பயங்கர வாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இலங்கை ஏனைய உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்றுத் தெரிவித்தார். பாதுகாப்பு உட்பட பாரிய செலவினங்களுக்குள்ளும் நாட்டின் சுகாதாரத்துறையில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு புலிகளின் பிரதேசத்திற்கும் அரசு மருந்துப் பொருட்கள், வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களை அனுப்பி சிறந்த சுகாதார சேவையினை வழங்க நடவடிக்கை எடுத்து ள்ளதாகவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.
சுகாதாரப் பராமரிப்புக்கான நிதி முக்கியத்துவம் குறித்து பிராந்திய அமைச்சர்கள் மட்ட மாநாடு நேற்று கொழும்பு சினமன் ஹோட்டலில் ஆரம்பமானது. இம்மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:- சாதாரணமான காலகட்டத்தில் மட்டுமன்றி அசாத்தியமான காலகட்டத்திலும் அரசாங்கம் வடக்கு, கிழக்கு உட்பட சகல பகுதிகளிலும் சிறப்பான அவசர சுகாதார சேவைகளை மேற்கொண்டு வந்துள்ளது.
இதற்கு உதாரணமாக சுனாமி கால கட்டத்தைக் குறிப்பிட முடியும். சுனாமிக்குப் பிறகு குறிப்பிடத்தக்க எந்த நோயும் இலங்கையில் பரவாமை இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகியுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பயங்கரவாதப் போராட்டத்தின் மத்தியிலும் சிறந்த சுகாதார சேவை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கிலும் சுகாதார சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் மோதல்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை எந்தத் தடங்களுமின்றி சுகாதார சேவை முன் னெடுக்கப்பட்டு வருகிறது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கும் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அரசாங் கத்தினால் அனுப்பப்படுகின்றன. போது மான வைத்தியர்கள் மற்றும் தாதிகளும் அனுப்பப்பட்டு சிறந்த சுகாதார சேவை அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புலிகள் மருந்துகளை தமது சொந்தப் பாவனைக்காக பயன்படுத்துகின்றனர் எனத் தெரிந்தும் அப்பகுதி மக்களின் நல னைக் கருத்திற்கொண்டு அரசு செயற்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் பல்வேறு ஆபத்துக்களைச் சந்திக்க நேர்ந்த போதும் தரை, கடல், ஆகாய மார்க்கமாகவும் மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டன.
இத்தகைய விடயங்களைப் பொறுத்த வரையில் பல்தேசிய நிதி நிறுவனங்கள் வர்த்தக சமூகங்கள், தனியார் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து செயற்படுவதையும் குறிப்பிட வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.