செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கொழும்பின் கேந்திரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு

check1.jpgவன்னியில் படையினர் தொடர்ந்தும் முன்னேறிவரும் நிலையில் விடுதலைப் புலிகள் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் தாக்குதல்களை நடத்தலாமெனத் தகவல்கள் கிடைத்திருப்பதையடுத்து கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர். அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேடுதல்கள், சுற்றிவளைப்புகள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் கூறுகையில்; ”புலிகளின் தாக்குதல்களைத் தடுப்பதற்காக விசேட பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. புலனாய்வுத் தகவல்களின் படி புலிகள் முக்கிய பிரமுகர்கள் மீதும் முக்கிய கேந்திர நிலைகள் மீதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதையடுத்து முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பாதுகாப்புத் தரப்பினர் படைநடவடிக்கைகளுக்கு சனசமூக நிலையங்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுக்கள், ஆட்டோ சாரதிகள் உதவியும் கோரப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்பை விட இவர்களும் விழிப்புடன் செயற்பட முடியும். பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் சந்தைகள் போன்ற மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை : கா‌ங்‌கிர‌சு‌க்கு ‌கி.‌வீரம‌ணி எ‌ச்ச‌ரி‌க்கை

vmani.jpgஇலங்கை‌த் தமிழர் பிரச்சனையில் தமிழர்களின் உணர்வுகளை மதித்து போரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழக‌த்‌தி‌ல் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவ‌ர் (06) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே சேது கால்வாய் திட்டத்தில் மத்திய அரசு காலதாமதம் செய்து வருவது தமிழக மக்களிடம் மிகுந்த கசப்புணர்வை உருவாக்கி உள்ளது. தற்போது இலங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌‌ச்சனை‌யி‌லு‌ம் போரை நிறுத்துவதற்கு மத்திய அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்காமல் தமிழக சட்ட‌ப்பேரவை‌யி‌ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் அலட்சியப்படுத்துவது தேர்தலில் மிகப்பெரிய விலையை தரவேண்டிய கட்டாயத்தை காங்கிரஸ் கட்சிக்கு உருவாக்கும்.

எனவே இனியாவது இலங்கை‌த் தமிழர் பிரச்சனையை காங்கிரஸ் தலைவர் சோனியா கா‌ந்‌தி தெளிவுடன் புரிந்து செயல்பட வேண்டும் என்று ‌‌‌கி.வீரம‌ணி கேட்டுக்கொண்டா‌ர்.
 
 

சிரச-சக்தி மீது தாக்குதல்: உடன் விசாரணை நடத்துமாறு பொலிஸ் அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு

sirasa-02.jpgசிரச- சக்தி ஊடக வலையமைப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். மேற்படி தாக்குதல் நடைபெற்றதை அறிந்தவுடன் பொலிஸ் மாஅதிபருடன் தொடர்பு கொண்ட ஜனாதிபதி உரிய ஆலோசனைகளை வழங்கியதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இந்தத் தாக்குதலை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பு மகாவலி நிலையத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.  இதற்கு முன்னரும் ஊடகங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்கும், கிளிநொச்சி வெற்றி தொடர்பான கவனத்தை திசை திருப்பவுமே இத்தகைய தாக்குதல் நடத்தப்படுகின்றன என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவங்ச, சிரச ஊடக நிலையத்தின் மீதான தாக்குதலை நாம் கண்டிக்கிறோம். ஆனையிறவு மீட்கப்பட்டது தொடர்பாக பேசப்படுகையிலே சிரச ஊடகம் மீதான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புலிகளுக்கு எதிராக ஈட்டப்படும் வெற்றிகள் குறித்து பேசப்படுவதை திசைதிருப்புவதே தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளின் நோக்கமாக உள்ளது என்றார்.

அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார கூறியதாவது:- இந்தத் தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது கீழ்த்தரமான செயலாகும். இதனுடன் தொடர்புடையவர் யார் என்பது வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றார். இதேவேளை, இந்தத்தாக்குதல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, இந்தத் தாக்குதலை சு. க. கடுமையாக கண்டிப்பதாகவும் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது.

இ‌ந்‌தியா‌வி‌ல் ‌தீ‌விரவா‌திகளு‌க்கு இட‌ம் இ‌ல்லை: ‌சித‌ம்பர‌ம்

cidam.jpgஇ‌ந்‌தியா‌வி‌‌ல் ‌தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம் பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌ம் இட‌ம் இ‌ல்லை எ‌ன்று உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ‌சித‌ம்பர‌ம் எ‌ச்ச‌ரி‌த்தா‌ர். அ‌ஸ்ஸா‌மி‌ல் கு‌ண்டு வெடி‌ப்புகளு‌க்கு‌ப் ‌பிறகு ‌நிலவு‌ம் சூ‌ழ்‌நிலை கு‌றி‌த்து இர‌ண்டாவது நாளாக (06) ஆலோசனை நட‌த்‌திய அமை‌ச்ச‌ர் ‌சித‌ம்பர‌ம் குவஹா‌ட்டி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், ஒருமை‌ப்பா‌ட்டி‌ற்கு‌ம் அமை‌தி‌க்கு‌ம் அ‌ச்சுறு‌த்த‌ல் ‌விளை‌வி‌க்கு‌ம் யாரு‌க்கு‌ம் இ‌ங்கு இட‌‌மி‌ல்லை எ‌ன்று எ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.

“நா‌ன் பேசுவதை இ‌ப்போது கே‌ட்டு‌க்கொ‌ண்டிரு‌க்கு‌ம் அ‌ல்லது நாளை ஊடக‌ங்க‌‌ளி‌‌ல் படி‌க்க‌ப்போகு‌ம் தடை செ‌ய்ய‌ப்ப‌ட்ட இய‌க்க‌ங்க‌ளி‌ன் தலைவ‌ர்க‌ள், உடனடியாக‌த் த‌ங்க‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்‌றி‌க்கொ‌ண்டு பே‌ச்சு நட‌த்த மு‌ன்வர வே‌ண்டு‌ம். இ‌ல்லை எ‌ன்றா‌ல் அவ‌ர்களு‌க்கு எ‌திராக‌க் கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம்” எ‌ன்றா‌ர் அவ‌ர்.

மேலு‌ம், இராணுவ‌‌த்‌தின‌ர், துணை இராணுவ‌த்‌தின‌ர், மா‌நில‌க் காவ‌ல்துறை‌யின‌ர் ஆ‌கியோரு‌க்கு, அமை‌தி‌க்கு‌ம் ஒருமை‌ப்பா‌ட்டி‌ற்கு‌ம் அ‌ச்சுறு‌த்தலாக உ‌ள்ளவ‌ர்க‌ளி‌ன் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க‌த் தேவையான உ‌த்தரவுகளு‌ம் அ‌றிவுறு‌த்த‌ல்க‌ளு‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளன எ‌ன்று‌ம் ‌சித‌ம்பர‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர். 
 

கிளிநொச்சி பெற்றோல் விளையும் பூமியல்ல…

anura-priyatharsana.jpgகிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்கள் பெற்றோல் விளையும் பூமியல்ல. அப்படி விளைந்தால், ஐக்கிய தேசிய கட்சி கூறுவதைப்போன்று பெற்றோல் விலையைக் குறைக்க முடியுமென்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கிளிநொச்சியை படையினர் கைப்பற்றிவிட்டதால், இனி பெற்றோல் விலையை அரசாங்கம் குறைக்க வேண்டுமென்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தாரென்றும் இது மிகவும் வேடிக்கையான ஒரு கூற்றாகுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தனவும் கலந்துகொண்டார். “கிளிநொச்சியை நோக்கிய படை நடவடிக்கையை ஐக்கிய தேசிய கட்சியினர் ஏளனப்படுத்தினார்கள். கிளிநொச்சிக்குச் செல்வதாகக் கூறி, மதவாச்சிக்குச் செல்கிறார்கள் என்றும், அலிமங்கடவுக்குச் (ஆணையிறவு) செல்வதாகக் கூறி, பாமன்கடைக்குச் செல்கிறார்கள் என்றும் ஐ.தே.க வினர் கூறினார்கள். ஆனால், இந்த விமர்சனங்களுக்கு மத்தியிலும் படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றினார்கள்” என்றும் அமைச்சர் தெரிவித்தார். விரைவில் முல்லைத்தீவும் கைப்பற்றப்படுமென்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 
 

