ஐ.நா. சபையில் நடந்த ஓட்டெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக ஓட்டு போட்டுள்ளதன் மூலம் இந்திய அரசு இப்போது மீண்டும் ஒரு தவறை செய்துள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். நெல்லையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,
ஈழத்தில் நடைபெற்ற துயரங்களுக்கு இந்திய அரசுதான் காரணம். துயரம் என்று நான் சொன்னதற்கு காரணம் இலங்கை தமிழர்களை கருவறுக்கும் இந்த செயலுக்கு இந்த அரசு துணை போகும்போது நாம் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பதை தான் துயரம் என்றேன்.
இந்திய விடுதலைக்கு முதலில் போராடியது தென்னாடுதான். அந்த வீர சரித்திரம் இந்த மண்ணுக்கு உண்டு. அப்படிப்பட்ட இந்த மண்ணில் இன்று தமிழ் உணர்வு அழிக்கப்படுகிறது. ஈழத் தமிழர்கள் வரலாற்றில் இது ஒரு சிறிய இடைவெளி. நாடாளுமன்றத்தில் என் குரல் ஒலிக்காவிட்டாலும் மக்கள் மன்றத்தில் என் குரல் ஓங்கி ஒலிக்கும்.
இந்திய அரசு இப்போது மீண்டும் ஒரு தவறு செய்துள்ளது. ஐ.நா.சபையில் நடந்த ஓட்டெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா ஓட்டு போட்டுள்ளது. உலகில் யாருக்கும் ஏற்படாத கொடுமை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு இது தற்காலிக வெற்றிதான். அதுவும் இந்தியா உதவி செய்து ஆயுதங்களை, வீரர்களை அனுப்பியதால் கிடைத்த வெற்றி.
கடந்த 5 மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து 45 ஆயிரம் தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளனர். மூன்றரை லட்சம் தமிழர்கள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர். இது இந்திய அரசின் துரோகம். இதிலிருந்து அவர்கள் விரைவில் மீளுவார்கள். முதலில் பிரபாகரன் தப்பி ஓடும் போது சுட்டதாக கூறினார்கள். அதன்பிறகு உடலை கண்டுபிடித்ததாக கூறினார்கள்.
உண்மையிலே பிரபாகரனை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றிருந்தால் மரபணு சோதனை நடத்தி இருக்கலாமே. இன்னும் பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை உயிரோடு இருக்கிறார். அப்படியிருந்தும் மரபணு சோதனை நடத்த ஏன் முன்வரவில்லை. பிரபாகரன் மறுப்பு தெரிவிக்கவில்லையே என்று கூறுகிறார்கள். மறுப்பு அறிக்கை வெளியிட அவர் என்ன அரசியல் கட்சியா நடத்துகிறார். அவர் குரல் வெளியே வந்தாலே அவரை அழிக்க தயாராக இருக்கிறார்கள். எனவே நாங்கள் ஆராய்ந்து இந்த முடிவை வெளியே சொன்னோம். தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கினார்கள். பணம் கொடுப்பதை யாரும் கண்டிக்கவில்லை. தோற்று போன கவலை எனக்கு துளியும் கிடையாது. இதிலிருந்து தமிழகம் மீட்கப்பட வேண்டும். முத்துக்குமார் உள்பட 14 பேர் செய்த தியாகம் வீண் போகாது. தமிழகம் விரைவில் மீட்கப்படும் என்றார்.
