எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மருந்து பொருட்களை உடனடியாக அனுப்பக் கோரி அமைச்சிற்கு முல்லைத்தீவு , கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் கடிதம்

medicine.jpgமுல்லைத் தீவு மாவட்டத்தில் நிலவும் மருந்து பற்றாக்குறைகளை விளக்கியும் , நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிராந்திய வைத்தியசாலை பணிப்பாளரால் சுகாதார அமைச்சு, அமைச்சின் ஆலோசகர் டாக்டர் வி.ஜெகநாதன், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் , கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா அரசாங்க அதிபர்களிற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக போதுமான மருந்து வகைகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களிற்கு கிடைக்கவில்லை .கடந்த வருட இறுதி காலாண்டிற்கும், இவ்வருட முதல் காலாண்டிற்குமாக 5 சதவீதத்திற்கும் குறைவான மருந்து வகைகளும், துணி வகைகளும் கிடைக்கப்பெற்றன.இது தொடர்பாகவும் மருந்து பொருட்களின் தேவைகள் குறித்தும் ஏற்கனவே இரு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களும் அறிவித்திருந்தோம்.

மோதல்கள் காரண்மாக அதிகமானோர் காயமடைகின்றனர்.எனவே அதிகளவு மருந்துப் பொருட்கள் தேவைப்படுகின்றது.முக்கியமாக அனெஸ்தெடிக்(Anesthetic),அன்டிபயோடிக்ஸ்(Antibiotics),அனல்ஜெசிக்ஸ்(Analgesics) மற்றும் IV புளூயிட்(IV fluids) போன்ற மருந்து வகைகள் அதிகளவில் தேவைப்படுகின்றன.

2009 ஜனவரி மாதம் வரை 500 பொதுமக்கள் மோதல்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும், பின்பும் உயிரிழந்துள்ளமை வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. அதேவேளை வைத்தியசாலைக்கு எடுத்துவரப்படாமலேயே ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் படுகாயமடைந்தமையே உயிரிழப்பிற்கு காரணம்.

வைத்தியசாலைகளில் போதுமான மருந்துப் பொருட்களும், உட்கட்டமைப்பு வசதிகளும் காணப்பட்டிருப்பின் அதிகளவான உயிரிழப்புக்களை தவிர்த்திருக்கலாம்.எனினும் முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் அவசர உயிர்கப்பு சிகிச்சை கூட மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ,நிலமையை கருத்திற் கொண்டு உயிரிழப்புக்களை மேலும் குறைப்பதற்கு ஊடனடியாக அடுத்துவரும் ஐ.சி.ஆர்.சி கப்பலில் மருந்துப் பொருட்களை அனுப்பிவைக்குமாறு அக்கடிதத்தில் கோரி முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரி.வரதராஜன் மற்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரி.சத்தியமூர்த்தி ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

அதேவேளை மருந்துப்பொருட்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டதையடுத்து மாகாண ஆணையாளர் அடுத்த தடவை கப்பல் வரும்போது அனுப்பி வைப்பதாக உறுதியளித்திருந்தார் எனினும் அவ்வாறு மருந்துப் பொருடகள் அக்கப்பலில் சுகாதார அமைச்சிலிருந்து அனுப்பி வைக்கப்படவில்லை என ஐ.சி.ஆர்.சி தமக்கு அறிவித்ததாக அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

rdhs-mul.jpg

வர்ஷா கொலை தொடர்பாக 5 பேர் தடுத்து வைப்பு

varsa.jpgஆறு வயது மாணவி வர்ஷா கடத்தல், கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஐவர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஐவரையும் நீதிமன்றத்தில் ஆஜராக்கவில்லை. இவர்கள் மீது தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதேவேளை, பொலிஸாரிடமிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தபோது, பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒப்ரின் மெரர்வின் ரெனோனின் மரண விசாரணையை திருகோணமலை நீதிவான் ரி.எல்.ஏ. மனாப் நடத்தினார்.

