எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இலங்கை தமிழ் மாஜிஸ்திரேட்டுக்கு அமெரிக்காவின் தீரப் பெண் விருது

இலங் கையைச் சேர்ந்த தமிழ் நீதிபதிக்கு, அமெரிக்காவின் தீரப் பெண்மணி (உமன் ஆப் கரேஜ்) விருது கிடைத்துள்ளது. அமெரிக்க அரசின் வெளியுறவு அமைச்சகம் இந்த விருதினை அளித்துள்ளது. இலங்கையில், துணிச்சலுடனும், திறமையுடனும், தைரியத்துடனும் செயல்பட்டு வருவதற்காக இந்த விருது அந்த பெண் தமிழ் நீதிபதிக்குக் கிடைத்துள்ளது.

விருது பெற்றுள்ள நீதிபதியின் பெயர் ஸ்ரீநிதி நந்தசேகரன். விருது பெற்ற ஸ்ரீநிதி குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக் கூறுகையில்,  ஆண்டுதோறும் உலகெங்கும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் இணைந்து திறமையுடன் செயல்படும் பெண்மணிகளை தேர்வு செய்து அவர்களுக்கு உமன் ஆப் கரேஜ் விருதினை அளித்து வருகின்றன.

இந்த ஆண்டு பல உலக நாடுளைச் சேர்ந்த 80 பெண்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. மனித உரிமை முதல் பெண்களின் பிரச்சினைகள் வரை பல்வேறு பிரிவுகளில் திறமையுடன் செயல்படக் கூடிய பெண்கள் இவர்கள். இவர்களில் ஸ்ரீநிதி நந்தசேகரன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தனது வாழ்நாள் முழுவதும் சிறந்த வக்கீலாகவும், இப்போது நீதிபதியாகவும் திறம்பட, தைரியத்துடனும், துணிவுடனும் பணியாற்றி வருகிறார் ஸ்ரீநிதி. இலங்கையின் அனைத்து இனப் பிரிவினருக்கும் பாரபட்சம் பார்க்காமல் நீதி கிடைக்க வழி செய்துள்ளார். மேலும், நாட்டின் மிகவும் சிக்கலான பகுதிகளிலும் கூட அவர் திறமுடனும், தீரமுடனும் பணியாற்றியுள்ளார். அவரது பணிகளிலேயே மிகவும் சிறப்பானது, குழந்தைகள் நலனுக்காக அவர் மேற்கொண்டு வரும் சேவையாகும் என்று பிளாக் கூறியுள்ளார்.

சர்வதேச, உள்ளூர் அழுத்தங்களுக்கு நாம் ஒரு போதும் அடிபணியோம். – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgநாட்டுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. நாம் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற நோக்கில் ஜனாதிபதியாகிய என்னையும், பாதுகாப்பு செயலாளரையும், இராணுவத் தளபதியையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக கொண்டு செல்வதற்குத் தேவையான தகவல்களைச் சிலர் திரட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளைகளினதும் சங்கங்களினதும் பிரதிநிதிகள் சந்திப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. இச்சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், புலிகளின் பணத்திற்கும், அவர்களின் கவனிப்புக்கும் மதிமயங்கிய சிலரே இவ்வாறான செயலில் ஈடுபடுகின்றனர். எமது நாட்டிலேயே பிறந்து வளர்ந்த ஒரு சாராரும், வெளிநாட்டில் வாழுகின்ற வேறு சக்திகளும் தமக்குக் கிடைக்கின்ற பொருளாதார, அரசியல் இலாபங்களையும், பணத்தையும் மட்டுமே மனதில் கொண்டு இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்.

சிலர் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மட்டுமல்ல அமெரிக்காவிலும் இருந்து கொண்டு இவ்வாறான செயலில் ஈடுபடுகின்றனர். நாட்டுக்கு கெடுதல் செய்யும் இவ்வாறான சூழ்ச்சிக்காரர்கள் நாம் முன்னெடுக்கின்ற வேலைத் திட்டங்களை தோல்வி அடையச் செய்வதற்கு எமக்கு எதிராக சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

நாம் புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கை இன்னொரு இனத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கையாக அமையாது. பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பது என்பது இந்த நாட்டில் வாழுகின்ற சகல இனமக்களுக்கும் விமோசனத்தைப் பெற்றுக் கொடுக்கும் காரியமாகவே கருதுகிறேன்.

