எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஈ.பி.டி.பி. தனித்தா, அரசுடன் இணைந்தா போட்டியிடும்- இரண்டொரு தினங்களில் முடிவு

21deva.jpgயாழ்ப் பாணம் மாநகர சபை, வவுனியா நகர சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) போட்டியிடும் விதம் குறித்து இன்னும் இரண்டொரு தினங்களில் அறிவிக்கப்படுமென கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது அரசாங்கத்தின் பொதுசன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து கட்சிக்குள் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியான ஈ.பி.டி.பி அரசாங்கத்தின் தோழமைக் கட்சியென்பது தெரிந்ததே.

இவ்வாறான நிலையில் ஈ. பி. டி. பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இன்னும் இரண்டொரு தினங்களில் மேற்படி உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் விதம்பற்றி அறிவிப்பாரெனவும் கட்சியின் முக்கியஸ்தர் தெரிவித்தார்.

வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் இறுதித் தினம் எதிர்வரும் 25 ஆம் திகதி வியாழக்கிழமையாகும். அன்றைய தினம் நண்பகல் 12 மணிவரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இத்தேர்தல் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 23 உறுப்பினர்களும் வவுனியா நகரை சபைக்கு 11 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்

20-20 கிரிக்கெட் உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி பட்டம் வென்றது பாகிஸ்தான்

second-world-cup-of-twenty20.jpgஇருபது ஓவர்களைக் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியினை பாகிஸ்தான் அணி வென்றுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாக்ஸ்தான் அணி இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக இந்த உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

முதலில் ஆடிய இலங்கை அணி தனது இருபது ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ஓட்டங்களை எடுத்தது. ஆட்டத்தின் துவக்கம் முதலே இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. இலங்கை அணி முதல் சில ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தது அந்த அணிக்கு பெரிய அழுத்ததை ஏற்படுத்தியது.

இலங்கை அணியின் சார்பில் அதன் தலைவர் குமார் சங்கக்கார மட்டுமே உறுதியாக ஆடி 64 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய அப்துல் ரசாக் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி பெற தேவைப்பட்ட 139 ஓட்டங்களை எடுத்து கோப்பையை கைப்பற்றியது.

பாகிஸ்தான் அணியின் சார்பில் ஷாகித் அஃப்ரிடி சிறப்பாக ஆடி 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக கம்ரன் அக்மல் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  இந்தப் போட்டியில் முந்தைய சாம்பியனான இந்திய அணி காலிறுதி நிலையிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.

வணங்கா மண் கப்பலுக்கு 200 லிட்டர் குடிநீர் வழங்கிய சென்னை

 vanangaaman-captainali.jpgஈழத் தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு வந்த வணங்கா மண் கப்பலுக்கு சென்னை துறைமுகம் சார்பில் 200 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக எம்.வி. கேப்டன் அலி என்று பெயரிடப்பட்ட வணங்கா மண் கப்பலில் நிவாரணப் பொருட்கள் அனுப்பினர்.

884 டன் எடை கொண்ட நிவாரணப் பொருட்களுடன் வன்னிப் பகுதிக்கு வந்த இக்கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பிவிட்டது.

இதையடுத்து எங்கு போவது என்று தெரியாமல் அந்த கப்பல் சென்னையில் இருந்து சுமார் 5 கடல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளது. .இந்த நிலையில், கப்பலில் இருந்த இரண்டு ஊழியர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும் சிலரின் நிலையும் பாதிக்கப்பட்டது. குடிநீர் இல்லாததால் நிலைமை மேலும் மோசமாகியது.

கடந்த 12ம் தேதி முதல் நடுக்கடலில் இருந்த அந்த ஊழியர்கள் ஈழத் தமிழர்களுக்காக அனுப்பப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு உயிர் பிழைத்து வருகின்றனர். இந்நிலையில் குடிநீர் இல்லாமல் தவித்தனர். அவர்களுக்கு சென்னை துறைமுகம் சுமார் 200 லிட்டர் குடிநீர் வழங்கி உதவியுள்ளது.

இது குறித்து சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுரேஷ் நிருபர்களிடம் கூறுகையில், இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை கொண்டு சென்ற வணங்கா மண் கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இதனால் அந்த கப்பல் சுமார் 1 வார காலத்துக்கு மேல் கடலில் நிற்கிறது.