இம்மரண விசாரணையும் மாணவி வர்ஷாவின் கொலை பற்றிய மரண விசாரணையும் திருமலை நீதிவான் மனாப்பினால் இன்னொரு திகதியில் நடத்தப்படவிருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

‘உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அரசாங்கம் அடிபணியாது’

mahinda-rajapaksha.jpgஉலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறும்போது அரசாங்கம் எத்தகைய நிபந்தனைகளுக்கும் அடிபணியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எமது நாட்டை வேறு எந்த நாட்டுக்கோ நிறுவனத்துக்கோ கீழ்ப்படுத்த இடமளிக்க முடியாதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எனினும், முழு உலகமும் பொருளாதார நெருக்கடிக்குள் அகப்பட்டுள்ள இத்தருணத்தில் நாட்டின் நலன், நாட்டைக் கட்டியெழுப்புவது பற்றி சிந்திக்காது அரசியல் இலாபம் தேடுவதிலேயே சில சக்திகள் முனைப்பாக உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாடளாவிய ரீதியில் 92 பேருக்கு புதிதாக கணக்காளர்களாக நியமனம் வழங்கும் விசேட வைபவம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது. அமைச்சர்கள் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பந்துல குணவர்தன உட்பட திறைசேரி மற்றும் நிதியமைச்சின் உயரதிகாரிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

முழு உலகுமே பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் அகப்பட்டுள்ளது. இலங்கைக்கும் நிதி நெருக்கடி உள்ளது. இத்தகைய வேளையில் நாட்டின் எதிர் காலத்தைக் கருத்திற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் கடன் பெற முற்படும்போது எதிர்க்கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும் தயாராகின்றனர். இவர்கள் குறுகிய அரசியல் இலாபத்திற்காகச் செயற்படுகின்றனர். அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட அரசாங்கத்தின் பயணம் தொடர வேண்டும். மக்கள் அரசாங்கத்திடம் வழங்கிய ஆணை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற குறிக்கோளிலேயே அரசாங்கம் செயற்படுகிறது.

இதனை விமர்சிப்பவர்கள் வடக்கு, கிழக்கு மீட்பு நடவடிக்கைகளுக்கு எந்தளவு நிதி செலவாகியது என்பதை சிந்திக்கத் தவறிவிட்டனர். கிழக்கு மாகாணம் முழுமையாக மீட்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. அந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 103 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டுள்ளது. அதைப்பற்றி எவரும் பேசுவதில்லை. உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுவருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பல முன்னணி நாடுகள் தமது குறிக்கோளையும் எதிர்கால இலக்கினையும் மாற்றிக்கொண்டுள்ளன.

அமெரிக்க உட்பட பல நாடுகள் அரச துறைகளில் வேலை நீக்கத்தை மேற்கொள் கிறது. சம்பளத்தை குறைப்பதுடன் வீடுகளி லிருந்து வெளியேற்றும் நடவடிக்கை களையும் முன்னெடுத்து வருகிறது. எத்தகைய நிலையிலும் எமது அரசாங்கம் இத்தகைய தீர்மானங்களை எடுக்கவில்லை. மாறாக அரச துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலங்கையைப் பொறுத்தவரை இலங்கையின் அரசதுறை தனியாருக்குப் பலமாகியுள்ளது. உலக பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாம் ஏற்கனவே மேற்கொண்ட ஆயத்தங்கள் காரணமாக நெருக்கடிகளிலிருந்து மீள முடிந்துள்ளது.

நாட்டின் அபிவிருத்தி, பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம், உலக பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையேற்றம் என ஒரே வேளையில் நான்கு பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்து அதில் வெற்றி கண்டுள்ள அரசு எமது அரசே.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. எமது படையினர் அர்ப்பணிப்புடன் பல தியாகங்களைச் செய்து வடக்கு மக்களைப் புலிகளிடமிருந்து மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் 20 கிலோ மீற்றர் தூரமே கைப்பற்றப்பட வேண்டியுள்ளது. இது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமேயன்றி ஒரு இனத்திற்கு எதிரான யுத்த மல்ல. அப்பாவி மக்களை மீட்கும் மனிதாபிமான பணியே இடம்பெறுகிறது.

