செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மேனன் என்ன; கடவுளே வந்தாலும் தற்போதைய நிலைமைக்கு தீர்வில்லை – ரணில்

ranil-2912.jpgஇந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கை விஜயம் காலம் தாழ்த்தப்பட்ட நிலையிலேயே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டில் இன்று உருவாகியுள்ள நெருக்கடியான நிலைகளை நோக்கும் போது இந்தியா என்ன கடவுளே வந்தாலும் தீர்வுகாண முடியுமாவென்பது சந்தேகமே எனவும் தெரிவித்தார். இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ் சங்கர் மேனன் இலங்கை வந்துள்ளார். அவரைச் சந்தித்துப் பேசினீர்களா என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிடம்  வெள்ளிக்கிழமை கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமையிரவு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. இதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சிவ்சங்கர் மேனன் விஜயம் தொடர்பாகவும் அவரைச் சந்தித்தீர்களாவெனவும் கேள்வி எழுப்பிய போது ரணில் விக்கிரம சிங்க கருத்துத் தெரிவித்தார். இந்திய அரசு குறிப்பிட்ட காலமாக இலங்கை விவகாரத்தில் மௌனப் போக்கையே கடைப்பிடித்து வந்தது. அண்மையில் தமிழகத்தின் அழுத்தத்தைக் கூட புதுடில்லி பெரிதாக அலட்டிக்கொண்டதாகவும் தெரியவில்லை. புதுடில்லி தலையிடும் என எதிர்பார்க்கப்பட்ட காலத்தில் எதுவுமே நடைபெறவில்லை. ஆனால், காலம் கடந்த நிலையிலேயே சிவ்சங்கர் மேனன் வந்துள்ளார். எனக்கு தான் தெரிந்தவர் நல்லவர். சந்திக்க விருக்கிறேன்.

நாட்டில் இன்று நடப்பவற்றைப் பார்க்கும் போது அடுத்த நிமிடம் என்ன நடக்குமோவென அஞ்ச வேண்டியுள்ளது. தற்போதைய நிலைமைகளை நோக்கும் போது சிவ்சங்கர் மேனனாலோ வேறு எவராலுமோ பிரச்சினைக்கு தீர்வுகாண முடியுமா என்பதே கேள்வியாகவுள்ளது. ஏன் கடவுளே வந்தால் கூட நாட்டுக்கு அமைதியும் சமாதானமும் கிட்டுமா என்பது சந்தேகமே எனவும் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார்.

ஏ-9 வீதியில் கண்ணி அகற்றும் பணிகள் ஆரம்பம்

_army.jpgஏ-9  வீதியில் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார கூறினார். ஏ-9 வீதியில் போக்குவரத்துப் பணிகளை துரிதமாக ஆரம்பிக்கும் நோக்குடன் மிதிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதையின் இருபக்கமும் உள்ள 50 அடி வரையான பகுதியிலுள்ள நிலக்கண்ணிகள் அகற்றப்பட வுள்ளதோடு நிலக்கண்ணி அகற்றும் பணிகளை 2 வாரங்களுக்குள் பூர்த்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. நிலக்கண்ணி அகற்றும் பணிகள் முடிவடைந்ததும் வீதி புனரமைக்கும் பணிகளை ஆரம்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள மீட்கப்பட்ட பகுதிகளில் நிலக்கண்ணி அகற்றும் பணிகள் இடம்பெறுவதாக இராணுவப் பேச்சாளர் கூறினார்.

ஒபாமா 20-ந்தேதி பதவி ஏற்பு; ஜார்ஜ்புஷ் கடைசி உரை

world_news.jpgஅமெ ரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா வருகிற 20-ந்தேதி அதிகாரபூர்வமாக பதவி ஏற்கிறார். இப்போது அதிபராக இருக்கும் ஜார்ஜ்புஷ் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு ஓய்வு பெறுகிறார்.ஒபாமா பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

அமரிக்காவில் அதிபர் பயணம் செய்வதற்கு என்றே தனி விமானம் உள்ளது. “ஏர் போர்ஸ்-1” என்று இந்த விமானம் அழைக்கப்படுகிறது. ஜார்ஜ் புஷ் “ஏர் போர்ஸ்-1” விமானத்தில் அதிபர் என்ற முறையில் நேற்று கடைசி பயணத்தை மேற்கொண்டார்.