அதில் 15 ஊழியர்கள் இருப்பதாகவும், அவர்கள் தங்களுக்கு குடிநீர் இல்லை எனறும் கடந்த 16ம் தேதி அவசரத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்களுக்கு மறுநாளே 200 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது. இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் வர வேண்டும் என்றால் அந்த சரக்குகளுக்கான முறையான சான்றிதழ், அனுமதி கடிதம் போன்ற ஆவணங்களை கொடுக்க வேண்டும். ஆனால் அதுதொடர்பாக எங்களிடம் யாரும் பேசவில்லை. ஏதாவது உதவி கேட்டால் மனிதாபிமான அடிப்படையில் செய்யத் தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.

புதிய சிக்கல்…

பொதுவாக நிவாரண பொருட்களை அனுப்பும் போது அதில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்ற பட்டியல் மற்றும் சில ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும். ஆனால், தற்போது வணங்கா மண் கப்பலில் வந்துள்ள நிவாரண பொருட்களின் பட்டியல் தயாரிக்கப்படவில்லை. மேலும், நிவாரணப் பொருட்களை தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது தூதரகம் மூலமாகவோ அனுப்புவது வழக்கம். ஆனால், இலங்கையில் தவிக்கும் மக்களுக்கு விரைவாக உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் ஐரோப்பிய தமிழர்கள் நடைமுறையில் உள்ள சில சம்பிரதாயங்களை கவனிக்காமல் விட்டு விட்டதாக தெரிகிறது. சில ஆவணங்களை சேர்த்து இணைக்காமல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் வணங்கா மண் கப்பலை துறைமுகத்துக்குள் கொண்டு வர, ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் தனியார் நிறுவனம் ஒன்று ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த கப்பல் தொடர்பாக கியூ பிராஞ்ச் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

20-20 நாணயச் சுழற்சியில் இலங்கை வெற்றி – முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

cricket20-20.jpgஇருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்துக்கான இறுதி கிரிக்கெட் போட்டியில்   இன்று இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30க்கு இப்போட்டி லண்டன் லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.  நாணயச் சுழற்சியில் இலங்கை வெற்றி – முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

துடுப்பாட்டத்தில் இலங்கை சற்று வலிமையானதாக இருந்தாலும் பந்துவீச்சில் இரு அணிகளும் சம வலிமையுடன் விளங்குகின்றன. இலங்கையின் மெண்டிஸ், மலிங்கா, பாகிஸ்தானின் குல், அஜ்மல் ஆகியோர் தலா 6 போட்டியில் 12 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இதனால்  யாருக்கு கோப்பை என்பதை கடைசி பந்து வரை முடிவு செய்ய முடியாது.

வருண்காந்தியின் சி.டி. பேச்சு உண்மையானது: தடயவியல் சோதனையில் முடிவு

21varun.jpgநாடாளு மன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது சிறுபான்மையினருக்கு எதிராக வருண்காந்தி பேசிய விடயங்களை உள்ளடக்கிய சி.டி. ஆதாரம் போலியானதல்ல என தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் பிலிபிட் மக்களவைத் தொகுதி பா.ஜ. வேட்பாளராக வருண்காந்தி போட்டியிட்டார். பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய போது அவர், சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதாக குற்றசாற்று எழுந்தது.

இதனை வருண்காந்தி திட்டவட்டமாக மறுத்தார். இதன் பின்னர் அவரது பேச்சுகள் அடங்கிய சி.டி. வெளியானது. எனினும், அந்த சி.டி. போலியானது; ஜோடிக்கப்பட்டது என வருண் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து அந்த சி.டி. ஹைதராபாத்தில் உள்ள தடயவியல் சோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், வருண்காந்தி பேச்சுகள் அடங்கிய சி.டி. உண்மையானதுதான்; ஜோடிக்கப்பட்டது அல்ல என தெரிய வந்துள்ளது. தடயவியல் நிபுணர்கள் இத்தகவலை பிலிபிட் மாவட்ட நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்பித்து உள்ளனர்.

சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து வெளியிட்டதைக் கண்டித்து பிலிபித் மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கைதான வருண் காந்தி, பிணையில் விடுதலை செய்யப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.

