எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

நெடுந்தீவு மேற்கு வைத்தியசாலையை 30 வருடங்களின் பின் மீண்டும் இயங்கவைக்க முயற்சி.

30 வருடங்களாக இயங்காமலுள்ள நெடுந்தீவு மேற்கு வைத்தியசாலையை மீண்டும் இயங்கச் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற போர் காரணமாக இவ்வைத்தியசாலை செயலிழந்திருந்தது.

இதன் காரணமாக நெடுந்தீவு மேற்கு மக்கள் தங்கள் வைத்திய தேவைகளுக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இவ்வைத்தியாசாலை மீண்டும் இயங்கத் தொடங்கினால் இம்மக்களின் சிரமங்களை குறைக்க முடியும் எனவும், இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும். நெடுந்தீவு வைத்தியசாலை வைத்திய அதிகாரி செல்வி மகேஸ்வரி நன்னித்தம்பி தெரிவித்துள்ளார்.

வாய்பேசமுடியாத மற்றும், செவிப்புலனற்றவர்களுக்கு விசேட அடையாள அட்டைகள்.

முற்றிலும் வாய்பேச முடியாத மற்றும், செவிப்புலனற்றவர்களுக்கு விசேட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு யாழ்ப்பாணத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட பிரதேசச் செயலகங்கள் ஊடாக தற்போது இவ்வடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறித்த குறைபாடுடையவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்களின் சான்றிதழ்களோடு பிரதேசச் செயலகங்கள் மூலம் இவ்வடையாள அட்டைகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விண்ணப்பங்கள் கொழும்பிலுள்ள சமூக சேவைகள் திணக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு விசேட அடையாள அட்டைகள் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினரின் சோதனை நடவடிக்ககைகள் மற்றும், பல்வேறு தேவைகளின் போதும் இந்த அடையாள அட்டைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதால் இதனைப் பெற்றுக்கொள்ள குறித்த குறைபாடுடையவர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கிளிநொச்சி, மாங்குளம் பகுதிகளில் புதிய பொலிஸ் நிலையக் கட்டங்கள் அமைக்கும் பணிகள் பூர்த்தி.

கிளிநொச்சி மாங்குளம் பகுதிகளில் நிர்மானிக்கப்பட்டு வரும் பொலிஸ் நிலையக் கட்டடங்களின் பணி பூர்த்தியடையும் நிலையிலுள்ளதால் அடுத்த மாதமளவில் இவை பூரணப்படுத்துப்பட்டு இயங்கத் தொடங்கும் என பொலிஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். போர் முடிவுற்ற பின்னர் இப்பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படும் பணிகள் ஆரம்பமாகியிருந்தன. வன்னியில் மல்லாவி, ஒட்டுசுட்டான் ஆகிய பகுதிகளிலும் பொலிஸ் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இப்பகுதிகளில் பணியாற்ற ஐந்து மாதகாலம் பயிற்சியளிக்கப்பட்ட பொலிசார் தயாராகவுள்ளதாகவும், தமிழ், முஸ்லிம் இளைஞர்களை மேலும் பொலிஸில் இணைத்து அவர்களுக்கு பயிற்சிகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையம் ஏற்கனவே இருந்த இலங்கைப் பொலிஸ் நிலைய வளாகத்திலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்வளாகத்தில் விடுதலைப்புலிகளின் காவல்துறைத் தலைமைப்பணியகம் முன்னர் அமைக்கப்பட்டிருந்தமையும், தற்போது அக்கட்டடம் அகற்றப்பட்டு புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அரியாலை கிழக்கில் 450ஏக்கர் விளைநிலம் மக்களிடம் கையளிக்கப்பட்டது.நேற்று யாழ். வருகை தருவதாகவிருந்த பசில்ராஜபக்ச வரவில்லை.

paddyபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று யாழ்ப்பாணம் வருகை தரவிருந்த அமைச்சர் பசில்ராஜபக்ச வருகை தரவில்லை. யாழ்.அரியாலைக் கிழக்கில் 450ஏக்கர் விளைநிலத்தை பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவித்து பெரும்போக நெற்செய்கைக்காக மக்களிடம் கையளிக்கும் ஏர்பூட்டு விழா நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்வு உட்பட யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச யாழ்ப்பாணம் வருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இறுதித் தருணத்தில் அவரது வருகை தவிர்க்க முடியாத காரணங்களினால் தடைப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஏர்பூட்டு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் சந்திரசிறி ஆகியோர் கலந்து கொண்டு விடுவிக்கப்பட்ட நிலப்பரப்பை மக்களிடம் கையளித்து, ஏர்பூட்டும் விழாவை ஆரம்பித்து வைத்தனர்.

கமநலத் திணைக்களத்தின் யாழ்.மாவட்ட உதவி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற ஏர்பூட்டு விழா நிகழ்வில் யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ்.மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் அணு உலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய விஞ்ஞானிகள் குழு

chmbika.jpg2020ல் இலங்கையின் அணுசக்தி ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக அணு உலையொன்றை அமைப்பதற்கான சாத்தியக் கூற்றை ஆராய்வதற்காக ஐந்து விஞ்ஞானிகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஆறு மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதோடு அதன் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க கூறினார்.

அண்மையில் வியன்னாவில் நடைபெற்ற உலக அணுசக்தி அதிகார சபையின் வருடாந்த அமர்வு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, 1950களிலே அணு சக்தியூடாக மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்து இந்தியா கவனம் செலுத்தியது. பல நாடுகள் அணுசக்தி மூலமே கூடுதலாக மின்சாரம் உற்பத்தியில் செய்கின்றன. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் மொத்த மின் உற்பத்தி இரண்டு வீதத்தை அணுசக்தி மூலமே மேற்கொள்கின்றன.

அணுசக்தியினூடாக மின் உற்பத்தி செய்வது மிகவும் பெரிய சவாலாகும். அதற்கு முகம் கொடுத்து வெற்றிகொள்ள நாம் தயாராக உள்ளோம். இதற்கு வெளிநாடுகளின் உதவி தேவைப்படும். அணுஉலையை எங்கு அமைப்பது? எந்த நாட்டின் உதவியைப் பெறுவது, முதலீட்டார்களின் உதவி போன்ற விடயங்கள் குறித்து இது வரை தீர்மானிக்கப்படவில்லை.

இலங்கையின் பொருளாதாரம் 8.5 வீதத்தை எட்டியுள்ள நிலையில் எமது மின்சக்தி பாவனை கடந்த 8 மாதத்தில் 8 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2018 ஆகும் போது எமது மின்சக்தி தேவை இரண்டு மடங்கால் அதிகரிக்கும். அந்த நிலையில் 2020ன் பின் நாடு இருட்டில் புதையும் நிலையே ஏற்படும். அதனால் அணுமின் உற்பத்தி போன்ற மின் உற்பத்திகள் குறித்து இப்பொழுது கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் அணு உலையொன்றை அமைக்க 15 வருடங்கள் பிடிக்கும் 2020-25ற் இலங்கையில் அணு உலையொன்றை அமைக்க இப்பொழுது பூர்வாக பணிகளை முன்னெடுக்க வேண்டும். இதற்கு உதவி வழங்க சர்வதேச அணுசக்தி அதிகார சபை இணக்கம் தெரிவித்துள்ளதோடு வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளது. அந்த வழிகாட்டல்களை பின்பற்றி நாம் அணு உலை அமைப்பதற்கான பணிகளை முன்னெடுக்க உள்ளோம்.

வியன்னா மாநாட்டின் போது இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிரான்ஸ் நாட்டு பிரதிநிதிகளுடனும் பேசினோம். அணு உலைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யா வழங்குவதோடு அணு உலையில் இருந்து வெளியாகும் கழிவுகளை அந்த நாடு பொறுப்பேற்கும். இது தொடர்பில் ரஷ்யாவுடன் பேச உள்ளோம்.

