வன்னியில் படையினர் தொடர்ந்தும் முன்னேறிவரும் நிலையில் விடுதலைப் புலிகள் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் தாக்குதல்களை நடத்தலாமெனத் தகவல்கள் கிடைத்திருப்பதையடுத்து கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர். அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேடுதல்கள், சுற்றிவளைப்புகள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் கூறுகையில்; ”புலிகளின் தாக்குதல்களைத் தடுப்பதற்காக விசேட பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. புலனாய்வுத் தகவல்களின் படி புலிகள் முக்கிய பிரமுகர்கள் மீதும் முக்கிய கேந்திர நிலைகள் மீதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதையடுத்து முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பாதுகாப்புத் தரப்பினர் படைநடவடிக்கைகளுக்கு சனசமூக நிலையங்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுக்கள், ஆட்டோ சாரதிகள் உதவியும் கோரப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்பை விட இவர்களும் விழிப்புடன் செயற்பட முடியும். பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் சந்தைகள் போன்ற மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.