கடந்த 24 மணிநேரத்திற்குள் ராணுவத்தினர் மேற்கொண்ட பாரிய தாக்குதலில் புதுக்குடியிருப்பு கிழக்கு பகுதி படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசாங்கம் அறிவித்துள்ள யுத்த சூனிய பிரதேசம் தவிர்ந்த வன்னிப்பிரதேசமானது படையினரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட மேற்படி தாக்குதலில் 200 வரையிலாள புலிகளின் சடலங்கள் ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள அதேவேளை 140 இற்கு மேற்பட்ட சடலங்கள் அப்பகுதியெங்கும் காணப்படுவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் புலிகளின் உயர்மட்ட தலைவர்களான தீபன் றூபன் நாகேஷ் கடாபி விதூஷா துர்க்கா மாலதி ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் கனரக ஆயுதங்கள் உட்பட எண்ணற்ற ஆயுதங்களை படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இறுதியாக கிடைத்துள்ள தகவல்களின்படி தாக்குதல்களை வழிநடத்திய பொட்டு அம்மானும் மக்கள் மத்தியில் சென்றுள்ளதாக ராணுவ உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பிரபாகரன் அங்கு பதுங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் எவரையும் வெளியேறவிடாமல் புலிகள் தமக்கு மனித கேடயங்களாக பொதுமக்களை தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.