இத்தகைய தருணத்தில் ஏனைய பகுதிகளில் குழப்பகரமான சூழலை ஏற்படுத்தி நாட்டை திசை திருப்ப புலிகள் முயற்சிக்கின்றனர். இதன் விளைவே அக்குறஸ்ஸ தாக்குதல். புலிகளுக்கு இது புதிதல்ல. ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளிலும் மதத் தலங்கள் மீது தாக்குதல் நடத்திய வரலாறு புலிகளுக்கு உண்டு என ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

இரணைப்பாலையை முழுமையாக விடுவிக்கும் நடவடிக்கையில் படையினர்

udaya_nanayakkara_brigediars.jpgபுதுக் குடியிருப்பு இரணைப்பாலை பிரதேசத்திற்குள் பிரவேசித்துள்ள பாதுகாப்புப் படையினர் புலிகளின் புலனாய்வுத் துறை தலைவரின் முக்கிய தளம் அமைந்துள்ள இரணைப்பாலை முழுவதையும் விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

படை நடவடிக்கைகள் மூலம் புலிகளை முற்றாக 30 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்திற்குள் முடக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் படையினர் கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார்.

புலிகளின் பிடியில் எஞ்சியுள்ள 30 சதுர கிலோ மீற்றர் பரப்பை முற்றாக விடுவிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையில் இராணுவத்தின் மூன்று படைப் பிரிவுகளும், ஒரு அதிரடிப் படைப் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பையும், அதனை அண்டிய பிரதேசங்களையும் கடுமையான மோதல்களுக்குப் பின்னர் கைப்பற்றிய பாதுகாப்புப் படையினர் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு ள்ளதாக பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். புலிகள் தங்களிடம் எஞ்சியுள்ள பிரதே சங்களை படையினரின் தாக்குதல்களி லிருந்து பாதுகாக்கும் பொருட்டு ஐந்து பாரிய பாதுகாப்பு மண் அரண்களை அமைத்திருந்தனர்.

அவற்றில் மூன்று மண் அரண்களை பாதுகாப்புப் படையினர் கனரக ஆயுதங் களை பயன்படுத்தி முற்றாக தாக்கியழித் துள்ளதாக வன்னிகள முனையில் ஈடுபட்டுள்ள இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இரணைப்பாலை பிரதேசத்தில் புலிகளின் புலனாய்வுத் துறை தலைவர் பொட்டு அம்மானின் முக்கிய தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

புலிகள் தற்பொழுது அந்தப் பிரதேசத்தி லிருந்துகொண்டே படையினருக்கு எதி ரான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு திட்ட மிட்டு வருவதாக இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார். புலிகளின் தலைவர் பிரபாகரனும் தொடர்ச்சியாக இந்த பிரதேசத்திலிருந்து கட்டளை பிறப்பித்துள்ளமை தெரிய வந்துள்ளதாக இராணுவ புலனாய்வு துறை யினர் உறுதி செய்துள்ளனர்.

இராணுவத்தின் 53வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா ஆகியோர் தலைமை யிலான இரு படைப் பிரிவுகளும், இராணுவத்தின் 8வது அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி கேர்ணல் ரவிப்பிரிய தலைமையிலான படையினரும் புதுக்குடி யிருப்பின் கிழக்கு பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

இதேவேளை, சாலை தென்பகுதியின் ஊடாக இராணுவத்தின் 55வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படை யினரும் முன்னேறி வருகின்றனர்.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்ட வண்ணம் இராணுவத்தின் சகல படைப் பிரிவுகளும் கடுமையான மோதல் களுக்கு மத்தியில் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்தோர் சுகாதார நலன்: ஜேர்மன் செஞ்சிலுவை சங்கம் 6 கொள்கலன்கள் அன்பளிப்பு

sri-lanka-red-cross.jpgஇடம் பெயர்ந்த மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் வகையில் சுகாதார அமைச்சு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் ஆறு நடமாடும் கொள்கலன்களை சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளது. சுமார் 5.5 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்கலன்களைக் கையளிக்கும் வைபவம் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் ஜகத் அபேசிங்க, தேசிய செயலாளர் எஸ். எச். நிமல் குமார், ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த அன் றெஸ் லிண்டனர், மொங்கோலிய நாட்டின் பிரதி சுகாதார அமைச்சர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சுகாதார அமைச்சர் உரையாற்றுகையில், இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் உரையாற்றுகையில், இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்களுக்கு தேவையான மருத்துவப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் போதிய வைத்தியர்கள், தாதியர்கள் அப்பிரதேசங்களில் தங்கியிருந்து மக்களுக்கு தேவையான வைத்திய சேவைகளை வழங்கி வருகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் அனைத்து தேவைகளையும் அரசாங்கம் செய்து வருகின்றது. மஹிந்த சிந்தனையை உண்மைப்படுத்தும் வகையில் சுகாதார சேவைகளை சுகாதார அமைச்சு சிறப்பாக செய்து வருகின்றது. ஏனைய மக்களைப் போன்று இடம் பெயர்ந்த மக்களும் தேவையான சுகாதார தேவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக பல்வேறு நிறுவனங்களின் உதவி தேவைப்படுகின்றது. எமது அமைச்சு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.

