செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ரஷ்ய விமானம் இடைநிறுத்தப்பட்ட சம்பவம் – அமெரிக்காவை திருப்திப்படுத்த முனைகிறதா ரணில் தரப்பு..?

நேற்றைய தினம் இலங்கை ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்ட முக்கியமான விடயம் ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான நிறுவனத்தின் விமானத்தை இலங்கை இடைநிறுத்தியிருந்த விடயமாகும். அடுத்தடுத்த சர்வதேச ஊடகங்கள் கூட இது தொடர்பில் செய்திகளை அதிகம் வெளியிட்டிருந்தன.

2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் திகதி இலங்கையில் விமான சேவையை ஆரம்பித்த ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் எட்டு மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.

குத்தகை நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 2ஆம் திகதி, ரஷ்ய விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு 16 ஆம் திகதி வரை அமுலில் உள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சு மொஸ்கோவிற்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகேவை வரவழைத்து விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமைக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் உதவியை இலங்கை முன்னதாக எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ரணில் விக்கிரமசிங்கவின் வருகையுடன் சர்வதேசநாணய நிதியத்தையும் – மேற்கத்திய நாடுகளையும் மையப்படுத்திய வகையில் இலங்கை நகர ஆரமப்பித்துள்ளதன் எதிரொலியாகவே இந்த சம்பவத்தை பார்க்க முடிகிறது. ரஷ்ய எதிர்ப்பு கொள்கையை பின்பற்றி மேற்கத்திய – முக்கியமாக அமெரிக்க – பிரித்தானிய நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள இலங்கை நகர்வது போல தோன்றுகிறது.

இந்த வருடம்  மகிந்த பிரதமராக இருந்த போது ரஷ்ய – உக்ரைன் விவகாரம் தொடர்பில் எந்த பக்கமான முடிவையும் எங்களால் எடுக்க முடியாது என இலங்கை குறிப்பிட்டிருந்ததது.இந்த நிலையில் ரணில் பிரேமதாசவின் வருகையை தொடர்ந்து ரஷ்யாவுடனான நட்பு நிலை மேலும் விரிசல் நிலையை எட்டியுள்ளது.

எரிபொருள் உதவி முன்னதாக கோரப்பட்ட நிலையில் அது தொடர்பில் இன்று பேச்சே இல்லை. இதனை அண்மையில் ஜே.வி.பி சுட்டிக்காட்டியிருந்ததது. இதன் அடுத்த கட்டமாக ரஷ்யவிமானம் இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த போக்கு தொடருமாயின் ரஷ்யாவுடனான உறவு வெளியுறவுக்கொள்ளை மிக வேகமாக பாதிக்கப்படவாய்ப்புள்ள அதே நேரம்  தீவிரமாக இலங்கை மேற்கத்திய நாடுகளுக்கு வளைந்து கொடுப்பதானது இலங்கை அமெரிக்காவி்ன் கைப்பொம்மை ஆவதற்கான இன்னும் கூடுதல் வாய்ப்புக்களை ஏற்படுத்தும். சர்வதேச நாணய நிதியம் – உலக வங்கி போன்றவற்றின் கடன்கள் பிரச்சினைகளை தீரப்பது போல தோன்றினாலும் அவை அப்படி இல்லை.  இன்னுமொரு கிரீஸ் ஆக இலங்கை மாறிவிடும் என பல தரப்பினரும் எச்சரித்தும் வருகின்றனர்.

 

 

சிவ அல்ல ‘சுய’புராணம்: வெற்றி பெறுவதால் பெறும் மகிழ்ச்சி நிரந்தரமற்றது. ஆனால் மகிழ்ச்சியாக இருந்தால் நீங்கள் வெற்றிபெற முடியும்!

தமிழ் சமூகம் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்குகின்ற சமூகமாகவே இருக்கின்றது. ஆனாலும் தமிழ் சமூகத்தில் கல்விபற்றிய புரிதல் என்பது மிகக் கீழ்நிலையிலேயே உள்ளது. இந்தக் கல்விக்காக எமது பிள்ளைகள், குடும்பங்கள் கொடுக்கின்றவிலை மிகக் கனதியானது. அதன் உச்சமாக சிலர் தங்களையே அழித்துக்கொண்டும் உள்ளனர். பல குடும்பங்கள் தங்கள் சந்தோசத்தையே இழந்தும் உள்ளனர். பலர் எதிர்காலத்தையும் இழந்துள்ளனர். ஒரு சேட்டிபிக்கற் எடுப்பதற்காக.

இந்தப் பதிவை இடுவதற்கு நான் ஒரு கால்நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. எனது கொள்கைகள், எனது இலட்சியங்கள், எனது எழுத்துக்கள் உட்பட என்னையே உரசிப்பார்த்து மதிப்பிடும் ஒரு தருணம். அந்த நாளும் வந்தது.

ஆயிரத்து தொழாயிரத்து எண்பதுக்களில் எங்களுக்கு இன்ரநெற் மட்டும் இல்லாமல் இல்லை. இன்றைய மதிப்பீட்டில் அத்தியவசிய தேவைகளே இருக்கவில்லை. தொலைபேசியில்லை. மின்சாரம் இல்லை அதையொட்டிய எந்த சாதனங்களும் இல்லை. கொம்பியூட்டரல்ல, ரீவியைப் பார்ப்பதே அதிசயம். ‘அடாது மழை பெய்தாலும் விடாது காண்பிக்கப்படும்’ என்று சொல்லி சிவராத்திரியில் தான் படம் ஓடியகாலம். தகவல் என்பது மிக மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் பொய்யான செய்திகள் நிலையாத காலம். எமது தலைமுறையில் தாயகத்தில் உயிர்வாழ்தல் என்பதுகூட ஒரு காலத்தில் விளையாட்டுத்தான். ஹர்த்தால், கடையடைப்பு, யுத்தம் என்று பாடசாலைகள் மூடப்பட அல்லது செயழிழக்க தனியார் கல்வி நிலையங்கள் பரவ ஆரம்பித்த காலம். பலதிக்கும் சென்று வேரூன்றினார்கள்.

இப்போது தொண்ணுறுக்களின் நடுப்பகுதியல் இளம் குடும்பஸ்தர்களாக வாழ்க்கையை ஆரம்பித்த காலம். எமது பிள்ளைகளுக்கு எதை வழங்குவது? பிள்ளையை என்னவாக ஆக்குவது? இலெவன் பிளஸ் – ’11+’? ரியுசன்? எந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது? கிரம்மர் ஸ்கூல் – grammer school? ப்ரைவேட் ஸ்கூல் – private school? தமிழ் படிப்பிப்பதா? இதுக்கு மேல், நடனம், சங்கீதம், … கிரிக்கட்? புட்போல்? எல்லாமே பிரச்சினையாக இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு மத்தியில் அகதி வாழ்வின் அடுத்த படியாக எமது மெலனியம் தலைமுறையினர் பிறந்தனர்.

