனம், குழுப்பாடல், தனிப்பாடல் என்பனவும் இந்நிகழ்வில் இடம்பெறவுள்ளது.

அரசியல்வாதிகளும், பல்கலைக்கழகங்களும் கூட நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு பற்றி சிந்திக்காத சூழலில் உயர்தரம் கற்கின்ற மாணவர்களின் இந்தக் கன்னி முயற்சி நிச்சயம் மற்றையவர்களையும் இவ்வாறான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் சிந்திக்கவும் தூண்டும் என லிற்றில் எய்ட் அமைப்பின் ஸ்தாபகர் த ஜெயபாலன் தெரிவிக்கின்றார்.

சமூக விழிப்புணர்வு விடயங்களில் ஆர்வம்காட்டி வரும் லிற்றில் எய்ட் மாணவர்கள் கற்றலுடன் நின்றுவிடாமல் தமிழ் பிரதேசங்களில் தலைதூக்கிவரும் சமூகப் பிரச்சினைகளிலும் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் இளவயது திருமணங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகம் ஒன்றும் மேடையேறவுள்ளது. வீதிகளில் வேகத்தை கடைப் பிடிக்கக் கோரும் விழிப்புணர்வுப் நடவடிக்கைகளிலும் லிற்றில் எய்ட் மாணவர்கள் அண்மையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு கணணி தொழில்நுட்பவினைஞரான செல்வி தி குகாயினி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கின்றார். பெண்கள் தொழில்நுட்பத்துறையில் கால்பதிப்பது அரிதானதொரு சூழலில் இவர் அத்துறையில் ஊன்றிப் பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் காலங்களில் மாணவர்கள் கல்விக்கு அப்பால் பல்திறமைகைளயும் வளர்த்துக்கொண்டு தங்கள் ஆளுமைகளை விருத்தி செய்வதனூடாக மட்டுமே தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும் எனத் தெரிவிக்கும் லிற்றில் எய்ட் இயக்குநர் ஹம்சகௌரி சிவஜோதி, லிற்றில் எய்ட மாணவர்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் மீது அக்கறையோடு செயற்படுவது தனக்கும் லிற்றில் எய்ட்க்கும் பெருமை சேர்ப்பதாக தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

லிற்றில் எய்ட் நிர்வாகமும் மாணவர்களும் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோமோ அதனை அவர்கள் திறம்படச் செய்வது தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக லிற்றில் எய்ட் அமைப்பின் தலைவர் கதிர் நந்தகுமரன் தெரிவிக்கின்றார். அவர் தேசம்நெற்க்கு மேலும் தெரிவிக்கையில் சமூகம் சார்ந்த செயற்பாடுகள் அருகி வருகின்ற சூழலில் இவ்வாறான விவாதங்கள், சமூக விழ்ப்புணர்வு நாடகங்கள், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் ஆடல், பாடல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இவை பரவலாக பலரையும் இவ்வாறு செய்யத் தூண்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அண்மையில் லிற்றில் எய்ட் நிறுவனத்தைச் சுற்றியுள்ள கிராமத்தவர்கள் பயன்பெறும் வகையில் லிற்றில் நூலகம் அமரர் இராசமணி பாக்கியநாதனின் ஞாபகார்த்தமாக அவருடைய மகன் சிறிகுமார் பாக்கியநாதன் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்து வளரும் தலைமுறையினருக்கான ஊக்கத்தை வழங்குமாறு லிற்றில் எய்ட் மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜோ பைடன் உள்ளிட்ட 963 அமெரிக்கர்களுக்கு எதிராக ரஷ்யா பயணத்தடை !

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட 963 அமெரிக்கர்களுக்கு எதிராக ரஷ்யா பயணத்தடை விதித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 88 நாளாகிறது.

போர் தொடங்கிய நாள் முதல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் இராணுவ தளபாடங்களை வழங்கி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக உக்ரைன் நாட்டின் படை வலிமையை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டிற்கு 4,000 கோடி டொலர் நிதியுதவி வழங்கும் மசோதாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பம் இட்டுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளால் ரஷ்யா அமெரிக்காவுடன் மோதல் போக்கை கையாண்டு வருவதுடன், தற்போது ஜோ பைடன், வெளியுறவுத் துறை அமைச்சர் அன்டனி பிளிங்கன் உட்பட 963 அமெரிக்கர்களுக்கு எதிராக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்ரேலியா நாடாளுமன்ற தேர்தல் – இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ்பெண் வெற்றி!

அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூர்வீகத்தை கொண்ட மிஷேல் ஆனந்தராஜா பாராளுமன்ற உறுப்பினராக தெரிந்தெடுக்கப்ட்டுள்ளார்.

 

இவர் தெல்லிப்பளையை சேர்ந்த பெற்றோருக்கு தென் ஆபிரிக்காவில் பிறந்து UK ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர். இவரின் பூர்வீகம், குடும்ப விபரம் என்பன தேர்தல் முடியும் வரை மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும் பல பத்திரிகைகள் இவரின் பெயரை வைத்து இவர் ஒரு இந்தியர் என்று கூறி வந்தன.

