செய்திகள்

செய்திகள்

செய்திகள்

நுளம்பு பரவும் சூழலுடன் காணப்படும் உரிமையாளர் மீது கடும் சட்ட நடவடிக்கை

nimal-siriiii.jpgநுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருக்கும் காணி, வீட்டு உரிமையாளர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இத்தண்டனை தண்டப்பணமாக மட்டுமன்றி சிறைத் தண்டனையாகவும் இருக்குமெனவும் எச்சரித்துள்ளார்.

அத்துடன், உங்கள் வீட்டிலுள்ள நுளம்பு உங்களுக்கு கடித்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு. நாம் அந்தப் பொறுப்பை ஏற்க முடியாதென்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற நுளம்பு பரவலைத் தடுக்கும் கட்டளைச் சட்டப் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

நுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய சோதனைகளில் ஈடுபடும் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.  நுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள், காணி உரிமையாளர்களுக்குத் தண்டம் விதிக்கப்படும். இது குற்றத்தின் அளவைப் பொறுத்து சிறைத்தண்டனை வரை அதிகரிக்கும்.

மலேரியா நோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை சாதனை படைத்துள்ளது. கடந்த வருடம் 640 பேரே இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 500 பேர் வன்னியிலுள்ள படையினராவர். விரைவில் மலேரியாவை முற்றாக ஒழித்து விடுவோம். டெங்கு, சிக்குன்குன்யா நோய்கள் ஒரேவகை நுளம்பினாலேயே பரவுகின்றன. இலங்கையில் தற்போது டெங்கு நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு 2004 ஆம் ஆண்டு டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோர் தொகை 1,540 ஆக இருந்தது. இது முறையே 2005 இல் 820 பேரும் 2006 இல் 16, 972 பேரும் 2007 இல் 7,320 பேரும் 2008 இல் 6,431 பேரும் 2009 இல் இன்றுவரை 3,864 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நகரமயமாக்கல், காலநிலை மாற்றம், நுளம்புகளின் பரம்பல் அதிகரித்தல் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள துவாரத்தினால் வெப்ப நிலை அதிகரிப்பு மற்றும் மாற்றங்களினாலேயே இந்நோய்கள் ஏற்படுகின்றன. இது இலங்கைக்கு மட்டும் உரிய பிரச்சினையல்ல. முழு உலகத்துக்குமுள்ள பிரச்சினை. இதனை வெற்றி கொள்ள மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் “போதையற்ற வாழ்வு’ ஓவியப் போட்டி

jaffna-map.jpgவட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் “போதையற்ற வாழ்வு’ என்னும் தலைப்பிலான ஓவியப்போட்டியொன்றை நடத்தவுள்ளது. இப்போட்டி பிரதேச செயலக மட்டம், மாவட்ட மட்டம், மாகாணமட்டம் ஆகிய மட்டங்களில் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு பிரதேச செயலக மட்டத்திலும் பத்து ஓவியங்கள் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட மட்டப் போட்டி இடம்பெறும். மாவட்ட மட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்து 15 ஓவியங்கள் தெரிவு செய்யப்பட்டு மாகாண மட்டப் போட்டி இடம்பெறும்.

மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்படும் முதலாவது ஓவியத்துக்கு 15 ஆயிரம் ரூபாவும் இரண்டாம் இடத்துக்கு 10 ஆயிரம் ரூபாவும் மூன்றாம் இடத்துக்கு 7,500 ரூபாவும் மேலும் ஐந்து சிறந்த ஓவியங்களுக்கு தலா ஆயிரம் ரூபாவும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

போட்டிக்கு ஓவியங்களை சமர்ப்பிக்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுவதுடன் தெரிவு செய்யப்படும் ஓவியங்கள் மாவட்ட மட்டத்தில் கண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. போட்டி சம்பந்தமான விபரங்களையும் விண்ணப்பப்படிவங்களையும் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ளுமாறு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

யுத்தத் தீயில் வெந்த மக்களின் வெளிக்காயத்துக்கு மருந்து போடலாம் – சந்திரசேகரன் எம்.பி

parliament.jpgகடந்த 30 வருடங்களாக யுத்தம் என்ற கொடிய தீயினால் வெந்து நொந்த மக்களின் வெளிக்காயங்களுக்கு மருந்து போடலாம் ஆனால் அவர்களின் உள்காயங்களுக்கு மருந்து போடும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதல்லவென ஜே.வி.பி. எம்.பி. சந்திரசேகரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது.

மக்கள் மத்தியில் இனப்பிரிவினை கறைகளை துடைத்தெறிந்தது மக்கள் விடுதலை முன்னணிதான் நலன்புரி முகாம்களில் பெண்கள் அனுபவிக்கும் சொல்லொணாத்துயரங்களை களைய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்பிருந்த வரலாறுகளையும் கலாசார பண்புகளையும் கொண்ட தமிழ் மக்கள் இன்று அனைத்தையும் இழந்து நிர்க்கதி நிலையடைந்துள்ளனர். இந்த துன்பங்களை களைய அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும்.

ஹட்டன் தோட்டத்தில் குளவி கொட்டி 13 பெண்கள் ஆஸ்பத்திரியில்

sri-lanka-upcountry.jpgதோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது குளவி கொட்டியதால் 13 பெண்கள் டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹட்டன் – அபோஸ்லி தோட்டத்தைச் சேரந்த பெண்களே இவ்வாறு குளவி கொட்டலுக்கு இலக்காகியுள்ளனர்

மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஹெனா நெஸ்டட் இலங்கை வரத் தடை

annan.jpgநியூயோர்க்கை தலைமையகமாக கொண்டு இயங்கும் மனித உரிமை கண்காணிப்பகத்தின், ஆசிய பிராந்திய பணிப்பாளர் ஹெனா நெஸ்டட், எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்வதை, அரசாங்கம் தடைசெய்துள்ளது.மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கை தொடர்பாக பொய்யான தகவல்களை சர்வதேசத்திற்கு வழங்கியுள்ளதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.

ஹெனா, சுற்றுலா வீசா அனுமதியுடன் இலங்கைக்கு விஜயம் செய்து, அரசசார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து வவுனியாவுக்குச் சென்று, உண்மைக்கு புறம்பான தகவல்களை சேகரித்துள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யரான ஹெனா, தம்மை சட்டத்தரணியென கூறி, இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகளை ஏமாற்றியுள்ளதாக புலனாய்வு துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மனித உரிமை கண்காணிப்பகத்தின், ஆசிய பிராந்திய பணிப்பாளர் ஹெனா நெஸ்டட், இலங்கை தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் அடங்கிய 45 பக்க அறிக்கையொன்றை ஐரோப்பிய ஒன்றியத்திடம் சமர்பித்துள்ளதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது. 

புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களை குழப்ப சதி: எச்சரிக்கை

indo-lanka.jpgதாயகத்தில் இடம்பெறும் சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு எதிராகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களைக் குழப்பும் வகையில் சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளின் ஆதரவுடன் சில சக்திகள் செயற்படுவதாகவும் இதனையிட்டு விழிப்பாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா, இந்திய அரசுகளின் புலனாய்வு அமைப்புக்கள் அல்லது இராணுவத் துணைப்படைகளுடன் இணைந்து வெளிநாடுகளில் செயற்படும் சில தமிழர்கள், தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களுக்கு எதிராக சில சதி நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு முயற்சி செய்துவருவதாக தகவல் கிடைத்திருப்பதாக புலம்பெயர்ந்த தமிழர்களின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது என சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ஐ.சி.ஆர்.சிக்கு பாதுகாப்பு வழங்கப்படும். விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிப்பு

lttelogo.jpgசெஞ்சிலுவைச் சர்வதேச குழு தனக்குரிய பணிகளை எமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் மேற்கொள்வதற்கு  நாம் சகல பாதுகாப்பையும் அளிப்போம்  என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர் என இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பிலுள்ள  செஞ்சிலுவைச் சர்வதேச குழுவின் தலைமையலுவலகத்திற்கு  விடுதலைப் புலிகள் எழுதிய கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என இணையத் தள தகவல் தெரிவித்தன. எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் செயற்பாடுகளுக்கு நாம் பூரண பாதுகாப்பளிப்போம். அதற்கு நாம் உத்தரவாதம் அளிக்கிறோம். செஞ்சிலுவைக் குழுவின் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை நாம் வழங்குவோம்  என்று அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்கள் நலனில் மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்: ராகுல்

india-elc-2009.jpg சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தை ஆதரித்து பேசிய அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி, நான் தமிழகத்திற்கு வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். பத்திரிகை சந்திப்பில் எப்போது தமிழகம் வருவீர்கள் என்று கேட்டார்கள். விரைவில் வருவேன் என்று சொன்னேன். வளர்ச்சி திட்டங்களில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு காரணம் தமிழக மக்கள்தான்.

எங்கள் குடும்பத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் பெரிய தொடர்பு உள்ளது. எனது தந்தை இறந்தது தமிழகத்தில்தான். தமிழகத்தில் உள்ள தமிழகர்கள் மட்டுமல்ல. உலககெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும் எங்கள் மனதிலே இடம் பிடித்திருக்கிறார்கள். இலங்கையில் வாழும் தமிழர்களும் எங்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இலங்கையில் வாழும் நம் சகோதரர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையில் நடக்கும் பிரச்சனைக்கு ஜனநாயக முறையில்தான் தீர்வு காணப்பட வேண்டும். கடந்த சில மாதங்களாக இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்திய அமைச்சர்கள், அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி பேச்சு நடத்தி வருகிறது. இலங்கை தமிழர்கள் அமைதியாக முறையில் வாழ மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். எங்களது முயற்சியால் தான் அதிநவீன ஆயுதங்களை இலங்கை அரசு தவிர்த்துள்ளது. இலங்கை தமிழர்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளும் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி; ஒன்பது பேர் காயம்:

gun00.jpgகொழும்பு, மாளிகாவத்தை ஜும்மா பள்ளி வாசலுக்கு அருகில் உள்ள ஜும்மா மஸ்ஜித் வீதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 அளவில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். ஜும்மா தொழுகையின் பின்னர், அந்த பிரதேசத்திற்கு வந்த முகமூடி தரித்த ஆயுததாரிகளினாலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு வலயத்திற்கு உணவுப் பொருட்களை சீராக எடுத்துச் செல்வதற்கு இரு தரப்பின் பாதுகாப்பு உத்தரவாதம் தேவை: ஐ.சி.ஆர்.சி

medical_lorry.jpgவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை சீராக எடுத்துச் செல்வதற்கு இரு தரப்பு பாதுகாப்பு உத்தரவாதம் தேவை என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்துகின்றது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேதச மக்களுக்கு உணவுப் பொருட்கள் அனுப்புவது மிகவும் கடினமான பிரச்சினையாக உள்ளது. “5000 தொன் உணவை அனுப்பவதற்கு அரசாங்கம் தயாராகவிருந்தாலும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அதனை எடுத்துச் செல்ல ஒத்துழைக்கவில்லை” என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திவாரட்ன வெளியிட்டுள்ள தகவல்கள் தொடர்பாகவே அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இரு தரப்பு பாதுகாப்பு உத்தரவாதம் தேவை என தனது கருத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.