நார்வோக் பகுதிக்கு சென்ற புஷ் ஏர் போர்ஸ்-1 விமானத்தில் நேற்று வாஷிங்டன் திரும்பினார்.40-நிமிட நேரம் பயணம் செய்து விட்டு கீழே இறங்கிய புஷ் அந்த விமானம் ஊழியர்களுடன் கை குலுக்கி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

20-ந்தேதி ஓய்வு பெறுவதையொட்டி புஷ் வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு டெலிவிஷன் மூலம் உரை நிகழ்த்தினார். உணர்ச்சிபூர்வமான அந்த உரையில் புஷ் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் மீண்டும் ஜனநாயகத்தை ஏற்படுத்தி இருக்கிறேன்.அமெரிக்காவில் மீண்டும் அல்கொய்தா தாக்குதல் நடப்பதையும் தடுத்திருக்கிறேன் என்று தனது சாதனைகளை விளக்கி கூறினார்.

அமெரிக்காவுக்கு ஆபத்து இன்னும் முழுமையாக அகலவில்லை.மீண்டும் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். அடுத்த அதிபராக வரும் ஒபாமா அமெரிக்க மக்களுக்கு நிச்சயம் நம்பிக்கையூட்டும் வகையில் செயல்படுவார். அவருக்கும் அவரது மனைவி,2-மகள்கள் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் புஷ் அப்போது தெரிவித்தார்.

இந்திய தொலைக்காட்சி சேவைகளுக்கு தடைவிதிக்க பாகிஸ்தான் திட்டம்

laptop.jpgபாகிஸ் தானில் இந்திய தொலைக்காட்சி சேவைகள் ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கப்பட வேண்டுமென பாகிஸ்தான் பாராளுமன்ற சபை பரிந்துரை செய்துள்ளது. செய்தி ஒலிபரப்புத் துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இக் கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் ஹெரி ரெகிமான் கலந்து கொள்ளவில்லை. பாகிஸ்தான் தொலைக்காட்சி சேவைகளை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கு இந்திய அரசு தடை செய்துள்ள நிலையில், பாகிஸ்தானிலும் இந்திய தொலைக்காட்சி சேவைகளின் ஒளிபரப்புக்கு தடை விதிக்க வேண்டுமென எம்.பி.யான தாரிக் அஜீம் கோரியுள்ளார்.

இதேவேளை, மற்றொரு எம்.பி.யான ஹாஜி அஜீல் தெரிவிக்கையில்; இந்தியாவின் பொழுதுபோக்கு சேவை தொலைக்காட்சிகளைத் தான் தடை செய்ய வேண்டும். செய்திச் சேவைகளைத் தடைசெய்தால் இந்தியாவின் பிரசாரங்களை அறியமுடியாதெனத் தெரிவித்தார். ஆனாலும், மின்னியல் மற்றும் தொலைத் தொடர்புகள் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் ஆலோசித்து இந்திய தொலைக்காட்சி சேவைகளிற்கு தடை விதிக்கப்படுமென ஊடகத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் சாரணியத்தை அபிவிருத்தி செய்ய ஏற்பாடு

batti_.jpgகிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக சாரணியத்தை அபிவிருத்தி செய்ய கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாடசாலைகளில் சாரணியக் குழுக்களை அமைத்தல், மாவட்ட சாரணிய சங்கங்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதல், சாரணிய பயிற்சிகளுக்கு உதவுதல், வருடத்திற்கு மூன்று தடவைகள் சாரணிய ஆணையாளரின் ஒன்று கூடலை நடத்துதல் போன்ற செயற்பாடுகளுக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.

