எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

புதுக்குடியிருப்பு முழுமையாக படையினர் வசம். உயர்மட்ட தலைவர்கள் உட்பட 250 புலிகள் மரணம்.-பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

puthukku-05-04.jpgகடந்த 24 மணிநேரத்திற்குள் ராணுவத்தினர் மேற்கொண்ட பாரிய தாக்குதலில் புதுக்குடியிருப்பு கிழக்கு பகுதி படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசாங்கம் அறிவித்துள்ள யுத்த சூனிய பிரதேசம் தவிர்ந்த வன்னிப்பிரதேசமானது படையினரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட மேற்படி தாக்குதலில் 200 வரையிலாள புலிகளின் சடலங்கள் ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள அதேவேளை 140 இற்கு மேற்பட்ட சடலங்கள் அப்பகுதியெங்கும் காணப்படுவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் புலிகளின் உயர்மட்ட தலைவர்களான தீபன் றூபன் நாகேஷ் கடாபி விதூஷா துர்க்கா மாலதி ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் கனரக ஆயுதங்கள் உட்பட எண்ணற்ற ஆயுதங்களை படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இறுதியாக கிடைத்துள்ள தகவல்களின்படி தாக்குதல்களை வழிநடத்திய பொட்டு அம்மானும் மக்கள் மத்தியில் சென்றுள்ளதாக ராணுவ உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பிரபாகரன் அங்கு பதுங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் எவரையும் வெளியேறவிடாமல் புலிகள் தமக்கு மனித கேடயங்களாக பொதுமக்களை தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

வடக்கே தொடரும் மோதல்

lankanavyboat.jpg
முல்லைத்தீவு அலம்பில் கடற்பகுதியில் வெள்ளிகிழமை நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னரும், சனிக்கிழமை அதிகாலையிலும் விடுதலைப்புலிகளின் படகுகள் மீது படையினர் நடத்திய இருவேறு தாக்குதல்களில் விடுதலைப்புலிகளின் 6 படகுகள் அழிக்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

அலம்பில் கடற்பரப்பில் 10 படகுகள் அடங்கிய விடுதலைப்புலிகளின் படகு அணியொன்றைக் கண்ட படையினர் அவற்றின்மீது நடத்திய தாக்குதலில் 4 படகுகள் அழிக்கப்பட்டதாகவும் ஏனைய படகுகள் மோதல் தவிர்ப்பு பிரதேசத்தை நோக்கித் தப்பியோடிவிட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல் சம்பவத்தில் கடற்படையின் 3 படகுகள் சிறிய சேதங்களுக்கு உள்ளாகியதாகவும் இரண்டு கடற்படையினர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.

இந்தப் படகுகளில் 3 படகுகள் தற்கொலைத் தாக்குதல் படகுகள் எனவும், ஏனையவை விடுதலைப்புலிகளின் தாக்குதல் படகுகள் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் விபரம் வெளியிட்டிருக்கின்றது.

இதேவேளை, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு புலிகளின் பாதுகாப்பு அரண்களை தகர்த்தபடி முன்னேறிச் செல்லும் இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப்படையணியினர் இப்பகுதியில் தேடுதல் நடத்தியதில் பெருந்தொகையான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்

earth_indo.jpg இந்தோனேசியாவில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் இதன் வீச்சு 6.5-என்ற அலகாக பதிவான இந்த நிலநடுக்கம் ,சுலாவிசி தீவுப்பகுதியில் கடலுக்கு அடியில் சுமார் 10-கி.மீ.ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

நாட்டை நேசிக்கும் மக்கள் என்னுடன் இருக்கும்வரை வெளிநாடுகளில் செய்யப்படும் பொய்ப் பிரசாரங்கள் வெற்றியளிக்காது – ஜனாதிபதி

mahinda.jpgநமது நாட்டவர்களில் சிலர் உலக நாடுகளுக்கு பயணம் செய்து இலங்கை அரசு யுத்த குற்றங்களை மேற்கொண்டு வருகிறது என பொய்ப் பிரசாரங்களை செய்து வருகின்றனர். தாய் நாட்டை நேசிக்கும் மக்கள் என்னுடன் இருக்கும் வரை அரசுக்கு எதிரான எந்தவொரு குற்றச்சாட்டும் வெற்றியளிக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் சுமார் 4000 பேரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைத்துக்கொள்ளும் வைபவம் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றபோது, அங்கு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

சென்னையில் 2 விடுதலைப் புலிகள் உட்பட 5 பேர் கைது

தகவல் தொடர்பு சாதனங்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த முயன்றதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இருவர் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கியூ பிரிவு போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில், இலங்கையைச் சேர்ந்த, அந்தோணி செபாஸ்டியன், இங்கிலாந்து குடியுரிமை பெற்ற இலங்கை தமிழர் மகேந்திரன் ஜெகநாதன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த குகன், கடலூரைச் சேர்ந்த ஜெயமோகன் ஆகியோரை போலீஸார் பிடித்தனர். அவர்களிடமிருந்து லேப்டாப் கம்ப்யூட்டர், சாட்டிலைட் போன் உள்ளிட்ட சில பொருட்கள் சிக்கின.

விசாரணையில் ஜெகநாதனும், செபாஸ்டியனும் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், புலிகள் இயக்கத்திற்குத் தேவையான ஆயுதங்களை வாங்க அவர்கள் சென்னையில் கூடியதும் தெரியவந்தது.

சில நாட்களுக்கு முன்புதான் லண்டனிலிருந்து திரும்பியிருந்தார் ஜெகநாதன். இவர்கள் இருவருக்கும் ஜெயமோகன் மற்றும் குகன் ஆகியோர் உதவி செய்துள்ளனர். குகனை ராமநாதபுரத்திலும், ஜெயமோகனை கடலூரிலும் வைத்து போலீஸார் கைது செய்தனர். ஜெயமோகன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.