எங்களுக்கு பிள்ளைகள் பிறக்க முன்னரேயே அவர்களுடைய வாழ்வை இப்படித்தான் அமைத்துக்கொடுப்போம் என்ற ஒரு திட்டம் இருந்தது. அன்றைய வாழ்க்கைத்துணையும் அதே புரிதலிலேயே இருந்தார். பிள்ளைகளை இயல்பாக அவர்களுடைய சுதந்திரத்துடன் வளரவிடுவது, நாங்கள் வழிகாட்டிகள் மட்டுமே. முடிவுகளை அவர்களையே எடுக்க அனுமதிப்பது. சமயம் பற்றி அக்கறைகொள்வதில்லை. 11 பிளஸ் (இலங்கையில் புலமைப்பரிசில் பரீட்சை போன்றதொரு பரீட்சை) பற்றியெல்லாம் அக்கறையெடுப்பதில்லை. அவர்களது குழந்தைப் பருவத்தை குழந்தைகளாகவே இருக்க அனுமதிப்பது. ஓரளவுக்கு தரமான வீட்டுக்கு அருகில் உள்ள அரச பள்ளியில் அவர்களைச் சேர்ப்பது. உயர்தரம் வரை தனியார் கல்விக்கு அனுப்புவதில்லை.

மேலும் எனக்கு எத்தனை பிள்ளைகள் பிறந்தாலும் அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு குறித்த வயது வந்ததும் எனது நண்பன் கந்தையா ரவீந்திரனிடம் தற்காப்பு கலைப் பயிற்சிக்கு அனுப்புவது. எமது பிள்ளைகள் அனைவரும் பல்கலைக்கழகம் செல்வார்கள் என்பதும் எமது தெளிவான முடிவாக இருந்தது. என்ன படிக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். அவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை காதலிக்கவும் திருமணம் செய்யவும் அவர்களுக்கு எவ்வித தடையும் கிடையாது. ஆனால் அவர்கள் பட்டிப்படிப்பை முடித்து கார் வாங்குதற்கு முன் வீடொன்றை வாங்கிக்கொண்டு திருமணம் செய்துகொள்ளலாம்.

இவ்வாறான ஒரு எண்ணத்துக்கு மத்தியில் தான் எனக்கு மூன்று குழந்தைகளும் பிறந்தனர். மேடு பள்ளங்களுக்கூடாக வாழ்க்கைச் சக்கரம் ஓடி இப்போது மூத்த மகன் 21 வயதில் நிற்கின்றான். நான் முப்பது ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த பருவம். இப்போது 30 ஆண்டுகள் கடந்து எனது கொள்கைகள், எனது இலட்சியங்கள், எனது எழுத்துக்கள் உட்பட என்னையே உரசிப்பார்த்து மதிப்பிடும் ஒரு தருணம்.

11 பிளஸ் பரீட்சையில் வெற்றிபெற கருத்தரித்தவுடனேயே நல்ல ஆசிரியரிடம் ஆங்கிலம் கணிதம் படிக்க பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் கைதேர்ந்த ஆசிரியரிடம் இடம் கிடைக்காது. இடம் கிடைத்து படிக்க ஆரம்பித்தால் வாரதித்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 15 முதல் 25 பவுண்கள். கணிதமும் ஆங்கிலமும் வாரத்திற்கு நாற்பது பவுண் வருடத்திற்கு இரண்டாயிரம் பவுண்களுக்கு மேல். ஐந்து வருடத்திற்கு பத்தாயிரம் பவுண்கள். அதைவிட ஆங்கிலத்தில் மேதையாக்குவதற்கு ‘குமோன் – Kumon’. அது 12 மாதங்கள் அதற்கு ஆயிரம் பவுண். கணிதத்தில் மேதையாக்குவதற்கு ‘அபகஸ் – Abacus’, அதில் 12 மட்டங்கள் ஒவ்வொரு மட்டத்திற்கும் ஐந்து மாதங்கள். ‘அபகாஸ் – Abacus’ முடித்து வர ஆறு வருடங்கள் ஆறாயிரம் பவுண். ஆக மொத்தத்தில் 11 பிளஸ் பரீட்சையில் தோற்றும் சராசரிப் பெற்றார் மொத்தமாக பதினாராயிரம் பவுண்களை செலவிழிக்கின்றனர்.

ஆனால் இந்த வகுப்புகள் என்ன சூமிலா நடக்கும். பிள்ளைகளை நேரடியாக அந்ததந்த இடங்களுக்கு கூட்டிச்சென்று இறக்க வேண்டும். அவர்களுக்கு வகுப்பு முடியும் வரை காத்துக்கிடக்க வேண்டும். இதற்காக வாரத்திற்கு 5 மணித்தியாலங்கள் என்று பார்த்தால் ஜந்து ஆண்டுகளுக்கு 1300 மணிநேரங்களைச் செலவிடுகின்றனர். இதற்கு பிரித்தானியாவின் குறைந்த சம்பள வீதத்தை போட்டுப் பார்த்தால் கூட பத்தாயிரம் பவுண்கள். பெற்றோல் செலவை விட்டால் கூட ஒரு பிள்ளையின் 11 பிளஸ் பரீட்சையின் செலவீனம் 25,000 பவுண்கள். ஒரு குடும்பத்தில் குறைந்தது இரு பிள்ளைகள் என்று கணக்குப் பார்த்தால் ஐம்பதிணாயிரம் பவுண். ஒருவர் பல்கைல்கழகம் சென்று பட்டப்படிப்பை முடிப்பதற்கும் இவ்வளவு செலவேயாகும்.

பெற்றோர் இப்பரீட்சைகளுக்ககாக ஒரு குழந்தைக்கு இருப்தியயையாயிரம் பவுண்களைச் செலவிடுவது ஒரு பிரயோசனமற்ற முதலீடே. மாறாக அவர்கள் இவ்வளவு பணத்தை அவர்களுடைய சேமிப்பில் போட்டிருந்தால் மிகக்கூடுதல் பயனைப்பெற்றிருப்பதுடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையையும் அனுபவித்து இருக்கலாம்.

மேலும் தீவிர கல்வி அழுத்தங்கள் பிள்ளைகளில் மிகக் கடுமையான காயங்களை உண்டுபண்ணுகின்றது. பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான நிரந்தர இடைவெளியை ஏற்படுத்துகின்றது. கல்வியின் மீது சில பிள்ளைகளுக்கு நிரந்தரமான வெறுப்பையும் ஏற்படுத்துகின்றது. மேலும் சுயமான தேடலையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்வதற்கு மாறாக; ஊட்டப்படும், திணிக்கப்படும் கல்வி பிள்ளைகளின் ஆளுமையை முளையிலேயே கருக்கிவிடுகின்றது. பால்போத்தலில் ஊட்டுவது போல் கல்வியூட்டப்பட்ட சில பிள்ளைகள் பல்கலைக்கழகங்களில் திணறுகின்றனர். பெற்றோர் சுற்றத்தாரினால் திணிக்கப்பட்ட எதிர்பார்ப்புகளை புர்த்தி செய்ய முடியாத பிள்ளைகள், பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டுவரை சென்று; இறுதியில் தற்கொலை செய்து கொண்டனர். இவ்வாறான தற்கொலைகள் தமிழ் சமூகத்தில் இன்னமும் தொடர்கின்றது. இவை குடும்பங்களுக்குள்ளும் நிம்மதியை இழக்கச்செய்து ஒரு நிம்மதியற்ற குடும்பச் சூழலுக்குள் எமது மெலனியம் குழந்தைகளை வளர நிர்ப்பந்திக்கிறது.