நாங்கள் தோற்றதில் வருத்தமில்லை;புலிகள் தோற்றதுதான் கவலையாக இருக்கிறது: வைகோ பேச்சு

12vaiko000.jpg’மதி முகவை அழிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி இன்றுவரை ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரியும். ம.தி.மு.க. அழிக்க சேலத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. எங்களை அழிக்க நினைத்த கருணாநிதி தோற்றுப்போனார். ஆனால் எந்த ஒரு காலகட்டத்திலும் அ.தி.மு.க. எங்களை அழிக்க நினைக்கவில்லை. ம.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. சேலம் மாவட்ட மதிமுக செயல்வீரர் கூட்டத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சிறப்புரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர்தொடர்ந்தும் உரையாற்றுகையில்
 
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் என்னை தோற்கடிக்க 50கோடி தேவைப்பட்டு இருக்கிறது. 11ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்று இருக்கிறோம். கவுரவமான தோல்வியைத்தான் நாங்கள் பெற்று இருக்கிறோம். நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்று வருத்தப்படவில்லை. புலிகள் தோற்று விட்டார்களே என்ற கவலைத்தான் இருந்தது. அவர்கள் தொடர்ந்து யுத்தத்தை தொடர்ந்து நடத்துவார்கள். பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். புலிகளை அழிக்க முடியாது’’என்று பேசினார்.

கச்சதீவில் இராணுவத்தளம் அமைக்கும் திட்டம் இல்லை – இந்தியாவுக்கு இலங்கை உறுதியளிப்பு

கச்சதீவில் கண்காணிப்புக் கோபுரத்தையோ அல்லது இராணுவ பிரசன்னத்தையோ இலங்கை அரசாங்கம் கொண்டிருக்க திட்டமிட்டிருப்பதாக வெளியான செய்திகளை அரசாங்கம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை விடுத்திருக்கிறது. கச்சதீவில் கண்காணிப்புக் கோபுரத்தை நிர்மாணிக்கவும் இராணுவத் தளம் அமைக்கவும் இலங்கை அரசாங்கம் திட்டமிடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அத்துடன், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை துன்புறுத்துவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

“இவை தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்ட பின் இலங்கைக் கடற்படை இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. கடற்படையினரால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இவை இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நீண்டகாலமாக இருந்து வரும் நட்புறவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக மேற்கொள்ளப்படும் தரக்குறைவான குற்றச் சாட்டுகள், என்று வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சதீவில் கலங்கரை விளக்கம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவதை இராமநாதபுரத்தில் இந்தியக் கடற்படையின் கரையோரக் காவல்படையும் மறுத்துள்ளதாக “இந்து’ பத்திரிகை நேற்று தெரிவித்துள்ளது.

1974 இல் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவில் கலங்கரை விளக்கம் போன்றதொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்ட சபையில் வியாழக்கிழமை எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இது தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உண்மையைக் கண்டறிவதற்கு கரையோரக் காவல் படைக் கப்பல் ஒன்று பாக்கு நீரிணைக்கு அனுப்பப்பட்டிருந்தது. சர்வதேச கடல் பரப்பிற்கு அருகே இந்திய கடல் பக்கத்தில் இந்தப் படகு நங்கூரமிட்டிருந்தது. அங்கிருந்தவாறு கச்சதீவின் ஏதாவது கோபுரம் கட்டப்படுகின்றதா என்பதை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். சர்வதேச கடற்பரப்பிலிருந்து 2 கடல்மைல் தூரத்தில் உள்ள கச்சதீவை அவர்கள் பார்வையிட்டனர். பைனாகுலர் மூலமும் அவர்கள் கச்சதீவை பார்வையிட்டனர். ஆயினும் அவர்களால் அங்கு கோபுரம் எதனையும் பார்க்க முடியவில்லை. அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர அங்கு வேறெந்தக் கட்டிடமும் இல்லையென கரையோர காவல்படையைச் சேர்ந்த உயர் அதிகாரியொருவர் “இந்து’வுக்குக் கூறியுள்ளார். கச்சதீவிலுள்ள அந்தோனியார் ஆலயம் பல வருடங்களுக்கு முன்னர் இந்தியர்களால் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

தொண்டமானாறு நீர்த்தடுப்பணையின் மீள் நிர்மாண பணிகள் ஆரம்பம்

jaffna-000.jpgகுடா நாட்டின் முக்கியமான நீர் அணைக் கட்டுகளில் ஒன்றான தொண்டமனாறில் ஆரம்பமாகவுள்ள பாரிய புனர் நிர்மாண நடவடிக்கைகளை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பார்வையிட்டனர்.