இந்த நிலைமையை சர்வதேச சமூகத்திற்கு நன்கு தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த நாட்டை அழித்தாவது, புலிகளுக்கு நாட்டைத் தாரை வார்த்தாவது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் ஒரு சாரார் செயற்படுகின்றனர். அவர்கள் புலிகளுடன் சேர்ந்து செயற்படுகின்றனர். இலங்கை தொடர்பான தவறான அபிப்பிராயங்களை பல்வேறு வழிகளிலும் இவர்கள் உலகிற்கு வழங்கி வருகின்றனர். இவற்றைத் தோற்கடிப்பதற்காக நாம் செயற்படுகின்றோம்.

எமக்கு எதிராக அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த அழுத்தங்களின் நோக்கம் நாம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துவதே. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எந்தவிதமான உள்ளூர், வெளியூர் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் நாம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்போம். அவற்றை ஒரு போதும் இடைநிறுத்த மாட்டோம்.

நாம் பயங்கரவாதத்தை முழுமையாகத் தோற்கடிப்போம். அதற்காக எம்மை ஏற்கனவே அர்ப்பணித்து விட்டோம். இந்நாட்டில் வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் சகலரையும் ஒரே மக்களாக பார்க்கிறோம் என்றார்.

வருண் காந்தி இன்று பிலிபித்தில் கைதாகலாம்?

20-varun-ganthi.jpgவருண் காந்தியின் முன்ஜாமீன் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து இன்று பிலிபித் தொகுதிக்கு வருண் காந்தி செல்கிறார். அங்கு போலீஸாரிடம் கைதாக அவர் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. பிலிபித் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வருண் காந்தி, அங்கு நடந்த கூட்டத்தில், இஸ்லாமியர்களை தலையை வெட்டுவேன், கையை வெட்டுவேன் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் புகாரின் பேரில் பிலிபித் தொகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தில் வருண் காந்தி மீது இரு மதப் பிரிவினருக்கிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை ரத்து செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார் வருண் காந்தி. மேலும், முன்ஜாமீ்ன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்திலும் மனு செய்தார். இதில் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்தது. இந்த முன்ஜாமீன் இன்றுடன் முடிகிறது.

அதேசமயம், அலகாபாத் நீதிமன்றம், வருண் காந்தியின் கோரிக்கையை தள்ளுபடி செய்து விட்டது.  இந்தச் சூழ்நிலையில் தனது முன்ஜாமீனை நீட்டிக்க விரும்பாமல் கைதாக முடிவு செய்து விட்டாராம் வருண் காந்தி. அதன்படி இன்று பாஜகவினருடன் அவர் பிலிபித் செல்கிறார். அங்கு அவர் போலீஸாரிடம் கைதாவார் என்று கூறப்படுகிறது. மேலும் வருண் காந்தியின் முன்ஜாமீன் மனுவை இன்று அவரது வக்கீல்கள் உயர்நீதிமன்றத்தில் வாபஸ் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

முன்ஜாமீனை நீட்டிக்காமல், அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்யாமல் கைதாக வருண் காந்தி முடிவு செய்திருப்பது அரசியல் லாபம் கருதியே என்று கூறப்படுகிறது. தான் கைதானால் அதனால் அனுதாபம் ஏற்படும், அது தனக்கும், பாஜகவுக்கும் லாபமாக அமையும் என்பதால் இந்த முடிவை வருண் காந்தி எடுத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் தனது முடிவை இதுவரை வருண் காந்தி கட்சி மேலிடத்தில் சொல்லவில்லையாம். இருப்பினும் எது செய்தாலும், சட்டத்திற்கு உட்பட்டு செய்யுமாறு வருண் காந்திக்கு கட்சி மேலிடம் அறிவுரை கூறியுள்ளதாம்.

இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையின்போது ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகும் ஆபத்து ஐ.நா. அதிகாரிகள் அச்சம்

un-logo.jpgஇலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையின்போது பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படும் பயங்கர நிலை உருவாகி உள்ள தாக ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் மோதலில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண் டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  குறிப்பாக 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையின் அனுசரணையாளராக விளங்கிய நோர்வே இரு தரப்பையும் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற உதவுமாறு கேட்டுக்கொள்ளும் முயற்சியை மேற்கொள்கிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள்சபையை மையமாகக் கொண்ட செய்திச் சேவையொன்று இது தொடர்பாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதலில் சிக்குண்டுள்ள மக்களைப்  பலவந்தமாக வெளியேற்ற வேண்டும் எனத் தெரிவித்த ஐ.நா. அதிகாரி, அதற்காக ஐக்கிய நாடுகள் என்ன செய்ய முயல்கிறது என்பதை விவரித்தார்.

மோதலை இடைநிறுத்தி சர்வதேச கண்காணிப்பாளர்கள் பொதுமக்களை
வெளியேற்ற உதவுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை இரு தரப்பும் ஏற்காத நிலையில் இரு தரப்பையும் இணங்கச் செய்வதற்கான திட்டமொன்று குறித்து அதிகாரி தெளிவுபடுத்தினார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி இராணுவ நடவடிக்கையின் போது பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படும் அதி பயங்கரமான நிலை குறித்து நாங்கள் அச்சமடைந்துள்ளோம். நோர்வே சந்தடியற்ற விதத்தில் இரு தரப்புடனும் பேசி உடன்பாடொன்றை எட்ட முயல்கிறது எனத் தெரிவித்த அதிகாரி, எனினும் இதனை சாதிப்பதற்கு நோர்வேயிடம் போதிய தொடர்புகள் உள்ளனவா என்ற சந்தேகம் ஐக்கிய நாடுகளில் உருவாகி வருகின்றது என்றார். அமெரிக்கா தனது இராணுவத்தைப் பயன்படுத்தி மக்களை வெளியேற்ற உதவுவதற்கு முன்வந்தது. எனினும் அதுவும் நிராகரிக்கப்பட்டது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

“மக்கள் ஆணையுடன் விரைவில் ஆட்சிக்கு வருவேன்’ – ரணில்

ranil-wickramasinghe.jpgஜனநாயக வழியின் மூலம் மக்களாணையுடன் விரைவில் ஆட்சிக்கு வருவேன் என தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டை அழிவிலிருந்து மீட்டெடுப்பதற்காக அனைவரும் ஒன்று படவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

ஆசியாவின் சிறந்த நாடுகளில் ஒன்றாக விளங்கிய இலங்கையின் இன்றைய நிலைமை பெரும் கவலையளிப்பதாகவுள்ளதாகவும் அவர் வேதனையை வெளியிட்டிருக்கின்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது 60 ஆவது பிறந்த தினத்தையொட்டி கொழும்பு ஹீணுப்பிட்டிய கங்காராம விகாரையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் கங்காராம விகாராதிபதி கலபொட ஞானிஸ்ஸர தேரோ தலைமையில் இடம்பெற்ற இந்த பூஜை வழி பாட்டில் ரணில் விக்கிரம சிங்கவுடன், அவரது பாரியார் மைத்திரி விக்கிரம சிங்கவும் கலந்துகொண்டார். பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகளின் உறுப்பினர்கள், மேல்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இதில் பங்கேற்றனர்.

கங்காராம விகாராதிபதியுடன் கோட்டே ரஜமகாவிகாராதிபதி கலாநிதி மாதுளுவாவே சோபித தேரோ, காணி மகாவிகாராதிபதி பேராசிரியர் மகிந்த சங்க ரக்கித்த தேரோ ஆகியோர் ரணிலுக்கு நல்லாசிகளை வழங்கியதோடு விஷேட பூஜை வழிபாடுகளை நடத்தினர்.

இறுதியில் கூடியிருந்தவர்கள் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.

60 வருடங்கள் என்பது வாழ்க்கைப் பயணத்தில் நீண்டதொரு தூரமாகும். இப்பயணத்தில் நிறையவே அனுபவங்களைப் பெற்றுக்கொண்டதோடு, பல சவால்களையும் எதிர் கொண்டுள்ளேன். அந்த அனுபவங்களும், சவால்களும் தான் தொடர்ந்து பயணிப்பதற்கு உதவியாக அமைந்துள்ளதாகவே உணர்கின்றேன். சுதந்திர இலங்கையில் பிறந்த நான் மாதுளுவாவே சோபித தேரோ குறிப்பிட்டது போன்று எனது கல்வியை “குமாரரொதய’, “நவமக’ ஆகிய பாடப்புத்தகங்களினூடாகவே ஆரம்பித்தேன். ஆரம்பத்திலேயே சவால்கள் நெருக்கடிகள் என்பன பற்றி புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

டட்லி சேனாநாயக்க, ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர்.ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, டீ.பி.விஜேதுங்க ஆகியோருடன் இணைந்து செயற்பட்டதால் எனது அரசியல் வாழ்க்கையில் நிறையவே அனுபவங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் வெற்றி தோல்வி இரண்டுக்கும் முகம்கொடுக்கக்கூடிய தைரியம் சுயமாகவே வந்தது. அவர்கள் காட்டிய பாதையிலிருந்து இன்று வரையில் நான் விலகிச் செயற்படவில்லை. எதிர்காலத்திலும் அந்த அடிச்சுவட்டிலேயே பயணிப்பேன்.