ஆனால் ஆய்வுகள் என்ன சொல்கின்றது என்றால் இந்த 11 பிளஸ் பரீட்சைக்கும் பிள்ளைகளின் எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கும் தொடர்பில்லை என்கிறது. தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் இப்பரீட்சைகளை இல்லாமலாக்கும் எனக்கு குறிப்பிட்டு இருந்தது. உலகத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் அதேசமயம் மகிழ்ச்சியான சிறுவர்களைக் கொண்ட ஸ்கன்டிநேவிய நாடுகள் பிள்ளைகளை ஆறுவயதுவரைக்கும் பள்ளிக்கு அனுப்புவதில்லை. ஒரு ஆசிரியனாக பலநூறு மாணவர்களின் பெறுபேறுகளை எனக்கு ஆராயும் வாய்ப்பு உள்ளது. அதன்படி பார்ததிலும் அவர்கள் ஆரம்பப்;பள்ளிகளில் பெற்ற பெறுபேறுகளுக்கும் இடைநிலைப் பள்ளிகளில் பெறும் பெறுபேறுகளுக்கும் சில சமயம் எவ்வித சம்பந்தமும் இருப்பதில்லை. உண்மையென்னவெனில்; இந்த அதீத கல்வித் திணிப்பைச் செய்யாவிட்டாலும் கூட அம்மாணவர்கள் தங்கள் எதிர்காலக் கல்வியில் வெற்றிபெற்றிருப்பதுடன் மிகவும் சந்தோசமானவர்களாகவும் இருந்திருப்பார்கள். அதுவே என் அனுபவமும் கூட.

எனது பிள்ளைகள் 11 பிளஸ்க்கு ரியுசன் போகவில்லை. அதைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. வீட்டுக்கு அருகில் உள்ள அரச பாடசாலைகளுக்கே சென்றனர். உயர்தர வகுப்பிற்குக்கூட சில நண்பர்களே கற்பித்தனர். தனியார் கல்வியில் தங்கியிருக்கவில்லை. எனது நண்பன் கந்தையா ரவீந்திரனிடம் மூவரும் தற்காப்புக் கலைப் பயிற்சி பெற்று முத்தவர்கள் இருவரும் கறுப்புப்பட்டியும் பெற்றுவிட்டனர். எனது அரசியல் மற்றும் நிலைப்பாடுகளால் எனது பிள்ளைகள் பழிவாங்கப்படலாம் என்பதால் அன்றைய நாட்களில் நான் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பவில்லை. ஆனால் என்னுடைய பிள்ளைகள் நாங்கள் ஆங்கிலத்தில் கேட்டாலும் பதிலை தங்களுக்குத் தெரிந்த தமிழில் தான் சொல்வார்கள். எங்களோடு ஆங்கிலத்தில் அவர்களுக்கு கதைக்க வராது.

மூத்தவன் கர்ணன் தற்போது பொருளியில் துறையில் முதல் தரத்தில் சித்தியடைந்து தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு உடனடியாகவே வேலையும் எடுத்துக்கொண்டான். நான் ரியூஷனுக்கு விடாமல் எனது பிள்ளைகளது கல்வியையும் பாழடிக்கிறேன் என்ற விமர்சனங்கள் அன்று ஏராளம் இருந்தது. சிலர் என்னை குற்றவுணர்வுக்குள் தள்ளியதும் உண்டு. கர்ணன் சதாராண தரப் பரீட்சையிலோ உயர்தரப் பரீட்சையிலோ எல்லாப் பாடங்களிலும் அதீத சித்திகளைப் பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் சராசரி அல்லது சராசரியிலும் குறைவான பெறுபேறுகளையே பெற்றான். அவை பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் பல்கைலக்கழகத்தில் அவனால் சாதிக்க முடியும் என்ற ஊக்கத்தை அழித்தேன். அவனது முன்னேற்றத்தில் தான் எனது வெற்றியும் என்னைப் பற்றிய மதிப்பீடும் தங்கி இருந்தது. அவன் பட்டப்படிப்பில் தவறி இருந்தாலும் நாங்கள் துவண்டுவிடக்கூடாது எதற்காகவும் சந்தோசத்தை தொலைத்துவிடக்கூடாது என்ற உணர்வு எனக்குள் இருந்தது. ஒரு போதும் எதிர்காலத்தை எண்ணிப் பயந்து நிகழ்கால சந்தோசத்தை தொலைத்துவிடக் கூடாது என்பது எனது அனுபவப்பாடம்.

இந்த சமயத்தில் எம்மோடு கர்ணணின் கல்வியில் அவனின் வளர்ச்சியில் அக்கறைகொண்டிருந்த பலருக்கும் என் நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். குறிப்பாக என் பால்ய நண்பன் சிவக்குமார் லண்டனில் அவனது முதலாவது மாணவன் கர்ணன். நண்பன் கந்தையா ரவீந்திரன், நண்பன் டேவிட் நோபல் – வலிந்து இழுத்துவைத்து கற்பித்தவர், ரவி சுந்தரலிங்கம், எல்கின்ஸ், சோதிலிங்கத்தின் மகள் வர்சி இவர்களோடு எனக்கு தந்தையாக நண்பனாக இருக்கும் செல்வராஜா குடும்பத்தினர் அனைவருக்கும் என் நன்றிகள்.

நான் எனது பிள்ளைகளின் கல்விக்கு என்று பெரிய அளவில் பணத்தையோ நேரத்தையோ செலவழிக்கவில்லை. தன்னார்வக் கல்வியிலேயே நான் எப்போதும் நம்பிக்கையுடையவனாக இருக்கிறேன். ஆசிரியர்கள் கற்கின்றவரிலும் பார்க்க சற்று அதிகம் குறிப்பிட்ட விடயத்தில் அறிவுடையவர்கள் (more knowledgeable than others) அவ்வளவுதான். எப்படிக் கற்பது என்று வழிகாட்டுவதே எமது கடமை. சந்தேகங்களைத் தீர்த்து வைக்கலாம். கற்றல் கற்பித்தல் என்பது பால்போத்தலில் போர்மியுளா மில்க் ஊட்டி புஸ்டியாக்குவதல்ல.

பிள்ளைகளை விடுமுறையில் வசதிக்கு ஏற்ப வெவ்வேறு இடங்களுக்கு கூட்டிச் செல்லுங்கள். மியூசியங்கள், கண்காட்சியகங்கள், பல்தரப்பட்ட நிகழ்வுகளுக்கும் கூட்டிச்செல்லுங்கள். பரந்த விரிந்த உலகைப் பார்க்க வையுங்கள். பிள்ளைகளுடன் உரையாடுங்கள், விவாதியுங்கள், குடும்ப முடிவுகளை பிள்ளைகளையும் உட்படுத்தி எடுங்கள். பெற்றோராக தந்தையாக மட்டுமல்லாமல் நல்ல நண்பராகவும் இருங்கள். நாங்கள் இணைந்து தண்ணியும் அடிப்போம். அவர்கள் யாரில் கண் வைத்திருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். நான் யாரில் கண் வைத்திருக்கிறேன் என்பதும் அவர்களுக்குத் தெரியும். எல்லோருக்கும் எல்லோரது எல்லைகளும் தெரியும்.