குடாநாட்டின் பிரதேசங்களான வலிகாமத்தையும் வடமராட்சியையும் இணைக்கும் பகுதியான தொண்டமானாறு, உப்பாறு பிரதேசத்தில் உள்ள நீர்த் தடுப்பணைத் திட்டம் பாரியளவில் புனர் நிர்மாணத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டினூடாக கடல்நீர் உட்புகுவது தடுக்கப்படுவதுடன் அதன் தென்பகுதியில் மழை நீரைத் தேக்கி நிலத்தடி நீரை நன்னீராக்கும் பாரிய திட்டம் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டிற்கு முன்னதாக திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும், நாட்டில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்கள் காரணமாக இத்திட்டம் சீர்குலைந்ததுடன் முழுமையடையவில்லை.

எனினும், மஹிந்த சிந்தனையின் கீழ் வடக்கின் வசந்தம் செயற் திட்டத்திற்கமைய தொண்டமானாறு தடுப்பணைத் திட்டமானது பாரிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் குடாநாட்டில் நிலத்தடி நன்னீரை பாதுகாக்கும் பாரிய திட்டம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை அப்பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் மேற்படி திட்டத்தையும், உயரதிகாரிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட வரைபுகளையும் பார்வையிட்டனர். இவ்விஜயத்தின் தொடர்ச்சியாக பிரசித்திபெற்ற தொண்டமானாறு செல்வச் சந்நிதி தேவஸ்தான பகுதிக்கும் சென்ற பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அங்கு திரண்டிருந்த மக்களையும் சந்தித்து கலந்துரையா டினார்கள்.

ஈராக்கில் ‘டிரக்’ குண்டு வெடி – 72 பேர் பலி

21-iraq.jpgஈராக்கில் இன்று டிரக் குண்டு வெடித்ததில் சுமார் 72 பேர் வரை பலியாகி இருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. சுமார் 200 பேருக்கு மேல் பலத்த காயமடைந்துள்ளனர். ஈராக்கை அமெரிக்கா கைப்பற்றிய நாளில் இருந்தே அங்கு அடிக்கடி தற்கொலை படை தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா இந்த மாதம் 30ம் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக படைகளை ஈராக்கில் இருந்து வாபஸ் வாங்க திட்டமிட்டுள்ளது. 2012ம் ஆண்டுக்குள் அமெரிக்க ராணுவம்  முழுமையாக திரும்ப பெறப்படும் என தெரிகிறது.

இதையடுத்து அந்நாட்டு பிரதமர் ஈராக்கில் மேலும் பல குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெறும் வாய்ப்பு இருக்கிறது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

இந்நிலையில் ஈராக்கின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிர்கூக்கிற்கு தெற்கே சுமார் 16 கிமீ., தூரத்தில் இருக்கும் தாஷா என்ற பகுதியில் இருக்கும் மசூதியில் டிரக் வெடிகுண்டு வெடித்தது. இதில் மசூதியில் வழிபாடு நடத்தி விட்டுத் திரும்பி கொண்டிருந்த ஏராளமானவர்கள் பலியானார்கள். அந்த மசூதி மற்றும் அருகில் இருந்த பல வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தது.

இந்த விபத்தில் சுமார் 72க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பார்கள் என தெரிகிறது. 200க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பெறுப்பேற்கவில்லை.

‘தந்தையர் தினம்’ – புன்னியாமீன்

fathers-day.jpgஇன்று ஜுன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை. பொதுவாக ஜுன்மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாக கொண்டாடுவர். நாட்டுக்கு நாடு,  இத்தினம் வேறு வேறு நாட்களில் கொண்டாடப்படும். குறிப்பிட்ட தினத்தில் தான் கொண்டாட வேண்டும் என்று ஒரு விதிமுறை இல்லை. நவீன யுகத்தில் வேலைப்பழுகள் அதிகரித்த இக்கால கட்டத்தில் அன்னையர், தந்தையர் தினங்களை வைத்துத்தான் இன்றைய பிள்ளைகள் அம்மாவையும் அப்பாவையும் நினைவு வைத்திருக்கிறார்கள். இந்த அடிப்படையில் பிள்ளைகளுக்காகவாவது இத்தினத்தை நினைவு கூரவேண்டியுள்ளது.  பெற்றோர்களை மறக்காமல் இருக்க இப்படியான தினங்கள் கட்டாயம் கடைப் பிடிக்கப்பட வேண்டும் என்ற அளவிற்கு இந்நினைவு தினங்கள் மாறி விட்டன. எவ்வாறாயினும் ‘தந்தையர் தினம்’ என்ற அந்த நாள் உணர்வுபூர்வமான,  அர்த்தபூர்வமான ஒரு நாள் என்பதனை மறுக்க முடியாது.

