எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இடம்பெயர் மக்களின் சட்ட ஆவணங்களை பெற விசேட திட்டம்

swatt3வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான தேசிய அடையாள அட்டைகள் மற்றும் சட்ட ஆவணங்களை பெற்றுக் கொடுக்க அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு விசேட திட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமும்ää அரசியலமைப்பு அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சும் இணைந்து நீதி ‘நியாயத்தைச் சமமாக அணுகும் கருத் திட்டம்’ என்ற தொனிப்பொருளில் இதனை முன்னெடுக்கவுள்ளதாக சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் முதலாவது கட்டம் 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2008இல் முடிவடைந்தது. இரண்டாவது கட்டம் இவ்வருடம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. 2012இல் இக்கருத் திட்டம் முடிவடையவுள்ளது.

யு. என். டி. பி.இன் நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின் கீழ் தேசிய அடையாள அட்டைகள்,  பிறப்பு, திருமண இறப்பு சான்றிதழ்கள் மற்றும் ஏனைய சட்ட ஆவணங்களை உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஷியாம்லால் ராஜபக்ஷ கொள்ளையர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது உண்மையல்ல

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உறவினரும் அம்பாந்தோட்டை மாவட்ட ஆளும் கட்சி எம்.பி.நிருபமா ராஜபக்ஷவின் சகோதரருமான ஷியாம்லால் ராஜபக்ஷவின் மரணம் திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புபட்டது என்பதை தான்சானியப் பொலிஸார் நிராகரித்துள்ளனர்.

அதேசமயம், மரணத்திற்கான உண்மையான காரணத்தை தீர்மானிப்பதற்காக பிரேத பரிசோதனை நடத்துவதற்காக டார் எஸ்சலாமிலிருந்து ஆருஷாவுக்கு டாக்டர்களை வரவழைப்பதற்கு தாங்கள் கோரிக்கை விடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக தான்சானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் வழக்கறிஞராக ஷியாம்லால் பணியாற்றி வந்தார். ஆருஷாவில் மர்மமான சூழ்நிலையில் இறந்த நிலையில் அவர் கண்டு பிடிக்கப்பட்டிருந்தார். அவருடைய வீட்டிலேயே அவர் இறந்தநிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார். வீட்டில் திருட வந்த குழுவால் அவர் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுவதாக அவருடைய குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

திருடர்களுடன் போராடியபோதே அவர் இறந்திருக்கலாமென அந்த வட்டாரங்கள் கூறியிருந்தன. ஆனால், ஆருஷாவிலுள்ள பொலிஸார் இதனை நிராகரித்துள்ளனர். கடந்த புதன் கிழமை ஷியாம்லால் தனது வீட்டிற்கு நண்பர்களை அழைத்திருந்ததாகவும் இரவு 11 மணிவரை அவர்களுடன் மதுபானம் அருந்தியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அவருடைய விருந்தினர்கள் சமுகமளித்திருந்த வேளையில் ராஜபக்ஷ நல்ல நிலையில் இருந்ததாக ஆருஷா பிராந்திய பொலிஸ் தளபதி பசிலியோ மாத்தேய் “திஸ்டே’க்கு கூறியுள்ளார்.கொள்ளையர்களால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது உண்மையல்ல என்றும் விருந்தினர்கள் உள்ளே வருவதற்காக வாசல் கேற்றை அவர் திறந்துவிட்டதாகவும் அதிக நேரம் வரை அவர்கள் மகிழ்ச்சியாக கதைத்தவாறும் பியர் அருந்தியவாறும் இருந்ததாக அவருடைய பாதுகாவலர் கூறியதாக மாத்தேய் தெரிவித்திருக்கிறார்.