எனது இந்த வாழ்க்கைப் பயணத்தின் போது அந்த தலைவர்களிடமும் எனது தாய், தந்தையாரும், கட்சி ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்புகளை இன்று நன்றியுடன் நினைவுகூர்கின்றேன்.

வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகள், முரண்பாடுகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பதைப் பற்றி நான் தம்ம பதத்தை படித்து தெரிந்துகொண்டேன்.

நான் ஜனநாயகத்தின் மீது முழுமையான நம்பிக்கைகொண்டவன். ஜனநாயக வழிக்கு அப்பால் நின்று அரசியல் அதிகாரங்களைப் பெற ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன். எதிர்காலத்திலும் ஜனநாயக வழியிலேயே மக்களாணையைப் பெற்று ஆட்சிக்கு வந்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவேன். இதற்கு ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து சக்திகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.

ஆசியாவின் மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றாக திகழ்ந்த எமது நாட்டின் இன்றைய நிலை கவலை தரக்கூடியதாக உள்ளது. இந்தச் சோதனையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவேண்டும். அதற்காக தேசத்தை நேசிக்கும் மக்கள் ஓரணியில் திரள வேண்டும். நான் பெற்ற அனுபவங்கள், சவால்களைப் பயன்படுத்திக்கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்து மக்களுக்கு நிவாரணங்களைத் தேடிக்கொடுத்து சுதந்திரமான ஜனநாயக நாட்டைக் கட்டியெழுப்புவதே எனது இலட்சியமாகும்.

‘ புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை அருகே ஷெல் வீச்சுக்களில் 20 பேர் பலி”

இலங்கையின் வடக்கே அரச படைகளுக்கும் வி்டுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் எஞ்சியுள்ள ஒரேயொரு தற்காலிக மருத்துவமனையாகிய புது மாத்தளன் மருத்துவமனையைச் சூழ்ந்த பகுதிகளில் இன்று பிற்பகல் 3 மணியளவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல்களில் 140க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்கள் இந்த மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், சிகிச்சை பயனளிக்காத காரணத்தினால் அவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளார் டாக்டர் ரீ.வரதராஜா தெரிவித்தார்.

வியாழக்கிழமை மாலை வரையில் தொடர்ச்சியாக காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்ததாகவும், ஷெல் தாக்குதல்களில் சம்பவ இடங்களில் இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படவில்லை என்றும், டாக்டர் ரீ.வரதராஜா கூறினார்.

புதுமாத்தளன் மருத்துவமனையில் குழந்தைகள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்ற விடுதி பக்கமாக உள்ள வேலியருகில் இன்று மாலை 6 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஷெல் ஒன்று வந்து வீழ்ந்து வெடித்ததாகவும், இதனையடுத்து, அந்த குழந்தைகள் விடுதியில் தங்கியிருந்த நோயாளர்கள் அனைவரும் மருத்துவமனையைவிட்டு ஓடிவிட்டதாகவும், தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள் காரணமாக மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவர்களும் பதட்டத்தி்ற்கு உள்ளாகியிருப்பதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.வரதராஜா தெரிவித்தார். அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தில் உள்ள புதுமாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், வலயர்மடம் ஆகிய பிரதேசங்களில் இன்று நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் உட்பட 44 பேர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்திருக்கி்ன்றார்கள்.

முன்னதாக இன்று அதிகாலை புதுமாத்தளன் மருத்துவமனைமீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 நோயாளர்கள் கொல்லப்பட்டதாகவும், இரண்டு மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பலர் காயமடைந்ததாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.வரதராஜா தெரிவிக்கின்றார்.

மேலும் 485 பொதுமக்கள் புல்மோட்டைக்கு அனுப்பப்பட்டனர்

navy_rescue_civil.jpgஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவடத்தில் போர் நடக்கும் பகுதிகளில் காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் அடங்கிய சுமார் 485 பொதுமக்கள் வியாழக்கிழமை செஞ்சிலுவை சங்கக் கப்பல் மூலம் திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை தற்காலிக மருத்துவ முகாமுக்கு கொண்டுவரப்பட்டனர்.

இவர்களில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தவர்கள் என்றும் பிறர் அவர்களுக்குத் துணையாக வந்த குடும்ப உறுப்பினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வந்தவர்கள் கடலிலிருந்து படகுகள் மூலம் கரைக்கு அழைத்துவரப்பட்டனர். இவர்களில் பலருக்கு உடனடி மருத்துவ உதவி, புல்மோடையில் அமைந்துள்ள இந்திய மருத்துவ முகாமில் அளிக்கப்பட்டது.

“லாகூர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இந்தியப் படையினர் பாவனையில் உள்ளவை’

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது இடம்பெற்ற தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ரொக்கட் லோஞ்சர்கள், வெடி பொருட்கள் என்பன இந்தியப் படையினர் பயன்படுத்துபவையென அறியவந்துள்ளதாக பாகிஸ்தானின் “டோன்’ (ஈச்தீண) பத்திரிகை புதன்கிழமை தெரிவித்திருக்கிறது. தாக்குதல் இடம்பெற்ற பகுதியிலிருந்து 4 ரொக்கட் லோஞ்சர்களும் 9 வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இரசாயனப்பகுப்பாய்வு அறிக்கையின் பிரகாரம் இவை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு இந்தியப் படைகளால் உபயோகிக்கப்பட்டவை என்று “டோன்’ பத்திரிகை கூறியுள்ளது.

இவற்றுடன் 40 கிரனேட்டுகள் , 10 எஸ்.எம்.ஜி., 5 பிஸ்ரல்கள், இவற்றுடன் 577 எஸ்.எம்.ஜி. யின் ரவைகள், 160 ரவைகள் என்பனவும் அப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் அன்றைய தினம் 312 சன்னங்களை சுட்டு வெளியேற்றியிருந்ததுடன் 2 ரொக்கட்டுகளை ஏவியும் 2 குண்டுகளை வெடிக்க வைத்தும் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

தற்கொலை அங்கி எதுவும் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கான நோக்கத்தடன் அவர்கள் அங்கு வரவில்லையெனத் தெரிகிறது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட எஸ்.எம்.ஜி. இயந்திரத் துப்பாக்கிகள் ரஷ்ய, ஜேர்மன் மற்றும் சீனத் தயாரிப்புகளாகும் என்று விசாரணையாளர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை டோனுக்கு தெரிவித்துள்ளார்.

லாகூரில் மார்ச் 3 இல் இடம்பெற்ற தாக்குதலில் பாகிஸ்தானின் 6 பொலிஸாரும் ஒரு வாகன சாரதியும் கொல்லப்பட்டனர். இலங்கை கிரிக்கெட் அணியின் 6 வீரர்கள் காயமடைந்தனர். இத்தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

அரச முகவரமைப்பொன்றின் உதவியின்றி நாட்டிலுள்ள எந்தவொரு போராளி அமைப்புகளாலும் இத்தாக்குதலை நடத்தக் கூடிய ஆற்றல் இல்லையென்ற அபிப்பிராயத்தை விசாரணையாளர்கள் கொண்டுள்ளனர்.

“ஆயுதங்கள் மற்றும் தொடர்பாடல் வலைப்பின்னல் என்பவையே தாங்கள் இவ்வாறு கருதுவதற்கு காரணம் என்றும் அதாவது அரச முகவரமைப்பொன்றும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது’ என்று விசாரணையாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

100 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள போதும் இதுவரை எந்தவொரு பயங்கரவாதியும் கைது செய்யப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக சகல பயங்கரவாதிகளும் பழங்குடியினர் பகுதிக்கு தப்பிச் சென்றுவிட்டனர். பொலிஸாரின் தாமதமான செயற்பாட்டால் அவர்கள் தப்பிவிட்டனர் என்றும் விசாரணையாளர் தெரிவித்துள்ளார்.

நான்கு நோக்கத்துடன் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணையாளர்கள் இப்போது உறுதியான விதத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்துதல், வெளிநாட்டு விளையாட்டுக் குழுக்கள் பாகிஸ்தானுக்கு வருவதை நிறுத்துவது, பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையை இழக்கச் செய்வது, தனது அரச முகவரமைப்பு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யிலும் பார்க்க ஆற்றல் உடையது என்று பாகிஸ்தானுக்கு வெளிப்படுத்துவது என்பனவே தாக்குதலின் முக்கிய நோக்கங்கள் என்று விசாரணையாளர்கள் கூறியுள்ளனர்.

பஞ்சாப் மேலதிக பொலிஸ்மா அதிபர் சலாகுடீன் கான் நியாஸி தலைமையில் 4 உறுப்பினர்கள் அடங்கிய பொலிஸ் குழுவும் சமஷ்டி விசாரணை முகவர் நிலையம் , ஐ.எஸ்.ஐ. புலனாய்வு பிரிவு என்பனவற்றை உள்ளடக்கிய கூட்டு விசாரணைப் பிரிவும் லாகூர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துகின்றன.

அம்பாறையில் சொக்லேட் உண்ட 13 மாணவர்கள் திடீர் சுகவீனம்

t-mala-stu.pngஅம்பாறை காமினி வித்தியாலயத்தில் ஆறாம் ஆண்டு மாணவிகள் 13 பேர் சொக்லேட் உண்டதன் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேற்படி வித்தியாலயத்தின் 6 ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவி தனது பிறந்த தினத்தை முன்னிட்டு சக மாணவிகளுக்கு சொக்லேட் பகிர்த்துள்ளார். சொக்லேட் உண்ட சிறுது நேரத்தில் மாணவிகள் மயக்கமடைந்ததுடன் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்டனர். பாடசாலை அதிபர், மாணவர்களை உடனடியாக அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.

பிறந்த தினத்தை முன்னிட்டு எனக்கு தந்த சொக்லேட்டை நான் உண்டேன். சவர்க்கார மணம் வீசியதுடன் சவர்க்கார சுவையாகவும் இருந்தது. எனக்கு வாந்தி வருவதுபோல் இருந்தது. அவசர அவசரமாக வெளியே ஓடினேன்.

அப்போது ஏனைய மாணவர்களும் வாந்தி எடுத்துக்கொண்டு இருந்தனர் என மாணவன் ஒருவன் தெரிவித்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறினர். சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் இழப்பு குறித்து சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாது கொழும்பிலுள்ள ஐ.நா.பிரதிநிதி கூறியதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கை

வன்னியில் மோதல்கள் நடைபெறும் பகுதியிலுள்ள பொதுமக்களின் இழப்புகள் குறித்த சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிட இணைப்பாளரும் மனிதநேய இணைப்பாளருமான நெய்ல் புனே தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போதே நெய்ல் புனே இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, வன்னியில் நடைபெறும் மோதல்களின் இழப்புகள் தொடர்பாக ஐ.நா.வால் மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 2,683 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 7,241 பேர் காயமடைந்துமுள்ளதாகக் கூறப்பட்டுள்ளமை எதுவித நம்பகத் தன்மையானதோ, சுயாதீனமான தகவல்களைக் கொண்டோ வெளியிடப்படவில்லையென அமைச்சர் ரோஹித போகொல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பொதுமக்களின் இழப்புகளில் மூன்றில் இரண்டு பகுதி அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளமையும் முழுப்பொய்யென அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த 18 ஆம் திகதிவரை 4,120 காயமடைந்த பொதுமக்களும் 1,485 பராமரிப்பாளர்களும் கப்பல் மூலம் ஐ.சி.ஆர்.சி.யின் உதவியுடன் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனரெனவும் வெளிவிவகார அமைச்சின் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 17 ஆம் திகதி ஐ.சி.ஆர்.சி.யினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி அன்றைய திகதியில் காயமடைந்திருந்த அனைவரும் கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் 7,241 பேர் காயமடைந்துள்ளதாக ஐ.நா.வின் அறிக்கை கூறுவது நம்பத்தகுந்ததல்ல என்ற காரணத்தினாலலேயே அந்த அறிக்கையை அரசு நிராகரித்ததாகவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த அறிக்கை, வெளிநாட்டு உதவி அமைப்புகளின் கருத்தின் அடிப்படையிலேயே தனது அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டதாகவும் ஆனால் அதிலுள்ள பொதுமக்களின் இழப்புகள் குறித்த தொகை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் நெய்ல் புனேதெரிவித்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.