ரஷ்யா – உக்ரைன் யுத்தம் பற்றி நான் எழுதிய கட்டுரையை கூகிள் உதவியோடு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து படித்துவிட்டு கர்ணன் என்மீது ஒரு மணி நேரத்திற்கு மேல் விமர்சனம் வைத்தான். இருமணி நேரம் விவாதித்தோம். மனஉளைச்சல் என்பது ஒரு தெரிவு என்று இரண்டாவது மகன் இன்னொருநாள் விவாதத்தைத் தொடங்கினான். மூவரும் ஒன்றரை மணிநேரம் விவாதித்தோம். நாங்கள் மூவருமே உடன்பட மறுப்பதற்கு உடன்பட்டு விவாதத்தை முடிப்போம். அவர்களுடைய விவாதத்திற்குள் என்னால் சிலசமயம் ஈடுகொடுக்க முடியாமல் இருப்பதையிட்டு மிகப் பெருமைப்படுகின்றேன்.

வாழ்வுக்கான பாதையை நீங்கள் திட்டமிடாவிட்டால் தோல்விக்கான பாதையை நீங்கள் தெரிவு செய்துவிட்டீர்கள் என்பதே அர்த்தம். அதற்காக திட்டங்கள் நூறுவீதம் திட்டமிட்டபடி நடக்கும் என்று எண்ணிவிட வேண்டாம். எனது மூத்தமகனுக்கு பத்துவயதாக இருக்கும் போதே நானும் துணைவியும் எமது மணவுறவை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டோம். ஆனால் அதன் தாக்கம் எங்கள் இருவரையும் தாண்டி பிள்ளைகளைப் பாதிக்காதவாறு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டோம்.

நாங்கள் சேர்ந்து வாழ்கின்றோமோ, பிரிந்து வாழ்கின்றோமோ, வாழ்க்கை என்பது மிகவும் அழகானது. அதன் ஒவ்வொரு திருப்பு முனைகளும் சுவாரஸியமானது. வலிகளும் வேதனைகளும் துயரங்களும் நிரந்தரமானவை அல்ல. மகிழ்ச்சியும், கொண்டாட்டங்களும் வெற்றிகளும் போல். அதுவும் கடந்து போகும். ஆனால் வாழ்க்கையை சற்றுத்தள்ளியிருந்து ரசிக்க ஆரம்பித்தால் அதன் சுவையே தனி. மகிழ்ச்சி வெளியே இருந்து வருவதில்லை. மற்றவர்கள் தருவதுமில்லை. அது எம்மிடமே இருக்கின்றது.

எதற்காகவும் மகிழ்ச்சியை விலைகொடுக்காதீர்கள்.

வெற்றி பெறுவதால் பெறும் மகிழ்ச்சி நிரந்தரமற்றது.

ஆனால் மகிழ்ச்சியாக இருந்தால் நீங்கள் வெற்றிபெற முடியும்.

ரஷ்ய விமானம் இலங்கையில் தடுக்கப்பட்ட விவகாரம் – ரஷ்யா விமான நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு !

எயார்பஸ் A330 விமானம் கட்டுநாயக்கவில் தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து, ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் இலங்கைக்கான விமானங்களை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது.

தடையில்லாமல் விமான சேவை இடம்பெறும் என்பதில் நம்பிக்கை இல்லை என்பதனால் இலங்கைக்கான சேவைகளையும் டிக்கெட் விற்பனையையும் இடை நிறுத்துவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி ஜூன் 2, 4 மற்றும் 5 திகதிகளில் கொழும்பில் இருந்து மொஸ்கோவிற்குத் திரும்பும் பயணிகள் ஜூன் 4 மற்றும் ஜூன் 5 ஆம் திகதிகளில் புறப்படும் விமானங்கள் மூலம் நாடு திரும்பலாம் என்றும் அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் திகதி இலங்கையில் விமான சேவையை ஆரம்பித்த ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் எட்டு மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.

குத்தகை நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 2ஆம் திகதி, ரஷ்ய விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு 16 ஆம் திகதி வரை அமுலில் உள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சு மொஸ்கோவிற்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகேவை வரவழைத்து விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமைக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

உலகை அச்சுறுத்தும் குரங்கு அம்மை நோய் – 26 நாடுகளில் தீவிர பரவல் !

உள்ளூர் தொற்று இல்லாத 26 நாடுகளில் 643 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒட்டு மொத்தமாக பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 643-ல் இருந்து 650 ஆக அதிகரித்துள்ளது. இது மே 13-ந் திகதி தொடங்கி ஜூன் 1-ந் திகதி வரையிலான நிலவரம் ஆகும்.

இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசர நிலை திட்ட தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறும்போது, “உள்ளூர் தொற்று இல்லாத 26 நாடுகளில் குரங்கு அம்மை பரவி உள்ளது. இங்கிலாந்தில் 190 பேரும், ஸ்பெயினில் 142 பேரும், போர்ச்சுக்கலில் 119 பேரும், ஜெர்மனியில் 44 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

மேலும் தற்போது உலகம் முழுவதும் குரங்கு அம்மை பரவுகிற அபாயத்தை தொற்று நோய் நிபுணர்கள் மதிப்பிட வேண்டும். வைரஸ் மரபணுவை ஆய்வுசெய்து, வாய்ப்பு உள்ள பிறழ்வுகளைக் கண்காணிப்பதற்கு அதை வரிசைப்படுத்த வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

உலக நாடுகள் எதிர்கொள்ளும் உணவு பிரச்சினைக்கு மேற்கத்திய நாடுகளே காரணம் – புடின் குற்றச்சாட்டு !

ரஷ்யா, உக்ரைன் போர் 100வது நாளை தாண்டிய நிலையில், இரு நாடுகளில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளன. இதற்கு ரஷ்யாதான் காரணம் என மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் வளர்ந்து வரு உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகளுக்கு மேற்கத்திய நாடுகள்தான் காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,
உலக உணவு சந்தையில் என்ன நடக்கிறது என்பதையும், அது சந்தித்து வரும் பிரச்சனைகளையும் ரஷ்யாவின் மீது திருப்புவதை காண முடிகிறது. மேலும், ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் உலகச் சந்தைகளை மோசமாக்குவதுடன், உற்பத்தியை குறைத்து விலைகளை உயர்த்துகின்றன.
உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை ரஷ்யா தடுக்கவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகள் உணவு பிரச்சனைகளுக்கு ரஷ்யாவை குற்றம்சாட்டி வருகின்றன. உக்ரைனில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதையை வழங்குவதற்கான சலுகைகளை தனது அரசாங்கம் வழங்கும். ” இவ்வாறு புதின் கூறினார்.