இதற்காக அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த நட மாடும் கொள்கலன்கள் இடம்பெயர்ந் துள்ள மக்களின் பிரதேசங்களுக்கு விரை வாக அனுப்பி வைத்து அம்மக்களின் சுகாதார சேவைகளை தீர்க்க முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இலங்கை உலக நாடுகளுக்கு முன்னுதாரணம் – அமைச்சர் ரோஹித

rohitha_bogollagama.jpgபயங்கர வாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இலங்கை ஏனைய உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்றுத் தெரிவித்தார். பாதுகாப்பு உட்பட பாரிய செலவினங்களுக்குள்ளும் நாட்டின் சுகாதாரத்துறையில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு புலிகளின் பிரதேசத்திற்கும் அரசு மருந்துப் பொருட்கள், வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களை அனுப்பி சிறந்த சுகாதார சேவையினை வழங்க நடவடிக்கை எடுத்து ள்ளதாகவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

சுகாதாரப் பராமரிப்புக்கான நிதி முக்கியத்துவம் குறித்து பிராந்திய அமைச்சர்கள் மட்ட மாநாடு நேற்று கொழும்பு சினமன் ஹோட்டலில் ஆரம்பமானது. இம்மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:- சாதாரணமான காலகட்டத்தில் மட்டுமன்றி அசாத்தியமான காலகட்டத்திலும் அரசாங்கம் வடக்கு, கிழக்கு உட்பட சகல பகுதிகளிலும் சிறப்பான அவசர சுகாதார சேவைகளை மேற்கொண்டு வந்துள்ளது.

இதற்கு உதாரணமாக சுனாமி கால கட்டத்தைக் குறிப்பிட முடியும். சுனாமிக்குப் பிறகு குறிப்பிடத்தக்க எந்த நோயும் இலங்கையில் பரவாமை இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகியுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பயங்கரவாதப் போராட்டத்தின் மத்தியிலும் சிறந்த சுகாதார சேவை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கிலும் சுகாதார சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் மோதல்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை எந்தத் தடங்களுமின்றி சுகாதார சேவை முன் னெடுக்கப்பட்டு வருகிறது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கும் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அரசாங் கத்தினால் அனுப்பப்படுகின்றன. போது மான வைத்தியர்கள் மற்றும் தாதிகளும் அனுப்பப்பட்டு சிறந்த சுகாதார சேவை அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புலிகள் மருந்துகளை தமது சொந்தப் பாவனைக்காக பயன்படுத்துகின்றனர் எனத் தெரிந்தும் அப்பகுதி மக்களின் நல னைக் கருத்திற்கொண்டு அரசு செயற்படுகிறது.  பல சந்தர்ப்பங்களில் பல்வேறு ஆபத்துக்களைச் சந்திக்க நேர்ந்த போதும் தரை, கடல், ஆகாய மார்க்கமாகவும் மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டன.

இத்தகைய விடயங்களைப் பொறுத்த வரையில் பல்தேசிய நிதி நிறுவனங்கள் வர்த்தக சமூகங்கள், தனியார் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து செயற்படுவதையும் குறிப்பிட வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

போர் சட்ட விதிமுறைகளுக்கு மதிப்பளித்தே இராணுவ முன்னெடுப்புகள் நடத்தப்படுகின்றன – இராணுவ பேச்சாளர்

udaya_nanayakkara_brigediars.jpgபடையினர், போர் சட்டவிதிமுறைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே தமது இராணுவ முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் போர்ச் சட்டத்தை மீறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்று விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளதாக ராய்ட்டர் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் அவ்வியக்கம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அச்செய்திச் சேவையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது விடுதலைப் புலிகளின் மேற்படி குற்றச்சாட்டினை பாதுகாப்பு தரப்பு என்ற ரீதியில் நாம் முற்றாக மறுக்கின்றோம். வன்னியில் இடம்பெயர்ந்துத் தங்கியுள்ள பொதுமக்கள்மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பொறுப்பாளர். நடேசன் தெரிவித்துள்ளார்.