அரசியல் தீர்வை முன்வைக்க சர்வகட்சிக்குழு தவறினால் அதிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படுமென்கிறார் ஹக்கீம்

hakeem_.jpgசர்வ கட்சி மாநாட்டில் இன்றைய போக்கு நம்பிக்கையூட்டுவதாகத் தெரியவில்லையெனத் தெரிவித்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இம்மாத இறுதிக்குள் அரசியல் தீர்வு யோசனையை முன்வைக்கத் தவறினால் சர்வகட்சி மாநாட்டிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படலாமெனவும் சர்வகட்சி மாநாட்டுக்கு சாம்பிராணி பிடிப்பதில் அர்த்தமில்லையெனவும் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சிக் கூட்டணியின் விசேட ஊடகவியலாளர் மாநாடு  திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற போது கருத்துத் தெரிவிக்கையிலேயே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஊடகவியலாளர்கள் மத்தியில் மேலும் விளக்கமளித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்ததாவது; யுத்த வெற்றியின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வுதேட முடியாது. அதற்குச் சமாந்தரமான நிலையில் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். ஆனால் அரசாங்கம் அதில் ஆர்வம் காட்டுவதாகவே தெரியவில்லை.

சர்வகட்சிக் குழுவின் மீதான நம்பிக்கை தமிழ் பேசும் மக்களுக்கு அற்றுப் போய்விட்டது. இம்மாத இறுதிக்குள் சர்வகட்சி குழு அரசியல் தீர்வை முன்வைக்காவிட்டால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதில் பங்கேற்பது தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டிவரும். ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றரை வருடங்களுக்கு முன்பே சர்வகட்சி மாநாட்டிலிருந்து வெளியேறி விட்டது. ஜே.வி.பி.யோ சர்வகட்சி குழுவை கலைக்கக் கோருகிறது. அரசியல் தீர்வு குறித்து அரசு அலட்சியப் போக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த அடிப்படையில் இந்த அரசு மீது நாம் நம்பிக்கை வைக்க முடியும் எனக் கேட்க விரும்புகிறேன்.

கடந்த இரண்டு தினங்களாக முஸ்லிம்கள் வாழும் கிராமப்புறங்களில் மக்களையும் வர்த்தக நிலையங்களையும் பட்டாசு கொளுத்துமாறு கட்டாயப்படுத்துகின்றனர். தேசப்பற்றை திணிக்க முடியாது. தேசப்பற்று தானாக வரவேண்டும். தமிழ் மக்களின் மனோநிலை குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் கிழக்கில் வாழும் தமிழ்முஸ்லிம் மக்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்தலாம். தமிழ், முஸ்லிம் மக்கள் பலவந்தப்படுத்தப்படுவதை நாம் கடுமையாக ஆட்சேபிக்கிறோம். முஸ்லிம் மக்களிடம் தேசிய உணர்வு உண்டு. அரசு தனது சுயநலனுக்கு மக்கள் மீது எதனையும் திணிக்க முடியாது. இந்த யுத்தமும் யுத்த வெற்றியும் மக்களை துருவப்படுத்தும் போக்காக மாறியுள்ளது. தீவிரவாத சக்திகளின் கைப்பொம்மையாக ஜனாதிபதியும் அவரது அரசும் மாறியுள்ளது. தவறான திசையில் சென்று கொண்டிருக்கும் அரசுக்கெதிராக மக்கள் பேரணியை திரட்ட எதிர்க் கட்சிகள் கூட்டணி தயாராகியுள்ளது. முதலாவது பேரணி  புதன்கிழமை கொழும்பில் இடம்பெறும். இன, மத, மொழி பேதம் மறந்து எமது உரிமைகளை வென்றெடுக்க ஒன்றுபடுமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

கிழக்கில் சுதந்திர வர்த்தக வலயம்: அம்பாறையில் பிராந்திய அலுவலகம்

ftz-srilanka.jpgகிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றை ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சு உருவாக்கவுள்ளதாகவும், இது தொடர்பான பிராந்திய அலுவலகம் அம்பாறையில் திறக்கப்படவுள்ளதாகவும் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் எம். எச். சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார். மாகாண சுதந்திர வர்த்தக வலயத்தை ஆரம்பிப்பதற் காக அரசாங்கம் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. இம் மாகாணத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்குவதற்கும், கைத்தொழில், விவசாயத்துறை உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இவ்வர்த்தக வலயம் ஆரம்பிக்கப்படுகிறது.

இவ்வர்த்தக வலயம் ஊடாக சிவப்பரிசி, அரிசிமா, பச்சை மரக்கறி வகைகள், பழவகைகள், மீன், கருவடு, மட்பாண்ட உற்பத்திகள் என்பவற்றை சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் எனவும் தெரிவித்த அமைச்சர், பெப்ரவரி மாதம் உத்தேச மாகாண வர்த்தக வலயம் செயற்பட ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளிலுள்ள 32,555 கைதிகளில் 4,381 பேர் பாடசாலைக்குச் செல்லாதவர்கள்

handcuff.jpgஇலங் கையிலுள்ள சிறைச்சாலைகளில் 32 ஆயிரத்து 555 கைதிகளில் 4,381 பேர் ஒரு நாளாவது பாடசாலை செல்லாதவர்களாக இருப்பதுடன் 750 பேர் உயர் கல்வி பெற்றவர்களாகவும் அதில் 21 பேர் பட்டதாரிகள் என்றும் தெரியவருகிறது. சிறைச்சாலை ஆணையாளர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; வெலிக்கடை, போகம்பறை , மஹர, முதலான பிரதான சிறைச்சாலைகள் உட்பட ஏனைய அனைத்து சிறைச்சாலைகளுமாக 27 நிறுவனங்களில் 32,555 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுள் 1,014 பேர் பெண்களாவர். இவர்களில் 520 பேர் போதைப் பொருள், தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களாவர். அதிலும் இரு பெண்கள் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆபாசப்படம் எடுத்தவர் பிணையில் விடுவிப்பு

camara.jpgயுவதி ஒருவரை ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட் படுத்தியதுடன், ஆபாசமாகப் படம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட சிங்கள பத்திரிகையின் பிரதேச ஊடகவியலாளர் ஒருவரை மாத்தறை நீதிவான் ஏம்.ஏ.கே. பீரிஸ் 75 ஆயிரம் ரூபா சரீரப்பிணையிலும் 7500ரூபா ரொக்கப் பிணையிலும் செல்ல அனுமதித்தார்.

வெலிகம பே ஹோட்டலில் புதன்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து சந்தேக நபர் யுவதியை மாத்தறை பஸ் நிலையத்தில் கைவிட்டுச் சென்றுள்ளார் என பொலிஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்தயுவதி தனது ஊரான தியகொடைக்குச் சென்று பெற்றோருக்கு விடயத்தைக் கூறி தியகொட பொலிஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

தியகொடை பொலிஸாரும் மாத்தறை பொலிஸாரும் இணைந்து இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டனர் சந்தேக நபரைக் கைதுசெய்தனர். சந்தேக நபர் வெள்ளிக்கிழமை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். மேல் விசாரணையை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் யுவதியை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி அதன் அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

வவுனியா வைத்தியசாலையின் தமிழ் டாக்டர்களுக்கு அனுப்பப்பட்ட அச்சுறுத்தல் கடிதம் குறித்து விசாரணை

வவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 42 தமிழ் வைத்தியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் கடிதம் தொடர்பாக விசாரணைகளை வவுனியா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். அச்சுறுத்தல் கடிதங்கள் தனித்தனியே தமிழ் வைத்தியர்களுடைய முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. குறித்த கடிதப் பிரதிகள் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன.

இதற்கிடையில் பாதுகாப்பின்மை காரணமாக வவுனியாவிலிருந்து வெளியேறிய பெரும்பான்மை வைத்தியர்கள் அனைவரும் மீண்டும் கடமைக்குச் சமுகமளித்துள்ளனர் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது. இவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 60 பொலிசாரைக் கொண்ட குழு ஒன்று 24 மணி நேரமும் வைத்தியசாலை மேல் மாடியில் நிலைகொண்டுள்ளது. பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் தங்கும் விடுதிகளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதான வாசல் உட்பட வைத்தியசாலை வளவிற்குள் செல்லும் சகல வழிகளிலும் பொலிஸார் கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.