மறுநாள் காலை தரையில் ஷியாம்லால் வீழ்ந்து கிடந்தபோது வீட்டில் பணிப்பெண் கண்டதாகவும் மூக்கிலிருந்து இரத்தம் ஓடியிருந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர். ஆருஷாவுக்கு வருமாறு டார் எஸ்சலாமிலுள்ள டாக்டர்களுக்கு நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். மரணத்திற்கான உண்மையான காரணத்தைத் தீர்மானிக்க பிரேத பரிசோதனை நடத்துமாறு நாம் கேட்டுள்ளோம் என்று பசிலியோ மாத்தேய் தெரிவித்துள்ளார்.  சம்பவம் நடந்த தினம் இரவில் ஷியாம்லாலின் வீட்டிற்கு வருகைதந்திருந்த விருந்தினர்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டுகொள்வதற்கு பொலிஸார் முயற்சி செய்து வருகின்றனர்.

ஆருஷாவை தலைமையாகக் கொண்ட ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஷியாம்லாலும் அவரின் மனைவி பிரசாந்தியும் சட்டத்தரணிகளாகப் பணிபுரிந்தனர். 1994 ருவாண்டா இனப்படுகொலைகளில் சம்பந்தப்பட்டவர்களென சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நீதிமன்றத்திலேயே இவர்கள் வழக்கறிஞர்களாக பணிபுரிகின்றனர்.

வடக்கு கிழக்கில் 30 ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் வாய்ப்பு

youth.jpgவடக்கு,  கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள 30 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு சுயதொழில் வாய்ப்பினை வழங்கி அதன்மூலம் நிரந்தரமான வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க ஊழியர் நல்லுறவு மற்றும் மனிதவள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்தகால யுத்தசுழ்நிலை காரணமாக இளைஞர், யுவதிகள் வேலை வாய்ப்பின்றி மிகவும் கஷ்டமான சுழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடனுதவிகளை வழங்கி சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுத்துவதன்மூலம் தேவையான நாளாந்த வருமானத்தைப் பெற்றுக்கொள்ள வழியேற்படுத்தவே அமைச்சு இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றது.

இவ்வருட இறுதிக்குள் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அமைச்சின் செயலாளர் மகிந்த மதிகவெல அறிவித்துள்ளார

அம்பாந்தோட்டை எண்ணெய் குதம், கட்டுநாயக்க நெடுஞ்சாலை நிர்மாணத்துக்கு உடன்படிக்கை

நெடுஞ்சாலைகள் மற்றும் எண்ணெய் குதவசதிகளை அமைத்தல் என்பவை தொடர்பாக சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் 350 மில்லியன் டொலர் பெறுமதியான இரு உடன்படிக்கைகளில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.

இந்த இரு உடன்படிக்கைகளும் அதிகளவு தேவைப்படும் உள்சார்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் நாட்டின் எதிர்கால சமூக, பொருளாதார அபிவிருத்திக்கும் பங்களிப்பினை வழங்கும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருக்கிறது.

எண்ணெய் குதங்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளன. சீன நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் முதற்கட்டப் பணிகளுக்கு 360 மில்லியன் டொலர்களை வழங்குவதாக ஏற்கெனவே எக்ஸிம் வங்கி உறுதியளித்திருக்கிறது.

கொழும்புகட்டுநாயக்க விமான நிலைய நெடுஞ்சாலையை அமைப்பதற்கு நிதி வழங்குவது இரண்டாவது உடன்படிக்கையாகும். 30 கி.மீ. தூரத்தில் இந்த நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது.

யாழ் போதனா வைத்தியசாலை குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

mahindanandaaluthgamage.bmpயாழ்ப் பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போதுள்ள  குறை பாடுகளை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சக்தி பிரதியமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

யாழ். வைத்தியசாலையை தான் நேரடியாகப்  பார்வையிட்ட போது பல குறைபாடுகள் இருப்பதை அவதானித்ததாகவும் இக்குறைபாடுகளை உடனடியாக நீக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என  சுகாதார அமைச்சரிடம் தான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

யாழ்.போதனா வைத்தியசாலையின் சகல பிரிவுகளையும்  வர்ணம்தீட்டி அழகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்

மனித உரிமை மீறல் மோசமடைவதுடன் பொலிஸ் அடாவடித்தனமும் அதிகரிப்பு – ஐ.தே.க.