பாகிஸ்தான் சாரதி முஹமட் கலீல் இன்று இலங்கை வருகை

mohamed-kaleel.jpg பயங்கரவாதிகளின் தாக்குதலிலிருந்து இலங்கை கிரிக்கெட் வீரர்களை பாதுகாத்த பாகிஸ்தான் சாரதி முஹமட் கலீல் இன்று இலங்கை வருகிறார். தனது குடும்பத்தினரோடு இன்று மாலை இலங்கை வரும் இவருக்கு வரவேற்பளிக்கப்படவிருக்கிறது.

ஒருவாரம் இலங்கையில் தங்கியிருக்கும் இவருக்கு நாளை இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கெளரவமளிக்கவுள்ளனர். அன்றைய தினமே விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே இராப்போசன விருந்தளித்துக் கெளரவிக்கவுள்ளார். பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரகமும் இவருக்கு வரவேற்பளிக்கவுள்ளது

இன்று பாலேந்திராவின் தமிழ் நாடகப்பள்ளி 5வது ஆண்டு நிகழ்வுகள்

தமிழ் அவைக்காற்றுக் கழகம்- லண்டன் தமிழ் நாடகப் பள்ளி மாணவர்களின் ஆக்கங்களை உள்ளடக்கிய நிகழ்வொன்று இன்று (5.4.2009) ஞாயிறு மாலை கரோவில் நடைபெறவுள்ளது.

தமிழ் நாடகப் பள்ளியின் இவ்ஜந்தாண்டு நிறைவு நிகழ்வுகள் Pinner Village Hall, Chapel Lane, Pinner HA5 1AB என்ற இடத்தில் மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சிறுவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்தும் ஆற்றுகை; .எமது கடந்த கால சிறுவர் நாடகங்களின் வீடியோ அளிக்கை; இளையவர்களின் “படிக்க ஒரு பாடம்;” – புதிய மேடை நிகழ்வு; கருத்தாடல் என்பன நடைபெறவுள்ளது.

மகனை உருப்படியாக வளர்க்காத மேனகா என்னை விமர்சிப்பதா?: மாயாவதி

mayawati.jpgபெற்றால்தான் தாயா?. அன்னை தெரசா என்ன குழந்தை பெற்றவரா?. அவர் உலக மக்களை தன் பிள்ளைகளாக நினைத்து பாசம் காட்டவில்லையா?. நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுக்காமல் பிள்ளையை வளர்த்த மேனகா காந்தி என்னைக் குறை கூறிப் பேசுவது கண்டனத்துக்குரியது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

வருண் காந்தியை வைத்து மேனா காந்திக்கும், மாயாவதிக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது. வருண் காந்தியை சிறைக்குச் சென்று பார்க்க மேனகா காந்திக்கு உ.பி. அரசு திடீரென தடை விதித்தது. இதனால் கோபமடைந்த மேனகா, மாயாவதி ஒரு குழந்தை பெற்றவராக இருந்திருந்தால் ஒரு தாயின் வலி தெரிந்திருக்கும் என்று கூறியிருந்தார்.

இதற்கு மாயாவதி தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

சட்டத்தை மீறிச் செயல்படுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். வருண் காந்தி மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை. எனது ஆட்சி, யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும். தாய்ப் பாசம் பற்றிப் பேசும் மேனகா, நமது நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான தாய்மார்களின் கவலைகள் குறித்தும் கவலைப்பட வேண்டும்.

மகனுக்கு நல்ல புத்திமதி சொல்வதை விட்டு விட்டு அவரை ஆதரித்துப் பேசும் மேனகாவின் செயல் கண்டனத்துக்குரியது. ஒரு மகனின் வலிக்காக வருத்தப்படுகிறார் மேனகா. நான் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பிள்ளைகளுக்காக கவலைப்படுகிறேன். என்னைப் பற்றி அவர் பேசிய அவமானகரமான பேச்சுக்காக என்னிடம் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் மேனகா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் மாயாவதி.

க. பொ த. (சா/தர) பரீட்சை முடிவு www.doenets.lk இணையத்தளத்தில்…

exam.jpgக. பொ. த.  சாதாரண தர புதிய பாடத் திட்டத்திற்கமைவான பரீட்சை பெறுபேறுகள் நேற்று பிற்பகல் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.

நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை கிடைக்கக் கூடியதாக பெறுபேறுகள்  நேற்று தபாலில் இடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

www.doenets.lk என்ற இணையத்தள முகவரியினூடாக பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார். நேற்று பிற்பகல் 3 மணிக்கு பெறுபேறுகள் யாவும் இணை யத்தளத்தில் இணைக்கப்பட்டன. புதிய பாடத்திட்டத்தின் படி சுமார் 3 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

பழைய பாடத்திட்டத்திற்கான க. பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரமே வெளியிடப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் நேற்று பிற்பகலிலேயே நேரடியாக பரீட்சை முடிவுகளைப் பெற்றுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

கண்டெய்னர் ஒன்றில் மூச்சுத்திணறி 44 பேர் பலி

containers_.jpgபாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் கண்டெய்னர் ஒன்றில் சுமார் 150 பேர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர்களில் 44 பேர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சட்டத்திற்கு புறம்பாக குடியேற முயன்ற இவர்கள் மூச்சு திணறி இறந்து விட்டதாக பொலிஸார் ஒருவர் தெரிவித்துள்ளார். நேட்டோ படைகளுக்கு பொருட்களை ஏற்றி செல்லும் இந்த வாகனம் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் ஊடாக இரான் செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது