செய்திகள்

செய்திகள்

செய்திகள்

புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதானது, எமது நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது – சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்குற்பட்ட 330 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 3ஆம் கடன் தவணை தொடர்பில் ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர்  தெரிவிக்கிறார்.

 

 

 

 

மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இன்று(23) முற்பகல் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பான விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

 

 

 

 

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 4 வருட காலப்பகுதியைக் கொண்ட நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் நாட்டின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக அவர் கூறினார்.

 

 

 

 

இந்த கலந்துரையாடல்களின் பிரதிபலனாக ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீடடர் ப்ரூவர் தெரிவித்தார்.

 

 

 

 

ஊழியர் மட்ட இணக்கப்பாடு தொடர்பான உடன்படிக்கை அங்கீகாரம் பெறுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவம் மற்றும் நிறைவேற்று சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

 

 

 

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடுகளுக்கு அமைய இந்த ஆண்டு ஜூன் மாத இறுதி வரையிலான இலக்குகள் குறிப்பிடத்தக்க அளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், செப்டெம்பர் அளவில் வேலைத்திட்டத்தின் செயற்றிறன் வலுவாகக் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

ஒக்டோபர் மாதத்திற்கு முன்னதாக பெரும்பாலான கட்டமைப்பு ரீதியான இலக்குகள் தாமதத்துடனேனும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கூறினர்.

 

 

 

 

புதிய அரசாங்கத்திற்கான மக்கள் ஆணை, ஊழல் இன்றி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கானது எனவும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இதன்போது வலியுறுத்தினர்.

 

 

 

 

வறிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதெனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

 

 

 

 

நீடிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது தவணையை விடுவிப்பதற்கான மீளாய்வுக்காக கடந்த 17 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திட்ட ஆவணத்தை ஜனாதிபதி அனுர குமார நடைமுறைப்படுத்தவேண்டும் – ரணில் விக்கிரமசிங்க

இந்தியாவும் இலங்கையும் கடந்த வருடம் கைச்சாத்திட்ட ஆவணத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நடைமுறைப்படுத்தவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க பிடிஐக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நானும் பிரதமர் மோடியும் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தில் இரண்டுநாடுகளிற்கும் இடையில் எந்தஎந்த துறைகளில் ஒத்துழைப்பை முன்னெடுக்கவேண்டும் என்பது குறித்து நாங்கள் தெரிவித்துள்ளோம்,திசநாயக்க முன்னோக்கி செயற்படவேண்டும் இதனை நடைமுறைப்படுத்தவேண்டும் என நான் கருதுகின்றேன் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

வடக்கு மாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்தொழில் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது, இன்று (23) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.

வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஊடகப்பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடலில் அண்மையில் புதிதாக கடற்தொழில் அமைச்சராக பதவியேற்றிருக்கும் இராமலிங்கம் சந்திரசேகரன் (Ramalingam Chandrasekar) கலந்து கொண்டிருந்தார் .

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.

இதன் போது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை படிப்படியாக தான் முன்னெடுப்பதாக  மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கு கடற்தொழில் அமைச்சர் உறுதி அளித்தார்.

இதேவேளை, யாழ் . போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம்  நேரில் விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் , வைத்தியசாலையின் சேவை நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு , சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வார் என கடற்தொழில் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையின் வளர்ச்சி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தேவைகளை வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தியிடம் நேரடியாக கேட்டறிந்த அவர், சாதகமான மாற்றங்களை கொண்டுவர சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி, தன்னால் முடிந்த எல்லாவற்றையும் மேற்கொள்ளவதாக உறுதி அளித்தார்.

அத்துடன், சுகாதார அமைச்சர் வைத்தியர்.நளின்த ஜயதிஸ்ஸ விரைவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் இதன்மூலம் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இலங்கையின் எரிசக்தி துறையில் ஏகோபித்த உரிமையை பெறுவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது – வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், உறுதியான திகதி உள்ளிட்ட விடயங்கள் இதுவரையில் இறுதிப்படுத்தப்பட வில்லை. எவ்வாறாயினும், இலங்கையின் பார்வையில் ஜனாதிபதியின் இந்திய விஜயம் மிகவும் முக்கியமானதாகும்.

இதற்கு பிரதான காரணம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் டெல்லி விஜயத்தை ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

இலங்கை – இந்திய இணைப்புத் திட்டங்களை அடிப்படையாக கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து இருதரப்பு பேச்சுக்களில் முக்கிய விடயமாக கருதப்படும்.

குறிப்பாக, ரணிலின் காலத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் ஒப்பந்தம், திருமலை பொருளாதார வலயத் திட்டம், மன்னாரில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் பணியை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்கியமை உட்பட கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி திட்டமும் அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் இந்த ஒப்பந்தங்களை மீளாய்வு செய்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்திருந்தார்.

மேலும் இலங்கையின் எரிசக்தி துறையில் ஏகோபித்த உரிமையை பெறுவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு முன்னர் இவ்வாறான அறிவிப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமையானது இருதரப்பு பேச்சுக்களில் இந்திய முதலீடுகள் தொடர்பில் முக்கியமாக கருத்தில் கொள்ளப்படும் விடயங்களாக இருக்கும்.

மறுபுறம், இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை இந்தியா கடந்த காலத்திலிருந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கு இந்தியாவுக்கு எரிச்சல் ஊட்டும் விடயமாகவே உள்ளது.

இதனாலேயே, இலங்கையுடன் சீனா நெருக்கமாகச் செயற்படுவதற்கும், சீனப் போர்க்கப்பல்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைவதற்கு சீனா அனுமதிப்பதற்கும் இந்தியா எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

2015ஆம் ஆண்டிலிருந்து இந்தியா பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு இத்தகைய எதிர்ப்புகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது. மேலும், சில சந்தர்ப்பங்களில் ஆட்சி மாற்றங்களுக்கு கூட இந்த எதிர்ப்புகள் வழிவகுத்தன.

இதனாலேயே இந்த டிசம்பர் மாதம் வரை சீனக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

எனவே, ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது, சீன விவகாரம் மற்றும் இருதரப்பு இணைப்பு திட்டங்களின் எதிர்காலம் போன்ற தலைப்புகள் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.

அதே போன்று சீன – இந்திய நெருக்கடிகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீண்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூன்று புலம்பெயர் தமிழர்கள் மரணம்!: ஒரு தற்கொலை! ஒரு கொலை! ஒரு விபத்து!  

மூன்று புலம்பெயர் தமிழர்கள் மரணம்!: ஒரு தற்கொலை! ஒரு கொலை! ஒரு விபத்து!

“வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கங்கள் அனுப்பும் நிதி லஞ்சம், ஊழலை வளர்த்துவிடுகின்றது!” வட மாகாண ஆளுநர்

1. தலைநகர் லண்டனின் முக்கிய புகையிரத நிலையங்களில் ஒன்றான இயுஸ்ரன் அன்டர்கிறவுண்ட் ஸ்ரேசனில் 57 வயதான தமிழர் ஒருவர் அண்டர்கிறவுண்ட் ரெயிலில் பாய்ந்து மரணத்தைத் தழுவியுள்ளார். யாழ் இந்துக்கல்லூரியில் 1988 பட்ஜ்ஜில் (batch) கற்ற இவர் லண்டனில் வாழ்ந்தவர். நவம்பர் 19 இரவு 10:30 மணியளவில் லண்டன் இயுஸ்ரன் அண்டகிறவுண்ட் ரெயினில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் அவசர மருத்துவப் பிரிவினரும் விரைந்து வந்த போதும் மரணம் அவ்விடத்திலேயே நிகழ்ந்து விட்டதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். லண்டனில் புகையிரத நிலையங்களில் வீழ்ந்து தற்கொலை செய்கின்ற சம்பவங்கள் நிறையவே நடந்துள்ளன. இன்னமும் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த ஆண்டு லண்டனில் பிரபல ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளரும் புகையிரத நிலையத்தில் மரணித்தது அனைவரும் அறிந்ததே. ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தமிழர்களின் தற்கொலை மரணங்கள் லண்டன் புகையிரத நிலையங்களில் நடப்பது வழமை.

இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்பில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் அதிருப்தி!

நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைவாக உறுப்பினர்கள் நடந்து கொள்வது இன்றியமையாதது என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்(Caffe) தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கேலிக்குரிய வகையில் நடந்து கொள்வதற்காக மக்கள் உறுப்பினர்களை தெரிவு செய்வதில்லை எனவும் அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் இருந்து சுயேச்சைக் குழுவின் கீழ் இவ்வருடம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இராமநாதன் அர்ச்சுனா  முதல் நாளிலேயே சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொண்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதற்கு அவர் பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து பல்வேறு காணொளிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டதுதான் காரணம் என குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இராமநாதன் அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றையும் சமர்ப்பித்துள்ளது.

 

இதேவேளை, நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைய உறுப்பினர்கள் நடந்து கொள்வது இன்றியமையாதது என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இதேவேளை, “10ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய எம்.பி.க்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நவம்பர் 25 முதல் 27 வரை நடைபெற உள்ளது.

பாரம்பரியமாக புதிய நாடாளுமன்றம் தொடங்கும் வேளையில் நடைபெறும் இந்த மூன்று நாள் செயலமர்வில், நாடாளுமன்ற உறுப்பினரின் பங்கு, நாடாளுமன்ற சிறப்புரிமை, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் செயல்முறை, நாடாளுமன்றக் குழு செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் அரசியலமைப்பின் விதிகள், மேலும், மின்னணு வாக்குப்பதிவு முறையைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதற்கான நடைமுறை அமர்வும் நடத்தப்படும்.

தொடர்ந்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தொடர்பான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்“ என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பதுளை – மகியங்கனை வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து – யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

பதுளை – மகியங்கனை வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த, யாழ். இந்துக் கல்லூரியின் 2019 ஆம் ஆண்டு கணிதப்பிரிவு மாணவனான கைலைநாதன் சிந்துஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த முதலாம் திகதி கொழும்பில் இருந்து பதுளைக்கு களப்பயிற்சிக்காகச் சென்று கொண்டிருந்த வேளை பதுளை – மகியங்கனை வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடம் புரண்டதனால் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்திருந்தனர். பேருந்தில் சென்ற சாரதி உட்பட 36 பேர் காயமடைந்திருந்தனர்.

காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் படுகாயமடைந்திருந்த 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

படுகாயமடைந்திருந்த சிந்துஜன் கடந்த வாரம் இரத்மலானையில் அமைந்துள்ள பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், இன்றையதினம் (23-11-2024) அதிகாலை 5:30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக பல லட்சம் டொலர் நாட்டுக்கு வருமானமாக கிடைத்துள்ளது – ஆளுநர் நா.வேதநாயகன்

வடக்கு மாகாண பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக பல லட்சம் டொலர் நாட்டுக்கு வருமானமாக கிடைத்துள்ளது என கூட்டுறவுத் திணைக்களத்தால் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் மீளாய்வுக்கூட்டம் ஆளுநர் செயலகத்தில் நேற்று மாலை 22.11.2024 இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாணத்தில் சில கிராமங்கள் அரசியல் ரீதியாகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் புறக்கணிக்கப்படுகின்றன. அவற்றை அடையாளம் கண்டு முன்னேற்றவேண்டும்.

பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளிட்ட தேவையுடைய மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கும்போது அவர்களுக்கு காணி இல்லை என்பதைக் காரணம் காட்டி வீடுகளை வழங்காமல் விடவேண்டாம். காணிகளை அவர்களுக்கு கண்டறிவதற்குரிய ஒழுங்குகளை நாங்கள் முன்னெடுப்போம்.

கடந்த காலங்களைப்போன்று பனைசார் உற்பத்திப் பொருட்களின் உற்பத்திகளை அதிகரிக்கவேண்டும். குறிப்பாக சில ஆலயங்களில் பின்பற்றப்படுவதைப்போன்று பனைஓலையிலான அர்ச்சனைப் பெட்டிகளை ஊக்குவிக்கவேண்டும், என்றார்.

கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் ந.திருலிங்கநாதன், வடக்கு மாகாண பனை தென்னைவள கூட்டுறவுச் சங்கங்கள் கள்ளை உற்பத்தி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கும், உற்பத்தி வரியாகவும் அரசாங்கத்துக்கு பல மில்லியன் ரூபாவைச் செலுத்தியுள்ளன.

அதேபோன்று 2 தனியார் நிறுவனங்கள், பனை தென்னைவள கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து போத்தல் கள்ளை கொள்வனவு செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் ஊடாக பல லட்சம் டொலரை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்துள்ளன.

கூட்டுறவுத் திணைக்களம் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக சங்கங்களுக்கு 6 சதவீத வட்டிக்கு கடனை வழங்குகின்றன. அதனை அவர்கள் மக்களுக்கு ஆகக்கூடியது 15 சதவீதம் வரைக்கும் வழங்க முடியும்.

ஆனால் வடக்கில் சில சங்கங்கள் வேறு சமாசங்களிடமிருந்து 15 சதவீத வட்டிக்கு கடனைப் பெற்று அவற்றை மக்களுக்கு 21 சதவீதம் வரைக்கும் வழங்குகின்றன. இது வடக்கு கூட்டுறவுத்துறைக்கு சவாலாக இருக்கின்றது, என்றார்.

இதன்போது வடக்கு ஆளுநர், அவ்வாறான நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது எனவும் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் பணித்தார்.

சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் செல்வி அகல்யா செகராஜா, திணைக்களத்தின் பல்வேறு வெற்றிடங்கள் நிரப்பப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் தெரிவித்தார். மேலும் பணிப்பாளர், தம்மிடம் பல்வேறு உதவிகளைக்கோரி மக்கள் வருவதாகவும், ஆனால் தமது எல்லைக்குட்பட்டு அவர்களுக்குரிய உதவிகளைச் செய்ய முடியாத நிலைமை இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவ்வாறானவர்களுக்கு நன்கொடையாளர்களின் தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுத்து உதவிகளைச் செய்யமுடியும் எனவும் அவ்வாறு உதவிகோரி வருபவர்களின் விவரங்களை வழங்குமாறும் ஆளுநர் குறிப்பிட்டார்.

மேலும் வடக்கு மாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில், நலனோம்பு மன்றம் (welfare forum) ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக உதவிகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண பிரதம செயலர் தெரிவித்ததுடன் அதற்கு கௌரவ ஆளுநர் அனுமதி வழங்கினார்.

உள்ளூராட்சி தேர்தல் எப்போது..? – வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்டுள்ள தகவல் !

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி நடத்தப்பட்டது.

இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கல் நிகழ்வும் – யார் எவர் தொகுதி இரண்டு நூல் வெளியீடும்!

லிட்டில் டெக் அக்கடமியின் முன்னாள் பணிப்பாளரும் சமூக ஆளுமையுமான அமரர் வ.சிவஜோதி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு லிட்டில் டெக் அக்கடமியின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் ஞாபகார்த்த நிகழ்வு 23.11.2024 அன்று காலை 9.45 மணிக்கு கிளிநொச்சி, திருநகர், கனகராசா வீதியில் அமைந்துள்ள லிட்டில் டெக் அக்கடமி வளாகத்தில் இடம்பெற்றது.

May be an image of 4 people, people studying and hospital

நிகழ்வுகளுக்கு ஊடகவியலாளரும் லிட்டில் டெக் அக்கடமியின் ஆலோசனைக்குழு உறுப்பினருமான

திரு.மு.தமிழ்செல்வன் அவர்கள் தலைமை தாங்க , சிறப்பு விருந்தினர்களாக சிரேஷ்ட சட்டத்தரணி திரு.சோ.தேவராஜா அவர்களும், சமத்துவக் கட்சி பொதுச்செயலாளர் திரு.மு.சந்திரகுமார் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.

நிகழ்வில் ஆசிச்செய்தியை வழங்கிய திருமறைக்கலாமன்ற இயக்குனர் வண.பிதா ஜோசுவா அவர்கள், சிவஜோதி என்கின்ற ஆளுமையை நான்காவது ஆண்டாக நாம் கொண்டாடும் வகையில் ஓர் வாழ்க்கையை வாழ்ந்து விட்டு சென்றுள்ளார். இந்த ஆண்டு வெளிவரும் யார் எவர் தொகுதி இரண்டு நூலினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் இத்தனை பெரிய ஆளுமைகள் இருக்கிறார்களா என மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். இந்த நூலாக்க முயற்சிக்கு லிட்டில் டெக் அக்கடமியினருக்கு நன்றிகளையும் பாராட்டினையும் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிவஜோதி ஞாபகார்த்த நினைவுப்பேருரையை சிரேஷ்ட சட்டத்தரணியும் மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிபதியுமான சோ. தேவராஜா அவர்கள் வழங்கினார்.

நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்திருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக்கட்சி பொதுச் செயலாளருமான திரு முருகேசு சந்திரகுமார் அவர்கள் “கிளிநொச்சி மாவட்டத்தின் சமகால நிலைமைகள் தொடர்பிலும் – படித்த கிளிநொச்சி மாவட்ட இளைஞர்கள் வெளியேறுவது கவலையளிப்பதாகவும், லிட்டில் டெக் அக்கடமி போன்ற இலவச தொழில் கல்வி நிறுவனங்கள் இந்த இளைஞர்களை மேலும் தன்னம்பிக்கையுடன் உருவாக்குவது ஓரளவு திருப்தியளிப்பதாகவும் தெரிவித்திருந்ததுடன் சிவஜோதி போன்ற ஆளுமையான மனிதர்களை கொண்டாடுவதும் – அவர் பெயரினால் இன்னும் பல ஆளுமைகளை ஆவணப்படுத்துவதும் மகிழ்வளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நிகழ்வுகளின் தொடர்ச்சியாக கிளிநொச்சி மாவட்ட ஆளுமைகளை ஆவணப்படுத்திய “யார் எவர் கிளிநொச்சி தொகுதி 2 ” என்ற நூலும் வெளியீடு செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே கடந்த ஆண்டு 2023 கிளிநொச்சி மாவட்ட ஆளுமைகளை ஆவணப்படுத்திய ”யார் எவர் தொகுதி ஒன்று’ எனும் நூல் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. யார் எவர் தொகுதி இரண்டினை சிவஜோதி அவர்களின் தந்தை திரு.சி.வயித்தீஸ்வரன் அவர்கள் வெளியீடு செய்ய நூலுக்கான வெளியீட்டுரையை ஆசிரியர் திரு.கைலாயநாதன் துஷ்யந்தன் அவர்கள் வழங்கி வைத்தார். வெளியீட்டுரையில் பேசிய துஷ்யந்தன் அவர்கள், காலத்தின் தேவை உணர்ந்து காத்திரமான ஓர் நூலாக்க முயற்சியை லிட்டில் டெக் அக்கடமியினர் மேற்கொள்வது காத்திரமான பணியாகும். இந்த முயற்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் எனவும் நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்கள் என்பதை தாண்டி ஒவ்வொரு ஆளுமையினதும் தொடர்பிலக்கம், முகவரி ஆகியவற்றை பதிவு செய்துள்ளமையானது உலகின் எப்பாகத்திலும் இருந்து கிளிநொச்சி மாவட்ட ஆளுமைகளுடன் தொடர்பு கொள்ள வசதியை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சமூக மாற்றத்திற்காக இயங்கி கொண்டிருக்கும் ஓர் சமூக ஆளுமை கௌரவிக்கப்பட்டு அவருக்கான “சிவஜோதி ஞாபகார்த்த விருது” வருடாவருடம் லிட்டில் டெக் அக்கடமியில் வழங்கப்பட்டு வருகிறது.
சிவஜோதி ஞாபகார்த்த விருது 2021இல் யாழ் பல்கலைக்கழக நாடக நெறியாளரும் அரங்காற்றுகை அமைப்பாளருமான எஸ் ரி குமரனுக்கு அவரது கலைப்பணிக்காக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2022 விருது நாடகக் கலைஞரும் சினிமாக் கலைஞருமான பார்வதி சிவபாதம் அவர்களுக்கு அவருடைய கலைப் பயணத்தை கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு 2023 விருது கல்விப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து, தன்னுடைய பாடசாலையை உயர்நிலைக்கு கொண்டுவந்து, இலங்கையின் முன்மாதரியான பாடசாலைகளில் ஒன்றாக்கியமைக்காக, கிளி விவேகானந்த வித்தியாலய அதிபர் ஜெயாலக்ஸ்மி மாணிக்கவாசகனுக்கு வழங்கப்பட்டது. விருதுத் தொகை 1,50,000 ரூபாய் பாடசாலையின் இனியத்தை மறுசீரமைக்க வழங்கப்பட்டது. இவ்வாண்டு விருதுக்குரிய மையப்பொருளாக தேசிய நல்லிணக்கம் தேர்வு செய்யப்பட்டது. இந்த அடிப்படையில் இந்த ஆண்டு 2024க்கான சிவஜோதி ஞாபகார்த்த விருதும், அதனுடன் கூடியதான ரூபா ஒரு லட்சம் பணப்பரிசும் வணக்கத்துக்குரிய சுனேத்த தேரோ அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. விருதினை பெற்றுக்கொண்ட வணக்கத்துக்குரிய சுனேத்த தேரோ அவர்கள் பேசிய போது ” லிட்டில் டெக் அக்கடமியின் உருவாக்குனர் திரு.த. ஜெயபாலன் அவர்களுடனான நட்பின் வெளிப்பாடாக இந்த நிகழ்வுக்கு நான் வருகை தந்திருந்தேன். ஆனாலும் விருது வழங்கப்பட்டது மகிழ்வளிப்பதுடன் ஓர் மாற்றமான சமூகத்தை படைக்க லிட்டில் டெக் அக்கடமியினர் இயங்குவதை நிரூபித்துள்ளது. இனப்பிரச்சினைகள் – மதப்பிரச்சினைகள் இல்லாத ஓர் நாட்டை உருவாக்க நாம் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வுகளின் இறுதியில் லிட்டில் டெக் அக்கடமியின் உதவிப்பணிப்பாளர் பாலசிங்கம் கஜீபன் ஏற்புரையை வழங்க, திருமதி கம்சகௌரி அவர்கள் நன்றியுரையை வழங்கி நிகழ்வுகளை நிறைவு செய்தார். ஏறத்தாழ நூற்றி ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்த நூல் வெளியீட்டு விழாவில் மேடையேற்றப்பட்ட சண் நாடக குழுவினரின் “முட்டை” நாடகம் பலருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.