நாட்டில் இன்று பொலிஸ் அடக்குமுறை தலைவிரித்தாடத் தொடங்கியிருப்பதாக கடும் கண்டனத்தை வெளியிட்டிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, அடுத்தடுத்து மாணவர்களும், இளைஞர்களும் பொலிஸ் அடாவடித் தனத்துக்குள்ளாக்கப் பட்டுவருவதாகவும் விசனம் தெரிவித்தது. பொலிஸ் தலைமையகமும் பிராந்திய பொலிஸ் உயரதிகாரிகளும் முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர் செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

பயங்கரவாதம் நாட்டில் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் அமைதியும் சுமுக நிலையும் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் உள்நாட்டிலும் சர்வதேசமட்டத்திலும் பிரசாரம் செய்துவரும் அரசாங்கம், மறுபுறத்தில் தமக்கு எதிரானவர்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை மறைமுகமாக முன்னெடுத்துள்ளதை காணமுடிகிறது. மிகமோசமாக மனித உரிமை மீறப்படும் நாடாக இலங்கை மாறிவருகிறது.  மன்னாரிலிருந்து குண்டு நிரப்பிய வாகனம் வந்ததாகவும் அதனை ஒரு உயர் பொலிஸ் அதிகாரி கண்டுபிடித்ததாகவும் பொலிஸ் தலைமையகமும் பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகரவும் தெரிவித்துள்ளனர். மறுபுறத்தில் வட பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் நிமல் லெவ்கே அப்படியொரு வாகனம் வந்தமைக்கான ஆதாரமெதுவுமே கிடையாதென பகிரங்கமாகவே அறிவித்துள்ளார். இதுவொரு நாடகமாகவே இன்று காணப்படுகிறது.

இந்த விவகாரத்தோடு சம்பந்தப்பட்ட பொலிஸ் உயரதிகாரியும் அவரது மனைவியும் மகனும் மாலபேயிலுள்ள தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் நிபுண ராமநாயக்க மீது மேற்கொண்ட அடாவடித்தனமான செயல்கள் தொடர்பில் அரசாங்கமோ பொலிஸ் தலைமையகமோ இன்று வரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனை மூடி மறைப்பதற்காகவே இந்த குண்டு வாகன விவகாரத்தை பெரிதுபடுத்திக்காட்ட முனைகின்றனர்

இதற்கிடையில் கம்பஹா மாவட்டத்தில் சேவைபுரியும் பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் புலிகளுடன் தொடர்பிருந்ததாகவும் புலிகளிடமிருந்து அவருக்குப் பெரும் தொகை நிதி கைமாறப்பட்டிருப்பதாகவும் தெரியவந்ததையடுத்து அந்த அத்தியட்சர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கை பேணவேண்டிய பாதுகாப்புத் தரப்பினரே அவை மீறப்படுவதற்கு துணை போயிருப்பது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

இது இவ்விதமிருக்க, அங்குலானையில் இரு இளைஞர்கள் பொலிஸ் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்ததையடுத்து அப்பகுதி யுத்தகளமாக மாறியுள்ளது. மாலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை பெற்றோர்கள் பார்க்கச் சென்றபோது காலையில் வருமாறு அங்குலான பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலையில் போனபோது மொரட்டுவ, அல்லது கல்கிஸை பொலிஸில் போய்ப்பார்க்கும் படி கூறியுள்ளனர். இதற்கிடையில் அந்த இளைஞர்கள் இருவரும் லுனாவை பாலத்திற்கருகில் சடலங்களாக போடப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்தே பிரதேச மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுபோன்ற மோசமான, கண்டிக்கத்தக்க வெறியாட்டத்தை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இதன் பின்னணியில் பெரும் அரசியல் சக்தி ஒன்று காணப்படுவதாக பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.  நாட்டில் இன்று ஜனநாயகம் காணப்படவில்லை. பொலிஸ் அதிகார இராஜ்ஜியமொன்று படிப்படியாக உருவாகிவருகிறது. இந்த நிலை தொடருமானால் நாட்டில் அராஜகமும் படுகொலைகளும் வீதிக்கு வீதி இடம்பெறலாம் என்ற அச்சம் தலைதூக்கியுள்ளது.