உக்ரைனுக்கு ஆயுத உதவி – ஆனால் உள்நாட்டு துப்பாக்கி கலாச்சாரம் பற்றி பைடன் கவலை !

அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் 24ம் திகதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே பகுதியில்  தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இது அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை கலாச்சாரம் கவலை அளிக்கிறது. துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.
முடியவில்லை என்றால் நாம் அதற்கான வயதை உயர்த்த வேண்டும். ஒருவர் துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்கலாம். அதிக திறன் கொண்ட துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும். பாதுகாப்பு சட்டங்களை வலுப்படுத்த வேண்டும், துப்பாக்கி உற்பத்தியாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
இது யாருடைய உரிமையையும் பறிப்பதற்காக அல்ல.  நமது குழந்தைகளை, குடும்பத்தினரை, சமூகத்தினரை பாதுகாப்பதற்காகத்தான். பள்ளிகளுக்கு, தேவாலயங்களுக்கு, கடைகளுக்கு செல்வதற்கான நமது சுதந்திரத்தை பாதுகாப்பதற்காகத்தான்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதே நேரம் பைடன் தலைமையிலான அரசாங்கம் அமெரிக்காவினுடைய காலாதிகாலமான ரஷ்ய எதிர்ப்பு  கொள்ளைக்கு மேலும் வலுச்சேர்க்கும் முகமாக உக்ரைனுக்கு தொடர்ச்சியாக ஆயுத வசதிகளை செய்து வருவதுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை அமெரிக்கா வழங்குவது அந்த நாட்டினுடைய போலியான அமைதிவிரும்பும் விம்பத்தையே காட்டுகிறது.
அமெரிக்கா வெளி நாடுகளில்  எல்லா விதமான அராஜாகங்களையும் அரங்கேற்றிக்கொண்டு தன் நாட்டில் மட்டும் அமைதியை விரும்புகின்றது.

அவுஸ்திரேலிய அமைச்சரவையில் வரலாற்றில் முதன்முறையாக 2 முஸ்லீம் அமைச்சர்கள்!

அவுஸ்திரேலியாவில் கடந்த மாதம் 21-ந் திகதி நடந்து முடிந்த பொது தேர்தலில் ஸ்காட் மோரிசன் தலைமையிலான ஆளும் தாராளவாத கட்சியை வீழ்த்தி எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தோணி அல்பானீஸ் புதிய பிரதமராக பதவி ஏற்றார்.

இந்த நிலையில் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான புதிய மந்திரிசபை நேற்று பதவி ஏற்றது. தலைநகர் கான்பெர்ராவில் உள்ள அரசு இல்லத்தில் நடைபெற்ற விழாவில் புதிய மந்திரிகள் 30 பேருக்கு கவர்னர் ஜெனரல் டேவிட் ஹர்லி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான மந்திரிசபையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 30 பேரை கொண்ட மந்திரி சபையில் 13 பேர் பெண்கள் ஆவர். அவுஸ்திரேலியா வரலாற்றில் மந்திரி சபையில் பெண்கள் அதிக அளவில் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.

கடந்த ஆட்சியில் 7 பெண்கள் மட்டுமே மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தனர். அதேபோல் வரலாற்றில் முதல் முறையாக 2 முஸ்லிம்களும், பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் மந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுப்பற்ற யாழ் பல்கலை முன்னாள் துணைவேந்தரின் பொறுப்பற்ற உரை!!!

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள்துணைவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளை இலங்கையின் இன்றைய பொருளாதார நிலை பற்றிய உரையில் மிகத் தவறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். “பிரித்தானியா எங்கள் நாட்டைச் சுரண்டவில்லை” என்றும் “தங்களது நாட்டில் உள்ள முதலீட்டைக் கொண்டு வந்தனர்” என்றும் உண்மைக்குப் புறம்பாக பொது மேடையில் பேசியுள்ளார். பெருந்தோட்டச் செய்கை குடியான பயிர்ச்செய்கை என இரு பெரும் பொருளாதாரங்களை எங்களுக்கு விட்டுச் சென்றனர் என்றும் பிரச்சினையில் இருந்த குடியானவர் பயிர்ச் செய்கைக்கும் பெரிய குளங்களைக் கட்டியும் திருத்தியும் சென்றதாகக் குறிப்பிடுகின்றார்.

பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரு முறை 1996 முதல் 2003 வரை பணியாற்றியவர். இருந்தாலும் பேராசிரியர் சண்முகலிங்கள் காலம் வரை நிலவிய அசாதாரண நிலைகாரணமாக துணைவேந்தர்கள் சில மாதங்களே நீடித்தால் 2011 வரையான உத்தியோகபூர்வமாற்ற அதிகாரம் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளையிடமே இருந்தது.

1974 முதல் கல்வியின் மகுடமாக சிறந்து விளங்கிய யாழ் பல்கலைக்கழகம் பொன் பாலசுந்தரம் பிள்ளையின் காலத்தில் தான் அதன் கீழ்நிலைக்கு வீழ்ச்சியடைந்தது. இதன் வெளிக்கொணரும் வகையில் “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பல்கலைக்கழகம் அல்ல பள்ளிக்கூடம்” என்ற தலைப்பில் தேசம்நெற் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகம் பற்றி தான் எழுதிய கட்டுரைகளை தொகுத்து “யாழ் பல்கலைக்கழகம் ஒரு பார்வை” என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியிடப்பட்டது.

பொறுப்பான மனிதர்கள் பொறுப்பான இடங்களில் அமர்த்தப்பட வேண்டும். பொறுப்பற்ற மனிதர்கள் பொறுப்பான பதவிகளில் அமர்த்தப்படுவது சீரழிவுக்கே இட்டுச்செல்லும். ஒரு பேராசிரியர் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எவ்வித அடிப்படையும் இல்லாமல் எழுந்தமானமாக உரையாற்றினால் அரசியல் வாதிகளிடம் எதனை எதிர்பார்க்க முடியும். இந்தியாவையும் இலங்கையையும் கைப்பற்றி அதிகாரத்திற்கு உட்படுத்தியது ஈஸ்ற் இந்திய கொம்பனி என்ற முற்றிலும் லாபநோக்கத்தோடு செயற்பட்ட தனியார் நிறுவனம். அவர்கள் மூலதனத்தை பிரித்தானியாவில் இருந்து கொண்டுவந்து இந்தியாவையும் இலங்கையையும் அபிவிருத்தி செய்ய வரவில்லை. கொள்ளையடிக்கவே வந்தனர். இந்தியாவை விட்டுச் செல்லும் போது இந்தியாவில் இருந்து 45 ரில்லியன் டொலர்களை கொள்ளையிட்டுச் சென்றதாக 2021இல் பிரித்தானியாவின் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள கிளாஸ்கோவில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி மிகக் கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார்.

பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை ஒரு புவியியல் துறை பேராசிரியர். இவர் சொல்கின்றார் குடிசனப் பயிர்ச்செய்கையை வலுப்படுத்த பிரித்தானிய ராஜ்யம் குளங்களைக் கட்டியும் திருத்தியும் கொடுத்தது என்று. இலங்கையில் கட்டிய குளங்கள் குடிசனப் பயிர்ச்செய்கையை விருத்தி செய்ய இலங்கை மன்னர்களால் கட்டப்பட்டது. பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளைக்கு இது புரியாவிட்டால் காலம்சென்ற முன்னாள் பிரித்தானிய பிரதமர் மார்கிரட் தட்சர் இலங்கைப் பாராளுமன்றத்தில் இலங்கையின் குளங்கள் பற்றி 1979இல் ஆற்றிய உரையில் 2000 ஆண்டுகளுக்கு முன் இலங்கையின் நீர்ப்பாசனத்திட்டம் ஐரோப்பாவை விடச் சிறந்ததாக இருந்ததைச் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான பொறுப்பற்ற பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை எப்போதும் அறிவுமட்டத்தில் பலவீனமான தனக்கு அடங்கிப் போகக்கூடியவர்களையும் தனக்கு சலாம் போடக்கூடியவர்களையும் பொறுப்பான பதவிகளில் நியமித்தார். இவருக்கு பணிந்து போபவர்களுக்கு முற்றிலும் சுதந்திரம் வழங்கப்பட்டது. அதனாலேயே யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் இவருடைய காலத்தில் மிக வீழ்ச்சிகண்டது. பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்தது. பேராசிரியர்கள், விரிவுரையாளர்களின் இச்சைகளுக்கு இணங்காத மாணவிகளுக்கு குறைந்த பெறுபேறுகள் வழங்கப்பட்டது. விசனம் கொண்ட மாணவர்கள் பழிவாங்கப்பட்டனர். ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டனர். ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள முற்பட்டால் “உனக்கு வரம்பு கட்டுவது” பற்றி ஆராய்ச்சி செய்வது தான் சரியாக இருக்கும் என்று திட்டியும் அனுப்பியதாக லண்டனில் இவரிடம் கற்ற ஒரு முன்னாள் யாழ் பல்கலை மாணவன் மிக மனவருத்தத்தோடு தெரிவித்தார்.

பேராசிரியர் பொன் பாலசுந்தரம் பிள்ளையின் காலத்தில் கொழும்பு பல்கலைக்கழகம் 2000மாவது இடத்தில் இருந்த போது யாழ் பல்கலைக்கழகம் உலகத் தரவரிசையில் 10,000மாவது இடத்தில் இருந்தது. இன்று வடமாகாணம் கல்வியில் மிகக் கீழ்நிலையில் உள்ளமைக்கு முக்கிய காரணம் யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வித் தரத்திலும் விழுமியத்திலும் ஏற்பட்ட வீழ்ச்சியே. வடமாகாண பள்ளிகளில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் தயாரிப்புகளே.
பேரசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை தான் பொறுப்பான பதவியில் இருக்கும் போது எவ்வித பொறுப்புமற்று நடந்துவிட்டு இப்போது நாட்டை முன்னேற்றுவது எப்படி, கல்வியை முன்னேற்றுவது எப்படி என்று மேடைகளில் மிகப் பொறுப்பாக தன்னைக் காண்பிக்கின்றார். அதைக்கூட அவரால் சரிவரச் செய்ய முடியவில்லை. ஆனாலும் இவரை லண்டன் வரை அழைத்துக் கூட்டம் போட்ட கனவான்களும் உண்டு. பொறுப்பற்ற மனிதர்களை முன்னுதாரணமாக்கி அவர்களை முன்னிலைப்படுத்துபவர்களும் எதிர்கால சந்ததியினருக்கு அநியாயமே இழைக்கின்றனர். தமிழ் சமூகத்தின் விழுமியங்களை மேலும் கொச்சைப்படுத்துகின்றனர். தன்னை பேச அழைத்தவர்கள் முட்டாள்களாக இருக்க வேண்டும் என்று மதிப்பிட்ட பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை மற்றையவர்களும் முட்டாள்கள் என்று கணித்துவிட்டார் போலும்.

ஆனால் தற்போதைய துணை வேந்தர் பேராசிரியர் எஸ் சற்குணராஜாவின் வரவைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது. தனது பதவியின் பொறுப்புணர்ந்து கருத்துக்களை முன்வைக்கின்றார். Vision தான் முதல் எங்களுடைய (strength) பலம். எங்களுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. எங்களுக்கு ஒரு கலை இருக்கு, அழிவில்லாத மொழி எங்களுக்குஇருக்கு. இன்றைக்கு எங்களுக்கு முழெறடநனபந நிறைய வேணும்” என்கிறார். முரண்பட வேண்டிய இடத்தில் முரண்படவும் துணைவேந்தர் தயங்கவில்லை. தமிழ் அரசியல் தலைவர்களை பிச்சைக்கராரர் என்று முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை ‘கொழும்பு செவன்’ இறக்குமதி என்றும் கடுமையாகச்சாடி உள்ளார். வடக்கு – கிழக்கு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் ஒருவர் இவ்வளவு துணிச்சலாக தனது கருத்தை வெளிப்படுத்தி இருப்பது இதுவே முதற் தடவை. “எங்களுக்கு மார்ட்டின் லூதர் கிங் வேணும். மொரார்ஜி தேசாய் வேணும். மாவோ சேத்துங் வேணும், லெனின் வேணும்” என்று தமிழ் மக்களிடம் சீரான ஒரு அரசியல் தலைமையில்லாத ஆதங்கத்தையும் கொட்டியுள்ளார். தான் பொறுப்பான ஒரு பதவியில் இருந்து எதனைச் செய்ய வேண்டுமோ அதனைச் செய்கின்றார். எதனைச் சொல்ல வேண்டுமோ அதனை அழுத்தம் திருத்தமாக சொல்கின்றார். யாழ் பல்கலைக்கழகம் மீண்டும் தனது முன்னைய சிறப்பை எட்டும் என்ற நம்பிக்கை தற்போது துளிர்விட்டுள்ளது.

மலேசிய வேலைப் பயிற்சி மையத்தை நிறுவ மலேசியா – இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம் !

மலேசியாவில் வேலைவாய்ப்பினை இலக்காகக் கொண்டு ஒரு விசேட பயிற்சி மையத்தை விரைவாக நிறுவுவது தொடர்பில் மலேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை தொழிலாளர் அமைச்சும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டுள்ளன.

தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் இலங்கை, மாலைதீவுக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் டான் யாங் தாய் ஆகியோருக்கு இடையில் அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இது கைச்சாத்திடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு அமைச்சர் நாணயக்கார வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக இருந்த போது இரு நாடுகளுக்கும் இடையில் மலேசியப் பயிற்சி நிலையம் ஒன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அமைச்சர் மற்றும் உயர்ஸ்தானிகர் உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்து உரிய காலத்தில் பயிற்சி நிலையமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கொவிட் -19 தொற்றுநோய்க்குப் பின்னர் மலேசியா புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அதன் கதவுகளைத் திறந்தவுடன் இலங்கை தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குமாறு அமைச்சர் உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார்.