ஆயினும் இந்தக் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் இல்லை. பொதுமக்களுக்கு சேதம் எற்படும் வகையில் படையினர் தமது இராணுவ முன்னெடுப்புக்களை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை. வன்னியில் சிக்குண்டுள்ள பொதுமக்களைக் கருத்திற் கொண்ட பிறகே அவர்கள் தாக்குதல்களை நடத்துகின்றனர். இதனால் படையினரின் தாக்குதல்களின் போது பொதுமக்களுக்கு எவ்விதச் சேதமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.

ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் வன்னியிலிருந்து வரும் பொதுமக்களை படையினர் மிகவும் அன்போடுதான் வரவேற்று வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் படையினராலேயே வழங்கப்பட்டு பின்னர் தற்காலிக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அம்மக்களுக்குத் தேவையான பாதுகாப்பினை வழங்குவதிலும் படையினர் பின்வாங்கவில்லை. அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கச் சென்றதில் இராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்துள்ளனர் என்பதையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும். இராணுவத்தினர் போர் சட்டத்திற்கு மதிப்பளித்து தமது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் விடுதலைப் புலிகள் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. அவர்களே பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பாவிப் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இலங்கையில் வெளிநாடுகள் தலையிடுவதற்கு அரசே அழைப்பையும் விடுத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறது -ஜே.வி.பி.

vijitha_herath.jpgஇலங்கை விடயத்தில் வெளிநாடுகளின் தலையீடுகள் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரான விஜித ஹேரத் எம்.பி., அரசாங்கமே இதற்கான அழைப்பையும் விடுத்து தலையீடுகளுக்கான வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

கொழும்பு நிப்போன் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைற்ற தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் அந்நிலையத்தின் பொதுச் செயலாளர் என்ற வகையில் கருத்து வெளியிடும் போதே விஜித ஹேரத் இவ்வாறு கூறியிருக்கிறார். அவர் இங்கு மேலும் பேசுகையில்;

ஏற்கெனவே, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா போன்ற வெளிநாடுகளின் தலையீடுகள் இலங்கைக்கு வந்து விட்டன. அதை உறுதிப்படுத்துவது போல பிரிட்டன் எம்.பி.யான லியாம் பொக்ஸ் இலங்கை வந்து அவரது 2 ஆவது அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளார்.

ஏற்கனவே, லியாம் பொக்ஸ் முதல் அத்தியாயமாக சந்திரிகா குமாரதுங்கவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தேசிய பிரச்சினையில் தலையிட்டிருந்தார். அந்த வகையில் லியாம் பொக்ஸுக்கு இது இலங்கையில் 2 ஆவது அத்தியாயமாகும்.

இதேநேரம், தனது தேவைக்காக இலங்கை வரவில்லையெனவும் அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இலங்கைக்கு வந்ததாகவும் லியாம் பொக்ஸ் கூறியிருக்கிறார். எனவே, அரசாங்கமே வெளிநாட்டுப் பிரதிநிதிகளை நாட்டுக்கு அழைத்து தலையீடுகளுக்கும் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வருவது தெளிவாகிறது.

இதற்கு முன்னர் பிரிட்டன் அரசாங்கத்தினால் இலங்கைக்கென பிரதிநிதியொருவர் நியமிக்கப்பட்ட போது இலங்கை அரசாங்கம் அதை எதிர்த்திருந்தது. இது தொடர்பாக பிரிட்டன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது இலங்கை ஜனாதிபதியுடன் தொலைபேசி மூலம் பேசியது மட்டுமன்றி இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரும் 2 முறைகள் ஜனாதிபதியை சந்தித்துப் பேசி ஏற்படுத்தப்பட்ட இணக்கத்துக்கு அமையே அந்தப் பிரதிநிதி நியமிக்கப்பட்டதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.