இத்தகைய வெறியாட்டங்களை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. ஜனநாயகமும் மனித உரிமைகளும் சுதந்திரமும் முற்று முழுதாகக் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

2002 இல் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவை அமைத்ததன் மூலம் சட்டம், ஒழுங்கு சீராகப் பேணப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு பதவிக்கு வந்த பின்னர் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்படவில்லை. சுயாதீன ஆணைக்குழு இருந்தால் இன்று நடக்கும் எத்தகைய அடாவடித்தனமும் இடம்பெற்றிருக்காது.  அரசாங்கம் தொடர்ந்தும் இவ்விடயத்தில் மௌனப் போக்கைக் கடைப்பிடித்தால் நாடு மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம். தவறிழைத்தவர்களை, குற்றவாளிகளை உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் சட்டத்தைக் கையிலெடுக்கும் நிலைமை உருவாவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது போகலாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் துரிதம் – வடமாகாண ஆளுநர் அறிவிப்பு

north-governor.jpgமோதல் கள் காரணமாக இடம் பெயர்ந்தவர்களை யாழ்.  மாவட்டத்தில்  மீளக் குடியமர்த்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். திருமலை மற்றும் யாழ்.மாவட்டத்தில் பணியாற்றும் செயற்திட்ட அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆளுநர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத்திட்டம் வடமாகாணம் முழுவதும் வெற்றிகரமான முறையில் மேற்கொள்ளப்படுகின்றது.  இதுதவிர யாழ் மாவட்ட மீனவர்கள் மற்றும்  பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகாணும் பொருட்டு பாதுகாப்புதரப்புடன் தான் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கலாபூஷண விருதுக்கு தெரிவானவருக்கு இன்னமும் பணம், சான்றிதழ் இல்லை

கடந்த வருடம் (2008) கலாபூஷணம் விருதுக்கென கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட சமய,சமூக சேவையாளரான நாகலிங்கம் வியாக்கிரத பாதர் என்பவருக்கு விருதுக்குரிய பணமும் சான்றிதழும் வழங்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்திய கலாபூஷணம் விருது வழங்கும் நிகழ்வில் யுத்த நிலைமை காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியாது போய்விட்டது. இவ்வருடம் ஜனவரி 6 ஆம் திகதி கிளிநொச்சி செயலகத்தில் இவ்விருது வழங்கப்படுமென அரச அதிபர் அறிவித்திருந்த போதும் இடம்பெயர்வு காரணமாக அவ்வேளையிலும் அவரால் விருதைப்பெற்றுக்கொள்ள முடியவில்லை.

செட்டிக்குளம் முகாமில் தங்கியிருந்த இவர் தற்போது வவுனியா தோணிக்கல்லில் தங்கியிருக்கும் நிலையில் வவுனியாவில் இயங்கும் கிளிநொச்சி அரச அதிபர் அலுவலகத்தில் விருதைக் கோரியபோது அதற்குரிய ஆவணங்கள் தம்மிடம் இல்லையென்றும் அவற்றை கிளிநொச்சி தர்மபுரத்தில் விட்டுவிட்டு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் மற்றும் இடம்பெயர்வு காரணமாக மிகவும் வறுமை நிலையில் இருக்கும் இம்முதியவர் தன் நிலை கருதி தனது விருதையும் பணத்தையும் சான்றிதழையும் வழங்கி உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஓட்டப் போட்டியில் தமிழ் அரசியல் தலைமைகள் : த ஜெயபாலன்