குறிப்பாக உற்பத்தித் துறை வேலைகளுக்கு அதிகளவிலான தொழிலாளர்களை அனுப்புவது குறித்தும், அவர்கள் தொடங்கவிருக்கும் மலேசியப் பயிற்சி மையம் மூலம் விசேட பயிற்சிகளை வழங்குவது தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

மலேசிய தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் குறைந்த பட்ச சம்பளத்தை உள்ளடக்க முடியும் என மலேசிய உயர்ஸ்தானிகர் அமைச்சரிடம் தெரிவித்தார்.

பிரித்தானிய வீரர்கள் உட்பட தினமும் 250 படையினர் கொல்லப்படுகின்றனர்!! உக்ரெய்ன் இன்னுமொரு வன்னி!!!

பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் லிஸ் ரஸ், உக்ரெய்ன்னுக்கு சென்று யுத்தத்தில் ஈடுபடுபவதை தான் ஆதரிப்பதாக அறிவித்ததையடுத்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உக்ரெய்ன் யுத்தத்திற்குச் சென்றுள்ளனர். இவர்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தினமும் உக்ரெயினில் நடைபெறும் யுத்தத்தில் இரு தரப்பிலும் 250 படையினர் கொல்லப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் லிஸ் ரஸ், யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட சில தினங்களிலேயே இந்த அறிவிப்பை வெளிளிட்டார். இதுவரை மரணித்துள்ள 20 பிரித்தானியர்கள் பற்றி பிரித்தானிய பிரதமரோ அமைச்சர்களோ எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.

உக்ரெய்ன் யுத்தத்திற்குச் சென்றவர்களில் பிரித்தானிய இராணுவத்தில் பணிபுரிந்தவர்களும் அடங்குகின்றனர். ஆனால் இவர்கள் யாரும் பிரித்தானிய அரசு அனுமதியோடு சென்றதாகச் சொல்லப்படவில்லை. உக்ரெய்ன் யுத்தத்திற்குச் சென்று அங்குள்ள இராணுவச் செயற்பாடுகளால் விரக்தியடைந்து நாடு திரும்பிய இருவரை பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி இன்று மே 31 நேர்கண்டு ஒளிபரப்பி இருந்தது. இந்நேர்காணல்களைத் தொடர்த்து பிரித்தானிய தொலைக்காட்சி தனது செய்திகளில் உக்ரெய்ன் வெற்றிபெற்று வருவதாக கூறுவதை நேற்றைய தினம் மே 30 முதல் அடக்கி வாசிக்கின்றது.

உக்ரெய்ன் யுத்தத்தில் உக்ரெய்ன் இராணுவத்துடன் சேர்ந்து யுத்தம் புரியச் சென்ற 18 வயதேயான இளைஞர், தங்களுக்கு உறுதியளித்தது போல் எவ்வித ஆயதப் பயிற்சியும் வழங்கப்பட வில்லை என்றும் உக்ரெய்ன் இராணுவத்திடம் எவ்வித இராணுவ ஒழுங்கமைப்புகளும் இருக்கவில்லை என்றும் அடிப்படை பாதுகாப்பு அங்கிகளே தங்களுக்கு தரப்படவில்லை என்றும் தெரிவித்தார். தன்னையும் தன்னைப் போன்ற வேறுநாடுகளில் இருந்தும் இராணுவத்தில் சேர வந்தவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தின் மீது மறுநாள் ரொக்கற் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்த இளைஞன் தெரிவித்தார். இத்தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக உக்ரெய்ன் தெரிவித்து இருந்தபோதும் இதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றும் அதில் நூறுபேர்வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் அவ்விளைஞர் தெரிவித்தார்.

இதே போல் பிரித்தானிய இராணுவத்தில் பணியாற்றிய ஒருவரும் அங்குள்ள நிலைமைகளை கடுமையாக விமர்சித்ததுடன் அங்கு எவ்வித இராணுவ கட்டுப்பாட்டு விதிமுறைகளும் இல்லையென்றும் ஒழுங்கற்ற கும்பலாகவே அவர்கள் இயங்குவதாகவும் அவர்களுடைய தொலைபேசி உரையாடல்களை வைத்தே ரஷ்யா தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். அங்கு யுத்தத்தில் பயிற்சிபெற்ற அனுபவமிக்கவர்களை காணமுடியவில்லை என்றும் பெரும்பாலும் எவ்வித பயிற்சியுமற்ற இளைஞர்களும் ஆர்வத்தால் உந்தப்பட்டவர்களுமே களமுனைகளில் நிற்பதாகத் தெரிவித்தார். மேலும் முன்னைய இளைஞர் குறிப்பிட்டது போல் அடிப்படைப் பாதுகாப்பு அங்கிகள் மற்றும் உணவுக்கே தட்டுப்பாடு நிலவுவதாகவும் சாதாரண மக்கள் இராணுவ நிலைகளை தங்கள் செல்போன்களில் படமெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

நேற்று மே 30 முதல் பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி உக்ரெய்ன் யுத்தம் பற்றிய செய்திகளை வெளியிடுவதில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏப்ரல் பிற்பகுதியில் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இந்தியாவில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் கிழக்கு உக்ரெய்ன் ரஷ்யாவிடம் வீழ்ந்துவிடும் என்ற தொனியிலேயே குறிப்பிட்டு இருந்தார். உக்ரெய்ன் யுத்தத்தில் தோல்வியைத் தழுவலாம் என்றும் கோடிகாட்டி இருந்தார். ஆனால் நாடுதிரும்பியதும் மீண்டும் வீரமுழக்கங்களையே வெளியிட்டார்.

ஆனால் இப்போது உக்ரெய்ன் பற்றி பேசுவதற்கே நேரம் இல்லாத அளவுக்கு பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் குடியும் கும்மாளமும் கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. தான் வரைந்த அமைச்சரவை ஒழுக்கவிதிகள் தனக்கே ஆபத்தாகும் என்றதால் அவற்றை நேற்று மே 30 அழித்துவிட்டார். சூ கிரே இன் சுயாதீன விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து தற்போது பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கட்சியைச் சேர்ந்தவர்களே அவரை பதவி விலகும்படி கோரிக்கை வைக்கின்றனர். இலங்கை ஜனாதிபதி வீட்டிற்கு போவதற்கு முன்னரே பிரித்தானிய பிரதமர் வீட்டிற்குப் போக வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

யுத்தம் என்பது அழிவை ஏற்படுத்தும். யுத்தத்தால் எதனையும் சாதித்துவிட முடிவதில்லை. அமெரிக்கா வியட்நாமில் தொடுத்த யுத்தம், அமெரிக்கா அப்கானிஸ்தானில் தொடுத்த யுத்தம், அமெரிக்கா ஈராக்கில் தொடுத்த யுத்தம், அமெரிக்கா சிரியாவில் தொடுத்த யுத்தம், பிரித்தானியா லிபியாவில் தொடுத்த யுத்தம் இவை எல்லாமே அந்நாடுகளைச் சீரழித்தது மட்டுமல்லாமல் அங்கு யுத்தத்திற்கு வழங்கப்பட்ட ஆயதங்கள் அமெரிக்க, பிரித்தானிய படைகளுக்கு எதிராக திருப்பப்பட்டது மட்டுமல்லாமல் அங்கு பயிற்சி பெற்றவர்கள் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குள்ளளும் ஊடுருவி தாக்குதல்களை நடத்தினர்.

