தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் நேற்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் கோபாலபுரத்திலுள்ள இல்லத்தில் நடைபெற்ற இச் சந்திப்பின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சந்திப்பின் பின்னர் வெளியில் வந்த சம்பந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில்;
இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவி கேட்பது குறித்து தமிழக முதல்வருடன் பேசினோம். தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளோம்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு அமைதியான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தகைய பாதுகாப்பான சமூகமாக தமிழர்கள் வாழ ஒரு நிலை உருவாக்கப்பட வேண்டும்.
இதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யத் தயார் என்று முதல்வர் தெரிவித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