Election_Campaign_in_Jaffnaதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் சடுதியான அழிவு தமிழ் மக்களுடைய அரசியல் தளத்தில் ஆதிக்கம் செலுத்திய புலிகளின் ஒற்றைப் பரிமாண அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இது பன்மைத்துவ அரசியலுக்கு வித்திட்ட போதிலும் மூன்று சகாப்தங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருந்த புலிகள் மே 18ல் ஒரு சில மணிநேரத்திலேயே முடிவுக்கு கொண்டு வரப்பட்டது சர்வதேசத்திற்குமே அதிர்ச்சியாக அமைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு வலிந்து நிறுவிய ஏகதலைமைத்துவமும் இத்தலைமைத்துவத்தின் துதிபாடிகளும் தமிழ் மக்கள் மத்தியில் காத்திரமான அரசியல் உரையாடலைத் தொடர்ச்சியாக நிராகரித்து வந்தன. காத்திரமான அரசியல் தலைமைகள் உருவாகிவிடக் கூடாது என்பதிலும் இவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இதன் விளைவு தற்போது தமிழ் மக்களுடைய அரசியலை முன்னெடுப்பதற்கான அரசியல் தலைமைத்துவம் வெற்றிடமாக்கப்பட்டு உள்ளது. இவ்வெற்றிடத்தை நிரப்புவதற்கான மரதன் ஓட்டங்களில் பல்வேறு அரசியல் சக்திகளும் ஈடுபட்டு உள்ளன. இவை பெரும்பாலும் இலங்கை அரசு வரைந்துள்ள எல்லைக் கோட்டுக்கு உள்ளேயே தங்கள் ஓட்டங்களை ஓடக் கூடியனவாக உள்ளன.

மே 18ல் இலங்கை அரச படைகள் வெற்றி கொண்டது தமிழீழ விடுதலைப் புலிகளையே அன்றி தமிழ் மக்களையல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளோ அதன் காலம்சென்ற தலைவர் வே பிரபாகரனோ தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் எப்போதும் பிரதிநிதித்துவப்படுத்தியதில்லை. தங்கள் இருப்பை உறுதிப்படுத்துவதற்கு தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை பயன்படுத்திக் கொண்டனர். தங்கள் இருப்புக்கு தமிழ் மக்களை பணயம் வைக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது அவர்கள் அதற்கும் தயங்கவில்லை. எல்லாவற்றினதும் உச்சகட்டமாக ஒட்டு மொத்த வன்னி மக்களையும் இலங்கை அரசபடைகளின் போர் இயந்திரங்களுக்கு முன் நிறுத்தி அம்மக்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்படுவதற்கும் பல்லாயிரக் கணக்கானோர் ஊனமாவதற்கும் இரண்டு லட்சத்து எண்பதிணாயிரம் மக்கள் முகாம்களில் அடைக்கப்படுவதற்கும் வழிவகுத்து உள்ளனர்.

இதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏகதலைமை மட்டுமல்ல அதற்கு துதிபாடிய பிரித்தானிய தமிழர் பேரவை, அமெரிக்காவில் இயங்கும் பேர்ள் அமைப்பு, பிரான்ஸில் உள்ள புலிகளின் மனித உரிமை அமைப்பு, கனடாவில் உள்ள உலகத் தமிழர் இயக்கம் இப்படி புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள பல்வேறு அமைப்புகளும் ஐபிசி, ஒரு பேப்பர், ஈழமுரசு, ஜிரிவி, தீபம் போன்ற ஊடகங்களும் அவற்றில் அரசியல் அவியல் படையல் செய்தவர்களும் பொறுப்பானவர்கள்.