தந்தையர் தினம் அவசியம் கொண்டாடப்பட வேண்டியதொன்று என்ற கருத்து சிலரிடம் காணப்படுகின்றது.ஏனெனில் சர்வதேசதினமாக நினைவு கூரப்படுகிறது என்றால் சமூகத்தில் அதற்கான அந்தஸ்து குறைந்து விட்டது  என்பதுதானே பொருள்? தந்தைக்குரிய அந்தஸ்தை இந்த சமூகம் வழங்க மறுக்கும் பட்சத்தில் அதனை நினைவுகூருவது கடமையல்லவா என்பது இன்னும் சிலரின் வாதம். ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டால் தாயுடன் ஒப்பிடுகையில் தந்தைக்கு அந்த வீட்டில் வழங்கப்படும் அந்தஸ்து மிகவும் குறைவுதான். வயோதிபர் மடங்களில் கூட பெண்களைவிட ஆண்களின் சதவீதமே அதிகமாக காணப்படுகிறது. காரணம் குடும்பங்களில் தாய்க்கு வழங்கும் அந்தஸ்து தந்தைக்கு வழங்கப்படுவதில்லை.

த‌ன்னை வ‌ள‌ர்த்த‌ த‌ந்தை,  என்ற‌ பாச‌மிகுதியால் ம‌ன‌ம் கோணாம‌ல் க‌வ‌னித்துக் கொள்கிற‌ பிள்ளைகள் இருக்கும்வ‌ரை  த‌ந்தைய‌ர்க‌ளுக்கு எத்தினமும் சுப‌தின‌ம்தான்! எல்லா அப்பாக்களுக்கும் இப்படி மகன்கள் அமைவதில்லை; பிள்ளைகளின் அன்பு கிடைக்காத அப்பாக்களுக்கு ஒரு தினம் மாத்திரம் சுபதினமாக வருவதில் என்ன இலாபம் உண்டு என்பதும் கேள்விக்குறியே.

அன்னையர் தினம் வரும்,  பின்னே….. தந்தையர் தினமும் வரும் என்பது இப்போது உலக வழக்கமாகி வருகிறது. தாயிற் சிறந்த கோவிலுமில்லை,  தந்தை சொல் மிக்க மந்திரமுமில்லை என்ற வைர வரிகளை வழங்கிய அவ்வை மூதாட்டி வாழ்ந்த காலத்தில் இத்தினங்கள் இருக்கவில்லை. அப்படியாயின் இத்தினத்தின் உருவாக்கம் பற்றி சற்றேனும் தெரிந்து கொள்ள வேண்டும். தந்தையர் தினம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்ற கேள்விக்கு,  பலவிதமான பதில்கள் கூறப்படுகின்றன. அமெரிக்கா நாட்டின்,  மேற்கு வேர்ஜினியாவில் 1908 ஆம் ஆண்டு தந்தையர் தினம் ஆரம்பமானது என்று ஒரு சிலரும்,  வாஷிங்டனில் உள்ள வான்கூவர் நகரத்தில் தந்தையர் தினம் முதன் முதலாக கொண்டாடப்பட்டது என்று சிலரும் சொல்வதுண்டு. சிக்காகோ நகரின் ‘லயன்ஸ் கழகத்தின்’ தலைவரான ஹாரிமீக் என்பவர் தந்தைகளைப் போற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பலதரப்பட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார் என்றும்,  அதன் காரணமாக அவருடைய பிறந்த தினத்தை ஒட்டி அமெரிக்க லயன்ஸ் கழகம் அவருக்கு ‘தந்தையர் தின நிறுவனர்’,  என்று பட்டமளித்ததாகவும் சில வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

எவ்வாறாயினும்,  ‘தந்தையர் தினம்’ என்ற ஒரு தினம் ஏற்படுத்தப்படுவதற்கான அடிப்படைக் காரணமாக விளங்குவது ஓர் ஆணின் கடமையால்,  நன்றி கொண்ட ஒரு பெண்தான் என்பதனை வரலாறு பதிவு செய்து நிற்கிறது.

வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் அமெரிக்க இராணுவத்தில் பணிபுரிந்தவர்! 1862ல் நடந்த போரில் கலந்துகொண்ட பிறகு வாஷிங்டன் அருகேயுள்ள ஸ்போகனேவுக்கு குடும்பத்தோடு சென்று வசித்தார். மகள் சொனாரா டோட்டுக்கு 16 வயதாகும்போது மனைவி எல்லன் விக்டோரியா மரணமடைந்தார். தன் மனைவி இறந்ததும் 5 மகன்கள் மற்றும் மகள்களுடன் வசித்தார். அவரை மறுமணம் செய்துகொள்ள சிலர் முன்வந்தபோது மறுத்துவிட்டு பிள்ளைகளை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். வாலிபம் வீணாகிறது என்று செல்லமாகச் சொல்லி வளைத்துப் போடப் பார்த்த பெண்களின் ஆசை வார்த்தைகளுக்கு அடிமையாகிவிடாமல் தம் இல்லாள் இல்லை என்ற குறை தெரியாமல் ,  சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே, என்பதாக‌ பிள்ளைகளை வளர்த்து வாலிபமாக்கினார். தம் தந்தையின் வாழ்க்கையை மிகப்பெரிய தியாக வாழ்க்கையாகக் கருதினார் – மகள் ஸொனோரா ஸ்மார்ட் டோட். அதுமட்டுமல்ல தமக்காக வாழாமல் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து மறைந்த தியாக சீலரான தம் தந்தையை கெளரவிக்கவேண்டும் என்று எண்ணினார்.
அந்தக் கெளரவமும் தம் தந்தையோடு நின்றுவிடாமல் தந்தையர் ஒவ்வொருவருக்கும் அந்தக் கெளரவிப்பு கிடைக்க வேண்டும் என்றும் திருமதி.டோட் கருதினார்.

சுய நலத்தோடு கலந்த அவரின் பொதுநலம் தம் தந்தை பிறந்த ஜூன் 19ம் தேதியை தந்தையர் தினமாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை 1909ம் ஆண்டு எழுப்பினார். கிறிஸ்தவ தேவாலயத்தின் ஊடாக,  மதகுருமார்கள் ஊடாக,  திருமதி. டொட் அவர்கள் தனது பிரச்சாரத்தை,  பரப்புரையை ஆரம்பித்தார். ஏற்கனவே,  தாய்மார்கள் தினத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டிருந்த பத்திரிகைகள்,  திருமதி சொனாரா டொட்டின்,  தந்தையர் தினத்தை வரவேற்றுச் செய்திகளை வௌயிட ஆரம்பித்தன. ஸ்போக்கேன் நகர பிதாவும்,  கவர்னரும்,  திருமதி டொட் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அறிக்கைகளை விடுத்தார்கள். 1916 ஆம் ஆண்டளவில் அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்சன் இந்த தந்தையர் தினக் கருத்தை ஏற்றுக் கொண்ட போதும் அது,  தேசிய மயமாக்கப்படவில்லை.

1924 ஆம் ஆண்டு,  ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ் தந்தையர் தினத்தை,  ஒரு தேசிய நிகழ்வாக பிரகடனம் செய்தார். 1926ல் நியூயார்க் நகரில் தேசிய தந்தையர் தினக்கமிட்டி அமைக்கப்பட்டு அதன் சாத்தியம் பற்றி ஆராய்ந்தது. அதன் பின் அந்த விசயம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. அதற்கும் 30 வருடங்கள் கழித்து 1956ல் கோரிக்கை தூசி தட்டப்பட்டுதந்தையர் தினத்தை அங்கீகரித்து அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வந்தது. அதன் பிறகும் அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து அறிவிக்கவில்லை. 1966 ஆம் ஆண்டு, அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்த லின்டன் ஜோன்சன்,  யூன் மாதத்து 3 ஆவது ஞாயிற்றுக்கிழமையை அமெரிக்காவின் தந்தையர் தினமாக பிரகடனம் செய்தார்.

அதற்குப்பின் சில வருடங்கள் கழித்து ஆட்சிப்பொறுப்பை ஏற்ற அதிபர் ரிச்சர்ட் நிக்சன் 1972ல் அதிகாரப்பூர்வமாக தேசிய அளவில் “தந்தையர் தினம்” அனுசரிக்க ஆணை பிறப்பித்தார். ஆயினும்,  உலகின் பல்வேறு பாகங்களில் வெவ்வேறு மாத தினங்களில்,  தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றதனை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. உதாரணமாக அவுஸ்திரேலியாவிலும்,  நியுசிலாந்திலும் செப்டெம்பர் மாதத்து முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருவதனை இங்கு சுட்டிக் காட்டலாம்.