அணு உலைகளில் யுரேனியத்திற்குப் பதிலாக தோரியத்தை பயன்படுத்தும் புதிய முறையொன்றை இந்தியா கண்டுபிடித்துள்ளது. 30 வீதமான தோரியம் இலங்கை கடற்பரப்பில் காணப்படுகிறது. அது குறித்து நாம் கவனம் செலுத் தியுள்ளோம் என்றார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு முல்லை, வவுனியாவில் இன்று நஷ்டஈடு

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வுகள் இன்று வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறுகின்றன. புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் டியூ குணசேகர இந் நிகழ்வுகளில் கலந்து கொண்டு நஷ்டஈடுகளை வழங்கவுள்ளார்.

இதற்கிணங்க முல்லைத்தீவில் 150 குடும்பங்களுக்கும், வவுனியாவில் 30 குடும்பங்களுக்கும் இன்று நஷ்ட ஈடுகள் வழங்கப்படுகின்றன. இன்று காலை வவுனியாவிலும், பிற்பகல் முல்லைத்தீவிலும் நஷ்டஈடு வழங்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. யுத்தத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு நஷ்ட ஈட்டுக் காசோலைகள் அமைச்சரினால் இந் நிகழ்வுகளின் போது வழங்கப்படுகின்றன.

இதேவேளை, புனர்வாழ்வளிக்கப்பட்ட 402 புலி உறுப்பினர்கள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். வவுனியாவில் இந் நிகழ்வு இடம் பெறுவதுடன் அமைச்சர் டியூ குணசேகர இந் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்டு தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்ட 7000 இற்கும் மேற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்குத் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் வேலை வாய்ப்புச் சந்தையொன்றும் இன்று வவுனியாவில் நடைபெறவுள்ளது.

புனர்வாழ்வு சிறைச்சாலைகள் அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் வேலை வாய்ப்புச் சந்தையில் தெற்கிலிருந்து பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன.புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு அவர்கள் பெற்றுக் கொண்டுள்ள பயிற்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஆடைக் கைத்தொழில், இலத்திரனியல் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை இந் நிகழ்வில் கலந்து கொள்ளும் வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளவர்களை திறமை அடிப்படையில் தேர்ந்தெடுப்பரென அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

காலி, களுத்துறை மாவட்ட தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கும் அபாயம்

lightning-000.jpgபரவலாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக காலி, களுத்துறை மாவட்டங்களின் சில தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மழை மேலும் தொடருமாயின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களும் நீரில் மூழ்கக் கூடிய வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளது. நாடெங்கிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேரமழை வீழ்ச்சி பதிவில் ஆகக்கூடிய மழைவீழ்ச்சி மன்னாரில் 70.5 மி.மீட்டர்களாகப் பதிவாகியுள்ளது என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி நேற்றுத் தெரிவித்தார்.

இதேவேளை நேற்றுக் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையுமான காலப்பகுதியில் காலி மாவட்டத்திலேயே அதிக மழை வீழ்ச்சியாக 50.7 மி.மீ. மழை பெய்துள்ளது எனவும் அவர் கூறினார்.

அடை மழை காரணமாக காலி மாவட்டத்தின் பலப்பிட்டி, எல்பிட்டி, கரந்தெனியா போன்ற பிரதேசங்களின் தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் உள்வீதிகளின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் காலி மாவட்ட இணைப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் அசித ரணசிங்க கூறினார். எல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் திடீர் மண்சரிவு காரணமாக இரு வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளரான ஜயசிங்க ஆராய்ச்சி மேலும் கூறுகையில், தற்போதைய மழைக் காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்க முடியும். இன்று பிற்பகல் அல்லது மாலை வேளையில் இடி, மின்னலுடன் நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்ய முடியும். இச்சமயம் கடும் காற்றும் வீசலாம். அதனால் இடி, மின்னல் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்வதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

இதேவேளை இடைப்பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி அடுத்த வாரத்திற்குள் ஆரம்பமாகலாமென எதிர்பார்க்கின்றோம் என்றார்.

சட்டவிரோத ஆட்கடத்தலைத் தடுக்கும் இலங்கையின் நடவடிக்கைக்கு கனடா ஆதரவு

‘ஓஸன் லேடி’, ‘சன் சீ’ ஆகிய கப்பல்கள் மூலம் சட்ட விரோதமாக கனடாவுக்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கையர் தொடர்பாக இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு உதவும் நோக்கில் கனேடிய அரசு நியமித்துள்ள விசேட பிரதிநிதி விரைவில் கொழும்புக்கு வரவுள்ளார். சட்ட விரோத ஆட்கடத்தலை தடுப்பதற்கு இலங்கையும், கனடாவும் இணைந்து செயற்படுவதென இரு நாடுகளினதும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களும் இணக்கம் கண்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (25) நியூயோர்க்கில் சந்தித்து பேசியபோதே இவர்கள் இணக்கம் கண்டிருக்கின்றனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 65 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க் சென்ற வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அங்கு கனடா, ஸ்பெயின் மற்றும் கொரிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கனேடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் லோரன்ஸ் கனோன், ஸ்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மிகெல் ஏஞ்சல் மொராட்டினஸ் கியூயோடே மற்றும் கொரிய குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சின் கன் யூ ஆகியோரை கடந்த சனிக்கிழமை (25) நியூயோர்க்கில் வைத்து அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் சந்தித்துப் பேசியுள்ளார்.

கனேடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது பயங்கரவாதத்தை தோற்கடித்த பின்னர் மீந்துள்ள விடுதலை புலிகளின் செயற்பாடுகள் கனடா உள்ளிட்ட வேறு நாடுகளில் இடம் பெறுவதாக அமைச்சர் பீரிஸ் கனேடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சரிடம் விபரித்தார்.

அதேவேளை கனடாவில் விடுதலைப் புலிகள் மற்றும் முன்னணி அமைப்புகளின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கனடா எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி கனேடிய அமைச்சர் இலங்கை அமைச்சர் பீரிஸிடம் விளக்கினார். விடுதலைப் புலிகள் இயக்கம் கனடாவில் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதையும் கனேடிய அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.

ஸ்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மிகேன் ஏஞ்சல் மெரராடி கியூயோடேயுடனான பேச்சுவார்த்தையின் போது பயங்கரவாதத்தை வெற்றிகரமாக முறியடிப்பதற்கு இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகளை ஸ்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பாராட்டினார். உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கையும் ஸ்பெயினும் பங்களிப்பு வழங்குவது பற்றியும் அங்கு கலந்துரையாடப்பட்டது.

கொரிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடனான சந்திப்பின் போது கொரிய குடியரசு பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கும் ஆதரவு தொடர்பாக அமைச்சர் பீரிஸ் கொரிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். இலங்கையின் மனித வளத்தை கொரியாவுக்கு பெற்றுக் கொள்வதை எதிர்காலத்தில் அதிகரித்துக் கொள்ள தீர்மானித்துள்ளதையிட்டும் அமைச்சர் பீரிஸ் பராட்டினார்.

405 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 20 வேலைத் திட்டங்களை கொரிய அரசாங்கம் தற்போது இலங்கையில் செயற்படுத்தி வருகிறது. அத்துடன் கொரிய வேலை வாய்ப்புகளில் இலங்கைக்காக வழங்கப்பட்ட ஒதுக்கீட்டில் 44 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தந்தை தாக்கி 7 வயது மகள் பலி கம்பளையில் கோரச் சம்பவம்

கம்பளை வட்டதெனிய கோனதிகவத்தை ஓம்பரதீகவத்தைப் பகுதியில் நேற்றுக் காலை ஏழு வயதுடைய சிறுமி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையை குறித்த சிறுமியின் தந்தையே புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதமொன்றினால் தாக்கி இந்தக் கொலை புரியப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தில் மற்றுமொரு சிறுமியும் சிறுவனும் உள்ளனர். எனினும், இவர்களின் தாய் வெளிநாடு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறுமியின் தந்தை தினமும் சிறுமி மீது தாக்குதல் மேற்கொள்வாரென பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கடுகன்னாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டிலுள்ள 20 பிரதான வைத்தியசாலைகளில் வியாழன் தாதிமார் சுகவீன விடுமுறை போராட்டம்