அரசியல் தந்திரோபாயம் என்ற பெயரில் அல்லது மக்களை விடுவிக்கும்படி புலிகளைக் கோருவது தத்துவார்த்த ரீதியில் பொருத்தமற்றது அது இலங்கை அரசுக்கே உதவும் என்று மௌனமாக சில அரசியல் ஆர்வலர்கள் அமைப்புகள் இருந்துள்ளன. குறிப்பாக கனடாவில் உள்ள தேடகம் போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இனம்காணப்படாத அமைப்புகளின் அரசியல் பலவீனமும் குறிப்பிடத்தக்கது. அதே போன்று புலி எதிர்ப்பு என்ற ஒரே காரணத்திற்காக வன்னியில் நிகழ்ந்த அவலத்தில் இலங்கை அரசின் பாத்திரம் பற்றி புலம்பெயர்ந்த நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள பல குழுக்கள் மௌனம் சாதித்தன. இவர்களது மௌனமும் ஆபத்தானதே.

தற்போது தமிழ் சூழலில் அரசியல் மரதன் ஓடுபவர்களுக்கு குறைவில்லை. புலிகளின் புதிய தலைவர் கே பி ஓரடி வைக்கு முன்னரேயே கவிழ்ந்துவிட்டார். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, அவரோடு கூட்டுச் சேர்ந்த ஈபிஆர்எல்எப் தலைவர் சுகு, புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் முதல் சுற்றிலேயே தடக்கி வீழ்ந்துவிட்டனர். இவர்கள் மீண்டும் தங்களைச் சுதாகரித்துக் கொண்டு ஓடுவார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அரசியலில் ‘பழம் தின்று கொட்டை போட்டவர்கள்’இன் நிலையே இப்படி இருக்க சிறிரெலோ, ஈரோஸ் என்று தத்தித் தத்தி மரதன் ஓடத் தொடங்கியவர்கள் பற்றி என்ன சொல்ல. கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன், அமைச்சர் கருணா, அமைச்சர் டக்ளஸ் இவர்களும் தமிழ் மக்களுக்காகவே ஓடுவதாகக் கூறினாலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காக ஓடுகிறார்களா என்ற சந்தேகம் வலுவாகவே உள்ளது. இவர்களைவிடவும் இத்தலைவர்களுக்கப் பின்னால் பெரும் கூட்டம் ஒன்று புலம்பெயர்நாடுகளிலும் ஓடுகின்றனர். அதைவிட புலிகளின் தலைமையைப் பிடிப்பதற்கு புலிகளுக்குள்ளும் சில இடையோட்டங்கள் நடக்கின்றது.

இவ்வாறான பல்வேறு ஓட்டங்களுக்கு இடையே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கையிலெடுத்து ஓடுவதற்கான அவசியமும் அவசரமும் தற்போது ஏற்பட்டு உள்ளது. தனித்து சுயநலன்களுடன் ஓடும் மரதனோட்டக்காரர்களை பின்னடித்து இவர்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுத்துச் செல்லவேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழ் சமூகமும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கையிலெடுத்து ஓடுபவர்களை அடையாளம் கண்டு அவர்களை பலப்படுத்துவதே இன்றைய தேவையாக உள்ளது.

இந்தியாவின் 62வது சுதந்திர தின விழா கோலாகலம்

15-flag-india.jpgஇந்தி யாவின் 62வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நடந்த வண்ணமயமான விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டையை சுற்றிலும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. டெல்லி முழுவதுமே மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

விழா நடந்த 90 நிமிடங்களும் அப் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. விமானப் படை ஹெலிகாப்டர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தன. முன்னதாக மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் சமாதிகளிலும் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

அதே போல சென்னை கோட்டையில் முதல்வர் கருணாநிதி காலை 8.30 மணி அளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக முப்படையினரின் கம்பீர அணிவகுப்பை அவர் பார்வையிட்டார். சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதுமே மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.