இதேபோல் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பில் எப்படி செயற்படுகிறது என்பது குறித்து சில உபாயங்களை தம்வசம் கொண்டிருக்கின்றன. 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் அந்நாட்டின் யுத்த, அரசியல் தேவைகளுக்கு அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்பது குறித்த உபாய மார்க்கங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

அத்துடன், இந்து சமுத்திரத்தில் சீனாவின் பாதுகாப்பு வலைப் பின்னலுக்கு முகம் கொடுக்க அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முக்கியத்துவம் பற்றியும் அமெரிக்காவின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

இதேநேரம், கடந்த 6 ஆம் திகதி கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் குமார் ரூபசிங்கவின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாநாட்டில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக் இலங்கைப் பிரச்சினைக்கு முதலில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென்றும் அதன் பின்னர் திஸ்ஸ விதாரண குழுவின் தீர்வு யோசனையை செயற்படுத்த வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாது ராஜித சேனாரட்ன, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் அடங்கலாக அரசாங்கம் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய குழுவொன்றை நியமித்துள்ளது. இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை குமார் ரூபசிங்கவே செய்கிறார். எனவே, இவர்கள் மூலம் அமெரிக்க உபாயங்களே செயற்படுத்தப்படப் போகின்றன என்பது தெளிவாகிறது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் தெரிந்திருக்கவே இந்த வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. படையினரின் வெற்றிகளை பிரிவினைவாதத்துக்கு காட்டிக் கொடுக்க இடமளிக்க முடியாது. பிரினைவாதத்துக்கு கப்பம் வழங்கும் இந்த முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும். இதற்கு அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

10 ஆயிரம் குடும்பங்கள் இம்மாத இறுதிக்குள் 4 கிராமங்களிலும் தங்கவைக்கப்படுவர்

rizad_baduradeen-01.jpgவன்னியிலிருந்து வவுனியாவுக்கு வருகைதரும் மக்களை வவுனியா மெனிக் பாம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் நான்கு கிராமங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா மெனிக்பாம் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த அமைச்சர் தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் ஆனந்த குமாரசாமி, பொன். அருணாச்சலம், சேர். பொன்னம்பலம் இராமநாதன் கிராமங்களை பார்வையிட்டார். ஏற்கனவே, மெனிக்பாம் கதிர்காமம் கிராமத்தில் மக்கள் குடியமர்த்தப்பட்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதேவேளை, தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மூன்று கிராமங்களிலும் கதிர்காமர் கிராமத்தையும் உள்ளடக்கியதாக 10 ஆயிரம் குடும்பங்களை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்கவைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கூறினார்.

இக்கிராமங்களில் உள்ளக பாதை, மின்சாரம், குடிதண்ணீர், பாடசாலைகள், ஏனைய திணைக்களங்களின் முக்கிய அலுவலகங்கள் என்பன அமைக்கப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், இப் பணிகளைத் துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதாகவும் கூறினார்.

இவ்விஜயத்தின் போது வவுனியா அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் திணைக்களங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காததால் தீர்வு குறித்து தீர்மானிப்பதில் தாமதம் – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காததால் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு குறித்துத் தீர்மானிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

“ஏசியன் ட்ரிபியூன்’ இணையத்தளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கியிருக்கும் போட்டியொன்றிலேயே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