தனது கோரிக்கைக் கனவு பலிக்காமல் போய்விட்டதே என்ற கவலையோடு இருந்த திருமதி. டோட்,  அவரின் கனவு நனவானபோது அதைப்பார்த்து சந்தோஷப்பட அவர்உயிரோடு இல்லை. ஆனால் இன்றைக்கு அமெரிக்காவில் மட்டுமல்ல பெரும்பாலான நாடுகள் “தந்தையர் தினம்” என்று உச்சரிக்கத் துவங்கியுள்ளதை அவரின் முயற்சிக்குக் கிடைத்தவெற்றி என்றே சொல்லலாம்.

தந்தையர் தினத்தில் மேலை நாடுகளில் அப்பாவுக்கு ஒரு சிவப்பு ரோஜாவைக் கொடுத்து வாழ்த்துவதும்,  பிள்ளைகள் சிவப்புரோஜாவை தங்கள்சட்டையில் அல்லது தலையில் செருகிக்கொள்வதையும் வழக்கில் கொண்டுள்ளனர்! அப்பா இயற்கை எய்திவிட்டால் தங்கள் சட்டையில் ஒரு வெள்ளை ரோஜாவை செருகிக்கொள்வது வழக்கம்! கடந்த ஆண்டு அமெரிக்காவில் அன்னையர் தினத்தன்று 150 மில்லியன் வாழ்த்தட்டைகள் விற்பனையானது; தந்தையர் தினத்தில் 95 மில்லியன் வாழ்த்தட்டைகள்! அன்னையர் தினத்தில் அன்னையர்களை வாழ்த்திய தொலைபேசி அழைப்புகள் 150 மில்லியன்! தந்தையர் தினத்தில் 140 மில்லியன்!அன்னையர் தினத்தில் அன்னையர் விரும்பும் துணிகள் பரிசுபொருட்களாகவும் தந்தையர்க்கு பரிசுப் பொருளாக “டை” யையும் அளித்திருக்கின்றனர்! அன்று விற்பனையான டைகள் எட்டு மில்லியன்! தந்தையர் தினத்தில் 23 விழுக்காடு தந்தையர்கள் உணவுவிடுதிகளுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்து மகிழ்வித்ததாக புள்ளிவிபரங்கள் புள்ளிகூறுகின்றன!

மறுபுறமாக தந்தையர்கள் தனது குடும்பத்திற்காக ஆற்றும் பணிகளையும் சற்று சிந்தித்தல் வேண்டும்

இந்திய உபகண்ட பிராந்தியத்திலும் சரி,  இலங்கையிலும் சரி தாய்க்குத் தான் சகல கெளரவங்களும்,  அம்மாதான் தியாகி,  பாசத்தில் இலக்கணம் என்றெல்லாம் போற்றிப் புகழ்கிறார்கள்,  தெய்வத்தின் அளவுக்கு தூக்கி வைக்கிறார்கள். எனினும் குடும்பத்துக்காக மெளனமாக ஏகப்பட்ட தியாகங்களைச் செய்யும் தந்தையர் பற்றி நாம் அலட்டிக் கொள்வதேயில்லை. அம்மாவை வாங்க முடியுமா? என்ற ஒரு பாடல் இருக்கிறது. ஏனோ அப்பாவை வாங்க முடியுமா? என்று எழுதுவதில்லை.

எத்தனையோ இன்னல்கள் பட்டாலும் அதை வெளிக்காட்டாமல் துன்பத்தின் சாயல் தம் பிள்ளைகள் மீது படிந்துவிடாமல் அனைத்தையும் தம் தோளில் சுமந்தே கூன் விழுந்து போன தந்தையர்கள்! இராத்தூக்கம் பகல்தூக்கம் இன்றி வளர்த்து வாலிபமாக்க எவ்வளவு தியாகங்கள் புரிந்த,  புரியும் தந்தையர்கள்! பற்றி எழுதுவதில்லை.