இவ் விடயம் தொடர்பான கலந்துரையாடலொன்று கடந்த வாரம் திருகோணமலை துளசிபுரத்திலுள்ள மனிதவள அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரண ஆணையாளர் எம். ஐ.எம். முஸ்தபா, மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளர் எஸ். இருதயநாதன், திரு கோணமலை மாவட்ட ஆணையாளர் இராஜ ரஞ்சன், கிழக்கு மாகாண சாரண ஆணையாளர் யூ.எல்.எம். ஹாஸிம் உட்பட பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இஸ்ரேல் குண்டு வீச்சில் ‘ஹமாஸ்’ இயக்க அமைச்சர் பலி- ஐ. நா. சபை உதவிக்குழு கட்டடமும் தகர்ப்பு

gaza_war02.jpgபலஸ் தீனத்தின் காஸா நகரம் மீது இஸ்ரேல் விமானங்களும் பீரங்கிப் படையினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 21வது நாளாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலை நிறுத்தும்படி ஐ. நா. சபை விடுத்த கோரிக்கைகளையும் இரு தரப்பினரும் ஏற்றக்கொள்ளவில்லை.

ஏற்கனவே பலஸ்தீனத்தின் காஸா நகரில் இருந்த ஹமாஸ் இயக்கத்தினரின் அலுவலகங்கள் தகர்க்கப்பட்டு விட்டன. 21 நாட்களாக நடந்த தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 1000-க்கும் அதிகமாகிவிட்டது. இந்த நிலையில் பலஸ்தீனத்தின் ஜபாலியா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் உள்துறை அமைச்சர் சயீத் சலாம் வீடு மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசியது. இதில் அந்த அமைச்சர் பலியானார். அவரது மகன் மற்றும் சகோதரரும் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீச்சில் கொல்லப்பட்டனர்.

காஸா பகுதியில் தாக்குதலில் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருள்கள், மருந்துகள், உணவுப் பொருட்கள் வழங்க ஐ. நா. சபை ஏற்பாடு செய்துள்ளது. காஸா பகுதியில் உள்ள ஐ. நா. சபை கிளை அலுவலகத்தில் டன் கணக்கில் இந்த பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன.

அந்த கட்டடம் மீதும் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசின. இதில் 3பேர் பலியானதுடன் டன் கணக்கில் மருந்து பொருட்கள் நாசம் அடைந்தன. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஐ. நா. சபை அவசரமாகக் கூடுகிறது.

பெருந்தோட்டத்துறையில் புதிய தலைமைத்துவம் உருவாக இத்தேர்தலை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தவேண்டும் – திஸ்ஸ அத்தநாயக்க

tissa.jpgமலையக பெருந்தோட்டத்துறையில் புதிய தலைமைத்துவம் உருவாக இத் தேர்தலை ஒரு தேசிய சந்தர்ப்பமாக பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க நுவரெலியா புதிய நகரமண்டபத்தில்  நடைபெற்ற மத்திய மாகாண சபையின் நுவரெலியா மாவட்ட தேர்தல் செயல் திட்டம் சம்பந்தமாக விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பொழுது வேண்டுகோள் விடுத்தார்.  இக்கூட்டத்தில் திஸ்ஸ அத்தநாயக்க தொடர்ந்தும் உரையாற்றுகையில்; மலையக பெருந்தோட்ட தலைவர்களான ஆறுமுகம் தொண்டமான், சந்திரசேகரன் போன்றவர்கள் ஐக்கிய மக்கள் முன்னணியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டாலும் தொழிலாளர்கள் எமது யானை சின்னத்திற்கே வாக்களித்து பழக்கப்பட்டவர்கள்.

நடைபெறவிருக்கும் மாகாணசபை தேர்தலை சாதாரண மாகாணசபை தேர்தலாக நினைக்காமல் பொதுத் தேர்தலாக நினைத்து அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு  செய்யவேண்டும். சிரச நிலையத்தை தாக்கியதோடு சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவையும் படுகொலை செய்ததற்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும்.இந்நாட்டில் தற்பொழுது ஜனநாயகம் நீங்கி சர்வாதிகாரம் தலைதூக்கி வருகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியகட்சி வெற்றிபெற வேண்டும். அரசாங்கத்தின் அராஜகத்திற்கு எதிராக நாம் நடத்திய கண்டன எதிர்ப்பு கூட்டங்களில் விக்கிரமபாகு உட்பட என்றும் எம்முடன் சேர்ந்துகொள்ளாத பல கட்சி தலைவர்கள் இப்போது இணைந்துள்ளனர். எனவே இந்நாட்டில் மீண்டும் ஜனநாயக ஆட்சி வருவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும். எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் பொதுதேர்தல் ஒன்று வரலாம். அத்தேர்தலிலும் ஐ.தே.க. வெற்றிபெற வேண்டும் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