தொடர்ச்சியாக அழைப்புகள் விடுக்கப்பட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசத் தவறிவிட்ட நிலையில் எப்படி நாம் அதிகாரப் பகிர்வு யோசனை குறித்து திட்டமிடுவது என ஜனாதிபதி ராஜபக்ஷ கேள்வி யெழுப்பியிருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு 3 தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் விடுதலைப் புலிகளின் தலைவரின் கட்டளையின் பேரில் அவர்கள் அதற்கு வெளிப்படையாகவே பதிலளித்திருக்கவில்லையெனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, இலங்கை அரசாங்கத்துடன் எதுவும் பேசக் கூடாது என்ற பிரபாகரனின் கடும் உத்தரவின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். மனித கேடயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் சில சமயம் விடுபட்டு வந்து விட்டால் பிரபாகரனுக்கு அவரது முகத்தை மறைத்துக் கொள்ள இடமில்லையென்று அவர் அச்சம் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி என்ற வகையில் நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பேச அழைக்கிறேன். எனினும், அவர்களோ தமிழ் நாட்டுத் தலைவர்களிடமும் இந்தியாவின் வேறு இடங்களுக்கும் சென்று அங்குள்ள தலைவர்களிடம் எமக்கு பலவற்றை கூறுமாறு வலியுறுத்துகிறார்கள். இது அர்த்தமற்றதொன்றல்லவா? நாம் அவர்களுக்கு சந்தர்ப்பமளித்து எப்போதும் செவிமடுக்க ஆர்வமாக இருந்து பொறுப்பான கோரிக்கைகளுக்கு உறுதியளிக்கவும் அவர்களது நிலைப்பாடுகளை எம்மிடம் நேரடியாகவே தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கத் தயாராகவும் இருக்கின்ற போதும் அவர்கள் அதை செய்வதாக இல்லை. எனினும், தமிழ் நாட்டுத் தலைவர்களிடமும் சர்வதேச சமூகத்திடமும் என்னிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளே அவர்களது யோசனையுடன் வந்து எம்முடன் பேசுவதற்கு விருப்பமில்லாமல் இருந்தால் அனைத்துத் தமிழ் சமூகமும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை எம்மால் எப்படி ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.  இதேநேரம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஓய்வு என்பதை முற்றாக நிராகரித்துள்ளார். இராணுவ நடவடிக்கை நிறுத்தத்தை புலிகள் மதிப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாதென அவர் தெரிவித்திருக்கிறார்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களது சுதந்திர நடமாட்டத்திற்கு இடமளிக்குமாறு அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி விடுதலைப் புலிகளுக்கு 48 மணி நேர கால அவகாசம் வழங்கி நடவடிக்கைகளை ஓய்வுக்குக் கொண்டு வந்திருந்தது எனினும் அவர்கள் அந்த நல்லெண்ண சமிக்ஞையை மதிக்கத் தவறிவிட்டதுடன் அப்பாவிப் பொதுமக்களையும் பாதுகாப்பான இடம்நோக்கி நகர அனுமதிக்கவில்லை என்று ஜனாதிபதி சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அத்துடன், நல்லெண்ண சமிக்ஞையாகத் தாக்குதல்களை இடை நிறுத்தி வைக்குமாறு அரச படையினர் கோரப்பட்டிருந்த போதிலும் புலிகள் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.  தாக்குதல்களை நிறுத்துமாறு படையினர் கோரப்பட்டிருந்தனர். எனினும், 24 மணி நேரம் கூட செல்வதற்கு முன்னர் புலிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்ததால் இறுதியில் அது நூற்றி ஐம்பது படையினர் காயமடையும் நிலைமையை ஏற்படுத்தியிருந்தது என்று மகிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார். இதேநேரம், யுத்த சூனிய காலப்பகுதியென்பது சாத்தியப்படாத யோசனையாகவே இருக்குமென ஜனாதிபதி ராஜபக்ஷ சுட்டிக்காட்டியிருக்கிறார்.

முன்னரான எமது சமிக்ஞைகளை மதிக்காத பிரபாகரனும் அவரது ஆட்களும் எனது கட்டளையின் பேரில் 48 மணி நேரத் தாக்குதல் தவிர்ப்பில் இருந்த எமது படையினர் காயமடைய காரணமாயிருந்திருக்கும் நிலையில் எப்படி மீண்டுமொரு முறை 48 அல்லது 72 மணிநேர யுத்த சூனிய காலப்பகுதியை வழங்க முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எமக்கு எந்தவொரு போர் நிறுத்தம் பற்றியோ அல்லது யுத்த சூனிய காலப்பகுதி பற்றியோ சிந்திக்க முடியாது. கடைசியாக நாம் அறிவித்த போது புலிகள் அதை மதிக்கத் தவறிவிட்டனர். அவர்கள் எமது படையினர் மீது தாக்குதல் தொடுத்தனர். தாக்குதல் நிறுத்தத்தில் இருக்கும் போது இலங்கை இராணுவத்தினர் தாக்கப்பட்டால் முப்படைத் தளபதி என்ற வகையில் அதற்கான பொறுப்பை நானே ஏற்க வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.