இப்போது ரஷ்யாவுக்கும் உக்ரெயினுக்கும் இடையேயான யுத்தம், படையெடுப்பிற்கு முன்னதாகவே ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையேயான யுத்தமாக மாற்றப்பட்டு விட்டது. பிரித்தானியாவில் இருந்து உக்ரெய்ன் இராணுவத்துடன் இணையச் சென்றவர்களின் தகவல்களின் படி நேட்டோ நாடுகள் வழங்கிய ஆயதங்கள் ஏதும் அவர்களைச் சென்றடைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் நேட்டோ நாடுகளில் உள்ள ஊடகங்களோ தினம் தினம் ஆயதங்கள் அனுப்பப்படுகிறது என்றும் அந்த ஆயதங்களைக் கொண்டு உக்ரெய்ன் ரஷ்ய இராணுவத்தை பின்னடையச் செய்வதாகவும் செய்திகள் வெளியிடுகின்றன. உக்ரெய்ன் ஜனாதிபதி ஸ்லென்ஸ்கி தாங்கள் கிழக்கு உக்ரெய்னின் மரியோபோலை மீண்டும் கைப்பற்றுவோம் என்று குறிப்பிட்ட சில தினங்களிலேயே மரியோபோல் இரும்புத் தொழிற்சாலையில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரெய்ன் இராணுவத்தினர் (இவர்களில் ஒரு பகுதியின் தீவிர வலதுசாரிகள் என்றும் கூறப்படுகின்றது) ரஷ்ய இராணுவத்திடம் சரணடைந்தனர்.

பிரித்தானிய மற்றும் நேட்டோ நாட்டு ஊடகங்கள் உசுப்பிவிட்டதேயல்லாமல் உக்ரெய்னின் நிலைமைகள் மோசமானதாகவே உள்ளது. பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் ஜனாதிபதி ஜோ பைடனும் உள்ளுர் அரசியலில் தங்களைத் தக்கவைக்க உசுப்பிவிட்டதில் உக்ரெய்ன் மிக மோசமான நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவில் இருந்து எரிவாயு, மற்றும் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதை முற்றாக தடை செய்வதாகக் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் இன்று அந்த முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளது. ஜேர்மன் உக்ரெய்ன் க்கு கனரக யுத்த தளபாடங்களை வழங்குவதாக கூறப்பட்டது. அதுவும் தற்போது கைவிடப்பட்டு உள்ளது. அமெரிக்க நெடுந்தூர ஏவகணைகளை வழங்கமாட்டோம் என தற்போது அறிவித்துள்ளது. உசுப்பிவிட்டவர்களை நம்பிய உக்ரெய்ன் இப்போது கடுமையான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரிலும் இந்த நேட்டோ நாடுகளில் வாழ்ந்த புலம்பெயர்ந்த புலிகளின் பிரதிநிதிகள் மிகக் கச்சிதமாக தமிழீழ விடுதலைப் புலிகளை உசுப்பிவிட்டனர். இந்த உசுப்பலால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது என்பதால் அவர்கள் அதனை கச்சிதமாகச் செய்தனர். அங்குள்ள மக்கள் போரின் வலியை அனுபவிக்க வேண்டிவரும் என்று எண்ணம் பெரும்பாலும் வரவில்லை. 2009 ஜனவரியில் இருந்தே தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்து சரணடைவதே ஒரே வழியென்று தேசம்நெற் இல் பல கட்டுரைகள் வெளிவந்தது. மே 17 2009 வரை தமிழீழத்தை நாங்கள் நெருங்கிவிட்டோம் என்று தான் புலிசார் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஒரு சமயத்தில் கட்டுடைக் குளத்தை புலிகள் தகர்த்தால் அந்த வெள்ளத்தில் ஆயிரக் கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இராணுவத்தின் உடல்கள் இறக்கப்படுவதாகவும் செய்திகள் பரப்பப்பட்டது. இதே மாதிரியான செய்திகளை தற்போது பிரித்தானிய ஊடகங்களிலும் கேட்க முடிகின்றது, உக்ரெய்ன் பற்றி.

உக்ரெய்ன் மீது படையெடுப்பதற்கு ரஷ்யாவுக்கு எவ்வதி தார்மீக உரிமையும் கிடையாது. ஆனால் ரஷ்யா படையெடுத்தபின் அழிவை எப்படி குறைத்துக்கொள்ளளலாம் என்பது பற்றி சிந்தித்து செயற்படுவதே உக்ரெய்ன் மக்களுக்கு நன்மையளிக்கும். உசுப்பிவிட்டு தங்கள் தங்கள் நலனை எட்டுவது நேர்மையற்றது. தற்போது உக்ரெய்ன் மிக நீண்ட கால அழிவுக்குள் தள்ளப்பட்டு உள்ளது. உக்ரெய்னுக்குள் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் கொட்டும் ஆயதங்கள் பல்வேறு நாடுகளிலும் செயற்படும் சட்டவிரோதமான ஆயதக் குழக்களிடம் சென்றடையும். உக்ரெய்ன் ஆயதக் கருப்புச் சந்தையின் மையம். இவ்வாயுதங்கள் மீண்டும் தீவிரவாத சக்திகளால் நோட்டோ நாடுகளிலேயே தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுவே கடந்த காலங்களிலும் நடந்தது. இனிமேல் நடக்காது என்பதற்கு எவ்வித உத்தவவாதமும் இல்லை.

நேட்டோ நாடுகளால் குவிக்கப்படும் ஆயதங்கள் உக்ரெய்னில் ஆயுதக் கலாச்சாரம் ஒன்றைத் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கிறது. அங்கு எல்லோரும் விரும்பி ஆயதம் ஏந்தவில்லை. பதினெட்டு வயதிற்கும் நாற்பது வயதிற்கும் உட்பட்டவர்கள் தங்கள் பிரதேசங்களைவிட்டு வெளியேறத் தடைவிதிக்கப்பட்டு கட்டாய ஆட்சேர்ப்பிற்கு உட்படுத்தப்படுகின்றனர். நேட்டோ நாடுகளின் உந்துதலால் ஒரு சிறு பிரிவினர் தொடர்ந்தும் ரஷ்யாவுக்கு எதிரான யுத்தத்தை தொடர்வார்கள். ஆனால் இந்த யுத்தத்தை உக்ரெய்னால் நீண்ட காலத்திற்கு முன்னெடுக்க முடியாது. அதற்கான உள்ளுணர்வையும் ஆட்பலத்தையும் உக்ரெய்ன் இழந்து வருகின்றது.

அதேசமயம் ரஷ்யாவுக்கும் இதுவொரு சிக்கலான பலப்பரீட்சையே. ரஷ்யா தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பிரதேசங்களை நேட்டோ உதவியோடு உக்ரைன் படைகள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தும். இந்த யுத்தம் மிக நீண்ட யுத்தமாக மாறிவருகின்றது என்பதை உணர முடிகின்றது.