இவர் ஒரு மருத்துவராகவும் மருத்துவ ஆராய்ச்சியாளராகவும்  கடமை புரிந்து வந்துள்ளார்.

இலங்கையின் நிலை ஏனைய நாடுகளுக்கும் ஏற்படலாம் – எச்சரிக்கிறது சர்வதேச நாணய நிதியம்!

அரசாங்கங்கள் வறிய மக்களிற்கு உதவமுன்வராவிட்டால் இலங்கையின் நிலை உலகின் ஏனைய நாடுகளில் உருவாகலாம் என சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எச்சரித்துள்ளார்.

உணவு எரிபொருட்களின் விலைகளை மானிய அளவில் சமூகத்தின் வறிய மக்களிற்கு அரசாங்கங்கள் வழங்கவேண்டும்,அரசாங்கங்களின் உரிய ஆதரவு இல்லாவிட்டால் இலங்கையின் நிலை ஏனையநாடுகளில் உருவாகலாம்.

உலகம் முழுவதும் வாழ்க்கை செலவு அதிகரிப்பால் மக்கள் நெருக்கடியில் சிக்குண்டுள்ளனர்.
மக்களிற்கு அவசியமான உதவிகளை மிகவும் தெரிவுசெய்யப்பட்ட முறையில் வழங்கவேண்டும் மானியங்களை மக்களிற்கு நேரடியாக வழங்கவேண்டும்.

மேலும் வாழ்க்கை செலவு தொடர்பில் இரண்டு முன்னுரிமைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் ஒன்று சமூகத்தின் வறிய மக்கள் – அவர்களே உணவு, எரிபொருள் விலை அதிகரிப்பினால் தற்போது நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முன்னுரிமை உக்ரைன் யுத்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட வர்த்தகங்களிற்கு வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டு !

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு அவர் தனி விமானத்தில் பறந்தபோது அங்கு இருந்த பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டார் என்று பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதையடுத்து அந்த தவறை மறைப்பதற்காக 2018-ஆம் ஆண்டு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 1.93 கோடி ரூபாய் தொகையும் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியை எலான் மஸ்க் மறுத்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது:-
நாம் கருத்து சுதந்திரம் பற்றி பேசி வருகிறேன். அதில் ஒருபகுதியாக பைடன் அரசாங்கத்தையும் விமர்சித்து வருகிறேன். இதனால் என்மீது அரசியல் ரீதியான தாகுதல்கள் தொடங்கப்பட்டுள்ளன.  ஆனால் இந்த அவதூறுகள் எல்லாம் என்னை சிறந்த எதிர்காலத்திற்காக போராடுவதில் இருந்தும், சுதந்திர பேச்சு உரிமை குறித்து பேசுவதில் இருந்தும் தடுக்க முடியாது.
எழுதி வைத்துகொள்ளுங்கள். என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மை இல்லை.
இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உதவுவதாக ஜி7 நாடுகள் அறிவிப்பு – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்பு !

கடன் நிவாரணத்தைப் பெறுவதற்கு இலங்கைக்கு உதவுவதாக ஜி7 நாடுகள் அறிவித்துள்ளதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றுள்ளார்.

இலங்கையுடன் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஈடுபாடு பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு முக்கியமானது என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக G7 நிதித் தலைவர்கள் நேற்று ஜேர்மனியில் நடைபெற்ற கூட்டத்தின் வரைவு அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

பிரித்தானியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் !

பிரித்தானியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக பிரித்தானிய தேசிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 2022 நிலவரப்படி பிரித்தானியாவின் நுகர்வோர் விலை குறியீடு, 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. அங்கு கடந்த 12 மாதங்களில் மின்சார கட்டணங்கள் விலை உயர்வு 53.5 சதவீதமாகவும், எரிவாயு விலை 95.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

மின்சாரம், எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிப்பால் கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளியியல் நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர் கிராண்ட் பிட்ஸ்னர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் உயர்ந்து வரும் இந்த பணவீக்கத்தின் காரணமாக குறைந்த வருமானத்தை உடைய குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வேகமெடுக்கும் குரங்கு அம்மை தொற்று – பாலியல் ரீதியாக பரவலாம் என எச்சரிக்கை !

பிரிட்டனில் கடந்த வாரம் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. ஆப்ரிக்காவில் இருந்து திரும்பியவர்களிடம் இருந்து இந்த நோய் பரவியிருக்கலாம் என கூறப்பட்டது.
இதை தொடர்ந்து இந்த நோய் ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் பரவி 40க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது.
மாட்ரிட்டில் மட்டும் 23 பேருக்கு இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் கனடாவில் இருந்து திரும்பியதாக கூறப்படுகிறது.
ஆப்ரிக்காவில் ஏற்படும் நோயான இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பரவி வருவது குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இந்த நோய் அதிக அளவில் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இது பாலியல் ரீதியாக பரவலாம் என கூறப்படுகிறது. நோயினால் பாதிக்கப்பட்டோர் பயன்படுத்திய பொருட்களை உபயோகிப்பதன் மூலம் பரவலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.