தமிழக எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும்: திருமா

thirumavalavan-1601.jpgஇலங்கையில் உடனே போரை நிறுத்தி, அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையை அடுத்த மறைமலைநகரில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். உடல் நிலையை கருத்தில் கொண்டு முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமென்று திருமாவளவனிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ’’கிளிநொச்சியை கைப்பற்ற நினைத்த இலங்கை ராணுவம் பின்வாங்கும் நிலையில் இருந்தபோது அவர்களுக்கு இந்திய அரசு கடைசி நேரத்தில் ஆயுதங்களையும் படை வீரர்களையும் வழங்கி உதவியதால்தான் அவர்களால் கிளிநொச்சியை கைப்பற்ற முடிந்தது.

இந்திய அரசு இப்படி தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக பச்சைத் துரோகம் செய்து வருகிறது. எனவேதான் வேறு வழியின்றி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினோம். இது தமிழக முதல்வருக்கோ, தமிழக அரசுக்கோ எதிரானது அல்ல. இதனால் முதல்வருக்கு சங்கடம் ஏற்பட்டால் அதற்காக வருந்துகிறேன். முதல்வர் உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் ஈழ விடுதலை ஆதரவாளர்களும் என்னுடைய போராட்டத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனை கைவிடுமாறு கூறுவதை விட அனைத்து தலைவர்களும் இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஈழ விஷயத்தில் இந்திய அரசை நிர்ப்பந்தப்படுத்த கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட  ஒருமனதான தீர்மானத்தின்படி தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும்’’ என்றார்.

ஸ்ரீலங்கன் எயார்வேஸ் விமானத்தில் மோதிய பறவை

images-01.jpg
கொழும்பிலிருந்து சென்னைக்குச் சென்ற ஸ்ரீலங்கான் எயார்வேஸிக்குச் சொந்தமான விமானமொன்று சென்னை விமான நிலைய ஓடுபாதையை நோக்கி வரும் போது பறவையொன்று மோதி அதன் இயந்திரப் பகுதிக்குள் சென்று விட்டது. இதனையறிந்த விமானி விமானத்தை சமார்த்தியமாக நிறுத்தினார். இந்த விமானத்தில் 89 பயணிகள் இருந்தனர்.

இந்த விமானம் மீண்டும் நேற்றிரவு 11.00 மணிக்குக் கொழும்பு திரும்ப வேண்டியிருந்தது. ஆனால் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் புறப்படுவது ரத்துச் செய்யப்பட்டது. இந்த விமானத்தில் கொழும்பு வருவதற்காகவிருந்த 152 பயணிகளும் நேற்றிரவு சென்னையிலுள்ள ஹோட்டலொன்றில் தங்க வைக்கப்பட்டனர். இன்று காலையில் இந்த விமானம் பயணிகளுடன் கொழும்பு புறப்பட்டது.

இராமநாதபுரம் விடுவிக்கப்பட்டுள்ளது

truck.jpgஇராணுவத்தின் 57வது படையணியினர் புலிகளின் பிடியிலிருந்து இராமநாதபுரத்தை விடுவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 571 மற்றும் 572 வது படைப் பிரிவுகள் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மேற்கொண்ட தாக்குதல்களை அடுத்தே இன்று பிற்பகல் இந்தப் பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகருக்கு அடுத்ததாக முக்கிய புலிகளின் தளங்களில் ஒன்றாக இராமநாதபுரம் விளங்கி வந்தது. இராமநாதபுரம் படையினரால் விடுவிக்கப்பட்டதையடுத்து புலிகள் இயக்க உறுப்பினர்கள் முத்தையன்கட்டு காட்டுப் பகுதிகளுக்குள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.