இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கை விஜயம் காலம் தாழ்த்தப்பட்ட நிலையிலேயே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டில் இன்று உருவாகியுள்ள நெருக்கடியான நிலைகளை நோக்கும் போது இந்தியா என்ன கடவுளே வந்தாலும் தீர்வுகாண முடியுமாவென்பது சந்தேகமே எனவும் தெரிவித்தார். இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ் சங்கர் மேனன் இலங்கை வந்துள்ளார். அவரைச் சந்தித்துப் பேசினீர்களா என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிடம் வெள்ளிக்கிழமை கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமையிரவு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. இதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சிவ்சங்கர் மேனன் விஜயம் தொடர்பாகவும் அவரைச் சந்தித்தீர்களாவெனவும் கேள்வி எழுப்பிய போது ரணில் விக்கிரம சிங்க கருத்துத் தெரிவித்தார். இந்திய அரசு குறிப்பிட்ட காலமாக இலங்கை விவகாரத்தில் மௌனப் போக்கையே கடைப்பிடித்து வந்தது. அண்மையில் தமிழகத்தின் அழுத்தத்தைக் கூட புதுடில்லி பெரிதாக அலட்டிக்கொண்டதாகவும் தெரியவில்லை. புதுடில்லி தலையிடும் என எதிர்பார்க்கப்பட்ட காலத்தில் எதுவுமே நடைபெறவில்லை. ஆனால், காலம் கடந்த நிலையிலேயே சிவ்சங்கர் மேனன் வந்துள்ளார். எனக்கு தான் தெரிந்தவர் நல்லவர். சந்திக்க விருக்கிறேன்.
நாட்டில் இன்று நடப்பவற்றைப் பார்க்கும் போது அடுத்த நிமிடம் என்ன நடக்குமோவென அஞ்ச வேண்டியுள்ளது. தற்போதைய நிலைமைகளை நோக்கும் போது சிவ்சங்கர் மேனனாலோ வேறு எவராலுமோ பிரச்சினைக்கு தீர்வுகாண முடியுமா என்பதே கேள்வியாகவுள்ளது. ஏன் கடவுளே வந்தால் கூட நாட்டுக்கு அமைதியும் சமாதானமும் கிட்டுமா என்பது சந்தேகமே எனவும் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார்.