அப்பா என்பவர் ஒரு குடும்பத்தின் தியாகச் சுடர். குடும்ப த்தில் அவரது பங்களிப்பு ஐம்பது சதவீதமாக இருக்கின்ற போதிலும் நமது சமூகம் தாயையே முன்நிலைப்படுத்துவதால் தந்தை வகிக்கும் அந்த மிக முக்கியமான பகுதி மதிப்பீடு செய்யப்பட வேண்டிய ஒன்றே. இந்த மதிப்பீட்டை வருடத்துக்கு ஒருமுறையேனும் செய்வதற்கும் விவாதிப்பதற்கு ஒரு தினம் அவசியம். இவ்வகையில் தந்தையர் தினம் இன்றியமையாதது

தந்தை தான் ஒரு குடும்பத்தைக் கட்டி எழுப்புகிறார். பொருளாதாரம்,  கல்வி,  கெளரவம்,  சுற்றம்,  வாழ்க்கைத்தரம் என்பனவற்றை பெற்றுத் தந்து பாதுகாப்பது தந்தையே. தனது தியாகத்தின் மூலம் குடும்பத்துக்கு பெறுமதியைத் தருகிறார். தந்தையின் இந்த நடவடிக்கைகளின் போது அவர் குடும்பத்தின் மத்தியில் சில அபிப்பிராயங்களையும் தோற்றுவித்து விடுகின்றார்.

கண்டிப்பானவர்,  வளைந்து கொடுக்காதவர்,  கர்வம் கொண்டவர் என்றெல்லாம் பெயர்களை அவர் சம்பாதித்துக்கொள்ள வேண்டியதாகிறது. இவற்றையும் கூட தியாகம் என்றுதான் கூறவேண்டும். அப்பா வின் இந்த நிலையை அம்மாதான் பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும். இவை புரிந்து கொள்ளப்படாத விளக்கப் படாத நிலையிலேயே அப்பாவுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பிணக்குகள் தோன்றுகின்றன.

தியாகங்கள் பலவற்றை எதிர்பார்ப்பின்றி செய்யும் தந்தை மார் தன் வயதான காலத்தில் பிள்ளைகளின் அரவணைப்பை விரும்புவது இயற்கையே. தனது குறைந்தபட்ச தேவைக ளையாவது பிள்ளைகள் நிவர்த்தி செய்யலாமே என எண்ணுவார்கள். ஆனால் வாய் திறந்து கேட்பதில்லை. எனவே எதிர்காலத்தில் இதே நிலைக்கு ஆளாகவுள்ள பிள்ளைகள் தந்தைமாரின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்ய வேண்டியது அவர்களது கடமை.

இதேசமயம் தந்தைமாரும் ஒரு காலக்கட்டத்தின் பின்னர் தனது ‘குழந்தை வளர்ப்பு கால’ தன்மைகளை,  விட்டுக் கொடுக்காத நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தான் தலைவனாகவும் நிர்வகிப்பவனாகவும் இருந்ததால் இப் போதும் அப்படித்தான் இருப்பேன் எனப் பிடிவாதம் பிடிப்பது அவருக்கு சாதகமாக அமையாது.

இது இப்படி இருக்க,  பெரும்பாலான தந்தைமார் தமது பிள்ளைகளின் தயவை அல்லது கவனிப்பை எதிர்பார்க்கின்ற பருவத்தில் அந்தப் பிள்ளைகள் திருமணம் செய்து அவர்களது குடும்பங்களை நடத்துவதில் மிகுந்த நாட்டம் கொண்ட வர்களாகி விடுகின்றார்கள். இதனாலும் தந்தைமார் கவனிப்பின்றி கஷ்டப்பட நேர்ந்துவிடுகின்றது. பல தந்தைமார் வயதான காலத்தில் தமது கவச குண்டலங்களை இழந்து பேரப்பிள்ளைகளைக் கவனிப்பதில் காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பதைக் காணும்போது பரிதாபமாகத் தான் இருக்கிறது. தந்தையர் தினத்தில் இவர்களைப் பற்றி நாம் அதா வது பிள்ளைகள் சிந்திக்கத்தான் வேண்டும்.

“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். “

என்ற வள்ளுவர் வாக்குக்கிணங்க நாம் இனியாவது செயல்பட்டு,  தன் த‌ந்தையின் முதிய காலத்தில் அவர் மனம் நோகாமல் அவரை நன்கு கவனித்துக்கொள்வோம் என்று இந்த‌ ந‌ன்னாளில் நாம் உறுதி எடுத்துக்கொள்வோமாக‌!!