பதினொரு கோரிக்கைகளை முன்வைத்து நாட்டிலுள்ள 20 பிரதான வைத்தியசாலைகளில் கடமைபுரியும் தாதியர்கள் நாளை வியாழக்கிழமை ஒரு நாள் சுகவீன லீவுப் போராட்டத்தை நடத்த விருக்கின்றனர். தமது பதினொரு கோரிக்கைகள் தொடர்பில் மூன்று வருடங்களாக அரசாங்கம் ஏமாற்றிவந்ததன் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அகில இலங்கை தாதிமார் சங்கத் தலைவர் எஸ்.பி.மெதிவத்த தெரிவித்தார்.

தாதி தொழில் 12 வருட சேவைக்குப்பின்னர் முதலாம் தரத்துக்கு பதவி உயர்வை வழங்குதல், 6/2006 ஆவது சுற்று நிருபத்தின் மூலம் தாதிச்சேவை சம்பள முரண்பாட்டை நீக்குதல், தாதியர் சபையொன்றை அமைத்தல், தாதியர் சேவை யாப்பைத் திருத்துதல், விபத்துக்கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரித்தல், தாதியர் பயிற்சிப்பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை அகற்றல் உட்பட 11 கோரிக்கைகளை மூன்று வருடங்களுக்கு முன்னர் முன்வைத்தபோதும் இன்றுவரையில் அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். திங்கட்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அகில இலங்கை தாதியர் சங்கத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி நாடுமுழுவதும் தாதியர்கள் கறுப்புப்பட்டி அணிந்து தொழிற்சங்க நடவடிக்கையிலீடுபட்டபோதுஅரசாங்கம் ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்தது.ஆனால் அந்த உறுதிமொழியை அரசு காற்றில் பறக்கவிட்டபின்னர் மீண்டும் செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வுத்திட்டம் சமர்ப்பிப்பதாக அறிவித்தது. 27 ஆம் திகதியாகியும் கூட அரசு மௌனம்சாதித்து வருகின்றது. அரசு கொடுத்த காலக்கெடுவான 30 ஆம் திகதியன்று நாம் ஒருநாள் சுகவீன லீவுப்போராட்டத்தில் இறங்க முடிவு செய்திருக்கின்றோம்.

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு 56 ஆயிரம் தாதியர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் இருப்பது 21 ஆயிரம் தாதியர்களே. இவர்களில் 70 சதவீதமான தாதியர்கள் வியாழக்கிழமை சுகவீன லீவுப்போராட்டத்தை நடத்துவர். இதன் காரணமாக மக்களுக்கு எற்படும் அசௌகரியங்களையிட்டு நாம் கவலையடைகின்றோம். எமது உரிமைகளை வென்றெடுக்க அரசுக்குக் கொடுத்த கால அவகாசம் போதுமென்றே நாம் நினைக்கின்றோம். மக்கள் பாதிக்கப்படுவார்களானால் அதற்கான பொறுப்பை அரசே ஏற்கவேண்டும். 30 ஆம் திகதி போராட்டத்துக்கு அரசு உரிய முறையில் செவிசாய்க்கத்தவறினால் அரசுக்கு குறுகிய கால காலக்கெடுவை விதித்து நாடுதழுவிய தொடர் போராட்டத்தை முன்னெடுக்கத் தயங்கப்போவதில்லை.

எமது போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்ய அரச சார்பு தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுப்புக்குத் தயாரானால் அந்தச் சவாலைமுறியடிக்கவும் நாம் திட்டம் வகுத்திருக்கின்றோம். கடந்த காலத்தில் அரசசார்பு தாதியர் சங்கமும் அரச மருத்துவத்துறைத் தொழிற்சங்கமும் பல காட்டிக்கொடுப்புகளைச் செய்தனர்.
இதன் மூலம் அவர்கள் நாட்டு மக்களுக்கு துரோகமிழைத்துள்ளனர் எனவும் மெதிவத்த தெரிவித்தார்.